அமுதமொழி – விளம்பி – பங்குனி – 26 (2019)


பாடல்

கந்தனை அருள் புரி கடவுள் ஆணையைச்
சிந்தையின் மாறு கொள் சிறியர் யாவரும்
அந்தம் அடைந்தனர் அன்றி வன்மையால்
உய்ந்தனர் இவர் என உரைக்க வல்லமோ

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

*கருத்துபிறவாமை அடைய கந்தன் அருள் வேண்டும் எனும் பாடல்.*

பதவுரை

வினைபற்றி நிற்கும் சிந்தனையானது மாறுபாடு அடைந்து கந்தனை முன்னிறுத்தி தன்னை தாழ்த்திக் கொண்டவர் அனைவரும் பிறாவாமை எனும் அந்தமாகிய முடிவினை அடைந்தனர் என்பது இல்லாமல் கோபமும் கொடுஞ்சொல்லும் கொண்டு வலிமையால் இவர் உயிர் தப்பி ஈடேறினார்கள் என்று உரைக்க இயலுமோ? கந்தனைவிட அருள்புரியக் கூடிய கடவுள் எவையும் உண்டோ? இஃது ஆணை.

விளக்க உரை

• சூரபன்மனுக்கு அவன் மகன் இரணியன் அறிவுரையாக கந்தக் கடவுள் பற்றிக் கூறியது.
• வன்மை – வலிமை, கடினம், வன்சொல்,கடுஞ்சொல், ஆற்றல், வன்முறை; வலாற்காரம், சொல்லழுத்தம், கோபம், கருத்து, வல்லெழுத்து

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 25 (2019)


பாடல்

பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யார்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்துதிருக்கருவூரானிலை திருத்தலத்து இறைவனின் வடிவழகை உரைக்கும் பாடல்.

பதவுரை

திருக்கருவூரானிலை எனும் திருத்தலத்தில் உறையும் தலைவனும் இறைவனும் ஆனவர் தாமரை போன்ற திருவடிகளை உடையர்; தம்முடைய திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர்; ஆலகால விடம் தாங்கியதால் நீல மணி போன்ற கண்டத்தினை உடையவர்;  ஆகாயத்தில் இருந்து பாய்ந்து வரும் கங்கையைத் தாங்கியவர்;  அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை கொண்டவர்.

விளக்க உரை

• திருக்கருவூரானிலை எனும் கொங்கு நாட்டுத் திருத்தலம்
• பங்கயம் – தாமரை
• பாதி ஓர் மங்கையர் – அர்த்தநாரீச்சுரர்
• வான் கங்கையர் – ஆகாச கங்கையை அணிந்தவர்
• அம் – அழகு
• ஆடு அரவம் – ஆடுகின்ற பாம்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 24 (2019)


பாடல்

தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசெல்வம் நில்லாது; நின்றபொழுதும் உதவுதல் இல்லை என்று கூறும் பாடல்

பதவுரை

தமது நிழல் ஆனது தம் வெயிலின் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டும்,  அறிவிலாதவர்களாகிய வறியவர்கள், தமது செல்வமானது தம் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். உணரப்படுவதாகிய உயிர், காணப்படுவதாகிய உடம்பு இரண்டும் ஒன்றாய்ப் பிறந்தாலும், உயிரானது உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டொழிகின்றது. அவ்வாறு இருக்க வினைகளுக்கு வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்! ஆகவே நிலை பெறுவது செய்வதாகிய மெய்ப் பொருளைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள்.

விளக்க உரை

• முதல் தந்திரம் – செல்வம் நிலையாமை
• காணொளி – அகக் கண்ணால் காணக்கூடிய ஒளி. குரு முகமாக அறிக.
• ‘கண்ணது காணொளி’ – பிறர் அறிவிக்க வேண்டாது நீங்களே எளிதின் அறிதல் கூடும்` என்று பொருள் உரைப்பார்களும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
• ‘வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையிற்பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே
எனும் அருணகிரிநாதர் கந்தரலங்காரப் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
• மாடு – செல்வம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 23 (2019)


பாடல்

கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக்
கமலத்தோன் தலையரிந்த காபா லிய்யை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் தன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையும் மேய
திருவானைத் தென் பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துநெஞ்சத்தினை இடைவிடாது சிவபெருமானை குறித்து சிந்திக்க வேண்டும் பாடல்.

