நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயல்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.
விளக்கஉரை
கதி – நடை; செயல். ‘சிவகதி’ – சிவ நடையுடன் மாற்று கருத்து இல்லாமல் ஒத்து. அஃதாவது சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி, ‘அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்’ என மாற்றி உரைக்க.
‘உணர்வு ஆகி’ என்பது ஞான அனுபவத்தை வழங்கி, அவ்வழிகளில் இன்பம் பெறப்பட்டதை குறித்தது.
இறைவன்சுயம்புமூர்த்தி. லிங்கத் திருமேனியராக சிறிய ஆவுடையாருடன் கிழக்கு நோக்கிபடி, அம்பாள் சிவனாரின் வலப்புறம் தனிச் சன்னதியில் நின்ற கோலம் – கிழக்கு நோக்கி திருக்காட்சி
அகத்தியர் பூஜித்த ஆதிஜோதிர்லிங்கம் – இத்திருகோயிலின் எதிரே உள்ளமலையின் கீழ்பகுதியில் (மலை வேறு பெயர்கள் – ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஔஷதகிரி) (கங்கை, உபமன்யுமுனி, வியாக்ரபாதர், அக்னிவழிபட்டது.-2கிமீதூரம்).
கைகளில் தாமரையும் , நீலோத்பலமும் ஏந்தியுள்ள வடிவில் அம்பாள்
திரைக்குப்பின் சுவாமியும் அம்மனும் இருப்பதால் நந்தி நேர் எதிர்திசையில், நேரான தலையுடன் கூடிய அமைப்பு
திருமால், பிரம்மசாரியாக வந்து (மாணி – பிரம்மசாரி) மகாபலியிடம் மூன்றடி மண்கேட்டு அவனையழித்த பழிதீர வழிபட்ட தலம்
சிவனார் கருவறை முன்பு எப்போதும் திரை (காரணம் 1 ) – தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதாசர்வகாலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதாலும், கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதாலும் தனிபள்ளியறை இல்லாமல் – அவர்களுக்கு காவல்புரிவதற்காக 11 ருத்ரர்களில் ஒருவரான ”பீமருத்ரர்” திரைச்சீலை வடிவில்
சிவனார் கருவறை முன்பு எப்போதும் திரை (காரணம் 2 ) – மகாவிஷ்ணு மாணி எனப்படும் பிரம்மச்சாரியாக வழிபடுவதற்கு காவலாக பீமருத்ரர் திரையாகஇருப்பது
வழிபாட்டில் முதல்மரியாதை பீமருத்ரருக்கு.
வாமனாவதார வரலாறு சிற்பங்களுடன் கூடிய மூலவர் கருவறைவாயில்
பஞ்சாட்சரம்பொறிக்கப்பட்டுள்ள நடராஜர் திருமேனி
வடநாட்டு ருத்ராட்ச வணிகனாகிய அத்ரியிடம் திருடர்கள் கொள்ளையடிக்கமுற்பட, இறைவன், அத்ரியை திருடர்களிடமிருந்து காத்து உதவிபுரிந்தத் தலம். எனவே இத்தலம் ‘உதவி ‘, இறைவன் ‘உதவிநாயகர்’, இறைவி ‘உதவிநாயகி ‘
கோஷ்டதுர்க்கைமகிஷன்இல்லாமல்கதையுடன்திருக்காட்சி
நாகத்தை கையில் ஏந்திய தோற்றத்துடன் தட்சிணாமூர்த்தி
சூரியனால் உண்டாக்கப்பட்டு அவரே வழிபாடு செய்த கோயில்
சோழர்காலக் கட்டமைப்பிலான கோயில்
தலம்
திருமாணிக்குழி
பிற பெயர்கள்
வாமனபுரி , இந்திரலோகம் , பீமசங்கர ஷேத்திரம்
இறைவன்
வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், உதவி மாணிகுழி மகாதேவர், மாணிக்கவரதர்,
இறைவி
அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி
தல விருட்சம்
கொன்றை
தீர்த்தம்
ஸ்வேத தீர்த்தம் (சரஸ்வதியின் அம்சமாக) , கெடில நதி (லட்சுமிதேவியின் அம்சமாக), தென்பெண்ணை (பாகிரதி அம்சமாக )
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்
திருமாணிகுழி அஞ்சல், வழி திருவகீந்திரபுரம்
கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம். PIN – 60740104142-274485, 04142-224328, 99420-94516, 93626-38728, நடராஜன் : 8940730140
