அமுதமொழி – விகாரி – ஆடி – 10 (2019)


பாடல்

நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே

வராகி மாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்து – பலவிதமான துன்பங்களுக்கு எதிர்ப்புக் கட்டு (சத்ருசம்ஹாரம்) வராகி அம்மனே என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் பலவகையிலும் அழிவு ஏற்பட்டு மரணத்திற்கு நிகரான அளவில் நாசம் அனுபவிப்பவித்தல், நாசத்தின் காரணமாக ஏற்படும் இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று நடுங்குதல், நமனாகிய எமன் தனது கயிற்றினை வீசும் போது அது பற்றி கவலைப்படுதல், இகழ்ந்து வையப்படுதல், களங்கம் ஏற்பட்டு தாழ்வு கொண்டு அவமானப்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றது.

விளக்க உரை

  • நாசம் – அழிவு, பாழ், மரணம்
  • இழுக்கு – அவமானம். நிந்தை, களங்கம்; வழு, தாழ்வு, பொல்லாங்கு, மறதி, வழுக்கு நிலம்
  • காலம் 16-ஆம் நூற்றாண்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 9 (2019)


பாடல்

ஆச்சப்பா உட்கருவி முப்பத்தாறும்
   அப்பே சிவத்தினுட கூறேயாச்சு
நீச்சப்பா புறக்கருவி அறுவதுதான்
   நிசமான சக்தியுட கூறேயாச்சு
பேச்சப்பா உள்வெளியும் நன்றாய்ப் பார்த்து
   பெருமையுடன் ஆதார நிலையுங் கண்டு
காச்சப்பா கருவி கரணாதி என்று
   காடான தத்துவத்தைக் கண்டு தேரே

சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்து – 96 தத்துவங்கள் சிவ சக்தி ரூபமாக இருப்பதை அகத்தியர் புலத்தியருக்குக் கூறும் பாடல்.

பதவுரை

உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் மெய்ஞ்ஞானத்தின் எண்ணக் கருக்களில் சைவநெறியினை முன்னிறுத்தி கூறப்படும் தத்துவங்கள் உணர்த்துவதாகிய 96 தத்துவங்களில் அககருவிகளான 36 தத்துவங்கள் சிவனின் கூறுகள் ஆகும்; செயல்பட்டு அறிவை ஏற்படுத்தும் புறக்கருவிகளான 60  தத்துவங்கள் உண்மையில் செயல்படும்  சக்தியின் கூறுகள் ஆகும்;  ஆகாயம் என்பதும், பெருவெளி என்பதும் ஆன ஆதார நிலை ஆகிய இந்த சூட்சுமத்தை குருவின் மூலமாக நன்கு அறிந்தும் உணர்ந்தும் கருவிகளையும் கரணங்கள் எனப்படும் மனத்தில் மாறுபாடுகளையும் பக்குவப்படுமாறு செய்ய வேண்டும்;  உடல் கருவிகளும் உயிர் கருவிகளும் கொண்டு மேலே கூறப்பட்டவாறு பக்குவப்படுமாறு செய்தால் காடு போல் வழிதவறி உலகில் உழலச் செய்யும் தத்துவங்களை அறிந்து அதில் இருந்து தேறலாம்.

விளக்க உரை

  • சாங்கிய யோகத்தில் 24 தத்துவங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 8 (2019)


பாடல்

விரித்த பல்கதிர் கொள்சூலம், வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒன்டிரு மணிவாய் விள்ள
சிறிதருள் செய்தோர் சேரிச் செந்நிறச் செல்வனாரே

தேவாரம் – நான்காம் திருமுறை –  திருநாவுக்கரசர்

கருத்து – சிவபெருமான் கால பைரவர் வடிவம் தாங்கி வந்ததை குறிப்பிடும் பாடல்.

பதவுரை

திருச்சேறை எனும் திருத்தலத்தில் செம்மை நிறம் கொண்டு அதை இருப்பிடமாக உடையவனாக  சிவபெருமான், விரிந்த சூரியனை போன்று பல கதிர்களை கொண்ட ஒளியுடைய சூலம், இடி முழக்கம் போல சப்தம் எழுப்புவதான டமருகம் (உடுக்கை), தலையில் கங்கை ஆகியவை கொண்டு அழகிய கால பைரவர் வடிவம் தரித்து வேழ வடிவில் வந்த அசுரனின் தோலை உரித்தார்; அதை கண்டு அஞ்சிய உமையவளை நோக்கி தனது மணிவாய் மலர்ந்து தோன்றுமாறு அட்டகாசமாய் சிரித்தார்.

