அமுதமொழி – பிலவ – சித்திரை – 5 (2021)


பாடல்

குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவ னாணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே

முதல் திருமுறை  – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – சிவனின் பெருமைகளை உரைத்து அவன் மாற்பேறு திருத்தலத்தில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.

பதவுரை

குருந்த மரத்தடியில் இருந்து குருவாக அருளுபவனும், குருகவன் எனும் வைர வகைகளில் ஒன்றாக இருப்பதைப் போன்றவனும், கூர்மை உடையவனாக இருப்பவனும், பண்புகளில் மேன்மை உடையதான பெண், ஆண் எனும் வடிவங்களாக விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமை அம்மையால் விரும்பப்படுபவனும், துன்பம் கொள்ளூம் உயிர்களுக்கு மருந்தாக இருப்பவனும் ஆன சிவபெருமானது தலம் வளமை பொருந்திய மாற்பேறு ஆகும்.

விளக்கஉரை

  • குருந்தவன் – குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவன் எனும் பொருளில் ஏறக்குறைய அனைத்து இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் உடன் இருப்பவன் எனும் பொருள்பற்றி விளக்கினாலும் குருவாக இருந்து அருளுபவன் என்பது பொருந்துவதால் இக்கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • மருந்து – அமுதம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 4 (2021)


பாடல்

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஐயாற்றில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து மனம் உருகி நிற்கின்றேன் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

பகைவருடைய முப்புரங்களை கண்களால் நோக்கி அதனை அழித்தவனே!  ஊழித்தீயிலும், சுடுகாட்டிலும் எழும் தீயில் கூத்து நிகழ்த்துபவனே! எளிதில் பெற இயலா அரிய அமுதமே!  கூர்மையான  மழுப்படையை ஏந்துபவனே! உயரம் குறைவான பல பூதங்களைப் படையாக உடையவனே! அழைக்க உகந்த ஆயிரம் திரு நாமங்களை உடையவனே! சந்திரனை பிறையாக சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமா இருக்கும் ஐயாற்று பெருமானே  என்று பலகாலமாக வாய்விட்டு அழைத்து மனம் உருகி  நிற்கின்றேன்.

விளக்கஉரை

  • ஆரார் – பொருந்தார்; பகைவர்
  • குறள் – குறுகிய வடிவம்
  • ஆயிரம் –  அளவின்மை
  • அரற்றி – வாய்விட்டு அழைத்து
  • நைகின்றேன் – மனம் உருகி நிற்கின்றேன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 3 (2021)


பாடல்

தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சற்குரு அருளால் முடிவாகிய வீடுபேறு மட்டுமின்றி, இடைநிலைப் பயனாகிய இம்மைப் பயன்களும் கிட்டும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

சற்குருவானவர் தன்னுடைய அடியார்களின் வினை நீங்குமாறு செய்யவும், ஒன்பது கோள்களினால் ஏற்படும் தீமைகள் நீங்கவும், யம தூதர்களது கூட்டம் விலகி ஓடவும், பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்து அருளினான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 1 (2021)


பாடல்

கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஈசனின் செயற்கரிய செயல்களை உரைத்து தன்னையும் காக்க வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

கங்கை நதியினை தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்களுக்குத் தலைவனே,  காலன் ஆகிய எமனுக்கு காலனே, காமன் உடலினை நெருப்பாகி அதனை எரித்தவனே,  அலை மிகுந்து தோன்றும் பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதை கண்டத்தில் உடையவனே,  உயிர்களுக்கு முதல்வனாக இருப்பவனே, அற வடிவமாக இருப்பவனே, மாசு படாமல் எக்காலத்திலும் தூயோனாக  இருப்பவனே, செம்மையான கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை ஊர்தியாக உடையவனே, தெளிந்த தேன் போன்றவனே, இறைவனே, தேவர்களிடத்தில் ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்து அருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உன்னை அன்றி உறவாக யாவர் உளர்! என்னை ‘அஞ்சேல்’ என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.

விளக்கஉரை

  • ‘அமரர்கட்குத் தலைவனே’ என அருளாது ‘அமரர்கள் ஏறே’  என , உருவகித்து அருளியது முதன்மையின் சிறப்பு பற்றியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 2 (2021)


பாடல்

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

நல்வழி – ஔவையார்

கருத்துமனிதர்கள் வினைபற்றி இருக்கும் போது அது குறித்து துயரப்பட்டு இறத்தலே தொழிலாக இருப்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

வருத்தப்பட்டு எத்தனை முயன்று அழைத்தாலும் நமக்குச் சேராதவைகள் நம்மிடத்தில் வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்தி நிற்பவைகள் நம்மை விட்டுப் போகவேண்டும் என்றால் அது எக்காலத்திலும் போவதும் இல்லை. இவ்வாறு வினைகள் பற்றி மனிதர்களின் வாழ்வு இருக்கும் போது ஒன்றை அடையவேண்டும் என்னும் ஏக்கம் கொண்டு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி வருந்தி நெடுந்தூரம் திட்டமிட்டுக் கொண்டிருந்து மரணிப்பதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மாசி – 19 (2021)


பாடல்

ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் – ஆங்காரம்
அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – ஓங்காரத்தினை நல்ல திருவாசியாக அமையப்பெற்று திருவம்பலத்தான் திருநடனம் காண்பவர்கள் சனனம், மரணம் அற்றவர்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

பிரணவம் ஆகிய ஓங்காரத்தினை நல்ல திருவாசியாக அமையப்பெற்று, அதில் பொருந்தி, அந்த பிரணவத்தை விட்டு என்றும் நீங்காமல் அதில் பொருந்தி இருக்கும் பஞ்சாக்கரத்தினை நிறைந்த உள்ளொளியாக அமையப் பெற்று, யான் எனது என்னும் மும்மலங்களின் ஒன்றான அகங்காரம் அற்றவர்கள் அறிவார்கள்; இவ்வாறான அழகிய திருவம்பலத்தான் செய்யும் திருநடனத்தினை தரிசித்தவர்களே சனன மரண மற்றவர்கள் ஆவார்கள்.

விளக்கஉரை

  • நடராஜர் திருமேனி வடிவங்களில் காணப்படும் திருவாசியே ஓங்காரமாக உணரப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மாசி – 18 (2021)


பாடல்

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
   கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
   படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
   அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
   இடைம ருதுறை எந்தைபி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – மெய்யறிவு இல்லாமல் உலகில் உழலும் தனக்கு மனம் இரங்கி உய்யும் வகையினை அருள வேண்டும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவிடைமருதூரில் எழுந்து அருளுகின்ற எம் குலதேவனேகழுதையானது குங்குமத்தினை பொதி போல் சுமந்து வருந்தினால் சிறப்பு எதுவும் இல்லை எனக் கருதி, அனைவரும் நகைப்பர்; அதுபோல  அடியேன் உனக்கான தொண்டினை மேற்கொண்டு, அதன் உண்மையானப் பயனைப் பெறாமல் மனம் தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகும் சுழியிடை அகப்பட்டவன் போல  இந்த உலக வாழ்க்கையில் வருத்தம் கொண்டவன் ஆயினேன்; (அவ்வாறே மற்றவர்கள் எள்ளி நகைப்பர் என்பது மறை பொருள்) ‘மனமே, நீ நம் இறைவனுக்கு உண்மையானத் தொண்டினை செய்யாது (புறப்பொருள்கள் குறித்து) கவலை கொண்டிருந்து என்ன பெறப் போகின்றாய்என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும்,  ‘அழகிய கண்களை உடைய சிவனேஎங்களைக் காப்பவனேஎன்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லாதவனாகிய எனக்கு, நீ  மனம் இரங்கி, உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்.

விளக்கஉரை

  • நகைப்பர் -> கைப்பர்
  • அங்கணன் – கண்ணழகு உடையவன், கருணையான நோக்குடையவன், கடவுள்; சிவன்; திருமால்; அருகன்
  • இழுதை – பேய், அறிவின்மை, அறிவிலி, பொய்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – தை – 15 (2021)


பாடல்

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்
   கேடி லாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ தெல்லாம்நான்
   பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத் தழுந்தாமே
   காத்தாட் கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லா தொழிந்தக்கால்
   நன்றோ எங்கள் நாயகமே

திருவாசகம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து – இறைவன் துன்பத்தைப் போக்க வல்லவன் என்பதுவும், இறைவன் குருவாய் வந்து ஆட்கொண்ட போது உடன் செல்லாது இருந்தமையால்,  இங்கு வினைகளைச் செய்து வேதனைப் படுகிறேன் என்பதையும் கூறும் பாடல்.

