அமுதமொழி – விகாரி – ஆனி – 13 (2019)


பாடல்

தொடுக்கும் கடவுட் பழம்பாடல்
தொடையின் பயனே கறைபழுத்த
துறைத்திங் தமிழின் ஒழுகுகறுஞ்
சுவையே அகங்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கும்
உடுக்கும் புவனம் கடந்துன்ற
ஒருவன் திருவுள் ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற்காடு ஏந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

கருத்துசிறுமி மீனாளைத் தளர் நடையிட்டு வருமாறு அழைப்பதைப்போல அமைந்தப் பாடல்.

பதவுரை

மனிதனின் கற்பனையால் புனையப்பட்டு உருவாக்கப்படும் தெய்வீக அழகு கொண்ட தமிழ்ப் பாக்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாகவும், தேன் நிரம்பித் ததும்பும் இனிமைத் தமிழினைக் கொண்டு  மாலையாக தொடுக்கப்படது போன்றதும் ஆனவளே, மும்மலங்களில் ஒன்றானதும் முதன்மையானது ஆன ‘தான்’ என்ற அகந்தைக் கிழங்கைக் கிள்ளி எறிபவர்களின் உள்ளத்தில் ஒளிரும் மெய்ஞான விளக்காக திகழ்பவளே, பனி மலைச் சிகரமாகிய இமயமலையில் விளையாடும் இளமையானதும் மென்மையானதும் ஆன பெண் யானைப் போன்றளே, புவனமெல்லாம் கடந்து நின்று அதை தன்னுடைய ஆடையாகவும் அணியும் பரம்பொருள் தன் உள்ளத்தில் ‘அழகு தோன்றுமாறு எழுதிப்பார்த்திருக்கும் உயிர் ஓவியம்’ போன்றவளே, வண்டுகள் தேன் குடித்துத் துயிலும் குழல் காட்டினை ஏந்தும் வஞ்சிக் கொடியே, மலயத்துவச பாண்டியன் பெற்ற பெரு வாழ்வே வருக வருக என்று மீனாட்சியம்மையை குமரகுருபரர் அழைக்கிறார்.

விளக்க உரை

  • மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழின் வருகைப் பருவத்தில் இடம் பெறுகிறது இப் பாடல்.
  • இந் நூல் அரங்கேற்றம் நிகழ்ந்தபோது, குறிப்பிட்ட இப்பாடலின் தருணத்தில், அன்னை மீனாட்சியே சின்னஞ் சிறுமியாக வந்து, மன்னரின் மடி மீது அமர்ந்து இதைத் தலையாட்டிக் கேட்டாள் என்ற பழங்கதை ஒன்று உண்டு.
  • பிள்ளைத்தமிழ் – தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாsசாரியர்கள், புலவர் பெருமக்கள், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
  • தமிழின் ஒழுகுகறுஞ்சுவையே – மொழியின் லயமாக அவனைத் தரிசித்தல்
  • தொடுத்தல் = கட்டுதல் / உருவாக்குதல்,
  • தொடை = மாலை
  • நறை = மணம்
  • தீம் = இனிய
  • அகந்தை = செருக்கு
  • தொழும்பர் = அடியார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 1 (2019)


பாடல்

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துதிரிபுரை அன்பர்களையே அடைதல் பற்றி கூறப்பட்டப் பாடல்.

பதவுரை

எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய பெண்வடிவனாமான மனோன்மனி எனும் திரிபுரை, மனதில் ஒன்றியவளாகவும், திசைகளை ஆடையாகக் கொண்டவளாகவும், அழியாத மங்கலத்தை உடையவளாயும் இருக்கிறாள்.  அருளும் தன்மைக்கு ஏற்றவாறு பல வகைப்பட்ட தேவியின் வடிவங்களாக என் உள்ளத்தில் பொருந்தியும், உலகம் எல்லாம் வணங்கும்படியாக அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் யான் வேறு, அவள் வேறு எனும் வேறுபாடு இல்லாமல் நிற்க இசைந்து, வந்து நின்றாள்.

விளக்க உரை

  • நேரிழை – பெண்
  • நீள்கலை – நீண்ட ஆடைகள்.(திசைகளை ஆடையாகக் கொண்டவள் எனவும் கொள்ளலாம்.
  • கலை – கூறு
  • ‘அகம் படிந்து’,’மன்றது ஒன்றி’ – அகத்தும் புறத்தும் விளங்குபவளாக தெரிதல்
  • ஒத்தல் – உள்ளம் ஒத்தல்
  • ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்‘ என்பதனை `ஒத்து அடைந்து ஒன்றி நின்றாள்“ எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டுக என சில இடங்களில் விரிவுரை எழுதப்பட்டு இருக்கிறது. அவள் அடியவரை அடைந்து பின் ஒன்றி நின்றாள் எனும் பொருள் படுமாறு வருகிறது. அன்னை அனைத்து உயிர்களின் வடிவமாக இருப்பதாலும் மாறுதல் கொண்ட எண்ணங்களை மாற்றி நிற்பதாலும் ‘ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்’ எனும் பொருளில் இங்கு விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 30 (2019)


