ஆசு இல் பர தாரம்அவை அம் சிறை அடைப்பேம்; மாசு இல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப் பேசுவது மானம்; இடை பேணுவது காமம்; கூசுவது மானுடரை; நன்று, நம் கொற்றம்!
கம்பராமாயணம் – யுத்த காண்டம்
கருத்துஉரை
ஒரு குற்றமும் இல்லாத ஒருவன் மனைவியை அழகிய சிறையில் அடைத்து வைப்போம்; குற்றமற்ற புகழ் அடையவும் விரும்புவோம்; மற்றவர்கள் பெருமைப்படும் படியாக பேசுவதோ வீர உரைகள்; அதற்கிடையிலே விரும்புவது காமம்; மானிடர்களைப் கண்டு அஞ்சுகிறோம்; நமது வெற்றி நன்றாய் இருக்கிறது.
விளக்க உரை
இராவணனைப் பார்த்து கும்பகர்ணன் கூறியது இப்பாடல். ‘நாம் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதே நம் பெருமை, என்ன ஓர் ஆட்சி!’ என இடித்துரைக்கிறான்.
வாக்கிய அமைப்பில் எதிரும் புதிருமான கருத்துக்கள் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் / மனிதர்களின் மனநிலையை எடுத்துக்காட்டும் பாடல்
அசையும் பாம்பினை மார்பில் சூடி, வெண்ணிறக் காளையில் அமர்ந்து உலகங்களைச் சுற்றி உலவும் மேம்பட்ட யோகியாய், ஆரவாரிக்குமாறு இருக்கும் கங்கையைச் சடையில் சூடியவராய், பார்வதி பாகராய், ஆண்மையின் இலக்கணம் கொண்டவராய், காமவேட்கையை தரும் ஐந்து மலரம்புகளை உடைய மன்மதன் சாம்பலாகி விழுமாறு வெகுண்டு மூன்றாம் கண்ணில் இருந்து தீப் புறப்பட விழித்த பெருமானாய், வேள்விகளோடு நான்கு வேதம் ஓதுதலும் நீங்காத ஞான ஒளி விளங்கும் ஒற்றியூரில் உகந்து அருளுகின்றார்.
கோடிக்கரையில் எழுந்தருளியுள்ள அழகனே! இங்கு இருக்கும் காடோ மிகப் பெரிது; உன் தேவி அச்சம் கொள்ளுமாறு எப்பொழுதும் மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும், கூகைகளும் பல கூடி இடையறாது கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்கின்றன. வேட்டைத் தொழில் செய்தும், வஞ்சனையுடையவராகவும் இங்கு வாழ்பவர் மிகவும் கொடியவர்கள்; இவ்விடத்தை உறை விடத்தைக் கொண்டாயே இது என்?
இல்லை நின்கழற் கன்ப தென்கணே ஏலம் ஏலுநற் குழலி பங்கனே கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண் டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய் எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான் ஏது கொண்டுநான் ஏது செய்யினும் வல்லை யேயெனக் கின்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறுவில் வானனே.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்துஉரை
நான் எதனைக் கருவியாகக்கொண்டு (ஐம் புலன்கள்) எத்தீய செயலைச் செய்தாலும் (புலன் வழி தொழில்கள்), இனியும் உன்னுடைய திருவடியை எனக்குக் காட்டி மீட்டு ஆட்கொள்ளவும் ஆற்றலுடையவனே! ‘மறு இல்லாத வானம் எனப்படும்’ ஐம் பெரும் பூதங்களும் பொருள் பிரபஞ்சமாகத் தோன்ற இடம் தந்து நிற்கும் குற்றமில்லாத வானமாகிய சிவலோகத்தை உடைய சிவமே! வாசனை திரவியங்கள் பொருந்திய அழகிய கூந்தலையுடைய தேவியை தன்னுடைய ஒருபாகமாக உடையவனே! எம் பெருமானே! உன்னுடைய திருவடியை போற்றுவதற்கு உரிய அன்பு என்னிடம் இல்லை (எனினும்) கல்லை உண்பதற்கு ஏற்ற பழமாகச் செய்கின்ற வித்தையைக் கொண்டு என்னை உன்னுடைய திருவடிக்கு அன்புடையனாகச் செய்தாய் உன்னுடைய திருவருளுக்கு ஓர் அளவுவே இல்லை.
