கருத்து – நெஞ்சத்தினை இடைவிடாது சிவபெருமானை குறித்து சிந்திக்க வேண்டும் பாடல்.
பதவுரை
நெஞ்சமே! தோற்ற ஒடுக்கம் உடைய உயிர்கள் மற்றும் அகிலங்கள் அனைத்திற்கும் முற்பட்டவனும், திருக்கண்ணை உடைய நெற்றியை உடையவனும், தாமரை மலரின் இருப்பவனாகிய பிரம்மனின் தலையை அறிந்து, அந்த தலையை ஓட்டை விரும்பி கபாலி ஆகியவனும், அழகிய வடிவம் கொண்ட மலைமகள் எனும் உமையம்மையை தன் உடலின் ஒரு பாகமாக உடையவனும், உருவம், அருவம், அருவுருவம் கொண்ட அனைத்திற்கும் உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அந்த உணர்வுகளை உணர்த்தும் நாதம் எனும் ஓசைகளாகி வருபவனும், வலஞ்சுழி எனும் திருத்தலத்தில் உறையும் எம்பெருமானும், திருமறைக்காடு எனும் திருத்தலத்தில் உறைபவனும், ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மை உடையவனும் ஆன தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழில் சிவபெருமானை இடைவிடாது சிந்திப்பாயாக.
விளக்கஉரை
• திருவாலம்பொழில் எனும் காவிரி தென்கரைத் திருத்தலம் • கமலத்தோன் – பிரமன் • உரு ஆர்ந்த – அழகு நிறைந்த • வலஞ்சுழி, மறைக்காடு, ஆவடுதுறை இவை சோழநாட்டுத் தலங்கள் • மேய ( மேவிய ) – விரும்பி எழுந்தருளிய. • திருவான் – மேன்மையை உடையவன்.
இன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே அன்று தொட்டெனை ஆளர சேஎன்று நின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால் மன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே
தாயுமானவர் சுவாமி பாடல்கள்
கருத்து – ‘காத்து அருள்’ என்று முன்பு ஒருமுறை கதறிய காரணத்தால் இப்பொழுது காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.
பதவுரை
இப்போது யான் உன்னிடத்தில் அன்பு இல்லா காரணத்தால் பிழைப்பதற்கு வழி இல்லாமல் இருப்பினும், முன்னொரு காலத்தில், ஏ இறைவா! உனது திருவடிகளை சார்ந்து எனை ஆண்டருள் என்று வாய்விட்டு கதறியுள்ள இந்த வஞ்சனை கொண்டவனும் கொடியவனும் ஆகிய உனக்கு உரித்தானவனை கைநெகிழ விட்டு விட்டால் ஞானம் கொண்ட கூட்டத்தார்கள் உன்னுடைய திருவருளினை நல்லுரை கூறி உன்னை எவ்வாறு புகழ்ந்து துதிப்பார்கள் என்று கூறுவாயாக!
ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து வொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து தாமெடுத்த கூரை தவிரப் போவார் தயக்கம் பலபடைத்தார் தாமரையினார் கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக் கழிப்பாலை மேய கபாலப்பனார் வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும் வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – அவர் திருவடி சேர்தலை ஈசனாருக்கு நாம் பிறவி எடுத்ததற்கு செய்யும் கைமாறு எனும் பாடல்.
