அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 16 (2018)

பாடல்

பேயேன் ஊமை விழிக்குருடு
      பேணுஞ் செவிடு கால்முடமாய்ப்
   பிள்ளை எனவே ஈன்றவர்க்குப்
      பிரிய விடவும் மனமாமோ

நாயேன் செய்யும் வினைமுழுதும்
      நலமாய்ப் பஞ்சுப் பொறிஎனவே
நகர்த்திச் சிவத்துள் எனதுளத்தை
      ஞானப் பதியுள் சேர்த்தருள்வாய்

ஆயே அமலை அருட்கடலே
      அகிலா தார முடிவிளக்கே
அணங்கே இணங்கும் அடியவர்கட்(கு)
      அமுத ஞானம் அருளரசே

மாயே செகமோ கனமான
      வடிவே முடிவே மலைமகளே
மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அன்னை போன்றவளே, அருட்கடல் போன்றவளே, மலமற்று இருப்பதால் குற்றமற்றவளாக இருப்பவளே, அழகிய தெய்வ வடிவமாக ஆனவளே, உன்னை வணங்கும் அடியவர்களுக்கு அமுத ஞானத்தினை அருளும் அரசே, மாயையின் வடிவானவளே, இந்த செகத்தினை விட கனமான தன்மை கொண்டவளே, மலையரசன் மகளே, பிள்ளையைப் பெற்ற தாய்க்கு, பேய்த் தன்மை உடையவன் ஆயினும், பேசாத ஊமைத் தன்மை உடையவன் ஆயினும், காட்சி காண இயலா குருடன் ஆயினும், ஒலி கேட்க இயலா தன்மை இல்லாத செவிட்டுத் தன்மை உடையவன் ஆயினும், ஊனத்தை உரைப்பதாகிய கால் முடம் போன்ற தன்மை கொண்டவன் என்றாலும் குறையைப் பற்றி  நின்று அக்குழந்தையை பிரிய மனம் வருமோ(வராது); (அதுபோல்) நாய்த் தன்மை உடைய  யாம் செய்யும் வினைகளை பஞ்சுப் பொதியில் வைத்த தீப்பொறி போல் முழுவதும் அழித்து எம்மை ஞானவடிவாகிய சிவத்துள் சேர்த்து அருள்வாயாக.

விளக்க உரை

  • அன்னையைப் போற்றி தன் வினைகளை அழிக்க வேண்டுதல்
  • ‘பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்’ எனும் அபிராமி அந்தாதி பாடல் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • அணங்கு  – அழகு; வடிவு, தெய்வம்; தெய்வமகள்; தெய்வத்திற்கு ஒப்பான மாதர், வருத்திக் கொல்லும் தெய்வமகள்; தீண்டி வருத்தும் தெய்வப்பெண், வருத்தம்; நோய்; மையல்நோய், அச்சம், வெறியாட்டு, பத்திரகாளி, தேவர்க்காடும் கூத்து, விருப்பம், மயக்க நோய், கொலை, கொல்லிப்பாவை, பெண்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *