கருத்து – இராவணனுக்கு வேண்டி நின்றப் பின் அருளிய திறத்தையும், வேண்டாத பொழுதும் தன்னிடத்தில் இரக்கம் கொண்டு அருளிய திறத்தையும் திருநாவுக்கரசர் உரைத்தப் பாடல்.
பதவுரை
அரக்கன் ஆன இராவணன் வாய் விட்டு அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றியவனும், எஞ்ஞான்றும் மாறுபாடு இல்லாமல் இருப்பவனும், திருவண்ணாமலை வடிவமாக இருப்பவனும், இரக்கம் கொண்டு என் உடல் பெற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலும் கூடுமே?(இல்லை என்பது மறை பொருள்)
இரக்கமாய் – இரங்கி அருளி( செருக்கு நீங்கிப் பண் இசைத்து அருள் பெற்றது)
துரக்கன் – துரத்தியவன்
உரக்கன் – வலிமையுள்ளோன்
உடலுறு நோய் ஒன்னு ஆன போதிலும் அதனால் பெற்ற வருத்தம் பல வகைப் பட்டமையின் காரணமாக நோய்களை என்றார் என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சீதம் பிராப்தம் ஆகாமியம் ஆகிய மூவினைகளையும் அழித்து அதன் மூலம் உடல் நோயினை நீங்குபவன் என்பதான பொருளும் அறியப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கோ – பசு, கர்ணம் – காது. பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலத்திற்கு இப்பெயர்
லிங்கம் மிகச் சிறியதான அளவில் ஆவுடையாரில் அடங்கியிருக்கும்
சிறிய அளவுடைய மூலத்தானம்; நடுவிலுள்ள சதுரமேடையில் வட்டமான பீடம்; இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பினால் அறியப்படும் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம்; இதன் நடுவிலுள்ள பள்ளத்தின் நடுவில் தொட்டுப்பார்த்து உணரத்தக்க மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம்; பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி
விநாயகர் – யானைமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களோடு நின்ற கோலத்துடன் கூடிய “துவிபுஜ” விநாயகர் – இவர் திருமுடியில் யானைத் தலையில் இருப்பதுபோல் இருபுறமும் மேடும், நடுவில் இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமும் கூடிய விக்ரக அமைப்பு
கோயில் மதிலுக்கு வெளியே வடபகுதியில் தரைமட்டத்தின் கீழ் தண்ணீரில் பெரிய சிவலிங்கவடிவில் ஆதிககோகர்ணேஸ்வரர் திருக்காட்சி
இராவணன் இலங்கை அழியாதிருப்பதன் பொருட்டு கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து அருள்புரிய வேண்டி நின்றதால் பெருமான் இராவணனுக்கு பிராண லிங்கத்தைக் கொடுத்து இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது எனவும் இச்சிவலிங்கத்தை தலையில் சுமந்து செல்ல வேண்டும், வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் தேவர்கள் புடைசூழக் கயிலைமலை சென்று விநாயகரை வேண்டியதால் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவி தாம் உரைத்தபடி மூன்றுமுறை, அழைத்தும் வராததால் சிவலிங்கத்தைப் பூமியில் வைத்து விட்டார். இராவணன் அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்று முறை அவனது தலையில் குட்டியதால், சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்து போல அவனைத் தூக்கி எறிந்து விளையாயதால் இராவணன் பிழைபொறுக்க வேண்டினான்; இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக்கொண்டு அவரை வழிபட்டு தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோர்க்கு வேண்டும் வரங்கள் தரவேண்டும் என விளம்ப இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருளினார்.
