முட்டற வாழும் பெருஞ்செல்வ மும்முத் தமிழ்க்கல்வியும் எட்டுணை யேனுங் கொடுத்துண்டிருக்க எனக்கருள்வாய் வட்டமதிச் சடையானே சிகரமலைக் கமர்ந்த சட்டம் உடையவ னேகாழி யாபதுத் தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
பூரணத்துவத்தின் அடையாளம் ஆகிய முழு நிலைவை தலையில் சூடியவனே, காழி மலை மேல் அமர்ந்த மாணிக்க வகை போன்றவனும், நேர்மை ஆனவனும் ஆன ஆபதுத்தாரணனே, நீங்காமல் இருக்கும் பெரும் செல்வமும், முத்தமிழ் கல்வியும் எள்ளவாவது எப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்க எனக்கு அருள்வாய்.
விளக்கஉரை
எட்டுணை – எள்ளளவு
சட்டம் – மரச்சட்டம், கம்பியிழுக்கும் கருவி, எழுதும் ஓலை, எழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம், நியாய ஏற்பாடு, செப்பம், நேர்மை, ஆயத்தம், புனுகுப்பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள், மாணிக்கவகை
மனிதன் விரதத்தை எப்படி செய்தால் புண்ணியம் அடைவான்?
சிவன்
மனிதன் சாத்திரத்தில் உரைத்தவாறு நீராடிய பின்பு பஞ்ச பூதங்களையும், சூரிய சந்திரர்களை காலை மற்றும் மாலை ஆகிய இரு சந்தி வேளைகளிலும், தர்ம தேவதையையும், யமனையும், பித்ருக்களையும் நமஸ்கரித்து தன்னை அவர்களிடம் ஒப்பித்து மரணம் வரையிலுமோ அல்லது குறிப்பிட்ட காலம் வரையிலுமே விரதத்தை செய்யலாம்.
காய்கறி, கனி மற்று பூ இவற்றிலும் விலக்குவது குறித்து நிச்சயப்படுத்திக் கொண்டு விரதம் செய்யலாம்.
பிரம்மச்சாரிய விரத்தையும், உபவாச விரத்தையும் கொள்ளலாம்.
இவ்வாறு பலவகையிலும் கொள்ளப்படும் விரதத்திற்கு அது பற்றி தெரிந்தவர்கள் கெடுதல் வராமல் காக்க வேண்டும். இவ்வாறான விரதம் கெட்டால் பாவம் என்று அறிவாயாக.
மருந்து உண்பதற்காகவும், அறியாமையாலும், பெரியோர் கட்டளையாலும், சுற்றத்தாருக்கு உதவி செய்வதற்காகவும் விரதம் கெடுவதால் குற்றம் ஆகாது.
விரதம் முடிக்கும் போது சாத்திரத்தில் விதிக்கப்பட்டவாறு முடிக்க வேண்டும். அதனால் சித்தி அடைவான்.
உமை
சிலர், புலால் எனும் மாமிசம் உண்ணுகின்றனர், சிலர் விட்டு விடுகின்றனர். அதை உண்ணலாமா கூடாதா? இதைச் சொல்லக்கடவீர்.
சிவன்
அக்கினி பூசையும், தானமும், வேதம் ஓதுதலும், தட்சிணைகள் நிரம்பிய யாகங்கள் ஆகியவை புலால் உண்ணாமல் இருப்பதன் பதினாறின் ஒரு பங்கிற்கு ஈடாகாது. சுவையை விரும்பி தனக்காக வேறு உயிரைக் கொல்பவன் பாம்பு, நரி, கழுகு மற்றும் ராட்சர்களுக்கு சமமானவன். பிற மாமிசத்தில் தன்னை வளர்ப்பவன் பிறக்கும் பிறப்புகளில் எல்லாம் பயம் கொண்டவனாகவே இருப்பான். தன்னை அறுத்தல் தனக்கு எத்தனை துன்பம் தருமோ அது போலவே பிற உயிர்களுக்கும் துன்பம் தரும் என்று புத்திசாலி உணரவேண்டும்.
