அமுதமொழி – விளம்பி – மார்கழி – 22 (2019)

பாடல்

இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன
துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

இறந்தவரது எலும்புகளையும், எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் எதுவெனில், சிறந்தவர்கள் என்று சொல்லப்படுவதும் மேம்பட்டதும், உயர்வானதும் ஆன மனைவி மற்றும் மக்கள்,சுற்றத்தார்கள், செல்வம் ஆகியவற்றை துறந்தவர்களாகிய ஞானியர்கள் சேரும் திருச்சோற்றுத்துறை என்னும் தலம் ஆகும்.

விளக்க உரை

  • புறங்காடு – சுடுகாடு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 21 (2019)

பாடல்

ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
   போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
   தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
   சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
   சொல்லும்நா நமச்சி வாயவே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மேலான ஒளி வடிவமாய் உள்ளவனே! தேன் போன்ற சுவை உடையதும், மிகுதியாக வெள்ளம் போல் வருகின்றதும் ஆன நீரையுடைய காவிரியாற்றில் பரந்த வெள்ளம் போல் வந்து பாய்கின்ற திருப் பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தில்  எழுந்தருளியிருக்கின்ற  நா வன்மை யுடையவனே! அடியேன் உன்னை நினையாது ஒழிந்த நாள்களை, ‘என் உணர்வு அழிந்த நாள்கள்’ எனவும், ‘உயிர்போன நாள்’ எனவும், ‘உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்’ எனவும் கருதுதல் அன்றி  வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால், உன்னை நான் மறந்தாலும் , எனது நாவானது, உனது திருப்பெயராகிய  ‘நமச்சிவாய’ என்பதனை  இடையறாது சொல்லும்.

விளக்க உரை

  • ஒவுதல் – ஒழிதல்
  • புனல் – ஆறு, நீர், வயல், கொல்லை
  • நாவலன் – மறைகளையும், மறைகளின் பொருளையும் முழுவது அறிந்தவனும், அது பற்றி சொல்பவனாதல் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 19 (2019)

பாடல்

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே!

கொங்கணர்

பதவுரை

வாலைப்பெண்ணே! உச்சி ஆகிய துரியத்திற்கு நேராக உகாரம் ஆனதும், மனோன்மணித் தாயார்  வாசம் செய்யும் அண்ணாக்குக்கு மேலே இருப்பதுமான உண்ணாக்கு மேலே சதாசிவமும்,   சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட இடமானதும், சப்தம் பிறந்த இடமானதுமான இடத்தில் தினமும் வைத்த விளக்கானது சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும். அந்த வலிமை வாய்ந்த விளக்கானது அணைந்து விடாமல் எப்பொழுதும் சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும்.

விளக்க உரை

  • இவரின் பெரும்பாலான பாடல்கள் சாக்தம் சார்ந்த வாலைப் பெண்ணை முன்வைத்து எழுதப்பட்டவை என்பதால் பாடல்களில் வாலைப்பெண்ணே என்பது இடம்பெறும்.
  • அச்சு – அடையாளம்; உயிரெழுத்து; வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு; வலிமை; அச்சம்; துன்பம்; நெசவாளர் நூல்களை அழுத்தப் பயன்படுத்தும் கருவி.

 

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 18 (2019)

பாடல்

அருளது சத்தியாகும் அரன் தனக்கு அருளை இன்றித்
தெருள் சிவம் இல்லை அந்தச் சிவம் இன்றிச் சத்தி இல்லை
மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க்கு அளிப்பன் கண்கட்கு
இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்

சிவஞான சித்தியார்

பதவுரை

மல மாயைகளுக்கு உட்பட்ட உயிர்கள் அதை விலக்க முதன்மையாக இருப்பது அருள் எனப்படும் இறைவனின் சத்தியாகும். இவ்வாறாக பெறப்படும் சக்தி சிவம் என்பததில் இருந்து தனியே அறியப்படுவது இல்லை, அந்த சக்தி விடுத்து சிவம் என்பதும் தனித்து இல்லை. அத்தகைய சிவமானது, கண்ணில் தோன்றும் இருளை சூரியன் தன் ஒளியால் ஓட்டுதல் போல, உயிர்களின் அறிவை மறைத்து, மயக்கம் தரும் மல மாயையை தனது அருளாலே நீக்கி மண்ணில் தன் அருளை அளித்து, முத்தியைக் கொடுப்பான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 17 (2019)