பதவுரை

நெஞ்சமே! தோற்ற ஒடுக்கம் உடைய உயிர்கள் மற்றும் அகிலங்கள் அனைத்திற்கும் முற்பட்டவனும், திருக்கண்ணை உடைய நெற்றியை உடையவனும், தாமரை மலரின் இருப்பவனாகிய பிரம்மனின் தலையை அறிந்து, அந்த தலையை ஓட்டை விரும்பி கபாலி ஆகியவனும், அழகிய வடிவம் கொண்ட மலைமகள் எனும் உமையம்மையை தன்  உடலின் ஒரு பாகமாக உடையவனும், உருவம், அருவம், அருவுருவம் கொண்ட அனைத்திற்கும் உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அந்த உணர்வுகளை உணர்த்தும் நாதம் எனும் ஓசைகளாகி வருபவனும், வலஞ்சுழி எனும் திருத்தலத்தில் உறையும் எம்பெருமானும், திருமறைக்காடு எனும் திருத்தலத்தில் உறைபவனும், ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மை உடையவனும் ஆன தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழில் சிவபெருமானை இடைவிடாது சிந்திப்பாயாக.

விளக்க உரை

• திருவாலம்பொழில் எனும் காவிரி தென்கரைத் திருத்தலம்
• கமலத்தோன் – பிரமன்
• உரு ஆர்ந்த – அழகு நிறைந்த
• வலஞ்சுழி, மறைக்காடு, ஆவடுதுறை இவை சோழநாட்டுத் தலங்கள்
• மேய ( மேவிய ) – விரும்பி எழுந்தருளிய.
• திருவான் – மேன்மையை உடையவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 20 (2019)


பாடல்

இன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே
அன்று தொட்டெனை ஆளர சேஎன்று
நின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால்
மன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே

தாயுமானவர் சுவாமி பாடல்கள்

கருத்து – ‘காத்து அருள்’ என்று முன்பு ஒருமுறை கதறிய காரணத்தால் இப்பொழுது காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.

பதவுரை

இப்போது யான் உன்னிடத்தில் அன்பு இல்லா காரணத்தால் பிழைப்பதற்கு வழி இல்லாமல் இருப்பினும், முன்னொரு காலத்தில், ஏ இறைவா! உனது திருவடிகளை சார்ந்து எனை ஆண்டருள் என்று வாய்விட்டு  கதறியுள்ள இந்த வஞ்சனை கொண்டவனும் கொடியவனும் ஆகிய உனக்கு உரித்தானவனை கைநெகிழ விட்டு விட்டால் ஞானம் கொண்ட கூட்டத்தார்கள் உன்னுடைய திருவருளினை நல்லுரை கூறி உன்னை எவ்வாறு புகழ்ந்து துதிப்பார்கள் என்று கூறுவாயாக!

விளக்க உரை

  • நீலன் – சனி; கொடியன்; ஒருகுரக்குப்படைத்தலைவன்; குதிரைவகை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 18 (2019)







பாடல்

ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
வொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஅவர் திருவடி சேர்தலை ஈசனாருக்கு நாம் பிறவி எடுத்ததற்கு செய்யும் கைமாறு எனும் பாடல்.

பதவுரை

ஊண் எனப்படுவதாகிய உடலாகிய சதைப்பகுதியை சுவராகச் வைத்து, ஒன்பது துவாரங்களையும் வாயிலாக அமைத்து, வெள்ளி போன்றதும், ஒளி உடையதும் ஆன எலும்புகளைத் தூணாக அமைத்து ரோமங்களை மேலே பரப்பி தாமே படைப்பித்த உடலாகிய குடில் நீங்கும்படி செய்து, தாவுகின்ற மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய்,  கபாலம் ஆகிய மண்டை ஓட்டினை ஏந்திய தலைவராகி, எல்லாத் தத்துவங்ளையும் கடந்து, வானில் நிலை பெற்ற உலகங்களை எல்லாம் கடந்து விரைவாக வீடுபேறு ஆகிய அவரது திருவடியை அடைதலுக்கு  செல்லும் வழியை அமைத்துக் கொடுத்து, தோகைகளைப் விரித்து ஆடும் மயில்கள் உடையதும்,  சோலைகளை உடையதும் ஆன திருக்கழிப்பாலைத் தலத்தில் இருந்து தாமே வலியச் சென்று அருள் செய்கின்றார்; இந்த உடம்பு பெற்றதனால் ஆன பயன் என்னவெனில் அவர் வகுத்து வைத்த வழியிலே செல்வது மட்டுமே அவர்க்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகும்.

