சித்த(ர்)த் துளிப்பு – 02-Dec-2020


பாடல்

பருத்திநூல் முறுக்கியிட்டுப் பஞ்சியோது மாந்தரே
துருத்திநூல் முறுக்கியிட்டு துன்பநீங்க வல்லீரேல்
கருத்திநூல் கலைப்படுங் காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாயவஞ் செழுத்துமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

மாந்தர்களே! பருத்தியை முறுக்கி திரிக்க பஞ்சு நூல் மாறி நூல்திரியாக வரும்; அதன் பின் பஞ்சு இருக்காது; அதுபோல,காற்று தங்கும் இடமான இந்த தோல்பை போன்ற உடலில் சூரிய கலை, சந்திரகலை ஆகியவற்றை கருத்தில் வைத்து முருக்கி மேலேற்றி அக்கினி கலையுடன் கலக்கச் செய்து சிவாய எனும் ஐந்தெழுத்தினை ஓதும் போது தொந்த வினைகளை நீக்கி  காலத்தினை கடந்துவிடலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 01-Dec-2020


பாடல்

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடுங் கரைகளுங் கல்லாம் பணியும் கரிபரியும்,
தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே

அருளிய சித்தர் : இடைக்காட்டுச் சித்தர்

பதவுரை

செல்வத்தினை தருவதும் செல்வம் என்று அழைக்கபடுவதுமான மாடும், வசிக்கத் தகுந்த இடமான மனைகளும், தனக்கு உறவான தம்மக்களும், தன்னைச் சார்ந்த சுற்றமும், வானளவாக இருக்கக்கூடியதான் பொருளும், வீடும், மணிகளும், வெண் பொன் என்பதான வெள்ளியும், செம்மையான பொன் என்பதான் தங்கமும், வெண்கலமும், உணவு தரத்தக்கதான் வயல்வெளிகளும், அதனை சூழ்ந்த நிலப்பரப்பும் கொண்டிருத்தலால் ஐராவதம் போன்ற யானையால் வணங்கப்படும் இந்திரப் பதவி ஒத்ததான நிலையும், தேடும் பலவகையானப் பொருள்களும் நில்லாமல் செல்வதால் அவைகளை விலக்கி சிவகதியினை அடையுங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 30-Nov-2020


பாடல்

பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
   படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி;
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
   வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு;
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
   ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
   குணவியவா னானக்காற் சத்திய மாமே

அருளிய சித்தர் : அகத்தியர்

பதவுரை

இந்த உலகத்தில் பிறவிகள் கோடி ஆகும்(எண்ணிக்கை அற்றவை என்பதைக் குறிக்கும், 84 லட்சம் என்பது சைவ சித்தாந்த வரையறை); அந்த பிறவி சாந்து வரும் படைப்புகளோ கோடி கோடியாக நீட்சி கொள்ளும் ((எண்ணிக்கை அற்றவை என்பதைக் குறிக்கும்); புழுவானது அதன் கூட்டில் இருந்து தப்பாதவாறு வலைப்பின்னல்கள் இருப்பதைப் போன்று இந்த அண்டத்திலும் பிறவிகள் கோடி ஒத்து இருக்கின்றன; அதில் எண்ணற்ற வகையான மாற்றங்கள் தினந்தோறும் நடைபெற்று கொண்டு இருக்கிறன; இதை புறக் கண்களால் கொண்டு அதை உற்று கவனிப்பாயாக; அவ்வாறு கவனிக்கும் போது இந்த அண்டத்தில் இருப்பது பிண்டம் எனப்படும் உடலில் இருக்கின்றது என்பது புலப்படும்; அதனை குருவின் அருளினால் சத்தியமாக உணர வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 29-Nov-2020


பாடல்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

மாலை, சந்தியா காலம் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்தி, மதியத்திற்கும் இரவிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியான மாலை, உச்சிக்காலம் ஆகிய காலங்களில் காலம் தவறாமல் தீர்த்தங்களில் நீராடியும், மாலையில் செய்யப்படுவதான தர்பணங்களும், புறத்தால் செய்யப்படுவதாகிய ஜெபம், ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து சாத்விகமான ஆன்மீக சாதனைகளாகிய தவமும், சிறந்த சிந்தனை உடையவர்களும், ஞானமும் கொண்டவர்களால் நித்தமு ஜெபிக்கப்படும் மந்திரம் எம் தலைவன் ஆகிய ராமனின் நாமமாகிய ராம ராம ராம எனும் நாமமே.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 24-Nov-2020


