அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 23 (2022)


பாடல்

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஈசனே அனைத்துமாகி இருப்பதை உரைத்தும், அதன் பொருட்டு அரசனிடத்தில் பயம் கொள்ளமாட்டோம் எனவும் உரைக்கும் பாடல்.

பதவுரை

நிற்பன என்றழைக்கபடும் மனிதனாகவும், நடப்பன என்றழைகப்படும் மிருகங்களாகவும், நிலமாகவும், நீராகவும், நெருப்பாகவும் , காற்றாகவும், நீண்ட வானமாகவும் (பஞ்ச பூதங்கள்), மிகசிறிய அளவில் இருக்கக்கூடியதாகவும், பெருமை தரதக்கவனாகவும், அருமை உடையவனாகவும், தன்னிடத்தில் அன்பு கொண்டவர்களுக்கு மிகவும் எளியவனாகவும், அளக்க இயலாததான தற்பரம் ஆனவனாகவும், சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவ பெருமானாகவும் அவன் நன்மைகளையும்  பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம்; அதனால் பிழையற்றவரன் ஆனோம். சிறந்த உணர்வு இல்லாமல்  அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்ப  தன்மை உடையவர்கள்  பேசுமாறுபோல யாம் பேசுவமோ?

விளக்கஉரை

  • பரம் – மேலான பொருள் 
  • தத்பரம் – உயிருக்கு மேற்பட்டது
  • சதாசிவம் – சதா சிவதத்துவம்
  • தானும்  யானும் – இறைவனது பொருள் தன்மையையும் கலப்பினையும் உணர்த்தியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 22 (2022)


பாடல்

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ!

அருளியச் சித்தர் : அழுகணிச்சித்தர்

கருத்துவாசி கொண்டு இறைவனை அடையும் வழியினைக் கூறும் பாடல்.

பதவுரை

கண்ணம்மா! (சூட்சமத்தினை குருமூலமாக அறிக)  புரவி எனும் வாசியினைப் போல் நில்லாமல் 12 அங்குலம் கொண்டு சென்று கொண்டிருகும் காற்றினை சுழிமுனை வாசலில் நிற்கச் செய்து, அதில் நான்கு அங்குல காற்றினை சுருக்கி, ஆன்ம தேசத்தை நம் சொந்தம் ஆக்கிகொள்ள முடியாதோ?

அட்டாள தேசம் என்பதனை எட்டு அங்குலம் உடைய தேகம் என்று கொண்டு உடல், மனம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவருதலை உரைப்பதாவும் கொள்ளலாம்.

ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

வாசி முறைகள் குரு பரம்பரையாக வருபவை. உபதேசிகப்படும் குருவுக்கு தக்கபடி எண்ணிக்கையும், முறையும் மாறுபடலாம் என்பதால் குரு முகமாக அறிதல் நலம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 7 (2022)


பாடல்

இருள் உதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருள் உதய நன்றாய் அருளி – மருள் உதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – குருவே ஈசனாய் நின்று பாச நீக்கம் செய்து அருளிய திறத்தினை கூறும் பாடல்.

பதவுரை

ஆரூரில் உறைபவனும், பெரிய வேதங்களையும், ஆகமங்களையும் அறிவித்தவனாகிய ஞானப்பிரகாசனானவன், சூரிய ஒளியானது இருளைநீக்கும் தன்மையைப்போல் என்னுள்ளே அருள் தோற்றத்தினை தோன்றச்செய்து நன்றாய் அருளி அநாதிகாலம் தொட்டு தொடர்ந்து பெருகிவரும் பிறவியின் மயக்கம் மாற்றியவன்.

விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி.வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு
  • இருள் உதயநீக்கு – அருள்தோற்றம் பற்றிய கணத்தில் மருள்நீக்கம் முற்றிலும் நீங்காதவாறு சிந்தித்தல் தெளிதல் போன்றவற்றை முற்றிலும் நீக்கி எனும் பொருள் பற்றி நின்றது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 24 (2022)


பாடல்

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்து – செல்வம் போன்ற இகலோக விஷயங்களில் மனதைச் செலுத்தாமல் தனக்கு மெய்வீட்டினை காட்டி அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

தாருகாவனத்து முனிவர்களின் ஆணவம் அழியச் செய்வதற்காக அவர்கள் செய்த யாகத்தில் இருந்து தோன்றிய யானையை   கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து பிட்சாண்டவர் வடிவம் கொண்டவனே! வலை விரித்து வேங்கைப் புலியை பிடிப்பதற்காக ஆட்டை கட்டி வைத்து பிடிப்பது போல இகலோக வாழ்வில் உழலச் செய்வதற்காக உறவுகள், செல்வம் போன்றவற்றைக் கொண்டு என்னுடைய மதியினை மயக்குதல் முறையோ? மெய்யான வீட்டை எனக்குக் காட்டி அந்த வழியிலே நிலைபெறுமாறு செய்து உன்னை அடையும் வழியைக்காட்டி என்னை வெளிப்படுத்த வேண்டும்.