51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம்
திருநாவுக்கரசர், தாம் அருளிய திருஅங்கமாலையில் வைத்துப் பாடியுள்ள திருத்தலம்
திருமேனியை மக்கள் தொட்டு நீராட்டி மலர்சூட்டி வழிபடக் கூடிய தலம்
வழிபாட்டு முறை – கோடி தீர்த்தத்தில் நீராடல், கடலாடுதல், பிண்டதர்ப்பணம், மீண்டும் நீராடுதல் பின் மகாபலேஸ்வரர் தரிசனம்
முரட்டுத்தனமும், கரியதான இருண்ட நிறமுமுடைய இராவணனின் பத்து வாய்களும் அலறும்படி, தன் கால் பெருவிரலை ஊன்றி கயிலைமலையின் கீழ் நெருக்கிய சிவபெருமான் வீற்றிருந்து அருளும் இடம் எது எனில் முனிவர்களும், வேத வல்லுநர்களும் தங்களது வினைதீர, ஒலிக்கின்ற கழலினை அணிந்த சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து, அரநாமத்தினை ஓதி வேள்விப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும்.
விளக்க உரை
வரைத்தலம் – கயிலை மலை
முருடு – கடின இயல்பையுடைய
இருள் நிறத்தவன் – இருண்ட நிறத்தையுடைய இராவணன்
உகிர் – நகம்
முனிவாணர் பொலிவாகி – முனிவர்கள் விளங்கி
குரைத்து அலை – ஒலித்து அசையும் கழல்
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 6 பதிக எண் 49 திருமுறை எண் 2
உலகினைப் படைத்த பிரமனது மண்டையோட்டை கைகளில் ஏந்தியவனாய், எங்கும் சஞ்சரிப்பவனாய், தன்னை சார்ந்த அடியவர்களுக்கு அமுதமாய், மலரில் மணம்போல எங்கும் பரவியவனாய், அதிகை வீரட்டனாய், என்றும் அழிவில்லாதவனாய் தன்னை அழிப்பாரும் இல்லாதவனாய், திருநீறு பூசியவனாய், தவமாகிய பெருமிதம் உடையவனாய் , பரந்த கயிலாயத்தை விரும்பி உறைபவனாய், தன்னிடத்துத் தோன்றித் தன் கருத்துக்கு ஏற்பக் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலாலும் உள்ளபடி அறிய ஒண்ணாதவனாய் மேற்குக் கடலை அடுத்த கோகரணப் பெருமான் விளங்குகின்றான்.
விளக்க உரை
தந்த அத்தன் – ( உலகத்தைப் ) பெற்ற தந்தை; பிரமன்
சாரணன் – எங்கும் சரிப்பவன்
கெந்தத்தன் – ( மலரில் ) மணம் போல்பவன்
வந்து ஒத்த நெடுமால் – தன்னிடத்துத் தோன்றி , தன்னோடு ஒத்து நின்ற ( முத்தொழில்களுள் ஒன்றைச் செய்கின்ற ) திருமால்
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
கருத்து – ஈசனை புற உலகங்களில் அனைத்திலும் நிறைந்து அதன் வடிவமாகவும் இருப்பவன் என்பதையும் அவன் வீரச் செயல்களையும் கூறிய பாடல்.
பதவுரை
இடைமருது எனும் திருத்தலத்தில் மேவிய ஈசனார், செய்யப்படுகின்றன தீவினைகளும் நல்வினைகளுக்கும் கர்ம சாட்சி ஆகி எண் திசைகளுடன் கூடியதான மேல், கீழ் சேர்த்து பத்துத் திசைகளாகவும் அதில் உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார்; ஆறுடன் ஒன்று சேர்ந்ததான ஏழு இசையாகவும் இருப்பவர்; ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களாகவும் அதன் அங்கம் ஆகிய சிக்ஷை சந்தசு சோதிடம் வியாகரணம் நிருத்தம் கற்பம் எனும் ஆறாகவும், மீமாஞ்சை நியாயம் புராணம் ஸ்மிருதி எனும் உபாங்கமாகவும், புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் நான்காகவும், ஆயுள் வேதம், வில்வேதம், காந்தருவவேதம்,அருத்தநூல் எனும் உபாங்கமாகவும், பூருவமோமாஞ்சை உத்தரமீமாஞ்சை எனும் இரு மீமாஞ்சையாகவும், கெளதம சூத்திரம் காணத சூத்திரம் எனும் இரு நியாயமாகவும் (ஆக பதினெட்டு வித்தைகள்) இருப்பவர்; ஒவ்வொரு மாதத்திற்கும் வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படும் சூரியனான தாதா, அர்யமா, மித்ரா, வருணா, இந்திரா, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அம்சுமான், பகா, பூஷா, பர்ஜனா என பன்னிரெண்டாகவும் இருப்பவர்; புதியதான கொன்றை மலரினை சூடிய சடையினை உடையவர்; கூத்து நிகழ்த்துதலில் வல்லவரான அவர் என்றும் இளமைத் தோற்றம் கொண்டவர்; தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்து அவனை எரித்தவர்.