வழிபட்டவர்கள்
திரிசங்கு மகாராஜா , அரிச்சந்திரன்,
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
திருத்தலம்
1. கடலூர் – பண்ருட்டி சாலையில் திருவகீந்திரபுரம் – > சுந்தரர்பாடியை -> சாத்தாங்குப்பம் -> கெடிலநதிப்பாலத்தைக் கடந்து சென்று -> திருத்தலம்
2. கடலூர் – குமணங்குளம் சாலை வழியாக
3. கடலூர் – நடுவீரப்பட்டி சாலை வழியாக
கடலூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 207 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 17 வது தலம்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 77
திருமுறை எண் 6
திருமாணிகுழி எனும் திருத்தலமானது, சந்தன மரங்கள், கரிய அகில் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து வந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தாங்கிக் கொண்டு வரும் கெடில நதியின் மோதும் நீரானது பாயும் வயல்களில் நறுமணம் கமழ்வதுடன் கூடியதும், மலரும் நிலையிலுள்ள (அஃதாவது மொட்டான) மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரம்மச்சாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீல கண்டனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமும் ஆகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 77
திருமுறை எண் 9
திருமாணிகுழி எனும் திருத்தலமானது, பிரமனும், திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும், ஊமத்தை, கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குவதும், மகரந்தப்பொடிகள் நிறைந்த மல்லிகை, குருந்து, மாதவி, செருந்தி, குரவம், புன்னை என்று மணம் கமழும் மலர்கள் நிறைந்த தலமும் ஆகும்.
மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம் ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
பதவுரை
மூர்த்தி, தலம், கடல் போன்ற கங்கை (தீர்த்தம்) ஆகியவற்றால் ஆனவனாகவும், அவனை அறியாதவனாக இருப்பினும் உயிர்களுக்கு நித்தமும் நன்மையை அளிப்பவனாகவும், அறியாமையை அகற்றி (தன்னை) அறிப்பவனும் ஆகிய எவனோ அந்த கருணை கணபதியினை புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
விளக்கஉரை
சைவ நெறியில் திருத்தலங்களைப் பற்றி சொல்லும் போது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது என்று கூறுவது வழக்கம். அவ்வண்ணமே கணபதி எல்லா வகையாலும் சிறப்புடையவன் என்பதை கூறவே ‘மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தம்’ என்ற அமைப்பு.
அறிந்தறியாத் திறத்தினாலும் – தன்னை முன்னிலைப்படுத்துகையில் அவனை அறியாவிட்டாலும் அருளுவான் எனவும், கணபதியை முன்னிலைப்படுத்துகையில் அவனை அறியாமல் இருப்பினும் அருளுவான் எனவும் பொருள்படும். ஆன்றோர் பெருமக்கள் அறிந்து உய்க.
இறந்தவர்களது எலும்புகள் பலவற்றையும், எலும்புடன் கவசம் போன்ற மண்டையோடு பலவற்றையும் தாங்கி நிற்பவனும், பேரொளி ததும்பும் மணிமுடி தாங்கியவனுமான சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற அவன், தேவர் பலர்க்கும் மணிமுடி தரித்த மேலாலவர்களுக்கும் முதலானவனாய் இருந்தான். அது மட்டும் இன்றியும், அவன் அவற்றைத் தாங்காது ஒழிவனாயின், மாயா காரியப் பொருள்கள், சிவபெருமான் கைப்பற்றுதல் இன்றி உலகில் நிலைபெறாது அழிந்து ஒழியும்.