விளக்க உரை

  • தேவாரத்தில் கால பைரவர் பெயர் வரும் ஓரே பாடல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உய்க.
  • விள்ளுதல் – மலர்தல்; உடைதல்; வெடித்தல்; பிளத்தல்; பகைத்தல்; மாறுபடுதல்; தெளிவாதல்; நீங்குதல்; சொல்லுதல்; வெளிப்படுத்துதல்; வாய் முதலியன திறத்தல்; புதிர்முதலியனவிடுத்தல்
  • வெடி – துப்பாக்கி அல்லது குண்டு வெடி;வேட்டு, ஓசை, இடி, கேடு, அச்சம், நிமிர்ந்தெழுகை, தாவுகை, நறும்புகை, பட்டாசு, கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 7 (2019)


பாடல்

போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான
தூயதோர் தோளுங் கண்ணுந் துடித்தன புவன மெங்கும்
மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கின்ற விண்ணோர்
நாயகன் வடிவங் கண்டேன் நற்றவப் பயனீ தன்றோ

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்து – சூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து இது பல காலம் செய்த தவப்பயன் என்று கூறும் பாடல்.

பதவுரை

நான், எனது எனும் அகங்காரம் கொண்டிருந்த எனது அகந்தை போனது; அதன் காரணமாக என்னுள் பேரறிவாகிய ஞானம் புகுந்தது; வலப்பக்கத்தில் இருக்கக்கூடிய தூய்மையான தோளும், வலது கண்ணும் துடித்தன; புவனம் முழுமைக்கும் சஞ்சரிக்கும் பொருள்களின் மாயைத் தன்மை நீங்கி தேவர்களுக்கு எல்லாம் நாயகன் ஆன நாயகன் வடிவம் கண்டேன்; இது பலகாலம் நல்ல தவம் செய்து அதனால் பெறுவதற்குரிய நற்தவத்தின் பயன் அல்லவா இது? என்று சூரபத்மன் உரைத்தான்

விளக்க உரை

  • யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
  • எம்பெருமான் தன்னுடைய பேரெழில் கொண்ட திருக்கோலத்தினைக் காட்டிக்கொண்டு முன்வந்து நிற்கும் பாக்கியம் அவனுடைய பகைவனாகிய, மாபாவியாகிய எனக்கும் கிடைத்ததே” என்று இறைவனுடைய கருணையை எண்ணி ஆச்சரியம் கொள்கிறான்.
  • போதம் – ஞானம், அறிவு
  • மேய்தல் – விலங்கு முதலியன உணவுகொள்ளுதல், பருகுதல், கெடுத்தல், அபகரித்தனுபவித்தல், மேற்போதல், சஞ்சரித்தல், விடனாய்த் திரிதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 6 (2019)


பாடல்

பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
சுத்தமெய்ஞ் ஞானவொளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே

திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை –  வள்ளலார்

கருத்து – திருஒற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடை நாயகியின் பெருமைகளை கூற அவளே அருள் புரிய வேண்டும் என்று கூறும் பாடல்.

பதவுரை

திருஒற்றியூரில் விளக்கும் தூயவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் மயிலே,வடிவுடை மாணிக்கமே, பக்தர்கள் உள்ளத்தில் என்னும் போற்றுதலுக்கு உரித்தானதான அழகானக் கோயிலில் வாழ்கின்ற மேலான பரதேவதையே, தூயதானதும்,  மெய்ஞானமானதும் ஆன அறிவொளிப் பிழம்பே, மெய்ஞான அறிவினால் பெறப்படுவதான சுகவாழ்வின் ஆனந்தமே! தினமும் உன் பெருமை மிக்க புகழைச் சொல்ல எனக்கு அருள் புரிய வேண்டும்.

விளக்க உரை

  • பத்தர்-பக்தர்
  • மேவும்-வாழ்கின்ற
  • சித்-அறிவு
  • எற்கு-எனக்கு
  • நின்மலர்-தூயவர்
  • உன் மத்தர்-பித்தர், சிவப்பரம்பொருள்
  • வாமம்-இடப்பக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 5 (2019)


பாடல்

குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்
   காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி யுண்டோதான்
   உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
   பிறைசேர் சடையாய் முறையோஎன்று
அழைத்தால் அருளா தொழிவதே
   அம்மா னேஉன் னடியேற்கே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – வினை பற்றி நின்று, அடிமையாகிய யான் பிழை செய்தால் அதனைப் பொறாது ஒழிதலும், முறையோ என்று அழைத்தால் கேளா தொழிதலும் தலைவனாகிய உனக்குப் பொருந்துவனவோ என்று கூறும் பாடல்.

பதவுரை

உடையவனே, உமை அம்மையின் தலைவனே, என்னை என்றும் ஆள்பவனே, பிறை சேர்ந்த அணிந்த சடையை உடையவனே, தலைவனே! பழையதும், கொடியதும் ஆன வினையாகிய நோய் என்னை வருத்தும்போது காப்பதற்கு உரித்தானவன்; அவ்வாறான கொடுமையான வினையை உடையேன் ஆகிய நான் முயற்சி செய்து அந்த வினைகளை விலக்கி அதன் பொருட்டு நன்மை பெற இயலுமோ? நான் வினைகளுக்கு உட்பட்டு பிழை செய்தால் அதனை மன்னித்துக் காக்க வேண்டாமோ?  நீ இவ்வாறு செய்வது முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தால் உன் அடியானாகிய எனக்கு, நீ அருள் செய்யாது போவது தகுதியோ?