விளக்கஉரை
ஐயிரண்டு – பத்துத் திசைகள்.
ஆறொன்று – ஏழு இசைகள்.
ஐயிரண்டும் ஆறொன்றும் என்பதை முன்வைத்து 10 + 6 எனக் கொண்டு 16 வகைப் பேறுகளை அருளுபவன் எனக் கொள்வாரும் உளர். புறவடிவங்களில் இருக்கும் பிரமாண்டத்தின் அனைத்து வடிவங்களாகவும் அவன் இருக்கிறான் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
அறுமூன்று – பதினெட்டு வித்தைகள். அறுமூன்று என்பதை முன்வைத்து பதினெட்டு புராணங்கள் என்று கூறுவோர்களும் உளர்.
கருத்து – ஈசனின் திருமேனி அமைப்பினையும் அவன் அருளும் திறத்தினையும் கூறும் பாடல்.
பதவுரை
பார்வதியினை தன்னில் ஒரு பாகமாக் கொண்டவனே, சோதி வடிவமாக இருப்பவனே, கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டு வடிவமாக இருப்பவனே, ஆதியே, தேவர்களுக்குத் தலைவனே, அழகிய அண்ணாமலையில் இருப்பவனே! சிவார்ச்சனைக்கு விதித்த சிறந்த பூக்களான* கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகியவற்றை முறையாக உன் திருநாமங்களை ஓதி அர்ச்சித்து நின்னை அல்லால் நினையுமாறு செய்து வேறு ஒரு நினைவு இல்லாமல் உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்ற பொருள்களை ஊன்றி நினையேன்.
விளக்கஉரை
ஓதிய நாமங்களுள் – உமையவள் பங்கா, மிக்க சோதியே, துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே , ஆதியே, அமரர்கோவே, அணி யணாமலையுளானே
பங்கன் – பாகமுடையவன், இவறலன், ஒன்றும் கொடாதவன்
கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே எனும் பொருளில் சில இடங்களிலும் எல்லாவுயிரும் உய்யும் பொருட்டு அங்கம் பிரத்தியங்கம் சாங்கம் உபாங்கம் உடைய திருவுருக் கொண்டு அருளினான் என்றும் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. கூத்து வகைகள் முன் நிறுத்தில் 1) சிவன் – கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் 2) திருமகள் – பாவை 3) திருமால் – குடம், மல், அல்லியம் 4) குமரன்(முருகன்) – குடை, துடி. 5) எழுவகை மாதர்(சபத கன்னியர்) – துடி 6) அயிராணி (இந்திரன் மனைவி) – கடையம் 7) துர்க்கை – மரக்கால் 8) காமன் – பேடு என இருப்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
நீதி – சிவாகம முறையில் வகுக்கப்பட்ட முறைப்படி அல்லாமல் வேறு வகையில் ஓதித் தூவி நினையுமாறு மற்றொவரையும் நினைவு கொள்ளுதல்
நின்னையல்லால் நினையுமா நினைவிலேன் – நினைதல் ( மனம் ) ஓதல் ( வாக்கு ) தூவுதல் ( காயம் ) என்னும் முப்பொறிக்குமுரிய வழிபாடு முன்நிறுத்தி உணர்த்தியது.
