அமுதமொழி – விளம்பி – மார்கழி – 4 (2018)

பாடல்

 

எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
     என்னுயிர்க் கின்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
     சோதியுட் சோதியே என்கோ
தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
     தனிப்பெருந் தலைவனே என்கோ
இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
     கென்னைஆண் டருளிய நினையே

திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

இந்தப் பிறப்பிலேயே பெறுதற்கு உரிய சாகாவரம் எனும் இறவா நிலையாகிய மெய்ப் பயனை எனக்கு அளித்து, என்னை ஆண்டு கொண்டு அருளிய பெருமானாகிய உன்னைத் தளர்ச்சி உற்ற பொழுதில் கிடைத்த செல்வம் என்பேனோ; என்னுயிர்க்கு உரித்தான இன்பம் என்பேனோ;  விரும்பியப் பொருளை நுகரும் பொழுது மனத்தில் தோன்றி நிறைகின்ற மிக்க பெரும் மகிழ்ச்சி என்பேனோ;  ஒளிப் பொருளுக்கெல்லாம் முதன்மை ஒளியாய் நிற்கும் சிவபர ஒளி  என்பேனோ; வினை பற்றி நின்று யாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் பொறுத்து அருளும் அருள் நிதி என்று சொல்வேனோ;  தனிப் பெரும் தலைவன் என்பேனோ; யாது சொல்லி மகிழ்வேன்?

விளக்க உரை

  • எய்ப்பு – தளர்ச்சி.
  • வைப்பு – செல்வம்
  • ‘மெய்ப்பயன்’ – இந்த பிறப்பில் பெறுவன ஆகிய யாவும் நிலையின்றிக் கெடுவதால் இறவாமையாகிய நிலைத்த பயன் மெய்ப்பயன் எனும் பொருள் பெற்றது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 3 (2018)

பாடல்

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஒற்றியூரை தலமாக உடைய சக்ரவர்த்தியே! மனம் என்னும் தோணியை, அறிவு எனப்படும் துடுப்பை பயன்படுத்தி, சினம் எனும் சரக்கை அந்தத் தோணியில் ஏற்றி, செறிவுடைய பாசக்கடலாகிய பரப்பில் செலுத்தும்போது, மன்மதன் என்ற பாறையில் தாக்கி, அந்தத் தோணி நிலைமாறி கவிழும்போது உன்னை அறிய இயலாதவனாக வருந்துவேன்;  அந்த நிலையில் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக.

விளக்க உரை

  • மனன் ( மன்மதன் ) பாறை
  • மறியும்போது – கீழ்மேலாகும் பொழுது
  • ஒண்ணாது – ஒன்றாது; பொருந்தாது
  • மனனெனும் பாறை – சில பதிப்புகளில் ‘மதன்’ என்று காணப்படுவதாக தெரிகிறது. ‘மதன்’ என்பது பிழைபட்ட பாடம் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 2 (2018)

பாடல்

கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
     காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
     ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
     வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
     பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பெரும்பற்றப் புலியூரான் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் வல்லமை உடையவன்; கங்கையைத் தாங்குகின்ற நீண்ட சடையை உடையவன்; காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் விரும்பி அருளுபவன்; பொருள் இல்லாதவராகிய வறியவருக்கும், துன்பத்தினால் வருந்தி தன்னை தாங்குவார் எவரும் இலர் என வருந்துபவருக்கும் அருள் செய்பவன்; திருவாரூரிலும் விரும்பி தங்கியிருப்பவன்; தன்னைத் தவிர வேறு எவராலும் தனக்கு ஒப்பிட இயலாதவன்; வானவர்கள் எனப்படும் தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன்; இவ்வாறான அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

விளக்க உரை

  • கல்தானை – கல்லாடை; அஃதாவது காவியுடை எனப் பொருள் கொள்வாரும் உளர்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 1 (2018)

பாடல்

மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மின்னலைப் போன்ற பற்களையுடையர்களும், எங்கும் பரவி இருப்பவர்களும் ஆகிய  அசுரர்களின் புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்தவரும், காலங்களால் அளவிட முடியாதவரும், பழமையானவரும் சிவபெருமான், புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில், அன்னத்தின் நடையை ஒத்த உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்து அருளுகிறார்.

