உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.
விளக்கஉரை
`காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தங்கள் உச்சியாய் – யோக தொடர்புள்ளவர்கள் குரு மூலமாக அறிக
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
தேவாரம் -ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
புறப்பொருளை அறியும் கருவி மட்டும் கொண்டு, தன்னையறியும் உயிரறிவு துணையுடன் தன் முயற்சியால் அறிந்து அணுவதற்கு அரியவன் ஆனவனும், ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுதொழில்களை செய்யும் தில்லைவாழ் அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவனும், வீடுபேறு அளிக்கும் அறிய பெரிய வேதங்களின் உட்பொருளாக இருப்பவனும், மிகவும் சிறிதானதும், நுண்ணியதுமான அணு அளவில் உள்ளவனும், யாரும் தம் முயற்சியால் உணரமுடியாத மெய்ப்பொருள் ஆகியவனும், தேனும் பாலும் போன்று இனியவனும், தானே விளங்கும் சுயம்பிரகாசம் ஆகிய நிலைபெற்ற அறிவே ஆன ஒளிவடிவினனும், எல்லா வகையிலும் மேம்பட்டவனும், வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையில் எழுந்தருளும் அப்பெருமானுடைய உண்மையான புகழைப் பற்றி பேசாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களே.
விளக்கஉரை
பெரும்பற்றப் புலியூரானை – புலி கால் முனிவர் பூசித்த திருப்பாதிரிப் புலியூரில் உள்ளவனை என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது. அந்தணர் என்று தில்லை வாழ் அந்தணர் குறித்த செய்தியாலும், புலிக்கால் முனிவர் பற்றிய செய்தியாலும், ஆறாம் திருமுறையில் முதல் தலம் மற்றும் கோயில் எனப்படுவதும், சைவர்களால் குறிக்கப்படுவதும் ஆன ‘கோயில்’ என்று விளக்கி இருப்பதாலும் இப்பொருள் கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. பிழை இருப்பின் ஆன்றோர்கள் மன்னிக்க.
‘அணு’ என்றதனால் நுண்மையும், ‘பெரியான்’ என்றதனால் அளவின்மையும் அருளியது குறித்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
‘பிறவாநாள்’ – பிறவி பயனின்றி ஒழிந்த நாளாதல் பற்றி. அறம், பொருள், இன்பங்கள் நிலையற்ற உலகியல் இன்பம் தருவதான சிறுமை தரும் என்பது பற்றியும், இறை இன்பமான பெரும் பயன் தராது எனும் நோக்கில்
தந்தை தாயுநீ என்னுயிர்த் துணையுநீ சஞ்சல மதுதீர்க்க வந்த தேசிக வடிவுநீ உனையலால் மற்றொரு துணைகாணேன் அந்தம் ஆதியும் அளப்பருஞ் சோதியே ஆதியே அடியார்தஞ் சிந்தை மேவிய தாயுமா னவனெனுஞ் சிரகிரிப் பெருமானே.
தாயுமானவர்
பதவுரை
திருவடியையும் திருமுடியையும் முறையே அரியும் அயனும் தேடிய பொழுது அவர்கள் அறியமுடியாதபடி அழலாக நின்ற பெரும் சுடர்ப் பிழம்பே! உண்மையான அடியார்களுடைய தூய உள்ளத்தில் பொருந்தியும், தாயுமானவன் எனும் தனிப்பெயர் வாய்ந்த சிரகிரிப் பெருமானே, அடியேனுக்கு தந்தையும் நீயே, தாயும் நீயே, எளியேனுடைய உயிர் ஈடேறத் துணைபுரிய வந்த உயிரினுக்கு உயிரான துணையும் நீயே; உள்ளத்தில் தோன்றும் கவலைகளை நீக்கி, ஆட்கொண்டு அருளும்படி எழுந்து அருள வந்த சிவகுருவும் நீயே;
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
சீர்காழி தலத்தில் உறையும் ஆபத்து தாரணனவன், அழகு பொருந்திய செம்மையான திருமேனியும், செம்மையான மலர்ந்த முகமும், கருமை நிறம் கொண்ட மேனியும், தண்டாயுதமும் கொண்டு, காள பைரவர், அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என்று எண் திசைக்கும் ஒன்றாக இருக்கும் அட்ட பைரவராக விரிந்து*, கூர்மையான மூன்றாக இருக்கும் சூலமும், அடர்ந்த இருள் போன்ற கூந்தலில் கொன்றைப் பூவினை அணிந்தவன் ஆவான்.