விளக்க உரை
இதனால், பசு கரணத்தை, பதி கரணமாக மாற்றித் ‘திருவடி இன்பத்தை நல்கும் ஆற்றலுடையவன் இறைவன்’ என்பது கூறப்பட்டது.
எட்டுவகையான குணங்களில் ஒன்றான ‘பேரருள் உடைமையை’ முன்வைத்து சிவபெருமான் தான் படைத்த எல்லா உயிர்கள் மீதும் வைத்த எல்லையில்லா பெரும் கருணையினால் அந்த உயிர்களுக்கு அவனே தலைவன் ஆகிறான்.
‘கல் நார் உரித்தென்ன’ எனவும் ‘கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிகல்லைப் பிசைந்து கனியாக்கி தன் கருணை வெள்ளத்து அழுத்தினான் ” எனும் வரிகளும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
‘விச்சைகொண்டு’ – வித்தை கொண்டு – கல்லை மென்கனியாக்குதல் வித்தையால் நிகழ்தப் பெறும். அதைப் போல எனது வன்மையான மனத்தை நெகிழ்வித்து நின்தாளுக்கு உரிய அன்பனாக்கியது பெரிய வித்தை எனும் பொருள் பற்றி.
‘வல்லையே’ எனும் ஏகாரம் தேற்றம் பற்றி நின்றதால் `இனியும் என்னை மீட்க நீ வல்லாய் என்னும் துணிவுடையவன் ஆனேன்` எனும் பொருள் பற்றி.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காரியத்தை உண்டாக்கும் கர்த்தா எது? அதன் வேறு பெயர் என்ன? நிமித்த காரணம், காரண கர்தா.
அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான் அருள்வான் அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் – அஞ்சுமுக வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர் அரையோ டஞ்சரையான் கண்கள் அவை.
திருவருட்பா – இராமலிங்க அடிகள் எனும் திருவருட்பிரகாச வள்ளலார்
கருத்துஉரை
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களையுடைய சிவனுக்கு திருமகனும், திருமால் சக்கரப் படையை இழந்து பெற மாட்டாது அஞ்சிய போது அதனைப் பெறுவித்து அருளியவனும், ஐம்புலன் வழி செல்லும் ஆசைகளை அன்பர்கள்பால் செல்லாதவாறு அவைகளை விலக்கி அருளும் ஐந்தாகிய அழகிய கைகளை உடையவனும், கண்கள் மூன்று உடையவனுமாகிய விநாயகப் பெருமான் அஞ்சத்தக்க இயல்பையுடைய வஞ்சகர்களை யான் கூடிக்கெடாதவாறு காத்து அருளுவான்.
விளக்க உரை
விநாயகப் பெருமான் வஞ்சரோடு கூடிக் கெடாதவாறு அருளியது குறித்தது வியந்து போற்றியது இப்பாடல்.
திருமாலின் சக்கரப் படையை விநாயகரின் கணங்களில் ஒன்று வாயில் கவ்விக் கொள்ள அதனைப் பெறும் வழி அறியாது அஞ்சியபோது செய்வகையை தெரிவித்து அதனைப் பெறுவித்தவர் விகடச் சக்கர விநாயகர் – காஞ்சிப் புராண விகடச் சக்கர விநாயகர் வரலாறு
ஓர் அரையோ டஞ்சரையான் கண்கள் – ஓரு அரையோடு(0.5) அஞ்சரை (5.5), ஆக மொத்தம் 6.0, ஆறரையாய் (ஆறில் பாதியான மூன்று கண்கள் உடையவன்)
கண்கள் மூன்று உடையவனுமாகிய விநாயகப் பெருமான் – ஓம் ஈச புத்ராய நம: எனும் நாமாவளியோடு ஒப்புமை படுத்தி சிந்திக்கத் தக்கது
விநாயகன் ஐந்து கரம் – தன்பால் அன்பு செய்யும் ஆன்மாக்களின் ஆசைகளை(பஞ்ச இந்திரியங்களில் எழும் ஆசைகளை) விலக்குதல் பொருட்டானது
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காரியம் தோன்றும் வரை இருந்து பின் நீங்கும் காரணம் எது? துணைக்காரணம்
அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும் வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
இடநாடியாகிய சந்திர கலை வழியாகவும், பின்பு வல நாடியாகிய சூரிய கலை வழியாகவும், பிராண வாயுவை அடக்கியும், வெளியே விட்டும் ஒப்பற்ற நிறைவு உடைய ஒருவனாகி, வானில் அரசாளும் தேவர்களின் தலைவனாக இருந்து வழிபாடு செய்யத்தக்கதாகவும் இருக்கும் சிவனது திருவடிகளை என்றும் வணங்கி தியானிப்பேன். அவனை புறத்திலும் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் சொல்லப்பட்டவை.