விளக்க உரை

  • திருப்பூந்தராய் எனும் இத் தலத்து பதிகங்களில் முப்புரம் எரித்த நிகழ்வும், உமா தேவியை பாகமாக கொண்டவரும் எனும் அமைப்பில் அமைந்துள்ளன. திருஞான சம்பந்தர் கட்டமைப்பில் இருக்கும் 8வது பாடல் இராவணன் பற்றியது என்பதும், 9வது பாடல் திருமால் மற்றும் பிரம்மாவால் வணங்கப்பட்டவர் என்பதும், 10 வது பாடலில் சமண, பௌத்த மதங்கள் மூலமாக அறிய இயலாதவர் எனும் அமைப்பில் இருந்தும் மாறவில்லை. அப்பாடல்களில் உமை ஒரு பாகனாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
  • சுளிதல் – கோபித்தல்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 24 (2018)

பாடல்

தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலா யடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருப்பந்தணைநல்லூர் தலத்தில் உறையும் சிவபெருமான்,  அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவர்; ஆதியானவராக இருப்பவர்; சூரியனாக இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் இருப்பவர்; அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமாகி தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து இயங்கும் ஞானஒளியை வடிவமாக உடையவர்; நிலைகலங்குதல் இல்லாத அழகிய தலையை உடையவர்; தூய திருநீறு அணிந்தவர்; தாமரை, முல்லை போன்ற மாலைகளை சடையில் சூடியவர்; குளிர்ந்த கண்களை உடைய காளை மீது ஏறி  பிச்சை ஏற்றவர் ஆவார்.

விளக்க உரை

  • துளங்குதல் – அசைதல், நிலைகலங்குதல், தளர்தல், வருந்துதல், ஒலித்தல், ஒளிசெய்தல்,
  • இண்டை – தாமரை, மாலை வகை, , முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி;
  • துளங்கா மணி முடியார் – அஞ்சுவ தொன்றில்லாத முதல்வர்
  • ஈமம் – பிணத்தைச் சுடுங்காடு
  • ‘அண்டத்துக்கு அப்புறத்தார்’ – மாயைக்கு அப்பாற்பட்டு நிற்கும் நிலை.
  • ஆதியானார் – எல்லா பொருள்களுக்கும் தாமே முதலாயும், தமக்கொரு முதல்வன் இல்லாதவராயும் உள்ளவர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 23 (2018)

பாடல்

மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக் காலன்கா லம்மறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மெய்ப் பொருளாய் இருப்பவனும், திருமேனி எங்கும் வெண்ணீற்றைப் பூசுகின்றவனும், வேதங்களுக்கு முதல்வனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடையில் முறிவித்தவனும், படம் எடுத்து ஆடும்  பாம்பினை இடுப்பில் அணிந்தவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகி பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கள்ளப் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே!

விளக்க உரை

  • ‘காலன்’ – ‘காலத்திற்கு முதல்வன்’ . அதன் பொருட்டு  காலன் காலம் அறுத்தான்.
  • ‘காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன் ` என்பதும், ` அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வன் அயின பொழுதும், சிவபிரானது ஆணையாள் தான் முதலவன் ஆனான் அன்றித் தானே ஆயினான் அல்லன். அந்த முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் நடந்ததால் , இடை முரிவிக்கப் பட்டான்` என்பதும் விளங்கும். இதனான் எல்லாவற்றையும் தன் விருப்பத்தின் வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே  என்பது உணரப் பெறும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 22 (2018)

பாடல்

ஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஒற்றியூர்ப் பெருமானே! உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பானவைகளை நினைவு வைத்துக் வைத்துக் கொண்டு, இந்த உடம்பினைப் பயனற்ற வகையில் பேணி பாதுகாத்துக்கொண்டு, காம்பு இல்லாத அகப்பை கொண்டு முகக்கக் கருதியது போல, உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதவனாய்,  பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது, சடுதியில் தான் அழியப் போவதனை நினைவு கொள்ளாது வேறு பல நினைப்புகள் கொண்டது போல  பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை காப்பாற்றி அடியேன் உய்யும் வண்ணம் காத்து அருளவேண்டும்.