விளக்க உரை

  • பதி, பசு, பாசம் என்ற சைவத்தின் மூன்று பெரும் பகுப்புகளில் மாடு எனும் பசுவானது அளவுக்கு உட்பட்டதாகிய ஜீவனைக் குறிக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 23 (2022)


பாடல்

நிலைகெட விண்ணதிர நிலம்
   எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
   யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
   கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
   தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஉத்தமனாகிய ஈசன் அருளுவதன் பொருட்டு தானே கைலாச மலையில் இருந்து இறங்கிவந்து அருள் புரிந்த திறத்தை வியந்து உரைக்கும் பாடல்.

பதவுரை

திருக்கயிலைமலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனான உத்தமன், விண்ணுலகம் தனது இயல்பு நிலையில் இருந்து கெட்டு அதிரும்படியாகவும்,  நிலவுலகம் முழுதும் அதிரும்படியாகவும் மலையில் திரியும் யானை மீது ஏறி வந்து, தனது மலையாகிய கைலாச மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே வந்து, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணனை பூக்களைக் கொண்டு எல்லொருக்கும் முன்னரே வந்து வணங்குமாறு செய்து, உடல் அழியாது உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் என்னே!

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 22 (2022)


பாடல்

இளையம் முதுதவம் ஆற்றுதும் நோற்றென்
றுளைவின்று கண்பாடும் ஊழே – விளிவின்று
வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்டாரும்
தாழாமே நோற்பார் தவம்

நீதிநெறி விளக்கம் – ஸ்ரீ குமரகுருபரர்

கருத்து – மரணிக்கும் நாள் எதுவென்று யாருக்கும் தெரியாது என்பதால் உடனே தவம் செய்து கொள்ளுதல் மக்கள் கடன் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

நாம் இப்போது இளைஞராக இருக்கிறோம், இளமையில் இறத்தல் என்பது இல்லை என்றும், தமது வாழ்நாள் நீண்ட கால எல்லையினை உடையது எனும் எண்ணம் கொண்டும் முதுமையில் வருந்தி தவம் செய்வோம் என்று இப்பொழுது எவ்வித வருத்தமும் இல்லாமல் உறங்கிக் கிடப்பதும் ஒரு காலத்திலும் முறை ஆகாது. தமது ஆயுள் நாள் முடிவைக் காணும் துறவியரும் நொடிப்பொழும் தாமதிக்காமல் தவம் செய்வார்.

விளக்க உரை

  • வரம்பு – எல்லை, முடிவு, உளைவு, விளிவு
  • இளையம் – இளமை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 21 (2022)


பாடல்

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்

நல்வழி – ஔவையார்

கருத்துமுற்பிறவியில் செய்த வினைகளை ஒத்தே இந்தப் பிறவியில் செல்வம் சேரும் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

உலகில் இருப்பவர்களே  கேளுங்கள்! பொருளை சம்பாதிப்பதற்காக கணக்கில் அடங்காத முயற்சிகள் செய்தாலும் செய்த வினையாகிய ஊழின் அளவே பொருள் ஈட்டுதல் கைகூடும்.அதற்கு மேல் நினைத்தாலும் செல்வம் சேராது. தேடிய செல்வத்தைக் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்யும் உலக மக்களே! அந்தச் செல்வம் ஒருவரிடம் நிலையாகத் தரித்து இருப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – மாசி – 11 (2022)


பாடல்

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்

துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்

பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்

டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துசிவனை பைரவ ரூபமாக கண்டு அவரை வணங்கி தன் சூலை நோய் எனும் வயிற்று வலியை நீங்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