பதவுரை

கொடிய நரகத்தில் வீழாது காத்தருள குருமணி எனும் குருவடிவாக இருப்பவனே !  வினை பற்றி நின்று செயல்படுவதால் கெடும் இயல்புடைய யான் கெடும் வழியில் சென்று கெடுகின்றேன்;  இதனால் குற்றம் இல்லாதவனாகிய நீ பழியினை அடைந்தாய்; பட்டு அனுபவிற்பதற்கு உரிய துன்பங்களை எல்லாம் நான் அனுபவிப்பதால் நீ காட்டும் பயன் என்னை?  நீ நடுவு நிலைமையில் நில்லாது ஒழிந்தால் அது உனக்கு அழகாகுமோ எம் தலைவனே?

விளக்கஉரை

  • கேடு இலதாய் – கேடில்லாதவனே
  • கெடுவேன் – கெடும் இயல்புடைய யான்
  • கெடுமா கெடுகின்றேன் – கெடும் வழியில் சென்று கெடுகின்றேன்;
  • குருமணியே – மேலான குரவனே
  • பழி கொண்டாய் – ஆட்கொண்ட பெருமான் முத்திப்பேறு அளிக்காமை பற்றியது
  • நடுவாய் நில்லாது – தம்மைப் பின் நிறுத்தி ஏனைய அடியார்களை உடன் அழைத்துச் சென்றமையை நினைவு கூர்ந்து அவ்வாறே தம்மையும் அழைத்துக் கொண்டருள வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்து அருளியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – தை – 14 (2021)


பாடல்

குறைவிலோம் கொடு மானுட வாழ்க்கையால்
கறைநிலாவிய கண்டன் எண்தோளினன்
மறைவலான் மயிலாடுதுறை யுறை
இறைவன் நீள்கழல் ஏத்தியிருக்கிலே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – மயிலாடுதுறை தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர்தம் திருவடிகளைக் கொண்டவர்களுக்கு மானிட வாழ்வில் துயரம் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

உயிர்கள் பிறவி நீக்கம் பெறுவதன் பொருட்டு, கரை படிந்தது ஒத்த கண்டத்தை கொண்டதால் திருநீலகண்டன் என்னும் பெயர் பெற்றவனும், எட்டுத் தோள்களினை உடையவனும், வேதத்தின் வடிவமாகவும், அதன் பொருளாக இருக்க வல்லவனுமகிய மயிலாடுதுறை தலத்தில் உறையும் இறைவனின் நீண்ட கழல்களை ஏந்தி இருத்தலால் கொடுமை உடையதான மானுட வாழ்வினில் வருவதான குறைவு இல்லாதவர்களாக ஆவோம்.

விளக்கஉரை

  • கொடு – தீயது. மீண்டும் பிறவிக்து ஏதுவான வினை .
  • நீள் கழல் – அழிவில்லாத திருவடிகள்
  • எண்தோளினன் – எட்டுத் திக்குகளையும் ஆடையாக அணிந்தவன் என்றும், எண் குணங்களை முன்வைத்து எண் தோளினன் என்றும் கூறலாம்.
  • திருவடிகளை ஏத்தியிருக்கும் பிறவி வாய்க்குமானால் அந்த மானுட வாழ்க்கையில் வினைகள் என்பது இல்லை.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 13-Jan-2021


பாடல்

அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே

அருளிய சித்தர் : வால்மீகர்

பதவுரை

மூச்சை உள்ளிழுத்தல் ஆகிய பூரகம் என்பதே சரியை மார்க்கமாகும்; மூச்சை அடக்கி செய்தல் ஆகிய கும்பகம்  என்பதே கிரியை மார்க்கமாகும்; மூச்சினை இடம் வலம் எனப்பிரித்து மேலேற்றும் ரேசகமே யோக மார்க்கமாகும்; அவ்வாறு காற்றினை உள்ளும் புறமும் செலுத்தாமல் நிறுத்தி வைத்தலே ஞான மார்க்கமாகும்; மகத்தான சிவசக்தி அடங்கும் வீடு ஆகிய  இந்த உடலில் மரணிக்கச் செய்யாமல் இருக்க பிராண வாயு உடலில் புகுந்து செல்லும். சிவசிவா  என்று அவனைப் பற்றி உரைக்கலாம்; இதனை மனத்துள் உள்வாங்கி தெளிவடைந்து சேர்ந்தவன் சித்தன் ஆவான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 22 (2021)


பாடல்

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவபெருமான் எலும்பு முதலியவற்றை அணிந்த கோலத்தினன் என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

பேரொளி ததும்பும் மணிமுடி தாங்கியவன் சிவபெருமான், வானத்தில் உள்ளவர்களுக்கு முதல்வனாகவும், ஆதிமூர்த்தியாகி  முதல்வனாகவும், தேவர்களுக்கும், படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாக்களின் ஆயுளுக்கும்  பிறகு அவர்களின் எலும்புகளையும்,  மண்டையோட்டுத் தலைகளை கோர்த்து அதை மாலையாக அணிந்து இருப்பவன். அவ்வாறு அந்த எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்தாது ஒழிந்தால் அவை இற்று மண்ணொடு மண்ணாய்ப் போய் அழியும். 