விளக்க உரை

  • ஓம்புதல் – காப்பாற்றுதல்; பாதுகாத்தல்; பேணுதல்; வளர்த்தல்; தீங்கு வாராமற் காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்
  • கூடு – உடம்பு
  • வாளா – வீணில்.
  • காம்பு இலா மூழை .- பிடிப்பதற்கு உரிய காம்பு இல்லாத அகப்பை.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 21 (2018)

பாடல்

காவே இலங்கும் பொன்னிநதிக்
      கரையே இலங்கும் மயிலைநகர்
   கங்கை முதலாம் புனிதநதி
      கருதிப் பணியும் மூதூரே

பாவே இலங்குங் கவிவாணர்
      பகரும் மறையே தாகமங்கள்
   பயிலும் வீதிக் கமுகிளநீர்
      பாயும் வாழை குருந்தேறும்

ஆவே இலங்கு வயல்சூழும்
      அதிலே நானா விருஷமுடன்
   அமுத ரசமாய்க் கனிபழுக்கும்
      அருகிற் பறவை யினஞ்சூழும்

மாவே இலங்கும் அநுதினமும்
      மருவுங் கயிலை நிகரான
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, நீ வீற்றிருக்கும் இந்த மயிலாபுரி எனும் திருத்தலமானது, சோலைகள் நிறைந்து விளங்குவதும், பொன்னி நதி மற்றும் காவிரி எனப்படுவதும் ஆன நதிக்கரையில் உள்ளதும், கங்கை முதலான புண்ணிய நதிகள் தம் பாவங்களைப் போக்க துலா மாதத்தில் நீராடுவதும், பாக்களை பலவிதமாக இயற்றக் கூடிய கவிகளால் நல்வாழ்வு வாழ்பவனும், சொல்லி உணர்த்தும் படியான வேதங்களும், வேதாகமங்களும் ஓதியும் பயிற்றுவிக்கும் படியான வீதிகளை உடையதும், பாக்கு மரங்கள், இளநீரைத் தரும் தென்னை மரங்கள், நீர் வரத்து மிகையான ஆன  வாழை குருத்துக்களால் நிரம்பியதும், அவற்றுடன் கூடிய வயல் சூழ்ந்ததும், அதில் பலவிதமான மரங்களும், அவற்றில்  அமுதம் போன்ற கனிகளைக் கொண்டதும், அருகினில் பறவை இனங்கள் வாழ்வதும், திருமகளால் நித்தமும் ஒளிர்விடுதலும், கயிலைக்கு நிகரானதுமானதும் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 20 (2018)

பாடல்

மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை மையத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே!

இடைக்காடர்

பதவுரை

பிறவிகள் தோறும் தொடர்வதும், தீமை செய்யத் தூண்டுவதும்,  இறையை காணச் செய்யாமல் செய்வதும், நரகத்தில் கொண்டு சேர்ப்பதும், மும்மலம் னப்படுவதுமான ஆணவம், கன்மம், மாயை இவைகளை நீக்கி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று பொறிகளாகிய முப்பொறிக்கு எட்டாததும் காரணப்பாழ், காரியப்பாழ், அறிவுப்பாழ் என்றும் மாயப்பாழ், சீவப்பாழ், அருள் வெளிப்பாழ் என்றும் கூறப்படும் முப்பாழும் கடந்து, உருவம் அற்ற இடத்தில் இருக்கும் முப்பாழும் கடந்ததை புறச் செயல்கள் செய்யும் காலத்திலும்  அக சிந்தையில் வைப்பீர் கோனாரே!