விளக்க உரை

  • குழைத்தல் – குழையச் செய்தல், ஒன்றாய்க் கலத்தல், தழையச் செய்தல், திரட்டுதல், இளகுவித்தல், வளைத்தல், அசைத்தல்
  • குழைத்தால் – உன் உள்ளம் குழையுமாறு இரந்து வேண்டுதல்
  • காவாய் – வந்து சாராதபடி தடுத்தருள்
  • உறுதி உண்டோ – உனக்காயினும், எனக்காயினும் யாதேனும் நன்மை உண்டோ
  • அருளாதொழிவதே – கருணை செய்யாதுவிடுதல் பொருந்துவதோ

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 4 (2019)


பாடல்

செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்க ளூழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஊழ்வினை அறுத்தலேயன்றி, சிவஞானத்தை மிகுவிக்கும் நல்வினைகள் விளையா என்பதையும் அதனை அளிப்பர்  திருப்பேரெயில் தலத்து இறைவர் என்பதையும் விளக்கும் பாடல்.

பதவுரை

திருப்பேரெயில் தலத்து இறைவர் மேருமலையை வில்லாக்கி முப்புரங்களை அழியச் செய்வார்; பல தீர்த்தங்களை உண்டாக்கி அளித்தும், அதில் தன் அன்பர்களை நீராடுமாறும் செய்பவர்;  பல பத்தர்களின் ஊழ்வினைகளை அறுப்பது மட்டுமின்றி அவர்கள்  நல்வினை பெறும்படியும் செய்பவர் ஆவார்.

விளக்க உரை

  • சோழநாடு காவிரித் தென்கரையில் அமைந்திருக்கும் திருப்பேரெயில் எனும் திருத்தலம் பற்றி எழுதப்பட்டது. (தற்போதைய பெயர் – ஓகைப்பேரையூர், வங்காரப் பேரையூர்)
  • செறுத்தல் – அடக்குதல், தடுத்தல், நெருக்குதல், உள்ளடங்கச் செய்தல், நீர் முதலியன அடைத்தல், தூர்த்தல், சினத்தல், வெறுத்தல், வெல்லுதல், கொல்லுதல்
  • சிலையால் – இமயவில்லால்
  • மதில் – முப்புரங்கள்
  • அறுவிப்பார் – நீங்கச் செய்பவர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 3 (2019)


பாடல்

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவிஎங்கள்
கருத்திற் பயிலும் வாராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறிகாணும் பகைத்தவர்கே

வராகி மாலை

கருத்து – அம்மையின் படைத்தலைவிகளும் அம்மையே என்பதையும், அவளிடம் பக்தி கொண்டவர்களை தான் என்றும் விலக்கமாட்டாள் என்பதையும் விளக்கும் பாடல்.

பதவுரை 

தேவர்கள் வேண்டிய படி அவர்களின் துன்பம் நீங்குவதன் பொருட்டு அவர்களுக்காக சென்று சிரித்தபடியே மூன்று கோட்டைகளை அழித்தவனின் இடபாகத்தில் அமர்ந்திருக்கும் தேவி ஆனவளும், பஞ்சமி திதிக்கு உரித்தானவளும் ஆன  வாராகியின் வல்லமை புரியாமல், அவள் வணங்கும் பக்தர்களை வருத்தி பகைத்து கொண்டால்  தன் பக்தனுக்கு தீங்கு இழைத்தவர்களை கண்டு தீப்பற்றி எரியும் நெருப்பானது எத்தனை வேகமா எரியுமோ அத்தனை வேகமாக பகைத்தவர்களை கண்சிவந்து வெட்டி வீழ்த்துவாள்.

விளக்க உரை

  • பயிலுதல் – தேர்ச்சியடைதல்; சொல்லுதல்; பழகுதல்; சேவித்தல்; நடமாடுதல்; தங்குதல்; கற்றல்; நிகழ்தல்; நெருங்குதல்; பொருந்துதல்; ஒழுகுதல்; ஒலித்தல்; அழைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)


பாடல்

தியானித்து உள்ளடக்கி பூசைசெய்வார்
     செயகண்டி சங்கோசை காதில் கேட்கும்
தியானிப்பார் சிலம்பொலியின் ஒசைகேட்கும்
     சிதம்பரமாம் நடனத்தின் செய்துங்காணும்
தியானிப்பார் சச்சிதானந்த வெள்ளம்
     திகட்டாமதுண்டிப்பார் தேவிமீவாள்
தியானிப்பார் அனுதினமும் சிவன்தேவி
     பத்ததில் திடமாகமனவிலங்கு மாட்டுவாரே

போகர் சப்த காண்டம் -7000 – போகர்

கருத்து – தியான அனுபவங்களையும், அதன் சில பலன்களையும் கூறும் பாடல்.