பதவுரை
ஊண் எனப்படுவதாகிய உடலாகிய சதைப்பகுதியை சுவராகச் வைத்து, ஒன்பது துவாரங்களையும் வாயிலாக அமைத்து, வெள்ளி போன்றதும், ஒளி உடையதும் ஆன எலும்புகளைத் தூணாக அமைத்து ரோமங்களை மேலே பரப்பி தாமே படைப்பித்த உடலாகிய குடில் நீங்கும்படி செய்து, தாவுகின்ற மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய், கபாலம் ஆகிய மண்டை ஓட்டினை ஏந்திய தலைவராகி, எல்லாத் தத்துவங்ளையும் கடந்து, வானில் நிலை பெற்ற உலகங்களை எல்லாம் கடந்து விரைவாக வீடுபேறு ஆகிய அவரது திருவடியை அடைதலுக்கு செல்லும் வழியை அமைத்துக் கொடுத்து, தோகைகளைப் விரித்து ஆடும் மயில்கள் உடையதும், சோலைகளை உடையதும் ஆன திருக்கழிப்பாலைத் தலத்தில் இருந்து தாமே வலியச் சென்று அருள் செய்கின்றார்; இந்த உடம்பு பெற்றதனால் ஆன பயன் என்னவெனில் அவர் வகுத்து வைத்த வழியிலே செல்வது மட்டுமே அவர்க்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகும்.
கருத்து – நீ அருள் செய்யா விடினும் யான் உன்னை நினைத்து பாடுதலை விடேன் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆணில் சிறந்தோனாகவும், பூரணனாகவும் இருக்கும் இறைவனே! உனக்கு அணிகலனாகவும், அரைநாணும் சிறுமையை உடைய பாம்பு இருப்பது கண்டு அஞ்சேன்; நீ புறங்காடு ஆகிய சுடுகாட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்; நீ என்னுடைய சிறுமைக் கண்டும் உணர்ந்தும் என்னை விரும்பாவிடிலும் யான் உன்னுடைய பெருமையை உணர்ந்து உன்னை மறவாதவனாக இருப்பேன்; வினைகளின் காரணமாக பிறவி கொண்டாலும் உனை மறவேன்; நீ என்னைக் காணாவிட்டாலும், உன்னை (மனக்கண்ணாலாவது) கண்ணாரக் காண்பேன்; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் செய்யாவிடினும், நான் என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன். (இவ்வாறானது எனது அன்பு என்றவாறு)
விளக்கஉரை
நம்பி – ஆணில் சிறந்தோன், குலமகன், பூரணன், கடவுள்; இறைவன், ஒரு செல்லப் பெயர், நம்பியாண்டார்நம்பி, நாற்கவிராசநம்பி, நம்பியான்
கருத்து – சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
இறப்பை உண்டு பண்ணுபவன் ஆகிய மறலி எனும் எமனை காலால் உதைத்தான்; பிறவிக்குக் காரணமான அவாவை உண்டு பண்ணுபவன் ஆன மன்மதனை எரித்தான்; குழந்தை ஆகிய ஞானசம்பந்தர் பசித்து அழுதபோது அவர் பசிக்காக இரங்கி அவருக்கு பாற்கடலை தந்து, அவர் இந்த ஞாலத்தில் புகழ்பெறுமாறு செய்து, ஞான சம்பந்தரின் பின்னே உலகத்தவரை நடக்கச் செய்தான். பெரியதான அருளைத் தரத் தக்கவனான அவனை நாடாதவர்க்கு இனி செல்லும் வகை எது?
விளக்கஉரை
மறலியையும், எமனையும் இறைவர் உதைத்தும் எரித்தும் தண்டித்தனால் சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது
நடக்கை – ஒழுக்கம், செல்கை, வழக்கு
பாற்கடல் ஈந்தது காழிப் பதி திருத்தலத்தில்
ஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் – வெய்யிலின் தாக்கம் ஞானசம்பந்தரைத் தாக்காமல் இருக்க சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அமைத்து நந்தியை விலகச் செய்து அவர் சார்ந்தவர்களையும் அழைத்து வரச் செய்தச் செய்த தலம் பட்டீஸ்வரம். (இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு வினைகள் பற்றாது என்பது ஞானசம்பந்தர் தேவாரம்)
மாடும் தண்தாமம் அணிந்திடும் மைந்தரும் மாதர்களும் வீடும் தண் தாமம் என மகிழாமல் உன் மென்மலர்த்தாள் பாடும் தண்டாத்தமிழ் ஈந்தருள் பூத பிசாசுகளைச் சாடும் தண்டாயுதனே காழியாபதுத் தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
கருத்து – திருவடிகளைப் பற்றி பாடும் படியான இனிய தமிழினை ஈந்து அருள வேண்டுதல் பற்றிய பாடல்.