விளக்க உரை

  • செம்மறி யோட்டிய வேலை – புறச் செயல் செய்கையில் அக வழிபாட்டு முறை பற்றியது இப்பாடல்
  • கோனாரே – குலத்தினை குறிப்பிடாமல் பசுக் கூட்டத்தை மேய்ப்பவன் எனும் பொருள் பற்றியது.
  • ஒப்பு நோக்க :

அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே

எனும் திருமந்திரப் பாடலுடனும்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற
மும்மலம் அகற்றுவான் அடிசேர, உந்திப்பற

எனும் திருவுந்தியார் பாடலுடனும் ஒப்பு நோக்கி மும்மலம் என்பதை சிந்திக்க.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 19 (2018)

பாடல்

செடி கொள்நோ யாக்கையைம் பாம்பின் வாய்த்
     தேரைவாய்ச்சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று
     கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா
     யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
     டஞ்ச னெஞ்சே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மயக்கம் கொண்டு நெஞ்சமே! பாவம், துன்பம், தீ நாற்றமும் உடைய இந்த உடல் சார்ந்த இன்பங்கள், ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை; தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, வண்டு மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போலானது. இவ்வாறான நிலை இல்லாத உலகமும், அது சார்ந்த இன்பங்களையும் நுகர விரும்புகிறாய். தேவர்கள் தலை தாழ்த்தி பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூரில் வீற்றிருக்கும் முன்று கண்களை உடைய அடிகளைத் தொழுதால் உய்யலாம்.

விளக்க உரை

  • உணவின் பொருட்டும், சுவைத்தலின் பொருட்டும் இன்பம் கொண்டாலும் அவை அனைத்தும் பின்னின்று வரும் துன்பத்தை அறியவிடாமல் செய்கின்றன என்ற பொருள் பற்றியது இப்பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 18 (2018)

பாடல்

வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

வாசி யோகத்தின் பெருமைகளையும்,  கண்களை மூடி அதன் பெருமையையும் நூல்களால் உணர்ந்து அவற்றை வகை வகையாக விரித்துரைப்பவனைப் போல, விரித்துரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால் நீவிர் உயிர் பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும், அதனோடு இணைந்து  செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீங்கள் ஈசன் இருப்பிடத்தை எளிதில் அடையலாம்.

விளக்க உரை

  • மூசுதல் – மூடுதல். மூசி – மூடியிருப்பவன். மூடப்படுவன கண்கள்.
  • அன்பு இல்லறத்தார்க்கே உயிராவதால் அன்பு நீக்கப்பட வேண்டியது. (ஞானியர்களுக்கு அருளே உரித்தாதல் பற்றியது)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 17 (2018)

பாடல்

முழுமுத லேஐம் புலனுக்கும்
*மூவர்க் கும்என்த னக்கும்
வழிமுத லேநின் பழவடி
யார்தி ரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க
இரங்குங் கொல்லோ என்று
அழுமது வேயன்றி மற்றென்
செய்கேன் பொன்னம் பலத்தரைசே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

பொற்சபையில் ஆடுகின்ற தலைவனே! முற்றும் உணர்தும் முடிவில் ஆற்றல் உடைமை கொண்டும் இருந்து எல்லாவற்றுக்கும் ஆதியான பொருளே! ஐம்புலன்களுக்கும், முத்தேவர் களுக்கும், எனக்கும் செல்லும் வழி காட்டும் முதலானவனே! உன்னுடைய பழைய அடியார்கள் கூட்டத்தோடு கூடி, பெருமை மிக்க சிவலோகத்தில் சேர்ந்து இருப்பதை திருவருளால் கொடுத்து அருள இரங்குமோ என்று அழுவது அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லேன்?