*புட்ப விதி – கமலை ஞானப்பிரகாசர். காலம் 6-ஆம் நூற்றாண்டு
கருத்து – பூவுலகில் பெறும் சொந்தங்கள் நிலையானவை அல்ல எனவும் திருஐந்தெழுத்தே நிலையான விடு பேற்றினை அருளும் என்பதை விளக்கும் பாடல்
பதவுரை
ஒருவருடைய தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார்கள் யார்? மனைவி யார்? புத்திரர் யார்? இவர்கள் எல்லோரும் தமக்கு எவ்வாறு தொடர்புடையவர்கள்? பூலவுலகில் பிறந்த பின் அவர்களோடு தொடர்பு கூடியதா அல்லது அவர்கள் இறந்த பின் அவர்களோடு தொடர்பு பிரியாது கூடிநிற்க கூடுவோ? என்றெல்லாம் சிந்தை உடையவர்களே! பொய்யானதும் மாயையானதும் ஆன இத்தொடர்பு கொண்டு ஏதும் மகிழ வேண்டா; உங்களுக்கு ஒன்று உறுதியாக சொல்வதை கேட்பீராக; சந்திர ஒளிவீசித் திகழ்வதும், கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் திருமுடியை உடைய எம்தந்தையும் தலைவனும் ஆன அவன் திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை ஓதியவாறே துயில் எழுபவர்களுக்கு பெரியதானதும், நிலை பேறும் உடையதுமான வீடுபேறு கைகூடும். ஆகவே அதனைச் செய்யுங்கள்.
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே மின்னு வார்சடை வேத விழுப்பொருள் செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி மன்னு சோதிநம் பால்வந்து வைகவே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – திருநாவுக்கரசர், சோதி வடிவான ஈசன் தம்மிடம் எழுந்தருளியதை கூறும் பாடல்
பதவுரை
நெஞ்சமே! மின்னல்போல விளங்குகின்ற நீண்ட சடையை உடையவனும், மறை ஆகிய வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவனும், செம்மையான நெற்கதிர்கள் பொருந்திய வயல்கள் பொருந்தி வயல் உடைய திருச்சேறையுள் செந்நெறியில் நிலைபெற்ற ஒளிவடிவமானதான சோதியும் ஆகிய பெருமான் நம்மிடம் வந்து நிலையாக வந்து எழுந்தருள எத்தகைய சிறந்த தவம் செய்தாய்.
விளக்கஉரை
திருச்சேறை திருதலத்து தேவாரப்பாடல்
என்ன – எத்தகைய
வேத விழுப்பொருள் – வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவன் .
எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே பந்தம் வீடவை யாய பராபரன் அந்த மில்புக ழாரூ ரரனெறி சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – திருவாரூர், அரநெறியை உள்ளத்தில் கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நல்ல தவம் உரையர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு எய்தாது என்பதை விளக்கும் பாடல்
பதவுரை
நெஞ்சமே! ஆன்மாவைப் பிணித்துள்ள பாசத்தினை ஏற்படுத்துவதும் உலக் ஈடுபாட்டினை தருவதாகிய பந்தமும், முடிவில்லா புகழை உடையவனும், முக்தி பேற்றை அளிக்கும் வீடுமாயிருக்கும் பரம்பொருளாகிய திருவாரூர்ப் பெருமானுக்கு உரியதான முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி சிந்தையினும், சிரத்தினும் தங்குதற்கு மேலாகிய தவங்கள் பலவற்றுள் எந்தத்தவத்தை நீ செய்தாய்?
தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி ஆனிடை அஞ்சுங் கொண்டு அன்பினால் அமர வாட்டி வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
தேன் உடைய மலர்களை பறித்துக் கொண்டு வந்து திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்து, அன்பு கொண்டு அவரை அமரச் செய்து கோ எனும் பசுவிடத்தில் இருந்து பெறப்படுவதாகிய பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அதை உவந்து ஏற்று வானில் உலவும் பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவன் ஆனேன்
விளக்கஉரை
ஏத்தப்பெற்று – முற் பிறவிகளிற் செய்த நல்வினைகளின் பயனை இப் பிறவியில் பெற்றேன்
தேன் உடை மலர்கள் – வண்டுகள் உடைத்தமையால் மலர்ந்த பூக்கள்
திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா
திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா.
