அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 16 (2019)


பாடல்

அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  நவாக்கரி  சக்கரத்தில் உறையும் உமை சத்தி தன் பெருமைகளை கூறும் பாடல்

பதவுரை

மெய்யறிவு உடையோர் பிறப்பின்மையின் காரணமாக உண்மை அமரர்களாதல் அவர்களால்  அறிந்து வழிபடுகின்ற தேவதேவனும், வானத்தைப் கிழித்துக் கொண்டு கீழே பாய்ந்த வலிய ஆகாய கங்கையை தன்  சடையில் சூடிக்கொண்டவனும் ஆகிய சிவப் பரம்பொருள் பணிகின்ற சத்தியை நீங்கள் வழிபட்டு மேற்கூறிய (முந்தைய பாடல்களில் குறிப்பிடப்பட்டவை) பயன்களைப் பெறுங்கள்.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • அமரர் – இறவாதவர்கள்; மார்க்கண்டேயர் போன்ற ரிஷிகள் எனவும் கொள்ளலாம்.
  • வானோர் – வானுலகில் உள்ளவர்.
  • பாய்புனல் சூடி – திருச்சடையில் புல் நுனிமேல் துளியளவாக மலர் போல் பாய்ந்து வந்த கங்கையை எளிதில் ஏற்றமை குறித்து சூடி எனும் சொல்.
  • முரிதல் – வளைதல்; நாயக நாயகி பாவம் பற்றி இன்பச்சுவை தோன்றச் சிவன் உமையின் ஊடலைத் தீர்க்க அவளை அடிபணிவதாக கூறும் இலக்கிய மரபினை இங்குச் சத்தியின் பெருமை புலப்படுதற்கு எடுத்தாளப்பட்டு இருக்கிறது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 15 (2019)


பாடல்

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் கண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  நவாக்கரி சக்கர வழிபாட்டின் இம்மைப் பயன்களைக் கூறும் பாடல்

பதவுரை

நவாக்கரி  சக்கரத்தின் மீது நீ அன்பு கொண்டு அதுபற்றி நின்றால் இவ்வுலகில் நீ நினைக்கின்ற நன்மைகள் எல்லாம் நினைத்தபடியே முடியும்; காலன் எனப்படுபவனாகிய கூற்றுவன் உன்னைக் கொண்டுபோவதற்குக் குறித்துவைத்த நாள் அதுவும் அங்ஙனம் உயிரினைக் கொண்டுபோகாமலே கடந்துவிடும்; உனது பெயர் உலகம் எங்கும் பரவும்; உடம்பின் நிறம் பகலவனது விரிந்து வீசுகின்ற கதிர்கள் போல மாறும்; இப் பயன்களை எல்லாம் இவ்வகையில் நீ எய்துவாயாக.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 14 (2019)


பாடல்

நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  நவாக்கரி  சக்கரத்தின் தியானவண்ணம் கூறும் பாடல்

பதவுரை

தன்னை வழிபடுபவர்களுக்கு நேரில் வந்து அருள் புரிகின்ற அந்த நவாக்ரி சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள் என ஆராய்ந்தால் அழகிய தேவியாகிய அவள் மேகம் போன்ற நீல நிறத்தை உடையவள் என அறியலாம்; இதனை அறிந்து அவள்பால் உனது அன்பினை செலுத்தி அப்படியே நீ நட; அப்பொழுது நீ நினைத்தவை எல்லாம் உனக்குக் கைகூடும்.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • திரிகை – சக்கரம்
  • ‘யாதொரு வண்ணம்’ என்பது வினாவாகவும், ‘கார்தரு வண்ணம்’ என விடையாகவும் தாமே விடை பகன்றார். நேரின் வந்து அருளும் போது அவளின் நீல நிறம் கண்டு அவளை அறியாமல் இருக்கலாகது என்பது பற்றியே `யாதொரு வண்ணம்` கார்தரு வண்ணம்’ எனவும் கொள்ளலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 13 (2019)


பாடல்

நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும்
நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர் 

கருத்து –  இச்சக்கர வழிபாட்டிற்கு ஏற்றதான சிறப்புமுறை கூறும் பாடல்

பதவுரை

முதலெழுத்து முதல் உன்னதமான ஸ்ரீம் க்லீம் ஆகியவற்றை ஈறாக உடைய நவாக்கரங்களை அங்ஙனமே வைத்து சக்கரத்தினை செந்நெல், அறுகம் புல் ஆகியவற்றை மனத்திலே  கொண்டு அவற்றைக்கொண்டு அருச்சனை செய்தால் அந்த அர்ச்சனையை ஆதியும் அந்தமும் இல்லாத அச்சத்தி ஏற்றுக் கொள்வாள்.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • நினைத்திடும் என்பதை முதலில் கொண்டு மேற்குறித்த பயன்களைத் தருவாள் என்பது பொருள் கொள்ளலாம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 12 (2019)