விளக்க உரை

• ஊன் – தசை
• உடுத்தி – வளைத்து

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 17 (2019)

பாடல்

பூணாண் ஆவதொ ரரவங்கண் டஞ்சேன்
   புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணா யாகிலும் பெருமையை உணர்வேன்
   பிறவே னாகிலும் மறவேன்
காணா யாகிலுங் காண்பன்என் மனத்தால்
   கருதா யாகிலுங் கருதி
நானேல் உன்னடி பாடுத லொழியேன்
   நாட்டியத் தான்குடி நம்பீ

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துநீ அருள் செய்யா விடினும் யான் உன்னை நினைத்து பாடுதலை விடேன் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆணில் சிறந்தோனாகவும், பூரணனாகவும் இருக்கும் இறைவனே! உனக்கு அணிகலனாகவும், அரைநாணும் சிறுமையை உடைய பாம்பு இருப்பது கண்டு அஞ்சேன்; நீ புறங்காடு ஆகிய சுடுகாட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்; நீ என்னுடைய சிறுமைக் கண்டும் உணர்ந்தும் என்னை விரும்பாவிடிலும் யான் உன்னுடைய பெருமையை உணர்ந்து உன்னை மறவாதவனாக இருப்பேன்; வினைகளின் காரணமாக பிறவி கொண்டாலும் உனை மறவேன்; நீ என்னைக் காணாவிட்டாலும், உன்னை (மனக்கண்ணாலாவது) கண்ணாரக் காண்பேன்; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் செய்யாவிடினும், நான் என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன். (இவ்வாறானது எனது அன்பு என்றவாறு)

விளக்க உரை

  • நம்பி – ஆணில் சிறந்தோன், குலமகன், பூரணன், கடவுள்; இறைவன், ஒரு செல்லப் பெயர், நம்பியாண்டார்நம்பி, நாற்கவிராசநம்பி, நம்பியான்
  • பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 16 (2019)

பாடல்

காலன் றனையுதைத்தான் காமன் றனையெரித்தான்
பாலன் பசிக்கிரங்கி பாற்கடலை-ஞாலமெச்சப்
பின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க்
கென்னே நடக்கை யினி               

தாயுமானவர்

கருத்துசிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

இறப்பை உண்டு பண்ணுபவன் ஆகிய மறலி எனும் எமனை காலால் உதைத்தான்;  பிறவிக்குக் காரணமான அவாவை உண்டு பண்ணுபவன் ஆன மன்மதனை எரித்தான்; குழந்தை ஆகிய ஞானசம்பந்தர் பசித்து அழுதபோது அவர் பசிக்காக இரங்கி அவருக்கு பாற்கடலை தந்து, அவர் இந்த ஞாலத்தில் புகழ்பெறுமாறு செய்து, ஞான சம்பந்தரின் பின்னே உலகத்தவரை நடக்கச் செய்தான். பெரியதான அருளைத் தரத் தக்கவனான அவனை நாடாதவர்க்கு இனி செல்லும் வகை எது?

விளக்க உரை

  • மறலியையும், எமனையும்  இறைவர் உதைத்தும் எரித்தும் தண்டித்தனால் சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது
  • நடக்கை – ஒழுக்கம், செல்கை, வழக்கு
  • பாற்கடல் ஈந்தது காழிப் பதி திருத்தலத்தில்
  • ஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் – வெய்யிலின் தாக்கம் ஞானசம்பந்தரைத் தாக்காமல் இருக்க  சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அமைத்து நந்தியை விலகச் செய்து அவர் சார்ந்தவர்களையும் அழைத்து வரச் செய்தச் செய்த தலம் பட்டீஸ்வரம். (இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு வினைகள் பற்றாது என்பது ஞானசம்பந்தர் தேவாரம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 15 (2019)

பாடல்

ஏன்றான் மயக்கத் திருவினையும்
      மிடியும் வகையும் போதாதோ
   ஏழை தனையே பகைப்பவர்கள்
      இருமாநிலத்திற் சலுகையுண்டாய்

நான்றான் பெரியன் என்றுரைத்த
      நாவும் வாயும் அடைத்தெமனார்
   நகரிற் பயண மாகிவர
      நடத்தாய் கருணைச் சுடர்விளக்கே