பாடல்

கருணையாங் காமாட்சி யிருந்த வீடு
   கடிதான நாற்பத்து மூன்று கோணம்
வருணையாம் ரிஷி தேவர் சித்தர் யோகி
   மகத்தான பஞ்சகர்த்தா ளக்கினி யாதித்தன்
அருணையாம் அகஸ்தியருங் கணேசன் கந்தன்
   ஆத்தாளைப் பூசித்து அதிகார மானார்
கருணையாம் பூசித்துச் சமாதியிலேநின்று
   தாயளிக்கச் சகல சித்துந் தரித்திட்டேனே

போகர் – கருக்கிடை நிகண்டு 500

கருத்துஸ்ரீ சக்ர பூசை செய்தவர்களையும், அவர்கள் வழியில் தானும் பூசை செய்ததையும் போகர் குறிப்பிட்டு உரை செய்த பாடல்.

பதவுரை

தாயாகியவளும், கருணையுள்ளம் கொண்டவளும் ஆன காமாட்சி  இருக்கும் வீடு அடைவதற்கு அரிதான நாற்பத்து முக்கோண சக்கரம் ஆகும். எக்காலத்திலும் அன்பை பொழிவதாக இருப்பவர்களானவர்களும், இறைவனிலிருந்து வரும் ஒலி அலைகளை கிரகித்து உணர்ந்து  மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவ சீலர்கள் ஆகிய ரிஷிகளும், தேவர்களும், சித்தத்தை அடக்கியவர்கள் ஆன சித்தர்களும், பிரபஞ்சத்தின் ஒருமை நிலையை தன்னுள் உணர்ந்தவர் ஆன  யோகிகளும், பஞ்ச கர்த்தாக்கள் ஆன பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோர்களும், அக்னி, ஆதித்யன், அருணை எனும் அருணாச்சலத்திற்கு நிகரான அகஸ்தியர், கணேசன், கந்தன்  போன்றவர்கள் இந்த சக்கரத்தை பூசித்தே சகல அதிகாரமும் பெற்றார்கள். கருணை வடிவம் ஆகிய  அவளை அவள் கருணையினால் நானும் மேலே குறிப்பிட்டவர்கள் பூசை செய்த முறையில் பூசித்து, சமாதியில் நின்று சகல சித்தையும் அறிந்து கொண்டேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 10 (2019)


பாடல்

கிளியே அருண வொளிச்சுடரே
      கிருபானனமா முழுமதியே
   கெடியாம் உன்றன் இருபதங்கள் 
      கிடைக்கும் வகையும் பெறுவேனோ

ஒளியா யிருக்குங் கனகசபை
      ஒன்றே இரண்டே விபரிதமே
   உரைக்குங் கருணாநிதிமயிலே
      உதித்த பரமனுடன் ஆடும்

அளியா ரமுதே பரம்பரையே
      அணுவில் அணுவாய் அண்டபிண்டம்
   அமர்ந்த சிவமே ஞானவெளிக்(கு)
      அரசே வேதத் துட்பொருளே

வளியே சுழியில் நடமிடுகண்
      மணியேஎளியேற்கினியருள்வாய்
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துஅம்பிகையின் அருளையும், அவள் தன்மைகளையும் வியந்து அருள் புரிய வேண்டும் என விளம்பும் பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, கிளியைப் போன்றவளே, சூரியனைப் போன்ற பிரகாசம் உடைய சுடர் போன்றவளே, முழுமதி போன்று கருணையைப் பொழிபவளே, வல்லமை உடையதும், புகழ் உடையதும் ஆன சிறப்புமிக்க உன் பாதங்கள் கிடைக்க எளியவன் ஆகிய யான் பெறுவேனோ? ஒளிவடிவாக இருக்கும் கனக சபைதனில் ஒன்று எனவும், இரண்டு எனவும் அறிய முடியாதபடி சிவசக்தி ரூபமாக இருப்பவளே, அடியார்களுக்கு அருளை வழங்குவதில் கருணை நிதியாக இருப்பவளே, மயில் போன்ற அழகுடையவளே, தன்னில் ஒருபாதியாக மிகுந்து இருக்கும் பரமனுடன் ஆடியும், அருளும் இரக்கமும் கொண்ட அமுதமே, முழு முதல் தெய்வமாக ஆனவளே அணுவிற்கணுவாய், அண்டத்திலும் பிண்டத்திலும் அமர்ந்த சிவம் ஆனவளே, பரஞான வெளிக்கு அரசே, வேதத்தின் உட் பொருளாய் இருப்பவளே, மூச்சுக் காற்றாக இருந்து சுழி முனையில் நடனமிடும் கண்மணியே! எளியவன் ஆகிய எனக்கு மனம் இரங்கி அருள்புரிவாய்.