வாழ்நாள் முழுவதும் மாமிசம் உண்ணாதவன் சொர்கத்தில் நிலைபெறுவான். நூறு வருடம் தவம் செய்வதும் மாமிசம் விடுவதும் சமமாகவே இருக்கும் அல்லது அந்த தவ வலிமை குறைவாகவே இருக்கும். உயிரைக்காட்டிலும் மேலானது எதுவும் இல்லை என்பதால் தன் போல் பிற உயிர்களிடத்தில் இரக்கம் வைக்க வேண்டும்.
மாமிசத்தின் சுவை அறிந்து அதை விலக்குபவன் பெறும் நன்மையை யாகங்களும், தேவர்களாலும் செய்யமுடியாது.
மாமிசத்தை விட இயலாவிடின் ஏதாவது ஒரு மாதத்தில் விட வேண்டும்; அதுவும் இயலாது போனால் கார்திகை மாதம் சுக்ல பட்சத்தில் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை), தனது ஜன்ம நட்சத்திரதின் போதாவது, புண்ணிய திதிகளில் அல்லது அமாவாசை பௌர்ணமி திதிகளில் மட்டுமாவது விடவேண்டும்.
உடற் பிணிகள் வந்து அதன் பொருட்டு மாமிசம் உண்பவனையும் பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட மாமிசம் உண்பவனையும் பாவம் பற்றாது.
உமை
தர்மத்தை கடைபிடிப்பவர்களால் குரு பூசை எவ்வாறாக செய்யப்படுகிறது?
முழந்தாள் அளவு நீண்ட கைகளை உடையவனாகவும், தாமரைப் பூப்போன்ற திருவடிகளை உடையவனாகவும், அல்லி போன்ற பூக்களை சூடியவனாகவும்*, வீணையைக் கைகளில் கொண்டவனாகவும், ஆடுவதால் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.
விளக்கஉரை
*கோடலா வேடத்தன் – பிறரால் கொள்ள முடியாத வேடத்தினன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
தாட வுடுக்கையன் – முழந்தாள் அளவு நீண்ட கை அரசர்களுக்கு உரிய உத்தம இலக்கணம். ‘தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்’ எனும் கம்பராமாயண பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும், தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார் பெற்றருளிய குமாரக் கடவுளே, புவி முதல் ஆகாயம் வரையிலான ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு நிலை இல்லாமல் அலைந்து, நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல், நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின் விதவிதமான சைகளையே நினைந்து, இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு அன்போடு திருவருள் புரிந்து, சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு எனக்கு உபதேசம் செய்த தன்மையானது, சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும்; அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய, கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே, ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும் சிவயோகத்தையே செய்து, விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின் வினைகள் தீருமாறு அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த ஊதிமலை மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே! அன்புடன் மனம் கசிந்து உருகி முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய்.
விளக்கஉரை
ஆவுடையாள் – பசு ஏறும் பிராட்டி – திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்வதி தேவிக்கு ஆவுடை நாயகி எனப் பெயர்.
ஆரணியம் என்று அழைக்கப்படும் காட்டில் வாழும் அழகரே, யான் எல்லாப் பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் நிற்கும் பொழுது நீர், ‘தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா’ ஆகிய வாத்திய கருவிகளுடன், பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடினாலும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டு ‘சிறிது பிச்சை இடுமின்’ என்று சொல்லி வந்து நிற்கின்றீர்.
