அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 10 (2018)

பாடல்

அவசியமுன் வேண்டிப் …… பலகாலும்
அறிவினுணர்ந் தாண்டுக் …… கொருநாளில்
தவசெபமுந் தீண்டிக் …… கனிவாகிச்
சரணமதும் பூண்டற் …… கருள்வாயே
சவதமொடுந் தாண்டித் …… தகரூர்வாய்
சடுசமயங் காண்டற் …… கரியானே
சிவகுமரன் பீண்டிற் …… பெயரானே
திருமுருகன் பூண்டிப் …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

சபதம் செய்து இந்த ஆட்டை* அடக்குவேன் என்று உரைத்து, ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்தியவனே! காணாபத்தியம், கௌமாரம், சௌரம், சைவம், வைணவம், சாக்தம்  என வழங்கப்பெறும்  ஆறு வகை சமயத்தவராலும் காணுதற்கு அரியவனே! சிவனின் புத்திரனாகிய சிவகுமாரனே! உன்னிடத்தில் அன்பு கொண்டு உன்னை நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும் பிரியாதவனே! திருமுருகன்பூண்டி என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (வினைகளை களைவதன் பொருட்டு) உன்னைத் தொழுவது அவசியமென அறிந்து, பலமுறையும் பிரார்த்தித்து, எனது சுய அறிவினால் உன்னை உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளாவது தவ ஒழுக்கத்தையும், ஜெபம்  மேற்கொண்டு, உள்ளம் கனிந்து, உனது திருவடிகளை மனத்தே தரிப்பதற்கு நீ அருள்வாயாக.

விளக்க உரை

  • * நாரதர் ஒரு முறை யாகம் செய்த போது தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகுவை அனுப்பி அவர் மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு – கந்த புராணம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 9 (2018)

பாடல்

தந்தை தாயார் சுற்றத்தார்
      சகல வாழ்வும் உனதருளே
   தமியேன் செய்யும் வினைஉனது
      சடலம் உனது உயிர் உனது

சிந்தைக் கிசைந்த அடிமை என்று
      செகத்தில் எவர்க்குந் தெரியாதா
   சிந்தா மணியே எனக்குவருஞ்
      செயலே உனது செயல்அலவோ

சொந்த அடிமை கிடந்தலையச்
      சும்மா இருந்தால் உனைவிடுமோ
  சோதி வதன மணிவிளக்கே
      துவாத சாந்தப் பெருவெளியே

மைந்தன் எனவந் தாண்டருள்வாய்
      வனச வதனி நவசரணி
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயாகிய நீ, தந்தை, தாயார், உறவினர்கள் எனும் சுற்றத்தார் மற்றும் சகல வாழ்வும் உனது அருளால் ஏற்பட்டது; பிராப்தம் ஆகிய என்னுடைய தனித்த நிகழ்கால வினைகளும் உன்னுடைய அருளால் உண்டாக்கப்பட்டது; சடலம் உன்னுடையது; உயிர் உன்னுடையது; நான், உனது சிந்தையில் ஏற்படும் எண்ணங்களை மாறுபாடு இல்லாமல் செய்யும் உனது அடிமை என்று இந்த உலகினில் அனைவர்க்கும் தெரியும்; விரும்பிய அனைத்தும் கொடுக்கவல்லதான தெய்வமணி எனப்படும்  சிந்தா மணியே! வினைக்கு உட்பட்டு எனக்கு வரும் செயல்கள் அனைத்தும் உன்னுடைய சிந்தையின் செயல்கள்; உனக்கு சொந்தமான அடிமை இவ்வுலகில் கிடந்து அலையும் போது நீ சும்மா இருந்தால் அது உன்னை விடுமா? (விடாது); உடலின் உச்சி ஆகியாகிய தலையில் பெரிய இடமானதும், பிரகாசிக்கின்றதும் ஆன மணி விளக்கே! என்னை மைந்தனாக பாவித்து எனை வந்து ஆண்டு அருளவேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 8 (2018)

