இசைக்கருவிகள் அறிமுகம் : சிலம்பு
ஓவியம் : Wikipedia
பாடல்
அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
‘எந்த உயிருக்கு ஆணவமாகிய குற்றம் நீங்கி மல பரிபாகம் எனும் பக்குவம் வந்ததோ, அந்த உயிரின் உள்ளத்திலே வலிமையும், பெருமையும் உடைய அனைத்துத் தேவர்களும் தொழும்படி சிவபெருமான் வீற்றிருக்கின்றான்` என்பதை உணர்ந்து, பொங்குதல் நிறைந்த குழலை உடையவளான அருள் சத்தியாகிய தேவியும் சங்கினையும், வளையினையும், சிலம்பினையும் அணிந்து அவைகள் ஒலிக்குமாறு விரைவில் சென்று அங்கே மகிழ்ச்சியோடு அப்பெருமானை வணங்குவாள்.
விளக்க உரை
- ஈசனின் வழிபற்றி அவன் தன்மையில் அம்மையும் அருளுதல் செய்தலை விளக்கும் பாடல்
- ‘அங்கே’ – சிவன் அங்கே எப்பொழுதும் இருப்பினும் கள்வன்போல ஒளித்திருந்து, பின் வெளிப்பட்டமை பற்றியது
- சிங்காசனத்தே சிவபெருமானைக் கொலுவிருப்பவன் போலக் கூறியதும், அருட்சத்தியை மகிழ்பவள்போலக் கூறியதும் உயிர்கட்கு மல பரிபாகம் வருவித்தலே அவர்களது குறிக்கோள்.
- சலேல் – ஒலிக் குறிப்பு; ஓடி வருதல்
- நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்புவதும், நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பினை, சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் அணிந்தனர். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த அணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று அமைக்கப்பட்டு, உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். (கழல் – ஆண்கள் அணியும் சிலம்பு வகை)