பாடல்

நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர் 

கருத்து –  நவாக்கரி வித்தையானது ஸ்ரீவித்தையோடு ஒத்த சிறப்புடையதாய்ப் பயன்தருதல் பற்றி பொது வகையிலும், சிறப்பு வகையிலும் கூறப்பட்ட பாடல்

பதவுரை

நவாக்கரி சக்கர வழிபாட்டினால் வேண்டுவார் வேண்டுவதைத் தருகின்ற சிவனது திருவருள் கைவந்து உதவுவதால் துன்பத்தைத் தர இருந்த அந்தத் தீய வினைகளை ஓட்டாமல் வலியதான வினைகள் நோக்காது விட்டு ஓடிவிடும்; மேலும் இச்சக்கர வழிபாட்டினால் பெரிய நன்மையைத் தருவதாகிய அனுபவ ஞானமும், பஞ்சபூதங்களுடன் கூடியதும் 64 கலைஞானம் எனப்படும் 64 விதமான தந்த்ரங்கள் கூறும் வித்தை ஆனதும்  ஒன்றிய நிலையிலே வேறுவேறாக தோன்றிய அவைகளெல்லாம் ஒன்றாகவே இணைந்து விடுகின்றதுமான கலாஞானமும் வலிமை பெற்று நிலைத் தன்மை அடையும்.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • `சிரமம்` என்பது குறைந்து `சிரம்` என்றானது என்றும் அது வாய்த்து அகற்றிடும் என்ற பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. வினைகளைத் தரும் ப்ரம்ம முடிச்சானது தலை தொடங்கி செயலாற்றுவதால் அந்த வினைகளை முழுவதும் அகற்றும் எனவும் அதன் தொடர்ச்சியாக அண்ட உச்சியில் சோதி தோன்றும் எனவும் கூறலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 3 (2019)


பாடல்

ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்து –  தன்னை அண்டிய அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுத்துபவர்களை வீழ்த்தி பகைவர்களுடம் இருந்து காப்பாள் என்று கூறும் பாடல்.

பதவுரை

கொன்றை மலர்களையும், அழகான மகுடத்தினையும்  தன் கூந்தலில் சூடியவளும், தடியினை ஏந்தியவளுமான திரிபுரை எனப்படும் வராகி என்னை வாழ்விப்பதற்காக  வந்து குடி இருந்தாள்; அதுமட்டும் அல்லாமல் எவராவது நமக்கு வினையின் காரணமாக துன்பம் ஏற்படுத்துமாறு செய்தால் அவர்கள் உடலை கூரான வாள் கொண்டு வெட்டி  வாளுக்கு இரையாக்கி விடுவாள்.

விளக்க உரை

  • சீர் – 1) செல்வம் 2) அழகு 3) நன்மை 4) பெருமை 5) புகழ் 6) இயல்பு  7) சமம் 8) கனம் 9) ஓசை 10) செய்யுளின் ஓருறுப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 27 (2019)


பாடல்

பாரென்று விந்துவிலே பாலாசத்தி
     பரையினுட வம்மென்ன பகரப்போறேன்
சேரென்ற மொழியாட்கு வயதோ பத்து
     சூரியனுஞ் சந்திரனு மகா திலதத் தோடு
கோரென்ற ஏவிகொடிகழேனிக்காந்தி
     கூறியதா அத்தத்தில் குறிப்பைக்கேளு
ஆரென்ற அபயமொடு வரதமாகும்
     அழகான திருமுறையுஞ் செபவடமுந்தானே

போகர் கருக்கிடை நிகண்டு 500

கருத்து –  பாலாவின் திருவடிவம் பற்றி போகர் உரைத்தப்பாடல்

பதவுரை

சக்திதத்துவம் ஆனதும் புள்ளி வடிவில் உள்ளதும் ஆன பிந்துவில் உள்ள பாலா சத்தியை பற்றி கூறுகிறேன் கேள். சத்தி வடிவமான அவள் பத்து வயதை உடைய உருக்கொண்டவள், அவள் சூரிய சந்திரர்களை தோடாக அணிந்திருப்பவள்; அவளுடைய மேனி கோடி சூரிய ப்ராகசத்தினைக் கொண்டது; மனம்எனும் மாயைஜெயித்த கோதண்டம்ஏந்திய இராமனை போல் தூயநிலையில் அத்தன் சிவத்தை ஆராதாரத்தில் இருத்தி நேர்கொண்டநிலையில் ஆதியான நாயக நாயகி ஆனவளும் அழகான நெற்றிவகிட்டில் ஆன்மஜோதியான நெற்றிசுட்டியும் கொண்டு அனைத்து படைப்புக்கும் ஆதாரமானவளும் ஆதிமாதா எனப்படுபவளுமான அவள் கைகளில் திருமுறைகளும், செபமாலை ஆகியவற்றை கையில் ஏந்தியவளாகவும், அபய வரத முத்திரைக் கரங்களை உடையவளாகவும் இருப்பாள்; அவளை அவ்வண்ணமே சதா தியானிப்பவர்களுக்கு அவள் வடிவமே மந்திரமாய் காக்கும்.