பாடல்

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே

சிவவாக்கியர்

பதவுரை

அருளைத் தரும் நாதர் மற்றும் அம்மையின் உண்மையான திருவடிகளைக் கொண்டு இயம்புவது என்னவெனில் வினையது கொண்டு உருவம் கொண்ட உடலில் இருக்கும் நாடியில் தசவாயுக்களில் ஒன்றானதும், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் ஆகிய வாயுக்களுடன் இணைந்து அவற்றை இயக்கி தானும் இயங்குவதான தனஞ்செயனை எண்ணத்தினால் குவித்து துரியத்தின் இடமான கபாலத்தில் ஏற்றும் முறையை தெரிந்து கொண்டால், முதுமை உடையவர்களும் இளமைத் தோற்றம் உடையவராக ஆகிவிடுவார்கள்; அவர்களது மேனி சிவப்பு நிறம் கொண்டிடும்.

விளக்க உரை

  • கபாலம் ஏற்றுதல் – குரு மூலமாக அறிக.

சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 7 (2018)

பாடல்

பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் பொருகடற்பவளமொ டழனிறம்புரையக்
குன்றிரண்டன்ன தோளுடையகலங் குலாயவெண்ணூலொடு கொழும்பொடியணிவர்
மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை மெல்லியலாளையோர் பாகமாப்பேணி
அன்றிரண்டுருவ மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவனான ஆட்சீஸ்வரர், தமது முறுக்கேறிய பொன் திரண்டதைப் போன்ற சடையையும்,  பெருங்கடலில் அலைகளில் தோன்றியதும், தீ வண்ணத்தை ஒத்ததுமான பவள கொடியையும் கொண்டு, குன்றுகள் போன்ற தரும் இரண்டு தோள்களில் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினையும், மென்மைத் தன்மையும் வாய்ந்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓர் உருவில் இரண்டு உருவாய்த் தோன்றும் அடிகளாவார்.

விளக்க உரை

  • கொழும் பொடி – வளப்பமான விபூதி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 6 (2018)

பாடல்

வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
   கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்
   டூன்வந் துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந் தமுதின் தெளிவின் ஒளிவந்த
   வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

விண்ணுலகில் தோன்றிய தேவர்களும், திருமால், பிரமன், இந்திரன் முதலானவர்களும், காட்டில் சென்று ஊண் உறக்கமின்றி, தம்மை மறந்து கடும் தவம் செய்தும் காண்பதற்கு அரியவனாகிய சிவபெருமான்  தானே வலிய வந்து நாய் போன்றவனாகிய அடியேனைத் தாய்போலக் கருணை செய்து, உயிரினை உருகச் செய்து, என் ரோமங்கள் விதிர்விதிர்க்குமாறு செய்து, இனிமையான அமுதம் போல், தெளிவான ஒளிவடிவமான அவன் பெருமை பொருந்திய திருவடியைப் புகழ்ந்து அம்மானைப் பாட்டாக  பாடுவோமாக.

விளக்க உரை

  • ‘தேவர்களும் நிலவுலகத்திற்கு வந்து தவம் புரிகின்றனர்` எனும் பொருளில். இந்திரன் சீகாழிப்பதியில் தங்கித் தவம் புரிந்தது – கந்த புராணம் உரைத்தது
  • ‘கானின்று வற்றியும்’ – ஊண் உறக்கமின்றித் தவம் புரிதல்
  • ‘புற்றெழுந்தும்’ – தம்மை மறந்து தவம் புரிதல்
  • உயிர்ப்பு – (அன்பினால்)  உயிர்த்தல்; மூச்செறிதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 5 (2018)

பாடல்

பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி
     எடுத்துரையில் புனைவேன் சில்லோர்
தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி
     ஓடுவனித் தரத்தேன் இங்கே
முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின்
     அருள்இலதேல் முன்னே வைத்த
அடிஎடுக்க முடியாதே அந்தோஇச்
     சிறியேனால் ஆவ தென்னே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

