தீங்கு தருகின்ற விடத்தை உண்டு, மாலையில் தோன்றும் செந்நிறத்தை போன்றதுமான பெருமான், ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய பொன் போன்ற தோளின் மீது மேலாடையாக அணிந்து, திரு ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி, எம் இல்லத்தில் வந்து `’திருவே! உணவு இடு’ என்று கூற, உள்ளே சென்று யான் மீண்டு வர ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து, பூத கணங்கள் சூழப் ‘புறம்பயம் நம் ஊர்’ என்று கூறிப் போயினார்.
விளக்கஉரை
ஏகாசம் – ஏகம்+ஆகாசம் – ஒரே ஆகாயம் – மேலாடை
‘போகாத வேடத்தார்’ – அவரது வேடம் என் கண்ணினின்றும் நீங்காத இயல்பானது
மூலவர் சிரசில் அம்பு பட்ட தழும்போடு கிழக்கு நோக்கிய அமைப்பு, அம்பாள் சிவனாரின் வலப்புறம் தனிக்கோயிலில் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி
சிவனாரின் காவலர்களாகிய முண்டி சிவனாரை வழிபட்டு அருள்பெற்ற தலம் முண்டீஸ்வரம் (மற்றது திண்டி – திண்டீஸ்வரம் ( திண்டிவனம் ). இருவருக்கும் தனித்தனி சிலைகள்
கல்லால மரமில்லாமல் தட்சிணாமூர்த்தி மலைமீது நந்தியை வாகனமாகக் கொண்டு திருக்காட்சி
துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு வந்த போது இங்கு குளத்தில் அதிசயமான தாமரை மலரை சேவகர்களை அனுப்பி பறித்துவர அவர்களால் பறிக்க இயலாதவாறு மலர் குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது கண்டு மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட, குளம் முழுவதும் செந்நிறமாக மாறி மலரின் நடுவில் லிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோயில் கட்டி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப் பை (பொக்கணம்) தந்தால் கல்வெட்டில் இறைவன் பெயர் பொக்கணம் கொடுத்த நாயனார்
ஆற்றின் கரையிலுள்ள கோயில் – ஆற்றுத்தளி என்பதல் .ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர்
கொடிமரம் அற்ற திருக்கோயில்
தலம்
திருமுண்டீச்சரம்
பிற பெயர்கள்
கிராமம், முடீச்சரம், திருமுண்டீஸ்வரம்
இறைவன்
சிவலோகநாதர் முண்டீஸ்வரர், பொக்கணம் கொடுத்த நாயனார், ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர்
காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்,
கிராமம் அஞ்சல், வழி உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை வட்டம்,விழுப்புரம் மாவட்டம்
PIN – 607203.
04146-206700, 98946-25154
வழிபட்டவர்கள்
பிரம்மன், இந்திரன்
பாடியவர்கள்
திருநாவுக்கரசர் 1 பதிகம், வள்ளலார்
நிர்வாகம்
இருப்பிடம்
திருவெண்ணெய்நல்லூரில் இருந்து 2-கி. மீ.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 209 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 19 வது தலம்.
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 6
பதிக எண் 85
திருமுறை எண் 1
திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகனாவன், உயிரோடு உடல் இயைந்து நின்றவன், எல்லா உறவினருமாக ஆனவன், ஒருவரிடத்தும் தனக்குப் பின் உரிமையாக இல்லாத வகையில் எவ்விடத்தும் நிறைந்து நின்றவன், அழிவில்லாதவன், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவன், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவன், நல்ல தவ வேடங்கொண்டவன், சரணடைந்த மார்கண்டேயனுக்காக பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவம் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆவான்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
மனமே! தெளிந்த அறிவினை உடையவனும், தென்இலங்கைக்கு இறைவனாகவும்# விளங்கிய இராவணன், ஈசன் வீற்றிருந்து அருளும் கயிலைமலையைப் பெயர்க்க முற்படும் போது, பற்றிய அளவில் அவன் முடிகள் கொண்ட பத்து தலைகளையும், இருபது தோள்களும் நெரியுமாறு அவன் கர்வம் அழித்த தேவனாகிய நம்முடைய சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, வினைகள்யாவும் தேய்ந்து ஒழிய நீ ஆராய்ந்து நினைவாயாக.