பதவுரை

உரைத்த தீட்சை விதிகளின் படி மனோன்மணியான அன்னை மீது மனத்தைச் செலுத்தி  சுவாசம் உள்ளடக்கி  மனத்துள் அகபூசை செய்பவர்களுக்குக் கிட்டும் பல்வேறு அனுபவங்களை போக நாதர் இப்பாடல் மூலம் அறிவிக்கிறார். அவ்வித தியானம் கை கூடுகிறது என்பதற்கு அடையாளங்களாக  சங்க நாதம் ஓங்காரமாக காதில் ஒலிக்கும்.  நம்முள் அன்னை மனோன்மணியானவள் நடமிடுவதால் உருவாகும் சிலம்பொலி ஓசை கேட்க இயலும்.  அம்பரம், சிதம்பரம், ஆகாயம், அண்டவுச்சி, புருவ மத்தி,  சிற்றம்பலம் எனப் பல்வேறு குறிப்பிடூகளால்  உணர்த்தப் படும் மெய்ப்பொருளின் இருப்பிடத்தையும், அவ்விடத்தே அம்மெய்ப்பரம் பொருள் நிகழ்த்தும் திரு நடனத்தை உணரும் ஆற்றலும் கிட்டச்செய்யும். உண்மை, அறிவு, ஆனந்தம் எனப்படும் சச்சித்தானந்தம் என்ற பேரின்ப நிலை  இடையறாது கிடைக்கப்பெறும். இவ்வாறு அனுதினமும் தியானம் தொடருபவர்களுக்கு  அம்மையப்பர் அருளால் தச வாயுக்களில் பத்தாவதான உயர்ந்த தனஞ்செயன் எனும் உயிர் நிலைதனை தன் மனத்தால் அடக்கும் பேராற்றல் அதாவது சாகா நிலை கிட்டும் என போக நாதர் அருளுகிறார். இவ்வாறான பயிற்சி விதிகளுக்கு உட்பட்டு ஒரு தகுந்த  குரு மூலம் மட்டுமே அறியப் பட வேண்டியதாகும்.

விளக்க உரை

  • பத்ததி – வரிசை, ஒழுங்கு, ஆகமக் கிரியைகளுக்கு நெறி காட்டும் நூல். அகோரசிவாசாரியர் பத்ததி, வழி, சொற்பொருள்

 

பதவுரை எழுதித் தந்த மதனா அண்ணா அவர்களுக்கு நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)


பாடல்

தண்டமும் கயிறும் சூலமும் புகைந்த
      தழல்உமிழ் கண்களும் வளைந்த
   தந்தமும் சிவந்த குஞ்சியும் கரிய
      சயிலமே அனையமே நியுமாய்

அண்டிய சமனைக் கண்டுள(ம்) மயங்கி
      அறி(வு)அழிந்(து) இருவிழி களும்பஞ்(சு)
   அடைந்துவாய் புலர்ந்து மெய்மந்து திடும்போ(து)
      அம்பிகை தன்னுடன் வருவாய்!

வண்டுகள் முரன்று முகைகுறுக்(கு) உடைந்து
      மதுமழை பொழிந்துதா(து) அளைந்து
   மடல்விரிந்(து) அலர்ந்து பொன்நிறம் பொதிந்த
      மன்றல்அம் கொன்றைவார் சடையாய்!

கண்டவர் உளமும் கண்ணுமே கவரும்
      கநதந வநிதையர் நெருங்கும்
   கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
      காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹார மூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்து – இது எம பயம் அறுக்கச் செய்யும் பதிகம்.

பதவுரை

வண்டுகள் ஆலாபனஞ் செய்யக்கூடியதும், அரும்புகள் மொட்டவிழ்ந்து தேன் மழை போன்று  பொழியக்கூடியதும், மடல் விரிந்து பெரியதாக இருப்பதும், பொன் நிறம் கொண்டதும், மணம் வீசுவதுமான கொன்றைப் பூவினை சடையில் உடையவனே,  பழைய போர் கருவி ஆனதும் தண்டம் எனப்படுவதும் ஆன தண்டாயுதம், கயிறு, சூலம், கோபத்தினால் புகை உமிழ்வதைப் போன்ற நெருப்பினை உமிழும் கண்கள், வெளியே தெரியுமாறு இருக்கும் வளைந்த தந்தம் எனப்படுவதான பல், சிவந்ததான திருவடி, பாறை ஒத்த கரிய நிறம் ஆகிய வடிவங்களோடு இருப்பவனே, காண்பவர் உளமும், கண்ணும் கவரும் படியாகவும், மிகுந்த செல்வங்களை கொண்ட பெண்கள் நெருங்கும் படியாக இருப்பதும், மிகுந்த அலைகள் உடையதும் ஆன கடவை எனும் அந்த பதியாய் இருப்பவனே, காலனை வருந்தச் செய்தவனும் ஆனவனே, இறப்பு காலத்தில் வரக்கூடிய காலனாகிய எமனைக் கண்டு உள்ளம் மயங்கி, தான் கற்றறிந்த அறிவு அழிந்து, இரு விழிகளும் பார்க்க இயலாமல் பஞ்சு அடைத்தது போன்ற நிலை கண்டு, நீர் இல்லாம வாய் உலர்ந்து, அதனால் தளர்ந்து மனமானது குற்றம் கொண்டு திடுக்கிடும் போது உடனாகிய அம்பிகையுடன் வருவாய்.