பாடல்

மாலுந் திருவும் வசித்திருக்கும் இடம்
வணங்கி இப்பால் செல்லும்போது
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை
மேவியே காண்பாய் ஆனந்தப் பெண்ணே

அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர் எனும் மதங்க நாதர்

பதவுரை

ஆனந்தத்தைத் தரும் மனமாகிய பெண்ணே! தனது தேவியாகிய அன்னையுடன் திருமால் வசிக்கக் கூடிய ஆதாரத்தானமாகிய மணிபூரகம் கடந்து அதை வணங்கி, மேலும் செல்லும் போது மற்றொரு ஆதாரமாகிய அனாகதத்தில் தனது தேவியாகிய ருத்ரியுடன் ருத்ரன் வீற்றிருந்து அவர் அருளும் சேவையினை மேன்மையாகக் காண்பாய்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 28-Nov-2020


பாடல்

தாயும் பகை கொண்ட பெண்டீர் பெரும்பகை தன்னுடைய
சேயும் பகை உற வோரும் பகைஇச் செகமும் பகை
ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில்இங் காதலினால்
தோயுநெஞ்சே மரு தீசர்பொற் பாதஞ் சுதந்தரமே

அருளிய சித்தர் : பட்டினத்தார்

பதவுரை

காதல் எனும் பற்றுக் கொண்டு அதில் உறைந்து நிற்கும் நெஞ்சமே முன்னோர்களால் அளிக்கப்பட்டதும், தம் வினை கொண்டு ஈட்டிய செல்வம் நீங்கில் இப்பூவுலகில் தாயும் பகை கொள்வர்; கொண்ட மனைவியும் பகை கொள்வர்; தன்னுடைய சேய்களும் பகை கொள்வர்;  உறவினர்களும் பகை கொள்வர்; இந்த உலக மக்கள் முழுவதும் பகை கொள்வர்; ஆனால் சுதந்திரத்தினை மட்டும் தருபவன மருதீசரின் பொற்பாதங்கள் மட்டுமே.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 27-Nov-2020


பாடல்

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ!

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

என் கண்ணம்மா! ஆக்கினையை வில்லாக்கி(அமுத தாரணையினை அந்தரம் என்று குறிப்பிடுவதும் உண்டு, குரு முகமாக அறிக), பஞ்சாட்சர மந்திரத்தினை அம்பாகவும் ஆக்கி, அதில் மந்திரங்களை ஏற்றி, (சூட்சம  பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மஹா காரண பஞ்சாட்சரம், மஹா மனு ஆகிய முறைகளில்), இரவி எனும் சூரியக் கலை நாடியும், மதி எனும் சந்திரக்கலை நாடியும் வந்து உறையும் காட்டில் விளையாடி, மனமெனும் மனதினை வேட்டை ஆடி அதனால் மனம் மகிழ்ந்து பார்ப்பது என்றோ?

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 25-Nov-2020


பாடல்

சும்மா இருந்துவிடாய் அகப்பேய்
சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம் அகப்பேய்
சுட்டது கண்டாயே

அருளிய சித்தர் : அகப்பேய்ச் சித்தர்

பதவுரை

மனமாகிய பேயே! மனம், மொழி, காயம் ஆகியவை விட்டு மௌனம் பற்றி நிற்கும் இடம் சுட்டி உணர்த்தப்பட்டதைக் கண்டாயே, இதுவே உனக்கான சூத்திரம் என்று சொன்னேன். அதை கேட்டு மறந்துவிடாமல் இருப்பாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 21-Nov-2020


பாடல்

வாதங்கள் செய்வது வேரொன்றும்
இல்லை வாசி அறிந்தோர்க்கு
நாதம் பிறந்திடக் கண்டறிந்
தோர்கள் நான் என்று சொல்லுவரோ?