விளக்கஉரை
* கணங்கள் எட்டும் – மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை (8) பைரவ மூல வடிவங்கள் எனவும், இந்த எட்டு வடிவங்களே 64 பைரவ மூர்த்த பேதங்களாக வடிவங்களாக விரிவடைகின்றன என்ற பொருளில் விளக்கப்பட்டுள்ளது. மாற்று கருத்து இருந்து தெளிவு படுத்தினால் மகிழ்வு அடைவேன்.
சீர் – 1) செல்வம், 2) அழகு, 3) நன்மை, 4) பெருமை, 5) புகழ், 6) இயல்பு 7) சமம் 8) கனம் 9) ஓசை 10) செய்யுளின் ஓருறுப்பு 11) உறவினருக்கு விழாக்களில் செய்யப்படும் சீர்
கார் – 1) கருமை 2) கரியது 3) மேகம் 4) மழை 5) கார்ப் பருவம் ஆவணி, புரட்டாசி மாதங்கள் அடங்கிய மழைக் காலம் 6) நீர் 7) கார்நெல் 8) கருங் குரங்கு 9) வெள்ளாடு 10) ஆண்மயிர் 11) எலிமயிர் 12) கருங்குட்டம் 13) இருள் 14) அறிவு மயக்கம் 15) ஆறாச் சினம் 16) பசுமை 17) அழகு 18) செவ்வி
குறைந்த வலிமையை உடையவனாய் இருந்தும், செருக்கு அடைந்து அதனால் ‘தன்னை உண்மையான வலிமை உடையவன்’ என்று கருதி மிகப் பெரிய தேரில் ஏறிச் சென்று, கோபம் காரணமாக சிவந்த, கொடிய கூர்மையான விழிகளால் கயிலையை, தன் பத்துத் தலைகள் கொண்டு அதனைத் தூக்க முற்பட்டவனாகிய இராவணனுடைய செருக்கினை அழித்து, வலியைப் போக்கிய பெருமான் திருஅவளிவணல்லூரில் உறைகின்றார்.
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்
பதினொன்றாம் திருமுறை – சேரமான்பெருமாள் நாயனார் – திருக்கயிலாய ஞானஉலா
பதவுரை
(அவரவர் வினைப்பயன் கொண்டு) எவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடை விடாது நினைக்க்கின்றார்களோ, அவர்களுக்கு அந்த நினைப்பு உருவமாய்த் தோன்றி அந்த வழியில் அருள் ஈந்து ஆட்கொள்ளும் தன்மை உடையவன் சிவபெருமான்.
விளக்கஉரை
உள்குதல் – உள்ளுதல், நினைத்தல், உள்ளழிதல், மடிதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்.
எந்த உருவத்தையும் தனது உருவமாகவே கொண்டு அருள்புரிகின்ற சிவபெருமான் பிறர், இவ்வாறு அந்த உருவமாய் நிற்பதை எவரும் காணத நிலையை உடையவன்.
எனவே உயிர்வர்க்கத்தினர் அனைவரும் ‘பசு’ எனவும், சிவபெருமானே அனைவர்க்கும் தலைவனாகிய ‘பதி’ எனவும் விளக்கம் பெறப்படும்
இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும் மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய் பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே
ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்
பதவுரை
நின்னுடைய கருணை என்னும் மழையை முற்றிலுமாக பொழிந்து, என் உள்ளத்தில் படிந்து இருக்கின்ற மயக்கம் எல்லாம் போக்கியனும், மிக நெருக்கமாக உமை அம்மையை இடப்பாகத்தே கொண்ட பெருமானானவனும், தான் இருக்கும் இடம் எல்லாம் ஒளிர்தலை உடைய உயர்ந்த மணிகள் இழைத்த தில்லையம்பலத்துள் எழுந்து அருளுகின்றவனும் ஆன கூத்தப் பெருமானே, நான் செய்த எல்லாப் பிழையையும் பொறுத்து அருளிய உன்னுடைய பெருந்தன்மைக்கு யான் என்ன கைம்மாறு செய்வேன்!