விளக்க உரை

  • கோதண்டம் போல் நீ நின்றால் மந்திரம் மறைந்து அவள் திருநாமமே முக்தியளிக்கும் என்பது பொருள்

பதவுரை எழுத உதவி செய்த பெயர் வெளிட விரும்பாத சக்தி உபாசகருக்கு என நமஸ்காரங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 26 (2019)


பாடல்

நாட்டமென்ற பூரணத்தைக் காண வென்றால்
     நன்மையுள்ள சற்குருவாற் காண வேண்டும்
ஓட்டமென்ற வோட்டமெல்லாம் வோடா தேநீ
     ஒருமனதாய் சுழிமுனையிலு கந்து நில்லு
ஆட்டமென்ற திருநடன மங்கே யுண்டு
     ஐம்பத்தோ ரெழுத்துமுத லெல்லா முண்டு
பாட்டைமிக பதத்தினா லென்ன வுண்டு
     பத்திமுத்தி வைராக்கிய மாகப் பாரே

அகஸ்தியர் சௌமிய சாகரம்

கருத்து –  திட சித்தமுடன் வைராக்கியம் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தினால் திருநடனம் காணலாம் என்பதை கூறும் பாடல்

பதவுரை

சிறந்ததான நோக்கம் கொண்டு அதில் விருப்பம் கொண்டு பூரணமாகிய பரம்பொருளைக் காணவேண்டும் என்றால் நல்ல குருவின் துணை வேண்டும். அவ்வாறு இல்லாமல் எண்ணங்களை ஓட விடதே; அவ்வாறு அலைவதான மனதை விடுத்து ஒரு நிலைப்படுத்தி சுழிமுனையில் நிறுத்தி நீ நில்லு; அவ்வாறு நிற்பாயானால் சுழிமுனையில் திருநடனத்தை காணலாம்; மேலும் ஐம்பத்தொரு எழுத்துக்களையும் அதன் பொருளையும் பக்தியுடன் வைராக்கியமாக இருந்து பரம் பொருளைக் காணலாம்.

விளக்க உரை

  • ஐம்பத்தொரு எழுத்துக்கள் – சைவத்தின்படி சிதம்பர சக்கரம் எனப்படுவதும் திருவம்பலச்சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது எனவும் நமசிவாய எனும் ஐந்தெழுத்தாகவும், அதனுடன் சேர்ந்து அ உ ம என்று எட்டெழுத்தாகவும், அதுவே ஐம்பத்தோர் எண்களாய் விரிந்து இந்த உடலில் உள்ள உயிர் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டு இருக்கின்றன.
  • யோக முறையில் (சாக்த வழிபாட்டின்படி எனவும் கொள்ளலாம்) பிரணாயாமத்தின் படி பத்து வகை வாயுக்களில் பிராணன் என்னும் மூச்சுக் காற்று வெளியே போகாதவாறு கட்டும் போது உடம்பிலுள்ள ஆறு ஆதாரங்களில் குண்டலி பொருந்தும் போது ஏற்படும் அதிர்வுகளை ஒலியாகக் கொண்டு, ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றில் முறையே 4 (சப்தங்கள் – வ ஸ ச ஷ), 6 (சப்தங்கள் – ஸ, ஹ, ம், ய, ர, ல) , 10 (சப்தங்கள் – டட, ணத, தத, தந, பப), 12(சப்தங்கள் – சங, கக, கக, டட, ஞஜ, ஜச), 16 (சப்தங்கள் -லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ), 3(சப்தங்கள் – ஹ, ள, இவற்றுடம் சேர்ந்த ஓங்காரமாக இருக்கலாம்) என 51 ஒலி அதிர்வுகள் உண்டாகும் எனவும் குறிப்பிடப்படும்.  ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே

         எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி உணர்க

  •  நாட்டம் – விருப்பம், நோக்கம், நிலைநிறுத்துகை, ஆராய்ச்சி, சந்தேகம், கண், பார்வை, சஞ்சாரம், சோதிட நூல், வாள், நாட்டுத்தலைமை

சித்தர் பாடல் என்பதாலும், குரு முகமாக உபதேசம் கொண்டே உணரப்படவேண்டும் என்பதாலும் பதவுரையில் பிழைகள் இருக்கலாம். குறை எனில் மானிட பிறப்பு சார்ந்தது; நிறை எனில் குருவருள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 21 (2019)