அருளிய சித்தர் : ஏகநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர்

பதவுரை

வாசிக் கலையினை அறிந்தவர்கள் ஒருவரின் கூற்றுக்கு மறுமொழி கூறி வாதங்கள் செய்வது இல்லை; அது போலவே தன்னுள் நாதத்தினை பிறந்திடக் கண்டவர்களும் (சங்கை ஒலிக்கச் செய்தல், தச தீட்சை ஒலி கேட்டல் என பலவும் அடங்கும்) தான் எனும் அகங்காரம் கொண்டு நான் எனும் அந்த வார்த்தையினைச் சொல்வார்களா?

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 20-Nov-2020


பாடல்

அத்தி வரைவாடி அகப்பேய்
ஐம்பத்தோ ரட்சரமும்
மித்தையாங் கண்டாயே அகப்பேய்
மெய்யென்று நம்பாதே

அருளிய சித்தர் : அகப்பேய்ச் சித்தர்

பதவுரை

மனமாகிய பேயே! உலகில் பிறப்பெடுத்து சித்தர் பெருமக்களால் விவரிக்கபடுவதான ஐம்பத்து ஓர் அட்சரம் கண்ட பின் மரணித்தாலும் அதனை மெய் என்று நம்பிவிடாதே.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 19-Nov-2020

பாடல்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே

சித்தர் திருநாமம் : அகத்தியர்

பதவுரை

சக்தியும், பராபரம் வேறு வேறு தெய்வம் அல்ல; இரண்டும் ஒன்றே. அது அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் சீவனாக இருக்கிறது; இதை தன் முயற்சி செய்து சுய புத்தியாலோ அல்லது குருவருளால் கிடைக்கப் பெற்றவர்களோ புண்ணியர்கள்; கோடி பேர்களில் ஒருவர் மட்டுமே இந்த உலகில் அது குறித்த அனுபவங்களைப் பெறுகிறார்கள்; அவர்கள் பக்தி செலுத்துவதால் மனமானது பஞ்ச இந்திரியங்கள் வழி செல்லாமல் மனம் அலையாமல் அடங்கி இருப்பார்கள்; ஆணவம், மாயை, கன்மம் எனும் பாழ்படுத்துகின்றதில் மனத்தினை விடாமல் பரம் ஞானியாக இருபார்கள்; அவர்கள் மனம் சுற்றி அலைவதில்லை. இன்னொரு முக்கியமானதும் அதி சூட்சத்தில் சூட்சமான விஷயத்தினை சொல்கிறேன். அண்ட உச்சி எனப்படும், பொன்னம்பலத்தான் ஆடும் இடமாகிய சுழியத்தின் நிலை அறிந்தால் அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 18-Nov-2020


பாடல்

குப்பையிலே பூத்திருப்பாள் மின்மி னுக்கி
கோலத்தே பொன்மேனி கொண்டு நிற்பாள்
தர்ப்பையிலே சிவப்பான தழலைப் போல்வாள்
தனக்குள்ளே சர்ப்பந்தான் சரண்புக் காடும்
அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால்
அனைத்தையுமே யெரித்திடுவாள் சலித்துக்கொள்வாள்
கர்ப்பையிலே தான்பிரித்துக் கண்ணி வைத்தே
கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர்

சித்தர் திருநாமம் : காரைச் சித்தர்

பதவுரை

மின்னல் போல் தோன்றக் கூடியவள் ஆன அன்னையானவள், எண்ணற்ற எண்ணங்களைக் கொண்டு தம் மனதை குப்பையாக வைத்திருக்கும் மனிதர்களிடத்தில் அவைகளை நீக்குதல் பொருட்டு இவள் பூத்திருப்பாள்; பொன் போன்ற மேனியினைக் கொண்டு நிற்பாள்; தர்பை கொண்டு செய்யக் கூடியதான் அக்கியில் எழும் தழல் போல் சிவப்பு நிறம் கொண்டவளாக இருப்பாள்; காட்டில் சரணடைந்த பாம்பானது எவரும் அறியாமல் இருப்பது போல் இருக்கும் இவளை நேசமுடன் கொண்டு அவளிடத்தில் நட்பு கொண்டால் நம்முடைய அனைத்து வினைகளையும் எரித்துவிடுவாள்; பிறப்பு உடையவள் என்றும் பிறப்பு அற்றவள் என்றும் அவள் தோற்றம் பற்றி அறிய இயலாமல் சித்தர்கள் பலரும் வாதம் செய்தார்கள்.

