பாடல்
பறந்த பறவை நாற்காலாய்ப்
படரும் விலங்கும் ஊர்வனவும்
பாணி தனில்வாழ் சீவர்களும்
பாரில் நிலையாத் தாபரமும்
பிறந்த மனிதர் தேவரொடு
பிசகா தெடுத்த செனனமதில்
பெற்ற தாயார் எத்தனையோ
பிறவி மனையார் புதல்வர்களும்
நிறைந்த கோடா கோடிஇதில்
நிலையா னதுவும் ஒன்றறியேன்
நீயே தாயென் றநுதினமும்
நெறியே அருளிப் பிறவியினி
மறந்து விடவும் உனதுபய
வனச மலர்த்தாள் ஈந்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, பறவைகள், நான்கு கால்கள் உடைய விலங்குகள், ஊர்ந்து செல்லும் விலங்குகள், பூமியில் நிலைத்து வாழும் தன்மை கொண்ட சீவன் உடையவர்கள், மனிதர்கள், தேவர்கள் என தவறாமல் பலப்பல பிறப்பு எடுத்த பிறப்புகளில் பெற்ற தாய்களின் எண்ணிக்கை, மனைவிகள் மற்றும் புதல்வர்களின் எண்ணிக்கை கோடானு கோடிக்கு சமமாகும்; இவ்வாறன பிறவிகளில் நிலையானது என்று எதையும் அறியவில்லை; நீயே எனது தாய் என்ற நெறியை நித்தமும் எனக்கு அருளி, இனி பிறவாமை எனும் நிலையை அடைய உனது இரு தாமரை மலர் போன்ற திருவடிகளை தந்து அருள்வாய்.
விளக்க உரை
- ‘முன்னம் எத்தனை சென்மமோ’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.