விளக்க உரை
‘பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன்’ எனு சில இடங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளன. ‘சில இடங்களில் கண்டு வழிபடுவேன்’ எனும் பொழுது பல இடங்களில் கண்டு வழிபட மாட்டேன் எனும் பொருள் விளக்கமுறும். சித்தர் என்பதாலும், அக மற்றும் புற வழிபாட்டு முறைகளை அறிந்து கூறுவதாலும் ‘அவனை புறத்திலும் கண்டு வழிபடுவேன்’ எனும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. (இறை அன்பர்கள் தகுந்த விளக்கம் அளித்தால் பொருள் உணர்ந்து மகிழ்வுறுவேன்)
‘வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்’ எனும் அபிராமி அந்தாதி வரிகளும் ‘வந்திப்பன் வானவர் தேவனை’ எனும் இப்பாடல் வரிகளும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
எமது அழகிய மதுரை நகரமானது, திருமாலின் திருவுந்தித்தடத்தில் தோன்றி மலர்ந்த தெய்வத் தாமரைப் பூவினையே ஒத்ததாக இருக்கிறது. அப்படிப்பட்ட மதுரையில் அமைந்த தெருக்கள் அத்தாமரை மலரினது அகவிதழ்களையே ஒத்து இருக்கின்றன. அந்த மதுரையின் நடுவே அமைந்த எம் வேந்தனின் அரண்மனை, அந்த இதழ்களின் நடுவே அமைந்துள்ள அரிய அழகுடைய கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவினை ஒத்ததாக இருக்கிறது.
விளக்க உரை
மாயோன் – கரிய நிறமுடையோன் என அதன் பொருள் குறியாது திருமால் என்னும் பெயராய் நின்றது.
கொப்பூழ் – உந்தி
அண்ணல் கோயில்’ விளக்கம் 1 – ஆலவாய் அண்ணல் என்று சிவனைக் குறிப்பிடுவார்கள். சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் ‘பொலங்கலப் புரவி பண்ணிப் .. தணைந்தனன் அண்ணல் கோயில்’ (திருமலைச் சருக்கம் – தடுத்தாட்கொண்ட புராணம்) என்று தியாகேசர் திருக்கோவிலைப் பற்றி கூறுகிறார். பரிபாடல், காலத்தால் முற்பட்டதால் சிவனையும், திருமாலையும் ஒரே இடத்தில் பாடலில் வைத்து போற்றுவதற்காக அவ்வாறு பாடி இருக்கலாம்.
‘அண்ணல் கோயில்’ விளக்கம் 2 – பாண்டிய மன்னனின் அரண்மனை – பொதுவாக தன்னலம் கருதா உயர் குணம் கொண்டவர்களை அண்ணல் என்று அழைப்பது உண்டு. (உ.ம் காந்தி அண்ணல்). அவர் இருப்பிடம் என்பதால் கோயில் என்று அழைத்திருக்கலாம். அகழ்வாராய்ச்சில், தற்போது கீழடியில் கிடைத்திருக்கும் இடமாக இருக்கலாம்.
படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பார் தாள் முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்துஉரை
நெஞ்சமே, பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் திருநாமங்களை ஓதவில்லை. அவ்வாறு பழநி ஆண்டவரது திருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்ளவில்லை. (அஃதாவது பாதம் பணிந்து வணங்கவில்லை). அனைத்தும் அறிந்த பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை ‘முருகா’ என்று அழைக்கவில்லை. யாசிப்பவர்கள் பசிப் பிணி கொண்டு மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கி, அக்காரணம் பற்றி நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாக வரும்பொருட்டு விம்மி விம்மி அழவில்லை. இனி நமக்கு அடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?