அன்பினால் அமர ஆட்டி – தம் அன்பாம் மஞ்சனநீர் ஆட்டி; இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
நான் அடைந்து :- நான் கெட்டு அஃதாவது தற்போதம் அற்றுச் சொல்லுகின்ற அருளாளர்கள் கூறும் ` நான் ` குற்றமாகாது எனும் பொருளில்
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறி லாதவன் ஈச னொருவனே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நூறுகோடி பிரமர்கள் அழிக்கப்பட்டார்கள்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப் பெருகும் கங்கையாற்றின் மணலைவிட எண்ணிக்கை அற்றதான இந்திரர்கள் நிலையும் அவ் வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் இறைவனானவனும் ஈசன் எனப்படுபவனும் ஆன சிவபெருமான் மட்டுமே.
விளக்கஉரை
எண்ணிக்கை அற்ற அளவில் உயிர்கள் படைக்கப்பட்டன; அதில் பிரம்ம முடிச்சினை கண்டு உணர்ந்து பிரம்ம தன்மை அடைந்த நூறு கோடி பேர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள். என்று மொழி பகர்வார்களும் உண்டு. யோக மரபினை முன்வைத்து பிரம்மனுக்கு உரித்தான சுவாதிட்டானம் வரை கண்டு உணர்ந்தவர்களும், திருமாலுக்கு உரித்தான் மணிபூரகம் வரை கண்டு உணர்ந்தவர்களும் அதற்கு மேல் செல்ல இயலாமல் அழிக்கப்பட்டார்கள் என்று கூறுவதும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஊழிக் காலமாகிய சங்காரத்தில் இந்த உலகினை பெரிய கடல் சூழ்ந்து ஊழிவெள்ளம் ஏற்படப் பிரம்மன் இறப்பான்; அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும், வினைகளை ஒப்பு நோக்கி உயிர்களுக்கு வினைப்பயன்களை தருபவன் ஆகியவனும், கரிய கடல்போன்ற நிறமுடையவனும் ஆகிய திருமாலுடைய உடலையும் சுமந்து கொண்டு, அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனான எம் பெருமான சிவன் கங்காள வடிவம் கொண்டு ஒடுங்கிய உலகம் மீண்டும் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான்.
விளக்கஉரை
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் (திருமந்திரம்) – எல்லாவற்றையும் ஒடுக்கியபின் அவை ஒடுங்கிய சாம்பலைப் பூசுகின்ற என்னும் குறிப்பு பற்றியது.
மீளவரும் கடன் நின்று – ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து;
எம் இறை – எம் இறைவன்
நல்வீணை வாசிக்கும் – அழகிய வீணையை இயம்பும் இசையின் சுருதியியல் கெடாதவாறு அமைந்தது
மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும் தோளும் ஆகமும் துவளு முன்னூல் முனி சொல்ல ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்
பன்னிரெண்டாம் திருமுறை – சேக்கிழார் – திருநாவுக்கரசு நாயனார் புராணம்
கருத்து – திருநாவுக்கரசரை திருக்கயிலாய மலையில் இருந்து திரும்பிச் செல்ல உரைத்தலும், திருநாவுக்கரசர் அதற்கு மறுதலித்ததையும் கூறும் பாடல்.