இசைக்கருவிகள் அறிமுகம் : ஆகுளி (வேறு பெயர் – சிறுகணாகுளி)
பாடல்
வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்
பதவுரை
வெல்லும் படையும், அஞ்சாமையாகிய வீரம் கொண்ட சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் இருந்து எழும் கொல், எறி, குத்து என்றும் ஆரவாரத்துடன் கூடிய ஒலிகள் மட்டுமல்லாமல், சிலம்பின் பருக்கைக் கற்கள் கொண்டதாகிய சில்லரியின் ஓசையும், உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய சிறுபறையும் சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக உயரத்தினின்று பள்ளத்தாக்கில் மலையில் வீழும் அருவிகளாதலின் அவற்றின் வேகமும், கற்கள் மோதுதல் ஏற்படுவதால் தோன்றும் ஒலியும், வளைந்து வளைந்து செல்லுதலால் ஏற்படும் ஒலிகள் முதலியனவும் அங்கே எங்கும் உள்ளன.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, ஒளிரும் வண்ணங்கள் உடைய முழு நிலவைப் போன்றவளே, அனாதி காலம் தொட்டு தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பவளே, இனிமை நிறைந்த முக்கனிகளில் பலா போன்றவளே, அழகிய மணம் பொருந்திய சோலை போன்றவளே, போற்றுதலுக்கு உரியவளே, கடல் போன்று பரந்து யோகியர்கள் உள்ளத்தில் குடியிருப்பவளே, ஈசனிடம் வாதாடி வாதாடிய பேரொளி விளக்கே, வினைகள் பற்றி எடுத்த எனது பிறவிகள் எண்ணில் அடங்காது; அவைகளை ஏட்டிலும் எழுத முடியாத அளவு மிக நீண்டதானது.; நீண்ட மரம் போல வெட்டப்பட்டு எமனுடைய உலகமாகிய எமலோகத்தை அடைந்து பெண்ணிடத்தில் மயக்கம், வினை பற்றி நின்றதனால் அது பற்றி விளைந்ததாகிய வினைமயக்கம், இப்பிறவி பற்றியதால் ஏற்பட்ட பிறவி மயக்கம் ஆகியவைகள் தொலையாது, பித்தர்களுடனும், சண்டாளன் எனப்படும் புலையருடனும் பேய் பிடித்தவர்களை அலைவது போல் அலைவேனோ?
தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால் எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு இல்லையென்று எண்ணுவீர் கோனாரே
இடைக்காடர்
பதவுரை
உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறவி எடுத்ததால் அப்பிறவியுடன் இணைந்து வரும் மாயையாகிய மயக்கத்தில் (செயலிழக்கச் செயும் சோம்பலில்) மனத்தை இழக்காது மனமொருமைப் படுத்தி வந்த பொருள் அறியும் முயற்சியாகிய தவத்தில் ஈடுபடா விட்டால், இப்பிறவியின் முடிவில் (எல்லையில்) கடவுளாகிய மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து அதனுடன் இணையும் திறன் நமக்கு கிடைக்காது என்ற உண்மையை உணர வேண்டும்.
விளக்கஉரை
தொந்தம் – இரட்டை, புணர்ச்சி, தொடர்பு, பகை, மரபுவழிநோய், ஆயுதவகை, பழமை, நெருங்கிய பழக்கம்
ஔபரமிகம், நிருபத்ரவம், ஸோபகரணம் என புண்ணியம் மூன்று வகைப்படும்.
ஔபரமிகம்
பாப காரியங்களை செய்யாதிருப்பதாகிய ஔபரமிகம், மனோ வாக்கு காயங்களால் ஏற்படும் பாவங்களை விடுதல் மற்றொரு புண்ணியம் ஆகும். இந்த பாவங்களையும் மனதால் நினைத்து அவற்றை விலக்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுவான். (மூன்று வகையான பாவங்களையும் விடுதல் தபோவிரதம் எனப்படும்.) எல்லா பாவங்களையும் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ விடவேண்டும். பாவங்களை விடுவது அசாத்தியம் எனினும் மனிதன் பாவங்களை விட்ட உடனே உயர்ந்ததாகிய ரிஷி ஆகிறான். புத்தி குறைவான மனிதர்கள் இந்த வழி அறியாமல் நரகத்தில் வதைபடுகின்றனர்.
நிருபத்ரவம்
சான்றோர்களிடம் இருந்து சாஸ்திரங்களை கேட்டல், ஐம்புலன்களை அடக்குதல், உள்ளத்தில் எப்பொழுதும் திருப்தியாக இருத்தல் ஆகியவற்றால் பாவங்களை விலக்க முடியும். இது நிருபத்ரவம் எனப்படும்.
ஸோபகரணம் (அல்லது) நிருபஸாதனம்
உலகம் முழுவதும் நன்றாக இருக்கும்படி நினைத்தல், சத்தியம், மனத்தூய்மை, உபவாசங்களில் மகிழ்வு கொள்ளுதல், காமக் குரோதங்களை விடுதல், மனதையும், இந்திரியங்களையும் அடங்குதல் மற்றும் உள்ள நற்கருமங்கள் அனைத்தும் நிருபஸாதனம் எனும் புண்ணிய வகையைச் சார்ந்தவை.