ஐயா! மனதில் நினைத்ததை தரும் சதுரகிரியில் வளரும் அறப்பளீசுர தேவனே! தலைவனே! முப்புரங்களை நீறுபடச் செய்த பெரியோனே!, தூயவனே! தலைவனாகிய எமது தேவனே! வைதாலும், ஏதேனும் கொடுமை இழைக்கினும், மாறாமல் சினந்து இழிவுபடுத்தினும், சிறிதும் மனம் கோணாமலும் வெட்கப்படாமலும், உண்மையாக எனக்கு அன்னையும் தந்தையும் நீயேயென்று கூறி, ஆசிரியனுக்கு மனங்கனிந்து வழிபாடு செய்து, என் பொருளும் உடலும் உயிரும் உன்னுடையவை என்று கூறி அனைத்தையும் கொடுத்து, இரவும் பகலும் விடாமல் வணங்கி, ஆசிரியனின் மலர்போன்ற திருவடிகளில் உண்மையாகவே வீழ்ந்து புகழ்ந்து கூறி, அறிவுபெற விரும்புவோர் நல்ல மாணாக்கராவர். அவர்களுக்கு வினையின் வேருடன் கெடும்படி அருள் செய்வது சிறந்த ஆசிரியரது கடமையாகும்.
விளக்கஉரை
நன்மாணாக்கர் இயல்புகளை விளக்கும் பாடல்
ஆசிரியரின் திருவடியை வணங்குதல் அனைத்து வினைகளையும் அழிக்கும்.
தேகம் விட்டதும், ஒன்றிலும் பற்றில்லாதும், காட்சிக்கு அகப்படாததுமான ஆத்மாவை எடுத்து எமன் அருகில் கொண்டு செல்வது எப்படி?
சிவன்
கர்மவசியம், போகவசியம், துக்கவசியம் என மூன்றுவகைத் காரணதேகங்கள் உண்டு.
கர்மவசியம் என்பது மானிட தேகம்
போகவசியம் என்பது தேவலோகத்தில் உள்ள தேகம்
துக்கவசியம் என்றும் யாதனாவசியம் என்றும் கூறப்படும் மாயையால் உண்டாக்கப்படும் தேகம்
யாதனாவசியம் எனும் தேகம் எமலோகம் தவிர எங்கும் காணப்படவில்லை. உயிர்கள் மறித்தப்பின் யாதனாவசியம் எனும் தேகம் சேர்த்து மாயையினால் உயிர்கள் எம பட்டணத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். நிராபாதம் எனும் மார்க்கம் கொண்டு இராணுவ வீரர் வேஷத்துடன் இரண்டாவது பிரிவு உடைய உயிர்களை கொண்டு செல்கின்றனர். அதர்ம மார்கம் உடையவர்களை சண்டாள வேஷத்துடன் பாசங்களினால் கட்டி அடித்து பயமுறுத்தி துர்த்தசம் எனும் வழியில் கொண்டு செல்கின்றனர்.
இவ்வாறு மூன்று வகைகளாக எமலோகம் எடுத்துச் செல்கின்றனர். அங்கு சென்றப்பின்னர் தர்மாசனத்தில் தனது மந்திரிகளோடு இருக்கும் எமனிடம் அழைத்துவந்த உயிர்களை குறித்து விபரம் தெரிவிக்கின்றனர்.
எமனானவன், வந்தவர்களில் இருக்கும் உத்தமர்களை முறைப்படி பூஜித்து, அவர்களை வரவேற்று அவர்களின் கர்மத்தை எடுத்துரைத்து அவர்களுக்கு தகுந்த லோகங்களை குறித்து கட்டளையிட்டு அவர்களை சுவர்க்கம் செல்ல அனுமதிக்கிறான்.
நடுத்தரமானவர்களின் கர்மங்களைக் கேட்டப்பின் சரியாக விசாரித்து அவர்களை மானிட பிறப்பில் பிறக்க கட்டளை இடுகிறான்.