பதவுரை
‘இந்தக் கயிலாய மலையிலிருந்து திரும்பிச் செல்லுதலே உன்னுடைய கடமை’ திகழும் தோள்களை உடையவரும், மார்பினினில் துவள்கின்ற முப்புரி நூலையுடைய முனிவரான இறைவர் உரைத்தார்; என்னை ஆள்பவனாகவும், எனக்கு தலைவனாகவும் இருக்கும் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையில் இருக்கும் காட்சி காணாமல், என்றேனும் மடியப்போகும் இந்த உடலால் தமக்கு எதுவும் நட்டம் எதுவும் இல்லை, ஆதலால் இவ்வுடலுடன் கயிலைக் காட்சி காணாமல் திரும்பிச் செல்லமாட்டேன் என்று திருநாவுக்கரசர் மறுத்தார்
விளக்கஉரை
திருநாவுக்கரசர் திருவையாற்றில் கயிலை காட்சி கண்ட நாள் (ஆடிமாதம் அமாவாசை திருநாள்)
விரித்த பல்கதிர் கொள்சூலம், வெடிபடு தமரு கங்கை தரித்ததோர் கோல கால பைரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒன்டிரு மணிவாய் விள்ள சிறிதருள் செய்தோர் சேரிச் செந்நிறச் செல்வனாரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவபெருமான் கால பைரவர் வடிவம் தாங்கி வந்ததை குறிப்பிடும் பாடல்.
பதவுரை
திருச்சேறை எனும் திருத்தலத்தில் செம்மை நிறம் கொண்டு அதை இருப்பிடமாக உடையவனாக சிவபெருமான், விரிந்த சூரியனை போன்று பல கதிர்களை கொண்ட ஒளியுடைய சூலம், இடி முழக்கம் போல சப்தம் எழுப்புவதான டமருகம் (உடுக்கை), தலையில் கங்கை ஆகியவை கொண்டு அழகிய கால பைரவர் வடிவம் தரித்து வேழ வடிவில் வந்த அசுரனின் தோலை உரித்தார்; அதை கண்டு அஞ்சிய உமையவளை நோக்கி தனது மணிவாய் மலர்ந்து தோன்றுமாறு அட்டகாசமாய் சிரித்தார்.
விளக்கஉரை
தேவாரத்தில் கால பைரவர் பெயர் வரும் ஓரே பாடல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உய்க.
விள்ளுதல் – மலர்தல்; உடைதல்; வெடித்தல்; பிளத்தல்; பகைத்தல்; மாறுபடுதல்; தெளிவாதல்; நீங்குதல்; சொல்லுதல்; வெளிப்படுத்துதல்; வாய் முதலியன திறத்தல்; புதிர்முதலியனவிடுத்தல்
வெடி – துப்பாக்கி அல்லது குண்டு வெடி;வேட்டு, ஓசை, இடி, கேடு, அச்சம், நிமிர்ந்தெழுகை, தாவுகை, நறும்புகை, பட்டாசு, கள்
கருத்து – ஊழ்வினை அறுத்தலேயன்றி, சிவஞானத்தை மிகுவிக்கும் நல்வினைகள் விளையா என்பதையும் அதனை அளிப்பர் திருப்பேரெயில் தலத்து இறைவர் என்பதையும் விளக்கும் பாடல்.
பதவுரை
திருப்பேரெயில் தலத்து இறைவர் மேருமலையை வில்லாக்கி முப்புரங்களை அழியச் செய்வார்; பல தீர்த்தங்களை உண்டாக்கி அளித்தும், அதில் தன் அன்பர்களை நீராடுமாறும் செய்பவர்; பல பத்தர்களின் ஊழ்வினைகளை அறுப்பது மட்டுமின்றி அவர்கள் நல்வினை பெறும்படியும் செய்பவர் ஆவார்.
விளக்கஉரை
சோழநாடு காவிரித் தென்கரையில் அமைந்திருக்கும் திருப்பேரெயில் எனும் திருத்தலம் பற்றி எழுதப்பட்டது. (தற்போதைய பெயர் – ஓகைப்பேரையூர், வங்காரப் பேரையூர்)
செறுத்தல் – அடக்குதல், தடுத்தல், நெருக்குதல், உள்ளடங்கச் செய்தல், நீர் முதலியன அடைத்தல், தூர்த்தல், சினத்தல், வெறுத்தல், வெல்லுதல், கொல்லுதல்
கருத்து – ஐயாறு திருத்தலத்தை நினைத்து வாழ்ந்தால் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நிலையாமை உடைய பொருள்களை பொய்த் தன்மை நீங்காதவாறு சிறப்பித்துப் பேசியும், பொழுது புலர எழுந்தது துன்பம் கொள்ளாமல் தொழில் செய்கிறோம் என்று எண்ணி பொருளைத் தேடி இன்பம் உடைய மனத்தவர்களாக கருதி வாழ்பவர்களே! விஷத்தை அமுதம் போல் கொண்டவர் ஆன நீலகண்டரும், நீண்ட செஞ்சடை உடையவரும், நெற்றிக் கண் உடையவரும் ஆகிய சிவபெருமான் விரும்பி உறையும் தலமான ஐயாறே ! ஐயாறே ! என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும்.