திருநீற்றுப் பொடியை எடுத்து அணியச் சென்று, அந்தக் காரணத்தை மறந்து, பின் வெறும் மடியைத் தட்டிப் பார்த்து, இல்லாமையை உணர்ந்து அதற்காக இறங்கி, அவ்வாறு இல்லாமல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் கடையனானவனும், சிலர் கையில் தடி எடுத்து வரக்கண்டு, அதனால் அச்சம் உண்டாகி , மனம் கலங்கி வேறிடம் நாடி விரைந்தோடுவோனும் ஆகிய முடிவெடுக்க இயலாத யான், இவ்வுலகில் நினது திரு அருள் துணை இல்லையாயின் முடிவெடுப்பதும் தலை நிமிர வல்லவனும் ஆவேனோ? முன் வைத்த காலைத் தான் எடுக்க வல்லவன் ஆவேனோ?? ஐயோ, சிறியவனாகிய என்னால் யாது செய்ய முடியும்?

விளக்க உரை

  • திருவருளின்றி ஒரு செயலும் செய்ய இயலாது என்பதை தெரிவிக்கும் பாடல்
  • பொடி – திருநீற்று வெண் பொடி.
  • மடி – அரையில் உடுத்த ஆடையின் மடித்த கூறு.
  • ‘பொடி எடுக்கப் போய் அதனை மறந்து மடி எடுத்து அரையிற் புனைவேன்’ – கொண்ட சிந்தையில் நிலைத்தன்மையும், மன வலிமையும், வினையும் உடையவன் அல்ல என்பதை உரைத்தல்.
  • ‘உளம் கலங்கி யோடுவேன்’ –  தம் வழியில் செல்லும் சிலர் கையில் தடி ஏந்தி செல்வது கண்டால் தம்மை அடிப்பரென அஞ்சி ஒதுக்கிடம் நாடி ஓடும் கீழ்மைப் பண்புடையவன்
  • சிறியேன் – குணம் அறிவு செயல்களில் சிறுமையுடையவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 4 (2018)

பாடல்

கரந்தை கூவிள மாலை
     கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
     வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
     திகழ்தரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
     வல்வினை நலியஒட் டாரே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

திருத்தமான மாடங்கள் உடையதும்,  உயர்ந்து தோன்றுகின்றதும், பெரும் புகழ் கொண்டதும் ஆன திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனானவர், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆநிரைகளை மீட்டுவருவதை குறிப்பிடுவதாகிய  கரந்தைப் பூவினாலும், முக்கூறுகளைக் கொண்டதும்,  திரிசூலத்தின் குறியீடாகவும் உள்ளது கூவிள இலை என்பதான வில்வ இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிகுந்த பூதகணங்கள் புடைசூழ பரமனாகி நம் இறைவனானவரும், அமுதம் போல்பவரும், தம் அடியாரை வலிய வினைகள் வந்து துன்புறுத்தாமல் காப்பவரும் ஆவர்.

விளக்க உரை

  • மாயைக்கு உட்பட்ட பசுவாகிய உயிர்களை மீட்கும் பதி எனும் சைவ சித்தாந்த கருத்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமுருகன்பூண்டி