விளக்க உரை

  • *’ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா அமரர்தொழுங் கழலானை’ என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல். அஃதாவது தன்னில் இருந்து பிரித்து பிரம்மா என்றும் திருமால் என்றும், உருத்திரன் என்றும் அறிய ஒண்ணாத ஆதியானவன்
  • ‘முழுமுதல்’ –  இரட்டுற மொழிதல் பெருந் தலைவன் 2. சிறந்த நிலைக்களம் (பரம ஆதாரம் – தாரகம்)
  • கெழுமுதல் – கூடுதல்.
  • ‘மற்றென் செய்கேன்’ – `உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்` என்ற பொருள் பற்றியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 16 (2018)

பாடல்

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாயச் சொரியுமே

பத்தாம் திருமுறை –  திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

பிரமனால் படைக்கப்பட்டு சரீரம் கொண்ட ஆருயிர்களின் அகமாகிய உடம்பில் பாலினைத் தரும் பசுக்கள் ஐந்து உள்ளன. அவை அறிவுக்கு புலனாகும்  மெய், வாய், கண், மூக்கு, செவி. அப் பசுக்களை மேய்த்தருள்பவன் சிவன். மேய்ப்பார் இன்மையாலே அப்பசுக்கள் உலகியல் புலன்களில் ஆருயிர்களை ஈர்த்துச் செல்வதால் அவைகள் வெறித்துத் திரிகின்றன. அப் பசுக்களை மேய்ப்பானாகிய சிவ பெருமான் வெளிப்பட்டு காத்து அருளினால்  அப்பசுக்களுக்கு வெறியடங்கும். வெறியடங்கினால் அப் பசுக்கள் அந்த உயிர் சிவப்புலனை நுகருமாறு துணை நிற்கும். புலன்கள் திருவடியின்பத்தினை நுகரத் துணைநின்று அப்புலன்களும் சிவ வண்ணமாகும்.அப்பொழுது பசு கரணங்கள் பதி கரணங்களாகத் திரியும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 15 (2018)

பாடல்

விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்தறிந்து அறியா, ஆங்கவை போலத்
தாம்தம் உணர்வின் தமி யருள்
காந்தம் கண்ட பசாசத் தவையே

சிவஞானபோதம் – மெய்கண்டார்

பதவுரை

சடப் பொருட்கள் என்றும்,ஞானேந்திரியங்கள் என்றும் ஐம்பொறிகள் என்றும் அறிகருவிகள் என்றும் வழங்கப்பெறும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றில் உடல் உணர்வை உணரும்; வாய் சுவையை உணரும்; கண் புறக் காட்சியைக் காணும்; மூக்கு வாசனையை அறியும்; செவி ஓசையை அறியும். அவ்வாறு ஐம்பொறிகள் இவைகளை அறிந்தாலும், அறிகின்ற தம்மை அறியமாட்டா. உயிர் உடனிருந்து திருவருள் காந்தம் போன்று இயங்கினால் உயிர்கள் இரும்பினைப் போல் இயங்கி அவை செயல்படும்.

விளக்க உரை

  • இறைவன் திருவருள் என்பது சைவசித்தாந்த மரபில் மறைப்பாற்றலையே (திரோதான சத்தி) குறிக்கும். உயிர் அனுபவித்துத்தான் மலக் குற்றங்களை நீக்க முடியும். எனவே உயிர்கள் மாயை செய்த கன்மங்களின் வழியே வினையாற்ற வேண்டியுள்ளதால், நன்மை தீமைகளை அறியாதவாறு உலகியல் அனுபங்களில் ஈடுபடச் செய்ய திருவருள் துணை செய்யும்.
  • ஐம்பொறிகள் உயிரால் செலுத்தப் படுவதால் வினைகளை நுகர்கின்றன.  உயிர் தன் வினையினால் தன்பொருட்டாகவே நுகர்கின்றது. அவ்வுயிரைச் செலுத்துகின்ற இறைவன்  முன்னிலையில் உலக நிகழ்வுகள் செயல்படுகின்றன.
  • தமி – ஒப்பற்ற முதல்வன்
  • பசாசம் – இரும்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 14 (2018)