வழிபாட்டு முறை : சாக்தம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 22 (2020)


பாடல்

தள்ளுவது ஆரைஎன்றால் மைந்தா கேளு
தன்னுரவுயில்லாத சமயத்தோரை
உள்ளுரைந்த உள்ளமதைப் பாரார் தன்னை
உத்த சிவஞ் சத்திபதம் தேடார் தன்னை
நல்லுணர்வு இல்லாத நாயகன் தன்னை
நாதாந்த வேதமதைக் காணார் தன்னை
சொல்லுணர்வாய் நாவில்வைத்துப் பேச வேண்டாம்
சோதிமய மானசிவ ஞானம் பாரே

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து – முக்தியினை விரும்பவர்களால் விலக்கப்பட வேண்டியவர்கள் என்போர் பற்றி அகத்தியர் கூறும் பாடல்.

பதவுரை

முக்தியினை விரும்பவர்கள், தன்னுடன் உறவாக இருக்கும் ஆத்மாவை முக்கியமாகக் கருதாத மதத்தை கடைப்பிடிப்போர்களையும், உள்ளுக்குள் உரைந்து நிற்கும் தனது உள்ளத்தைக் கவனித்து தன்னுள் ஆழாதவர்களையும், உத்தமான சிவசக்தி பதம் என்ற உயர்ந்த நிலைகளை விரும்பாதவர்களையும்,  நல்ல உணர்வுகளைத் தரும் நாயகனை விடுத்து தன்னையே நாயகன் எனவும் முக்கியமானவன் எனவும் கருதுவோராகிய நல்லுணர்வு இல்லாதோர்களையும், நாதாந்த வேதம் எனப்படுவதாகிய ஞானத்தினால் பிரணவப் பொருளை அடைய விருப்பம் இல்லாதவர்களையும் சொல்லில் வைத்து பேசி காலத்தை வீணாக்காது அவர்களைத் தள்ளி சோதி வடிவமாக இருக்கக் கூடியதான சிவ ஞானம் பார்க்க வேண்டும்.

விளக்க உரை

  • மேலே கூறப்பட்டவர்கள் தன்னையே உயர்வாக எண்ணி உலக இன்பங்களிலும் பெருமைகளிலும் காலத்தைக் கழிப்பவராவர்கள் என்பதால் இவர்களுடன் சேர்வது முக்தியினைத் தடைப்படுத்தும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆடி – 1 (2020)


பாடல்

பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
     பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
     சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
     திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
     கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே

காகபுசுண்டர் உபநிடதம்

கருத்து – சுழுமுனை பற்றிக் கூறி அதைக் காணும் முறையைக் கூறும்  பாடல்.

பதவுரை

நனவு நிலை எனப்படுவதும், ஆன்மாவின் விழிப்பு நிலை ஆனதும்,  அவத்தை ஐந்தில் ஒன்றான முதல் நிலை ஆனதும்,  ஆன்மா புருவ நடுவில் நிற்கும் அனுபவமானதும், கலாதி சேர்ந்த சகலம் எனப்படுவதும் ஆன சாக்கிர நிலையின் அடையாளமாக இருந்து மூன்று கோணங்களை உடைய ஒன்று சேர்வதாகிய குண்டலினியே சிவ சொருபமானதும், நீண்ட துவாரம் உடையதாகவும், குறுகிய வட்டம் உடையதாகவும், சூரிய சந்திரன் சேர்ந்து உதயமாகும் பிரகாசம் உடைய ஆகாசம் போலவும் மூன்று சுழி உடையதாக பின்னல் கொண்டதாகவும் இருக்கும் சுழுமுனை என்ற நாமம் உடைய  இதனை காற்றினை கும்பகத்தில் நிறுத்தி பிடரி என்படும் அண்ணாக்கு வழியாக ஞானக் கண்ணால் காண்பாயாக.

விளக்க உரை

  • கால் – மூச்சு

சித்தர் பாடல் என்பதாலும், யோக முறையில் உணரப்பட வேண்டியவை என்பதாலும், மானிடப்பிறப்பு சார்ந்ததாலும் பதவுரையில் பிழை இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 25 (2020)


பாடல்

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
     உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
     விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
     பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
     கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே

அகஸ்தியர் ஞானம்

கருத்து – யோக நெறியில் துரியம் தாண்டி துரியாதீதத்தில் நிலை பெற மூலாதார மூர்த்தியாக கணபதியைக் காணுதலே முதன்மையானது என்பதையும் அதுவே ஞானத்தினை தரும் என்பதையும் விளக்கும் பாடல் பாடல்.