அதர்மர்களை எமன் பார்ப்பதே இல்லை.யாதனா வசியம் சேர்ந்த மாயை கொண்ட உயிர்களை வெட்டியும், மோதியும், குழிகளில் தள்ளியும், ஸம்யாமினி எனும் பாறைகளில் மோதச் செய்தும் துன்புறுத்துகின்றனர். இரும்பு போன்று உறுதியான அலகு உடையதும், மிகக் கொடியதுமான கழுகுகள் அந்த உயிர்களை துன்புறுத்துகின்றன. அவர்களில் சிலர் அஸிபத்ரவனத்தின் வழியே நடந்து செல்கின்றனர். அங்கே கூரான பற்களுடன் கூடிய நாய்கள் அவர்களை கடித்து துன்புறுத்துகின்றன. மலக்கழிவுகளால் நிரம்பி பிரவாகமாக செல்வதும், அருவருக்கத் தக்கதும், முதலைகள் நிரம்பியதும், ஆழமானதும் ஆன வைதரணி நதி இருக்கிறது. எமதூதர்கள் கொண்டு சென்ற உயிர்களை அதில் குளிக்கச் செய்து அந்த நதி நீரையே குடிப்பிக்கச் செய்கின்றனர். செக்கு இயந்திரங்களில் அரைக்கப்பட்டும், தணல்களில் எரிக்கப்பட்டும், மூடி வேகவைக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர். வாள் முதலிய ஆயுதங்களால் அறுக்கப்பட்டும், வெட்டப்பட்டும், துண்டாக்கப்பட்டும், சூலங்களாலும், சிறிய ஊசிகளால் குத்தப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறு தண்டிக்கும் போது இன்ன பாவத்திற்காக இன்ன தண்டனை என்றும் கூறி தண்டிக்கின்றனர். இவ்வாறு யாதனாவசியம் எனும் தேகத்தால் துன்புறும் உயிர்கள் துன்பத்தை அடைந்து இது தாங்கள் செய்த பாவத்தினால் வந்து என்று உணர்ந்து கதறி அழுது தண்டனைகளை அனுபவிக்கின்றனர். அங்கே துன்பங்களை அனுபவித்தப்பின் அழுக்கற்றவர்களாகி பாவத்தில் இருந்து விடுபடுகின்றனர்.
(இந்த விளக்கங்கள் மிக நீளமாக இருப்பதாலும், கருட புராணத்தில் விபரமாக விளக்கப்பட்டிருப்பதாலும் மேல் விபரம் தேவைப்படுபவர்கள் படித்து அறிந்து கொள்க)
உமை
அசுபகர்மம், சுபகர்மம் எப்படிப்பட்டது? அதனை விளக்குங்கள்.
வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம் வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய் வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்
குமரகுருபரர்
கருத்து உரை
வளரத்துவங்குகையில் பல்லக்குத் தண்டு போல வளைத்துவிடப்பட்ட மூங்கிலானது வளர்ந்த பின்னர் மன்னர்களைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயரும். அப்படி வளையாத மூங்கிலின் கதியோ பரிதாபமாக கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத் திரியும். அதுபோல இளமையில் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கல்வி கற்பவர்கள் மேல்நிலையையும், கல்லாதவர்கள் தாழ்வான நிலையையும் அடைகின்றனர்.
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – விள்ளுதல்
பொருள்
மலர்தல்
உடைதல்
வெடித்தல்
பிளத்தல்
பகைத்தல்
மாறுபடுதல்
தெளிவாதல்
நீங்குதல்
சொல்லுதல்
வெளிப்படுத்துதல்
வாய் முதலியன திறத்தல்
புதிர் முதலியன விடுத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
உரிதாம் பரம்பொருளை உள்ளு – மாயம் உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு அரிதான சிவநாமம் விள்ளு – சிவன் அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு
கஞ்சமலைச் சித்தர்
கருத்து உரை
முக்திக்கு உரித்தான பரம்பொருளை மனதால் நினை; மயக்கம் தரும் மாயை கொண்ட பிரபஞ்சத்தில் மயக்கத்தை விலக்கு, குருவால் உபதேசம் செய்யப்பட்ட கிடைப்பதற்கு அரிய சிவநாமத்தை தெளிவாக உச்சரி. அன்பு கொண்டு சிவன் அடியார்களுக்கு பணிவிடை செய். இவைகள் முத்திக்கான வழிமுறைகளில் சில.