சத்யமானது சுவர்கத்திற்கு படி போலவும், துன்பக்கடலில் கப்பல் போலவும் இருக்கிறது. கண்டதையும் கேட்டதையும் உள்ளபடி உரைக்கும் சத்தியத்திற்கு மேலான தானமும் இல்லை; தவமும் இல்லை.
உயர்வு தாழ்வுகளை அறிந்ததால் சத்தியத்தை பேசுவதால் தீர்க்க ஆயுள் உண்டாகும். அவன் சந்ததியின் தொடர்ச்சியை காண்பவனும், உலகின் வரம்பை நிலை நிறுத்துபவனும் ஆகிறான்.
உமை
மனிதன் விரதத்தை எப்படி செய்தால் புண்ணியம் அடைவான்?
இடைக்கருவிகள் அறிமுகம் : முழவம் (குடமுழா, குடபஞ்சமுகி எனும் பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் – தோலிசைக்கருவி)
புகைப்படம் : விக்கிப்பீடியா
பாடல்
துடிக ளோடு முழவம் விம்மவே பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப் படிகொள் பாணி பாடல் பயின்றாடும் அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே
தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
பலவகையான உடுக்கைகள் ஒலிப்பு சப்தங்களோடு முழவங்களும் நிறைந்து ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை கூத்து மேடையாகக் கொண்டு, பொருத்தமான தாள கதிகளோடு பாடல்கள் பாடியும் ஆடியும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.
உண்டு ஆடையின்றி ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்குமாறு திரிபவர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை உடலில் போர்த்து உழலுபவர்களும் கண்டு அறியாத இடமும், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவைகள் ஒன்றாக பொருந்துமாறு நடனம் புரிபவராகவும், அடியவர்களின் துன்பங்களைப் அனாதி காலம் முதல் தீர்த்து அருளிவரும் பரமனார் எழுந்தருளியதும் ஆனது பல்லவனீச்சரமாகும்.
விளக்கஉரை
உடுக்கை – முதலடியில் வரும் உடுக்கை என்பது ஆடை, மூன்றாமடியில் வரும் உடுக்கை என்பது வாத்தியம்.
ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தமரர் வலஞ் செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
யான், புறக்கருவிகளாலும், அகக்கருவிகளாலும் பெற்ற இந்த உடலையும், அதன் வழி பற்றி நிற்குமுயிரையும் விரைவாக செலுத்தி தூய்மையான வெண்ணிறம் கொண்டவனை நினைத்திருத்தலை மட்டும் செய்திருந்தேன்; அவ்வாறு செய்த இந்த சிறு செயலுக்காக திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் அம்முதல்வன், வான் உலகத்தையே பெரிதாக மதிக்கும் தேவர்கள் என்னை நாடி வரும்படியும், வந்து வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறும் செய்து, ஓர் யானை ஊர்தியை எனக்கு அளித்தருளினான்; எம் மேல் வைத்த பேரருள் என்பது அவன் முன்னொருமுறை யானையை உரித்து அதற்கு அருள் செய்யக் கருதியதற்கு ஒப்பானது.
விளக்கஉரை
வெருட்டுதல் – அச்சுறுத்துதல், திகைக்கச்செய்தல், விலங்கு முதலியவற்றை ஓட்டுதல், விரைவாகச் செல்லத் தூண்டுதல்
இழிந்த தன்மை உடைய நாய்க்கும் ஒரு ஆசனமிட்டு, அதற்குப் பெரிய பொன் முடியைப் அணிவித்தாய் என்று நின்னுடைய அன்பர்கள் தங்கள் வாய்க்கு வந்தவாறு பலவாறு பேசுமாறு, உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவனாகி அறிவில்லாத என்னையும் பெரிய அருட் சத்தியாகிய தாய்க்குக் காட்டி, நல்ல குளிர்ந்த அமுதூட்டி ஒரு வெண்மையான மாடத்தில் பொன்னிற மண்டபத்தில் என்னை அமரச் செய்து சிறு குழந்தையை ஒத்து என் கையில் பொன்னாலாகிய கங்கணம் ஒன்றை ஒளி விளங்கக் கட்டி அருளினாய்; நின்னுடைய செய்கையை என்னென்பது.