விளக்கஉரை
இத்திருத்தாண்டகம், திருவையாற்றை எடுத்து ஓதி அருளியது.
கையாறு – செயலறுகை, துன்பம்
கரணம் – செய்கை, இயக்கம், தொழில்
நெய்யாடுதல் – எண்ணெய் பூசி மங்கலநீராடல், நெய்பூசுதல்
அல்லல் – பிறவித்துன்பம்
நெய்யாறா ஆடிய – ‘நெய்யை ஆறுபோல் ஆடியவரும்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – மூம்மலங்களுக்கு உட்பட்டவனாகிய இராவணன் தவறு இழைத்த போதும், அது குறிந்து வருத்தம் கொண்டு வணங்கி நின்றதால் பல பேறுகள் அடைந்தான். அது போல் மறுமை அடையாமல் இருக்க திருச்சோற்றுத்துறை ஈசனை வணங்குங்கள் எனும் பாடல்.
பதவுரை
மறுமை எனும் பிறப்பு ஏற்படாத வகையில் அதனை அடியோடு நீங்கள் போக்க விரும்பினால் நிலையற்ற பொருள்களால் ஆன உலக விஷயங்களில் மனத்தை நிலையாக வைக்காமல், பல மெய் ஞான நூல்களையும் கற்றதால் அக்காரணம் பற்றி செருக்கு கொண்ட அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை துன்புறுத்திப் பின் அவனுக்கு அருள் செய்த திருச்சோற்றுத் துறையனை, பலகாலமும் பிரானின் பெருமைகளை இடையறாது துதித்துப் பேசுங்கள்.
பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா வடிமை செய்ய ஐயநீ யருளிச் செய்யா யாதியே யாதி மூர்த்தீ வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே பையநுன் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – அநித்திய பொருள்களின் தன்மை அறிந்து விலக்கி மெய் அடிமை ஆக்க வேண்டி விண்ணப்பித்தல்.
பதவுரை
தேவர்கள் முதல் மும்மூர்த்தி ஆகிய அனைவருக்கும் ஆதியாய முதல் தெய்வமே, பெரு மதிப்பிற்கு உடைய என் தலைவனே! உலகம் மற்றும் அதில் காணப்படுவதும் நிலையற்ற தன்மை உடையதும், அநித்தியம் ஆனதும் ஆன அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்கி விடுவிக்குமாறு செய்து உன் அகத்தடிமை ஆகி உனக்கு மெய்யடிமையைச் செய்ய, அருள் புரிவாயாக. அதன் பொருட்டு இந்த உலகிலே மேம்பட்டது ஆன சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்துள்ளேன்.
விளக்கஉரை
புறம் அல்லா அடிமை – அகத்தடிமை
மெய்யடிமை – பசு பாசங்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்ந்து, செய்யும் செயல்கள் எல்லாம் அவன் அருளின்வழி நின்று செய்யும் செயலாகக் கண்டு கொண்டிருக்கும் இறைபணியாகிய அடிமைத் திறம்
மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன் வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன் சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொணோய் வடிவொன் றில்லா ஊத்தையைக் கழிக்கும் வண்ண முணர்வுதா வுலக மூர்த்தீ
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – நிலை அற்ற உடல் குறித்து குறிப்பிட்டு நிலையானதான சிவானுபவம் வேண்டுதல்.
