அமுதமொழி – விசுவாவசு – புரட்டாசி – 8 (2025)


பாடல்

கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்றே என் உள்ளமும் நானும் கிடந்து அலந்தெய்த்து ஒழிந்தேன்
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா, திரு ஆரூரா
ஒரு பற்றிலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – எனக்கு உன்னையன்றி வேறு ஒரு பற்றும் இல்லாமையையும் அறிந்து எனக்கு இரங்கி அருள் புரிவாயாக என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

திருவொற்றியூரிலும், திருஆலவாயிலும், திருவாரூரிலும், திருக்கச்சியேகம்பத்திலும் ஒரே நேரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே! கர்ப்பத்திலே சென்று பொருந்திய நாள் முதலாக உன்னுடைய திருவடிகளையே காண என்னுடைய மனம் உருகுகின்றது. நானும் பல்வேறு பிறவிக்கடலில் கிடந்து உழன்று சலித்து விட்டேன். அவ்வாறு நான் துன்புற்றதையும், எனக்கு உன்னையன்றி வேறு ஒரு பற்றும் இல்லாமையையும் அறிந்து எனக்கு இரங்கி அருள் புரிவாயாக.

 விளக்கஉரை

  • ‘தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக’ எனும் விளக்கங்கள் சில இடங்களில் காணப்படுகின்றது. முதன் முதலில் கருவினை அடைந்த காலம் என்பதே பொருத்தமாக இருக்கும்.
  • கிடந்து அலைந்து அலந்தெய்த்து ஒழிந்தேன் ‍- உன்னை நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என்பது வெளிப்படை.

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #தேவாரம் #நான்காம்_திருமுறை #திருநாவுக்கரசர் #திருவொற்றியூர் #திருஆலவாய் #திருவாரூர் #திருக்கச்சியேகம்பம் #திருவடி #சைவத்திருத்தலங்கள் #திருமுறை #பாடல்_பெற்றத்_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விசுவாவசு – ஆவணி– 14 (2025)


பாடல்

முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

ஆறாம்_திருமுறை –  தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – எம்பெருமானின் வடிவங்களையும் குணத்தையும் உரைத்து அவனைப் பற்றி பேசதா நாள் எல்லாம் வீண் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

பால் போன்ற வெள்ளை நிறமுடைய‌ பிறைமதியைச் சூடியவனாகவும், மூன்று உலகினுக்கும் எவர் தூண்டுதலும் இல்லாமல் தானே தலைவனாகவும் இருக்கும் முதல்வனாகவும், செருக்கு கொண்ட பகைவருடைய மும்மதிலையும் அழித்தவனாகவும், விளங்கக்கூடிய‌ ஒளி வடிவமாக இருப்பவனாகவும், அன்னையினை இடப்பாகம் கொண்டதால் மரகத மணி போன்ற நிறமுடையவனாகவும், தேனும் பாலும் துய்க்கப் பெறும் போது தரும் இன்பம் போன்றவனாகவும், குற்றாலம் என்ற திருத்தலத்தில் விரும்பி அருளும் இளையவனாகவும்,  கூத்தாடுதலில் வல்லவனாகவும், யாவருக்கும் தலைவனாகவும், சிவஞானியர் ஞானத்தால் அறியப்படுபவனாகவும் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

விளக்கஉரை

  • பிரகிருதி மாயா உலகம்: மண் முதல் மூலப்பிரகிருதிவரை உள்ள 24 தத்துவங்கள்; 2 அசுத்த மாயா உலகம்: காலம் முதல் மாயை வரை உள்ள 7 தத்துவங்கள்; 3 சுத்த மாயா உலகம்: சுத்தவித்தை, மாகேசுரம், சாதாக்கியம், பிந்து, நாதம் எனும் 5 தத்துவங்கள் – 36 தத்துவங்களை கடந்து தலைவனாகவும் இருப்பவன் ‍ (சைவ சித்தாந்த கருத்துப்படி)
  • செற்றார்கள் – பகைத்தவர்கள்
  • செற்றான் – அழித்தான்
  • மரகதம் – மரகதம்போல்பவன்
  • குற்றாலம் – பாண்டி நாட்டுத் தலங்களுள் ஒன்று
  • கூத்தாட வல்லானை  –  எல்லா வகை ஆடலும் அறிந்தவன் (காளியொடு ஆடியதை கருத்தில் கொள்க)