தான்றான்செய்த வினைமுழுதும்
      தனக்கேயன்றி மனக்கவலை
   தன்னாற்போமோ என்மனத்துத்
      தளர்ந்து புழுங்கும் என்செய்கேன்

வான்றான் பரவுந் திரிபுரையே
      மெளனாதீத மலர்க்கொடியே
   மயிலாபுரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துதன் வினைகளை தானே அனுபவித்து தீர்க்க உன் அருள் வேண்டும் என விளம்பும் பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! வானளாவிய பெருமையுடைய திரிபுரையே! மௌனமான மோன நிலை கடந்த இடத்தில் முளைத்த மலர்க் கொடியே! அறியாமையினால் வேறுபாடுகளைத் தந்து அதன்பொருட்டு வருகின்ற வினையும், அதனைத் தொடர்ந்து வரும் வறுமையும் துன்பமும் போதாதா? உன் அருள் கிட்டாமையினால் ஏழையாக இருக்கும் என்னை பகைப்பவர்களாக  கருதும் தேவர்களும், அசுரர்களும் கொண்ட மாறுபாடு விலக்கி எனக்கு ஆதரவு அளித்தாய்; தன் கருணையினால் சுடர் விளக்குப் போல் பிரகாசிப்பவளே! நான் தான் பெரியவன் என்று உரைத்த நாவும் வாயும் அடைக்கச் செய்து எமனின் உலகமான எமலோகத்திற்கு பயணமாகி வரும்படி நடத்தி வைத்தாய்; தன்னால் செய்யப்பட்ட வினை முழுதும் தான் அனுபவித்தல் அல்லாமலும் அதனால் தொடர்ச்சியாக உண்டாகின்ற மனக்கவலையும் தானாக செல்லாது என்பது பற்றி என் மனம் மிகவும் வாடுகிறது.

விளக்க உரை

    • ஏல் + த் + ஆன் – > ஏல் – ஏற்பாடு, எதிர்த்தல் செய், ஒப்புக்கொள், இர, அன்புகொள், சுமத்தல் செய், தக்கதாயிரு, வேறுபடு, துயிலெழு, நிகழ்தல் செய்
    • புழுங்குதல் – ஆவியெழவேகுதல், சிறுக வேகுதல், வெப்பத்தாற் புழுக்கமாதல், கோபத்தால் வெம்புதல், வேர்த்தல், பொறாமைப்படுதல், வாடுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 14 (2019)

பாடல்

மாடும் தண்தாமம் அணிந்திடும் மைந்தரும் மாதர்களும்
வீடும் தண் தாமம் என மகிழாமல் உன் மென்மலர்த்தாள்
பாடும் தண்டாத்தமிழ் ஈந்தருள் பூத பிசாசுகளைச்
சாடும் தண்டாயுதனே காழியாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துதிருவடிகளைப் பற்றி பாடும் படியான இனிய தமிழினை ஈந்து அருள வேண்டுதல் பற்றிய பாடல்.

பதவுரை

இறந்தவர்களின் பேயுருவம் கொண்டு திரியும் பூதம், தீமை தரத் தக்கதான  பிசாசங்கள் ஆகியவைகளை  தண்டாயுதத்தால் அடித்தும், துன்புறுத்தியும் செய்பவனாய் காழிப் பதியில் உறைந்து இருப்பவனான ஆபதுத்தாரணனே! செல்வமும், புகழ்ச்சியைத் தரும் மைந்தரும், பெண்டுகளும், தனது இருப்பிடமும், நிலையாக  தனக்கு உரித்தானவை என மகிழ்ந்து இருக்காமல் உன்னுடைய மெல்லியதான மலர் போன்ற திருவடிகளைப் பற்றி பாடும் படியான சிக்கல் இல்லாத இனிய தமிழினை ஈந்து அருள வேண்டும்.