விளக்கஉரை

  • சிவபெருமான், இறந்த தேவரது எலும்புகள் பலவற்றையும், பிரமரது தலைகளையும் மாலையாகக் கோத்து அணிந்தும், கங்காளத்தினை (எலும்புக் கூட்டினைத்) தோள்மேல் சுமந்தும் நிற்கின்றான். சிவன் அவ்வாறு ஏந்துவதால் தான் ஒருவனே அழிவில்லாத முழுமுதல் என்பதையும்,  ஏனை மண்ணவர் விண்ணவர் அனைவரும் பிறந்து இறக்கும் உயிரினங்களே என்பதையும் அதுவே காட்டும். அழியும்படியாக இருக்கும் மாயா காரியப் பொருள்களும் சிவபெருமான் கையேந்தல் பற்றியதால் அழிவினை அடையாது என்பதும் பெறப்படும்.
  • வலம் – வெற்றிப்பாடு.
  • சாம்பலை அணிதல், காரணப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலை உணர்த்தும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 21 (2021)


பாடல்

அன்னப் பார்ப்பால் அழகாம் நிலயூடே
அம்பலம் செய்து நின்றாடும் அழகர்
துன்னப் பார்த்து என்னுயிர்த்தோழியும் நானும்
சூதாடுகின்ற அச்சூழலிலே வந்தே
உன்னைப் பார்த்து என்னைப் பாராதே
ஊரைப் பார்த்தோடி உழல்கின்ற பெண்ணே
என்னைப் பார் எங்கின்றார் என்னடி அம்மா
என் கைப்பிடிக்கின்றார் என்னடி அம்மா

திருஅருட்பா – வள்ளலார்

கருத்துபுறப்பொருள்களில் உள்ளத்தைச் செலுத்தாமல் உன் உள்ளத்துள்ளே உயிர்க்கு உயிராய்த் திகழும் என்னைக் கண்டு உய்தி பெறுவாயாக என ஈசன் அறிவுறுத்திய திறத்தைக் கூறும் பாடல்.

பதவுரை

கண்களில் ஆடும் ஜீவ ஒளியைக் கொண்டு, உலகமுக நோக்கம் கொண்ட பார்வை இல்லாமல்  அகமுகமாக அம்பலத்தில் நின்றாடும் அழகன் ஆகிய கூத்தன் நடனத்தை ஆன்மா மாயா மலவிடயங்களில் சிக்கி இருந்து நானும் எனது தோழியும் விளையாடும் போது தன்னுடைய தூய அருளினால் உலகினைப் பார்க்காமல் என்னைப் பார்ப்பாயாக என்று கூறி என்னை அழைத்துச் செல்லுதல் பற்றி என்னுடைய கரத்தினையும் பிடிப்பார். அம்மா(வியத்தல் குறிப்பு)

விளக்கஉரை

  • அவ்வாறு அகமுகமாக காணும் போது  காயம் கல்பம் ஆகி, ஆயுள் பெருக்கம் உண்டாகும். இதனால காயசித்தி அடையலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 20 (2021)


பாடல்

உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவனது தனிச் சிறப்பான இயல்புகளையே விரித்துரைத்து அவ்வாறு சிறப்புடைய அவன் மோன சமாதியில் எளியனாய் நிற்றலை உணர்த்தும் பாடல்.

பதவுரை

தன் இயல்பிலேயே உருவம் இல்லாதவனாகவும், தன் அடியவர்கள்பால் உருவம் கொளும் இடத்து அந்த உருவில் புலால் கொள்ளாதவனாகவும், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீக்கம் பெற்றதால் பாசத்தின் காரணமாக ஏற்படும் ஊனம் ஒன்றும் இல்லாதவனாகவும், அருள் உடைய தேவியை தன்னுடைய இல்லாளாக உடையவனும், ஏற்பதும், பெறுவதும் இல்லாமையினால் உலகில் வரும் நன்மை தீமை ஆகியவற்றிக்கு ஆட்படாதவனாகவும், தேவர்களுக்கு தேவனாகவும், ஒப்பில்லாதவனும், அனாதியே ஆகி அத்துவிதமாக கலந்து நிற்பவனாகிய சிவபிரான் வந்து என்னுடைய மனம் எனும் அறிவில் புகுந்தான்.