பதவுரை
இறந்தவர்களின் பேயுருவம் கொண்டு திரியும் பூதம், தீமை தரத் தக்கதான பிசாசங்கள் ஆகியவைகளை தண்டாயுதத்தால் அடித்தும், துன்புறுத்தியும் செய்பவனாய் காழிப் பதியில் உறைந்து இருப்பவனான ஆபதுத்தாரணனே! செல்வமும், புகழ்ச்சியைத் தரும் மைந்தரும், பெண்டுகளும், தனது இருப்பிடமும், நிலையாக தனக்கு உரித்தானவை என மகிழ்ந்து இருக்காமல் உன்னுடைய மெல்லியதான மலர் போன்ற திருவடிகளைப் பற்றி பாடும் படியான சிக்கல் இல்லாத இனிய தமிழினை ஈந்து அருள வேண்டும்.
விளக்கஉரை
முதலடியில் வரும் தண்தாமம் என்பது புகழ்ச்சி எனும் பொருளிலும், இரண்டாம் அடியில் வரும் தண் தாமம் என்பது நிலையானது பொருளிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
சாடுதல் – அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், அசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்
பதினொன்றாம் திருமுறை – மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – காரைக்கால் அம்மையார்
கருத்து – வாயினால் வாழ்த்தினால் வாழ்வு உண்டாகாது ஆகையால், நெஞ்சத்தினால் அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாய் என்பது பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
நெஞ்சமே! அப்பம், மா, அவல், எள் உருண்டை இவற்றுடன் கரும்பில் இருந்து மிகுந்து ஒழுகுகின்ற மிகுகின்ற சுவை கூடியதான கருப்பஞ்சாறு இவைகளை உள்ளத்தில் விரும்பி, அதில் அழுந்தி நுகர்வானுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொண்டு அவன் திருவடிகளில் அமர்ந்து கொள்வாய்.
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும் செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – நந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பு உடையவராக ஆகியது பற்றிய பாடல்.
பதவுரை
தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் (சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர்) தலைமைப்பாடுடையவனும் திருவருள் செய்பவனும் பவழம் போன்ற குன்றனைய குளிர்சடையோன் ஆகிய சிவனாவன்,பெரியதான எண் திசையிலும் மேகங்கள் கடல்நீரை முகந்து பெய்யினும் அதற்குக் காரணம் முன்பு நீங்கள் செய்திட்ட நியமங்களை நன்றாக ஆற்றியதே ஆகும். ஆதலால் மேலும் தொடர்ந்து அதனை நன்றாகப் புரியுங்கள் என்று அருளினான்.
விளக்கஉரை
அஃதாவது உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருளினான்.
நல்ல முறையில் உழைத்து ஈட்டப்பெற்ற நல் ஊதியம் மற்றும் பொருளானது அறத்தையும் இன்பத்தையும் தரும். அவ்வாறு பெறப்பட்ட அறமும் இன்பமும் தொடர்ந்து நிகழ்வதற்கு நடைமுறையில் அப்பொருளை மேன்மேலும் ஈட்டுதல் பற்றியே ஈசனின் அருளியது.
நாலவர் மரபில் சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலை பெற்றுள்ளது.
ஆசிரியர் மரபுவகை பலவற்றையும் கூறிய திருமூலர் அவற்றுள் ஒன்றின் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்துதல் பொருட்டுச் தம் வரலாற்றையே கூறுகின்றார்.
சனத்குமாரரே மாணிக்கவாசகராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும், அவரே மெய்கண்டாராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும் இருக்கும் விஷயங்களில் இருக்கும் மெய் அறிந்து உணர்க.
எழுந்து – முகில்கள் கடல்நீரையுண்டு விண்ணில் எழுந்து.
தண் – அமைதி.