விளக்க உரை

  • மயில், குயில் போன்றவை சித்தர் பரிபாஷையுடன் தொடர்பு உடையவை. அம்பாள் உபாசனை செய்பவர் என்பதாலும், தமிழ், சம்ஸ்கிருதம் போன்றவை கற்ற பண்டிதர் என்பதாலும் அவரின் விளக்கங்களை குருமுகமாக பெறுக.
  • கெடி – நிறைவேறிவருஞ் செயல், அதிகாரம், மலைக்கோட்டை, ஊர், வல்லமை, புகழ்,அச்சம்
  • அளி – அருள், இரக்கம், பரிவு, கண்ணோட்டம், வண்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 3 (2019)


பாடல்

கனத்த மலையை எடுத்தணுவாய்க்
      காலால் ஊன்றிமீதுவைத்தால்
   கால்தான் தாங்க வசமாமோ
      கருணாநிதியே இனிஉனது

சினத்தை மகன்மேற்பொருத்தநின்றால்
      சிறியேன் பொறுத்து நிலைப்பேனோ
   சிவையே உனது தயவுவரச்
      செய்வாய் இனிஅஞ்சுகஇனமே

தொனித்தமறையின் முடிவிளக்கே
      சோதி வதனச் சுடரொளியே
   சுத்த வியோம் மண்டலத்தில்
      சுகமாய் வளரும் துரந்தரியே

மனத்துள் அழுக்கை அகற்றிஉன்றன்
      மலர்ப்பா தமதில் சேர்த்தருள்வாய்
   மயிலாபுரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துகுற்றங்களை நீக்கி திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டுதல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அஞ்சுகம் ஆகிய கிளிக்கூட்டதை ஒத்து இருப்பவளே! ஒலித்தலை உடைய வேதமாகிய மறையின் முடிவான பொருளாக இருப்பவளே! சோதி போன்ற சுடரொளியை முகத்தில் கொண்டவளே! சுத்த பரவெளி ஆகிய மண்டலத்திற்கு பொறுப்பு ஏற்பவளே! பெரும் கருணை உடைய தாயே! உனது திருவடி ஊன்றி கனமாகிய மலையை எடுத்து அதன் ஒரு பகுதி ஆகிய ஒரு மூலக்கூறாகியதும் அளவில் சிறியதும் ஆன அணு அளவில் ஆக்கி என் மீது வைத்தால் அந்த பேரின்ப அனுபவத்தை எனது சுவாசத்தால் தாங்க இயலுமோ? (இயலாது). இவ்வாறான பேரனுபவத்தை தருபவளாகிய நீ, சினம் கொண்டு உன் மகன் ஆகிய என் மேல் சினத்தை பொருத்தி நின்றால் சிறியவன் ஆகிய யான் அதை பொறுத்து நிலை பெற இயலுமோ?(இயலாது என்பதே முடிவு) அன்னை ஆகிய பார்வதி தேவியே! என்மனத்துள் உள்ள அழுக்குகள் ஆகிய காமம், வெகுளி, மயக்கம் முதலிய குற்றங்களை நீக்கி,  உன்னிடத்தில் அருள், அன்பு, பக்தி ஆகியவை வரும்படி செய்து உன் திருவடித் தாமரை சேர அருள்வாய்!

விளக்க உரை

  • “கனமாகிய மலையை எடுத்துப் பேரணுக்களாக நெருக்கி என் மீது வைத்தால் என் கால்கள்தான் தாங்க முடியுமோ” என்று சில இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. கால் என்பது மூச்சுக்காற்றுடன் தொடர்புடையது எனும் சித்தர் பெருமக்களின் வாக்காலும், பேரனுபவத்தை விவரிக்க இயலா நிலை ஏற்படுகிறது என்பதை முன்நிறுத்தியும் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சிவை – பார்வதி, காளி, நரி, வேர், உலைமூக்கு, நெல்லிக்காய்
  • தொனித்தல் – ஒலித்தல், சொல்லுதல், குறிப்புப் பொருள் தோன்றுதல்
  • துரந்தரி – பொறுப்பு ஏற்போள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 20 (2019)


பாடல்

பெரியோர் எவரைப் பழித்தேனோ
      பிரம தவத்தை அழித்தேனோ
   பெற்ற தாயார் பசித்திருக்கப்
      பேணி வயிற்றை வளர்த்தேனோ

அரிய தவத்தோர்க் கிடைஞ்சல்செய்தே
      அற்ப ரிடத்தில் சேர்ந்தேனோ
   அறியாமையினால் என்ன குற்றம்
      ஆர்க்குச் செய்தேனோஅறியேன்

கரிய வினைதான் எனதறிவைக்
      கலங்க வடித்து முடிச்சதையுங்
   கரைக்க வுன்றன் கருணையினால்
      கடாக்ஷம் பொருந்த அருள்புரிவாய்