விளக்க உரை

  • முதலடியில் வரும் தண்தாமம் என்பது புகழ்ச்சி எனும் பொருளிலும், இரண்டாம் அடியில் வரும் தண் தாமம் என்பது நிலையானது பொருளிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சாடுதல் – அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், அசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்
  • தாமம் – பூமாலை; கயிறு; வடம்; பரமபதம்; நகரம்; ஊர்; மலை; இடம்; உடல்; ஒழுங்கு; பூ; கொன்றைமரம்; சந்தனம்; ஒளி; போர்க்களம்; யானை; புகழ்; பிறப்பு; பதினெட்டுக்கோவையுள்ளமாதர்இடையணி; முடியுறுப்புஐந்தனுள்ஒன்று
  • தண்டா – தொந்தரை, சண்டை, சிக்கல், கதவையடைத்து இடும் இரும்புத் தடி, தண்டால்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 13 (2019)

பாடல்

தண்டாமல் ஈவது தாளாண்மை தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை – அடுத்தடுத்துப்
பின்சென்றான் ஈவது காற்கூலி பின்சென்றும்
ஈயானெச் சம்போல் அறு

தனிப்பாடல்கள் – ஔவையார்

கருத்துபல வகைத் தானங்களும், அவற்றின் பலன்களும் பற்றியப் பாடல்.

பதவுரை

பிறர் கேட்கமால் அவர் நிலை அறிந்து தானம் கொடுப்பது பெருமை உடையது; அவர்களின் நிலையைக் கேட்டு அறிந்து அவர்களுக்கு தானம் கொடுப்பது குறைந்த பெருமை உடையது; பலமுறைக் கேட்டு பின் தானம் கொடுப்பது தர்மத்தின் கால்பகுதி, கேட்டும் கொடுக்காதவர், கழிவு இல்லாத பழைய வினை போன்றவர் என்று அவர் உறவை அறுத்து விடுக.

விளக்க உரை

  • ஈதல் – தானம் கொடுத்தல்.
  • எச்சம் – மீதம், எஞ்சி இருப்பது, வாரிசு, பறவைகளின் கழிவு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 12 (2019)

பாடல்

அருவமும் உருவம் ஆகி
     அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
     பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்
     கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்தாங்கு
     உதித்தனன் உலகம் உய்ய

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துஅருவம், உருவம், அருவுருவம் ஆகிய வடிவம் கொண்ட சிவபெருமானே முருகனாக அவதாரம் செய்ததை கூறும் பாடல்.

பதவுரை

நிட்களம், நிட்களத் திருமேனி என்று அறியப்படுவதும் விந்து, நாதம், சக்தி, சிவம் எனும் நான்கினைக் குறிப்பதானதும், உறுப்புகள் எதுவும் இல்லாத அருவ வடிவம் கொண்டும், சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படுவதும், பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதானதும், தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் ஆனதுமான உருவ வடிவம் கொண்டும், சதாசிவ வடிவமாக இருப்பதும், காலங்களால் அறிய முடியாததான அநாதியாய் அருவுருவ வடிவம் கொண்டும், பல பொருளாகவும், ஏகத்தினை உரைக்கும் ஒரு பொருளாகவும், பிரம்ம வடிவம் கொண்டும் நிற்கும் சோதியினை ஒத்த வடிவம் கொண்டு, கருணையை பொழிவதான அறுமுகங்களுடனும், திருக்கரங்கள் பன்னிரண்டுடனும் போற்றத் தக்கதாகிய முருகன் இந்த உலகம் உய்ய வந்து உதித்தான்.

விளக்க உரை

  • உதித்தல் – உதயமாதல், தோன்றுதல், பிறத்தல், பருத்தல்
  • ‘இல்லாதவை தோன்றாது; இருப்பவை உருமாறி தோன்றும்’ எனும் சைவ சித்தாந்தக் கருத்துப்படியும், பெம்மான் முருகன் பிறவான் இறவான் எனும் அருணகிரி நாதரின்  கருத்துப்படியும் ஒப்புமை கொண்டு சிவனே முருகனாக தோன்றினான் எனும் பொருள் அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 11 (2019)

பாடல்

அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்

பதினொன்றாம் திருமுறை –  மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – காரைக்கால் அம்மையார்

கருத்துவாயினால் வாழ்த்தினால் வாழ்வு உண்டாகாது  ஆகையால், நெஞ்சத்தினால் அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாய் என்பது பற்றி  உரைக்கும் பாடல்.

பதவுரை

நெஞ்சமே! அப்பம், மா, அவல், எள் உருண்டை இவற்றுடன் கரும்பில் இருந்து மிகுந்து  ஒழுகுகின்ற மிகுகின்ற சுவை கூடியதான கருப்பஞ்சாறு இவைகளை உள்ளத்தில் விரும்பி, அதில் அழுந்தி நுகர்வானுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொண்டு அவன் திருவடிகளில் அமர்ந்து கொள்வாய்.