அழுந்திய – திருவடி அன்பில் உறுதியாய உள்ள நால்வர் ( நன்னெறியாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நிலை நான்கினையும் கைக்கொண்டோர் எனவும் கொள்ளலாம்)
கருத்து – வினை முழுவதும் நீங்காமல் ஈசனை அடைதல் இல்லை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
வஞ்சனை உடைய யான், வஞ்சனையின் காரணமாக போலித் தொண்டனாய் இருந்து, பல ஆண்டுகளாய் காலத்தைப் வீணாக்கி, பின் மனத்தினில் தெளிவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன்; உள்ளத்தில் உன்னை நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவர்களுடைய உள்ளத்தில் இருந்து கொண்டு, நீ அறிகின்றாய் என்பதை அறிந்த நான் மனம் குலைந்து, வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன்.
கருத்து – சத்தியைப் பெறுதற்குரிய வழியினைக் கூறும் பாடல்.
பதவுரை
நீண்டதொரு காலப்பகுதி ஆகிய ஊழிகளையும், அதனைப் போல பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படுவதும், முற்றுணர்வு எனப்படுவதும் ஆன பூரணம் ஆகும். இவ்வாறான சக்தியை சிவனுடன் இணைத்து உணராமல் சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோர் சிவனையும் உணராதவரே; தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனை யோகமுறையில் மூச்சடக்குதலே ஆகும்.
ஒடுங்கிடா கரணம் தாமே ஒடுங்குமா றுணர்ந் தொடுக்க ஒடுங்கிடும் என்னில் நின்ற தொடுங்கிடா கரண மெல்லாம் ஒடுங்கிட ஒடுங்க உள்ள உணர்வுதா னொழியும் வேறாய் ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொ ணாதே
திருநெறி 7 – உமாபதி சிவம்
கருத்து – மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் கொண்ட அந்தக்கரணங்கள் மற்றும் அது சார்ந்த துணைக்கருவிகள் விலக்கி அவைகளை அந்நியமாக்குதலே சிவம் அறியும் வழி என அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
அந்தக்கரணத்தின் பகுதி ஆகிய மனம் என்றுமே தானே ஒடுங்காது; கரணங்கள் ஒடுங்கும் வழியை அறிந்து ஒடுக்க அவை ஒடுங்கும் எனில் அதற்கு துணைபுரிவதும், ஆன்ம தத்துவத்தின் குழுக்களில் இடம்பெற்றதும் ஸ்தூல உடல், அதுசார்ந்த பொறிகள், பஞ்சபூதங்கள், ஐம்பொறிகள், ஒன்பது கருவிகள் ஆகிய துணைக்கருவிகளும் ஒடுக்குதல் இல்லை; தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கத் தக்கதாக ஒடுங்கினபொழுதே ஆன்மபோதம் ஒடுங்குமென்னில் அப்பொழுது உள்ள பழைய சிற்றறிவு நீங்கி முழுமையான முக்கால அறிவே முத்தியென்கிற நிலையை கொடுத்து விடும். அவ்வாறு இல்லாமல் அந்தச் சிவத்தை அறிந்து அநுபவிக்கும் வழி எவ்வாறு என்னில் கரணங்கள் அந்நியமாய் விடும்படி, தரிசனமான ஞானத்தோடும் கூடி நின்று ஒழிவது அல்லாமல் அந்தச் சிவத்தை அறிந்து அதன் உண்மையை அநுபவிக்க இயலாது.
கருத்து – சிவனுடைய காருண்யமான கருணையை விளக்கும் பாடல்.
பதவுரை
தோழியே, உங்கள் இறைவனான ஈசன் பூசிக்கொள்வது வெண்மையான திருநீறு; அணிகலனாக அணிவது சீறுகின்ற பாம்பு; அவனது திருவாயினால் சொல்லுவது விளங்காத சொற்கள் போலும் என ஒருத்தி இகழ்ச்சியாகக் கூறினாள்; பூசுகின்ற பொருளும், பேசுகின்ற சொற்களும், அணிகின்ற ஆபரணங்களும் கொண்ட என் ஈசனானவன் எல்லா உயிர்க்கும் இயல்பாகவே இறைவனாய் இருந்து அந்த உயிர்களுக்கு தக்க பலன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று மற்றொருத்தி விடை கூறினாள்.