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருமுருகன்பூண்டி

  • முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தி
  • சிவன் மற்றும் அம்பாள் இருவரும் மேற்கு நோக்கி திருக்காட்சி. மூலவர் மற்றும் அம்பாள் பீடங்களின் கோமுகமும் வடக்கு நோக்கிய வித்தியாசமான அமைப்பு
  • சூரசம்ஹாரத்தால் உண்டான பாவங்கள் நீங்க முருகப்பெருமான் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டத் தலம்
  • சண்முகநாதர் கையில் வேல் இல்லாமலும், வாகனமான மயிலும் இல்லாமலும் திருக்காட்சி
  • சேரமான் பெருமானின் சிறப்பு விருந்தினராக சென்று பொன்னும் பொருளுடன் திரும்பியபோது கூப்பிடு விநாயகர் கோவிலில் இரவைக் கழித்த சுந்தரரிடமிருந்த பரிசுப் பொருட்களைத் தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பிக் கொள்ளையடிக்கச் செய்ததால், உதவியை நாடிய சுந்தரரருக்கு சிவன் தான் குடிகொண்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி உதவினார் விநாயகர்; சுந்தரரரும் அங்கு சென்று  சிவனைத் திட்டிப் பாட அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கிய தலம்.
  • சிவனார் இருக்குமிடத்தை சுந்தரருக்கு உணர்த்திய ‘கூப்பிடு விநாயகர்’ தனியாக பாறைமேல் திருக்காட்சி (அவிநாசியில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவு)
  • வில்கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள்; பரிசுப்பொருள்களை பறிகொடுத்த நிலை மற்ரும் பறிகொடுத்த பொருள்களை மீண்டும்  பெற்றநிலை என  இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்
  • இங்குள்ள தல விருட்டமான மாதவி மரம் எனும் குருக்கத்தி மரம் துர்வாசர் மேலுலகில் இருந்து எடுத்துவந்தது
  • பிரம்மதாண்டவம் என போற்றப்படும் நடராஜரின் தாண்டவ வடிவம்
  • பிரம்மஹத்தி தோஷத்தை போக்கவல்ல தலம்.
  • தலபுராணத்தின் படி பிரம்மஹத்தி தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகர் சந்நிதியின் அருகே உள்ள சதுரகல்லாக உள்ளது
  • கோயிலுக்கு வெளியே உள்ள பிள்ளையார் கோயிலின் எதிரில் உள்ள பாறையில் உள்ள சிறுகுழியில் 12 வருஷங்களுக்கு ஒருமுறை நீர் பொங்குவது சிறப்பு
  • மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நிதி
  • தலபுராணம் செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடப்பட்டது

 

 

ஓவியம் : Vishnu Ram
தலம் திருமுருகப்பூண்டி
பிற பெயர்கள் மாதவிவனம் , முல்லைவனம் , கந்தமாபுரி
இறைவன் முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி
இறைவி முயங்குபூண் முலையம்மை, ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை , ஆவுடை நாயகி , மங்களாம்பிகை
தல விருட்சம் குருக்கத்தி மரம் , வில்வமரம்
தீர்த்தம் சண்முக தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் மற்றும் ஞான தீர்த்தம்
விழாக்கள் தை மாதத்தில் வேடுபரி உற்சவம், மாசி மாதத்தில் 13 நாட்கள் பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி , திருக்கார்த்திகை , மார்கழி ஆருத்ரா தரிசனம் , ஐப்பசி அன்னாபிஷேகம் , கந்தசஷ்டி , தைப்பூசம் , நவராத்திரி , வைகாசி விசாகம்
மாவட்டம் திருப்பூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை ௦6:௦௦ முதல் 12:3௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦8:௦௦ வரைஅருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில்,
திருமுருகன்பூண்டி – 641652. திருப்பூர் மாவட்டம்.
04296-273507, 94434-59074
வழிபட்டவர்கள் அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் திருப்புகழ்
நிர்வாகம்
இருப்பிடம் அவினாசியில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவு, திருப்பூரில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் சுமார் 8 கிமீ தொலைவு, கோயம்புத்தூரில் இருந்து சுமார் 43 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்         49
திருமுறை எண் 5

பாடல்

தயங்கு தோலை உடுத்துச் சங்கர
   சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
   மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
   முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
   எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

பொருள்

எம்பெருமான் நீரே!  நீர்  விளங்குகின்ற தோலை உடுத்தி,  சாம வேதத்தைப் பாடிக்கொண்டு, அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியவில்லையா? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீர் என்றால், தழுவுகின்ற  அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும்  இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்         49
திருமுறை எண் 6

பாடல்

விட்டி சைப்பன கொக்க ரைகொடு
   கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
   குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
   கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
   எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

பொருள்

எம்பெருமான் நீரே!, நீர் கொட்டிப் பாடுதற்கு உரிய  தாள அறுதிக்கு ஏற்ப விட்டு விட்டு ஒலிக்கின்ற  ‘கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா’ என்னும் வாத்திய கருவிகள் ஆகிய இவற்றை விரும்புவராய் உள்ளீர்; அதுமட்டும் அல்லாமல்  ஊரில் இருப்பவர்கள் இட்ட பிச்சையை ஏற்று உண்பீர்;  பலவகை அரும்புகள் அலர்ந்து மணம் கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 3 (2018)

