கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால் விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்; மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும் அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே
1. கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். இறைவன் தன் பேரொளிக்கு முன் கதிரவன் ஒளி மங்கும் என்பது ஒரு கருத்து. அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் கதிரவன் ஒளி உட்புக முடியாமல் உள்ளது என்பது மற்றொரு பொருள்.
பாருரு வாய பிறப்பற வேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங்கம லம்மலர்போல் ஆருரு வாயஎன் ஆரமு தேஉன் அடியவர் தொகைநடுவே ஓருரு வாயநின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே.
தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்
கருத்துஉரை
சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய உருவத்தையுடைய எனது அரிய அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும். அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும். அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டு அருள்வாயாக.
அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூஎயிலும் கெடுதலையே புரிந்தான்; கிளரும் சிலை நாணியில் கோல் நடுதலையே புரிந்தான்; நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்- படுதலையே புரிந்தான்-பழமண்ணிப் படிக் கரையே .
தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்
கருத்துஉரை
உலகத் தொகுதியின் வினைகள் அழித்தலை விரும்பினவனும், வானில் இருந்த மூன்று மதில்கள் கெட்டு அழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும், நரி உமிழ்ந்த எச்சிலாகிய வெண்மையான அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், ‘திருப்பழமண்ணிப் படிக்கரை’ என்னும் தலமே.
ஆறு சூடும் அணிமறைக் காடரோ கூறு மாதுமைக் கீந்த குழகரோ ஏற தேறிய எம்பெரு மானிந்த மாறி லாக்கத வம்வலி நீக்குமே.
தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
கங்கை ஆற்றைச் சடையில் சூடி மறைக் காட்டில் உறையும் பெருமானே! உடலின் ஒரு கூறை பெண்ணாகிய உமையம்மைக்கு ஈந்த அழகரே! விடையேறிய எம்பெருமானே! இந்த ஒப்பில்லாத கதவின் வலியினை நீக்கித் திறந்தருள்வீராக.
மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?
சிவன்
உயிர்களைக் கொல்லாமை, பொய்யாமை, வெகுளாமை , பொறுமை, உண்மை கொண்டு இருத்தல், குருவின் இடத்தில் எப்பொழுதும் பணிவுடன் இருத்தல், பெரியோர்களை பூஜித்தல், சுத்தமாக இருத்தல், செய்யத்தகாத தீய செயல்களை விடுதல், எப்பொழுதும் பத்தியமான ஆகாரங்களை உண்ணுதல் ஆகியவை நல்லொழுக்கங்கள் ஆகும். இந்த நல்லொழுக்கங்களால் மனிதர்கள் வெகுகாலம் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். தவம், இந்திரியங்களை வெற்றி கொள்ளுதல், தேக ஆரோக்கியம் தரும் மருந்துகளை உட்கொள்ளுதல், எப்பொழுதும் மகிழ்வுடன் இருத்தல் போன்றவற்றாலும் மனிதர்கள் நீண்ட ஆயுள் பெறுகிறார்கள். மற்றவர்கள் பாவங்களைச் செய்தும், பிறரை ஹிம்சை செய்தும், பொய் சொல்லியும், பெரியோர் இடத்தில் பகைகொண்டும், பிறரை இழிவாக பேசியும், நற்கருமங்களையும், சுத்தத்தினை விட்டவர்களாகவும், நாஸ்திகர்களாகவும், மது மாமிசங்களை கொண்டும் கொடிய செய்கை உடையவர்களாகவும் இருக்கின்றனர். போகக்கூடாத இடங்களுக்குச் சென்றும், ஆச்சாரியர்களை பகைத்தும், கோபம் கொண்டும், கலகம் கொண்டும் இருக்கும் இவர்கள் நரகத்தில் வெகு காலம் இருந்து மானிட ஜென்ம அடையும் போது குறைந்த ஆயுளுடன் பிறக்கின்றனர். இவையே ஆயுள் குறைவின் விஷயமாகும்.
உமை
ஆத்மா, ஆண் தன்மை உடையதா? பெண் தன்மை உடையதா? இதில் எவ்வாறு ஆண் பெண் தன்மைகள் வந்தன? ஆண் உயிரும், பெண் உயிரும் ஒன்றா? வெவ்வேறானவைகளா? இவைகளை எனக்கு விளக்கிக் கூறுங்கள்.
சிவன்
உயிர் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. ஆத்மா விகாரம் அற்றது. உயிர் போன்றே ஆத்மாவும் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. கர்மங்கள் செய்வதால் அந்தந்த கர்மங்களுக்கு ஏற்றவாறு ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் பிறக்கிறார்கள்.