விளக்கஉரை
எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்துதல் – தான் ஒருவனே அழிவில்லாத முழுமுதல்வன் என்பதைக் காட்டப் பெறும். ஏனைய மண்ணவர் விண்ணவர் அனைவர்களும் பிறந்து இறக்கும் உயிரினங்களே என்பதையும் அதுவே காட்டும்.
காரணமாயை என்றும் அழிவினை அடையாது, சிவபெருமான் தாங்குதலில் நிற்கும் என்பது ஆகும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
வேக வடிவம் என்பது என்ன? கால சம்ஹாரர் போல் உயிர்களுக்கு கொடியவரைத் தண்டிக்கும் திருமேனி
ஒளி குறையாத மணியுடன் கூடிய திருநீற்றைப் மார்பினில் பூசியவரும், அழகியதான திருவீழி மிழலையில் திருமணக் கோலத்தினை கொண்டவரும், குவளை மலர் மாலையை அணிந்த உமை அம்மைக்குத் தலைவர் ஆனவரும், கொடு கொட்டி ஆடும் ஆடலுக்கு ஏற்ற தாளம் உடையவரும். செழுமை உடைய கயிலாயத்தில் உள்ள எம் செல்வரும், தென் திசையில் உள்ள அதிகை வீரட்டத்தை உகந்து அவ்விடம் சேர்ந்தவரும், (துன்பத்தினால்) ஒளி குறைந்து வருந்துபவர்களைக் காப்பாற்ற மாட்டாரோ என்ற ஐயம் அனைத்தும் தீர்த்து அவர்களை ஆட்கொள்ளுபவராகிய எமது ஆமாத்தூர்த் தலைவர் எல்லா வகையிலும் அழகியரே.
ஐயுறவு தீர்ப்பார் – `துன்பங் களைவரோ களையாரோ` என்னும் ஐயம். இத்திருப் பாடலின் இறுதியில் ` ஐயுறவு தீர்ப்பார்` என்றதால், நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது உரை பொருள். மேலும், அடியவர்களை மாயையில் ஆழ்த்தும் ஐம்புலன்களது உறவை அறுப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்
வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி யேத்தப் பூதங்கள் பாடி யாட லுடையவன் புனித னெந்தை பாதங்கள் பரவி நின்ற பத்தர்க டங்கண் மேலை ஏதங்க டீர நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு, தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழ, பூதங்கள் எனப்படும் உயிர்வர்க்கங்கள் பாட, கூத்தாடுதலை உடைய தூயவனாகிய எம் தலைவர், தம் திருவடிகளை முன்நின்று துதித்த அடியார்களுடைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதூர் எனும் திருவிடைமருதூர் திருத்தலத்தை இடமாக கொண்டுள்ளார்.
தான் அழிவது மட்டும் அல்லாமல், தனது தன்னதிகாரத்திற்கும் அழிவை உண்டாகும் சிவதத்துவமான சுத்த மாயையின் வழியில் வினைகள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகே ஆராய்வதற்கு எதும் இல்லாமலும், காட்சி அளவை எவ்வாறு இயல்பானதோ அது போல அதி சூக்கும வாக்கினை உடையவன் தன்னைக் கண்டு இனி புறக்காட்சி இல்லை எனும் நிலையில், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம் ஆகிய இம்மூன்றன் தொகுதி ஆன பர சரீரம் அல்லது அதி சூக்கும சரீரத்தின் உள்ளே விளங்கும் நாதத்திற்கு இலக்கணத்தையுடையதுமான சூக்கும வாக்கானது தன்நிலை அழிந்தப்பின் பைசந்தி, மத்திமை, வைகரியாய் வெளிப்படும். பெரும் தவத்தினால் அதனை அனுபவ வாயிலாக காணப்பெறுவார்க்குச் சுத்தமாயா புவனத்தின் கண் எனப்படும் அபரமுத்தி இயல்பாக உண்டாகும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
யோக வடிவம் என்பது என்ன? தட்சிணா மூர்த்தி போல் உயிர்களுக்கு ஞானத்தை வழங்கும் திருமேனி
இறைவனுடன் ஒன்றாகி கலத்தல் என்பது எளிதான செயலல்ல; அது பேச்சால், வெறும் ஞானத்தால் வருவது அல்ல; கோடியிலே ஒருவன் மட்டுமே அதை குறிக்கோளாகக் கொண்டு அந்த நோக்கத்தை அடைவான்; ஆன்மாக்களின் ஆணவத்தை அழிப்பதை குறிக்கும், காலை தூக்கி ஆடும் தில்லை நடனம் எனும் தில்லைக் கூத்தினை ஆகாயம் எனும் வெட்ட வெளியில் பார்த்து அதை நாடு; எல்லா காலங்களிலும் அதை விரும்பிக் கொள்; அவ்வாறு கொண்டப்பின் எமன் ஏது? அனைத்து வினைகளும் நாசமாகும். மனதில், அனுராகம் என்றும் அன்பு என்றும் பொருள்தரும் மிக உயர்ந்த உச்ச நிலை ஆகிய அன்புநிலை கொள்ளும் போது, பச்சை மயில் ஏறி, வாசியின் மூலம் பரவினேன்.