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை  #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருஆலவாய் #மதுரை #பாண்டியநாடு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விசுவாவசு – ஆவணி– 31 (2025)


பாடல்

தன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன்
சாமர்த்தியம் உளபுரு டன் ஆம்
சந்ததம் பதின் மரைக் காப்பாற்று வோன்மிக்க
தரணிபுகழ் தருதே வன்ஆம்.
பொன்மட்டி லாமலீந்(து) ஒருநூறு பேரைப்
புரப்பவன் பொருவி லிந்த்ரன்
புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று
புண்யவா னேபிர மன்ஆம்
நன்மைதரு பதினா யிரம்பேர் தமைக்காத்து
ரட்சிப்ப வன்செங் கண்மால்
நாளுமிவன் மேலதிகம் ஆகவெகு பேர்க்குதவு
நரனே மகாதே வன்ஆம்.
அன்மட்டு வார்குழலி பாகனே! ஏகனே!
அண்ணல்எம(து) அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அறப்பளீசுர சதகம் – அம்பலவாணக் கவிராயர்

கருத்து – பொருட்களை அளிப்பவர்களின் உயர்ச்சியினை உரைக்கும் பாடல்.

பதவுரை

இருள் போன்ற கருமையா நிறம் உடையதும், மணமிக்கதும், நீண்ட கூந்தலைம் உடைய உமையம்மையாரை இடப்பாகத்தில் உடையவனே, தனி முதல்வனே, தலைமையிற் சிறந்தவனே, எமது தேவனே! பிறரிடம் இருந்து எதையும் பெறாமல் தன்மடடில் சீவனம் செய்பவன் சாமர்த்தியம் உடைய‌ புருடன் ஆவான்; பிறரை நாடாமல் தன்வரையில் வாழ்க்கை நடத்துவோன் திறமை உடைய ஆடவன் ஆவான்; எப்பொழுதும் பதின்மர் எனப்படும் பத்து பேரை காப்பாற்றுவோன் பெருமை உடைய தரணியில் தேவன் என்றும் அமரன் என்றும் அழைக்கபடுவான்;  அளவின்றிப் பொருளைக் கொடுத்து நூறுபேரைக் காப்பாற்றுவோன் ஒப்பற்ற இந்திரன் ஆவான்; உலகில் ஆயிரம் பேர் வரை ஆதரிக்கும் அறத்தின் வழியில் நிற்கும் தலைவனே நான்முகன் ஆவான்; நன்னெறி வழியில் செல்லும் பதினாயிரம் பேரைக் காப்பாற்றி அருளுவோன் செந்தாமரைக் கண்ணானான திருமால் ஆவான். எல்லா நாட்களிலும் அவனைவிட மிகுதியாக அளவற்றவற்கு கொடுக்கும் மனிதனே மகாதேவன் ஆவான்.

விளக்கஉரை

  • சீவன் ‍ உயிர்
  • சீவனம்-வாழ்க்கை
  • சந்ததம்-எப்போதும். புரப்பவன்- காப்பவன்
  • தரணி-பூமி
  • இந்திரன், மூவுலகுக்குந் தலைவன்.

 

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #அறப்பளீசுர_சதகம் #அம்பலவாணக்_கவிராயர் #கொல்லிமலை

 



Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விசுவாவசு – ஆடி– 22 (2025)


பாடல்

தானென்ற வாலையிவள் ரூபங் காணச்
சமர்த்துண்டோ ஆண்பிள்ளை தானு முண்டோ?
பானென்ற வாமத்துக் குள்ளே யப்பா
பராபரையாள் பலகோடி விதமு மாடிக்
தேனென்ற மொழிச்சியிவள் சித்தர்க் கெல்லாஞ்
சிறுபிள்ளை பத்துவய துள்ள தேவி;
ஊனென்ற வுடலுக்குள் நடுவு மாகி
உத்தமியாள் வீற்றிருந்த வுண்மை தானே

கருவூரார் – பூஜாவிதி

கருத்து – வாலையின் பெருமைகளைக் கூறும் பாடல்.