விளக்க உரை

  • மந்து – அரசன், மனிதன், குற்றம்,காய்வேளை, கொழிஞ்சி, மந்துகால், யானைக்கால்
  • அலர்தல் – மலர்தல், பரத்தல், பெருத்தல், விளங்குதல், சுரத்தல்
  • கடவை = திருக்கடவூர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)


பாடல்

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – திரிபுரை ஒன்றொடு ஒன்று ஒவ்வாத நிலைகள் பலவற்றையும் உடையவள் எனக் கூறும் பாடல்.

பதவுரை

என்னை வழி நடத்துபவள் என்று  முன்னால் அழைக்கப்பட்ட தலைவியான  திரிபுரை பால் சுரந்து விம்ம நிற்றலால் கூடிய அருள் பெருக்கு, இளமையாக இருத்தல் ஆகிய காரணங்களால் கொங்கைகள் விம்ம பேரழகுடன் நிற்பவள்; கலைகள் அனைத்தையும் தனதாக்கிக் தன்னுள் தானே அடக்கி நிற்பவள்; பற்றற்று இருப்பவள். இவ்வாறான அவள் என் மனம் நிலைத்தன்மை பெறுவதற்காக என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.

விளக்க உரை

  • கலை – நூல்களை அடக்கி நிற்றல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரனை முன்வைத்து 16 கலைகளை உடையவள் என்று சாக்தத்தில் சில இடங்களில் கூறுப்படுவதாலும், அனைத்து கலை வடிவங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பதாலும் ‘நூல்களை அடக்கி நிற்றல்’ எனும் பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • கன்னி – குமரி, இளமை, புதுமை, முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர், அழிவின்மை, பெண், தவப் பெண், என்றும் இளமையழியாத பெண்-சப்தகன்னியர், துர்க்கை, பார்வதி, குமரியாறு, கன்னியாராசி, புரட்டாசி மாதம், அத்தம் நட்சத்திரம், தசநாடியிலொன்று, கற்றாழை, காக்கணம்
  • தையல் – தைப்பு, தையல் வேலை, அலங்காரத் துணி, புனையப்படுவது, கட்டழகு, மேகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)


பாடல்

ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்
பெருகுதவம் சித்தியெல்லாம் பெற்றும் – குருவருளால்
வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச்
சித்த சல னம்மாந் தினம்

சிவபோகசாரம் – ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்

கருத்து – குருவழி நடக்க இயலா மாந்தர்கள் கரை ஏறுதல் கடினம் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

இந்து சமயத்தின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதும், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்ற ஒருகோடி ஆகமங்களால் உணர்த்தப்பட்ட எல்லாவற்றையும் உணர்ந்தும், பெருகக் கூடியதான தவம் செய்து சித்தி எல்லாம் பெற்றும் குருவருள் வாய்க்கபெற்றும் அவர் கூறியபடி நடக்க இயலாத மாந்தர்களுக்கு அவர்களுடைய சித்தம் தினம் தினம் சலனம் கொள்ளும்.

விளக்க உரை

  • தருமபுர ஆதின ஸ்தாபகர் அவர்களால் எழுதப்பெற்றது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)


பாடல்

வைத்தநெறி நூலும் வகுத்துரைத்துப் – பத்தர்
குருலிங்க முண்மையெனக் கூறிநீ டின்பம்
தருமன்பை யென்சொல்வேன் தான்
பொன்னாடர் இந்திரனும் பூமகனும் மாதவனும்
எந்நாடும் எந்நாளு மேநாடித் – துன்னாத
வேத முடிவின் விளங்கும் ஒளிஉயிரின்
போத முடிவில் பொருந்துமொளி
முதலாக நின்று முகிழ்த்த உலகின்
விதமான எல்லாம் விரித்தும் – திரமாக
ஊர்பேர் உருவமிவை ஒன்றுமிலன் என்றாலும்