வரிவில் புருவ மடமானே
      வதனாம் புயவாலாம்பிகையே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துமாயைக்கு உட்பட்டு அறியாமையால் செய்த தவறுகளை விலக்கி அருள் புரிய வேண்டி நின்ற பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, எண்ணங்களால் அறிவுள்ள பொருளாகிய புருட வடிவம் கொண்டும் மேனி வடிவில் வாலாம்பிகையாகவும் இருப்பவளே! பெரும் பாவங்களில் கூறப்படுவதான பெரியோர்களைப் பழித்து இருந்தேனோ? மிகக் கடுமையான தவம் செய்பவர்களை அழித்தேனோ? அன்னையைப் பசிக்க கண்டும் தான் மட்டும் உண்ணுதல் போன்ற மிகக் கொடுமையை செய்து இருந்தேனோ? அரிய தவம் உடையவர்களுக்கு இடைஞ்சல் செய்தேனோ? சிறுமை புத்தி உடைய்வர்களும், அற்பமாக நடந்து கொள்ளும் மனிதர்கள் இடத்தில் சேர்ந்து  இருந்தேனோ? வினைப்பயன் கூட்டுவித்து என் அறியாமையால் எவர்க்கு என்ன குற்றம் செய்தேனோ – இது பற்றி அறியவில்லை. ஆகையால் மாயைக்கு உட்பட்டு இருவினைகள் கொண்டு, பேரறிவை அறிய முடியாதபடி செய்து என்னைக் கலங்கும் படியான வாழ்வினை கரைக்க உன்னுடைய கருணையினால் கடைக்கண் காட்டி கிருபை செய்வாய்.

விளக்க உரை

  • நல்லோர் மனதை நடுங்கச் செய்தோனோ” எனும் மனு முறை கண்ட வாசகம் ஆன வள்ளலாரின் பாடல் வரிகளுடனும், “ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை” எனும் வள்ளுவர் குறளுடனும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • புருடன் எனும் இரு பொருள் கொண்டு இங்கு உரைக்கப்படுகிறது. சிவனைக் குறித்து கூறப்பட்டு சிவசக்தி ஐக்கியமாக காணுதலையும், மெய்யறவு கொண்டு சிவத்துடன் ஒன்றாகி தானும் சிவசக்தி ரூபமாக இருப்பவள் என்று உரை செய்யப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 6 (2019)


பாடல்

கள்ள மயக்கந் தொடராமல்
      கவலைப் பிணிகள் அடராமல்
   கனவை நனவாய்த் தொடர்ந்தடர்ந்து
      கரைய விழியின் புனலாறாய்த்

துள்ளி மனந்தான் மிகச்சலனம்
      தொடுத்துத் தொடுத்தே அலையாமல்
   சுகமாய் உன்றன் இருபதத்தைத்
      தொண்டன்மனத்துட்கொண்டருள்வாய்

உள்ள படியே மனத்தடத்தில்
      ஒன்றாய் வாழுங் கனியமுதே
   ஓங்காரத்துக் குள்ளிருந்தே
      உயர்ந்த கமலா சனத்தரசே

வள்ளல் இடத்தி அருள்மயத்தி
      வனச முகத்தி கனகசத்தி
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

*கருத்துதுயர வாழ்வு மனதில் தொடராமல் திருப்பாதங்களை என் மனதில் நிலை கொள்ளுமாறு செய்விக்க வேண்டும் என்பது பற்றியப் பாடல் *

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, மாறுபாடு இல்லாமல் மனம் எனும் தடத்தில் ஒன்றாக வாழும் அமுதக் கனி போன்றவளே, உயர்ந்ததான தாமரையான கமலாசனத்தில் வீற்றிருப்பவளும், ஓங்கார வடிவத்தின் உப்பொருளாகிய மகாரப் பொருளாக வும்இருப்பவளே, மாறுபாடு இல்லாமல் மனம் எனும் தடத்தில் ஒன்றாக வாழும் அமுதக் கனி போன்றவளே, உயர்ந்ததான தாமரையான கமலாசனத்தில் வீற்றிருப்பவளும், ஓங்கார வடிவத்தின் உப்பொருளாகிய மகாரப் பொருளாக இருப்பவளே, தங்கம் போன்ற திட சக்தி கொண்டவளே! மும் மலங்களில் ஒன்றானதும், எப்பொழுதும் தீமைத் தரத் தக்கதுமான மயக்கம் தொடராமல், வினை பற்றி நின்று செயலாற்றுவதான கவலைப் பிணிகள் தொடராமல், பொய்யான இந்த உலக வாழ்வினை மெய் என்று நம்பி அதனைத் தொடர்ந்தும் அலைந்தும், அதன் பொருட்டு விளையும் துயரங்களால் கண்ணீர் விட்டு அழுது மனமானது நிலைபெறாமல் துள்ளித் திரிவது போல் செய்வதும், மனதில் சலனத்தைக் கொடுத்து வருவதுமான மனதை அலையவிடாமல் செய்து உன்னிடத்தில் இயைத்து வைத்து சுகம் தருவதான உன்னுடைய மலர் போன்ற உன் திருப்பாதங்களை என் மனதில் நிலை கொள்ளுமாறு செய்விப்பாய்.