விளக்கஉரை

  • பொருவிலி – ஒப்பிலி, சிவபிரான்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 3-Jan-2021


பாடல்

குருவாகித் தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு
மாத்தித் தனது வசம் ஆக்கியே
சாத்தரிய மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி
யானிடப முந்தும் அருள் ஆனந்தன்

அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்

பதவுரை

மாபெரும் தவயோகியாகவும், இடபத்தில் வருபவரும், அருளினை அருளக்கூடிய பேரானனந்த வடிவமாக இருப்பவனும் தன்னுடைய உருவத்தினை நீக்கி, மானிட வடிவத்தில் குருவடிவம் கொண்டு தோத்திரப் பாடல்களைப் பாடி தன்னைத் துதிப்பவராகிய பழைய அடியார்களை சூழ்ந்து வரும் வினைகளை நீக்கி தன் வசன் ஆக்குபவன்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத்திருத்தலங்கள் 274 – திருப்பூவணம்


தலவரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருப்பூவணம்

  • மூலவர் புஷ்பவனேஸ்வரர் – திரிசூலமும், சடைமுடியும் கொண்ட சுயம்புலிங்கத் திருமேனி
  • பசுவை வதைத்த பாவம் , பித்ரு சாபம் ஆகியவற்றை நீக்கவல்லத் தலம்
  • வடக்கு நோக்கி உத்தரவாகினியாக பாயும் சிறப்புடைய வைகைக்கரையில் அமைந்துள்ள தலம்
  • கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், அனுக்ஞை விநாயகர், மகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், பாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கும் தலம்
  • திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக காட்சி அளித்ததால் ஆற்றைக் கடந்து மிதித்துச் செல்லாமல் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடியத் தலம்
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவனாரை வழிபட ஏதுவாக நந்தி விலகி வழிவிட்டு சாய்ந்தகோலத்தில் இருக்கும் தலம்
  • பாண்டியநாட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் மூவராலும் பாடப் பெற்ற தலம்
  • கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம்
  • இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் – மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபம், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபம்
  • குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டதால் நெல்முடிக்கரை
  • பொன்னையாள் எனும் பெண் பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தும், போதிய நிதி இல்லாததால் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்த இடம்(36 வது திருவிளையாடல்)
  • சுச்சோதி எனும் மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்து, ஆற்றில் தட்சணை பொருட்களான பிண்டங்களை கரைக்க முற்பட்டபோது, முன்னோர்களே நேரடியாக வந்து கையில் வாங்கி கொண்டதால் காசியை விட வீசம்(முன்காலத்து அளவை) அதிகம் புண்ணியம் தரும் புஷ்பவன காசி எனும் பெருமைப் பெற்றத் தலம்
  • சிவலிங்கத்தைக் கதிரவன் (சூரியன்) வழிபட்டு, நவக்கிரகங்களுக்கும் தலைவனாக இருக்கும் வரம் பெற்றத் தலம்
  • பிரம்ம தேவன் அறிந்து செய்த பாவத்தை நீக்கிய திருத்தலம்
  • மகாவிஷ்ணு சலந்திரனைக் கொல்ல சக்கராயுதம் பெற்ற திருத்தலம்.
  • காளிதேவி, சிவலிங்கம் வைத்து பூசித்த திருத்தலம்
  • தருமஞ்ஞன் என்ற அந்தணன் காசியில் இருந்து கொண்டு வந்த அஸ்திக் கலசத்தில் இருந்த எலும்புகள் பூவாய் மாறிய திருத்தலம்
  • செங்கமலன் என்பவனின் பாவங்கள் அனைத்தையும் நீக்கிய திருத்தலம்
  • திருமகளின் சாபம் தீர்ந்த இடம்
  • பார்வதி தேவி இறைவன் திருவருள் வேண்டித் தவம் செய்த திருத்தலம்
  • சலந்திரன் என்ற தவளைக்குச் சக்கரவர்த்தியாய் இருக்கும் படியான வரம் அருளப்பட்ட திருத்தலம்
  • நள மகாராஜாவிற்கு கலிகாலத்தின் கொடுமையை அகற்றி அவனுக்கு மனச்சாந்தி அளித்த திருத்தலம்
  • மாந்தியந்தின முனிவருக்கும் தியானகாட்ட முனிவருக்கும் சிவபெருமான் சிதம்பர நல் உபதேசம் வழங்கிய இடம்
  • தாழம்பூ தான் பொய் சொல்லி உரைத்த பாவம் நீங்க வேண்டி, சிவபெருமானை வணங்கி வழிபட்ட திருத்தலம்
  • உற்பலாங்கி என்ற பெண் நல்ல கணவனை அடையப்பெற்று தீர்க்க சுமங்கலியாய் வாழும் வரம் பெற்றத் தலம்
  • திருப்பூவணத் திருத்தலத்தின் பெருமைகள் விரிவாகப் பாடும் நூல்கள் – கடம்பவனபுராணம். திருவிளையாடற் புராணம்
  • கந்தசாமிப்புலவர் எழுதியது – திருப்பூவணநாதர் உலா, திருப்பூவணநாதர் மூர்த்தி வகுப்பு, தலவகுப்பு,திருப்பூவணப் புராணம் என்ற நூல்கள்