 

பாடல்

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

வீடு பேறு ஆகிய முக்தியும், அது கைகூடுதல் ஆகிய சித்தியும் பற்றி நின்று, ஞானத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அவனிடத்தில் பக்தி கொண்டு, அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, ஆன்மாக்கள் போல் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படாதாகிய சகலாவத்தை எனும் சகலத்தில் நின்று, பின் அதன் மா பெரும் சக்தி ஆகிய ஆற்றலால் சிவத்துள் நின்று ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் பெற்று, சத்தாவத்தை ஆனதான  சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அறியாமை, ஆவரணம், விட்சேபம், பரோட்சஞானம், அபரோட்ச ஞானம், சோகநிவர்த்தி, தடையற்ற ஆனந்தம் என்னும் ஏழுவகை நிலைகள் கடந்து நின்ற ஞானியர் ஆவர்.

விளக்க உரை

  • நின்மலாவத்தையைக் கடந்து பராவத்தையை அடைந்தவர்கள், அந்நிலையினின்று இறங்கினாலும், சிவயோக நிலையினின்றும் இறங்க மாட்டார்கள் என்பது பற்றியது.
  • ஓர்த்தல் – ஆராய்தல்
  • தத்துவம் – மெய்ப் பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 16 (2018)

பாடல்

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே

ஒன்பதாம் திருமுறை – பூந்துருத்திநம்பி காடநம்பி

பதவுரை

தேவர்களேசிவபெருமான்அருள் சத்தியாகவும், மங்கலத் தன்மை கொண்டு சிவமாகவும், உலகங்களை எல்லாம் படைத்த ஒப்பற்ற முழு முதற்பொருளாகவும்உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகவும்  விளங்கித் திருவாரூர் திருத் தலத்தில் முதல்வராய் வீதிகளில் உலாவரும் அழகராய் இருந்துஉச்சரிக்கப் படாமல் பிரணவத்துடன் சேர்ந்து இயங்கும் மந்திரம் ஆனதும், மூச்சுக் காற்றால் நிகழ்வதும், துன்பக் கலப்பில்லா இன்ப அநுபவம் ஆனதும் ஆன  அசபை அசபா நடனம் என்னும் கூத்து நிகழ்த்துகிறார். அவரிடத்தில் பத்தியோடு இருந்து அவரை தியானிப்பவர்கள் அவருடைய உருவத் திருமேனி கண்டு அவருடைய அருளைப்பருக! அவ்வாறு அருளைப் பருகும் போது  அமுதம்போல அவர்களிடத்தில் அந்த அருள் இனிமை வழங்கும்.

விளக்க உரை

  • அம்மையாய், அப்பனாய்,  உலகிற்கு ஓர் ஒப்பற்ற தலைவனாய். தம்மால் படைக்கப்பட்ட உலகத்தின் தோற்றத் திற்கும், ஒடுக்கத்திற்கும் நிலைக்களமாய் என்பன அத்திருவுருவத்தின் பெருமைகளைப் பற்றி கூறும்.
  • தித்தியா – தித்தித்து.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 15 (2018)

 

பாடல்

ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

பிறவி பற்றி நின்று பெற்ற  வினைகளை உடையவனாகிய என் உள்ளத்தின் கண் தேன் போன்றும், பால் போன்றும், கருப்பஞ் சாறு போன்றும், அமுதம் போன்றும் இனித்து, என் ஊன் ஆகிய உடம்பையும், உடம்பில் இருக்கும் எலும்பையும் உருகச் செய்கின்ற ஒளியுடையவனான ஞான வடிவம் ஆனவனே! யானைகள் தம்முள் மாறுபட்டுச் செய்யும் கொடிய போர் சண்டையில் அகப்பட்ட சிறு புதர் போல ஐம்புலன்களால் அலைக்கப்பட்ட என்னை விட்டு விடுவாயோ? (விடாமல் காத்து அருள்வாயாக என்றவாறு)