விளக்க உரை

  • தொடுத்தல் – இயைத்தல், தொடங்குதல், கட்டுதல், பூட்டுதல், வளைத்தல், எய்தல், அணிதல், சேர்த்துவைத்தல், பா தொடுத்தல், உண்டாக்குதல்,வழக்குத் தொடர்தல், பூ முதலியன இணைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 15 (2019)

பாடல்

ஏன்றான் மயக்கத் திருவினையும்
      மிடியும் வகையும் போதாதோ
   ஏழை தனையே பகைப்பவர்கள்
      இருமாநிலத்திற் சலுகையுண்டாய்

நான்றான் பெரியன் என்றுரைத்த
      நாவும் வாயும் அடைத்தெமனார்
   நகரிற் பயண மாகிவர
      நடத்தாய் கருணைச் சுடர்விளக்கே

தான்றான்செய்த வினைமுழுதும்
      தனக்கேயன்றி மனக்கவலை
   தன்னாற்போமோ என்மனத்துத்
      தளர்ந்து புழுங்கும் என்செய்கேன்

வான்றான் பரவுந் திரிபுரையே
      மெளனாதீத மலர்க்கொடியே
   மயிலாபுரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துதன் வினைகளை தானே அனுபவித்து தீர்க்க உன் அருள் வேண்டும் என விளம்பும் பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! வானளாவிய பெருமையுடைய திரிபுரையே! மௌனமான மோன நிலை கடந்த இடத்தில் முளைத்த மலர்க் கொடியே! அறியாமையினால் வேறுபாடுகளைத் தந்து அதன்பொருட்டு வருகின்ற வினையும், அதனைத் தொடர்ந்து வரும் வறுமையும் துன்பமும் போதாதா? உன் அருள் கிட்டாமையினால் ஏழையாக இருக்கும் என்னை பகைப்பவர்களாக  கருதும் தேவர்களும், அசுரர்களும் கொண்ட மாறுபாடு விலக்கி எனக்கு ஆதரவு அளித்தாய்; தன் கருணையினால் சுடர் விளக்குப் போல் பிரகாசிப்பவளே! நான் தான் பெரியவன் என்று உரைத்த நாவும் வாயும் அடைக்கச் செய்து எமனின் உலகமான எமலோகத்திற்கு பயணமாகி வரும்படி நடத்தி வைத்தாய்; தன்னால் செய்யப்பட்ட வினை முழுதும் தான் அனுபவித்தல் அல்லாமலும் அதனால் தொடர்ச்சியாக உண்டாகின்ற மனக்கவலையும் தானாக செல்லாது என்பது பற்றி என் மனம் மிகவும் வாடுகிறது.

விளக்க உரை

    • ஏல் + த் + ஆன் – > ஏல் – ஏற்பாடு, எதிர்த்தல் செய், ஒப்புக்கொள், இர, அன்புகொள், சுமத்தல் செய், தக்கதாயிரு, வேறுபடு, துயிலெழு, நிகழ்தல் செய்
    • புழுங்குதல் – ஆவியெழவேகுதல், சிறுக வேகுதல், வெப்பத்தாற் புழுக்கமாதல், கோபத்தால் வெம்புதல், வேர்த்தல், பொறாமைப்படுதல், வாடுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 8 (2019)

பாடல்

மூலத் துதிக்கும் ஞாயிறுமாய்
      முளரி யிதழ்வாய்ச் சதுர்முகனாய்
   மூல வுந்தித் திருமாலாய்
      மூளுங் கால காலனுமாய்

மேலுற்றருளுஞ் சதாசிவனும்
      விரியும் இதழொன்றருள்பரையும்
   வித்தாரமுமாய் உலகனைத்தும்
      விரிவாய் நின்ற விரிசுடரே

ஞாலத் தமைந்த இருபதமும்
      நடனச் சிலம்பும் கிண்கிணியும்
   நணுகிப் பெருகும் இந்துநதி
      ஞான நதியாம் பரமந்தி

மாலற் றவர்க்கும் உதவிநிற்கும்
      மதுர வசனி நவசரணி
   மயிலா புரியில் வளர்சன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துஅம்மையின் வடிவங்களையும், அவள் சிறப்புகளையும் கூறும் பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! அண்டத்தின் தொடக்கத்தில் தோன்றும் சூரியனுமாகவும், தாமரை இதழ்களில் தோன்றிய நான்கு முகம் கொண்ட பிரம்மாவாகவும், அதனை தாங்கி நிற்கும் கொப்பூழ் கொண்ட திருமாலாகவும், காலம் அறிந்தும், சினம் கொண்டும் உயிர்களை கவரும் கால காலனுமாகவும், ஐந்து கர்த்தாக்களுள் முதலாய் இருந்து உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தமாகவும், உருவாய் விளங்குதற்குமுன் உயிர்களின்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தமும் ஆன சதாசிவமாகவும், சிவத்திடம் கூடியதான பராபரையாகவும், பரந்து விரிந்து உலகம் அனைத்திலும் விரிந்து விரிவாக நின்ற விரிந்த சுடராகவும், ஞால வடிவமாகியதும், அதைத் தருவதும் ஆன இரு பாதங்களும், நடனத்தில் ஒலிக்கும் சிலம்பும், கிங்கிணி ஓசைகளும் கொண்டு, கங்கையுடன் ஒன்றிக் கலக்கும் சிந்துநதி, ஞான நதியான பிரம்ம புத்ரா ஆகியவையும் ஆகி, முக்குணங்கள் நீங்கி மாசற்றவர்களாக இருப்பவர்களுக்கு உதவி செய்து நிற்பவளும், இனிய மொழிகளை பேசுபவளும், ஒன்பது வகையான தேவதைகளாலும் வணங்கப்படுபவளும் ஆகி நிற்கிறாய்.