விளக்க உரை

  • அமர்தல் – விரும்புதல்
  • இடி – மா.
  • கன்னல் – கரும்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 10 (2019)

பாடல்

 

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துநந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பு உடையவராக ஆகியது பற்றிய பாடல்.

பதவுரை

தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் (சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர்) தலைமைப்பாடுடையவனும் திருவருள் செய்பவனும் பவழம் போன்ற குன்றனைய குளிர்சடையோன் ஆகிய சிவனாவன்,பெரியதான எண் திசையிலும் மேகங்கள் கடல்நீரை முகந்து பெய்யினும் அதற்குக் காரணம் முன்பு நீங்கள் செய்திட்ட நியமங்களை  நன்றாக ஆற்றியதே ஆகும்.  ஆதலால் மேலும் தொடர்ந்து அதனை நன்றாகப் புரியுங்கள் என்று அருளினான்.

விளக்க உரை

  • அஃதாவது உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருளினான்.
  • நல்ல முறையில் உழைத்து ஈட்டப்பெற்ற நல் ஊதியம் மற்றும் பொருளானது அறத்தையும் இன்பத்தையும் தரும். அவ்வாறு பெறப்பட்ட அறமும் இன்பமும் தொடர்ந்து நிகழ்வதற்கு நடைமுறையில் அப்பொருளை மேன்மேலும் ஈட்டுதல் பற்றியே ஈசனின் அருளியது.
  • நாலவர் மரபில் சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலை பெற்றுள்ளது.
  • ஆசிரியர் மரபுவகை பலவற்றையும் கூறிய திருமூலர் அவற்றுள் ஒன்றின் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்துதல் பொருட்டுச்  தம் வரலாற்றையே கூறுகின்றார்.
  • சனத்குமாரரே மாணிக்கவாசகராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும், அவரே மெய்கண்டாராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும் இருக்கும் விஷயங்களில் இருக்கும் மெய் அறிந்து உணர்க.
  • எழுந்து – முகில்கள் கடல்நீரையுண்டு விண்ணில் எழுந்து.
  • தண் – அமைதி.
  • அழுந்திய – திருவடி அன்பில் உறுதியாய உள்ள நால்வர் (  நன்னெறியாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நிலை நான்கினையும் கைக்கொண்டோர் எனவும் கொள்ளலாம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 9 (2019)

பாடல்

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று தேடினே னாடிக் கண்டேன்
உள்குவா ருள்கிற் றெல்லா முடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துவினை முழுவதும் நீங்காமல் ஈசனை அடைதல் இல்லை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

வஞ்சனை உடைய யான், வஞ்சனையின் காரணமாக போலித் தொண்டனாய் இருந்து, பல ஆண்டுகளாய் காலத்தைப்  வீணாக்கி, பின் மனத்தினில் தெளிவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன்; உள்ளத்தில் உன்னை நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவர்களுடைய உள்ளத்தில் இருந்து கொண்டு, நீ அறிகின்றாய் என்பதை அறிந்த நான் மனம் குலைந்து, வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன்.

விளக்க உரை

  • தெள்ளுதல் – தெளிவாதல், ஆராய்தல், படைத்தல், கொழித்தல், அலைகொழித்தல், தெளிவித்தல், அனுபவமுதிர்தல்
  • உள்குதல் – உள்ளுதல், நினைத்தல், உள்ளழிதல், மடிதல்
  • வெள்குதல் – வெட்குதல், அஞ்சுதல், கூச்சப்படுதல், மனங்குலைதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 8 (2019)

பாடல்

மூலத் துதிக்கும் ஞாயிறுமாய்
      முளரி யிதழ்வாய்ச் சதுர்முகனாய்
   மூல வுந்தித் திருமாலாய்
      மூளுங் கால காலனுமாய்

மேலுற்றருளுஞ் சதாசிவனும்
      விரியும் இதழொன்றருள்பரையும்
   வித்தாரமுமாய் உலகனைத்தும்
      விரிவாய் நின்ற விரிசுடரே

ஞாலத் தமைந்த இருபதமும்
      நடனச் சிலம்பும் கிண்கிணியும்
   நணுகிப் பெருகும் இந்துநதி
      ஞான நதியாம் பரமந்தி