பதவுரை

தன்னில் தானாகவே பூரணம் பெற்றவளாகிய வாலையின் ரூபத்தை காண எவருக்கேனும் திறமை இருக்கின்றதா? தன்னை ஆணென்று கர்வத்தினால் உரைப்பவர்களும் அறிவார்களோ? பால் போன்ற வெண்மை நிறம் கொண்டவளும்  இடது பாகம் இருப்பவளும் ஆகிய பராபரையானவள் நினைத்த மாத்திரத்தில் பல கோடி வடிவம் எடுக்கக் கூடியவள்; தேன் போன்ற இனிய மொழியினை உடையவள்; சித்தர் பெருமக்களால் வணங்கப் பெறும் பத்து வயது கொண்ட சிறு பெண் பிள்ளை போன்றவள்; உத்தமியான அவள் இந்த உடலில் நடு நாயகமாக வீற்றிருப்பது என்பதே உண்மை.

விளக்கஉரை

  • தானென்ற – தானாகவே / தன்னால்
  • பானென்ற – பால் போன்ற

#அந்தக்கரணம் #கருவூரார் #சித்தர்_பாடல்கள் #வாலை #பராபரை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விசுவாவசு – ஆடி – 21 (2025)


பாடல்

சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள் மேலாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
பாசமற வீசும் படியோம் நாமே

தேவாரம் ‍- ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துசிவனின் திருமேனி வடிவங்களை உரைத்து அவரை அன்றி எவரிடத்தும் அடிமை தொழில் செய்ய மாட்டோம் என உறுதிபடக் கூறும் பாடல்.

பதவுரை

நீண்ட சடையினை உடையவனும், ஒருகாதில் விளங்கும் சங்கினை காதணியாக அணிந்து இருப்பவனும்திரு நீற்றுச்சாம்பல் பூசிய மேனியில் பாம்பை அணிந்தவனும், விடை எனும் காளையினை வாகனமாக உடையவனும்புலித்தோலினை மேலாடையாக அணிந்தவனும், வெள்ளி போல் திகழும் புள்ளிகளையுடைய உழைமானின் தோலால் அமைந்த ஆடையினை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானே நம்மை அடிமையாக உடையான் ஆவான். அதனால் பாசத்தை முழுதும் உதறி எறியும் நிலையினை கொண்டவர்கள் ஆனோம். ஆகவே உம்மையும் மற்றுமுள்ள படை வீரர்களை உடைய அரசனின் ஆணையினை கேட்கும் தொழில் உடையவர்களாக ஆகமாட்டோம்.

விளக்கஉரை 

  • விடை – இடபம்
  • வேங்கை அதள் – புலித்தோல்
  • உழை – மான்களுக்குள் ஓர் இனம்
  • படை – படைவீரர் முதலிய ஏவலாளர் அனைவரையும்
  • படியோம் – நிலையினை உடையோம்

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை  #தேவாரம் #திருநாவுக்கரசர் #06.98

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விசுவாவசு – ஆனி – 8 (2025)


பாடல்

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே

தேவாரம் ‍- ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – எம்பெருமானுக்கும், எம் பெருமானின் அடியவர்களுக்கும் கட்டுப்பட்டவர் அன்றி புவியினில் வாழும் அரசர்களுக்கும் மனிதர்களுக்கும் இல்லை என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

‘அயன், அரி, அரன்’  என்னும் மூன்று உருவிற்கும் முதல் உருவாயவனே ! அட்டமூர்த்தியே ! 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகிய முப்பத்து மூவர் தேவர்களாலும், அவர்களின் மிக்க முனிவர்களாலும் எக்காலத்தும் மகிழ்ச்சி மிக்கு வாழ்த்தும் ‘செம்பவளம் போன்ற சிவந்த‌த் திருமேனியுடைய சிவனே’ என்று போற்றும் நாவுடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையாராவார் . அதனால் அழித்தல் ஆகிய‌ செயலை விலக்கியும் களவும் அற்றவர்களாக இருக்கின்ற யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாலும் அவர் ஆணை வழி நிற்கும் கடப்பாட்டிற்கு உரியவர் ஆனவர் இல்லை.

விளக்கஉரை

  • கடிதல் – விலக்குதல், ஓட்டுதல், அழித்தல், கண்டித்தல், அரிதல், அடக்குதல்
  • ‘மூவுருவின் முதல் உரு’ – ‘மூவுருவினுள் முதலாய உரு’ என்றும் ‘மூவுருவிற்கும் முதலாய உரு’ என இருவகையாகவும் பொருள் கொள்ளலாம்.
  • இருநான்கான மூர்த்தி – எட்டுருவாய இறைவன் (எட்டு திசைகளிலும் இருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்)

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை  #தேவாரம் #திருநாவுக்கரசர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விசுவாவசு – சித்திரை– 25 (2025)


பாடல்

தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந்
தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந்
தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந்
தானொன்றி லேயொன்று மவ்வரன் தானே

திருமந்திரம் – திருமூலர் (திருவம்பலச் சக்கரம்)

கருத்து : சிவனின் போற்றுதலுக்கு உரிய திருப்பெயரின் பெருமைகளை உரைக்கும் பாடல்

பதவுரை

இருபத்தைந்து அறைகளிலும் நடுவாகத் தோன்றும் எழுத்தாகவும், சிறப்பென்னும் செம்பொருளாகியும் நிற்கும் சிவனுக்கு உரிய எழுத்து ‘சி’காரமாகும். மற்றைய ‘வ, ய, ந, ம’ என்னும் நான்கெழுத்துக்களும் சேர்ந்து சிவனின் போற்றுதலுக்கு உரிய புகழ்சேர்க்கும் திருப்பெயராகும். நான்கு பெருந்திசைகளிலும் சிவம் பொருந்தி உள்ள நாற்கோணம் திருவைந்தெழுத்தாகும். எங்கும் இருக்கும் பரசிவம் ஒரு மனையிலே ஒன்றி இருக்கும். இந்த நான்கு எழுத்திலும் சிகரம் எப்பொழுதும் உடனாய் நிற்கும்.

விளக்கஉரை

தன்னெழுத்து 

  • சி (எனும் எழுத்து)
  • நாயோட்டும் மந்திரம்

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #பத்தாம்_திருமுறை ‍ #திருமந்திரம்  #திருமூலர் #முதல்_தந்திரம் #திருவம்பலச் சக்கரம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – தை – 26 (2025)


பாடல்

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே

பத்தாம் திருமுறை ‍ – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – மயக்கம் உடையவர் எவர்கள் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

பல்வேறு வழியில் பொருள் ஈட்டி அதனால் செல்வ செறுக்கு கொண்டு ஆழ்ந்த கீழ் நிலையில் இருபவர்களும், அறியாமையானது இருள் போல் மறைக்கும் காலத்தில் மின்னல் போல் தான் பெற்ற சிறு அறிவை பெற்றவர்களும், மருட்சி உடைய அழகிய பெண்ணைக் கண்டு அவர்களின் மோகத்தில் மயங்கி இருப்பவர்களும் தாம் செய்வது இன்னது என்று அறியாமல் இருப்பார்கள். இவர்களின் மயக்கம் கொண்ட சிந்தனையை மாற்ற இயலாது.

 விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி, வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #பத்தாம்_திருமுறை ‍ #திருமந்திரம்  #திருமூலர் #முதல்_தந்திரம் #பிறன்மனை_நயவாமை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – தை – 23 (2025)


பாடல்

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே

தேவாரம் ‍ – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஊன் எடுத்து அது விலக்க வழி தேடாமல் மாயும் வீணர்களுக்கு அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

எம்பெருமான் சிவனின் திருவடிகளை தொழுதல் செய்து தங்களது கைகளால் பூக்கள் தூவி அவர் தம் பெருமையை போற்றி வழிபாடு செய்யாதவர்களும், எல்லா வகையிலும் பெருமை உடைய அவரது திரு நாமத்தை தங்களது நாவினால் சொல்லாதவர்களும், உடல் வளர்ப்பதற்காக வருந்தி உணவினைத் தேடி வீணே அலைபவர்களுமான வீணர்கள் தங்களது உடலை  காக்கைக்கு உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்யாமல் கழிக்கின்றனர். (அந்தோ பரிதாபம் ‍ மறை பொருள்)