விளக்க உரை

  • நணுகுதல் – கிட்டுதல், சார்தல், ஒன்றிக் கலத்தல், அணுகுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 17 (2019)

பாடல்

காமக் கிரிபீடத்தழகி
      கனக சபையில் நடனமிடும்
   காத்யா யனியே கவுமாரி
      காமேஸ் வரியே ஈஸ்வரியே

பூமிதேவி நான்முகவன்
      புனித மனைவி இந்த்ராணி
   புகழ்நா ரணியும் தினம்பணியும்
      பூர்ண கலையே கதிமுதலே

சோமன் உதய மணிநுதலே
      சுருதி ஞான முடிமுதலே
   துவாத சாந்த நிலையாளே
      சுகமே ஞான மணிவிளக்கே

வாம நயனி அதிரூபி
      வனசா கினியே மாமணியே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

 

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துஅன்னையின் புகழ்பெற்ற வடிவங்களாகவும், சப்த மாந்தர்களின் வடிவமாகவும், ஞானம் வழங்குபவளாகவும் இருப்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! நீ காமகிரிப் பீடம் ஆகியதும், பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் உள்ள காமாக்கியா கோவிலில் காம ரூபிணியாக வீற்றிருக்கும் காமக்கிரி பீடத்து அழகியாகவும், கனகசபை ஆகிய சிதம்பரத்தில் உள்ள ஈசனும் நடனமிடும் காத்யானி, கௌமாரி, காமேஸ்வரி, ஈஸ்வரி, பூமாதேவி, நான் முகன் ஆன பிரம்மாவின் புனித மனைவி ஆன இந்திராணி, புகழ் பெற்ற நாரயணி இவர்கள் தினமும் பணியும் முழுமையான கலை டையவளாகவும், கொடுக்கும் தன்மை உடைய சோமனை நெற்றிசுட்டியாக  அணிந்திருப்பவளாகவும், மறைகளின் ஞானமுடிவாக விளங்குபவளாகவும்,, உச்சிக்குமேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ள யோகத்தானம் ஆகிய  துவாத சாந்தத்தில் நிலைபெற்றவளாகவும், எல்லை இல்லாத பேரின்ப நிலையைத் தரும் ஞான விளக்கு போன்றவளாகவும், ஒளிரும் கண்களை உடையவளாகவும்,, மிகுந்த அழகிய வடிவம் கொண்டவளாகவும், வனத்தில் வாழும் தூய்மையின் வடிவமாகி  இருக்கும் சாகினியாகவும், மாணிக்கம் போன்றவளாகவும் இருக்கிறாய். (ஆதலால் உன்னைப் பணிகிறேன்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 10 (2019)

பாடல்

எந்தன் நினைப்பும் இனிக்கடந்தே
      ஏக வெளியின் நிலை தொடர்ந்தே
   இரவும் பகலும் அற்றஇடம்
      இனிதா கியபே ரொளிவிளக்கே

சந்திக் கரையின் முடிவேற்றித்
      னையுந் தலைவன் அடிசேர்த்துச்
   சாட்சாத் கார் பூரணமாய்ச்
      சர்வா னந்தமாயிருக்க

உந்தன் இருதாள் மலர்க்கருணை
      ஒளிசேர் கனகக் கிரிமுடிமேல்
   உதித்தாய் எனது வினையறவும்
      உமையே இமையோர்க் கரசான

மந்திரக் கலைச்சிநவகோணம்
      வாழும் யோக நாயகியே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்து – திருவடியில் ஆனந்தமாக நிலைபெறச் செய்யவேண்டி விண்ணப்பம்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, உமையானவளே, இமையாதவர்கள் எனும் தேவர்களால் துதிக்கப்படுபவளும், மந்திரக் கலையை பூரணமாகப் பெற்று,  அதன் வடிவமாக இருப்பவளும், நவ கோணத்தில் வாழும் யோக நாயகியே, இரவும் பகலும் அற்ற இடம் தந்து இனிமை தந்து என்றும் இருள் அடையாமல் இருக்கும் பேரொளி விளக்கே! கருணையுடன் கூடியதான உந்தன் இரு மலர்போன்ற தாள் சேர்த்து, தங்கம் போன்றதும், ஒளியுடன் கூடியதுமான இமய மலைமேல் தோன்றியவளே! எந்தன் நினைப்பு எனும் நிலையினைக் கடந்து, ஏக வெளி எனப்படுவதும், ஆகாசம் எனப்படுவதும் ஆன இடத்தில் நிலைபெற்று இருக்கும் நிலையைத் தந்து, எனது அனைத்து வினைகளும் அறும்படி செய்து, உன்னை நேரில் கண்டு சந்திக்கும் படி செய்து,  என்னை இறைவனும் தலைவனும் ஆகியவனின் திருவடியில் வெளிப்படையாக சேர்த்து, சர்வ ஆனந்த மயமாக இருக்கச் செய்வாயாக.

