
பாடல்
பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
சுத்தமெய்ஞ் ஞானவொளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே
திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை – வள்ளலார்
கருத்து – திருஒற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடை நாயகியின் பெருமைகளை கூற அவளே அருள் புரிய வேண்டும் என்று கூறும் பாடல்.
பதவுரை
திருஒற்றியூரில் விளக்கும் தூயவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் மயிலே,வடிவுடை மாணிக்கமே, பக்தர்கள் உள்ளத்தில் என்னும் போற்றுதலுக்கு உரித்தானதான அழகானக் கோயிலில் வாழ்கின்ற மேலான பரதேவதையே, தூயதானதும், மெய்ஞானமானதும் ஆன அறிவொளிப் பிழம்பே, மெய்ஞான அறிவினால் பெறப்படுவதான சுகவாழ்வின் ஆனந்தமே! தினமும் உன் பெருமை மிக்க புகழைச் சொல்ல எனக்கு அருள் புரிய வேண்டும்.
விளக்க உரை
- பத்தர்-பக்தர்
- மேவும்-வாழ்கின்ற
- சித்-அறிவு
- எற்கு-எனக்கு
- நின்மலர்-தூயவர்
- உன் மத்தர்-பித்தர், சிவப்பரம்பொருள்
- வாமம்-இடப்பக்கம்