 விளக்கஉரை

  • பொன்னடி – பொன்னைப் போலப் போற்றுதலுக்கு உரிய திருவடி
  • நாக்கைக்கொண்டு – நாவைக் கொண்டு
  • நாமம் – இறைவன் திருப்பெயர்
  • நவில்கிலார் – கூறாதவர்கள்
  • அலமந்து – வருந்தி
  • கழிவர் – அழிந்தொழிவர்

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #தேவாரம் ‍ #ஐந்தாம்_திருமுறை  #திருநாவுக்கரசர் #பொதுப்பதிகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – தை – 22 (2025)


பாடல்

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்

மூதுரை  –  ஔவையார்

கருத்து – நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவன் மறவாமல் திரும்பச் செய்வான் என்பதை உரைக்கும் பாடல்

பதவுரை

நற்குணங்கள் பொருந்திய ஒருவனுக்கு உதவி செய்தால் அவன் எப்பொழுது திரும்ப செய்வான் என எண்ண வேண்டாம். தளர்ந்துவிடாமல் நிலைபெற்று வளர்கின்ற தென்னை மரமானது தனது அடியாகிய வேர்களின் வழியே உண்ட நீரை தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தருவதைப் போல் அந்த உதவியை மறவாமல் திரும்பிச் செய்வான்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #மூதுரை #ஔவையார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – தை – 15 (2025)


பாடல்

வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
   விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
   வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
   சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
   ஒற்றி மேவிய உலகுடை யோனே

திரு அருட்பா –  இரண்டாம் திருமுறை – வள்ளலார்

கருத்து – பிறவி நீக்கம் வேண்டி திருவொற்றியூர் பெருமானிடன் விண்ணப்பம் செய்யும்  பாடல்.

பதவுரை

திருவொற்றியூரில் விரும்பி உறைந்து உலகினை தன்னுடையதாகக் கொண்டவனே, அச்சத்தினை உண்டாக்கும் மலஇருள் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை; ஆதலால் வினையை உடையனாகிய எனது உள்ளம் மயக்கம் க‌ண்டுள்ளது; அதனால் செய்வது அறியாது உள்ளேன்; உன்னை அடைவதற்கு ஒரு வழியும் இவ்விடத்தில் எனக்குத் தெரியவில்லை; தெளிவினை தரும்  நின்னுடைய அருளொளி எனக்கு கிடைத்தால் அருள் பெறுவேன்; அவ்வாறு உன்னுடை அருள் கிடைக்கா விட்டால் உருண்டோடும் சக்கரம் போன்ற பிறவிச் சூழலில் பட்டு நான் சுழல்வது உண்மை.

விளக்க உரை

  • தெருட்சி – அறிவு, தெளிவு, கன்னி ருது
  • மேவுதல் – அடைதல், விரும்புதல், நேசித்தல், ஓதுதல், உண்ணுதல், நிரவிச் சமமாக்குதல், மேலிட்டுக் கொள்ளுதல், வேய்தல், அமர்தல், பொருந்துதல்
  • வெருட்சி – மருட்சி, மருளுகை, அச்சம்

#அந்தக்கரணம்  #அமுதமொழி  #இரங்கல்_விண்ணப்பம்  #திருஅருட்பா  #இரண்டாம்_திருமுறை  #வள்ளலார் #திருவொற்றியூர் #மயக்கம்  #பிறவி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – தை – 10 (2025)


பாடல்

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – திரவியம், சிற்றறிவு, பற்றுதல் ஆகியவை பொய் என்றுகாட்டி அதை விலக்கி அருள்கூட்டுவித்த தன்மையைக் கூறும் பாடல்.

பதவுரை

பேரறிவாலும், மெய்யாலும் உயர்ந்ததும் நல்லதுமான கமலை எனும் திருவாரூர் மாநகரத்தில் வாழ்பவனும், வான் பிறை எனும் சந்திரனை அணிந்தவனுமாகிய ஞானப்பிரகாசன், வாழத் தேவைப்படும் திரவியம் எனப்படும் பொருளும், உலகியல் பற்றி நிற்கும் சிற்றறிவும், உலகம் மற்றும் அவற்றின் மீது கொண்ட பற்றுதலும் அவைகளைப் பற்றி ஒன்று சேர்வதும் பொய்யானது என்று அருள் செய்து தன்னை நாடிய அடியவர்களிடத்தில் மெய் அருளைக் கூட்டினான்.