மாலற் றவர்க்கும் உதவிநிற்கும்
      மதுர வசனி நவசரணி
   மயிலா புரியில் வளர்சன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துஅம்மையின் வடிவங்களையும், அவள் சிறப்புகளையும் கூறும் பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! அண்டத்தின் தொடக்கத்தில் தோன்றும் சூரியனுமாகவும், தாமரை இதழ்களில் தோன்றிய நான்கு முகம் கொண்ட பிரம்மாவாகவும், அதனை தாங்கி நிற்கும் கொப்பூழ் கொண்ட திருமாலாகவும், காலம் அறிந்தும், சினம் கொண்டும் உயிர்களை கவரும் கால காலனுமாகவும், ஐந்து கர்த்தாக்களுள் முதலாய் இருந்து உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தமாகவும், உருவாய் விளங்குதற்குமுன் உயிர்களின்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தமும் ஆன சதாசிவமாகவும், சிவத்திடம் கூடியதான பராபரையாகவும், பரந்து விரிந்து உலகம் அனைத்திலும் விரிந்து விரிவாக நின்ற விரிந்த சுடராகவும், ஞால வடிவமாகியதும், அதைத் தருவதும் ஆன இரு பாதங்களும், நடனத்தில் ஒலிக்கும் சிலம்பும், கிங்கிணி ஓசைகளும் கொண்டு, கங்கையுடன் ஒன்றிக் கலக்கும் சிந்துநதி, ஞான நதியான பிரம்ம புத்ரா ஆகியவையும் ஆகி, முக்குணங்கள் நீங்கி மாசற்றவர்களாக இருப்பவர்களுக்கு உதவி செய்து நிற்பவளும், இனிய மொழிகளை பேசுபவளும், ஒன்பது வகையான தேவதைகளாலும் வணங்கப்படுபவளும் ஆகி நிற்கிறாய்.

விளக்க உரை

  • நணுகுதல் – கிட்டுதல், சார்தல், ஒன்றிக் கலத்தல், அணுகுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 7 (2019)

பாடல்

அடைத்திடவே சிலம்பொலியுங் கேட்டேன் யானும்
     ஐயையா காதிரண்டும் அடைத்துப் போச்சு
படைத்திடவே ரோசமென்ற வெக்கம் போச்சு
     பரிவான மயில் மீதில் பாய்ந்து சென்றேன்
வடைத்திடவே வாசியின் மேற் சொக்கிக் கொண்டேன்
     வயிரமங்கே யிருக்கின்ற வகையுங் கண்டேன்
முடைத்திடவே மும்மூலங் கொண்டதாலே
     முருகனென்று யெந்தனுக்குப் பேரு மாச்சே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துமுருகன் என பெயர் பெற்றதை தன்நிலை விளக்கமாக அருளும் பாடல்.

பதவுரை

அப்பொழுது யானும் சிலம்பொலியினைக் கேட்டேன்; அதன் காரணத்தால் காது இரண்டும் அடைத்துப் போனது;  ரோசம், வெட்கம் ஆகியவை விட்டகன்றது; இரக்கம் தருவதான மயில் மீது ஏறி பறந்து சென்றேன்; வாசி வழி பற்றி நின்றதால் மனம் மயங்கி நின்றது. வைரம் போன்ற தன்மை உடைய மெய்ப்பொருளின் வகையினைக் கண்டேன்; மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார் என்பதாலும். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்து, மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை  விளங்கிக் கொண்டவர் என்பதாலும், கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை என்பதாலும் எனக்கு முருகன் என்று பெயர் ஆனது.

விளக்க உரை

  • பல விளக்கங்கள் குரு மூலமாக அறியக்கூடியவை. உ.ம் சிலம்பொலி. ‘சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை‘ எனும் பாடல் வரிகொண்டும், வள்ளலார் பாடல்கள் மூலமும், தச தீட்சை மூலமாகவும் பல விளக்கங்கள் அளிக்க இயலும். குருவருள் பெற்று குரு மூலமாக பொருள் அறிக.
  • சொக்குதல்-மயங்குதல், மனம் பிறர்வசமாதல், பிறரை மயங்குமாறு ஒழுகுதல்

(இப் பாடலுக்கான விளக்கத்தின் ஒரு பகுதி சித்தர்களுக்கு தலைவரான அகத்திய மாமுனியால் அருளப் பெற்றது. அவரின் பாடல்களைக் கொண்டு அவர் குருவான முருகனைப் பற்றி விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)

மதனா அண்ணா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 6 (2019)

பாடல்

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசத்தியைப் பெறுதற்குரிய வழியினைக் கூறும் பாடல்.