விளக்கஉரை
‘மதியிலேன்’ – உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவன் எனத் தம்மை குறிப்பிதல்.
உன் திருவடியை விடும் தன்மை இல்லாத அடியார்களது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற திரு உத்தரகோசமங்கைக்குத் தலைவனே! மலரில் இருக்கும் பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மது வெள்ளமே! பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே! உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற, திரு உத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?
விளக்கஉரை
‘இறைவனது கருணை ஏகவுருவாய் எங்கும் பரந்து கிடப்பினும் உயிரினது தன்மைக்கேற்பவே அதைப் பெற முடியும்‘ என்பது பற்றியப் பாடல்
‘விடலரியேனை’ – முழுதும் மூழ்கும் படி விட்டுப் பருகாது, சிறிதே சுவைத்து ஒழிவேனை என்னும் உவமைக்கேற்ப உரைத்தல்
மடலின் மட்டு – பூவிதழில் துளிக்கின்ற தேன் (மிகச் சிறிய அளவு)
மதுவெள்ளம்- தேன் வெள்ளம்(பெருகிய மிக அதிக அளவு)
இறைவனுக்கு அடியாரது உடல் ஆலயமாதலின், ‘அடியார் உடல் இலமே மன்னும்’ என்ற அடிகள் கொண்டு அறியலாம்; ‘ஊனுடம்பு ஆலயம்’ என்ற திருமூலர் வாக்கையும் ஒப்பு நோக்கிக் காண்க.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அன்னை போன்றவளே, அருட்கடல் போன்றவளே, மலமற்று இருப்பதால் குற்றமற்றவளாக இருப்பவளே, அழகிய தெய்வ வடிவமாக ஆனவளே, உன்னை வணங்கும் அடியவர்களுக்கு அமுத ஞானத்தினை அருளும் அரசே, மாயையின் வடிவானவளே, இந்த செகத்தினை விட கனமான தன்மை கொண்டவளே, மலையரசன் மகளே, பிள்ளையைப் பெற்ற தாய்க்கு, பேய்த் தன்மை உடையவன் ஆயினும், பேசாத ஊமைத் தன்மை உடையவன் ஆயினும், காட்சி காண இயலா குருடன் ஆயினும், ஒலி கேட்க இயலா தன்மை இல்லாத செவிட்டுத் தன்மை உடையவன் ஆயினும், ஊனத்தை உரைப்பதாகிய கால் முடம் போன்ற தன்மை கொண்டவன் என்றாலும் குறையைப் பற்றி நின்று அக்குழந்தையை பிரிய மனம் வருமோ(வராது); (அதுபோல்) நாய்த் தன்மை உடைய யாம் செய்யும் வினைகளை பஞ்சுப் பொதியில் வைத்த தீப்பொறி போல் முழுவதும் அழித்து எம்மை ஞானவடிவாகிய சிவத்துள் சேர்த்து அருள்வாயாக.
விளக்கஉரை
அன்னையைப் போற்றி தன் வினைகளை அழிக்க வேண்டுதல்
‘பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்’ எனும் அபிராமி அந்தாதி பாடல் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
ஐந்தறிவு மட்டுமே பெற்றதாயினும் மாடு தன் கவனத்தை தன்னை செலுத்துபவன் மீதே கொண்டு அதே போக்கில் கவனச் சிதறல் இல்லாது பயணிக்கும்.; ஆனால் ஆறறிவு பெற்றிருந்தும் மனிதர்கள் அவ்வாறு அறிய இயலாதவர்கள்; முற்பிறவியில் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவே இப்பிறவி சார்ந்த கர்மங்கள் என்பதை மறந்து நரகம் என்றும், சொர்கம் என்றும் வீண் பேச்சுப் பேசி வாழ்வைக் கழித்திடுவார்கள். கண்களைக் கவறும் நாட்டியம் போலான நடை உடை பாவனைகளைக் கொண்ட பெண்களைத் தங்கள் சகோதரிகள் (தந்தை இனம்) என எண்ணவே தோணாது வாழ்வார். வெளியில் அழகாகவும் பொருள் விடமாகவும் பேசும் நங்கையர்களின் மேலேயே கவனம் செலுத்தி, சிற்றின்பங்களின் பால் கொண்ட விருப்பம் துறந்து உடலின் மேல்தளமான சகஸ்ராரத்தில் அணையா விளக்காய் கனன்று கொண்டிருக்கும் கனலில் சேர்வதற்குத் தயங்குகிறார்கள்.