பஞ்சாக்கரப் பஃறொடை –  பேரூர் வேலப்ப தேசிகர்

கருத்து – சிவனின் பெருமைகளை கூறி அவன் அருளும் பேரின்பத்தையும் அதற்கு காரணமான அன்பையும் உரைக்க இயலாது என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

பொன்போன்ற நாட்டினை ஆளும் இந்திரனும், மலர்மேல் வீற்றிருக்கும் ப்ரம்மாவும், மாதவனும் உன்னை அறிவதற்காக நாள், இடம் என்று தேடியும் உன்னை அறிய இயலவில்லை; செறுதலை உடைய வேதத்தின் முடிவாக விளங்கக்கூடியதும் உயிரின் ஒளி போன்றதும், ஞானத்தின் முடிவாக நிற்கும் ஒளிவடிவாகவும் மொட்டு போன்றதும் ஆன இந்த உலகில்  விதம் விதமாக  விரிந்து எங்கும் நின்றும் நிலையான ஊர் பேர் இல்லாமலும், உருவம் இல்லாமலும் எதுவும் நீ இல்லை எனும் படியாக இருந்தாலும் முடிவானது என்பதைக் கூறும் சைவ சித்தாந்த நெறி நூலும், அதன் பொருளை உரைத்து இவன் பக்தன் என்று குருலிங்க உண்மையை கூறி  நிலைத்த இன்பத்தை தரும் உன் அன்பை என்ன என்று சொல்வேன் யான்?

விளக்க உரை

  • துன்னுதல் – பொருந்துதல், மேவுதல், அணுகுதல், செறிதல், செய்தல், அடைதல், ஆராய்தல், தைத்தல், உழுதல்
  • போதம் – ஞானம், அறிவு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 28 (2019)


பாடல்

உறையுந் தனுவில் உறையும் உயிர்தன்
நிறைவை அறிந்தொருகால் நில்லா – அறையுமுடல்
சேட்டையல்லால் மற்றுயிரின் சீவகமே இல்லையெனக்
காட்டுகையால் ஆவியிலைக் காண்

உபாயநிட்டை வெண்பா –  அம்பலவாண தேசிகர்

கருத்து – உயிர்களின் உடலுக்கும் மெய்ஞானத் தன்மைக்கும் இருக்கும் தொடர்பை விளக்கும் பாடல்.

பதவுரை

தனு எனப்படுவதான இந்த  உடலில் உயிர்கள் மெய்ஞானம் ஆகிய தன்னிறைவை அடைந்தப்பின் நில்லாது; உடலை விட்டு உயிர் துண்டித்தல் என்பதைத் தாண்டி உயிர்களுக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை என்பதைக் காட்டுவதால் ஆவி எனும் உயிர் என்பது நிரந்தரமானது இல்லை என்பதை காணலாம்.

விளக்க உரை

  • தனு – உடல், வில், தனுராசி, சிறுமை, நான்கு கரங்கொண்ட நீட்டலளவை, எருத்தின் முக்காரம், மார்கழி மாதம், ஊன்றிப் பேசுகை, தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி
  • அறைதல் – அடித்தல், பறைமுதலியன கொட்டுதல், கடாவுதல், சொல்லுதல், துண்டித்தல், மண்ணெறிந்து கட்டுதல்,
  • ஒலித்தல்
  • சீவகம் – இலந்தையின் பிசின், ஏலம், வேங்கை, திருநாமப்பாலை
  • ஆவி – வேதியியல் பொருட்கள் காணப்படக்கூடிய மூன்று இயற்பியல் நிலைகளுள் ஒன்று, உயிர், ஆன்மா

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 26 (2019)


பாடல்

கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்
   குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
   மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
   திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
   அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே

சட்டைமுனி ஞானம் – சட்டைமுனி

கருத்து – வாலை, திரிபுரை, புவனேஸ்வரி ஆகியவர்களின் மூல மந்திர எழுத்துக்களின் எண்ணிக்கையும், உபதேச முறைகளையும் கூறும் பாடல்.

பதவுரை

யாம் முன்னுரைத்த வாலையின் மூன்றெழுத்து மந்திரத்தை உரைத்த குறிப்பறிந்து அதில் கூறப்பட்டவாறு பூசை நிகழ்த்து. அதன் பின் திரிபுரையின் எட்டெழுத்து மந்திரம் அறிந்து அவளை பூசை செய்வாயாக. இப்பூசனைகளை நீ சரியான முறையில் நிகழ்த்துவதால் புவனேஸ்வரியின் மூலமது கிட்டும். அவளை முறைப்படி பூசை செய்து அதன் தொடர்பாக ஆற்றுப்படுத்தலை தரும் பார்வதி என்றும் காளி என்றும் அழைக்கப்படும் ஆறு எழுத்துக்கு உரித்தானவள் ஆகிய யாமளையயின் திருவடிகளைப் போற்றி பூசை செய்வாயாக.