உமை
ஆத்மா தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யாவிடில் தேக கர்மங்களை செய்வது யார்?
சிவன்
ஆத்மா கர்மங்களைச் செய்வதில்லை. அது பிருகிருதியோடு கூடி எப்பொழுதும் கர்மங்களை செய்கிறது. சத்வம், ரஜோ மற்றும் ரஜோ குணங்களால் தேகம் எப்பொழுதும் மூடப்பட்டிருக்கிறது. சத்வகுணம் – பிரகாச ரூபம், ரஜோ குணம் – துக்க ரூபம் , தமோ குணம் – அறிவின்மையான ரூபம். இக்குணங்களால் உலகின் செயல்கள் நடைபெறுகின்றன.
பொறுமை, அடக்கம், நன்மையில் விருப்பம் முதலியவை சத்வ குணத்தால் உண்டாகின்றன.
வேலைத்திறமை, சோம்பல் இல்லாமை, பொருள் ஆசை, விதியினை நம்பாமை, மனைவி மேல் பற்று, செல்வத்தின் மேல் பற்று முதலியவை ரஜோ குணத்தால் உண்டாகின்றன.
பொய், கடுமை, பிடிவாதம், அதிக பகை, நாஸ்திகத்தனம், தூக்கம், சோம்பல் முதலியன தாமஸ குணத்தினால் உண்டாகின்றன.
ஆகையால் நல்லவைகள், கெட்டவைகள் குணங்களால் உண்டாகின்றன. எனவே ஆசை அற்றவன் விகாரங்கள் அற்றவன் என்று அறிந்து கொள். சத்வ குணம் உடையவர்கள் புண்ய லோகங்களிலும், ரஜோ குணம் உடையவர்கள் மனிதர்களாகவும், தமோ குணம் உடையவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்.
ஜென்மம் எடுத்தப்பிறகு பிராணிகளுக்கு எவ்வையிலாவது துன்பம் நேரும். ஆத்மாவானது அந்த சரீரம் அழியும் போது கர்மத்தை அனுசரித்து அதை விட்டுப் போகிறது. தேகத்தில் நோய் ஏற்பட்டாலும் அவை ஆத்மாவை தீண்டுவதே இல்லை. கர்ம பலன் உள்ளவரையில் ஆத்மா இருக்கும். அது முடிந்த உடன் ஆத்மா போய்விடும். ஆதிகாலத்தில் இருந்து இவ்வாறு நடைபெறுகிறது.
உமை
மனிதர்களின் கர்ம பலன்களை அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு துன்பம் செய்பவன் நன்மை அடையும் வகை எது? அது ஒரு ஜென்மத்தில் உண்டாகுமா அல்லது பல ஜென்மாக்களில் உண்டாகுமா?
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும் வேதனை, வெண்குழை தோடு விளங்கிய காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!
தேவாரம் – 2ம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்துஉரை
மூலக்காரணனனாகவும், ஆதிகாரணனனாகவும், முதல்வனனாகவும் இருப்பவன்; குற்றம் அற்று இமையாது இருக்கும் யோகியர்களால் வழிபடப் பெறும் வேதவடிவினன்; வெண்குழையும் தோடும் அணிந்த செவிகளை உடையவன்; மிகுந்த சோலைகள் சூழ்ந்த கோழம்பம் எனும் ஊரில் மேவிய தலைவன். அவனை உம் வினைகள் அறுந்து கெடுமாறு ஏத்துமின்.
விளக்கஉரை
ஏதன் – குற்றமுடையவன் எனும் பொருளில் ‘நாம் செய்யும் குற்றங்கட்குக் காரணமானவன்’ எனும் விளக்கம் பட இடங்களில் தென்படுகிறது. ‘ நமது குற்றங்களுக்கு ஈசன் என்றும் காரணமாகான்’ எனவே இவ்விளக்கம் இதில் இடம் பெறவில்லை. ஆன்றோரும் பொருள் அறிந்தோரும் உரைத்தால் பொருள் அறியும் வாய்ப்பு எமக்குக் கிட்டும்.
ஈசனே, நீ இருக்க எனக்கு வேறு யாரிடம் பயம்? எனக்கு நீ ஊக்கத்துடன் கொடுத்த கூடிய வலிமை எது எனில் என்னுடைய சிரம் தாழ்த்தி சிரசின் மேல் கரம் குவித்து பஞ்சாட்சரத்தை எனது கண்ணில் நீர் பெருக நெஞ்சுருக உன்னை நினைத்து வழிபடுவது ஒன்று தான்.
திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! நான் உன் திருவருளின் பெருமையை அறிந்து கொள்ளாது அதனை வேண்டாவென்று மறுத்தேன்; என் கண்மணியே, நீ அதற்காக அடியேனை வெறுத்து விட்டு விடுவாயோ?(விடமாட்டாய் – மறைபொருள்) மேன்மை நிலையில் உள்ளவர், (வினையின் காரணமாக) சிறு நாய் கொண்டிருக்கும் குற்றத்தை மன்னிப்பார்கள் அல்லரோ? (அதுபோல்) நீ என்னுடைய வினை அனைத்தையும் அழித்து, என்னை ஆண்டு கொண்டு அருள வேண்டும்.
அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், மேல் எழும் பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே.
கருத்துஉரை இதுவரையில் அனாகத சக்ரத்தினை ஆட்படுத்தும் முறையினை சொன்னோம். இப்பொழுது விசுக்தியைப் பற்றிக் கேளு. மேல் குறிப்பிட்ட சக்கரத்திற்கு பன்னிரண்டு அங்குலம் மேலும், பதினாறு இதழ் தாமரை வடிவமும் கொண்டது இச்சக்கரம். பாலகனே, இதற்கான அட்சரம் பஞ்சாட்சரத்தில் ஒன்றான ‘வ’காரம். அதன் நடுவில் சதாசிவனும் சாகினியும் வீற்று இருப்பார்கள்.
விளக்கஉரை
மூலக்கூறு : ஆகாயம்
பீஜமந்திரம் : ஹம்
ஐம்பது எழுத்துக்களில் விசுக்தி 16 எழுத்துக்களால் குறிக்கப்பெறும். (எழுத்துக்கள் அவரவர் குரு உபதேச முறைக்கு தக்கவாறு மாறி இருக்கின்றன. சரியான எழுத்தும் பொருளும் குரு முகமாக அறியவும்).
அறு கோணவடிவம். அதை சுற்றிலும் பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட வடிவமும், அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால் குறிக்கப்பட்டும் உள்ளே அடர் நீல நிறத்தையுடையதும் ஆன சக்கரமாகும்.
இது, பஞ்சாட்சர எழுத்துகளில் ஒன்றான “வ” என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் சக்கரம் ஆகும்.
யோக மரபுகளில் விசுக்தியும் அதற்கு மேல் அனைத்து சக்கரங்களும் ஞான சக்கரங்களாக உணர்த்தப்படும். அதன் பொருட்டே ஈசன் ஆலகால நஞ்சு உண்ட போது அவர்தம் நிலை மாறாது இருக்க அன்னை பராசக்தி ஈசனின் கண்டத்தில் விஷத்தை தடுத்தி நிறுத்திய வரலாறு உணர்த்தும்
ஆண் தெய்வம் : பஞ்சாட்சர சிவன்
மேனி : நீல நிற மேனி
ஆடை : புலித் தோல்
கரங்கள்: நான்கு கைகள். . திரிசூலம், உடுக்கை, ஜப மாலை, அபய முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கிய வடிவம்
பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் சாகிணி எனும் பெயர் தாங்கி சிகப்பு நிற தாமரையில் அமர்ந்த கோலம்.
மேனி : இளம் ரோஜா நிறம்
ஆடை : நீல நிற புடவை
கரங்கள்: நான்கு கைகள், மண்டையோடு, அங்குசம், புனித வேதம், ஜப மாலை ஆகியவற்றினை கைகளில் தாங்கிய வடிவம்
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்- ஆங்கம் அவற்றுள் மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்றே அனையது தன் ஏர் இலாத தமிழ்
தண்டியலங்காரம்
கருத்துஉரை
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னுகின்ற எதுவும் கலவாத தனித்தன்மையான கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.
நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டு இனங்கள் குழல் ஒலிப்பது போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளை நோக்கி கைகூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.
*சலவரைச்* சாரா விடுதல் இனிதே; புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே; மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது.
இனியவை நாற்பது – பூதஞ் சேந்தனார்
கருத்து உரை
வஞ்சகர்களை சாராமல் அவரை விட்டு நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது
திரு நடனம் புரிபவனே! மலம் இல்லாதவனே! வெண்ணீற்றை உடையவனே! நெற்றிக்கண்ணை உடையவனே! தேவர் பிரானே! ஒப்பற்றவனே! முறையிட்டு அரற்றி உலகம் முழுதும் தேடியும் உன்னை நான் பார்க்கவில்லை. தீர்த்தமாகிய பொய்கையை உடைய திருப்பெருந்துறையில் வளப்பமான மலர்களை உடைய குருந்தமர நிழலில் பொருந்திய சிறப்புடைய செல்வனே! தொண்டனாகிய நான் அன்புடன் அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!