விளக்கஉரை
தெற்றல் – அறிவில் தெளிந்தவன். இராவணன் ஒழுக்கத்தில் பிழை உடையவன் ஆயினும் பல நூல் கற்றதால் அறிவில் சிறந்தவன்.(இராவணம் கொடி வீணை என்பது கண்டு உணர்க).மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறும் புதுப்பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.
#இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்கள் இருபதாலும், ஈஸ்வர பட்டம் பெற்றமையாலும் இறைவன் என்று அழைக்கப்பெற்று இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
திரிபுரை ஆனவள், மா மாயை என பெரியதாக குறிப்பிடப்படும் சுத்த மாயை, மாயை என குறிப்பிடப்படும் அசுத்த மாயை, சுத்த மாயை மற்றும் விந்து ஆகியவற்றால் குறிப்பிடப்படும் சுத்த தத்துவங்களின் காரியங்களாகிய வயிந்தவம், வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை முதலிய நால்வகை வாக்குகள் ஆகிய நாத வடிவங்கள் #, அசுத்த மாயையிலிருந்து தோன்றிய ஆன்ம தத்துவங்கள் தோன்றுதற்கு முதலாகிய பிரகிருதி மாயை எனப்படும் ‘மூலப் பிரகிருதி’ ஓராறு கோடி மந்திரங்களின் முடிவாகிய ஏழனுள், `ஹும், பட்` என்று இரண்டுமாகவும் சில இடங்களில் ஒன்றாக எண்ணப்படுவதும் ஆன சத்தியின் வேறுபாடுகள், சிவன் நினைத்தவிடத்து சிவன் அசையா பொருளாகவும், ‘ஆம்’ அசை நிலை கொண்டு அசையும் பொருள், பிற பொருள்களில் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் நிற்பாள்.
விளக்கஉரை
சொல்லப்படும் பொருள்கள் அனைத்திலும் தானேயாயும், அல்லாதவாறும் சிவ சத்தி வடிவம் கொண்டு நிற்பாள் என்பது பற்றியது.
அசுத்த மாயையின் காரியங்கள் ‘மாயேயம்’ , பிரகிருதியின் காரியங்கள் ‘பிராகிருதம்’ ஆகியவற்றை இங்கு உணர்க
ஓவுதல் – நீங்குதல்
# ஞானசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி`, ஆரணி, ஜெனனி, உரோதயித்திரி, வாமை, ஜேஷ்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரமதனி, சருவபூததமணி, மனோன்மனி, சத்தி, விந்து, மனோன்மணி, மகேசுவரி, உமை, திரு, வாணி` எனவும் பல்வேறு வடிவங்கள்
ஆறுகோடியிற்றாமான மந்திரம் – ஆறு ஆதாரங்களுக்கு உரித்தான மந்திர எழுத்துக்கள்
புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்
எவரும் அறியாமல்
என் கைகள் நீண்டும் குறுகியும் ஆகின.
யாரும் அற்ற ஒரு பொழுதினில்
யாசகம் வேண்டி நின்றேன் ஒருவனிடம்.
‘உனக்கு மட்டும் ஏன் கைகள் இப்படி ஆகின்றன?’
என்றான் அவன்.
யாசித்தல் இயல்பு ஆன பொழுதுகளில்
இடம் சென்று பெறுதல் அரிதானதால்
இவ்வாறானது என்று உரைத்தேன்.
எப்பொழுது இது மறையும் என்றான்?
இயல்பாய் ஒருவன்
இடும்போது மறையும் என்றேன்.
எவரும் அறியா விஷ்யங்களை
இனம் கண்டு கொண்டது எங்கனம் என்றேன்?
இயல் புன்னகை பூத்து
கைகளில் இடுகிறான்.
புவனம் கனகம் ஆகிறது
காலம் உறைகிறது.