பாடல்

தாளும் மனமும் தலையும் குலையத் தரியவர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கட்கமும் சூலமும் ஏந்திவரும் துணையே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்துவாராகியை தொழுபவர்களுக்கு நவக்கிரகங்களாலும், பகைவர்களாலும் துன்பம் இல்லை என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

வாராகியைப் போற்றி பணியும் அன்பர்களுக்கு நவக்கிரகங்களாலோ  பகைவராலோ பயமில்லை; அவள்  வெற்றி சங்கு ஒலிக்க வாளும், சூலமும் தாங்கியவர்களாக துணைக்கு வருகிறாள்; அவள் அருள் பெருங்கவசமாய் பக்தர்களைக் காத்து நிற்கும்; அவளிடத்தில் பக்தி இல்லாமல் மும்மலங்களில் ஒன்றான கர்வம் கொண்டு காலை முதலாகக் கொண்டு(கண்டம் எனக் கொள்வாரும் உண்டு),  தலை வரை குலையுமாறு செய்து திரிபவர்கள் அழியும் படிக்கு வரம் தர வேண்டும்.

விளக்க உரை

  • தாள் – காகிதம், பாதம்; கால், கால், மரமுதலியவற்றின் அடிப்பகுதி, பூ முதலியவற்றின் அடித்தண்டு, வைக்கோல், விளக்குத் தண்டு, படி, ஆதி, சட்டைக் கயிறு, வால்மீன் விசேடம், ஒற்றைக் காகிதம், தாழ்ப்பாள், கொய்யாக்கட்டை, முட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் திறவுகோல், தாடை, கண்டம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 13 (2019)


பாடல்

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்துமெய்ஞான கண்டு உணர்ந்தவர்களை வராகி கைவிடமாட்டாள் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

மெய்ஞானக் கல்வியைக் கற்று அறிந்தவர்களால் பெரிதும் போற்றி வழிபடத்தக்கதான பஞ்சமி தினத்துக்கு உரித்தானவளும், தன்னை பகைப்பவர்களை இரும்புத் தடி கொண்டு அடிக்கும் பேய் போன்றவர்களின் குருதியினைக் குடித்து அவர்களின் குடலினை தோளில் மாலையாக இட்டு அதில் மகிழ்வு கொண்டு நிலை பெற்று வாயில் முற்றத்தில் (சுடுகாடு எனவும் கொள்ளலாம்) இருப்பவளும், பதினான்கு உலகமும் நடுங்குமாறு செய்பவளும் ஆனவள் வாராகி ஆவாள்.

விளக்க உரை

  • குலாவுதல் – உலாவு, சஞ்சரித்தல், நட்பாடுதல், விளங்குதல், மகிழ்தல், நிலைபெறுதல், கொண்டாடுதல்
  • மன்றில் – வாயில்முற்றம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 6 (2019)


பாடல்

ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்துவராகி அன்னையின் உருவத் தோற்றம் குறித்து கூறும் பாடல்.

பதவுரை

மலர்க்கொடி போன்றவளும், உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம் ஆனவளும், ஐயும் கிலியும் எனும் பீஜ மந்திரங்கள் கொண்டு தொண்டர்களால் போற்றப்படுபவளும், அரியதான பச்சை நிற உடலும், கருணை மிகுந்ததான விழியும் கொண்டு, கைகளில் மலர்கள்,பிரம்பு, கபாலம், மற்றும் சூலம் ஆகியவை கொண்டவளான வராகி வழிபடும் அன்பர்கள் கண் முன்னே தோன்றும்படியாக இந்த உலகத்து உயிர்கள் துதிக்கும்படியாக வருவாள்.

விளக்க உரை

  • அரியபச்சை – மரகதம் ஒத்த பச்சை நிறம் கொண்டவள் எனவும் கொள்ளலாம். மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி எனும் அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 31 (2019)


பாடல்

ஆமென்ற துரைச்சியைத்தான் பூசை பண்ண
அநேக நாள் செய்த தவ பலத்தாற் கிட்டும்
வாமென்ற பிரமனொடு விஷ்ணு ருத்திரன்
மகேசனோடு சதாசிவனுங் கணேசன் கந்தன்
ஏமென்ற விந்திரனும் சந்திரா தித்தர்
எழிலான காமனொடு அங்கிநந்தி
கோமென்ற குபேரனொடு கும்பமுனியுங்
கூராகிய முனிரிஷிகள் பூசித்தாரே

போகர் கருக்கிடை நிகண்டு 500

கருத்து –  பல ஜென்மங்களில்  செய்த தவப் பயனால் அன்னையை பூசை செய்யும் பாக்கியம் கிட்டுகிறது என்பதையும், அவ்வாறு பூசை செய்தவர்களையும் கூறும் பாடல்.