ஈசன் நஞ்சுண்ட காலத்தில் அது அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர்
மறைகளும் , தாருகாவனத்து முனிவர்களும் தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
சுந்தரர், இறைவனை ‘பித்தன்’ என்று வசைவு பொழிய, காரணங்களை விளக்கியப்பின் இறைவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு “பித்தனென்றே பாடுவாயென” மொழிய, சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘பித்தாபிறைசூடீ’ எனப் முதல் தேவாரப்பதிகம் பாடி ஆட்கொள்ளப்பட்டு அருள்வாழ்வு பெற்ற தலம்
கோவில் உள்ளே – சுந்தரர் வழக்கு நடந்த ‘வழக்கு தீர்த்த மண்டபம்’
சிவனார் முதியவர் வடிவில் வந்து சுந்தரரை தடுத்தாட்கொள்ள வந்த போது அணிந்திருந்த பாதுகைகள் இன்றும் இக்கோயிலில் பாதுகாப்பாக இருக்கின்றன.
இத்தலத்திற்கு மிக அருகில் சுந்தரரின் திருமணம் நின்ற இடமான மணம் தவிர்ந்த புத்தூர் (மணப்பந்தூர்)
சடையப்ப வள்ளல் வாழ்ந்த தலம். அவர், கம்பரைக் கொண்டு ராமாயணம் பாடுவித்தத் தலம்.
அர்ஜுனனுக்கு குழந்தைவரம் அளித்த விஜயலிங்க சிவனாருக்கு சந்நிதி
நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் தனிச்சன்னதி
இந்திரன் வழிபட்ட சுந்தரலிங்கர் சந்நிதி
மகாவிஷ்ணு வழிபட்ட சங்கரலிங்கர் சந்நிதி
அர்ஜுனன் தனது பாவங்களைப் போக்கிக்கொண்ட தலம்
சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் வாழ்ந்து உபதேசம் பெற்ற தலம்(அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார்)
தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்
விழாக்கள்
பங்குனி உத்திரம் , ஆடி சுவாதி, ஆருத்ரா தரிசனம் , ஆவணி மூல புட்டு உற்சவம் , கந்தசஷ்டி
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவெண்ணைநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
PIN – 607203
04153-234548, 99942-70882, 93456-60711, 94424-22197 ( மெய்கண்டார் கோயில்)
வழிபட்டவர்கள்
நவக்கிரகங்கள், இந்திரன், மகாவிஷ்ணு,அர்ஜுனன்
பாடியவர்கள்
சுந்தரர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவு, விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 200 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 14 வது தலம்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை ஏழாம்
பதிக எண் 1
திருமுறை எண் 1
பித்தனே, சந்திர பிறையைக் தலையில் சூடிய பெருமை உடையவனே, அருளாலனே, பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்து அருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகிய என்னை, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேச வைத்தது பொருந்துமோ!
பாடியவர் சுந்தரர்
திருமுறை ஏழாம்
பதிக எண் 1
திருமுறை எண் 4
இடபத்தை ஊர்தியாக உடையவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அவ்வாறான பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித்து அருளியதால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழ்ந்து மூப்படைந்து வருந்தவும் ஆன துன்பங்களை அறுத்தேன். நெறி கெட்டவனாகி பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறுக்காமல் ஏற்றறு அருள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பெரும்பாரக்கோடு
பொருள்
வயிற்றினையும் இடுப்பையும் பிரிக்கும் வயிற்றுக்கு கீழே இருக்கும் கோடு.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
விநாயகர் அகவல் – ஔவையார்
கருத்து உரை
வினாயகர் அகவல் முழுவதும் யோக மார்க்கங்களுடன் தொடர்பு உடையது. அது தன்னுள் பல சித்த பரிபாஷைகளை உள்ளடக்கியது. உடலில் பஞ்ச பூதங்களில் தலையாயதான நெருப்பு சோதியாக மெய்ப்பொருளாக இருக்கிறது. பேழை என்பது வினைகளின் மற்றும் மும்மலங்களின் வடிவமாக பானையை ஒத்து இருக்கிறது. வினைகளின் காரணமாக மாயைகளுக்கு உட்பட்டு அலையும் உயிர்கள் மூலாதாரத்தின் இருப்பிடத்தை உணர விடாமல் மாயை எனும் பாரம் தடுக்கிறது. எவ்வாறு காற்று ஊதுகுழல் வழியாக செலுத்தப் பட்டு குமுட்டி அடுப்பில் அக்கினி உருவாகிறதோ அது போல வாசியின் உதவியுடன் மூலாதாரத்தை உணர்ந்தால் வாசியானது மேலெழும்பி மெய்ப்பொருள் ஸ்தானத்தையடைந்து அங்கு நிலைகொண்ட அக்கினியை ஒளிர வைக்கும். அக்கினி ஒளிர்வின் அசைவே சித்தர்கள் பரிபாசையில் சோதிநடனம் எனப்படும். மலங்களான பாரங்கள் மூலாதார ஸ்தானத்தை அறியவிடாது நம்மை பொய்மையில் ஆழ்த்தும். இப்பிரிவினையைக் குறிப்பதே பெரும்பாரக் கோடு.