மவுனமாய் நின்று கற்பம் சாதித்தாக்கால் மகிழ்ச்சியுடன் சொல்லுகின்றேன் முதலா தவத்தாலே யொரு சட்டை யுரியும் பாரு தன்மையுடன் யிரண்டாண்டில் ஒன்று போகும் அவையடக்க மூன்றி லொன்று கழன்று போனால் அப்பனே மூன்று சட்டை கழன்று போனால் இவனுக்கு வயது சொல்ல முடியா தென்று என் குருவும் எந்தனுக்கு உரைத்தார் தானே
அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி
பதவுரை
எதுபற்றியும் உரைக்காமலும் மௌனமாக இருந்து, முன்னர் குறிப்பிட்ட முறைகளில் தச தீட்சை கொண்டு, உணவு கட்டுப்பாடும் கொண்டு வந்தால் நிகழுபவற்றை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். செய்யப்படும் அவ்வாறான தவத்தாலே ஒரு சட்டை உரிந்து விடும். அத்தன்மை பற்றி இரண்டாவது ஆண்டில் இன்னொரு சட்டை போய்விடும். மேலே குறிப்பிட்ட இரண்டு சட்டையும் கழன்று போகும் போது மூன்றாவது சட்டையும் கழன்று போகும். அவ்வாறு மூன்று சட்சையும் கழன்று விட்டால் இவன் வயது சொல்லமுடியாதவாறு இருப்பான் என்று என் குருநாதர் எனக்கு உரைத்தார்.
விளக்கஉரை
கற்பம் – முன் பாடல்களில் தச தீட்சை முறை, உணவு முறைகள், விலக்கவேண்டியவை, அக்காலங்களில் ஏற்படும் நோய்கள், அதில் இருந்து விலகும் வழிமுறைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இப்பாடல்களை விளக்கவே பல்வேறு நியமங்களை அகத்தியர் விதித்துள்ளார். இதன் விபரங்களை தெரியாதவர்களுக்கு உரைத்தால், அவர் தலை வெடித்து சிதறும் என்றும், பல பிறவிகளில் வினைகள் தொடரும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். எனவே ஆன்றோர்கள் தகுந்த குரு கொண்டு பாடல்கள், விளக்கங்கள் பெறுக.
காரிய அவத்தை பற்றி, கனவிலே நின்று ‘இது கனவு’ என்று கனவைத் தரிசித்தல் அல்லது கனவினை கண்டு கொள்ளுதல் அரிதானது. நனவாகி, அவ்வாறு கிட்டும் அனுபவம் தன்னில் கருவிகள் இல்லாத காரணத்தால் நிஜத்தில் எவ்விதத்திலும் பலன் அளிக்காது. முனைவன் அருளில் ஒன்றி அவ்வாறான அருளிலே நின்று கண்டது என்னவெனில், அவ்வாறான சமயங்களில் காரிய அவத்தை பொருந்தாது, மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, யான் காரண அவத்தைகளைத் தரிசித்தல் எப்படி?
விளக்கஉரை
சுத்த தத்துவங்களைக் கொண்டு அறிய வேண்டுமென்பது கருத்து.
நண்ணுதல் – கிட்டுதல், பொருந்துதல், செய்தல், இருத்தல்
காரண அவத்தை
கேவல அவத்தை : ஆதிகாலம் தொட்டு ஆணவ மலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை கேவலஅவத்தை
சகல அவத்தை : மாயை பற்றி உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது சகல அவத்தை.
சுத்த அவத்தை : பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை சுத்த அவத்தை
காரிய அவத்தை
நனவு : சாக்கிரம் என்ற கூறப்படும் இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
கனவு : சொப்பனம் என்று கூறப்படும் இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.
உறக்கம் : சுழுத்தி என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
பேருறக்கம் : துரியம் என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
உயிர்ப்படக்கம் : துரியாதீதம் என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
யோக மரபில் கண்டத்தில் இருந்து மேலே சென்று புருவ மத்தியாகிய ஆக்கினையில் பூசித்தல் மனித நிலையில் இருந்து விலக்கி தேவர்கள், முனிவர்கள் போன்ற மேல் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதுவும் கருத்து. மேல் விபரங்களை குரு மூலமாக அறிக.
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
கூற்றுவனை தள்ளும் பாதத்தை உடையவனை, சீகாழிப்பதியை உடைய ஆபதுத்தாரணனே! தெளிவாக விரைந்து செல்லும் இமயமலை இருந்து வரும் பனி நீரும், சேற்றில் தோன்றும் குங்கும நிறமான தாமரை மலர்களும், செம்மையான தேனைத் தரும் மலர்களும் கொண்டு உன்னுடைய பாதத்தில் சாத்தி, நீங்காத இன்பம் கொள்ளும்படி அன்பு காட்டி எனை ஆண்டு அருளுவாய்.