தலம்

திருப்பூவணம்

பிற பெயர்கள்

புஷ்பவனகாசி , பிதுர்மோக்ஷபுரம் , பாஸ்கரபுரம் , லட்சுமிபுரம் , பிரம்மபுரம் , ரசவாதபுரம், நெல்முடிக்கரை

இறைவன்

புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்

இறைவி

சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி

தல விருட்சம்

பலாமரம் 

தீர்த்தம்

மணிகர்ணிகை , வைகை நதி , வசிஷ்ட தீர்த்தம் , இந்திர தீர்த்தம் 

விழாக்கள்

வைகாசி விசாகத் திருவிழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம்,  ஆடி மாத /  நவராத்திரி கோலாட்ட உற்சவங்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி காலங்களில் சிறப்பு வழிபாடுகள், புரட்டாசி நவராத்திரி உற்சவம், ஐப்பசி கோலாட்ட உற்சவம், கார்த்திகை மகாதீப உற்சவம், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம், மாசி மகா சிவராத்திரி உற்சவம், பங்குனி நடைபெறும் 1௦ நாட்கள் உற்சவம்

மாவட்டம்

சிவகங்கை 

முகவரி  / திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்
திருப்பூவணம் அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம்
PIN – 623611

காலை6.00 மணிமுதல்11.00மணிவரை,
மாலை4.00 மணிமுதல்இரவு 8.00 மணிவரை
94435-01761, 0452-265082, 0452-265084

வழிபட்டவர்கள்

சூரியன், நான்முகன், நாரதர், திருமால், திருமகள், நளமகராஜன், மூவேந்தர்கள்

பாடியவர்கள்

திருநாவுக்கரசர் – 1 பதிகம், திருஞானசம்பந்தர் – 2 பதிகங்கள், சுந்தரர் – 1 பதிகம், கரூர்தேவர்(8 பாடல்கள்), அருணகிரிநாதர் (3 பாடல்கள்)

நிர்வாகம்

சிவகங்கை தேவஸ்தானம்

இருப்பிடம்

மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி தொலைவு

இதரகுறிப்புகள்

தேவாரத்தலங்களில் 202 வதுதலம்
பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 11 வது தலம்

பாடியவர்      திருநாவுக்கரசர்
திருமுறை     6
பதிக எண்      18
திருமுறைஎண் 1

பாடல்

வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே

பொருள்

சோலைகளுடன் இருக்கும் திருப்பூவணம் எனும் திருத்தலத்தில்  விரும்பி எழுந்தருளி இருக்கும் புனிதராகிய சிவபெருமான், அடியார்களுடைய மனக்கண்ணின் முன்னர் கூர்மையான மூவிலைச் சூலமும், நீண்டு வளர்ந்ததாகிய  சடைமீது அணிந்த பிறையும், நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய மாலையும், காதுகளில் கலந்து தோன்றும் வெண்மையான தோடும், இடிபோல பிளிர்தலை செய்து வந்த யானையின் தோலினை உரித்து போர்வையாக போர்த்தியும், அழகு விளங்கும் திருமுடியும், திருநீறணிந்த  திருமேனியும் கொன்டவராக காட்சியில் விளங்குகிறார்.

