அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணம் என்று அறிக; அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அவர் தானே தலைமை ஏற்று அப்பரிசே வந்தளிப்பர்; அவர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார். சிவன் அத்துவா எனப்படும் ஆறு வழியில் பொதுவியல் படி கலந்திருப்பினும் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நின்றாலும் அவர் இப்படிக் கலந்திருப்பினும் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார் ஆவார்.
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட; விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித் தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும் சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே
தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
திருப்பயற்றூர்ப் பெருமான், குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில் விரித்துப் போர்த்திக் கொண்டார். யானைத்தோலை உரித்ததனையும் போர்திக் கொண்டதையும் கண்டு பார்வதிதேவியார் அஞ்சி தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதைக் கண்டு, சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின் அவ்வாறு தொடர்ந்து போர்த்திய்ம் ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித் அம்பிகையின் அச்சம் தெளியத் தம் பல் தெரியுமாறு சிரித்துவிட்டார்.
எல்லா திசைகளிலும் இருந்து, எல்லா உயிர்கள் இடத்திலும் உறைந்து இருந்து எங்களது தந்தையாகவும், முக்தியைத் தரும் தவமாகிய சுடரினுள் வித்தாக இருக்கக் கூடியவனும் ஆகியவன் என்னுடைய இறைவன் ஆவான். சித்தம் தெளிந்து, காலத்தினால் அறுதி செய்ய இயலா வேதமாகிய கோயில் திறந்தப்பின் குரு என்றும், முனிவன் என்றும், உயர்ந்தோன் என்றும், கடவுள் என்றும் கூறப்படும் அவனின் ஆடல் கண்டப்பின் செய்யத்தக்கது என்று நினைவு கொண்டிருப்பது மாறும்.
விளக்கஉரை
புறத்தில் எல்லா இடங்களிலும் நீக்கமற நினைத்திருக்கும் இறைவனை அகத்தில் கண்டப்பின் பிறவியின் பொருட்டு செய்யத்தக்க விஷயங்கள் எது என எளிதில் விளங்கும்.
உயிர்க்கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப் *பயிர்ப்புறும்ஓர்* பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
6ம் திருமுறை – வள்ளலார்
கருத்துஉரை
புலால் மறுத்தோரை அகவினத்தார் என்றும், கொலையும் புலைப் புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் என்றும் அவர்கள் புற இனத்தார் என்று இறைவன் எனக்கு அருளினான்.
விளக்க உரை
புறத்தில் இருப்பது விலகும், அகத்தில் இருப்பது பற்றி நிற்கும் என்றபடி
பெருங்காற்றில் விளக்கை ஏற்றுதலும், அரிசி மாவு ஆற்றில் இருந்து பெறுதல் இரண்டும் மீண்டும் பெறலாகாத செயல்
குடும்பச்சேறு தன்கண் அழுந்திய உள்ளத்தை மேன்மேலும் ஆழ்த்துவதேயன்றிப் பல்வேறு ஆசைகளை எழுப்பி அதில் இருந்து வெளிவராமல் தடுக்கும் என்ற கருத்துத் தோன்ற, “ஆடும் குடும்பச்சேறு”
கணவனுக்கு ஏற்ற மனைவியாயின் எந்த நிலையிலும் அவளுடன் கூடி வாழலாம். அவ்வாறு இல்லாமல் மனைவி ஏறுமாறாக நடந்தால் கணவன் எவரிடத்தும் எதுவும் கூறாமல் துறவி ஆகுவதே கொள்ளத் தக்கநெறி.
ஆண் தன்மை பொருந்திய பனை மரத்தைப் பெண் பனையாக்கியும், ஒரு நொடியில் எலும்பைக் கண்ணால் நோக்கி, அழகு திகழும் பெண்ணாக உருவமாக்கியும் செய்த பெரியோனாகிய திருஞானசம்பந்தரைப் போன்றவர்கள் ஆயினும், பிறப்பிறப்புக்கு இரக்கமின்றி உயிர் தாங்கி நின்ற உடம்புகளைக் கொன்று தின்கின்ற கருத்துடையனாயின், அவனை ஞானி என்று சொல்லலாகாது; இது எமது குரு ஆணை; சிவத்தின் மேல் ஆணை என அறிக.
விளக்க உரை
திருஞானசம்பந்தர் செய்த அரும் பெரும் செயல்கள் சில
திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கியது
திருமயிலாப்பூரில் இறந்து போன பூம்பாவையின் என்புகளைக் கண்ணால் சிறிது நேரம் நோக்கிப் பெண்ணுரு திகழ எழுப்பியது
திருமருகலில் பாம்பு கடித்து இறந்துபட்ட வணிகனை உயிர் பெற்று எழச் செய்த அற்புதத்தை செய்தது
கருவாணையுறுதல் – பிறப்பிறப்புக்கு உள்ளாதல்.
புலால் உண்பவன் எத்துணை ஞானமும் உடையனாயினும், ஞானி எனப்படல் பொருந்தாது என வற்புறுத்தவாறு.
விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணிகலன் ஆகும். நான்கு வேதங்களையும், சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம் ஆகிய ஆறு அங்கங்களை அறிந்த அந்தணர்களுக்கு ஓதுதல் சிறந்த அணிகலன்; சிவபெருமானுக்கு பிறை உடைய அழகிய சடை சிறந்த அணிகலன். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணிகலன் திருவைந்தெழுத்தேயாகும்.
வாக்கு, மனம் என்னும் இரண்டாலும் மௌனமாக இருத்தலே `மௌனம்` என்பதற்குப் பொருளாகும். `அவ்வாறு இல்லாமல் மனம் எவ்வாறு செயற்பட்டாலும் வாக்கு மட்டும் செயற்படாது இருத்தல்தான் மௌனம் எனக் கூறினால் உலகில் ஊமைகளாய் உள்ளார் யாவரும் மௌன நோன்பு மேற்கொண்டவர்களாக ஆகி விடுவர். வாக்கு, மனம் என்னும் இரண்டும் அடங்கிய தூய நிலையே `சுத்த நிலை` எனப் படுகின்ற வீடுபேற்றைத் தரும். அந்த உண்மையை அறிகின்றவர் யாவர்?
விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.
கையிலை மலையை இகழ்ந்து பேசி அதை எடுத்து அப்புறப்படுத்தலின் பொருட்டு முயன்ற இராவணனை அடக்கிய திருவடியை உடையவனும், திருவடியை உண்மை பொருளாக உடைய அன்பர்கள் தேடி வருந்தும் அவர்கள் உள்ளத்தில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலம் திருவல்லமாகும்.
இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்துங் கண்டாயோ அன்றித்தான் நானுன்னைக் கண்டேனோ என்றால் அருமாயை ஈன்றவள்தன் பங்கனையார் காண்பார் பெருமாயைச் சூழல் பிழைத்து
சிவஞான போதம் – மெய்கண்டார்
கருத்துஉரை
மாணவனே, இன்று நீ என்னை உன் ஊனக் கண்ணால் கண்டும் என் ஆன்மாவின் தன்னியல்பைக் கண்டாயோ? காணவில்லை. அன்றி நான்தான் உன் பருவுடம்பைக் கண்டிருந்தும் உன்னுடைய உயிர் இயல்பைக் கண்டேனோ? காணவில்லை. மாந்தராகிய நாம் ஒருவரை ஒருவர் கண்ணால் கண்டும் முற்றிலும் காணவில்லை. எனில், நுண்ணிய மாயையிலிருந்து இவ்வுலகங்களை எல்லாம் தோற்றுவித்து அருளும் சிவ சத்தியைத் தன்னுடைய ஒரு பாகத்திலே கொண்ட உமையொரு பாகனை மாயைக்கு உட்பட்ட யார்தான் காண இயலும்? ஒருவராலும் காண இயலாது.
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான் முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர் விடிஞ்சிரு ளாவ தறியா உலகம் படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
திருமந்திரம் – முதல் தந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
அகல் இருப்பினும் சுடரை அணைத்து விட்டால், அந்த அகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்துவிடும். அது போல்வதே உடம்பின் வாழ்நாளும், இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர்கள் ஆரவாரம் செய்வார்கள். விடியல் கண்ட பிறகும் இருளில் கிடப்பதை ஒத்து வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, உடம்பின் நிலையாமை இயல்பு கண்கூடாக விளங்கி நிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப் பற்றி அதில் அழுந்திக் கிடந்து, அதன் மேல் நிலைக்கு வராமல் துயருறுதல் இரங்கத்தக்கது.
இச் சக்கரத்தில் மொத்தம் 96 இதழ்கள் இருந்தாலும், ஒரு யந்திரமாக வரையும்போது இரண்டு இதழ்கள் கொண்டதாகவே வரையப்படும்.
வலப்புறம் ஒன்று, இடப்புறம் ஒன்று என வரையப்படும் இந்த இதழ்கள் முறையே “ஹம், “ஷாம்’என்று அழைக்கப்படுகின்றன. அக்ஷ்ரங்கள் முறையே (‘ஹ’,’க்ஷ’). அதன் தேவதைகளான ஹம்ஸவதீ, க்ஷமாவதீ தேவியரே, ஹாகினீ தேவியின் பரிவார தேவதைகளாக போற்றப்படுகின்றனர்.
இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக ஆக்ஞை சக்கரம் முழு உடலின்மீதும் ஆளுமை செலுத்துகிறது.
சதாசிவனாரும், மனோன்மணி ஆகிய ஞானத் தாயும் கூடி மகிழும் ஆக்ஞை புருவ மத்தி அல்லது புருவ நடு ஸ்தானமே “ஆக்ஞை” என்ற தலமாகும்.
இதன் சக்ர கமலத்தில் சந்திரனுடைய 64 கலைகள் உள்ளன.
தெய்வம் – மனோன்மணி, தர்மசக்தி இவர்களுடன் கூடிய ஸதாசிவன்.