விளக்கஉரை
சிவபெருமானுடைய திருவருள் பெருமையை வியந்து கைம்மாறு செய்ய மாட்டாத தமது எளிமையை வெளிப்படுத்தியவாறு.
உழை – உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது, உதவு, பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி, இடம், பக்கம், அண்மை, கலைமான், (ஆண்மான்), உப்புமண், உவர்மண், யாழின் ஒரு நரம்பு, ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை, பூவிதழ்
‘இழையெலாம் விளங்கும் அம்மை’ – உயரிய அணிகல வகைகள் அனைத்தையும் குறைவற அணிந்தவள் ஆகிய உமாதேவியை என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. சிவ சக்தி சொரூபமான காட்சி என்பது பற்றி மேலே குறிப்பிட்டவாறு விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் கொண்டு உய்க.
என் புரிவேன் – என்ன கைம்மாறு செய்வேன் என்னும் பொருளில்
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அகோர மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன? சங்காரம் எனும் அழித்தல்
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன் ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
பதவுரை
வினைகளின் பயனாக செய்யப்படும் தொடக்கச் செயல்களாகவும், அவ்வாறு செய்யப்படும் எல்லாப் பொருள்களிலும் சந்தேகம் இல்லாமல் நிறைந்திருப்பவரும், அவ்வாறு நாம் செய்யும் வினைகளின் கருமப் பயனாக இருப்பவரும், அதன் பலனாக பெறப்படும் வினைகளின் கருமப் பயன்களில் இருந்து நம்மை விடுப்பவரும் ஆன பொய் என்று உரைக்க இயலாத மெய்யான இறையாகிய கணபதியை நாம் சரண் அடைகின்றோம்.
விளக்கஉரை
ஊட்டி – பறவை,விலங்குகளின் உணவு, உணவு, குரல்வளை, மழை; ‘ஊட்டி விடுப்பான்’ – மழை எவரையும் எதிர்பாராமல் பொழிவது போல் வினைகளை நீங்குபவர்
இறக்கும் நிலையை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாமல் அதை நீக்குதலுக்கு தகுதியானவன் நீயே அன்றோ! ஆதலினால் எமனுக்கு ஏவலராய் உள்ள தூதர்கள் வந்து எனக்கு துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னை அன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
தத்புருட மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன? திரோபவம் எனும் மறைத்தல்
உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே
திருநெறி 2 – சிவஞான சித்தியார்
பதவுரை
காட்சிப் பொருளாகிய உருவத் திருமேனி, உருவம் இல்லாத நுட்பத்தினை குறிக்கும் அருவத் திருமேனி ஆகியவற்றையும் கண்டோம். இவை இரண்டும் கண்டதால் அரு உருவத் திருமேனி என்பது பெறப்படும். இவ்வாறாக சொல்லப்பட்ட மூன்று வடிவங்கள் ஆகிய மூன்று நிலைகளும் ஆன்மாக்கள் உய்ய வேண்டும் என்பதற்காக இறைவன் கொண்ட நிலை என்று காண்பாயாக.
விளக்கஉரை
இறைவன் ஒன்பது பேதங்களில் கலந்து நின்று, ஆன்மாக்கள் உய்ய, நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் உருவத் திருமேனி வடிவமாகவும், விந்து, நாதம், சத்தி, சிவம் எனும் அருவத் திருமேனி வடிவமாகவும், சதாசிவம் எனும் அருவுருவ வடிவமாகவும் இருந்து ஐந்தொழில் நடத்தி தன்னை உணர்த்துவான்.
வானில் உள்ள தேவர்கள் போற்றும் அமுதமாய், வந்து என் உள்ளம் புகுந்தவனாய், உயிர்களின் பிறப்பிற்கு காரணமான குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய், ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய், தேன் போல தெளிவாக தோன்றுபவனே, தேவர்களுக்கும் தேவனாய் நின்றவனே , சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பி செய்பவனாய் உள்ள கயிலை மலையானே! உன்னை போற்றுகிறேன்.