பாடல்

கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி யிரும்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

இறைவன் ஞான வடிவினன் என்பதை அறிதவர்களுக்கு மட்டுமே நற்பயன் கிடைக்கும்; அவ்வாறு இல்லாமல் க்ஷேத்திராடனம் என்பதன் பொருட்டு காடு மற்றும் நாடு சார்ந்த பகுதிகளில் மாறிமாறி திரிந்தாலும், அங்கங்கள் ஊனம் ஆகும் அளவிற்கு பெருந்தவம் செய்தாலும், ஊனுண்டலை விடுத்து, தத்துவ ஆராய்ச்சி ஆகிய ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டாலும் என்ன பயன் கிடைக்கக் கூடும்?

விளக்க உரை

  • ஈனம் – குற்றம்
  • இரும் – பெரிய

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 2 (2018)

பாடல்

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பாரபரச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவிய ளாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அம்மையானவள், அருளால் தோற்றுவித்துள்ள உலகமும் மற்றும் உண்பொருள்களும் அந்த உண் பொருள்களுடன் இணைந்த அழிவில்லாத பலவுயிர்களும், எண் திசைகளுடன் கூடி மேல் மற்றும் கீழ் இணைந்த பத்துத்திசையிலும், நிறைந்து நின்று இயக்கும் தன்மையால்  பத்து முகம் உடையவளாகவும், சிவசக்தி வடிவமாகவும், சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி  முதலிய நால்வகை வாக்குகளும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களது உயர்வும், தாழ்வுமாகிய எண்ண அலைவுகளும், அவ் எண்ணங்களின் வழி நிகழ்கின்ற செயலாகவும் நிற்பாள்.

விளக்க உரை

  • திரிபுரை வழிபாட்டு முறைகளும், அவற்றின்  பயன்களும் விளக்கப்பட்டுள்ளது
  • வித்தை – திருவடியுணர்வு; மெய்யுணர்வு; பதிஞானம்; பிரம வித்தை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 1 (2018)

பாடல்

கொம்பு அனையாளை குவிமுலை மங்கையை
வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம் பவளத் திருமேனிச் சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

பூங்கொம்பு  கொம்பு போன்ற துவளும் இடையினை உடையாளை, குவிந்த அழகிய தனங்களையுடைய மங்கையை, மணம் வீசுகின்ற மலர்சூடிய கூந்தலை உடையவளை, தேவர்களால் விரும்பிப் பூசிக்கப்படுபவளை, செம்மையான பவழம் போன்ற திருமேனியை உடைய ஆகிய திரிபுரையை பெருந்துணையென்று உறுதியாக நம்பி மிக விரும்பி என் உள்ளத்துள் வைத்தேன்.

விளக்க உரை

  • திரிபுரையின் தியானச் சிறப்பு பற்றிக் கூறப்பட்டப் பாடல்
  • சிறுமி – கௌரி; எட்டு அல்லது பத்து ஆண்டுப் பருவப்பெண்.
  • வானவர் நாடியை – தேவ வாழ்வினை உடையவள் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டுளது. தேவ வாழ்வினை கொண்டவள் ஆயினும் அவள் எப்பொழுதும் சிறுமியாக இருக்கிறாள்.
  •  `மென்கடிக் குங்கும தோயம் என்ன’ எனும் அபிராமி அந்தாதி பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 31 (2018)

பாடல்

போகம் செய் சத்தி , புரிகுழ லாளொடும்
பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும்,
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்தோறும்
பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை ஆனவள், உயிர்களுக்கு இன்பத்தைத் தருபவள் சக்தி; திரண்டு சுருண்ட நீண்ட கூந்தலை உடைய பராசக்தி ஆகி உயிர்களை பக்குவப்படுத்துவாள்; அடியார்கள் தினம்தோறும் தங்கள் உள்ளத்தில் அவளை தியானிக்க, அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படருவதற்கு  ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி ஆனவள்.