விளக்க உரை

  • பித்தம் கொண்டவன் எச்சுவையும் அறிய மாட்டான். அதை மாற்றி இனிமை சுவை உடைய பொருள்களை காட்டி அருளினாய்; ஞான வடிவில் இருந்து என் ஊன் உருக்கினாய்; எலும்புகளை உருக்குமாறு செய்தாய்; அவ்வாறு பேரருள் செய்த நீ என் வினைபற்றி நிற்கும் ஐம்புலன்களில் இருந்தும் காக்க மாட்டாயா எனும் பொருள் பற்றியது.
  • ஐம்புலன்களை யானைகளுக்கு உவமையாக கூறியமையால் யானைகள் ஐந்து என்று கொள்க.
  • குறுந்தூறு – சிறுபுல்.
  • கன்னல் – கரும்பு.
  • ஒண்மையன் – ஞான வடிவினன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 14 (2018)

பாடல்

நீலக்கயல்விழி மானார் கலவியின் நேசம் வைத்தே
ஆலைக்கரும்பது போலாய் விடாதுன்னருள்புரிவாய்
வாலைக் கலைமதி வேணியனே வடுகா அடியார்
சாலத் தொழும் ஐயனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

சுத்தமான அழகிய கலைகளை உடைய சந்திரனை தலையில் அணிந்தவனே! வடுகனே! அடியார்களால் மிகவும் தொழப்படுபவனே! காழித் தலத்தில் உறையும் ஆபதுத்தாரணனே! நீலமான மீன் போன்ற விழிகளை உடைய பெண்டிர் மேல் நேசம் வைத்து ஆலையில் அகப்பட்ட கரும்பு போல் ஆகிவிடாமல் நன்னருள் புரிவாய்.

விளக்க உரை

  • மாயை அகற்றவேண்டி துதித்தல்.
  • மானார் – பெண்டிர்
  • வாலை – பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்; சத்திபேதங்களுளொன்று; திராவகம் வடிக்கும் பாண்டம்; சுத்தம்; பாதரசம்; சித்திராநதி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 11 (2018)

பாடல்

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருவதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! கர்வம் கொண்டு தலை கிள்ளப்பட்ட நான்முகன் மண்டை ஓட்டினைக் கொண்டு பிச்சையேற்றுக் கொண்டு திரிபவனே! அபிடேகத்தீர்த்தத்தையும், பூவையும்,புகையும் (பிறவும்) உனக்கு சமர்ப்பிப்பது நின்னை வழிபடுவதை மறந்தறியேன்; தமிழ் மொழியில் அமைந்த நின்புகழ் பாடும் இசைப் பாடல்களை பாடுதலை மறந்தறியேன்; வினை பற்றி இன்புறும் பொழுதிலும், துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன்; உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவாதவனாய் இருக்கிறேன்; (அடியேன்) உடலின் உள்ளே இருப்பதும், மிக்க வருத்துவதும் ஆன சூலை நோயினால் வருந்துகின்றேன்; அந்த வருத்தம் தரும் சூலை நோயைத் தீர்த்தருள்வாய்.

விளக்க உரை

  • சலம், பூ, தூபம், தமிழோடிசை – அர்ச்சனை மற்றும் தோத்திரத்திரம் செய்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 10 (2018)

பாடல்

மூலம்

கனவு கனவென்று காண்பரிதாங் காணில்
நனவி லவைசிறிதும் நண்ணா – முனைவனரு
டானவற்றிலொன்றா தடமருதச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென்.