பதவுரை

அண்ணாக்கு எனப்படுவதும், கூடத்தக்கதான இடமும் ஆன உச்சிவெளி ஆகிய துரியம் தாண்டி துரியாதீதத்தில் நின்று(அஃதாவது பர ஆகாசத்தில்), உமையவளுக்கும், கணபதிக்கும் முற்பட்ட காலமான காலத்தில் ஒளி பொருந்தி நிற்கக் கூடியதான அம்பரம் எனப்படும் சிற்றம்பலத்தில் அகாரமும், உகாரமும் சேர்ந்ததானதும் எல்லாவற்றிற்கும் மேலானதுமான பரம் எனும் நிலை சாதாரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு எட்டாது;  வேதவடிவமாக இருக்கக்கூடியதான உன்னுடைய உயிர்தான் சிவ வடிவம் என்று  உணர்ந்தும், பாற்கடலில் பள்ளி கொண்டவன் வடிவம் மேக வடிவமாக உணர்ந்தும், போற்றத் தக்கதான கணபதியினை அகக்கண்ணில் கண்டுவிட்டால் இந்த உடலில் உயிருடன் கலந்து மேலே குறிப்பிட்ட ஞானம் கிட்டும்.

விளக்க உரை

  • அகத்தியர் புலத்தியருக்கு உரைத்தது.
  • உமையும், கணபதியும் சக்தியின் வடிவங்கள், ஆதார சக்கரங்களில் மூலாதாரத்தில் கணபதியும், மணிபூரகத்தில் திருமாலும், ஆஞ்ஞையில் சதாசிவமும் வீற்றிருப்பது அறியத் தக்கது.
  • ஒண்ணுதல் – இயலுதல், தக்கதாதல், கூடுதல், ஒளியுடைய நெற்றி

சித்தர் பாடல் என்பதாலும் மனித பிறப்பு சிறுமை உடையது என்பதாலும் பிழை ஏற்பட்டு இருக்கலாம். பிழை எனில் பிறப்பு சார்ந்தது, நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 11 (2020)


பாடல்

கொள்ளாத பசுவுக்குப் பாலங்கேது
   குருடான கண்ணுக்கு வெளிச்சமேது
சொல்லாத பேச்சுக்குக் கேள்வியேது
   சோரஞ்செய் மங்கையர்க்கு வாழ்வுமேது
கல்லாத வீணருக்குக் கல்வியேது
   காணா பேர்களுக்கு காட்சியேது
விள்ளாத சிடனுக்குக் குருவுமேது
   வேடிக்கையாய்த் திரிந்தால் விழலாம்பாரே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துகிட்டாதவை என்பதை உதாரணங்களாக காட்டி மனித வாழ்வினில் வேடிக்கையாக பொழுதினை போக்கி திரிதல் கூடாது என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

பசு தயாராக இருந்தாலும் அதை ஏற்காத கன்றுக்கு பால் எங்கனம் கிடைக்கும்? பார்வை அற்ற கண்களை உடையவர்களுக்கு வெளிச்சம் என்பது எங்கனம் இருக்கும்? உச்சரித்து சொல்லப்படாத சொல் குறித்து கேள்வி என்பது எப்படி எழும்? தர்ம நெறி விலகிய கற்பு இல்லா மங்கையர்களுக்கு வாழ்வு என்பது எங்கனம் கிட்டும்? நூல்களைக் கல்லாதவருக்கு கல்வி எங்கனம் கிட்டும்? மெய்ஞானம் அடைதல் பொருட்டி விரும்பி அதன் பாதையில் செல்லாதவர்களுக்கு காட்சி எங்கனம் கிட்டும்? தெளிவு அடைதல் பொருட்டு வாய் திறக்காத சீடனுக்கு குருவானவர் எங்கனம் கிட்டுவார்? இவை போல பிறப்பின் நோக்கம் அறியாமல் வேடிக்கையாக திரிந்தால் மண்ணில் விழ மட்டுமே செய்யும்.