விளக்கஉரை
மருந்து – அமுதம்
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி – தன் முயற்சி இல்லாமல் இறைவன் தானே வந்து ஆட்கொண்டு அருள் புரிந்த விதம் பற்றிய குறிப்பு.
‘தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி’ – தேவ லோகத்தையும், சுடு காட்டையும் சமமாக பாவிப்பவன் எனும் பொருள் பற்றியது
பூம்பாவாய்! பராக்கிரமும், கோபமும் தன் இயல்பாக உடைய இராவணனின் தோள்களை நெரித்து உகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலை எனும் கபாலீச்சரத்தில் அமர்ந்து உள்ளவனுக்கு, இடை வடிவமான பண்ணோடு பாடும் சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் / யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் ஆகிய பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டு மகிழாமல் செல்வது முறையோ?
விளக்கஉரை
தண்ணா – வெம்மையைச் செய்யும்; ‘தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை’ – குளிர்ச்சி பொருந்திய, தமிழை வளர்க்கிற பாண்டி நாட்டையுடையவனும் எனும் வரிகளுடன் மாற்றுப் பொருள் கொண்டு சிந்திக்கத் தக்கது.
கண்ணார் – பகைவர்
தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகியோர் பதினெண் கணத்தினர் என்று மற்றொரு குறிப்பில் காணப்படுகின்றது.
முன் காலத்தது விழா – அட்டமிநாள் விழா; தற்காலத்தில் சித்திரைப் பௌர்ணமி; ‘கடம் மட்டமிநாள்’ – அடர் அட்டமி நாள் – அடர் எனும் சொல் பூவிதழ் எனும் பொருளோடு இணைந்து எனக் கொண்டால் முழுமை பெற்ற (இரண்டு) அட்டமி நாள்; ஆக மொத்தம் 16 எனவே சித்திரை பௌர்ணமி எனவும் கொள்ளலாம்; கடலாடுதல் சித்திரை நிலவில் நிகழும் என்பதாலும், அவ்விழா குறித்து எழுதப்பட்டதாகவும் இருக்கலாம்.
உடையவனே! உன் அடியார்களில் சிலர் உன்னிடத்தில் இருந்து உன்னுடைய அருளைப் பெற்றார்கள். அடியவனாகிய நானோ அழிவில்லா துர்நாற்றமுடைய பிணத்தைப் போன்று வெறுப்பினால் வீணே மூப்படைகின்றேன். அவ்வாறு இருந்தும் இளகாத மனம் உடையவனாகிய என்னுடைய கொடுமையான வினைகளை நீக்கி, அடியேனுடைய உள்ளத்தில் உன்னுடைய கருணையாகிய கடல் பொங்கும் வண்ணம் இடைவிடாது உருகும்படி அருள் புரிவாயாக.
விளக்கஉரை
பிணத்தின் – வெறுப்புக் காரணமாக உடம்பை பற்றிய சொல் ‘பிணம்
ஐம்புல நுகர்ச்சியின் காரணமாக உலகில் காணப்படுகின்ற பல பொருள்கள், கருத்தில் முற்றுப் பெற்று நினைக்கின்ற பலதெய்வங்களை வழிபடுதல், பிறரால் போற்றப்படுகின்ற திவ்ய தலங்களில் வாழ்தல், பெருகி ஓடும் நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் மற்றும் அவற்றால் வரும் பயன்களுடன் நுகர்ச்சி, உண்ணும் உணவு, உணரும் உணர்வு, உறங்கும் உறக்கம், கருதப்படும் அளவான பொன் முதலிய செல்வங்கள் ஆகியவை திருவருள் அம்மையாகிய சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.
விளக்கஉரை
சாம்பவி சக்கர வழிபாடு எல்லாப்பயனையும் தருதல் பற்றி கூறப்பட்டப் பாடல்
தானாகக்காணும் கனகம் – பொன் பெற்றபிறகு அனைத்தும் உண்டாகும் என்பது பற்றி.