விளக்கஉரை

  • தேடும் திரவியமும் – முன்செய்த ஜன்மங்களில் செய்தவினைக்கு ஈடாக செல்வம் ஈட்டுகிரோம் என்பதை உணராமல்தாமே செல்வத்தினை சேர்த்தோம் எனும் மயக்கநிலை.
  • சிற்றறிவு – பேரறிவினைசிந்தியாமல்நூல்பலகற்றுஅடைந்தஅறிவு
  • பற்றுதல் – சிற்றறிவு கொண்டு பெறப்பட்டதாகிய அறிவினைக் கொண்டு அதைப்பற்றிக் கொள்ளுதல்
  • திரவியம் என்பது பொய் என்பதுவும், திருவருள்ஒன்றே மெய் எனவும் பெறப்படும். திருவருள் கூடியதால் திரவியம் முதலியவற்றை பிரிவித்தான் என்பது பொருள்.
  • வானப்பிறையணிந்தமன் – தக்கனது சாபம் தன்னைத் தொடராதவாறு தன்னைப் பற்றுக்கோடாக கொண்டதால் சந்திரனை வாழ்வித்த பெருமான் என்பது ஒத்து தன்னையும் வாழ்வித்தவன் எனும்பொருள் பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 21 (2025)


பாடல்

அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே

கந்தர் அலங்காரம் -‍ அருணகிரிநாதர்

கருத்து – கணபதி தம்பியான முருகனின் தரிசனம் கண்டது

பதவுரை

திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில்  குட்டிக் கொண்டு, அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத் தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும்  ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.

விளக்கஉரை

  • அடல்-வீரம்
  • திரு-திருமகள் விலாசம்
  • தடம்-மதம் பிறக்கும் இடம்

#அந்தக்கரணம்  #அமுதமொழி  #கந்தர்_அலங்காரம் #அருணகிரிநாதர் #கௌமாரம் #வினாயகர் #அருணை #திருவண்ணாமலை #முருகன்_தரிசனம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 20 (2025)


பாடல்

எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரரைவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
   நிலைகடந்து வாடுறண்டி

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

கருத்து – உடல் தன்மைகள் குறித்தும், அதில் இறைவன் உறைவதை குறித்தும் கூறும் பாடல்.

பதவுரை

இந்த உடலானது எட்டு சாண் உயரம் கொண்டது; காற்று சென்று வர ஏதுவாக 9 (ஏழு+இரண்டு) வாயில்களைக் கொண்டது; கட்டுப்படுத்த ஐவர் (பஞ்ச பூதங்கள்)  உள்ளார்கள்; அதில் சிவசக்தி ரூபமாக இறைவன் இருக்கின்றான். இதை அறியாமல் பேசுகின்றாய் (மனமே!). இறைவனின் கட்டளைக்கு பயந்து அவர் என்ன உரைப்பாரோ என்று பயந்து நெஞ்சமே நிலை கொள்ளாமல் வாடி தவிக்கின்றேன்.

விளக்கஉரை

  • பட்டணமுந் தானிரண்டு ‍ – கற்றவர்கள் உறையும் இடம் என்பதை முன் காலங்களில் குறிக்க பட்டணம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருமை குறித்ததாலும், சித்தர்கள் அம்மை வழிபாடு கொண்டவர்கள் என்பதாலும் சிவசக்தி என்று விளக்கம் உரைக்கப்பட்டுள்ளது.