பதவுரை

ஆம் (ஒம் எனும் ஒலியின் மூல நாதம்) எனும் நாதத்தால் அறியப்படுபவள் ஆன தாயானவளை பல ஜென்மங்களில்  செய்த தவப் பயனால் பூசை செய்யும் பாக்கியம் கிட்டுகிறது. அழகும் ஒளி  பொருந்தியவனும் ஆன பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேசன்,சதாசிவன், கணேசன், கந்தன், பாதுகாப்பினைத் தருபவனாகிய இந்திரன், சூரியன், சந்திரன், அழகிய வடிவம் கொண்டவனாகிய காமன், அங்கி, நந்தி, குபேரன், கும்ப முனியாகிய அகத்தியர் மற்றும் சிறந்தவர்களான முனிவர்கள் ரிஷிகள் ஆகியோர்கள் அன்னையை பூசனை செய்தார்கள்

விளக்க உரை

  • 96 தத்துவங்கள் என்பதை ஸ்தூலத்தை முன்வைத்து 36 மற்றும் 60 ஆக பகுக்கப்படும் என்றும் சிவ தத்துவங்களோடு கூடும் போது ப்ரிதிவி சார்ந்து இருப்பதும், சக்தி தத்துவங்களோடு கூடி ஆகாசம் எங்கும் நிறைந்திருத்தலை குறிக்கும் என்பதையும் சக்தி உபாசனை செய்பவர் அருளினார்.
  • துரைச்சி – தலைவி, ஐரோப்பியப் பெண், உலோகநிமிளை
  • வாமம் – தொடை, அழகு, ஒளி, இடப்பக்கம், நேர்மையின்மை, எதிரிடை, தீமை, அகப்புறச்சமயம், பாம்பு வகை, முலை, செல்வம்
  • ஏமம் – பாதுகாப்பு
  • கூர் – மிகுதி, கூர்மை, கூர்நுனி, குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு, இலையின்நடுநரம்பு, கதிர்க்கூர், காரம், குத்துப் பாடானபேச்சு, மிக்க, சிறந்த

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 24 (2019)


பாடல்

வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே 

வராகி மாலை

கருத்து – வாலை புவனை திரிபுரை மாலயன் தேவர் ஆகியவர்களால் எக்காலத்திலும் வணங்கத்தக்கவள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

அணிமா, லகிமா, மகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எட்டு சித்திகளையும் அளிப்பவளும் பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்ணாக இருப்பவளும், சத்திபேதங்களுக்குள் ஒன்றான வாலையால் காலையில் வணங்கப்படுபவளாகவும், பார்வதி என்று அழைக்கப்படும் புவனையால் மாலையில் வணங்கப்படுபவளாகவும், திரிபுரசுந்தரி என்றும் அழைக்கபடுபவளும் உச்சி வேளையில் வணங்கப்படுபவளாகவும் இருக்கும் திரிபுரையால் வணங்கப்படுபவளுமாக இருக்கும் வராகியின் ஆலயத்திற்கு சென்று அவளது அன்பில் தோய்ந்து திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்களும் பாடி துதிக்கின்றார்கள்.

விளக்க உரை

  • வாலை – பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண், சத்திபேதங்களுளொன்று, திராவகம் வடிக்கும் பாண்டம், சுத்தம், பாதரசம், சித்திராநதி
  • புவனை – பார்வதி
  • உன்னுதல் – நினைத்தல், பேச வாயெடுத்தல், எழும்புதல், முன்னங்கால் விரலையூன்றி நிமிர்தல்
  • வாலை புவனை திரிபுரை ஆகியவர்களால்  எக்காலத்திலும் (காலை, மாலை, உச்சி ஆகிய பொழுதுகளில்) வணங்கப்படுபவளாக இருப்பவள் என்றும் மற்றொரு பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. குருவருள் கொண்டு அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 10 (2019)


பாடல்

நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே

வராகி மாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்து – பலவிதமான துன்பங்களுக்கு எதிர்ப்புக் கட்டு (சத்ருசம்ஹாரம்) வராகி அம்மனே என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் பலவகையிலும் அழிவு ஏற்பட்டு மரணத்திற்கு நிகரான அளவில் நாசம் அனுபவிப்பவித்தல், நாசத்தின் காரணமாக ஏற்படும் இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று நடுங்குதல், நமனாகிய எமன் தனது கயிற்றினை வீசும் போது அது பற்றி கவலைப்படுதல், இகழ்ந்து வையப்படுதல், களங்கம் ஏற்பட்டு தாழ்வு கொண்டு அவமானப்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றது.