விளக்க உரை

  • வாலையின் மூன்றெழுத்து அகார , உகார , மகாரத்தின் குறி எது என்றுணர்ந்து பூசை செய்வாய் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. எல்லா தெய்வங்களுக்கும் தனித்தனி பீஜங்களும்  அவை சார்ந்த எழுத்துக்களும் இருப்பதால் இக்கருத்து விலக்கப்படுகிறது.

வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை
வாய் கொண்டு சொல்பவர் யார் காணும்
மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே!

வாலைக் கும்மி –   எனும் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது

  • திரிபுரையின் எட்டெழுத்தை (தமிழில் எட்டுக்கு அ என்பதே குறி) என்றும், எட்டும் இரண்டுமாகிய ( இரண்டுக்கு தமிழில் உ என்பதே குறி ) இதை உணர்ந்தால் வாலைத்தாயின் இருப்பிடம் தெரியும் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டவாறே திரிபுரைக்கும் தனியே பீஜங்கள் இருப்பதாலும் குரு முகமாக பெறவேண்டி இருப்பதாலும் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • யாமளை – பார்வதி, காளி

பதவுரை எழுத உதவி செய்த மதனா அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 25 (2019)


பாடல்

கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
   களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
   தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
   பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே

ஒன்பதாம் திருமுறை  – திருவிசைபா – திருப்பல்லாண்டு – கருவூர்த் தேவர் 

கருத்து – அன்பர்களின் அக அனுபவங்களையும் பெரும்பற்றப் புலியூரின் பெருமைகளையும் கூறும் பாடல்.

பதவுரை

மேலான அன்பினால் கண்களில் பனித்துளிர்ப்பது போல் கண்ணீர் அரும்ப, கைகள் குவித்து, ‘எனக்குப் பற்றுக் கோடு ஆனவனே! ஓலம்’ என்று கதறி, எல்லா எலும்புகளும் அன்பினால் உருகும் அடியார்களுடைய கூட்டத்தில் அடியேனையும் இணைத்துக் கொள்ளும் எனும்படியான ஈசனுடைய திருக்கோயில் எதுவெனில் தேன் உண்டு தெளிந்த வண்டுகள் பலப்பல பண்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருப்பதானதும் குளிர்ந்த மலர்களைப் பரப்பிய மேலிடத்தில் அரும்பும் சண்பகம் நிறைந்த சோலைகளை உடையதும் ஆன பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே ஆகும்.

விளக்க உரை

  • மொட்டித்து – குவித்து
  • களைகணே – பற்றுக் கோடானவனே
  • சூழ் மொழுப்பு – பரவிய மேலிடம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 24 (2019)


பாடல்

நீடும் தண்டாயுதம் நித்தம் தண்டாயுதம் நித்தம் அன்பர்
தேடும் தண்டாயுதம் ஈரேழுலகமும் சேவித்துக் கொண்
டாடும் தண்டாயுதம் அண்டாது பேய்கள் அலறிவிழச்
சாடும் தண்டாயுதனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்து – தண்டாயுதத்தின் சில பெருமைகளை உரைத்து, அதைக் கொண்டிருக்கும் பைரவரை வணங்கி நிற்கும் பாடல்.

பதவுரை

காழியாபதுத்தாரணனே, நீண்டதான தண்டாயுதம், தினமும் தண்டாயுதம், நித்தமும் தன் வினைகளை அறுக்க அன்பர்கள் தேடும் தண்டாயுதம் , ஈரேழு பதினான்கு லோகமும் வணங்கி கொண்டாடிடும் தண்டாயுதம், தீமை தரத்தக்க பேய்களை அலறி விழச் செய்யும் படியான தண்டாயுதம் எனும் பெருமைகளை உடைய தண்டாயுத்தை ஏந்தியவனாக இருக்கிறாய்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 23 (2019)


பாடல்

பொய்யாறா வாறே புனைந்து பேசிப்
புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரண முடையோ மென்று
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீல கண்டர்
நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே யென்பீ ராகில்
அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஐயாறு திருத்தலத்தை நினைத்து வாழ்ந்தால் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

நிலையாமை உடைய பொருள்களை பொய்த் தன்மை நீங்காதவாறு சிறப்பித்துப் பேசியும், பொழுது புலர எழுந்தது துன்பம் கொள்ளாமல் தொழில் செய்கிறோம் என்று எண்ணி பொருளைத் தேடி இன்பம் உடைய மனத்தவர்களாக கருதி வாழ்பவர்களே! விஷத்தை அமுதம் போல் கொண்டவர் ஆன நீலகண்டரும், நீண்ட செஞ்சடை உடையவரும், நெற்றிக் கண் உடையவரும் ஆகிய சிவபெருமான் விரும்பி உறையும் தலமான ஐயாறே ! ஐயாறே ! என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும்.