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வ …… ருடனாகி அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல லற்று நின்னை வல்ல …… படிபாடி முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி முத்த னென்ன வுள்ள …… முணராதே முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு முட்ட னிங்ங னைவ …… தொழியாதோ தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு தித்து மன்னு பிள்ளை …… முருகோனே சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய சித்ர வண்ண வல்லி …… யலர்சூடும் பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி பத்தர் கன்னி புல்லு …… மணிமார்பா பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள பச்சை மஞ்ஞை வல்ல …… பெருமாளே.
திருப்புகழ் – அருணகிரிநாதர்
பதவுரை
தித்தி என்னும் தாள ஜதி ஒலிக்கும் நிலைபெற்ற தில்லையில் நடனமாடுபவரின் கண்களினின்றும் தோன்றி நிலை பெற்றுள்ள மகனாகிய முருகனே, எல்லாச் சித்திகளும் இடமாய் விளங்கும் வேலாயுதம் கொண்ட திருக்கரத்தை உடையவனே, அழகிய திருவுருவம் வாய்ந்த வள்ளி மலர் சூடிப் பணியும், பக்தர்களுடைய மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும் செம்மலே, வெள்ளை யானையை ஆகிய ஐராவதத்தை உடைய இந்திரனின் கன்னியாகிய தேவானை தழுவும் அழகிய மார்பனே, பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலை கொண்டையில் கொண்ட பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே! தந்தை, தாய், வீடு, சேர்த்து வைத்துள்ள பொன், வெள்ளி, தந்தையின் சகோதரி ஆகிய அத்தை,அவர்களோடு பொருந்திய பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய், செய்தொழிலால் குறைவான வருமானம் பெற்று, முடிவுறாத கல்வி கொண்டு, அல்லல் தரும் உறவினர்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி, உன்னை இயன்ற வகையினால் பாடி, எனக்கு முக்தி தர வல்லவன் நீ ஒருவனே என்றும், திருவலம் என்னும் தலத்தின் பெருமான் என்றும், வள்ளியின் கணவன் என்றும் என்னுடைய உள்ளத்தில் நான் உணராமல், அறியாமை நிறைந்த புலவனும் எளிமையான மூடனுமாகிய நான் இப்படி வருந்தி துன்புறுதல் நீங்காதோ?
விளக்கஉரை
சில இடங்களில் திருவல்லம் எனும் தலத்திற்கு பதில் வல்லக்கோட்டைத் தலம் என்று உரைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உணர்க.
இறைவனின் திருக்கண்ணை இறைவி மூடிய தவறுக்காக மனம் வருந்தி இறைவனை அரூபமாக பூசித்து, இடது கண், இடது தோளும் துடித்து சாபம் நீங்கப் பெற்றத் தலம்.
அம்மை பாதிரி மரத்தினடியில் தவம் செய்து சிவனாரை மணந்து கொண்ட தலம்.
நாள் தோறும் அம்பிகையே பள்ளியறைக்கு எழுந்தருளும் தனிச்சிறப்பான சுவாமி கோயில்.
கடலில் இருந்து கரையேறிய திருநாவுக்கரசர் ‘ஈன்றாளுமாய்’ எனத் தொடங்கும் பதிகத்தில் ‘அதான்றாத்துணையார் இருந்தனன் தன் அடியோங்களுக்கே’, என்று குறிப்பிடுவதால் இப்பெருமான் ‘தோன்றாத்துணை நாதர்’
திருநாவுக்கரசரை திருஞானசம்பந்தர் முதன்முதலில் ‘அப்பர்’ என்று அழைத்த தலம்
திருநாவுக்கரசரை கல்லில் பூட்டிக் கடலில் இட்டபோது ‘சொற்றுனை வேதியன்’ என்ற பதிகம்பாடி அவர் கரையேறிய இடம் கரையேறவிட்டகுப்பம் (தற்போது வண்டிப்பாளையம்) இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளது.
திருநாவுக்கரசர் அமர்ந்தகோலத்தில் காட்சி.
வியாக்ரபாதர் வழிபட்டு அருள்பெற்ற பஞ்சபுலியூர் தலங்களில் ஒன்றானதும், புலியின் பாதங்களை வேண்டிப்பெற்றதும் ஆனது இத் திருத்தலம்.
பாதிரியைத் தலமரமாகக் கொண்டதாலும், புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) வழிபட்டதாலும் (பாதிரி+புலியூர்).