திருவதிகைக் கெடிலநதிக்கு வடபால் விளங்கும் திருத்தலமான திருவீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரிய கடவுளே, உலகில் புறப்பற்றுகளோடு இருந்து பின் இறந்தவர்களை  எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்லமை உடைய பெருமானே! விடை ஆகிய காளையை விரும்பி ஊர்தல் செய்பவரே, திருத்தலையைச் சுற்றிலும் வெண்டலைமாலை கொண்டு அணிந்தவரே, உம்மை வழிபாடு செய்பவர்களின் பாவங்களைப் போக்க வல்லவரே! இறந்தவருடைய மண்டை ஒட்டில்(பிரம்ம கபாலம்) பிச்சை ஏற்றுத் திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுவதால், எம்மைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

விளக்க உரை

  • படுவெண்தலை – பட்டதலை
  • படுதல் – அழிதல்
  • பொடி – இறந்தவரது வெந்த உடம்பின் சாம்பற்பொடி
  • பெற்றம் – விடை, ரிஷபம், காளை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – தை – 29 (2022)


பாடல்

அத்துவித சித்த பரிசுத்தர்களிடத்தினில்
   அடுத்திடர் தொலைப்பம் என்றால்
ஆசையெனு மூவகைப் பேய்பிடித் தாவேச
   மாட்டும் வகையல்லாமலே
தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலுமிது
   தன் வழியிலே இழுத்துத்
தள்ளுதே பாழான கோபமும் அடங்காது
   தன்னரசு நாடு செயுதே!
இத்தனை விதச் சனியில் எப்படி வழிப்படுவ
   தெப்படி பிழைப்பதம்மா?
இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து
   இணை மலர்ப்பதம் அருளுவாய்
வித்தகது தற்கணனிடத்தில் வளரமுதமே
   விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
   விமலி கற்பகவல்லியே

ஸ்ரீ மயிலை கற்பகாம்பிகை பதிகம் – திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்

கருத்துதுன்பங்களில் உழலும் தன்னை அதனிடத்தில் இருந்து காத்து அருள வேண்டி விண்ணப்பம் செய்யும் பாடல்.

பதவுரை

திருமயிலையில் வீற்றிருந்து மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு  துணையாக இருக்கும் கற்பகவல்லியே! சித்தமானது  மாறுபாடு இல்லாமல்  இருக்கும் பரிசுத்தர்களை அடைந்து அவர்கள் மூலமாக துயரத்தை தொலைக்க எண்ணும் போது ஆசை, மாயை, கன்மம் எனும் மூவகைப் பேய்கள் பிடித்து ஆவேசமாக ஆட்டுகின்றது; குதிரையினை ஒத்த மனமானது எத்தனை நல்விஷயங்களை  உரைத்தாலும் அதனைக் கேளாமல் தன்னுடைய வழியிலே இழுத்து தள்ளுகிறது; அத்துடன் தீமை தரத் தக்கதான கோபமும் அடங்காது எவருடைய வார்த்தையும் கேளாமல் தானே ஆட்சி செய்கிறது; இவ்வாறு அனைத்தும் துன்பம் தருமாறு  இருக்கும் நிலையில் எவ்வாறு வழிபாடு செய்து வினைகளைக் குறைத்து பிழைக்கமுடியும்? எனவே நீ இனியாவது உன்னுடைய கடைக்கண் பார்வை தந்து என்னுடைய வினைகளைத் தீர்த்து ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும் மலர் போன்ற பாதங்களை அருளுவாய்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – தை – 22 (2022)


பாடல்

இந்திரன் மால்பிரமன் னெழி
   லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
   யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
  ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்
   தான்மலை உத்தமனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துசுந்தரர், இறைவனார் தம்மை ‘நம் தோழர்’ என்றும் ‘ ஆரூரன்’ என்றும் அழைத்ததை தம் திருவாக்கால் உரைத்தப் பாடல்.

பதவுரை

திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், ஊக்கத்துடன் பாடுபவர்களாகிய தேவர்கள் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு செய்து, எனக்கு பெரிய யானையை  ஊர்தியாக அளித்து அருளச் செய்தான்.  அங்கு இருக்கும் மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் `இவன் யார்` என்று கேட்டபோது, `இவன் நம் தோழன்’ என்றும் ‘ஆரூரன்’  என்னும் பெயரினை உடையவன் என்றும்  திருவாய் மலர்ந்து அருளினான். என்னே அவன் திருவருள்.