விளக்கஉரை
மறை – பொருள் விளங்காத சொல். `வேதம்` என்பது, உண்மைப் பொருள்.
ஈசன் தலைமை கொண்டது அவனுக்குப் பிறர்தந்து வராமல் இயல்பாக அமைந்தது.
‘சிவன் சாந்தாகப் பூசுவதும் சாம்பல்; அணியாக அணிவதும் பாம்பு; சொல்வதும் பொருள் விளங்காத சொல் என்றால், அவன் உயர்ந்தோனாதல் எவ்வாறு’ என்பது இதனுள் எழுப்பப்பட்ட தடை; ‘எல்லா உயிர்க்கும் அவனே தலைவன் என்பது யாவராலும் நன்கு அறியப்பட்டதால், அவன் பூசுவது முதலியன பற்றி ஐயுற வேண்டுவது ஏன்` என்பது தடைக்கு விடை.
கேள்வியில் பூசுவதும், பூண்பதுவும், பேசுவது என்று வருகிறது. பதிலில் பூசுவதும், பேசுவதுவும், பூண்பதுவும் என்று வருகிறது. முன்னர் உரைத்த மறை போலும் என்பதைக் கொண்டு அவன் பேசுவது மறை என்றும் அவன் பூண்பது என்பது அந்த மறை சொற்களே என்பதையும், அவனே அந்த மறை வடிவமாக இருக்கிறான் என்றும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
கருத்து – திருவைந்தெழுத்தினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பது குறித்தப் பாடல்.
பதவுரை
அண்டங்களில் முதன்மையான சிவலோகத்தினை இருப்பிடமாக் கொண்டவனை, ஆதிரை நாளான் என்று அழைக்கப்படுபவனை, பாற்கடல் கடைந்த போது வெளிப்பட்ட ஆலால விஷம் உருண்டு வந்த போது அதை உண்டதால் கரிய நிற கொண்ட கண்டம் உடையவனை, செம்பொன் போன்ற திருவடிகளை உடையவனை, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் தரையில் படுமாறும் தலை தாழ்ந்திருக்குமாறு, தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வீழ்ந்து வணங்கி, மேலான நூல்கள் எல்லவற்றாலும் குறிப்பிடப்படுவதும், திருவைந்தெழுத்தினை ஐந்து வடிவங்களாக கொண்டதும், பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டதுமான தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், ஆதி பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகாகாரண பஞ்சாட்சரம் ஆகியவற்றினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பர்.
நமஸ்காரம் – பெரியோர்களையும், இறைவனையும், மத குருக்களையும் வணங்கும் போது தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு அங்கங்களும் அதாவது நெற்றி, இரு தோள்கள் இரு கைகள், மார்பு இரு கால் முட்டிகள் உட்பட ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை. இது ஆண்களுக்கானது. பெண்களுக்கு ஐந்து அங்கங்கள்.
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
கருத்து – ஆபதுத்தாரணனின் வடிவமும் அவன் அருள வேண்டிய முறையும் குறித்து போற்றி புகழ்ந்த பாடல்.
பதவுரை
செம்மலை போன்ற மேனியில் கருமையும், பசுமையும் கலந்த நிறமொத்த சட்டைய ஆடையாக அணிந்தவனே, மலை போன்ற மேனியில் கூரியதும், நல்லவை அருளும் தண்டாயுதம் எனும் ஆயுதத்தையும் கைகளில் ஏந்தி, விண்ணில் இருப்பவர் ஆன பிரம்மனை பயமும் திகைப்பும் கொள்ளுமாறு அவனை அழித்து அவன் தலையை திருவோடாக ஏந்தி, தமிழ் மொழி கொண்டு விளங்கும் காழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! மலை போன்றதும், எழுதா மறை ஆகிய வேதத்தினை போன்றதுமான வார்த்தைகள் பிறர் எனக்கு உபதேசம் செய்யாமல் தவிர்த்து அருள்வாய்.