விளக்கஉரை
மனிதகுலத்தின் மேலான தாக்கத்தை வெளிப்படுத்தும் அகத்தியப் பெருமானின் பாடல்.
தந்தை இனம் மட்டுமே சகோதரத்துவதை ஏற்படுத்தும்; உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகவே எண்ணுதல் தம்மை மேம்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்லும் முக்கிய இறை வழிகளில் ஒன்று. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ எனும் வரிகளுடன் ‘அரிய தந்தை’ எனும் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
தன்னில் இருந்து மனித குலம் மீது எவ்வகையிலும் கடும் சொல் விழக் கூடாது என்பதற்காக ‘ஆடுகின்ற தேவதைகள்’ எனும் பதத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.
சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.
அடியார் மனத்தில் நினைத்த கருமம் அனைத்துமங்கே முடியாத தேது முடித்தருள் வாய் முருகாரலங்கல் கடியார் மலர்க் கொன்றை மாலிகை சூடிய கண்ணுதலே தடியேந்திய கையனே காழியாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
அழகிய தளிர் நிறைந்து சூட்டப்பட்ட கொன்றை மலர் மாலையை அடையார்களால் சூட்டப்பட்டு அதை அணிந்தவனே, காப்பதன் பொருட்டு தடியினை கைகளில் ஏந்தியவனே, சீகாழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே, ‘உன்னிடத்தில் பற்றுக் கொண்ட அடியவர்கள் மனதில் தோன்றிய சிந்தனைகள் உன்னைப் பற்றியப் பின் முடியாது ஏது?’ என்று அவற்றை முடித்து அருள்வாய்.
ஆதினம் அவர்கள் பக்தி நிலையில் எழுதியதால், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.
போர் செய்வதற்கு ஏதுவான உடலை உடைய கூட்டமான குதிரைகளும், யானைகளும் நிரம்பியதும், அசுரர்களின் பிணங்கள் குப்பை போன்று தோற்றம் உடையதாகி, எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகள் எல்லாம் சிவக்க, எட்டுத் திக்குகளிலும் உள்ள ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம் ஆகிய யானைகள் அசைந்து ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று முழங்கவும், தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்கவும், சில முரசு வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் தோன்ற, அற்புதமான விண்ணுலகத்து தேவர்களின் ஊரானதும், பொன்னால் ஆனதுமான பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, செல்வங்களை அடைந்து, பொன் மலர்களைச் சிந்தும் படியாக வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே! மெய்ப் பொருளை அறிந்த ஞானி வடிவாகிய குறமகள் வள்ளியும், ஐராவதம் எனும் யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானையும், மேம்பட்ட வாகனமான மயிலும் விளங்கப் பெற்று, உத்தர கோச மங்கை எனும் திருதலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே! வேண்டுவோர்க்கு வேண்டியதைத் அருளும் கற்பக மரம் போன்ற ஞான மூர்த்தியாகிய கடவுளே, முன்பு விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானைக்குத் தலைவனே, இன்பம் தரத்தக்கதான தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், அன்னம், வெள்ளைச் சர்க்கரை, பால், தேன், நிரம்பிய இளநீர், மா, பலா மற்றும் வாழை என்னும் மூன்று வகையான பழங்கள், பயறு ஆகிய இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக் கொண்டு அருளும் யானையாகிய கணபதியின் வலிமை நிறைந்த தம்பியே, எழில்மிகு திருவடியை முற்பிறப்பில் வணங்கியதால், உனக்கு வாகனமாக இப்பிறவியில் அமைந்த அழகிய மயிலை உடையவனே, திரளாக உள்ளதும், உருளும் தன்மை உடையதுமான ரத்தினம் பதித்த தண்டையையும், அழகிய சந்த நாதத்தோடு ஒலிக்கின்ற சிலம்புகளையும் அணிந்தவனே, என்றெல்லாம் அழகாக உன்னை உள்ளக் கசிவோடு மனம் கசிந்து தியானித்து, நன்றாக யான், உனது அழகிய திருப்புகழைப் பாடி சிவ பதத்தையும் பெற்று, மெய் ஞானப் பெரு வெளியாகிய சிதாகாச உயர் நிலையைப் பெற்று, அதனால் உண்டாகும் ஞான அமுதை உண்ணப் பெறுவேனோ?