பாடல்

பொய்யா கிய புவி வாழ்க்கைக் கடலிற் புகுந்தழுந்தி
மெய்யம் இது என நம்பி விட்டேன் வினையேனைக் கண்பார்
மையொடு கண்ணியர் பின் செலத்தாரு வனத்திற் சென்ற
சைவாகமப் பொருளே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

மையினை அணிந்த அழகிய  கண்களை உடைய கன்னியர்களான தாருகா வன முனிவர்களின் பெண்டிர் தன் பின்னால் வருமாறு செய்த சைவ ஆகமப் பொருளே, காழித் தலத்தில் உறையும் ஆபதுத்தாரணனே! வினை உடையவன் ஆகிய யான், மாயைத் தன்மை உடைய பொய் ஆகிய இந்த உலக வாழ்க்கையை கடலில் புகுந்து அழுந்துமாறு செய்து, இதுவே மெய்யானது என்று நம்பி விட்டேன்.

விளக்க உரை

  • வைரவர் கோலமும், பிச்சாடனர் என்றும் பலிதேர் பிரான் கோலமும் ஏறக்குறைய ஒன்று போலவே தோற்றமளிக்கும்; வைரவர் ஆங்காரமாகவும், பாதங்களில் பாதுகை இல்லாமலும் கொண்ட தோற்றத்துடன் காணப்படுவார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 13 (2018)

பாடல்

அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!
நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே

சிவவாக்கியர்

பதவுரை

பார்த்தல், கேட்டல், சுவைத்தல் , நுகா்தல் மற்றும் தொடுதல் ஆகிய ஐம்புலன்களும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் ஐம்பூதங்களும் நமசிவய எனும் ஐந்தெழுத்தான சதாசிவமேயன்றி வேறல்ல. ஐம்பூதங்களுடன் ஐம்புலன்கள் இணைந்த கலவையான உயிர்பிறப்புகளும் அனைவற்றுக்கும் எல்லையான ஐந்தெழுத்தான ஆதிமூலமேயன்றி வேறல்ல. எவ்வாறு வளர்ச்சியுறும் கனியை பிஞ்சென்று உரைப்பார்களோ அது போன்ற அளவிலா நிறைந்தவோர் அருட்பெரும் சோதியினின்று பிரிந்து வந்த (பிய்ந்து வந்த) ஒரு துகளே வளரும் நிலைகொண்ட கனலாகும். இக்கனலே அகத்துள் உறைந்து ஐம்பூத மற்றும் ஐம்புலக் கலவையான உயிரினங்களை இயக்குகிறது. இதனை உணராதவர்கள் அவரவர் வாய்ப் போக்கில் உரை செய்வார்கள்; ஈஸ்வர வடிவமான இந்த ஐந்தெழுத்தை உள்ளத்தில் நிலை நிறுத்தி வைக்கக் கூடிய வல்லமை பெற்றோர், எண்ணிக்கையால் குறிப்பிடப்படும் நிலைகளைக் கடந்து (அதாவது ஐம்புலன்கள் மற்றும் ஆறுநிலைகளான மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா) மேலும் கடக்க எந்த நிலையுமல்லாத மிக உன்னதமான இறுதி எனும் பரமானந்த நிலை எய்துவர்.

விளக்க உரை

  • தொக்குதல் – ஒருமிக்கச் சேர்தல்; ஒன்றுபடல்
  • *

ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

திருமூலர் திருமந்திரப் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது

இந்தப் பாடலின் விளக்கம் முழுவதும் குரு நாதரால் அருளி உரை செய்யப்பட்டது.

மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 12 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கொம்பு

 

ஓவியம் : இணையம்

பாடல்

சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்

பெரிய புராணம் – சேக்கிழார்

பதவுரை

சங்கின் ஒலிகள் முழங்கவும், அழகியதாக விளங்கக் கூடியதும், பஞ்ச வாத்தியங்களில் ஒன்றானதுமான  கொம்புகள் ஒலிக்கவும், மங்கலமான வாழ்த்துரை சொற்கள் எங்கும் பெருகவும், மறைகள் முழங்கவும், பிறைச் சந்திரனையும், பாம்பையும் அணிந்த இறைவன் உறைவதும், புண்ணியம் மிக்கதுமான திருத்தலங்கள் எங்கும் சென்று, மேன்மேலும் பெருகும் விருப்பத்துடன் போற்றியும், சீகாழி பதியில் தோன்றியவரும், கவுண்டினிய கோத்திரத்தில் தோன்றியவருமான திருஞானசம்பந்தர் எழுந்தருளிச் சென்றார்.

விளக்க உரை

  • கொம்பு
  1. ‘திமில’, ‘மத்தளம்’,’இலத்தாலம்’,’இடக்க’ ஆகியவற்றுடன் சேர்ந்த ‘கொம்பு’ பஞ்ச வாத்திய இசை கருவிகள்
  2. ஊது கருவி எனப்படும் தூம்பு வகை தமிழர் இசைக்கருவி
  3. பயன்பாடு – நாட்டுப்புற இசை மற்றும் கோயில் இசையில் (பண்டைக் காலத்தில்  போரில் வென்ற அரசனின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் வாசிக்கப்பட்ட இசைக் கருவிகளில் முதன்மையானது கொம்பு.)
  4. முன் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களாலும்  செய்யப்படுகிறது.
  5. நீளம் – நான்கு முதல் ஆறு அடிவரை
  6. இதன் ஒலி யானை பிளிறுவது போன்ற ஓசையை ஏற்படுத்தும்
  7. காலம் – மூன்றாயிரம் ஆண்டுகள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 11 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : தண்ணுமை

ஓவியம் : wiki

பாடல்

தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருநீற்றுப்பச்சை என்றும் உருத்திரச்சடை என்றும் அழைக்கப் பெறும் கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும்படியான வளமை உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவனானவர், தண்டு, தாளம், குழல், தண்ணுமை ஆகிய கருவிகளுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர்; சுவாமி ஆன அவர் பல்வேறு கோலங்கள் கொண்டவர்; கண்ணால்  காணும் காட்சிக்கும் அரியவர் ஆவார்.

விளக்க உரை

  • காட்சியும், அதை அறிதலும் அரிது எனும் பொருள் பற்றியது
  • தண்ணுமை (மிருதங்கம்)
  1. இது  தோலால் ஆன, தாள வாத்திய வகையைச் சார்ந்த, கொட்டு இசைக்கருவி;
  2. இதில் பல்வேறு சொற்களை வாசிக்க முடியும் என்பதால் இது ராஜ வாத்தியம்
  3. ‘மதங்கம்’ –  பழந்தமிழ்ச் சொல் திரிந்து  ‘மிருதங்கம்’ என்னும் வடமொழிச் சொல் ஆனது.
  4. பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படும். இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு உருளை வடிவினதாகவும் இருக்கும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 10 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் :வயிர்

ஓவியம் : Shivam.org

பாடல்

மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்
குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்
முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்

பெரியபுராணம் – சேக்கிழார்

பதவுரை

வேதங்கள் முழங்கின; வளமான தமிழ்ச் சொற்களால் ஆன தமிழ் மறைகளும் ஒலித்தன; சில துண்டங்களாக உள்ளவைகளும், பலப் பலவாறு சேர்த்தும் பொருத்தியும் முழக்கப்படும் ஆன வயிர் மற்றும்  ஊது கொம்புகள் ஒலித்தன; அளவாலும், உருவாலும் பலவகைப்பட்டவையும், எண்ணிக்கையால் பன்மையும் உடைய சங்கினங்கள் முழங்கின; எக்காளங்கள் ஆகிய தாரையும் திருச்சின்னமும் முறைப்படி மெய்க் கீர்த்திகளைக் கூறி ஊதின; இயங்களுக்குள் பெரிய உருவுடைய முரசங்கள் மற்றும் சிறுகுன்று போன்ற உருவுடையவை ஒலித்தன; திருஞானசம்பந்தரின் பெருமையும் திருவருள் பெருமையினையும் உணர்ந்த அடியார் அர! அர! என்று பலவாறு போற்றித் துதிக்கும் சத்தம் இவற்றின் மேலாய் விளங்குமாறு  துதித்து உடன் சென்றனர்.