சூரியனைக் கண்ட சூரியகாந்தக்கல் நெருப்பு வடிவம் பெறும்; சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக்கல் முத்துப்போன்று நீர் வடிவாய் நீரை உமிழும்; கண்ணுக்கு உதவியாக அணியப்படும் ஆடி ஆகிய `உபநேத்திரம்` பார்வை வழியை நன்கு தெரிவிக்கும்; (அது போல) சிவனை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட உயிர்கள் அந்தச் சிவன் வடிவம் பெறும்.
மனிதர்கள், உலகின் நன்மை தீமைகள் அனைத்தும் நவகிரகங்களால் செய்யப்பட்டவை என்று நினைத்து அந்த கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பூசை செய்கின்றனர். இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை தீர்க்க கடவீர்
சிவன்
நட்சத்திரங்களும் கிரங்கங்களும் தாமே காரியங்களை செய்வதில்லை. மனிதர்களின் நன்மைக்காக அவைகள் நல்லவைகளாகவும், கெட்டவைகளாகவும் தெரிகின்றன. நல்ல கர்மங்கள் சுப கிரங்கங்களாலும், கெட்ட கர்மங்கள் பாப கிரங்களாலும் தெரிவிக்கப்படுகின்றன. ஆதலினால் பாப கிரங்கங்கள் இருக்கும் போது ஜனங்கள் கெடுதலைச் செய்கிறார்கள். சுப கிரங்கங்கள் இருக்கும் போது தாமே சரியாக செய்வதாக நினைத்து நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். எப்பொழுதும் கிரக, நட்சத்திரங்கள் நன்மை தீமை செய்வதில்லை. எல்லா வினைகளும் அந்தந்த உயிர்களால் செய்யப்பட்டவை. கிரகங்கள் வேறு, செய்பவன் வேறு. வினைகளை செய்தவன் கிரங்கங்களால் தூண்டப்பட்டு தன் பலன்களை அனுபவிக்கிறான்.
உமை
நல்ல வினைகள், தீய வினைகள் ஆகியவற்றை செய்த மனிதர்கள் அடுத்து வரும் பிறப்புகளில் எதை முதலில் அனுபவிக்கிறார்கள்?
சிவன்
சிலர் நல்லவினைகள் முன்பு அனுபவிக்கின்றனர் என்றும், சிலர் தீய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர் என்றும் கூறுகிறார்கள். இது தவறு. முன் ஜென்மங்களில் எவ்வாறு இரு வினைகளும் செய்யப்பட்டனவோ அவ்வாறே அதற்குத் தக்க பலன்களை அனுபவிக்கின்றனர். இந்த பூமியில் மனிதர்கள் செல்வம், வறுமை, இன்பம், துன்பம்,அச்சமின்மை, பயம் போன்றவற்றை வரிசையாக அனுபவிக்கின்றனர். செல்வம் உடையவர்கள் துயரப்படுகிறார்கள். வறியவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். இது மானிட வர்கங்களுக்கு பொருந்தும். சுவர்க்க, நரகத்தில் அவ்வாறு இல்லை. இடையறாத சுகம் சுவர்கத்திலும், இடையறாத துன்பம் நரகத்திலும் இருக்கும். மிகப் பெரியதான வினைகளை முதலில் அனுபவித்து மிகச் சிறிய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர்.
உமை
உலகில் உயிர்கள் பிறந்து பிறந்து நில்லாமல் உயிர் விடுத்து இறப்பது எதனால்?
சிவன்
தேகமும் ஆத்மாவும் இணைந்திருப்பதை பிராணிகள்/உயிர்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் ஆத்மா நித்தியம், உடம் அநித்தியம், இவ்வாறு தேகத்துடன் சேரும் ஆத்மா நாளடைவில் தேகத்தின் வலிமை குன்றிய பிறகு அதை விட்டு விடுகிறது. இதை உலகில் உள்ளவர்கள் மரணம் என்கிறனர். இது தேவர், அசுரர், மனிதர் ஆகிய எல்லாருக்கும் பொருந்தும். உயிரற்ற பொருள்களை எப்படி ஆகாயம் தன்னிடத்தில் கொள்வது இல்லையோ அது போலவே காலமும். இவ்வாறு உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து தேகம் அடைகின்றன.