விளக்க உரை

  • ‘வீடான நவகோணம் இட்டுக்கொண்டு’ எனும் சித்தர்கள் பூஜா விதிப்பாடலும், ‘ஒளி நின்ற கோளங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே எனும் அபிராமி பட்டரின் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. எண்திசையுடன் கூடி, ஆகாயமும் சேர்ந்து ஒன்பது என்று உரைப்பவர்களும் உளார். அன்பர்கள் பொருள் ஆய்ந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 3 (2019)

பாடல்

எந்தன் நினைப்பும் இனிக்கடந்தே
      ஏக வெளியின் நிலைதொடர்ந்தே
   இரவும் பகலும் அற்றஇடம்
      இனிதா கியபே ரொளிவிளக்கே

சந்திக் கரையின் முடிவேற்றித்
      தனையுந் தலைவன் அடிசேர்த்துச்
   சாட்சாத் கார பூரணமாய்ச்
      சர்வா னந்த மாயிருக்க

உந்தன் இருதாள் மலர்க்கருணை
      ஒளிசேர் கனக்க கிரிமுடிமேல்
   உதித்தாய் எனது வினையறவும்
      உமையே இமையோர்க் கரசான

மந்திரக் கலைச்சி நவகோணம்
      வாழும் யோக நாயகியே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்து – நிலைபெற்ற பேரின்பத்தில் என்றும் நிலைக்க வேண்டி விண்ணப்பம்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே,  சுடர் ஒளி போன்ற தங்க மலையின் மேல் உதித்தவள் ஆகிய உமையே, இமையாதவர் ஆகிய தேவர்களின் முதன்மையானது எனப் போற்றப்படுவதும், மந்திரத் தன்மை உடையதும், நவ கோணம் கொண்டதுமான இடத்தில் வாழும் யோக நாயகியானவளே, இரவு, பகல் ஆகிய கால மாறுதல் இல்லாமல், நினைவு எனும் நிலையைக் கடந்து, ஏக வெளி, பரவெளி, ஆகாசம் எனும் பெருவெளி ஆகிய நிலையில் இருக்கும் நிலையைத் தொடர்ந்து இனிமையாக இருக்குமாறு செய்த பேரொளி விளக்கினைப் போன்றவளே, மலர் போன்ற கருணை தரும் உன்னுடைய இரண்டு தாளினையும் தந்து, என்னுடைய இருவினைகளாகிய நல்வினை, தீவினை ஆகியவை அறுந்து விடும்படு செய்து, ஆறு போன்றதான வாழ்வின்  முடிவில் கரையேறுமாறு எனைச் செய்து, வெளிப்படையாகவும், முழுவதுமாகவும் தலைவன் ஆகிய இறைவன் திருவடி சேர்த்து முழு ஆனந்தமாக இருக்கும்படி செய்து அருள்.

Loading

சமூக ஊடகங்கள்

ஓங்காரம் எனும் ஒர் புள்ளி – 1

*அன்னையை உபாசிக்கும் நிறை மாந்தர் ஒருவர் தன் பெயரை சத்திசிவம் என்று உரைத்தார். அவர் உரைத்தவாறே இந்த எழுத்துகள். மானுடப் பிறவி சார்ந்து எழுதுவதால்  சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.*

ப்ராமணன்

ப்ரமம் உணர்ந்தவன் பிராமணன். பொது நலத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்டவன் என்றே தொடங்குவோம்.

ப்ரமம் என்பது என்ன?

விவரிக்க முற்படும் போது ஏழு சமுத்திரம் தாண்டி விவரிக்க வேண்டும். அவ்வாறு அதைத் தாண்டிய நிலையே ப்ரமம்.

ஏழ் சமுத்திரத்தினையும் தாண்டி, ஏழு புவனம் தாண்டி, ஏழு நிலை தாண்டி என விரியும்.

ஸ்ரீ சக்தியின் சொரூபமான சக்தி ரூபம் ஆகும்.

இது மொத்தம் 14 கலைகளைக் கொண்டது. சிவத்திற்கு ஏழு கலைகளையும், சக்திக்கு 7 கலைகளையும் கொண்டது.  இதுவே சிவசக்தி ஐக்கியம் ஆகும்.

அன்னை ஆகிய ஸ்ரீக்கு 7 கலைகள் ஆகும்.

அவை லயம், வாவண்யம், அர்த்தம், சாஸ்திரம், அலங்காரம், வசியம், மோகனம்

  • லயம் – ஒடுங்கும் நிலை

உ.ம்

  1. குதிரை லாயத்தில் ஒடுங்குதல்
  2. ஆடுகள் பட்டிகளில் ஒடுங்குதல்
  3. பறவைகள் கூட்டில் ஒடுங்குதல்
  4. ஆதி மனிதன் காட்டில் ஒடிங்கினான்.
  • லாவண்யம் – சிருங்காரம் ஆகிய மயக்கும் நிலை

உ.ம்

  1. பூ அழகு மயக்கும்
  2. வண்டு பூ அழகில் வாசனையில் மயங்கும்
  3. எதிர்பால் மயக்கும்
  4. இசை மயக்கும்
  5. மகுடி நாகத்தை மயக்கும்
  • அர்த்தம் – அறிவு – ஆசானான் கற்பிக்கப்படுவது. முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த நியதி. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு ஏற்கும் நிலை என்றும் கூறலாம்.