விளக்க உரை
‘மிகவும் கனமான, உறுதிமிக்க ஒற்றை தந்தம்’ என்று பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காரியத்துக்கு உரிய மூவகைக் காரணங்கள் எவை எவை? முதற் காரணம், துணைக் காரணம், நிமித்தக் காரணம்
கருத்துரைக்கு விளக்கம் அளித்த மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
(குரு நாதரின் உத்தரவிற்கு பிறவே இப்பாடலுக்கு இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)
எம்முடைய பெருமானே! முத்துப் போன்றவனே! மாணிக்கத்தைப் போன்றவனே! எம் தலைவனே! ‘இது முறையோ’ என்று எவ்வாறாயினும் நான் உன்னைப் பற்றித் தொடர்ந்து இனிமேல் பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவன் ஆனேன். ஆதலின் உன் மேல் பற்று இல்லாதவனாயினும், உன்னை வணங்குதல் எனும் தொழிலை இல்லாதவனாயினும், உனது மேலான பசுமையான கழலை அணிந்த திருவடிகளைக் காண்பதற்கு விருப்பம் இல்லாதவனாயினும், உன்னைத் துதித்தலை செய்யாதவன் ஆயினும் என் பிறவியைப் போக்கி அருள்வாயாக.
விளக்க உரை
‘நின் திருவடிக்கு அன்பு இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சியேகம்பனே!’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகள் இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
எங்கும் விரிந்து எதையும் தாங்கும் வலிமை பெற்றவனே, இமைத்தல் எனும் தொழில் இல்லா தேவர்கள் சதா தியானம் செய்யும் பிரவண சொரூபமானவனே, விண்ணுலகத்தைக் காப்பவனே, தன் முயற்சியில் கிடைப்பதற்கு அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை, அடியவன் ஆகிய எனக்கு, நீ வந்து உரியதாகும்படி எனக்கு உபதேசம் செய்த பெருமையை என்னவென்று சொல்வது?
சாம வேதத்தின் மகாவாக்கிய தத்துவம் ‘நீ அதுவாக இருக்கின்றாய்’ . இதுவே தொந்தத்தசி என்பது மேலே சொல்லப்பட்டது. இது மாயைக்கு உட்பட்ட குற்றங்கள் நீங்கப்பெற்று சீவன் சிவமாதலையே குறிப்பதாகும். நீ, அது ஆகிய பேதம் உடைய இரண்டுமே நீக்கப்படாது நிலை பெற்று நின்று, ஒன்றாய் சேருகின்ற இயைபினால் ஒன்றேயாகின்றன. இது மகாவாக்கியம் வேதாந்தம் . எனவே, இதனை, சித்தாந்த மகா வாக்கியம்` என்றும் வேதாந்த மகாவாக்கியந்தான்` என்றும் சொல்லலாம்.