பாடியவர்      சுந்தரர்
திருமுறை     7
பதிக எண்      11
திருமுறைஎண் 8

பாடல்

மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ!

பொருள்

தீய எண்ணங் காரணமாக, தனது இடமாகிய கயிலையை பெயர்த்து எடுக்க முற்பட்ட போது நகை செய்து,  அவன் நெரியுமாறு, விரலால் சிறிதே ஊன்றியவனும், தன்னையே உருகி நினைப்பவரது ஒப்பற்ற நெஞ்சிலே உட்புகுந்து, எக்காலத்திலும் நீங்காது உறைபவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

புகைப்படங்கள் : இணையம்
 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 12 (2020)


பாடல்

தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத்
     தாயைமென் குதலைவாய்ச் சேயைத்
  தனத்தையௌ வநத்தை இன்பமோ கனத்தைத்
    தையல்நல் லார்பெருந் தனத்தை
அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி
     ஆழ்கடற் படுதுரும்(பு) ஆகி
   அலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி
      ஆட்கொள நினைத்திலாய்! அன்றோ?
சிந்தைநைந் துருக இன்னிசை படித்துச்
      சிலம்(பு)ஒலி ஆரவே நடித்துச்
   செழும்புனல் சடைமேல் கரந்தையை முடித்துத்
      திருவெணீ(று) உடல்எலாம் வடித்துக்
கந்தைக்கோ வணம்தோல் பொக்கணம் தாங்கிக்
      கபாலம்ஒன்(று) ஏந்திநின் றவனே!
   கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
      காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்துசம்சார துக்கம் அறுபடச் செய்யும்  பாடல்.

பதவுரை

சிந்தை நிலைகெடுமாறு உருகி இன்னிசை பாடி, சிலம்புகள் ஒலிக்குமாறு கூத்துக்கள் நிகழ்த்தி, செழுமையான கங்கையினை சடையின்மேல் மறைத்து வைத்து வெண்ணீற்றினை திருமேனி முழுவதும்  பூசி, கந்தை ஆடையினை கோவணமாக அணிந்து, தோலினால் ஆன சிறுபையினையும், கபாலத்தினையும் யாசகத்திற்காக ஏந்தி திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடைய உயர்ந்தவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! பிறப்பிற்கு காரணமான தந்தையையும், நிரந்தரம் என்று மாயைக்கு உட்பட்டு கருதக்கூடிய மனையையும், இடுப்பில் சுமந்தவளாகிய தாயையும், மழலை மொழி பேசும் குழந்தையும், வினைபற்றி வரும் செல்வத்தையும், இளமையையும், அழகிய வடிவம் கொண்ட பெண்ணையும் அந்தியிலும், பகலிலும் விருப்பமுடன் உடல் வருந்துமாறு சோம்பல் வரும் அளவில் சிந்தையில் கொண்டு ஆழ்கடலில் அலையும் துரும்பு போலாகி அலைக்கழிக்கபடுபவன் ஆகிய என்னை மெய்யறிவு விளங்குமாறு திருத்தி ஆட்கொள்ள நினைக்கவில்லையோ?

விளக்கஉரை

  • நைதல் – இரங்குதல்; நிலைகெடுதல்; கெடுதல்; தளர்தல்; நசுங்குதல்; சுருங்குதல்; மாத்திரையிற்குறைதல்; வாடுதல்; மனம்வருந்தல்; தன்வயப்படாமை
  • பொக்கணம் – சோழியப்பை; கஞ்சுளி; பரதேசிகள் பிச்சை ஏற்கும் பை
  • கரத்தல் – மறைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 9 (2020)


பாடல்

தாகமறிந் தின்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன்
தேகம் விழுந்திடின்என் செய்வேன் பராபரமே
அப்பாஎன் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன்போற்றிஎன்று
செப்புவதல் லால்வேறென் செய்வேன் பராபரமே

தாயுமானவர்

கருத்துபோற்றுதல் தாண்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

பராபரமே! வினைகளை அறுத்தல் என்பதை முக்தியினை முன்வைத்து பேரின்பத்தினை தருவதாகிய அருள்தல் எனும் நோன்பினை தராவிட்டால் கெடுவேன்; ஆயினும் என்னுடைய தேகம் விழுந்து விடும் எனில் என்ன செய்வேன்; எனது தந்தையைப் போன்றவனே என்னுடைய தளர்ச்சியினை கண்டும் இன்னும் ஆற்றுப்படுத்தவில்லை ஆயினும் போற்றுதலை வாய்விட்டு உரைத்தல் அன்றி வேறு என்  செய்வேன்.