விளக்க உரை

  • நாசம் – அழிவு, பாழ், மரணம்
  • இழுக்கு – அவமானம். நிந்தை, களங்கம்; வழு, தாழ்வு, பொல்லாங்கு, மறதி, வழுக்கு நிலம்
  • காலம் 16-ஆம் நூற்றாண்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 6 (2019)


பாடல்

பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
சுத்தமெய்ஞ் ஞானவொளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே

திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை –  வள்ளலார்

கருத்து – திருஒற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடை நாயகியின் பெருமைகளை கூற அவளே அருள் புரிய வேண்டும் என்று கூறும் பாடல்.

பதவுரை

திருஒற்றியூரில் விளக்கும் தூயவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் மயிலே,வடிவுடை மாணிக்கமே, பக்தர்கள் உள்ளத்தில் என்னும் போற்றுதலுக்கு உரித்தானதான அழகானக் கோயிலில் வாழ்கின்ற மேலான பரதேவதையே, தூயதானதும்,  மெய்ஞானமானதும் ஆன அறிவொளிப் பிழம்பே, மெய்ஞான அறிவினால் பெறப்படுவதான சுகவாழ்வின் ஆனந்தமே! தினமும் உன் பெருமை மிக்க புகழைச் சொல்ல எனக்கு அருள் புரிய வேண்டும்.

விளக்க உரை

  • பத்தர்-பக்தர்
  • மேவும்-வாழ்கின்ற
  • சித்-அறிவு
  • எற்கு-எனக்கு
  • நின்மலர்-தூயவர்
  • உன் மத்தர்-பித்தர், சிவப்பரம்பொருள்
  • வாமம்-இடப்பக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 3 (2019)


பாடல்

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவிஎங்கள்
கருத்திற் பயிலும் வாராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறிகாணும் பகைத்தவர்கே

வராகி மாலை

கருத்து – அம்மையின் படைத்தலைவிகளும் அம்மையே என்பதையும், அவளிடம் பக்தி கொண்டவர்களை தான் என்றும் விலக்கமாட்டாள் என்பதையும் விளக்கும் பாடல்.

பதவுரை 

தேவர்கள் வேண்டிய படி அவர்களின் துன்பம் நீங்குவதன் பொருட்டு அவர்களுக்காக சென்று சிரித்தபடியே மூன்று கோட்டைகளை அழித்தவனின் இடபாகத்தில் அமர்ந்திருக்கும் தேவி ஆனவளும், பஞ்சமி திதிக்கு உரித்தானவளும் ஆன  வாராகியின் வல்லமை புரியாமல், அவள் வணங்கும் பக்தர்களை வருத்தி பகைத்து கொண்டால்  தன் பக்தனுக்கு தீங்கு இழைத்தவர்களை கண்டு தீப்பற்றி எரியும் நெருப்பானது எத்தனை வேகமா எரியுமோ அத்தனை வேகமாக பகைத்தவர்களை கண்சிவந்து வெட்டி வீழ்த்துவாள்.

விளக்க உரை

  • பயிலுதல் – தேர்ச்சியடைதல்; சொல்லுதல்; பழகுதல்; சேவித்தல்; நடமாடுதல்; தங்குதல்; கற்றல்; நிகழ்தல்; நெருங்குதல்; பொருந்துதல்; ஒழுகுதல்; ஒலித்தல்; அழைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)


பாடல்

தண்டமும் கயிறும் சூலமும் புகைந்த
      தழல்உமிழ் கண்களும் வளைந்த
   தந்தமும் சிவந்த குஞ்சியும் கரிய
      சயிலமே அனையமே நியுமாய்

அண்டிய சமனைக் கண்டுள(ம்) மயங்கி
      அறி(வு)அழிந்(து) இருவிழி களும்பஞ்(சு)
   அடைந்துவாய் புலர்ந்து மெய்மந்து திடும்போ(து)
      அம்பிகை தன்னுடன் வருவாய்!

வண்டுகள் முரன்று முகைகுறுக்(கு) உடைந்து
      மதுமழை பொழிந்துதா(து) அளைந்து
   மடல்விரிந்(து) அலர்ந்து பொன்நிறம் பொதிந்த
      மன்றல்அம் கொன்றைவார் சடையாய்!

கண்டவர் உளமும் கண்ணுமே கவரும்
      கநதந வநிதையர் நெருங்கும்
   கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
      காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹார மூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்து – இது எம பயம் அறுக்கச் செய்யும் பதிகம்.