காரிகை – சாம்பவி
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சிவனுக்குத் தத்புருட மந்திரம் எந்த உறுப்பாகும்? முகம்
நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று தனி உற்ற கேவலம் தன்னில் தான் ஆகி நினைவுற்று அகன்ற அதீதத்து உள் நேயம் தனை உற்றிடத் தானே தற்பரம் ஆமே
பத்தாம் திருமுறை- திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
நனவுக் காலத்தே ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, மருள் என்னும் ஐந்தும் செய்படாது அகல ஆருயிர் தனித்து நிற்கும் தனிநிலை புலப்படும். அவ்வாறு தன்னில் தானாக நின்று அகன்ற அந்நிலையில் உணர்வுக்கு உணர்வாய் விளங்கப்படும் பொருளான சிவபெருமான் திருவடியினைத் திருவருள் நினைவால் கொள்ள அந்த உயிர் தற்பரசிவமாய்த் திகழும்.
விளக்கஉரை
நாலொன்று – ஐந்து: கலை, வித்தை, அராகம், புருடன், மாயை.
நீ மனம் மகிழ்ந்து என்னிடம் வராமல் இருப்பின் என் உயிரையும் விட்டுவிடுவேன்; அரைக்கண நேரமும் நின்னைப் பிரிந்து யான் (உடல்/உயிர்) தரித்திருக்க மாட்டேன்; இதனையும் உன் மேல் ஆணையாக உரைக்கின்றேன். தீய நெறியினை உடையவர்கள் பேசுவதை இன்றுவரை கேட்டதுபோல் இனியும் அவர்களுடைய பயனில்லாத துன்பம் தரும் சொற்களை அவர்கள் அருகினில் இருந்து கேட்டு அவற்றை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்; உணவு மற்றும் உறக்கங்களையும் நான் இனி விட்டொழிக்கின்றேன்; நீ, என்னுடைய மன இயல்பை நன்கு அறிந்ததால், மனத்தால் வரும் துன்பங்களையும், சொல்லால் வரும் துன்பங்களையும் உடம்பால் வரும் துன்பங்களையும் வகை செய்து எவ்வாறு விரித்துரைப்பது? அவ்வாறு உனக்கு வகுத்து உரைப்பது என்ன பயனைச் செய்யும்?
விளக்கஉரை
அருள் வழங்க இறைவன் வராவிட்டால் உயிர் விடுதல் உறுதி என எடுத்து இயம்பியது
ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா – உன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா என்று மாற்றுக. சொற்றொடரை இருமுறைக்கு மேல் எழுதும் வழக்கம் தமிழ் மொழியில் இல்லாது இருப்பினும், தனது நிலையை அழுத்தமாக பதிவு செய்வதன் பொருட்டு மூன்று முறை ‘உன்மேல் ஆணை’ என்று பாடியிருக்கிறார்.
அரைக்கணமும் நினைப் பிரிந்தே இனித் தரிக்க மாட்டேன் – திருவருட் சூழலில் நின்று அரை நொடிப்பொழுது பிரிந்தாலும், உலகியல் மாயை படர்ந்து அறிவை மயக்கி மாற்று நெறியில் செலுத்தும்.
கோணை நிலத்தவர் பேசக் கேட்டதுபோல் இன்னும் குறும்பு மொழி செவிகளுறக் கொண்டிடவும் மாட்டேன் – உயிர் புற உணர்வோடு இருக்கும்போது உலகத்தவர் பேசும் பேச்சுக்களைக் கேட்டு, மனம் மாயா மயக்கிற்கு உள்ளாகும் என்பது பற்றியது.