விளக்கஉரை
சுப்ரமணியர் அகத்தியருக்கு உபதேசம் செய்தது
இறைவனின் தில்லை நடனம் அவனது ஐந்தொழில்களை, படைப்பு, காப்பு, லயம், மறைப்பு, அருளல், என்ற ஐந்து செயல்களை சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொன் பதிக் கூத்து, பொன் தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து எனும் கூத்து வடிவில் குறிக்கிறது.
இத் தில்லைக் கூத்தை குண்டலினி யோகத்தின் உச்சிநிலையில் காண்பதைக் குறிக்கும்.
வாலை அல்லது குண்டலினியின் நிறம் பச்சை என்றும், குண்டலினி யோகத்தின்போது மூச்சு சுழுமுனையில் பயணிப்பதால் அவ்வாறு பச்சை நிறம் தோன்றும் என சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். (மேல் விபரங்கள் குருமுகமாக அறிக)
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
போக வடிவம் என்பது என்ன? கல்யாண சுந்தரர் போல் உயிர்களுக்கு இன்பத்தை வழங்கும் திருமேனி
(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
அம்மையானவள், அனைத்து உயிர்களாக நிற்கின்றவளும், எல்லாப் பொருள்களிலும் அதன் தன்மையில் தானே ஆகி நிற்பவளும், தம் இயல்பு தன்மையினால் எங்கும் நிறைந்திருந்து ஈன்றவளாகவும் நிற்பாள். ஆகையால் பக்குவம் உடையவன் அவளை வணங்கி அவ்வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆன பயன்களை எய்துவான்.
காலை 7 மணி முதல் 10 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு பஞ்சநாதீஸ்வரர் திருக்கோவில்
திருவாண்டார் கோவில் அஞ்சல்
வழி கண்டமங்கலம், புதுச்சேரி – 605102
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், ,அருணகிரிநாதர், வள்ளலார்
நிர்வாகம்
தொல் பொருள் ஆய்வுத் துறை
இருப்பிடம்
விழுப்புரம் – பாண்டிச்சேரி ரயில் பாதையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 206 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 16 வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 87
திருமுறை எண் 1
சுடும் தன்மை மிக அதிகமாக இருக்கும் தீபமாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினை உடையவரும், கொடிய மழு ஆயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், காளை மேல் ஊர்ந்து வருபவரும், மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும், நீர் வளம் மிக்க வடுகூர் எனும் தலத்தில் உறையும் இறைவர் ஆவார்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 87
திருமுறை எண் 8
அதிர்வுகளைத் தரும் பறையும், வேய் குழல் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகளானவர், இளம்பிறை மற்றும் பெருகும் கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர். வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.