விளக்கஉரை

  • எய்ப்பு – இளைப்பு தளர்ச்சி , ஒடுக்கநிலை, வறுமைக்காலம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 8 (2020)


பாடல்

ஊனாய் உயிராய் உணர்வாய் உரையிறந்த
தேனாய் உளமறைந்த சிற்பரத்தை – வானாய்
ஒளியாய் உருவாய் ஒலியாய் உணர்வார்
தெளியாய் தமையென்னத் தேர்

சன்மார்க்க சித்தியார் – பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர்

கருத்து – இறைவனின் பல்வேறு குணங்களயும், அதனை உணரும் தன்மை உடையவர்களையும் கூறும் பாடல்.

பதவுரை

உருவ வடிவம் தாங்கும் உடலாகவும், அதில் உறையும் உயிராகவும், அதன் உணர்வாகவும், மவுன நிலைக் கடந்த மெய்யடியார்களிடத்தில் தேன் போன்றவனாகவும், அதனுள் உள் மறைந்திருக்கும் சிற்பரமாக இருப்பவனை பரந்து விரிந்த வானமாகவும், அதை வெளிப்படுத்தும் ஒளியாகவும், காட்சியில் தென்படும் உருவமாகவும், காட்சியில் அன்றி தன்னை வெளிப்படுத்தும் ஒலியாகவும் உணராதவர்கள் எவ்வாறு தெளிவு உடையவர்கள் ஆவார்கள்.

விளக்கஉரை

  • உரையிறந்த – மவுனநிலை எய்திய மெய்யடியார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 7 (2020)


பாடல்

தூநிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல்
தான்அதுவாய் நிற்குந் தரம்

திருநெறி 8 – திருவருட்பயன் – உமாபதி சிவாச்சாரியார்

கருத்துஉயிர் பாசத்தோடு இருந்து வந்துப் பின் விலகி அசுத்தம் நீங்கப் பெற்றப்பின் தெளிவு பெறுதல் குறித்து விளக்கும்  பாடல்.

பதவுரை

சூரியன் வந்த காலத்தில் அதன் கடுமையால் துயர் உற்றவனுக்கு தூயதும், குளிர்ந்ததும் ஆன நிழல் எதிர்ப்பட்டால் அதில் சென்று தங்கி வெம்மையைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று எவரும் சொல்வதில்லை; இந்த முறைமையைப் போல இருவினை ஒப்புக்குப்பின் ஆன்மாவிடத்தில் திருவருள் வந்து சேர்ந்தப்பின் உலகினை நோக்காது உயர்ந்ததான் திருவருளில் அடங்கி ஒற்றுமை கொண்டு நிற்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 6 (2020)


பாடல்

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துஈசனை உணர்ந்தவர்கள் துன்ப வெள்ளத்தில் இருந்து வெளியேறுதலையும், உணராதவர்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள் என்பதையும் விளக்கும் பாடல்.

பதவுரை

தொந்த வினைகளின் தொடர்ச்சியாக சென்றுகொண்டிருக்கும் மக்கள் யாவரும் காலம் எனும் ஆற்று வெள்ளத்தில் போய்க்கொண்டிருப்பவர்களே ஆவார். இருப்பினும் அவர்களில் ஒரு சிலர் மட்டும் கடலில் சென்று விழுவதற்கு முன்னே கரைசேர்தல் பொருட்டு ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ள ஓர் ஆலமரத்தையும், அதன் கீழே திசைகளையே ஆடையாகக் கொண்டவன் எனும் விபாயக நிலையை உணர்த்தி அவரைக் கண்டு வாழ்த்தி பலன்களைப் பெறுகின்றார்கள். மற்றவர்கள் அவ்வாறு இல்லாமலும், கரை சேரமலும். ஐந்து வகையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வெள்ளத் திலே மிதந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

விளக்கஉரை

  • அஞ்சு துயரம் – வெளிப்படைப் பொருளில், `பல துயரம்`;  உள்ளுறைப் பொருளில் ‘பஞ்சேந்திரியங்களின் துயரம்’
  • நக்கர் –  சிவபிரான்
  • ஆல மரம் – வேதம். விழுதுகள்- அதன் வழி நூல் சார்பு நூல்கள்.
  • மிக்கவர் – எஞ்சினோர்

Loading

சமூக ஊடகங்கள்