கடு – கடுக்காய்மரம், கசப்பு, நஞ்சு, முள், கார்ப்பு, துவர்ப்பு, முதலை, பாம்பு
மலை – அணி, அணிந்து கொள், திகைப்பு-பயம்
விளக்க உரைக்கு உதவி செய்த திரு. அனந்த சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.
இறை அன்பரின் குறிப்பு
இதில் கஞ்சுகம்வாயத்த என்பது கஞ்சி இஞ்சி – அதாவது கருணை பொங்கும் மனம் கொண்டவன். ஆனால்இஞ்சியைபோல் காரம் கொண்டவன் இறைஞ்சினால் கருணை வடிவானவன் என பொருள்படும்.
குஞ்சரம் என்பது யானை – அதாவது இவ்வளவு பெரிய கருணை மனம் கொண்டவன் எனப் பொருள்படும்.
சிலந்திக்கோரை என்பது சிலந்தி பூச்சியானது தன்வலை பின்னி மற்ற பூச்சிகளை அதில் சிக்கவைக்து உணவாக்கும்; இப்படி மனிதன் உன்னைக் கட்டநினைந்தாலும் அதில் சிக்காது அவனையே சிக்க வைப்பாய் என பொருளாகும்
சட்டைக்கஞ்சுகமுதல்வர் எண்பது ஜீவன்கள் தன் உடலாகிய சட்டையை கழற்றவைத்து தன்னுடன் சேர்த்து கொள்பவர் என அர்த்தமாகும்
கருத்து – அட்டாங்க யோகம் எனும் எட்டு வகையான யோகங்களில் முதலாதவதான இயமம் அடையும் முறை பற்றிய பாடல்.
பதவுரை
கொல்லாமை, பொய்யாமை, களவின்மை, வெகுளாமை, காமம் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, கூடா ஒழுக்கம் இன்மை ஆகியவற்றைக் கொண்டு நல்லவனாகவும், அடக்க முடையவனாகவும் இருப்பவனே தடை இல்லாத இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.
விளக்கஉரை
சரி எதையெல்லாம் கொல்லான் உடலையா, உயிரையா, மனதையா, அறிவையா அல்லது ஆத்மாவையா எனக் கேட்டபின்னரே அதில் நாம் கடைந்தேரியவராக இருப்பின் இயமத்தின் கொல்லானைக் கடக்குமெனவுரைக்கிறார். (குருநாதர் உரை செய்த வண்ணம்)
வாய்மொழியாக காலம் கடந்து வரும் வேத மந்திரங்களைத் தன்னகத்தே கொண்ட வாயை உடைய வன்னியூர்த் தலத்து இறைவனானவர், பிறையின் வடிவத்தை உடைய ஒளி பொருந்திய நெற்றியினை உடையவர்; வளையல் அணிந்த கைகளை உடைய பெண்களின் கற்பினை மதித்து அவர்களை கொண்டாடுபவர்; நீறு எனும் திருநீறு அணிந்த திருமேனி கொண்டவர்; ஆலால விஷம் அருந்தியதால் திருநீல கண்டத்தர்; ஒளி வீசும் வெள்ளிய மழுவினை உடையவர் ஆவர்.