பதவுரை

நீண்டதொரு காலப்பகுதி ஆகிய ஊழிகளையும், அதனைப் போல பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படுவதும், முற்றுணர்வு எனப்படுவதும் ஆன பூரணம் ஆகும். இவ்வாறான சக்தியை சிவனுடன் இணைத்து உணராமல்  சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோர் சிவனையும் உணராதவரே; தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனை யோகமுறையில் மூச்சடக்குதலே ஆகும்.

விளக்க உரை

  • ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
  • கும்பித்தல் – யோகமுறையில் மூச்சடக்குதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 5 (2019)

பாடல்

கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் றன்னைப்
பாலனென் றிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்திலேன் யான்
மாலயன் றனக்கும்ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற மூர்த்தியிம் மூர்த்தி யன்றோ?

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசூரபன்மன் பரமேஸ்வரனும்  முருகப்பெருமானும் ஒன்றே என உணர்ந்ததை கூறும் பாடல்.

பதவுரை

அழகிய மயிலின் மீது அமர்ந்த குமரன் ஆகிய முருகப் பெருமானை சாதாரண சிறுவன் என்று எண்ணி இருந்தேன். முந்தைய காலத்து பரமேஸ்வரன் என்று உணரவில்லை. விஷ்ணு, பிரம்மாவிற்கும் ஏனைய வானத்தில் உறையும் தேவர்களுக்கும் மூல காரணமாக இருக்கும் பரமேஸ்வரனும் இவனும் ஒன்றன்றோ?

விளக்க உரை

  • மஞ்ஞை – மயில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 4 (2019)

பாடல்

ஒடுங்கிடா கரணம் தாமே ஒடுங்குமா றுணர்ந் தொடுக்க
ஒடுங்கிடும் என்னில் நின்ற தொடுங்கிடா கரண மெல்லாம்
ஒடுங்கிட ஒடுங்க உள்ள உணர்வுதா னொழியும் வேறாய்
ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொ ணாதே

திருநெறி 7 – உமாபதி சிவம்

கருத்துமனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் கொண்ட அந்தக்கரணங்கள் மற்றும் அது சார்ந்த துணைக்கருவிகள் விலக்கி அவைகளை அந்நியமாக்குதலே சிவம் அறியும் வழி என அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

அந்தக்கரணத்தின் பகுதி ஆகிய மனம் என்றுமே தானே ஒடுங்காது; கரணங்கள் ஒடுங்கும் வழியை அறிந்து ஒடுக்க அவை ஒடுங்கும் எனில் அதற்கு துணைபுரிவதும், ஆன்ம தத்துவத்தின் குழுக்களில் இடம்பெற்றதும் ஸ்தூல உடல், அதுசார்ந்த பொறிகள்,  பஞ்சபூதங்கள், ஐம்பொறிகள்,  ஒன்பது கருவிகள் ஆகிய துணைக்கருவிகளும் ஒடுக்குதல் இல்லை; தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கத் தக்கதாக ஒடுங்கினபொழுதே ஆன்மபோதம் ஒடுங்குமென்னில் அப்பொழுது உள்ள பழைய சிற்றறிவு நீங்கி முழுமையான முக்கால அறிவே முத்தியென்கிற நிலையை கொடுத்து விடும். அவ்வாறு இல்லாமல்  அந்தச் சிவத்தை அறிந்து அநுபவிக்கும் வழி எவ்வாறு என்னில்  கரணங்கள் அந்நியமாய் விடும்படி, தரிசனமான ஞானத்தோடும் கூடி நின்று ஒழிவது அல்லாமல் அந்தச் சிவத்தை அறிந்து அதன் உண்மையை அநுபவிக்க இயலாது.

விளக்க உரை

  • கரணம் – கைத்தொழில்; இந்திரியம்; அந்தக்கரணம்; மனம்; உடம்பு; மணச்சடங்கு; கல்வி; கூத்தின்விகற்பம்; தலைகீழாகப்பாய்கை; கருவி; துணைக்கருவி; காரணம்; எண்; பஞ்சாங்கஉறுப்புகளுள்ஒன்று; சாசனம்; கணக்கன்; கருமாதிச்சடங்குக்குரியபண்டங்கள்.
  • கேவலஞானம் – முக்கால் அறிவு

Loading

சமூக ஊடகங்கள்

error: Content is protected !!