சித்தர் பாடலுக்கு உண்டான விளக்கத்தினை மானிட சரீரம் கொண்டு எழுதப்பட்டதால் விளக்கங்களில் பிழை இருக்கலாம். பிழை எனில் சரீரம் சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

#அந்தக்கரணம் #அமுதமொழி # அழுகணிச்_சித்தர்  #சித்த(ர்)த்_துளிப்பு, #சித்தர்_பாடல்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 19 (2025)


பாடல்

மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன
   மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்
“தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
   செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
   நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்;
   கடுமையொடு களவு அற்றோமே

தேவாரம் ‍ – ஆறாம் திருமுறை ‍ – திருநாவுக்கரசர்

கருத்து – பெருமானின் பெருமைகளை உரைத்து எம்பெருமானை வழிபாடு செய்வதால் யாம் யாவர்க்கும் பணிந்தவர்கள் அல்லர் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

அயன், ஹ‌ரி, ஹ‌ரன் என்னும் மூன்று உருவிற்கும் முதல் உருவாய் ஆன‌வனே! எண் குணங்கள் உடைய அட்டமூர்த்தியே” என்று முப்பத்து மூவர் கோடி தேவர்களும் அவர்களில் சிறந்தவர்களாகிய முனிகளும் எக்காலத்தும் பெரு மகிழ்வு கொண்டு வாழ்த்தும் செம்பவளத் திருமேனி உடைய சிவனே! எம்பெருமானை என்று போற்றும் நாவினை உடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையார் ஆவார்கள். அதனால் கடிதான் செயலும் களவும் அற்றவர்களாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கட்டுப்பாட்டினை கொண்டவர் அல்லோம்.

விளக்கஉரை

  • மூவுருவின் முதல் உரு – மூவுருவினுள் முதலாய உரு, மூவுருவிற்கும் முதலாய உரு என இருவகையாகவும் பொருள் கொண்டு பிரிக்க இயலும்.
  • இருநான்கான மூர்த்தி – எட்டுருவாய இறைவன் என்றும், எண் திசைகளிலும் நிறைந்தவன் என்று பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. எண் குணத்தான் என்பது எம்பெருமானுக்கும் உரித்தானது என்பதால் இப்பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • கடுமை – கடிதாய செயல், பிறரை நலிதல்

#அந்தக்கரணம்  #அமுதமொழி #சைவம் #தேவாரம் ‍ #திருமுறை #ஆறாம்_திருமுறை ‍ #திருநாவுக்கரசர் #பொது #மறுமாற்றத் திருத்தாண்டகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 18 (2025)


பாடல்

ஒருமையுடன் ஈசனருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)
ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – இறைவன் பரிபாகம் உடைய உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்தி ஆசான் மூர்த்தியாக வந்து அருளுதலும், ஏனையோருக்கு அவ்வாறு அருளாமையும் கூறும்பாடல்.

பதவுரை

வினைகள் நீங்கப்பெற்ற பிறகு அந்த மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து எனும் அருமையான உணர்வு வெளிப்படும்; அவ்வாறு அறியா உயிர்களிடத்தில் உயர்ந்தநிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் இல்லாமல் அது குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள் நீங்கம் பெறுதல் போன்றவை விலகாமல் இருக்கும் போது முதல்வன் திருவருள் கைகூடுதல் என்பது அரிதானது.

விளக்கஉரை

  • இடும்பு – அகந்தை, அவமதிப்பு, வெறுப்பு, கொடுஞ்செயல், தீங்கு, சேட்டை 
  • ஆங்காரம் –  செருக்கு, அகங்காரம், அபிமானம்
  • தூங்கல் – தொங்கல், தராசு, தாழ்கை, நெருங்குகை, உறக்கக்கலக்கம், சோம்பல், சோர்தல், ஓரிசை, வஞ்சிப்பா ஓசை, கூத்து

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 17 (2025)


பாடல்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

மூதுரை  –  ஔவையார்

கருத்து – விநாயகப் பெருமானின் திருவடிகளைப் பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும் என்பதைக் கூறும் பாடல்

பதவுரை

பவளம் போன்ற சிவந்த திருமேனியினை உடையவரும், துதிக்கையை உடையவரும் ஆன விநாயகக் கடவுளின் திருவடிகளை நாள்தோறும் தவறாமல் பூக்களைக் கொண்டு அவரை பூசை செய்வோருக்கு சொல்வளம் எனும் வாக்கு வளம் உண்டாகும்; நல்ல சிந்தனை உண்டாகும்; பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின் அருட்பார்வை உண்டாகும்; அவர்களது உடம்பானது பிணிகளால் வாட்டமுறாது இருக்கும்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #மூதுரை #ஔவையார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 03 (2024)