வெளிப்பிரகாரத்தில், தல விருட்சமான இரண்டு பாதிரிமரங்கள்
பூத்து காய்க்காத தலவிருட்சமான பாதிரி (சித்திரை மாதம் முழுவதும்). கவசத்துடன் – தலவிருட்சமான ஆதிபாதிரிமரம்
மங்கண முனிவர், இறை வழிபாட்டிற்காக மலர் பறித்து, மகிழ்வுடன் திரும்பி வரும்போது தூமாப்ப முனிவரை கவனிக்காமல் அவரிடம் தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம். பின் நாளில் வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்)
கன்னி விநாயகர் வலம்புரிமூர்த்தி. அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் திருக்காட்சி
துர்க்கை சன்னதியில் அம்மை அருவவடிவில் தவஞ்செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதி. அதன் பொருட்டு உருவமில்லாமல் பீடம்.
திருக்கோயிலூர் ஆதீன சுவாமி அதிஷ்டானம் – வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு அம்மன் கோயிலுக்குப் அருகில் உள்ள சாமியார் தோட்டம் அருகில்.
‘கடை ஞாழலூர்’ என்பது மருவி ‘கடலூர்’
சந்நிதிவீதியில் ஸ்ரீமத் ஞானியார் சுவாமிகள் மடாலயம்
மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, சஷ்டி, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி திருவாதிரை , தை அமாவாசை / மாசிமகம் கடலில் தீர்த்தவாரி, பௌர்ணமி பஞ்சபிரகார வலம், சித்திரையில் வசந்தோற்சவம், வைகாசி 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், சித்திரை சதயத்தில் அப்பர் சதயவிழா,
வண்டிப்பாளையம் அப்பர்சாமி குளத்திற்கு ஒருநாள் தீர்த்தவாரி
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7.00 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு பாடலேஸ்வரர் திருக்கோயில்
திருப்பாதிரிப் புலியூர் – அஞ்சல்
கடலூர் – 607 002.
04142-236728, 98949-27573, 94428-32181
திருஞானசம்பந்தர் 1 பதிகம், திருநாவுக்கரசர் 1 பதிகம், அருணகிரிநாதர், ஸ்ரீ பாடலேஸ்வரர் தலபுராணம் – திருவாடுதுறை ஆதீனம், இலக்கணம் சிதம்பர முனிவர் ,கலம்பக நூல்
நிர்வாகம்
திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம்
இருப்பிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 201 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 18 வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 121
திருமுறை எண் 8
திரிபுரையானவள், தண்டனை தருவதற்கு ஏற்ற வராக முகத்தை உடையவள் (வராகி); இழிகுணம் படைத்த தீயவர்களது உடலங்களை அவர்களின் காலத்தில் அழிப்பதற்காக உலக்கையோடு சங்கு, சக்கரம், ஏர், அங்குசம், பாசம் ஆகிய ஏழு ஆயுதங்களை ஏந்தி அபயம், வரதம் ஆகியவையும் கொண்டு இருப்பாள்; தங்கள் இடர்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் சிரித்த முகத்தையுடையவளாக விளங்குவாள்.
வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், அன்பரன்றிப் பிறர் எவரும் அறிதற்கரியவனாக இருப்பவனும், வேத முடிவான கடவுளாக இருந்து நடனம் புரியும் குற்றமற்றவனும், உலகெங்கும் பரந்து விளங்கும் பரமானந்த சொரூபமாய் விளங்கும் நாதமாகி எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும், எண் குணங்கள் எனப்படும் தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவற்றை உடையவனும் ஆன முழு முதற்கடவுளாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைகின்றோம்.
விளக்கஉரை
சுதந்தரத்துவம்,விசுத்த தேகம், நிரன்மயான்மா, சர்வஞ்த்வம், அநாதிபேதம், அநுபத சக்தி, அநந்த சக்தி, திருப்தி ஆகியவை வேறு பெயர்கள்
இப்பாடலில் வரும் ஆழ் நுட்ப கருத்துக்க அனைத்தும் ஈசனை குறிப்பதாகவே இருக்கும். ஆகவே சிவ தத்துவம் வேறு காணாபத்தியம் வேறு அல்ல என்பது விளங்கும்.
மூலாத மூர்த்தி கணபதி என்பதும், துரியாதீதம் முடிவில் வரும் நாதாந்தம் என்பது ப்ரணவப் பொருள் என்பது கண்டு அனைத்திற்கும் ஆதி மூர்த்தி கணபதி என்று அறிக. மேல் விபரம் வேண்டுவோர் குரு மூலமாக அறிக.
