
பாடல்
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் கண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – நவாக்கரி சக்கர வழிபாட்டின் இம்மைப் பயன்களைக் கூறும் பாடல்
பதவுரை
நவாக்கரி சக்கரத்தின் மீது நீ அன்பு கொண்டு அதுபற்றி நின்றால் இவ்வுலகில் நீ நினைக்கின்ற நன்மைகள் எல்லாம் நினைத்தபடியே முடியும்; காலன் எனப்படுபவனாகிய கூற்றுவன் உன்னைக் கொண்டுபோவதற்குக் குறித்துவைத்த நாள் அதுவும் அங்ஙனம் உயிரினைக் கொண்டுபோகாமலே கடந்துவிடும்; உனது பெயர் உலகம் எங்கும் பரவும்; உடம்பின் நிறம் பகலவனது விரிந்து வீசுகின்ற கதிர்கள் போல மாறும்; இப் பயன்களை எல்லாம் இவ்வகையில் நீ எய்துவாயாக.
விளக்க உரை
- நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.