விளக்க உரை

  • சிவபெருமானுடைய பஞ்ச சத்திகளுள் ஒன்றானதும்,  ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களை தந்து உண்மையை மறைத்தல் செய்யும் சத்தி ஆகிய திரோதான சத்தியும்,  அருள் சத்தியும் வேறு வேறு அல்ல என்பதைக் கூறும் பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 30 (2018)

பாடல்

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்
புராசத்தி புண்ணிய மாகிய போகமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை ஆனவள், எங்கும் வியாபித்து, மாபெரும் சக்தி ஆனவள்; எல்லா வகையிலும் எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள்; அதோடுமட்டுமல்லாமல் அதில் எல்லாவற்றிலும் பொருந்தி அதன் மெய் உணர்வு வடிவகமாக இருப்பவள்; திரிவுபடும் ஊழி எனப்படும் மிக நீண்ட காலத்தில் உயிர்களிடத்தில் உடனிருந்து நின்று அதன் புண்ணியப் பலன்களை அருள்பவள்.

விளக்க உரை

  • பராசத்தி – எங்கும் வியாபித்துள்ள சத்தி.
  • தராசத்தி – ஆதாரசத்தி, தாங்கும் ஆற்றல்
  • உராசத்தி – பொருந்தும் சத்தி.
  • புராசத்தி – திரிபுரை.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 29 (2018)

பாடல்

தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி
ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்
வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்
கோன்எங்கும் நின்ற குறிபல பாரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

எங்கெல்லாம் சிவம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன்  உடன் இருப்பாள் சக்தி; எங்கெல்லாம் உடல் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன் அந்த உடல் சார்ந்திருக்கும் உயிருக்குக் காவல் ஆவாள்; எங்கெல்லாம் வான் எனும் ஆகாசம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் விளங்கி, அதைத் தாண்டிய பரவெளியிலும் சிவனோடு நிறைந்து நிற்கும் அடையாளங்களை ஆராய்ந்து அறிவாயாக!

விளக்க உரை

  • குறி, வடிவம் – சிவனது வடிவங்கள் யாவும் சத்தி ஆதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல். அஃதாவது சத்தியும் சிவமும் உலகில் எவ்வித பேதமும் இல்லாமல் நின்ற நிலையைக் கூறுதல்.
  • உயிர்களுக்கு உடல்  ஆதாரமாக இருப்பதும், எல்லா பொருள்களுக்கும் வானம் ஆதாரமாக இருப்பதும் வெளிப்படை. (சைவ சித்தாந்த கருத்துப்படி).

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 28 (2018)

பாடல்

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரையை அக அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை ஆனந்த வடிவமாக இருப்பவள் என்றும், (அருவமும், உருவமும் ஆகி) அருவுருவம் கொண்ட வடிவினள் என்றும், உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் அனைத்தும் அவள் விருப்பத்தின் படி நிகழ்கிறது என்றும், அறிவு உருவாகிய பரமனாகிய சிவபெருமானும் அன்னையிடம் எழுந்தருளி இருப்பவர் என்றும் கூறப்பெறும்.

விளக்க உரை

  • அன்னையின் மேலும் சில பெருமைகளைக் கூறும் பாடல்
  • *நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையில் நிற்பவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.
  • மூன்றாமடி மற்றும் நான்காமடிகளில் வரும் ‘அறிவார்’ என்பதை, ‘அறிவு ஆர்’ எனப் பிரித்து. `ஆர்ந்த அறிவு` எனக்கொண்டு, `அறிவாய் ஆர்ந்த பரனும்` எனவும் சில இடங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன் வழி பற்றி  ‘ஆர்ந்த அறிவு கொண்டவனும் அவள் வழி தொழில் நடத்துகிறான் எனவும் விளக்கம் பெறும். ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 27 (2018)

பாடல்

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரையை அறியாதவர்கள் தேவர்கள் ஆகமாட்டார்கள்; அவள் இன்றி செய்யும் மிகப் பெரியதும் சிறப்புடையதுமான தவம் என்பது எதுவும் இல்லை; அவள் இல்லாமல் (சைவத்தினை முன்வைத்து) ஐந்தொழில்களையும் சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய தொழில்கள் எதுவும் இல்லை. அவள் அருள் இல்லாமல் கைகூடும்  திருவடிப் பேறு என்பதும் இல்லை.