வண்ணம் – இண்டிகோ
பீஜா மந்திரம் – “அம்’ (ஆன்ம்)
வாகனம் – நாதம். இந்த நாதமே “அம்’ எனும் பீஜா மந்திரத்தை சுமந்து செல்லும்.
அதிதேவதை – ஹாகினி தேவி
குணம்- சாத்விகம்.
லோகம்- தபலோகம்.
கோசம்- விஞ்ஞானமய கோசம்
தெய்வம் – சிவன். இந்த சக்கரத்தில் அவர் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் உள்ளார். பேதங்கள் மறைந்த பரிபூரண நிலை
புலன் (தன்மந்திரம்), புலனுறுப்பு (ஞானேந்திரியம்), செயலுறுப்பு (கர்மேந்திரியம்) ஆகிய அனைத்துமே “மனம்’
நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியிலுள்ள பகுதியில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது. “நெற்றிக் கண்’, “மூன்றாவது கண்’, “ஞானக் கண்’, ‘ஆளுமைச் சக்கரம்’,’ ப்ரம்ஹக்ரந்தி ‘ என பல பெயர்களால் இந்தச் சக்கரம் அழைக்கப்படுகிறது.
இந்த ஆக்ஞா சக்கரத்தில் பரமசிவமும் சித் சக்தியும் இணைந்திருப்பதை தியானிக்கும் பக்தர்கள் சூரியன், சந்திரன், அக்னி போன்ற ஒளிகளுக்கு அப்பாற்பட்ட பரஞ்ஜோதி வடிவான தேவியின் திருவருளைப் பெறுவர். இங்குதான் ஜீவன்-இறைவன் சந்திப்பு ஏற்படுகிறது
ஆக்ஞை சக்கரத்தைக் குண்டலினி அடையும்போது, “திரிகால ஞானம் அல்லது திரிகால ஞானி’ எனும் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங்களையும் உணர்ந்த நிலை ஏற்படும்.
ப்ரம்ஹக்ரந்தி எனும் இவ்விடத்திலேயே சாக்த யோகிகள் ஹாகினீ தேவியை தியானிப்பர்.
இச்சக்கரத்தில் மகாகாலன் எனும் சித்தன், ஹாகினீ தேவியோடு திருவருள்பாலிக்கிறார்கள். இந்த சக்கரத்தில் விளங்கும் ஒளியை முக்தியைக் கொடுக்கவல்ல “துரீயலிங்கம்” என உபாசகர்கள் அழைப்பர்.
உன்மனீ பாவம் ஏற்பட அருள்வதால் தேவிக்கு மனோன்மணி என்று பெயர். (உன்மனீ பாவம் -சகல விஷயங்களிலும் பற்றுதலை விட்டு இதய கமலத்திலிருக்கும் பரப்பிரம்மத்தை தியானம் செய்யும் நிலை. கண்கள் மூடாமலும் திறக்காமலும், பிராணவாயு, ரேசகம், பூரகம் இல்லாமலும் மனம், சங்கல்பம் விகல்பம் இல்லாமலும் இருந்து அம்பிகையை தியானிப்பது உன்மனீ பாவம்).
புருவமத்தியில் இரண்டு இதழ் தாமரையில் இருக்கும் ஆறு முகங்களுடன் கூடிய ஹாகினீ தேவி, வெண்மை நிறமுடையவள். மஞ்சள் நிறமுடைய எலுமிச்சை அன்னத்தின்மீது பிரியம் கொண்ட இத்தேவி ஞான முத்திரை, அக்ஷமாலை, டமருகம் மற்றும் கபாலத்தை ஏந்தியிருப்பவள். மூன்று கண்களை உடையவள். ஹம்ஸகதி முதலியவர்களுடன் கூடியவள். சகல தேவ தேவியர்களாலும் துதிக்கப்படுபவள். எலும்பிலுள்ள தாது மஜ்ஜையின் அபிமான தேவதையாக திருவருள் புரிபவள்.
ஆதிசங்கரர்
இந்த சக்கரத்தில் தியானிப்பவர்களுக்கு கட்டாயம் சாயுஜ்ய பதவி கிட்டும். இச்சக்கரத்தில் தேவதேவியர் பரசம்புநாதர், சித்பராம்பளாக அருள்கின்றனர். இங்கு தேவி ஸாதா எனும் கலையாக பிரகாசிக்கிறாள்.
காளிதாஸன் – லகுஸ்தவம்
நெற்றியின் நடுவில் வானவில் போன்ற பல வர்ணங்கள் கொண்ட ஒளி, சிரசில் சந்திரனுடைய வெண்மையான ஒளி, இதயத்தில் சூரிய ஒளி கொண்ட தேவி என் பாவங்களை நாசம் செய்யட்டும்.
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால் விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்; மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும் அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே
1. கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். இறைவன் தன் பேரொளிக்கு முன் கதிரவன் ஒளி மங்கும் என்பது ஒரு கருத்து. அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் கதிரவன் ஒளி உட்புக முடியாமல் உள்ளது என்பது மற்றொரு பொருள்.