கடுவெளிச் சித்தர்
பதவுரை
தமிழில், ‘அ’ என்றும் சிவம் என்றும் குறிக்கப்படும் எட்டும், ‘உ’ என்றும் சக்தி என்றும் குறிக்கப்படும் இரண்டும் பற்றி சிவசக்தி ரூபமாய் ஆராய்ந்து, சாத்திரங்கள் அனைத்தையும் தன்னுள்ளே ஆராய்ந்து முடிவான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, கடுவெளி என்றும் வெட்டவெளி எனவும் அழைக்கப்படும் ப்ரம்மம் சார்ந்து ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி மகிழ்ச்சி பொங்க ஆனந்த களிப்பு கொள்.
விளக்கஉரை
எட்டு மிரண்டையும் – பத்து – அஃதாவது, ய – உயிர் என்றும் பொருளாகிய ஆன்மா இயல்பை அறிந்து எனவும் கொள்ளலாம்
‘கட்ட றுத்தெனை … எட்டி னோடிரண்டும்அறி யேனையே’ எனும் மாணிக்கவாசகரின் திருவாசகம் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
உருவத்திருமேனிகளில் மூன்று வகை யாவை? போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம்
ஈசனை வணங்கிடும் அடியாரது உள்ளம் எந்தவகையிலேனும் வருந்துமாயின், அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக தேசமும், அது சார்ந்த நாடும் அதன் சிறப்புக்களும் அழிந்திடும்; விண்ணுலக வேந்தனாகிய இந்திரன் ஆட்சி பீடம் மற்றும் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்து ஒழியும். இஃது நமது நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.
விளக்கஉரை
மாகேசுர நிந்தையால் விளையும் கேடு பற்றியும் சிவனடியாரது மனம் வருந்தாமல் காத்தல் நாடாளும் அரசர்க்கு முதற்கடமையாதல் என்பது பற்றியும் விளக்கும் பாடல்
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அருவுருவத் திருமேனியின் வேறு பெயர்கள் எவை? சகளநிட்களத் திருமேனி, வியத்தாவியத்த லிங்கம்
அப்பனே, இவ்வுலகில் ஸ்தூலச் சரீரம் ஆகிய உடலென்றும், சூட்சும சரீரம் ஆகிய பொருளென்றும், காரணச் சரீரம் ஆகிய உயிரென்றும் பருத்துக் காணப்படும் இம்மூன்றையும் உனக்கு உரியவை என உணர்ந்து கொண்டப்பின், எனக்குரியது எனக் கருதுவதற்கு எனக்கு உரிமை சிறிதும் இல்லை; இந்த ஏழை அடியவனாகிய என்னால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் நின்னுடைய அருட் சோதியின் இயற்கை தன்மை ஆகும் என்று அறிந்த பின்னும் இனி எனக்குப் போக நுகர்ச்சிக்கு உரிய உடல் முதலியவற்றைத் தருவாயோ? மேலும் துன்பத்தைத் தந்து சோதனை செய்வாயோ? உன்னுடைய திருவுளக் குறிப்பை அறிய வல்லவன் அல்லன்.
விளக்கஉரை
ஆன்மா சுதந்தரமின்மை கொண்டு இருக்கும் நிலையை விளக்கும் பாடல்
இறைவன் திருவருள் வடிவானவன் என்பதால் “அருட் சோதி”, அத்திருவருள் துணைகொண்டு ஒவ்வொரு சிற்றணுவும் இயங்குவதால், “அருட் சோதி இயற்கை”
துப்பாய உடல் – சிவ போகத்தை நுகர்வதற்குரிய ஞான உடம்பு.
உடலாதி – ஞான உடம்பும் ஞானப் பொருளும் பெற்று இன்னும் ஞான போகம் பெறா நிலை குறிக்கும்
அறிவதற்கு அரியவராய், அனைத்திலும் நிறைந்தவராய், கருணை உருவானவராய், கணப் பொழுதும் சிந்தையில் சிவம் பிறழா நிலைப்பவராய் ஆன என் குரு நாதரின் உத்தரவின் பேரில் இன்று முதல் ‘அமுதமொழி ‘ என்ற தலைப்பில் இனி இப்பணி தொடரும்.
அமைப்பில் இருக்கும் மாறுதல்களும் குருநாதரின் கருணையின் அடிப்படையில் அருளப்பட்டவை.