விளக்க உரை

  • மத்தம் – பெரியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – மார்கழி – 13 (2021)


பாடல்

கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் வடிவத்தினையும், அவனின் செயற்கறிய செயல்களையும் கூறி அவனை நினைந்து வாழமுடியாது என உரைக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடும் பாம்பினை கட்டியவனும், பிரம்ம தலையாகிய கபாலத்தினையும், மான் குட்டியினையும் கையின் கொண்டவனும்,  மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலக அழிவு ஆகிய சர்வசங்கார நிலையில் சுடுகாட்டினை விருப்பமுடன் உறையும் இடமாகக் கொண்டு அந்த இடுகாட்டில் ஆடுவானும், கல்வியினால்  அறியப்பட வேண்டியவற்றை  உணர்ந்தோராகிய பெரியோராகிய சிட்டர்கள் வாழும் இடமாகிய தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ?

விளக்க உரை

  • கபாலம் – பிரமனது மண்டையோடு
  • மறி – கன்று
  • இட்டம் – விருப்பம் .
  • எரி – பிரளயகாலத் தீ
  • தனை – அளவு .
  • எள் – அளவின் சிறுமையினை காட்டுவது

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 23 (2021)


பாடல்

அறிவான தைம்பத்தோ ரெழுத்துக் கெல்லாம்
     ஆதிமணிச் சோதிநிற மான வாலை
விரிவான ராஜலிங்க சுரூப மாகி
     வின்னினொளி சித்தருக்குத் தெய்வ மாகிச்
சரியான நடுவணையிற் பருவ மாகி
     சடாட்சரத்தின் கோவையதாய் நின்ற மூலம்
குறியான பதியறிந்து குறியைக் கண்டு
     கூடினேன் சிதம்பரத்தி லாடி னேனே

அருளிய சித்தர் : அகத்தியர்

கருத்து – அகத்தியர் அம்பலத்தில் ஆடியதை குறிப்பிட்டு உரைக்கும்  பாடல்

பதவுரை

மெய்யறிவைத் தரத்தக்கதான ஐம்பத்தோரு எழுத்துகளுக்கு மேலானதானதும், எல்லாவற்றுக்கும் மேலானதும், சோதி வடிவமாகவும் இருக்கும் வாலையையும், பிரபஞ்சமாக பரந்து விரியும் ராஜலிங்க சொருபமாகவும், விண்ணில் ஒளிரும் சித்தர்களுக்கு தெய்வமாகவும் (ஸ்தூலத்தில் உள்ளும் எனவும் கொள்ளலாம்), இரு கண்களின் நடுவில் உள்ளதான அக்னி கலையின் இருப்பிடமான நடுவணையில் தோன்றி ஆறு ஆதாரங்களுக்கும் இணைப்பதான மூலமாக நின்றதான பதியாகிய இறைவன் இருப்பிடத்தைக் கண்டு அவருடன் இணைந்து  அம்பலத்தில் ஆடினேன்.

ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 19 (2021)


அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 19 (2021)

பாடல்

செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம்
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே

அருளிய சித்தர் : பாம்பாட்டி சித்தர்

கருத்து – சித்தர்கள் செய்யக்கூடிய சில அரும் செயல்களைக் கூறும் பாடல்

பதவுரை

நாகமே! உரைக்கக் கூடியதாகிய மூன்று உலகங்களையும் சிறப்புடைய பொன்னால் உடையதாக ஆக்குவோம்; வெப்பம் தரும் சூரிய கதிர்களை குளிர்ச்சி தரக்கூடியதாகிய சந்திர ஒளியாக மாற்றிச் செய்வோம்; பரந்து பட்டதான இந்த உலகத்தினை இல்லாமல் மறைப்புச் செய்வோம்; இப்படிப்பட்ட செய்யக்கூடிய சித்தர்களாகிய எங்களில் வல்லமையையக் கண்டு நீ ஆடுவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை- 14 (2021)


பாடல்

ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவொற்றியூர் திருத்தலத்தையும், திருவாரூர் திருத்தலத்தையும் விடுத்து தனியாக திருக்கோடிக்குழகர் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதன் காரணத்தை  சிலேடையாக வினவும் பாடல்.

பதவுரை

வளர்பிறை எனப்படும் முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே! ஒற்றி எனும் ஒற்றியூரையும், ஆருர் எனும் திருவாரூரையும் என்ன காரணத்தால் அறுதியாக நீங்கிவிட்டு எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய்?