திருமாலின் மகளான வள்ளியின் தனங்களோடு தனது அங்கமும் சேர்ந்து இருக்கும் படி, திருமுக அழகுடன் திருத்தோள்களால் அவளை அணைத்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்து, அருமை வாய்ந்த மயிலுடனும், வேலாயுதத்துடனும் இந்தம்பலம் என்ற ஊரில் மகிழ்ந்து ஆனந்தமாக அமர்ந்த பெருமாளே, திமில் எனும் பறையும், முருடு எனும் பலவிதமான மத்தள வகையும் ‘திந்திந் திமித் திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோ செகண செகண செக செம் செம் செகக்கண’ என தாளத்துக்கு ஏற்ப ஒலிக்கவும், ஆதிசேஷனின் முடிகள் வரை நீண்டதான அண்டங்களும் பிளந்து போகும்படி மிக்க பேரொலியை எழுப்பி, வெற்றிச் சின்னங்களான சங்கங்கள் முழங்க, அசுரர்கள் சண்டையிட்டு மடிந்த போர்க்களத்தில் தேவர்கள் ஒன்று கூடி மலர்களைக் கொண்டு அங்கு பொழிய, அருமை வாய்ந்த கோழிக் கொடி எங்கும் சிறப்பாக விளங்க, திருமாலும், பிரமனும், முனிவர்களும், அண்டங்களும் பிழைத்து உய்ய வேலாயுதத்தைச் செலுத்திய வேலவனே, குற்றம் இல்லாத, 1008 இதழ் தாமரை வடிவம் கொண்ட சஹஸ்ராரதில் இருந்து சங்க நாதம் ஒலிக்க, வேதங்கள் என்றும் சாத்திரங்கள் என்றும் சொல்லப்படும் மறைகளால் அறியப்படாது செழித்து விளங்க கூடியதும், அசைவற்றதுமான அபூர்வமான ஆகாச வெளி எனும் அவ்விடத்தில் எவராலும் அவ்விடத்தின் உண்மைத் தன்மையை அறிய முடியாதவாறு, உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் ஆகி உருக் கொண்டுள்ள அகராதி 51 அக்ஷரங்கள் ஆகி, அனைத்து லோகங்களுக்கும், ஆறுகளுக்கும், அண்டங்களுக்கும் முதன்மை பெற்றதாய், செந்நிற கிரணங்களை வீசும் பேரொளியை எல்லா இடங்களிலும் கண்டு, முதல், நடு, மற்றும் தாமரைவடிவமானதும், யோகியர் தன் மயமாய் நின்று தியானிக்கும் உயர் நிலையான துரியத்தில் சந்திர ஒளி போல் பரவுவதும், பொன்னொளி பொன்ற நிறமுடையதும், ஸ்படிகம் போன்ற வெண்மை நிறமான சுத்த வாயிலைக் கொண்டதுமான ஆகாய வெளியில், சுழி முனை நாடியின் உச்சியில், பஞ்ச இந்திரியங்களும் இன்பம் பெறக் கூடியதாய் அமுதம் போல் விளங்கும் சிவ யோக நிலையை உனது கருணையினால் அறியும்படியான வழியை யான் அடைவதற்கு, பார்வதியின் குமரனே, குமர குருவே என்று பல முறை கூற, முதிர்ந்து கனிந்த பக்தி நிலை வர, செயல் செய்வதற்கான திடம் எனப்படும் இளமையைத் தந்து, உன் திருவடியில் என்னை இணைக்க அருள்வாயாக.
விளக்கஉரை
பெரும்பேர்கண்டிகையில் இருந்து கிழக்கே செய்யூர் வழியில் உள்ளது இத்தலம் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடலில் யோக மரபு பற்றிய குறிப்புகள் பல இருப்பதாலும், அம்பலம் என்ற சொல் சிற்சபையை குறிப்பதாலும், தச தீட்சையில் பல குறிப்புகள் இருப்பதாலும், பூத்தாக்காலாயிரத்தெட்டின் வாசி பூங்கமலத் திருவடியை பூசை செய்யே (அகஸ்தியர் ஞானம்) – உண்மையான குருவினை சரண் அடையும் போது அவர் கற்றுத் தருவதில் இவையும் அடக்கம் என்பதாலும் குருமுகமாக ஆழ்ந்து அறிக.
தீ ஏந்திய கையை கொண்டு, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி உள்ளவனே, நிலம், நீர், தீ, காற்று, நீண்டவானம் எனும் ஆகாயம் என்னும் ஐந்துமாகி உள்ளவனே, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் மற்றும் மாயோன் ஆகிய திருமால் இருவரும் போற்றி நின்ற பொழுதில் நெருப்பாகி தோன்றியவனே, கற்பகத் தரு போன்றவனே, அடியேனையும், `அஞ்சதே` என்று சொல்லி அருள் புரிவாயாக.