விளக்கஉரை
‘வளைபெய் கரங்களையும் உடைய பெண்களது கற்பினைக் கவர்பவர்’ என்று பெரும் மதிப்பு உரிய பதிப்புகளில் காணப்படுகிறது. கஜசம்காரமூர்த்தி வடிவம் என்று கொண்டாலும் ரிஷி பத்தினிகளின் கற்பினை அவர் கவரவில்லை என்பதால் இப் பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கொள்ளுதல் – எடுத்துக்கொள்ளுதல், பெறுதல், விலைக்குவாங்குதல், உரிமையாகக்கொள்ளுதல், மணம் செய்துகொள்ளுதல், கவர்தல், உள்ளே கொள்ளுதல், முகத்தல், கற்றுக்கொள்ளுதல், கருதுதல், நன்குமதித்தல், கொண்டாடுதல், அங்கீகரித்தல், மேற்கொள்ளதல், மனம் பொறுத்தல், ஒத்தல், பொருந்துதல், உடலிற் காயம்படுதல், எதிர்மறை ஏவல் ஒருமை வினையொடு சேர்க்கப்படும் ஓர் அசை
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய் மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து – பொய்யாக புகழ்பவருக்கும் அருளும் நீ, உண்மையாக இருக்கும் அடியவர்களை நினைவு கொள்ள வேண்டும் எனும் பொருள் பற்றியப் பாடல்.
பதவுரை
மை பொருந்திய பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே, கங்கையையும், பிறை சந்திரனையும் தனது திருமுடி மேல் வைத்துள்ள ஐயனே, செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே, திருக்கச்சூர் ஆலக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே! இழி நிலை மனிதர்களுக்கே உரித்தானவாறு மனதில் அன்பு இன்றி, பலன் கருதி பொய்யாக உனை ஒருவர் புகழ்ந்தால் அதனையும் ஒரு பொருளாய் கொண்டு அவர்களுக்கு உண்மையாக அருள் செய்யும் எங்கள் பெருமானே உன்னை உண்மையாகவே நினைக்கும் அடியவர்களை நினை.
விளக்கஉரை
பொய்யே உன்னைப் புகழ்வார் – அந்த நிலையில் இருந்தாலும் கூட என்பதே இதன் சிறப்பு.
சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதம் அறுபடுகிறது என்பதை கீழ்கண்ட இரு உதாரணங்களால் அறியலாம்.
பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே
செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே – வெண்மை நிறம் சிவனாரைக் குறிப்பதாகும். செம்மை நிறம் சக்தியை குறிப்பதாகும்
நீதி யாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன் ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை என்னடி யானென்று பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – துன்பம் மிகும்படியான வாழ்வில் இருந்து மீட்டு பழைய அடியார்களோடு தன்னையும் சேர்த்து அருளிய அதிசயத் திறம் பற்றி உரைத்தப் பாடல்.
பதவுரை
உலகியலிலுக்கும், மெய் ஒழுக்கங்களுக்கும் பொதுவாய் இருக்கும் நீதிகளை இருப்பவனவற்றை நினையேன்; அவ்வாறு நினைப்பவர்களோடு இணக்கமாய் இருந்து ஒன்று சேரவும் மாட்டேன்; துன்பமே மிகும்படியாக ஆளாகிப் பிறந்து இறந்து நிலை கெடுமாறு சுற்றித் திரிவேன்; இப்படிப்பட்ட என்னையும் என்றும் உள்ள பொருளாய் நிற்பவனும், அன்னையை தன் பாகத்தில் கொடுத்தவனும், கடவுளும் ஆன முதல்வன், தன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஒழுக்கத்தோடு சிறிதும் இயைபில்லாத என்னையும், ஒழுக்கம் மிக்கவர்களும், காலத்தினால் பழமையானவர்கள் ஆன தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்து ஆண்டு அருளித் தன் அடியாரோடு சேர்த்து வைத்த அதிசயத்தைக் கண்டோம்.
கருத்து – உன் அடியவராக இருக்கும் என் துன்பம் நீக்குவாய் என முறையிட்டப் பாடல்.