பதப் பிரிப்பு

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா – முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்

திருநெறி 9  – உமாபதி சிவம்

பதவுரை

மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே! உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய  பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் என விரியும். அவ்வாறு உயிரானது கண்டத்தில் இருந்தில் செயல்படும் நிலை ஆகிய கனவினை காணும் போது கனவில் நின்று  ‘இது கனவு’ என்று அறிய இயலாது. அகம் விழிப்புற்ற நிலையாகிய நனவில் அந்த கனவில் கண்ட காட்சிகள் காண இயலாது. முனைவன் அருள் பெறும் போது  காரிய அவத்தைகள் நீங்கப் பெற்று, காரண அவத்தையின்  கேவல அவத்தை, சகல அவத்தை ஆகியவைகளும் நீங்கப் பெற்று,  பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை ஆகிய சுத்த அவத்தையை காணுமாறு செய்வாயாக.

விளக்க உரை

  • ‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ எனும் சிவப்பிரகாசரின் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • உயிரானது ‘அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு பொருள்’ எனபதும்,  உயிர் தனித்து இயங்கினாலும், இறைவன் தனிக் கருணையினால் அன்றி அவத்தைகள் விலகி அது நிலை பேறு கிட்டாது என்பதும் விளங்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 9 (2018)

பாடல்

அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

வளமான சோலைகளையுடைய திருப்புங்கூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே,  மிருகண்ட மகரிஷிக்கும்,  அவருடைய மனைவி ஆகிய  மருதவதிக்கும் மகனாக பிறந்த அந்தணர் குலத்தை சேர்ந்த மார்கண்டேய முனிவர் தன் முடிவு அறிந்து உன்னை அடைக் கலமாக அடைய, அவரைக் காத்தல் பொருட்டு,  அவர் உயிரைக் கொல்ல வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்தவனே, உனக்கு அடியேனாகிய யான், உனது அந்த ஆற்றலை அறிந்து கொண்டு என்னையும் எம தூதர்கள் வந்து துன்புறுத்துவார்கள் எனில், என்தந்தையாகிய நீ,  ‘இவன் என் மற்றொரு அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்’ என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்.

விளக்க உரை

  • மார்க்கண்டேய முனிவருக்கு அருள் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து பாடியது.
  • வவ்வினாய் – வன்மை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 8 (2018)

பாடல்

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

செல்வத்தையே தேடுவதன் பொருட்டு, மனம் செருக்குற்று, நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணம் அற்றவர்களே! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளியை உறைவிடமாக கொண்டவன் திருவடியினை சேர்வீராக.

விளக்க உரை

  • மாடு – செல்வம்
  • நும்முளே – உங்களுக்குள்
  • கூடு – உடல்
  • செல்வம் தேடுதலில் மகிழ்ந்து எனவும், பொய் பேசுவதால் உள்ளுக்குள் மகிழ்வு கொண்டு எனவும் கொள்ளலாம்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 7 (2018)

பாடல்

போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அடியார்கள் நாள்தோறும் தங்கள் மனத்தினால், கடைகுழன்று சுருண்ட கூந்தலை உடையவளும், இன்பம் தரத் தக்கவளுமாக திரிபுரையை தியானிக்க, அங்ஙனம் தியானிக்கும் அடியவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, மெய் ஞானமாகிய கொடி படருவதற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி,  திரோதான சத்தியாக  நின்று, பின் அருள் சத்தியாகவே விளங்குவாள்.

விளக்க உரை

  • திரோதான சத்தி, அருள் சத்தி என வேறு வேறு ஆகாமல்  அருள் சத்தி இயல்பும், திரோதான சத்தி  பயனும் உணர்த்தப் பெறும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 5 (2018)

பாடல்

வைதோரைக் கூடவை யாதே: – இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே

கடுவெளிச் சித்தர்

பதவுரை

உனக்கு தீங்கு செய்வதன் பொருட்டு இகழ்ந்து பேசியவருக்கும் கூட தீங்கு எண்ணாதே; இந்த வையகம் முழூவதும் வஞ்சனைகளால் சுழ்ந்து கெடுதலால் நிரம்பினாலும் அகத்துள் ஒரு பொய்யையும் நுழையவிடாதே; (இம்மைக்கும் மறுமைக்கும் ) உயர்வு தராத வினைகளை செய்யாதே; பறக்கும் பறவைகள் மேல் கல் எறிந்து அதை காயப்படுத்தாதே.