பதவுரை
உலகத்துக்குத் தலைவனே! பெரு வாழ்வு வாழ்ந்து பிணம் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய வலிமையான தீய வினைகள் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன்; பெரு வாழ்வு வாழ்ந்து பிணம் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய வலிமையான தீய வினைகள் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன்; இழிவு தன்மை உடையவனும், கைவிடப்பட்டவனும் , குணமில்லாதவனும், நிரந்தர வடிவம் ஒன்றும் இல்லாததும் இருந்து வெறுக்கத்தக்கதாய், பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய், நோய்க்கு இருப்பிடமாய் இருக்கும் இந்த உடலை அடியோடு போக்கும் வண்ணம் அடியேனுக்குச் சிவானுபவத்தை அருளுவாயாக.
விளக்கஉரை
பிணத்தைக் கண்ட காக்கை அதனை விடாது மொய்ப்பது போல் உயிரைக் கண்ட வினையும் அதனை விடாது மொய்க்கும்.
கருத்து – ஆணவம் கொண்டு இருந்து இராவணுக்கு ஆணவம் விலகியப் பின் அருள் புரிந்த திறம் பற்றி உரைத்தது.
பதவுரை
மதச் செருக்கு கொண்டு பித்து பித்தவனாய் நந்தி எம்மானை சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுத்த இராவணனின் திரண்ட தோள்களும், முடிகளைக் கொண்ட தலைகள் பத்தும் இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும், தன் தவறு உணர்ந்து தன் நரம்புகளை யாழாகக்கொண்டு அவன் ஒரு மனதாக வணங்கிய பொழுது மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும் இவ் வையகத்தே தொழுவார்க்கு இரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – புழுவாகப் பிறக்க நேர்ந்தாலும் உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு என்றும் நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும் என விளிம்பும் பாடல்.
பதவுரை
இந்த வையகம் ஆகிய பூவுலகிலே அடியவர்கள் மேல் இரக்கப்பட்டு அவர்களுக்கு அருள் செய்கின்றவனும், திருப்புலியூர் எனும் திருப்பாதிரிப்புலியூரில் உறைபவனும், செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருப்பவனும், தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே! அடியேன் வினைகளுக்கு உட்பட்டு மறுபிறவியில் மிகழும் இழிவான பிறவியாகிய புழுவாகப் பிறக்க நேர்ந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு என்றும் நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும்.
கருத்து – நெஞ்சத்தினை இடைவிடாது சிவபெருமானை குறித்து சிந்திக்க வேண்டும் பாடல்.
பதவுரை
நெஞ்சமே! தோற்ற ஒடுக்கம் உடைய உயிர்கள் மற்றும் அகிலங்கள் அனைத்திற்கும் முற்பட்டவனும், திருக்கண்ணை உடைய நெற்றியை உடையவனும், தாமரை மலரின் இருப்பவனாகிய பிரம்மனின் தலையை அறிந்து, அந்த தலையை ஓட்டை விரும்பி கபாலி ஆகியவனும், அழகிய வடிவம் கொண்ட மலைமகள் எனும் உமையம்மையை தன் உடலின் ஒரு பாகமாக உடையவனும், உருவம், அருவம், அருவுருவம் கொண்ட அனைத்திற்கும் உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அந்த உணர்வுகளை உணர்த்தும் நாதம் எனும் ஓசைகளாகி வருபவனும், வலஞ்சுழி எனும் திருத்தலத்தில் உறையும் எம்பெருமானும், திருமறைக்காடு எனும் திருத்தலத்தில் உறைபவனும், ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மை உடையவனும் ஆன தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழில் சிவபெருமானை இடைவிடாது சிந்திப்பாயாக.
விளக்கஉரை
• திருவாலம்பொழில் எனும் காவிரி தென்கரைத் திருத்தலம் • கமலத்தோன் – பிரமன் • உரு ஆர்ந்த – அழகு நிறைந்த • வலஞ்சுழி, மறைக்காடு, ஆவடுதுறை இவை சோழநாட்டுத் தலங்கள் • மேய ( மேவிய ) – விரும்பி எழுந்தருளிய. • திருவான் – மேன்மையை உடையவன்.