விளக்க உரை

  • விள்ளுதல் – மலர்தல், உடைதல், வெடித்தல், பிளத்தல், பகைத்தல், மாறுபடுதல், தெளிவாதல், நீங்குதல், சொல்லுதல், வெளிப்படுத்துதல், வாய் முதலியன திறத்தல், புதிர் முதலியன விடுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 24 (2020)


பாடல்

கூறுகிறேன் சதாசிவத்தி லிதழ்தான் ரண்டு
கொடியதொரு பரவெளி லிதழ்தானொன்று
தேறுகிறே னைம்பத்தோ ரிதழுமாச்சு
ஆறிதழாய்ப் பிறக்கின்ற கலைநான்கிற்கே
யரியமணி பூரகமா தாரமாச்சு
வேறுமினி நினையாம லாதாரத்தின்
விஞ்சையடா வைம்பத்தொன் றறிந்துகொள்ளே

அகத்தியர் யோக ஞானம் 500

கருத்துமுருகப் பெருமான் அகத்தியருக்கு ஆதாரங்களை தொட்டுக் காட்டி அது பற்றி உபதேசம் செய்த பாடல்.

பதவுரை

ஆறு இதழ்களாக பிறக்கின்றதும் நான்கு கலைகளை உடையதும் ஆன மணிபூரகம் எனும் இந்தத் தலமானது தவம் செய்ய முடியாதவர்களால் அடையப்பட முடியாததால் கொடியதாக இருக்கும் ஆகாசம் எனும் பரவெளியில் ஓர் இதழ் கொண்டும் சதாசிவ ரூபமாய் தோன்றும் போது இரு இதழ்களாக கொண்டும் முன்னேற்றம் அடைந்து ஐம்பத்தி ஓர் இதழுமாக ஆனது; வேறு எது பற்றியும் இனி நினையாமல் இந்த ஆதாரதத்திற்கு உரித்தான வித்தையினைத் தருவதாகிய ஐம்பத்தி ஓரு எழுத்துக்களைப் பற்றி அறிந்து கொள்வாயாக.

விளக்க உரை

  • பரவெளி – பரமன் உறையும் ஞானாகாசம், கடவுள்
  • விஞ்சை – கல்வி, ஞானம், வித்தை, வித்யா என்ற வடசொல், தெரு
  • தேறுதல் – ஆறுதல், முன்னேற்றம்
  • தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
    நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம் ||  செளந்தர்யலஹரி

அம்மா! என்னுடைய மணிபூரக சக்ரத்தில் சதாசிவ தத்துவத்தை மேகமாகவும், மூன்று உலகங்களையும் குளிரச் செய்பவளாகவும் உன்னை அதில் தோன்றும் மின்னல் கொடியாகவும் தியானித்து நமஸ்கரிக்கிறேன் எனும் பாடல் கொண்டு ஒப்பு நோக்கி இதன் பெருமையினை அறியலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 10 (2020)


பாடல்

செய்யப்பா யிப்படியே பூஜைகொண்டு
திறமாகச் செய்யவல்லோ பலத்தைக்கேளு
மெய்யப்பா அவனுடைய பிதிர்களெல்லாம்
மிகக்கோடி நரகசென்ம மல்லவல்ல
பொய்யப்பா செல்லவில்லை தேர்ந்துபாரு
புலத்தியனே உந்தனுக்க்குக் கருவைச்சொன்னேன்
வையப்பா பூஜையிலே என்னைவைத்து
மவுனமாய் சிவனைவைத்து நோக்குநீயே

அகஸ்தியர் சிவலிங்க பூஜா விதி

கருத்து – சிவபூஜை முறைகளைக் கூறி, அதை செய்வதால் அவர்கள் முன்னோர்கள் நரக ஜன்மத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

இவ்வாறு உரைத்த படி திறமையாக சிவ பூஜை செய்வதன்  பலன்களைக் கேட்பாயாக; கோடி ஜன்மங்களாக நரக ஜன்மத்தில் அழுந்தி இருக்கும் அவனுடைய முன்னோர்கள் இந்த சிவ பூஜை செய்வதால் விலக்கப்படுவார்கள்; இதை பொய்யாக உரைக்கவில்லை; இதை பயிற்சி செய்து பார்ப்பாயாக; புலத்தியனை உந்தனுக்கு இவ்வாறான சிவபூஜை செய்வதன் கருவைச் சொன்னேன்; இந்த பூஜை முறையில் என்னை வைத்து சிவனைவைத்து மௌனமாக அந்த சிவத்தை நோக்குவாயாக.