விளக்க உரை
சித்தாந்த மகாவாக்கியமாகிய `சிவத்துவமசி` என்பது திருவைந்தெழுத்தே ஆகும். இதும் இப்பொருளை தரும்
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும், அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா; ஒப்பு உடை ஒருவனை உரு அழிய அப்படி அழல் எழ விழித்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! அழகில் தனக்கு நிகராக தன்னைத் தவிர ஒருவரையும் சொல்ல முடியாத மன்மதனை, நெற்றிக் கண்ணைத் திறந்து, நெருப்புத் தோன்றச் செய்து விழியால் அவனுடைய வடிவம் அழியுமாறு செய்தவனே! கொடிய வினைகளால் துன்பம் நெருப்பை போல வந்து தாக்கினாலும், அனைத்து உயிர்களுக்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் எனது நா வேறொன்றையும் கூறாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ? உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சற்காரியவாதம் என்பது என்ன? இல்லாதது தோன்றாது. உள்ளது அழியாதது எனும் கொள்கை
சூரியனைப் போல் உருவமின்றி, அரூபம் இன்றி, சாத்விகம், இராட்சதம், மற்றும் தாமச குணம் இன்றி, மனிதப் பிறவியில் ஆடவர்களுக்கு தோன்றும் கடைநிலை கேட்டைக் குறிக்கும் குணங்களாகிய அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகியவை மட்டும் இல்லாமல், ஆணவ மலம், மாயை மலம், கண்ம மலம் ஆகிய மலங்களும் இல்லாமல், உயிரானது உடலில் எவரும் அறியாமல் அடங்கி இருப்பது போல், மௌனமாகிய மோன வடிவத்தில் எல்லா உயிரிலும் உயிராகி நின்று முதுமை இல்லாமல், இளமை இல்லாமல், அதன் காரணங்களாகிய பிறப்பு இறப்பு இல்லாமல், ஞான உருவாக எங்கும் நிறைந்து நிற்கும் நாதனின் உருவம் இவ்வாறானது என்று கூறுவதற்கு இயலாதவாறு இருக்கிறது.
விளக்க உரை
அகத்தியர், சிவ லட்சணம் பற்றி கூறும் பாடல்
இனிமையும், மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள் எனும் திருக்குறள் விளக்கம் இவ்விடம் பொருந்தாது, ஏனெனில் முதலில் சூரியனின் இரண்டு ரூபங்கள் விளக்கம் தரப்பட்டுள்ளன. ஆனிய மலம் நான்கு என்று எண்ணிக்கை நான்காக விளக்கப்பட்டுள்ளதால் சொற்குணங்கள் மூன்று என்று எண்ணிக்கை அடிப்படையில் பொருள் விளக்கப்பட்டுள்ளது.
எண்குணங்கள் ஆகிய தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவை இவற்றில் பொருந்தி நிற்பது அறிக.
அருணகிரிநாதர் அருளிய ‘தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா’ தொடங்கும் கந்தர் அலங்கார பாடலில் மெய்ப்பொருள் பற்றிய விளக்கத்தில் ஆகாயம் அன்று, காற்று அன்று, நெருப்பு அன்று, தண்ணீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, உருவமில்லாதது அன்று, உருவத்தை உடையதும் அன்று. ஒன்றும் அற்ற ஒன்று எனும் பொருள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சைவ சித்தாந்தக் கொள்கைகள் எதன் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன? சற்காரியவாதம்
(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
என்னை உடையவனாக கொண்டவனே, நமக்கு இறைவன் அருள் புரியாது இருக்க மாட்டான் என்று எண்ணி உனது திருநாமமாகிய அஞ்செழுத்தைப் பல காலம் கூறி, அதன் காரணமாக கண்களில் நீர் பெருகி, வாயால் குழறிய வார்த்தையால் வாழ்த்தி, உடலால் வணங்கி, மனத்தினாலே எண்ணிக் கனிந்து, பலகாலும் உனது உருவத்தைத் தியானித்து பொற்சபை என்றே துதித்து தளர்வுற்றிருக்கும் உயிராகிய எனக்கு இரங்கி அருள்புரிவாயாக.
விளக்க உரை
இறைவனை வழிபடும் முறையும், இறை அனுபவமும் குறித்தது இப்பாடல்
நாமம் பிதற்றுதல், கண்கள் நீர் பெருதல், வாயால் குழறிறிய வார்த்தையால் வாழ்த்துதல் – இறை அனுபவங்கள்
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
உமாபதி சிவம் குறித்த ஆறு அநாதிப் பொருள்கள் எவை? இறை, உயிர், ஆணவம், மூலகன்மம்,சுத்த மாயை, அசுத்த மாயை