விளக்க உரை

  • கடுவெளிச் சித்தர்  பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தவை. இதனை

பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே

எனும் பல்லவியையும் சேர்த்துத் தெளிக.

  • வைதல் – ஏசல், இகழ்தல், பழிமொழி, பழிச்சொல், ஒருவரையொருவர் பரிகாசம் செய்து கொள்ளும் பாட்டுவகை

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 4 (2018)

பாடல்

 

எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
     என்னுயிர்க் கின்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
     சோதியுட் சோதியே என்கோ
தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
     தனிப்பெருந் தலைவனே என்கோ
இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
     கென்னைஆண் டருளிய நினையே

திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

இந்தப் பிறப்பிலேயே பெறுதற்கு உரிய சாகாவரம் எனும் இறவா நிலையாகிய மெய்ப் பயனை எனக்கு அளித்து, என்னை ஆண்டு கொண்டு அருளிய பெருமானாகிய உன்னைத் தளர்ச்சி உற்ற பொழுதில் கிடைத்த செல்வம் என்பேனோ; என்னுயிர்க்கு உரித்தான இன்பம் என்பேனோ;  விரும்பியப் பொருளை நுகரும் பொழுது மனத்தில் தோன்றி நிறைகின்ற மிக்க பெரும் மகிழ்ச்சி என்பேனோ;  ஒளிப் பொருளுக்கெல்லாம் முதன்மை ஒளியாய் நிற்கும் சிவபர ஒளி  என்பேனோ; வினை பற்றி நின்று யாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் பொறுத்து அருளும் அருள் நிதி என்று சொல்வேனோ;  தனிப் பெரும் தலைவன் என்பேனோ; யாது சொல்லி மகிழ்வேன்?

விளக்க உரை

  • எய்ப்பு – தளர்ச்சி.
  • வைப்பு – செல்வம்
  • ‘மெய்ப்பயன்’ – இந்த பிறப்பில் பெறுவன ஆகிய யாவும் நிலையின்றிக் கெடுவதால் இறவாமையாகிய நிலைத்த பயன் மெய்ப்பயன் எனும் பொருள் பெற்றது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 3 (2018)

பாடல்

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஒற்றியூரை தலமாக உடைய சக்ரவர்த்தியே! மனம் என்னும் தோணியை, அறிவு எனப்படும் துடுப்பை பயன்படுத்தி, சினம் எனும் சரக்கை அந்தத் தோணியில் ஏற்றி, செறிவுடைய பாசக்கடலாகிய பரப்பில் செலுத்தும்போது, மன்மதன் என்ற பாறையில் தாக்கி, அந்தத் தோணி நிலைமாறி கவிழும்போது உன்னை அறிய இயலாதவனாக வருந்துவேன்;  அந்த நிலையில் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக.

விளக்க உரை

  • மனன் ( மன்மதன் ) பாறை
  • மறியும்போது – கீழ்மேலாகும் பொழுது
  • ஒண்ணாது – ஒன்றாது; பொருந்தாது
  • மனனெனும் பாறை – சில பதிப்புகளில் ‘மதன்’ என்று காணப்படுவதாக தெரிகிறது. ‘மதன்’ என்பது பிழைபட்ட பாடம் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 2 (2018)

பாடல்

கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
     காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
     ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
     வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
     பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பெரும்பற்றப் புலியூரான் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் வல்லமை உடையவன்; கங்கையைத் தாங்குகின்ற நீண்ட சடையை உடையவன்; காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் விரும்பி அருளுபவன்; பொருள் இல்லாதவராகிய வறியவருக்கும், துன்பத்தினால் வருந்தி தன்னை தாங்குவார் எவரும் இலர் என வருந்துபவருக்கும் அருள் செய்பவன்; திருவாரூரிலும் விரும்பி தங்கியிருப்பவன்; தன்னைத் தவிர வேறு எவராலும் தனக்கு ஒப்பிட இயலாதவன்; வானவர்கள் எனப்படும் தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன்; இவ்வாறான அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

விளக்க உரை

  • கல்தானை – கல்லாடை; அஃதாவது காவியுடை எனப் பொருள் கொள்வாரும் உளர்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 1 (2018)

பாடல்

மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மின்னலைப் போன்ற பற்களையுடையர்களும், எங்கும் பரவி இருப்பவர்களும் ஆகிய  அசுரர்களின் புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்தவரும், காலங்களால் அளவிட முடியாதவரும், பழமையானவரும் சிவபெருமான், புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில், அன்னத்தின் நடையை ஒத்த உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்து அருளுகிறார்.