திருஞானசம்பந்தரின் அடியவர்கள் சென்று வாழும் பதியானது, பூவுலகம் மேல் இருக்கும் ஆறு நிலையான உலகங்களான, சூரிய சந்திர நட்சத்திர மண்டலங்களையுடைய புவர் லோகம் எனும் சுடர் உலகத்தில் வாழ்பவர்களும், இந்திராதி தேவர் வாழ் உலகமாகிய சுவர் லோகத்தில் வாழ்பவர்களும், மரீசி முதலிய மகான்கள் வாழும் உலகமாகிய மக லோகத்தில் வாழ்பவர்களும், சன்னு முதலிய பொது ஞானியர் வாழும் சன லோக உலகத்தில் வாழ்பவர்களும், சனகர் முதலிய சிறப்பு ஞானியர் வாழும் தவ லோகத்தில் வாழ்பவர்களும், பிரம்ம தேவனுடைய உலகமாகிய சத்திய லோகம், திருமாலினுடைய வைகுந்தம் மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலே உள்ள சீகண்டருத்திரர் உலகம் எனும் சிவலோக சிறப்பித்துச் சொல்லத் தக்க சுத்தர்கள் எனப்படுவோராகிய மலம் நீங்கிய தூயோர், முத்தர்கள், பல ஊழி காலமாக உச்சித் தலத்துக்கு மேலும் அவைகளுக்கு அப்பால் என்று சொல்லும் மெய்யுணர்ந்தோர் கூறுவார்கள்.
விளக்கஉரை
19-May-2018 : நம்பியாண்டார் நம்பிகள் குரு பூஜை ( வைகாசி பூராடம்)
பெருமானை மறைத்தும் மறந்து போகச் செய்யும் படியாகிய செய்தும், உலக நாட்டத்தில் திளைக்கும் படி செய்யும் வலிய நெஞ்சினை உடையவர்களால் உணர்தற்கு அரியவனாய், வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் பரவி நிற்கும் பெருமானாய், காளை மேல் ஏறும் திறனுடையவனாய், பாம்புகள் படமெடுத்து ஆடவும், சடை தொங்கவும், உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்
நெஞ்சமே! ஈசானம் முதல் சத்யோஜாதம் வரை ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும், யானையை அஞ்சுமாறு அதன் தோலை உரித்தவனும், தீயேந்தி ஆடுவானும், திருமீயச்சூர் இளங்கோயிலில் இருந்து அருள்புரிவனும் ஆகிய எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு; அந்த நினைப்பால் வாழ்வாய்.
திங்களை முடித்தார் கண்டாய் திரிகூடச் செல்வர் கண்டாய் எங்குள சித்துக் கெல்லாம் இறையவர் இவரே என்று நங்கைமார் பலரும் கூறும் நன்மொழித் தேறல் மாந்தி மங்கையாம் வசந்தவல்லி மனங்கொண்டாள் மயல்கொண் டாளே
திருகுற்றாலக் குறவஞ்சி – திரிகூடராசப்பக் கவிராயர்
பதவுரை
இளம்பிறையை ஆகிய சந்திரனை சடையில் முடித்திருப்பதைப் கண்டாய்; இவரே திரிகூடநாதர் ஆவர் என்று அறிவாயாக; எல்லா இடங்களிலும், எல்லா வகையான மாயை எனும் சித்து வித்தைகளுக்கும் இவரே தலைவர் என்று பெண்கள் பலரும் சொல்கின்ற நல்ல தேன் ஒத்த சொல்லை பருகி, மங்கையான வசந்தவல்லி மனத்தில் அச்சொற்களை கொண்டவளாகி, திரிகூடநாதர் மீது மயக்கம் கொண்டவளானாள்.