விளக்க உரை

  • திருவரத்துறையினின்றும் விடைபெற்றுப் திருஞானசம்பந்தர், சிவிகையில் ஏறிப் புறப்படும் இது போன்ற எழுச்சி மிக்க ஆர்ப்புடன் கூடிய ஒலிகள் முழங்கின
  • மறைகள் – தமிழ்கள் எனப் பன்மையில் கொள்க வேண்டும். தமிழ் என்று வேறு பிரித்துக் கூறியதாலும், பன்மை பொருள்பற்றியும் தமிழ் மறைகளும், கீதங்களும் என்று கொள்ளப்படும்.
  • வண்மை – ஈகை, குணம், அழகு, வாய்மை, வளமை; வளப்பம், வலிமை, புகழ் வாகைமரம்
  • முழங்கின, தழங்கின, நரன்றன, முரன்றன், இயம்பின, ஒலித்தன, கரங்கின, பிறங்கின என வந்த எட்டு வினை முற்றுக்களும் ஒலித்தன என்ற ஒரே பொருளைத் தருவன. ஆயினும் சத்திக்கும், வெவ்வேறு பொருள்களுக்கேற்ப ஒலிகளும் வேறுபடுவது பொருட்டு  அவ்வவற்றுக்கு ஏற்றபடி வெவ்வேறு வினைகளால் குறிப்பிடப்படுள்ளது.
  • வயிரின் குறை – வயிர் / ஊது கொம்புகள். குறை – இவை சில துண்டங்களாக உள்ளவை பலப் பலவாறு சேர்த்தும் பொருத்தியும் முழக்கப்படுதல் பற்றிய குறிப்பு.
  • பிறங்கின – அர! அர! முழக்கம் எல்லாவற்றினும் மேலாய் விளங்கின.
  • வயிர்
  1. விலங்குகளின் கொம்பினால் செய்யப்பட்டு, போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட துளைக்கருவி. மரங்களின் வைரம் போன்ற பகுதியைத் துளைத்தும் செய்யப்பட்டிருக்கலாம்
  2. அன்றில் பறவையின் ஒலியை போன்று வயிரின் ஒலி அமைந்திருக்கும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 9 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : திமிலை

ஒவியம் - tamillexion

 

பாடல்

கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்
     கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
     வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என்றரு ளாயே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனாலும், கார்மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலாலும் எளிதில் அடைவதற்கு இயலாத  அருமையான தூயவனே! ‘எமக்கு வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும்’ என்று வேண்ட பெரிய நெருப்பு உருவத்தில் இருந்து தோன்றிய எந்தையே! பஞ்சவாத்திய  கருவிகளுள் ஒன்றானதும், பேரொலியை உடையதுமான திமிலையின் ஓசையும், நான்கு வேதங்களும் சேர்ந்து ஒலிக்கும் பெருந்துறையில் செழுமையான மலர்களை உடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய குற்றம் இல்லாதவனே! அடியேனாகிய நான் அன்பொடு அழைத்தால் ‘அது என்ன’ என்று அருளொடு கேட்டு அருள் புரிவாயாக!

விளக்க உரை

  • வியன்தழல் – பெரிய நெருப்பு
  • திமிலை (வேறு பெயர் – பாணி )
  1. பஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றானதும், மணற்கடிகார வடிவில் இருக்கும் ஆன இசைக்கருவி
  2. மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவி
  3. பலா மரத்தில் செய்யப்பட்டு, கன்றின் தோலால் (குறிப்பாக 1 – 2 ஆண்டே ஆன கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று.

 

Loading

சமூக ஊடகங்கள்