பதவுரை

வண்டுகள் ஆலாபனஞ் செய்யக்கூடியதும், அரும்புகள் மொட்டவிழ்ந்து தேன் மழை போன்று  பொழியக்கூடியதும், மடல் விரிந்து பெரியதாக இருப்பதும், பொன் நிறம் கொண்டதும், மணம் வீசுவதுமான கொன்றைப் பூவினை சடையில் உடையவனே,  பழைய போர் கருவி ஆனதும் தண்டம் எனப்படுவதும் ஆன தண்டாயுதம், கயிறு, சூலம், கோபத்தினால் புகை உமிழ்வதைப் போன்ற நெருப்பினை உமிழும் கண்கள், வெளியே தெரியுமாறு இருக்கும் வளைந்த தந்தம் எனப்படுவதான பல், சிவந்ததான திருவடி, பாறை ஒத்த கரிய நிறம் ஆகிய வடிவங்களோடு இருப்பவனே, காண்பவர் உளமும், கண்ணும் கவரும் படியாகவும், மிகுந்த செல்வங்களை கொண்ட பெண்கள் நெருங்கும் படியாக இருப்பதும், மிகுந்த அலைகள் உடையதும் ஆன கடவை எனும் அந்த பதியாய் இருப்பவனே, காலனை வருந்தச் செய்தவனும் ஆனவனே, இறப்பு காலத்தில் வரக்கூடிய காலனாகிய எமனைக் கண்டு உள்ளம் மயங்கி, தான் கற்றறிந்த அறிவு அழிந்து, இரு விழிகளும் பார்க்க இயலாமல் பஞ்சு அடைத்தது போன்ற நிலை கண்டு, நீர் இல்லாம வாய் உலர்ந்து, அதனால் தளர்ந்து மனமானது குற்றம் கொண்டு திடுக்கிடும் போது உடனாகிய அம்பிகையுடன் வருவாய்.

விளக்க உரை

  • மந்து – அரசன், மனிதன், குற்றம்,காய்வேளை, கொழிஞ்சி, மந்துகால், யானைக்கால்
  • அலர்தல் – மலர்தல், பரத்தல், பெருத்தல், விளங்குதல், சுரத்தல்
  • கடவை = திருக்கடவூர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)


பாடல்

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – திரிபுரை ஒன்றொடு ஒன்று ஒவ்வாத நிலைகள் பலவற்றையும் உடையவள் எனக் கூறும் பாடல்.

பதவுரை

என்னை வழி நடத்துபவள் என்று  முன்னால் அழைக்கப்பட்ட தலைவியான  திரிபுரை பால் சுரந்து விம்ம நிற்றலால் கூடிய அருள் பெருக்கு, இளமையாக இருத்தல் ஆகிய காரணங்களால் கொங்கைகள் விம்ம பேரழகுடன் நிற்பவள்; கலைகள் அனைத்தையும் தனதாக்கிக் தன்னுள் தானே அடக்கி நிற்பவள்; பற்றற்று இருப்பவள். இவ்வாறான அவள் என் மனம் நிலைத்தன்மை பெறுவதற்காக என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.

விளக்க உரை

  • கலை – நூல்களை அடக்கி நிற்றல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரனை முன்வைத்து 16 கலைகளை உடையவள் என்று சாக்தத்தில் சில இடங்களில் கூறுப்படுவதாலும், அனைத்து கலை வடிவங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பதாலும் ‘நூல்களை அடக்கி நிற்றல்’ எனும் பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • கன்னி – குமரி, இளமை, புதுமை, முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர், அழிவின்மை, பெண், தவப் பெண், என்றும் இளமையழியாத பெண்-சப்தகன்னியர், துர்க்கை, பார்வதி, குமரியாறு, கன்னியாராசி, புரட்டாசி மாதம், அத்தம் நட்சத்திரம், தசநாடியிலொன்று, கற்றாழை, காக்கணம்
  • தையல் – தைப்பு, தையல் வேலை, அலங்காரத் துணி, புனையப்படுவது, கட்டழகு, மேகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 20 (2019)

பாடல்

தானே தனக்குச் சரியாய தாயே வருக வுரைக்கவினை
   தடிவாய் வருக நினைக்கமுத்தி தருவாய் வருக மலர்பொதிந்த
கானே புரையுங் கருங்கூந்தற் கவுரி வருக மெய்ஞ்ஞானக்
   கரும்பே வருக வருள்பழுத்த கனியே வருக தெவிட்டாத
தேனே வருக வானந்தத் திருவே வருக பெருவேதச்
    செல்வீ வருக வெங்கள்குல தெய்வம் வருக வுருகுநருண்
மானே வருக விமயவரை வனிதாய் வருக வருகவே
   மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே

திருக்குடந்தை ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் – திரு மீனாட்சிசுந்தரம் பிள்ளை 

கருத்து – மங்களாம்பிகையையின் அருட் சிறப்புகளைச் சொல்லி பிள்ளைத்தமிழில் அழைக்கும் பாடல்.