பதவுரை
அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்திருக்கூடிய திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே! காரியம், காரணம், சமய நடத்தை, யோகம், துன்ப நீக்கம் என்ற பஞ்ச அர்த்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதும், சைவசமயப் பிரிவுகளிள் மிகப்பழமையானதும் ஆன பாசுபதம் எனும் பசுபதி வடிவாகி நின்றவனே! மேலான ஒளியாய் உள்ளவனே! அழகிய வடிவம், அதனால் பெறப்படுவதாகிய பொருள்கள், இம்மையில் பெறப்படுவதான செல்வம் ஆகியவை உனது புகழை உடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து, பிறர் ஒருவரையும் துணையாக கொள்ளாமல், அவர்களோடு பொருந்தி தகாத செய்கைகள் செய்யாமல், அவர்கள் என்னைப் பற்ற வருவாராயின் வலிமை கொண்டு அவர்களிடத்தில் இருந்து விலகி, உன்னிடத்தில் பற்று உடையவனாக திரிபவன் ஆகி, மனத்தினால் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை, நீ நீக்கி அருளாய்.
விளக்கஉரை
திரு – மதிப்பிற்குரிய, செல்வம், வளம், மேன்மை, திருமகள, சிறப்பு, அழகு, பொலிவு, நல்வினை, தெய்வத்தன்மை, பாக்கியம், மாங்கலியம், பழங்காலத் தலையணிவகை, சோதிடங் கூறுவோன், மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம்
சீருடைக் கழல்கள் – வேண்டுவார் வேண்டுவதை ஈந்து புகழ் பெற்ற கழல்கள்
‘பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்’ –
என் கண்ணைக் கெடுத்தது, அறவோனாகிய உனக்கு ஏற்புடையது எனினும், யான் என் பிழையை உணர்ந்து உன்பால்என்னுடைய குறையை உரைத்ததால், குறைகளைப் பொறுத்து, எனக்கு அக்கண்ணை அருளித்தருளல் வேண்டும்
உன்னையன்றி வேறு பற்றில்லாத அடியவர்படும் துன்பத்தை நீக்காது அதைக் கண்டு கொண்டிருத்தல் அருளுடையவனாகிய உனக்குத் தகுவதோ.
இத்திருப்பதிகம் முழுவதினும் இது காணப்படும்.
அதாவது நீரின் உச்ச பட்ச கொதிநிலை100டிகிரி. ஆனால்அதன்உறை நிலை_ ___ மைனஸ். நீர்மகாரம்; உறைநிலைங்காரம் மகாரம். பூவானால் ரீங்காரம் வண்டாகும் பெண்கொதிநிலை என்றால் ஆண்குளிர்நிலைஆகும். அதனல்தாண் பெண் ருதுவாகிறாள் ஆண்அதை நிறுத்தும் சுக்லமாகிரான். சூட்சுமம் யாதெனில் ஆணுக்குள் அசையும் பெண்தனை ஆண் அறிந்தால் அதுவே அசையா இசையா நிலையான அமர்நாத் பனிலிங்கம் அதுவே பிறப்பறுக்கும் மோட்ஷநிலை
இதுதான் பிரமன் அமர்ந்த இடம் பிரமரந்தீயம்; உலக உயிர் ஸிருஷ்டி மலை மீது அமர்ந்து உபதேசி அருளும் இதை முல்லை வாயில் என்றார். இதற்குள் புகுந்து இதுவாவதே மோட்ஷம் எனும் ஓங்காரம்.
கருத்து – சிவபெருமான் இருபத்து ஐந்து திருமேனிகளில் ஒன்றான லிங்கோத்பவர் வடிவம் கொண்டு நின்ற பெருமையை கூறியது இப்பாடல்.
பதவுரை
திருமால், நான்முகன் ஆகியோர் முறையே நீண்டதானதும், வெற்றி பெற்றவர்கள் அணியக் கூடியதுமான கழல் கொண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேடி நின்ற போது, அளவிட இயலாத அளவு நீண்டு எரிவது போன்றதான திருமேனியனாய் நீண்டவனும், பாலால் அபிடேகம் செய்யப்பெற்றவனும், அழகிய புகலி என்றும் திருப்புகலி அழைக்கப் பெறும் திருத்தலத்தில் ஆடி உறைபவனும் ஆகிய நல்ல பண்பினை உடையவன் நமக்கு நன்மைகள் செய்பவன்.