விளக்க உரை

  • சிலேடை வகை – எத்துணையோ ஊர்கள் இருந்தும்  அவைகளை எல்லாம் விடுத்து, ஒருவரும் இல்லாத இவ்விடத்தில் ஏன் வந்து இருத்தல் வேண்டும்  எனும் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை- 9 (2021)


பாடல்

எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆதியும் நின்ற
ஆனந்த வெள்ளங்கண்டு ஆடு பாம்பே!

அருளிய சித்தர் : பாம்பாட்டி சித்தர்

கருத்து – ஈசன் அனைத்தும் ஆகியும் அதில் இருந்து தனித்து இருக்கும் முறையை உரைக்கும் பாடல்.

பதவுரை

இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்கள் ஆகியும் (84 லட்சம் வகை யோனி பிறப்புகள்), நாம் வாழும் பூலோகம் விடுத்து புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனோலோகம்,   தபோலோகம், சத்யலோகம் ஆகிய மேல் உலகங்கள், அதலலோகம், விதலலோகம், சுதலலோகம்,  தலாதலலோகம், மகாதலலோகம், ரஸாதலலோகம், பாதாளலோகம் ஆகிய கீழ் உலகங்கள் அனைத்தையும்  படைப்பவனாகவும் அதனில் இருந்து  தனித்து  நிற்பவனாகியும், அனைத்துக்கும் வெளியில் தனித்து நிற்பவனாகி திருவிளையாட்டினை நிகழ்த்துபவனாகவும், பின்னர் அவ்வாறான அந்த உயிர்களாகவும், அந்த உலகங்களாகவும் ஆதியாகவும் இருக்கும் பேரானந்தத்தைக் கண்டு பாம்பே ஆடுவாயாக

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 28 (2021)


பாடல்

கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன ?

அருளிய சித்தர் : அழுகணி சித்தர்

கருத்து – ஞானத்தின் உயர் நிலையில் உலகப் பற்றுக்கள் நீங்கும் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

கற்றவர்களும், உடன் இருப்பவர்களும், 96 தத்துவங்களும் உற்றாரும் சுற்றமும் குடும்பமும் நித்யம் என்றிருந்தேன். உற்றாரும் சுற்றமும் குடும்பமும் இந்த ஊரை விட்டுச் செல்கையில் எந்த விதமான சுற்றமும் இல்லாமல் துணை இழந்து நின்றேன்.

விளக்க உரை

  • கற்ற மெய்ஞானம், உடல் மனம் சார்ந்து அடையும் 96 தத்துவங்கள், தான் உடல் பெறுவதற்கு முன் செய்த வினைகள், உடல் எடுத்தப்பின் செய்யும் வினைகள் ஆகிய அனைத்தும் ஞானம் அடையிலே பற்றுக்கள் அனைத்தும் எனை விட்டு  சென்றதென்ன என்று பொருள் உரைப்பாருல் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஆன்ம தத்துவங்கள் – 24, உடலின் வாசல்கள் – 9, தாதுக்கள் – 7, மண்டலங்கள் – 3, குணங்கள் – 3, மலங்கள் – 3, நோய்கள் – 3, விகாரங்கள் – 8, ஆதாரங்கள் – 6, வாயுக்கள் – 10, நாடிகள் – 10, அவத்தைகள் – 5, ஐவுடம்புகள் – 5

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 25 (2021)


பாடல்

ஈயாமல் இருந்துவிட்டால் வுகமுங் காரு
ஏற்றபடி பணிவிடைகள் எல்லாம் செய்து
செய்யாதே அணுவளவும் பொய் பேசாதே
தினந்தொறும் கால் கடுக்க நின்று காரு
ஆயாவே முகம்பார்த்துச் செபமே பண்ணு
அன்றாடம் உண்கிறதில் மூன்றில் ஒன்று
மேயாக ஐயருக்குப் பங்கிட்டீவாய்
வேண்டினது நீ கொடுத்தும் இன்னங்கேளே

அருளிய சித்தர் : அகத்தியர்

கருத்து – ஆஸ்ரமத்தில் வாழும் சீடருக்கான விதி இது என்றும், தனது குரு கேட்பவை அனைத்தையும் வழங்கி இந்த அறிவைப் பெறவேண்டும் அகத்தியர் உரைக்கும் அகத்தியர் மெய்ஞானப் பாடல்.