விந்துவும் நாதமும் மேவக் கனல்மூல
வந்த வனன்மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவமக மாகவே
விந்துவு மாளுமெய்க் காயத்தில் வித்திலே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – யோக மார்கங்களின் வழி சிவத்தை அடையும் வழியினைக் கூறும் பாடல்

பதவுரை

விந்துவும் நாதமும் நடுநாடி வழியாக உடலில் பொருந்துமாறு மூலத்தெழுந்த அனல் மயிர்த்துளைதோறும் நிலைபெறும்படி செய்து, நெஞ்சத்தின் இயல்பு காரணமாக மாறும்படியாக இருக்கும் உலகியலை நோக்காது  பயிற்சிவயத்தால் இடையறாது (குருவால் உபதேசம் செய்யப்பட்ட) சிவ நாமத்தை எண்ணிக் கொண்டிருப்பச் செய்து சிவமாவர் அம்முறையால் விந்துவின் தூய்மையாகிய கட்டுப்பாடும் எய்தும். இதுவே உடம்புநிலைக்கும் வித்தாகும்.

விளக்கஉரை

  • கனன் மூல – மூல அனல், குண்டலினி, வீணாத் தண்டம்
  • மூல அனல் தன்மைகள், சிறப்புகள், பூஜை முறைகள், வசிய முறைகள், போன்றவற்றை குருமுகமாக அறிக.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம்  #சித்த(ர்)த்_துளிப்பு, #பத்தாம்_திருமுறை – #திருமந்திரம் #திருமூலர்

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 01 (2024)


வடிவு பத்ம ஆசனத்திருத்தி மூல அனலையே
மாருதத்தினலேழுப்பி வாசலைந்து நாலையும்
முடிவு முத்திரைப் படுத்தி மூல வீணா தண்டினால்
முளரி ஆலயங் கடந்து மூல நாடி யூடுபோம்

சிவவாக்கியர்

கருத்து – யோக மார்கங்களின் வழி சிவத்தை அடையும் வழியினைக் கூறும் பாடல்

பதவுரை

பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தில் கனலாக இருக்கும் குண்டலினி சக்தியை அனலாக்கி வாசிக் காற்றினால் எழுப்பி ஒன்பது வாசல்களையும் ஒன்றாக அடைத்து யோக முத்திரையில் இருந்து முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றுங்கள். மூன்று மண்டலங்களைக் கடந்து மூலநாடியான சுழுமுனையின் ஊடே செலுத்தி சிவத்தை சேருங்கள்.

விளக்கஉரை

• மூல அனல் – குண்டலினி, வீணாத் தண்டம்

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் # சிவவாக்கியர் #சித்த(ர்)த்_துளிப்பு, #சித்தர்_பாடல்கள்

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 30 (2024)


கரிந்தார் தலையர் கடிமதின் மூன்றும்
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே

நான்காம் திருமுறை ‍ – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – புகலூர் உறையும் பெருமானின் திருவடிவ அழகினையும் செயற்கரிய செயல்களையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

திரண்டு சுருண்ட சடையினை உடையவரான புகலூர் பெருமான் ஊழிக்காலத்தில் இறந்தவர்களின் தலைகளை மாலையாக அணிந்தவர்; கடினமானதும் காவல் பொருந்தியதும் ஆன மூன்று மதில்களையும் தனது அம்பினில் சிவந்ததான நெருப்பு கொண்டு அக்னி, திருமால் வாயு ஆகியோர் முனையாகவும் தண்டாகவும் இறகாகவும் செயல்படுமாறு செய்து அவை அழியுமாறு செய்தவர்; விரிந்ததும் பரந்ததும் ஆன சடையின் மேல் எப்பொழுதும் நீரினை உடைய‌ கங்கையினை விரும்பி ஏற்றவர் ஆவார்.

விளக்கஉரை

  • கரிந்தார் – இறந்தவர்கள்;
  • தலையர் – தலைகளை மாலையாக உடையவர்

#அந்தக்கரணம் #அமுதமொழி # சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #பாடல்_பெற்றத்_தலங்கள் #திருப்புகலூர் #நான்காம்_திருமுறை ‍ #தேவாரம் ‍ # திருநாவுக்கரசர்

Loading

சமூக ஊடகங்கள்