உமை
சில உயிர்கள் இளமையிலே இறக்கின்றன. சில உயிர்கள் வயது முதிர்ந்து உயிரோடு இருக்கின்றன. இதனால் காலத்தினால் மரணம் நிச்சயமாகவில்லை. இந்த சந்தேகத்தை தெளிவியுங்கள்.
சிவன்
காலமானது தேக தளர்ச்சியை மட்டும் செய்கிறது. அது தேகம் விழ்ந்து போகச் செய்வதில்லை. கர்மம் முடிந்தால் தேகம் தானாகவே விழும். முந்தைய கர்மத்தின் படியே இருப்பதும் இறப்பதும். முன் செய்த கர்மம் இருக்கும் வரையில் மனிதன் உயிரோடு இருக்கிறான். அந்த கர்மத்தின் அடிப்படையில் தான் அவன் வெகு காலம் உயிரோடு இருப்பதும்.
உமை
மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?
பெண் பொருந்திய பாகத்தனும், வேதம் சொன்ன மொழியையுடையவனும், உயர்ந்த இதயமலரில் வீற்றிருக்கும் ஒளிப்பிழம்பானவனும், குற்றமற்ற மேலான கருணையாளனும், அடியார்கள் கொண்டாடுகின்ற நீதியினையே, குணமாக அவர்களுக்கு அருள்புரியும், அரும்புகள் மலர்கின்ற, சோலை சூழ்ந்த, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும், எமது புண்ணியப்பொருளானவனும் ஆகிய இறைவன், மணணுலகத்தில் வந்து இறங்கி, எல்லாவற்றுக்கும் முதலாயுள்ள பெரும் பொருளாகிய தனது தன்மையை வெளிப்படுத்திய, அருளின் அருமையை அறிய வல்லர்கள், எம்பிரான் ஆவார்கள்.
நில்லடா நிலை அறிந்து சுகத்தைக்காண நிசமான ருத்திரனார் பதியைக்கேளு சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க சுகமான முக்கோணம் நன்றாய்க்கீறி அல்லடா முக்கோணத் ததிலேநீதான் அப்பனே பன்னிரண்டி தழ்தான்போடு விள்ளடா செம்புனிற மான கோட்டை விசையான கோட்டைநடு விந்துபோடே
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்துஉரை
அடுத்தது “சி”கார ” எழுத்தாகவும், சிகாரத்தின் நடுவில் பார்வதியுடன் அமர்ந்திருக்கும் ருத்திரனாரை தலைமையாக கொண்ட அனாதகத்தை, முக்கோணச் சக்கரம் சுற்றிலும் (இரு முக்கோணங்கள் ஒன்று மேல்நோக்கியும் ஒன்று கீழ் நோக்கி) பன்னிரண்டு இதழ்களை வரைந்து, செம்பின் நிறம்போன்ற சிவந்த கோட்டை அதன் நடுவில் புள்ளியாகவும், சக்திதத்துவம் உடையதாகவும் சிறியதாகவும் உள்ள பிந்துவினை இட்டு குரு உபதேசித்த படி ஜபிக்க வேண்டும்.
மூலாதாரம் முதல் அனாகதம் வரை உணர்ச்சி மையம். அனாகதம் முதல் துரியம் துரியாதீதம் வரை அறிவு மையம்.எனவே அனாகதம் அறிவும் உணர்ச்சியும் சந்திக்கின்ற மையப்புள்ளி. இது பற்றியே மனிதர்கள் கீழ் நிலை அடைவதும், மேல் நிலை அடைவதும்.
54 சூரிய கலைகளைக்கொண்டு ஜோதி வடிவானது.
நெருப்பின் பஞ்ச பூத தத்துவமாகவும், எல்லாவற்றிலும் மேலாக எப்போதும் அனாதியாய் ஓங்கார சப்தத்தையும் (உடல் முழுதும் சிரசு வரை) மின்னலின் கண் தோன்றும் இடி சப்தத்தையும் எழுப்பிக்கொண்டே இருப்பதோடு ஒவ்வொரு அணுவிலும் அதன் அதிர்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.
ஒன்றின் மூலத்திலிருந்து வந்தது.
‘ஹ்ருதயஸ்தா, ரவிப்ரக்யா – ‘ஹ்ருதயத்தில் வசிக்கையில் சூர்யன் போன்று பிரகாசிப்பது’ என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் நாமாவளி இதைக் குறிக்கிறது. ஹ்ருதயத்தில் சியாமா/தருணியாகவும் இருப்பதை குறிக்கிறது. அவளே அனாகதத்தை தாண்டி விஷ்ணுக்ரந்தியைக் கடக்கையில் சூரியனது ஒளியை விஞ்சுவதாக ருத்ர சியாமளம் கூறுகிறது.
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)