பதவுரை

இப்பிரபஞ்சம் முழுவதிலும் தனக்கு நிகராக எவரும் இல்லாமல் தான் மட்டுமே தனக்கு நிகராக இருப்பவளாகிய தாயே வருக; தன்னால் செய்யப்பட்ட வினைக்களை உரைக்க கண்டால் அதை விலக்கி அவர்களுக்கு அருள்பவளே வருக; உன்னைபற்றிய எண்ணம் கொண்டு உன்னை நினைக்க முற்பட்ட உடன் அவர்களுக்கு திருவடியாக பத முக்தியை அளிப்பவளே வருக; மலர்களால் சூழப்பட்ட காட்டினைப் போன்ற கருங்கூந்தலை உடையவளே வருக; அடி, நுனி என இல்லாமல் எல்லா இடங்களிலும் இனிமையாக இருக்கும் மெய்ஞான கரும்பு போன்றவளே வருக; உண்ணுவதற்கு இனிமையாக இருக்கும் அருள் நிறைந்த கனி போன்றவளே வருக;  பருகத் தெவிட்டாமல் இருக்கும் தேன் போன்றவளே வருக; வானம் வரையில் வடிவம் கொண்டிருக்கும் திருவடிவம் கொண்டவளே வருக; பெருமை உடைய வேதங்களின் உட்பொருளாக இருக்கும் செல்வியே வருக;  எங்கள் குல தெய்வம் ஆனவளே வருக; ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு அழைத்துச் செல்லும் நறுமணம் உடைய மானே வருக; இமையாதவர்கள் ஆகிய தேவர்களின் துன்பத்தை நீக்குபவளே வருக;  வேதங்களும் மறைகளும் ஒலிக்கும்  குடந்தையில் வீற்றிருப்பவளே வருக வருக என்று மங்களாம்பிகையை பிள்ளைத்தமிழில் அழைக்கிறார்.

விளக்க உரை

  • புரைதல் – ஒத்தல், தைத்தல், மறைத்தல், பொருந்துதல், நேர்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 19 (2019)


பாடல்

அணைத்துமிகத்தான் உருக்கி எடுத்துப்பார்த்தால்
     ஆதிமிக சோதி என்ற தங்கத் தாய்தான்
நினைத்தபடி தான்குடுக்குஞ் சோதித்தாயை
     நித்தியமுஞ் சுத்தமதாய்ப் பூசைப்பண்ணி
மனதைமிகத் தானிருத்தி சோதிப்பார்த்தால்
     மகத்தான வாசிசிவ யோகந் தன்னால்
சினந்து வருங்காலனவன் ஓடிப் போவான்
     சிவசிவா குருபதத்தில் தெளிவாய் நில்லே

சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்து – ஆக்ஞையில் சோதி வடிவான அன்னையைக் கண்டவர்களை காலன் அணுகான் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

பிராணன் தனது வாகனமாக மூச்சுடன் வா (உள்மூச்சு- காற்றுத் தத்துவம்) என்றும்  சி(வெளி மூச்சு – அக்னி தத்துவம்)  என்றும் கூடி குண்டலினி அக்னியை மேலே எழுப்புகிறது. அவ்வாறு எழுந்த அக்னி வ என்னும் காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் லலாட சக்கரத்திலிருந்து அமிர்தத்துடன் விசுத்தி சக்கரத்தில் சேகரிக்கப்படுகிறது. (சில நூல்கள் அனாகத சக்கரமான இதயம் அதைக் குறிக்கின்றது என்றும் கூறுகின்றன). இவ்வாறு பெறப்படும் அமிர்தம் நமது விசுத்தியிலும் இதயத்திலும் நின்று நம்மை காலத்தைக் கடக்க வைக்கிறது. இவ்வாறு எழும் அக்கியானது குருபதம் எனப்படுவதாகிய ஆக்ஞையில் உணர்வு செல்லும்போது ஞானம் ஏற்படுகிறது. அதனால் ஒருவர் தெளிவுடன் குருபதம் எனப்படும் ஆக்ஞையில் நிற்க வேண்டும். தினமும், மனம் வாக்கு காயங்களால் தூயவராகவும் மனத்தை  வாசி எனும் சிவ யோகத்தால் நிறுத்தியவராகவும் இருப்பவர் மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களில் கூறிய பொருள்களை சேர்த்து உருக்கி எடுத்து பார்க்கும்போது ஆக்ஞையில்  அடியவர்கள் விரும்பதை அவர்கள் விரும்புகின்ற அளவில் கொடுப்பவளானவளும், தங்கமேனி கொண்ட  தாய் என அழைக்கப்படுபவளும் ஆன சக்தி தென்படுகிறாள். அவ்வாறு தேவியின் தரிசனத்தைப் பெற்றால் உயிர்களை கொல்ல சினம் கொண்டு வரும் காலன் ஓடிப்போவான்.

விளக்க உரை

  • வாசி/சிவயோகம் என்பது சித்தர்களின் பிராணாயாம முறை என்பதால் குரு முகமாக செய்முறைகளை அறிக.
  • ஆதிமிக சோதி – அறியமுடியா காலத்தால் இருந்து இருப்பவள்; அளவிட முடியா ஜோதி வடிவாக இருப்பவள்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!