விளக்க உரை

  • இத்திருத்தாண்டகம், திருவையாற்றை எடுத்து ஓதி அருளியது.
  • கையாறு – செயலறுகை, துன்பம்
  • கரணம் – செய்கை, இயக்கம், தொழில்
  • நெய்யாடுதல் – எண்ணெய் பூசி மங்கலநீராடல், நெய்பூசுதல்
  • அல்லல் – பிறவித்துன்பம்
  • நெய்யாறா ஆடிய – ‘நெய்யை ஆறுபோல் ஆடியவரும்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 22 (2019)


பாடல்

எவ்வடி வுகளும் தானாம் எழிற்பரை வடிவ தாகிக்
கவ்விய மலத்தான் மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கிப்
பவ்வமீண் டகலப் பண்ணிப் பாரிப்பான் ஒருவ னென்றே
செவ்வையே உயிருட் காண்டல் சிவரூப மாகு மன்றே

திருநெறி 13 –  உண்மைநெறிவிளக்கம் – சீகாழி தத்துவநாதர்

கருத்து – அனைத்திலும் நீக்கமற நிறைந்து உயிர்க்குயிராய்த் நின்று இருக்கும் உயிர்களை  சிவரூபமா காணுதலை கூறும் பாடல்.

பதவுரை

சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் மயேசுரன் ருத்திரன் விஷ்ணு பிரமா மற்றுமுள்ள வடிவுகள் எல்லாம் தானே ஆகின்ற சிறந்த சிவசக்தி வடிவே தன்னுடைய வடிவாகி, வேலை கொள்வானிடத்தில் வேலை செய்பவன் நடு நடுவே இளைப்பு கண்டு இளைபாறுதல் போல் இந்த புவனியிலே அனுபவிக்க தக்க அளவில் இருக்கும் வினையின் ஒரு பகுதியை அனுபவிக்கச் செய்து மலத்தில் இருந்து துயரம் தீரும் அளவில் மாயையின் காரியத்தை ஒடுக்கி, பின் உண்டாக்கி, அந்த வழியில் நின்று கன்மங்களை தொலைப்பிக்கச் செய்து அதன் கடுமையைக் குறைத்து காப்பவனும், ஆணவ மாயை கண்ம மலங்களைப் பிடித்துக் கிடக்கும் ஆன்மாக்களையும் அந்த ஆன்மாக்கள் கொண்டிருக்கும் சஞ்சீதம், பிராப்தம் மற்றும் ஆகாமிய  வினைகளையும் அறிந்து அதனை அறிய காரணமாண  மாயா காரியமாகிய உடலும் தத்துவங்களும் கொண்டு அவைகளை அனுபவிக்கச் செய்வதான பரமேசுரனின் வடிவு பரையாகும்; இவ்வாறு உயிர்க்குயிராய்த் திருவடி ஞானமாய் நின்று அறிவிப்பதைத் திருவருளைக் காணுதல் சிவரூபமாகும்.

விளக்க உரை

  • பரை – பூட்டியின் பூட்டி, ஆறாம் தலைமுறை மூத்தப் பெண், சிவசத்தி, ஒரு அலகு
  • பாரித்தல் – பரவுதல், பருத்தல் (பேச்சு வழக்கு), மிகுதியாதல், தோன்றுதல், ஆயத்தப்படுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 21 (2019)


பாடல்

இனிவார் சடையினில் கங்கையென்
     பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என்
     செய்திகையிற் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்
     தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னால்மிகக்
     கோத்தஎம் சங்கரனே

பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்

கருத்து – சங்கரனை நிந்தாத் துதி செய்தல்.

பதவுரை

கோபம் கொண்ட அசுரர்களின் முப்புரத்தையும் செந்தீயினால் வேகுமாறு எரித்த சங்கரனே, உன் சடையினில் தங்கியுள்ள இனிமையத் தரத்தக்க  கங்கையை இடபாகத்தில் இருக்கும் பாகம் பிரியாத மலைமங்கை  என அழைக்கப்படும் உமாதேவியார்  காணநேர்ந்தால் நீ என்ன செய்வாய்?

விளக்க உரை

  • `காணின் என் செய்தி` – `நாணித் தலை குனிவை போலும்`  எனினும், `உயிர்களின் நன்மைக்காக அன்றிப் பிறிதொன்றையும் செய்யாதவன்நீ` என்பதை உணர்த்தும்.  `இதுவும் ஒரு நன்மைக்கே` என்பது உணர்ந்து அவனும் எதுவும் செய்யப் போவதில்லை; நீயும் நாணுதற்குக் காரணம் இல்லை` என்பது இப்பாட்டின் உள் உறையும்  சிறப்பு. (வட மொழியில் – நிந்தாத் துதி, தமிழில் பழிப்பது போலப் புகழ்தல்)
  • முனிவார் – கோபிப்பவர்
  • வார்கணை- நீண்ட அம்பு

Loading

சமூக ஊடகங்கள்