விளக்க உரை

  • திருப்பூந்தராய் எனும் இத் தலத்து பதிகங்களில் முப்புரம் எரித்த நிகழ்வும், உமா தேவியை பாகமாக கொண்டவரும் எனும் அமைப்பில் அமைந்துள்ளன. திருஞான சம்பந்தர் கட்டமைப்பில் இருக்கும் 8வது பாடல் இராவணன் பற்றியது என்பதும், 9வது பாடல் திருமால் மற்றும் பிரம்மாவால் வணங்கப்பட்டவர் என்பதும், 10 வது பாடலில் சமண, பௌத்த மதங்கள் மூலமாக அறிய இயலாதவர் எனும் அமைப்பில் இருந்தும் மாறவில்லை. அப்பாடல்களில் உமை ஒரு பாகனாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
  • சுளிதல் – கோபித்தல்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 24 (2018)

பாடல்

தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலா யடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருப்பந்தணைநல்லூர் தலத்தில் உறையும் சிவபெருமான்,  அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவர்; ஆதியானவராக இருப்பவர்; சூரியனாக இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் இருப்பவர்; அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமாகி தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து இயங்கும் ஞானஒளியை வடிவமாக உடையவர்; நிலைகலங்குதல் இல்லாத அழகிய தலையை உடையவர்; தூய திருநீறு அணிந்தவர்; தாமரை, முல்லை போன்ற மாலைகளை சடையில் சூடியவர்; குளிர்ந்த கண்களை உடைய காளை மீது ஏறி  பிச்சை ஏற்றவர் ஆவார்.

விளக்க உரை

  • துளங்குதல் – அசைதல், நிலைகலங்குதல், தளர்தல், வருந்துதல், ஒலித்தல், ஒளிசெய்தல்,
  • இண்டை – தாமரை, மாலை வகை, , முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி;
  • துளங்கா மணி முடியார் – அஞ்சுவ தொன்றில்லாத முதல்வர்
  • ஈமம் – பிணத்தைச் சுடுங்காடு
  • ‘அண்டத்துக்கு அப்புறத்தார்’ – மாயைக்கு அப்பாற்பட்டு நிற்கும் நிலை.
  • ஆதியானார் – எல்லா பொருள்களுக்கும் தாமே முதலாயும், தமக்கொரு முதல்வன் இல்லாதவராயும் உள்ளவர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 23 (2018)

பாடல்

மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக் காலன்கா லம்மறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மெய்ப் பொருளாய் இருப்பவனும், திருமேனி எங்கும் வெண்ணீற்றைப் பூசுகின்றவனும், வேதங்களுக்கு முதல்வனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடையில் முறிவித்தவனும், படம் எடுத்து ஆடும்  பாம்பினை இடுப்பில் அணிந்தவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகி பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கள்ளப் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே!

விளக்க உரை

  • ‘காலன்’ – ‘காலத்திற்கு முதல்வன்’ . அதன் பொருட்டு  காலன் காலம் அறுத்தான்.
  • ‘காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன் ` என்பதும், ` அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வன் அயின பொழுதும், சிவபிரானது ஆணையாள் தான் முதலவன் ஆனான் அன்றித் தானே ஆயினான் அல்லன். அந்த முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் நடந்ததால் , இடை முரிவிக்கப் பட்டான்` என்பதும் விளங்கும். இதனான் எல்லாவற்றையும் தன் விருப்பத்தின் வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே  என்பது உணரப் பெறும்.

Loading

சமூக ஊடகங்கள்