பதவுரை

குருவுக்கு ஏற்ற பணிவிடைகளைச் செய்தும், கால் கடுக்க நின்றும், அவரிடத்தில் எந்த விதத்திலும்(மனம், மொழி, வாக்கு) பொய்யினை பேசாமல் மெய்ஞானத்தில் கூறியுள்ளவற்றை குரு உரைக்க அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை எனில் அவன் ஒரு யுகமளவு காத்திருக்கவேண்டும்; அந்த சீடன் எப்பொழுதும் மெய் தேடலில் விருப்பம் கொண்டு தனது குருவின் முகக் குறிப்பை அறிந்து இந்த மெய்யறிவைத் தொடர்ந்து வேண்ட வேண்டும்; யாசித்து பெற்ற பிக்ஷையின் மூலம் உணவைச் சேகரிக்கும் சீடன் அதில் மூன்றில் ஒரு பங்கை குருவுக்கு அளிக்கவேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 24 (2021)


பாடல்

உனக்குப் பணிசெய்ய உன்றனையெந் நாளும்
நினைக்க வரமெனக்கு நீதா – மனக்கவலை
நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும்
ஆக்குகின்ற சொக்கநா தா

தருமை ஆதீன முதல் குருமூர்த்திகளாகிய ஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் – சொக்கநாத வெண்பா

கருத்து – சொக்க நாதருக்கு பணி செய்யவும், நினைவு அகலாமல் இருக்கவும் அவரிடம் விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

மனக்கவலையையினை நீக்குவதான தென்மதுரையில் வீற்றிருந்து அருளுபவனும், இயல்பாகவே தூய்மை உடையவனும் ஆனவனே, படைக்கப்படும் உலகம் அனைத்தையும் தோற்றுவிக்கும்  சொக்க நாதனே! உனக்கு  பணி செய்யவும், உன்னுடைய நினைவு அகலாமல் எப்பொழுதும் உன்னுடைய நினைவு கொண்டிருக்கும் வரத்தினை நீ அருள்வாயாக.

விளக்க உரை

  • நின்மலன் – அழுக்கற்றவனான கடவுள், அருகன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 23 (2021)


பாடல்

பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார்

தாயுமானவர்

கருத்து – இறைவனின் மகிமையை அறிந்தவரின் அக அனுபவங்களை விளக்கும் பாடல்

பதவுரை

பிள்ளை பெறுவது வலி தரும் காரியம் என்பது பெற்றவளுக்கு மட்டுமே தெரியும், பிள்ளை பெறாதவளுக்கு அந்த பிரசவ வலி எப்படித் தெரியும்; அது போல இறைவனின் பெருமையை உணர்ந்து பேரானந்தம் கண்டவர்களின் கண்களில் இருந்து எவ்வித முனைப்பும் இன்றி தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்கும்; இறைவனின் பெருமையை உணராதவர் நெஞ்சம் கல்லினை ஒத்து இருக்கும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 22 (2021)


பாடல்

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
     பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
    அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
     மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
     வேலை சூழ்வெண் காட னீரே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – செயற்கரிய செயல்களை செய்து முடித்தவராகிய சிவபெருமானை கபாலத்தில் யாசிப்பது ஏன் என வினவும் பாடல்

பதவுரை

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை தலமாக உடைய இறைவரே! படம் எடுத்து ஆடும் பாம்பைத் தலையிலே வைத்தும், பாய்கின்ற புலியினது தோலை இடுப்பில் கட்டியும்,  கோபம் கொண்டு பகைவரது திரிபுரங்களை எரியுமாறு செய்து அதை அழித்தும், அதன் பின் அந்த மூவர்களுக்கும் அருள் செய்தும், கூற்றுவனை கொன்று, பின்னர் உயிர்ப்பித்து அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டும்  ஆன பெருமைகளை உடைய நீர் பிரம்மனது தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?

விளக்க உரை

  • மூவர்க் கருள்பு ரிந்தீர் – திரிபுரத்து ஓர் மூவர் ஆகிய சுதன்மன், சுசீலன், சுமாலி ஆகிய திரிபுரத்து அசுரர்கள்,  சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதில் இருந்து  மாறாமல் இருந்ததால் அவர்களை உய்விப்பதன் பொருட்டு ஒருவனைக் குடமுழா முழக்குபவனாகவும் , இருவரை வாயில் காவலராகவும் கொண்ட அருள் செய்த முறையை ஒப்பு நோக்க தக்கது.
  • மடங்கல் – கூற்றுவன் – எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன்
  • பழிப்பது போல் புகழ்வதால் இது வஞ்சப்புகழ்ச்சி ஆகும்  

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!