விளக்க உரை

  • திரிபுரையின்  பெருமையை கூறும் பாடல்.
  • ஐவர் – பிரம்மா படைத்தலையும், திருமால் காத்தலையும்,உருத்திரன் அழித்தலையும், மகேசுவரன் மறைத்தலையும், சதாசிவன் அருளலையும் ஆற்றுவதாகக் கூறப்படும் கருத்துக்களும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 26 (2018)

பாடல்

சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள்
வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை
அத்தகை யாயும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை தூயதும், அழகியதும், திண்ணியதும் ஆன கொங்கைகளை உடையவள்; பேரின்பத் தோற்றமாகவே விளங்குபவள்; மெய்ப்பொருள்களை உணரும் ஞானமாய் நின்று உயிர்களை ஆட்கொள்கின்ற பேராற்றலை உடையவள்; எல்லாச் சத்திகளினும் பெரியதான மேலான சத்தியாக விளங்குபவள்; அவ்வாறு இருப்பினும் அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்மை உடையவள்; அழகிய நிறைமதி போலும் ஒளியினை உடையவளும் ஆவாள்.

விளக்க உரை

  • சுத்த, அம், பாரத்தனம் – ஞானம் நிறைந்து நிற்றலைக் குறித்தது
  • வத்து – பொருள்; மெய்ப்பொருள். (வத்துவம்,  வாஸ்துவம்)
  • திரிபுரை தியானத்தில் அவளைப் பற்றி அறியக்கூடிய  பெருமைகள் குறித்து கூறப்பட்டப் பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 25 (2018)

பாடல்

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

எப்பொழுதும் அழியாதவளாகிய திரிபுரை, கால எல்லையைக் கடந்த பழமை உடையவள்; மாயை வடிவம் கொண்டு உயிர்களை மயக்குபவள்; அழகிய கூந்தலை உடையவள்; நன்கு விளங்குகின்ற உருத்திராட்ச மாலையை அணிந்திருப்பவள்; நான்கு கால்களை உடைய யானையை ஊர்பவள். வெண்டாமரைமேல் வீற்றிருக்கும் வெள்ளைத் திருமேனியை உடையவள்.

விளக்க உரை

  • திரிபுரையின்  தியான உருவம் பற்றி கூறப்பட்ட மற்றொரு பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 24 (2018)

பாடல்

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

குண்டலம் அணிந்த காதுகளை உடையவள்; கொலை செய்கின்ற வில் போன்ற புருவத்தை உடையவள்; சிவந்த மேனியை உடையவள்; உருத்திராக்க மாலையைப் பூண்டவள்; ஒளிவீசுகின்ற கிரீடத்திலே பிறையை மாலையாக அணிந்து ‘சண்டிகை’ என்னும் பெயர் உடையவள்; இவள் நான்கு திசை கொண்ட உலகங்களைத் தீமையினின்றும் நீக்கிக் காத்தருளுதல் பொருட்டு தாங்கி நின்றாள்.

விளக்க உரை

  • தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பாற்றுகிறாள் எனும் பாடல்
  • திரிபுரையின்  தியான உருவம் பற்றி கூறப்பட்ட மற்றொரு பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 23 (2018)

பாடல்

தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திருவடிகளில் பாதகிண்கிணி ஆகிய சிலம்பும், இடையில் சிவந்த பட்டுடையும், மார்பில் கச்சையும், நான்கு கரங்களிலும் கரும்பு வில், மலர்க்கணை, அங்குசம், பாசம் ஆகியவைகளும், சென்னியில் நவமணிகளின் அழகு விளங்கும் முடியும், காதுகளில் நீல ரத்தினம் மின்னுகின்ற குண்டலம் கொண்ட அடையாளங்களுடன் திரிபுரை இருப்பாள்.

விளக்க உரை

  • நூபுரம் – சிலம்பு, பாதகிண்கிணி
  • ‘இராஜேஸ்வரி கோலம்’ வர்ணிக்கும் பாடல். திரிபுரையின்  தியான உருவம் பற்றி கூறப்பட்டப் பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!