விளக்கஉரை
இத்தலத்தில் இறைவர் ‘கற்பகநாதர்’ ஆதலின் ‘கற்பகமே` எனும் சொற்றொடர். ஆறாம் திருமுறையில் ‘கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்றும் பாங்கோடு வைத்து சிந்திக்கத் தக்கது.
அஞ்சலென்னே என்பதை `அஞ்சாதி` என்று சொல்லி அருள் புரிவாயாக என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது. ‘அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன …அஞ்சாதி யாதி அகம்புக லாமே’ எனும் திருமந்திரப் பாடலின் படி அஞ்செழுத்து சிவன் இருப்பிடம் இத்தலம் ஆகவே அஞ்செழுத்தாக சிவன் இத்தலத்தில் உறைகின்றான் என்றும் பொருள் தோன்றும். கற்றறிந்தோர் பொருள் கொண்டு உய்க.
விண்ணார் மலர்ப்பொழில் சூழ்காமி மாமலைமேலமர்ந்த தண்ணார் மதிபுனை வேணியன் ஆபதுத்தாரணன் மேல் பண்ணாப் பாடிய மாலைக்கு மாமுகன் பாதமும் நீள் கண்ணாறிரண்டுள கந்தன் பொற்பாதமும் காத்திடுமே.
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் – 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
விண்ணில் உள்ள தேவர்கள் மலர் சொரியும் இடமாகவும், சோலைகள் சூழ்ந்ததும், பொன் போன்ற உயர்ந்ததுமான பெரிய மலைமேல் அமர்ந்தவனும் குளிர்ச்சியான சந்திரனை தனது திருமுடியில் சூடியவனும் ஆன ஆபதுத்தாரணன் மேல் பண்ணால் இறைவனுக்கு ஆரம் போன்று பாடிய மாலைக்கு பெரிய முகத்தை உடைய கணபதி பாதமும், நீளமான பன்னிரெண்டு கண்களை உடைய கந்தன் பொற்பாதமும் காத்திடும்.
விளக்கஉரை
இது காப்புச் செய்யுள்.
ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.
குரு அருளோடும் திரு அருளோடும் ஒவ்வொரு பாடலாக பதவுரை எழுதப்பட இருக்கிறது. இந்த முயற்சியும் வெற்றி பெற என் குருவின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
அழிவில்லாத எழில் படைத்த ஒற்றியூர் அரசே, போற்றுகின்றவர் எல்லாருக்கும் பொதுவாய் நின்றவனே, இன்று இருப்பவர் நாளை இல்லாதவர்களாக மறைகின்றார்களே, இதற்கு நாம் என்ன செய்வது என நினைந்து மனம் திடுக்கிட்டு இங்கும் அங்கும் சென்றும் நின்றும் தளர்கின்றேன்; நான் சிறியவர்களுக்குள் சிறியவன் ஆனதலால் செய்யக்கூடியது என்ன? நன்மைதரும் நின்னுடைய நாடகமாடுவதைப் போன்ற இரண்டு மலர்போன்ற நின் திருவடிகளை யான் அடைவதற்கு, நீ விரும்பி அருள் செய்வாயாக.
விளக்கஉரை
கதி – நடை; செயல். ‘சிவகதி’ – சிவ நடையுடன் மாற்று கருத்து இல்லாமல் ஒத்து. அஃதாவது சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி, ‘அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்’ என மாற்றி உரைக்க.
‘உணர்வு ஆகி’ என்பது ஞான அனுபவத்தை வழங்கி, அவ்வழிகளில் இன்பம் பெறப்பட்டதை குறித்தது
‘போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – போற்றுவோர் தூற்றுவோர் அனைவர்க்கும் பொதுவாகிய கடவுள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆயினும் `யாதோர் தேவர் எனப்படுவார்க் கெல்லாம் மாதேவன் அல்லால் தேவர் மற்று இல்லையே` எனும் திருநாவுக்கரசர் வரிகளும், `யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்` எனும் அருணந்தியாரின் திருவாக்கும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
அறியா தன்மையாலும், அதுபற்றி நிற்றலும் இன்மையால் ‘நான் செய்வது என்னை’ எனும் வரிகளும் ‘நான் சிறியருட் சிறியேன்’ எனும் வரிகளும்