ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – எயிறு
பொருள்
- பல்
- ஈறு
- யானையின் கொம்பு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
உரித்திட்டா ரானை யின்றோ லுதிரவா றொழுகி யோட
விரித்திட்டா ருமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்க னோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டா ரெயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே.
பதம் பிரித்து
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட;
விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும்
சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே
தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
திருப்பயற்றூர்ப் பெருமான், குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில் விரித்துப் போர்த்திக் கொண்டார். யானைத்தோலை உரித்ததனையும் போர்திக் கொண்டதையும் கண்டு பார்வதிதேவியார் அஞ்சி தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதைக் கண்டு, சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின் அவ்வாறு தொடர்ந்து போர்த்திய்ம் ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித் அம்பிகையின் அச்சம் தெளியத் தம் பல் தெரியுமாறு சிரித்துவிட்டார்.
விளக்க உரை
வைரவர் திருக்கோலம் முன்வைத்து.