விளக்க உரை

  • திறம் – திறமை, புலமை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 27 (2020)


பாடல்

சொல்லன்றிப் பொருளு மன்றிச் சூழ்ந்ததோ ருருவமன்றி
அல்லன்றிப் பகலு மன்றி அகண்டபூ ரணமதாகி
நல்லின்பச் சிவமதாகி நாட்டிரண் டற்று நிற்போர்
செல்லுநற் சிந்தை யோராஞ் சித்தராய் வாழுவாரே

முதுமொழி ஞானம் – அகத்தியர்

கருத்து – இருமைகளை விலக்கி, தியான நிலையில் சித்ததன்மையுடன் வாழ்பவர்களைப் பற்றி கூறும் பாடல்.

பதவுரை

சொல்லக் கூடிய சொல்லாகவும், அதன் பொருளாகவும் இன்றி சூழ்ந்திருக்கும் உருவமாகவும் இன்றி, உலக வாழ்வின் அல்லல் ஏதுவுமின்றி, ஒளியினால் ஏற்படுவதாகிய பகல் ஏதுவும் இன்றி அகண்ட பூரணமாகி , நல் இன்பத்தினை தருவதாகிய சிவமாகி  அதை நாடி இரு வினைகளை ஆகிய நல் வினை, தீவினை ஆகியவற்றை அழித்து நிற்பவர்களது சிந்தை எப்பொழுதும் நல்வழியில் சென்று சித்தராய் வாழ்வார்கள்.

விளக்க உரை

  • உருவமன்றி, அல்லன்றி , பகலன்றி – அருவமன்றி, இன்பமன்றி, இரவின்றி எனும் இருமைகள் மறை பொருள்கள். இருமைகள் விலகி சித்த தன்மையுடன் வாழ்வர் என்பது மறை பொருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பேணுதல்


வார்த்தை : பேணுதல்
பொருள்

  • போற்றுதல்
  • உபசரித்தல்
  • ஒத்தல்
  • மதித்தல்
  • விரும்புதல்
  • பாதுகாத்தல்
  • வழிபடுதல்
  • பொருட்படுத்துதல்
  • ஓம்புதல்
  • அலங்கரித்தல்
  • கருதுதல்
  • குறித்தல்
  • உட்கொள்ளுதல்
  • அறிதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

காணலாம் அவருடைய மூலங்கேளு
கனகரத்தின மானசிறு குழந்தைபோலத்
தோணலாம் புருவநடுக் கமலந்தன்னிற்
சுகமாகச் சொரூபநிலை கண்டாயானால்
*பேணலாம்* அவர்பதத்தைத் தியானஞ்செய்து
பெருமையுடன் மானதமாம் பூசைசெய்தால்
பூணலாஞ் சகலவரங் கைக்குள்ளாகும்
பொற்கமல வைரவனைத் தியானம்பண்ணே

அகத்தியர் சௌமியசாகரம் – வைரவத்தியானம்

இப்பொழுது அவருடைய மூலத்தை கேட்பாயாக. தங்கத்தில் பதிக்கப்பட்ட ரத்தினம் எவ்வாறு இருக்குமே அது போல சிறு குழந்தை போலத் தோன்றுவார். இரு புருவங்களுக்கு இடையில் இருக்கும் நெற்றிக் கண்ணில் சுகமாக அவருடைய சொருப நிலையை அறியலாம். அவருடைய திருவடியை அகவழிபாட்டின்படி மானச தியானம் செய்தால் சகல வரங்களும் கைவல்யமாகும். இவ்வாறு தங்க தாமரை போன்ற பாதங்களை உடைய வைரவனை தியானம் செய்வாயாக.

துக்கடா
வல்லெழுத்து மிகா இடங்கள்
அவை, எவை, இவை, யாவை என்னும் சொற்களின் பின்
அவை பெரியன
யாவை போயின

Loading

சமூக ஊடகங்கள்