விளக்கஉரை
உற்பனம் – விரைவில் அறிகை, உத்தமம், தோன்றியது, உற்பத்தி செய்தது, பிறப்பு, ஞானம், கல்வி, நிமித்தம்.
உமை அசுபகர்மம், சுபகர்மம் எப்படிப்பட்டது? அதனை விளக்குங்கள். உயிர்களை கீழ் நிலைக்கு தள்ளும் அசுபகர்மம் பற்றியும், மேலான நிலைக்கு அழைத்துச் செல்லும் சுபகர்மம் பற்றியும் சொல்ல வேண்டும்.
சிவன் மனம், வாக்கு, காயங்களால் பாப கர்மம் உண்டாகிறது.
கொலை செய்ய எண்ணுதல், பொறாமை, பிறர் பொருளில் ஆசை கொள்ளுதல், மனிதர்களின் ஜீவனமாக சம்பளத்தை கெடுப்பது, தர்ம காரியத்தில் சிரத்தை இல்லாதிருத்தல், பாப காரியம் செய்கையில் சந்தோஷம் கொள்ளுதல் இவை மானச பாவங்கள் எனப்படும்
பொய் பேசுதல், கடுமையான சொற்களைச் சொல்லுதல், யாருக்கும் அடங்காமல் பேசுதல், மற்றவர்களை நிந்தித்தல் இவைகள் வாக்கினால் உண்டாகும் பாவங்கள் எனப்படும்
பிறர்மனை புகுதல், பிற உயிர்களை கஷ்டப்படுத்தி அவைகளை கட்டுப்பத்துதல், களவு, களவுப் பொருளை அழிப்பது, உண்ணத் தகாதவற்றை உண்ணுதல், வேட்டை ஆடுதலில் பற்றுதல், கர்வம், அலட்சியம், பிடிவாதத்தால் பிறரை நோகச் செய்தல், செய்யத் தகாதவற்றை செய்தல், குடிப்பது, அசுத்தமாக இருத்தல், தீயவர்களுடன் சேர்க்கை, கெட்ட ஒழுத்தம் உடையவராக இருத்தல், பாப காரியங்களுக்கு துணை போதல் ஆகியவை சாரீர பாவங்கள் எனப்படும்
இதில் சாரீர பாவம் மிக அதிக பாவமாகும்
கர்மவசத்திற்கு உட்பட்டு அறியாமலோ அல்லது காரணம் பற்றியோ எவ்வாறு செய்யினும் பாவம் செய்தவனை அடைந்தே தீரும்.
உமை பாவ காரியத்தை எவ்வகையில் செய்வதால் அது பற்றுவதில்லை?
குற்றம் செய்யாத ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள தன்னை நோக்கி முதலில் ஆயுதத்தை ஓங்கிய பகைவனை திருப்பி அடித்துக் கொண்டால் பாவம் பற்றாது. ஊர் காப்பாற்றுபடுவதன் பொருட்டும், துயரப்படுபவர்களை காப்பதன் பொருட்டும் எதிர்களை துன்புறுத்துவனை பாவங்கள் பற்றாது.பஞ்சத்தில் இருக்கும் போது உயிர் வாழ்வதற்காக எவரும் அறியாமல் உணவு கொண்டவனை பாவங்கள் பற்றாது.(கிரகஸ்தர்களுக்கானது இது).
இடம், காலம் ஆகியவற்றை புத்தியினால் ஆராய்ந்து, பிரயோசனத்தை பற்றை ஆராய்ந்து பேசத் தக்காதவற்றை பேசினாலும், செய்யத் தகாதவற்றை செய்தாலும் சிறிது பாவம் பற்றும்.
உமை பானத்தின் குற்றங்களையும், குடிப்பதற்கும் குடிக்காமல் இருப்பதற்கும் ஆன காரணத்தை கேட்க விருப்புகிறேன்.