விளக்கஉரை
தோழியார், திருக்குற்றாலநாதர் புகழைக் கூறக் கேட்டு வசந்தவல்லி காதல் கொள்ளுதல்
தலையில் சந்திரனை பிறையாக அணிந்தவனும், பெருமை மிக்க செயல்களைச் செய்கிறவர்களும், நல்ல பண்புடையவர்களாக விளங்குகின்றவர்களும், புகழ்ச்சியை விரும்பாதவர்களும், உலகியல் நோக்கத்தினை பிரதானமாக கொண்டு செயல்படுவர்களும் ஆன பெரியோர்களின் தலைவனும், வேத வடிவங்களாகி அதன் தலைவனாக இருப்பவனும், மழுவாகிய வாளை உடையவனும், மால் துயிலுகின்ற கடலாகிற பாற்கடலிலே தோன்றிய நஞ்சினை உண்டு அதனால் ஏற்பட்ட கண்டத்தை உடையவனும், கோபம் கொண்டு கனல் சேர்ந்த விழிகளால் காமனைக் எரித்தவனும், சிவபெருமான் தம் திருநடனத்தைப் புலப்படும்படிக் காட்டியருளும் செல்வனுமாகிய காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தை உறைவிடமாக கொண்டவனாகிய இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம்.
விளக்கஉரை
காட்டுப்பள்ளிக் குறையுடை யான் – அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பொருள் பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்பட்டுளது. ஆன்றோர்கள் ஆய்ந்து அறிக.
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்
பதவுரை
எல்லா மும்மல ஆன்மாக்களும் அனாதி காலம் தொட்டு சிவனுக்கு உடைமை ஆகையால், சிவனைப்போல அனாதித்தன்மை பெற்ற அணுவான அந்த மும்மல ஆன்மாவை, அனாதி காலம் தொட்டுவரும் ஆணவம், மாயை, கன்மம் என்கிற துன்பங்கள் முற்றிலும் நீங்கும்படி அகலச் செய்து சிவசக்தி சொருபமாக இருந்து காத்தல் தொழில் செய்தல் சிவனுக்கு கடமை என்று அறிவாயாக.
விளக்கஉரை
இருத்தலிலும், முத்தியிலும் ஆன்மாவுக்குச் செயலில்லை என்பது பெறப்படும்
காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர் நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால் ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
உடம்பு ஆகிய நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செலுத்துதலினால் வழியறியாது மாயைக்கு உட்பட்டு மயங்குகின்ற உயிர்கள், சிறிதே உணர்வு பெற்றுச் தூயவனாகிய சிவன் மேல் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், ஆயத்தேர் எனும் சமாதி யோக வழியில் சீவன் சிவனை அடைந்து அவனாகி விடும்.
விளக்கஉரை
சிவன் அருள் பெற்று, சாயுஜ்யம் எனும் இறைத்தன்மையில் சிவமாவதற்கு முதலில் அன்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட பாடல்.
உடம்பை தேராக உருவகம் செய்ததினால், அதன் இயல்யு ‘மாயத் தேர்’ ஆனது.
ஆத்மா ஓர் தேகம் அடைந்து சில காலம் பயணிப்பதை பயணம் என்று கவிதை நடையில் குறிப்பர். நம் ஆத்மாவானது காயம் எனும் தேர் ஏறி அதனை இயக்கும் மனம் எனும் பாகன் கைகொடுக்க மாயம் எனும் நிலையின்மையில் பயணிக்காது எது உண்மையென்று உணர்விக்கும் நேயம் எனும் மார்க்கம் பற்றி அதில் பயணித்தால் அழிவில்லாத மெய்ப்பொருளாகிய சர்வேஸ்வரனின் அருள் கிடைக்கப் பெற்றால் மட்டுமே அடைய இயலும் ஆய்தல் அதாவது உட்தேடல் எனும் கிட்டுதற்கறிய பாக்கியம் பெற்று அதன் மூலம் நான் எனும் நிலையறுத்து நானே அவன் எனும் மிக உயர்ந்த அஹம் பிரஹ்மாஸ்மி எனும் அத்வைத நிலை அல்லது ஒருமை நிலை அண்டும்.
சக்ர வடிவத்தில் மேலே எழுந்து, சலந்திரனை அழித்து, அவன் தலையை அறுத்து, அவன் ரத்தத்தினை அருந்திய தருணம் அறிந்து, தாமரை மலர் போன்ற கண்களை உடைய திருமால் சிவனை பூசித்தார்; அவ்வமயம் சிவன் வெளிப்பட்டு ‘வேண்டியது என்று’ கேட்க, உண்மையான ‘இச் சக்கரம் வேண்டும்’ என்றார்; காலத்தால் மாறாத பெருமை உடைய சிவன் இந்த முக்கியமான சக்கரத்தை திருமாலுக்கு ஈந்தார்.
விளக்கஉரை
25 மகேச மூர்த்தங்களில் ஒன்றான ‘சக்ரவரதர்’ இத்துடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.