எப்பொழுதும் போல் தொடர என் குருநாதரின் அன்பினையும் ஆசிகளையும் வேண்டி தொடங்குகிறேன்.
தன்னிடத்தில் அன்பு வைத்த அன்பர்களிடத்தில் ஒன்றி அவர்களுடன் இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே நிற்கின்றவளும், அவ்வாறு நிற்கும் தன்மையில் உயர்ந்தவனும், பெரிய தலைவனாகவும் ஆன சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனி தாயாகவும், என்றும் மங்களமானவளும் ஆகிய திரிபுரை நாயகி பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் எவ்வாறு புரிந்து நிற்கின்றாள் என்ற முறையை உலகர் ஆராய்ந்து அறியவில்லை.
விளக்க உரை மத்து – நிறைவை உணர்த்தும் வடசொல். சித்து – அதிசயச் செயல்கள் வழி – சிவத்தொடு நின்றே செய்தல்
அன்றியும் நின் வரவினை ஆதரித்து, இன்றுகாறும் நின்று ஏமுறுமால்; அவற் சென்று சேருதி; சேருதல், செவ்வியோய்! நன்று தேவர்க்கும்; யாவர்க்கும் நன்று எனா,
கம்பராமாயணம்
கருத்துஉரை
அதுமட்டும் இல்லாமல்*, உன்னுடைய வருகையை விரும்பி இன்று வரையிலும் எதிர்பார்த்து இருக்கும் அந்த அகத்திய முனிவர் மகிழ்ச்சி அடைவார். ஆதலால் நீ சென்று அகத்தியரை அடைவாயாக; சிறந்தவனே! அகத்தியரை அடைதல் விண்ணவர்க்கும் நல்லதே; மற்ற எல்லார்க்கும் நல்லதே ஆகும் என்று கூறினார் சுதீக்கணர்.
விளக்க உரை
* நல்லதே நினைந்தாய்…இல்லை நின்வயின் எய்தகில்லாதவே – அம்முனிவனை அடைந்த பின்னர் உன்னிடத்தில் அடையாத பேறுகள் ஒன்றுமில்லை என்று முதல் பாடல் முடிகிறது. அதனை விரித்துக் கூறும் இப்பாடல்
இராமன் வருகை உணர்ந்து ‘எப்போது வருவான்’ என எதிர் பார்த்து ஏங்கினார் என்றும் பொருள் உரைப்பர்.
அன்புடைமையும், நல்லொழுக்கமும் இல்லாமைக்கு காரணமானதும் ஆன பசு, பாசத்தை அறுத்து அருளி, அடியேனை, ‘இவன் பித்தன்’ என்று கண்டோர் கூறும்படி செய்து, தமது திருவடிகளை விட்டு அகலாமல், வலிமையும், உறுதியும் ஆன சித்தம் என்கிற கயிற்றால் கட்டுண்டு கிடக்கும்படி செய்த திறமை மிக்கவனாகிய சிவபெருமானது திருவிளையாடலைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
உருவத்திருமேனியின் வேறு பெயர்கள் யாவை? சகளத் திருமேனி, வியத்த லிங்கம்
கச்சி ஏகம்பனே, சிவனாகிய உன்னைப் பற்றிய கதைகளை கற்க மாட்டார்கள்; நல்லவர்களாக இருப்பவர்களுக்கு கனவிலும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள்; பசித்து வருபவர்களுக்கு அன்னம் இடமாட்டார்கள்; குரு சொன்ன சொல்படி நிற்கமாட்டார்கள்; அறவழியினை பின்பற்ற மாட்டார்கள்; பெருமைக்கு உரித்தான உனது திருநாமங்களை நினைவில் கொள்ள மாட்டார்; இப்படிபட்ட இவர்கள் இருந்தாலும், இறந்தாலும் என்ன என சொல்வாயாக
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
நவந்தரு பேதங்களுள் உருவத்திருமேனி எது? மகேஸ்வரன், உருத்திரன், மால், அயன்