உம்

  1. தீ சுடும்
  • சாஸ்திரம் – முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த நியதிகள்.இந்த நிலையில் அறிவு மலராமல் மொக்காக இருக்கும்.
  • அலங்காரம் – நாத மற்றும் ரூப வடிவமாகும் (கண்ணால் காணப்படும் காட்சி, காதால் கேட்கப்படும் ஒலி). நிறம் , ரூபம் ஒளி வடிவானவை
  • வசியம் – வாசி, வாசி என்பது மாறி சிவா. இது ராம நாமத்திற்கும் பொருந்தும்
  • மோகனம் – அன்னை மோகன நிலை மாற்ற இயலா எண்ணம் கொள்ளாவரையில் மோகனம் திறக்காது
  • இது விஷ்ணு மாயா, சிவ மாயா, ப்ரம மாயா என மூன்றாகும். இது ரஜோ, தமோ மற்றும் சத்துவ குணத்தின் கூறுகளாகும்

மனிதன் அறிவு நிலையை அடைந்து மீண்டும் எண்ணங்களால் குழந்தை நிலை அடைய வேண்டும்.  தாயாகி குழந்தையை ரசிப்பதும், குழந்தையாகி தாயை ரசிப்பதும் ஆன்ம விடுதலை அளிக்கும்.

7 சிவ கலைகள்  பற்றிய பதிவினை அடுத்துக் காண்போம்.

தொடரும்.,

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 25 (2019)

பாடல்

நாளோ வினையோ வீணாளோ
      நானா தொழிலுக் கானதுவே
   நலஞ்சேர் நிட்டைக் குதவிவரும்
      நாழியொன்றாயினும் இலையோ

சூளைக் குயவன் விதிவசத்தால்
      துக்க சுகமும் தொடர்ந்துவரத்
   துன்மார்க்கத்தால் வந்ததென்றுஞ்
      சொல்வார் பாரில் சூழ்மனிதர்

வேளைக் கிசைந்த மொழிபேசி
      வினையிற் புகுந்த சுகம்போதும்
   வினையை ஒழித்தே அமலசுக
      வெளியைப் பொருத்தி வினைப்பிறவி

மாளும் படிநீ அருள்புரிவாய்
      வாலாம்பிகையே வான்மணியே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, திரிபுரை என்றும், வாலை என்றும், பத்து வயது ஆனவள் என்றும், பதினாறு வயது ஆனவள் என்றும், கன்னியென்றும், பச்சைநிறத்தவள் என்றும் ,சக்கரத்தாள் என்றும், வாமி என்றும், தேவி என்றும், மாயை என்றும், புவனை என்றும், அன்னை என்றும், ஆவுடையாள் என்றும், தாரை என்றும், அமுதக் கலசம் என்றும், தாய் என்றும், உண்ணாமுலை என்றும், கோவுடைள் என்றும், அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும், அறுபத்து நாலு கலைகளையும் அறிந்த சித்தர்களால் வணங்கப்படுபவளும், வாலை எனப்படும்  வாலாம்பிகையே! வானின் கண் போன்ற சூரியன் போல் சுடர்விடுபவளே! உன்னை வணங்குதல் இல்லாமல், இந்த நாட்கள் வினைப் பற்றி நின்று பல் வேறு தொழிகள் செய்து, நன்மையைத் தருவதாகிய  தியானம், நோன்புநோற்றல் போன்றவற்றிற்கு உதவி செய்யாமல் கழித்த  நாட்களில் கழித்து, சூளைக்குயவனாகிய பிரமன் படைத்த விதி வசத்தால் ஆன உடலில் துக்கமும், சுகமும் மாறி மாறி தொடர்ந்து வர, ‘அது துன்மார்க்க வழில் வந்தது’ என உலக மக்கள் இயம்பும் படி வாழ்ந்தும், சமயத்திற்கு ஏற்றவாறு மொழி பேசி, அதனால் விளைந்த வினையில் சேர்த்த சுகம் போதும்; இவ்வாறான இந்த வினைகளை ஒழித்து நின்மலமாக்கி  பரவெளியில் பொருந்தி வினைப்பிறவி மாளும்படி நீ அருள் செய்ய வேண்டும்.

விளக்க உரை

  • வினைப் பிறவி மாளும்படி வேண்டியது
  • சூளைக்குயவன் – பிரமன்
  • நிட்டை – தியானம், நோன்புநோற்றல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 18 (2019)

பாடல்

சோதர வழியால் வருவினையும்
      தொக்கு வழியால் வருவினையும்
   தொடருஞ்சட்சு வழியாலும்
      சொல்நா வுடனே ஆக்ராணம்

பார்த்த வழியிற் கரணமதைப்
      பற்றி உயிரைக் கலங்கடித்துப்
   பண்ணும் வினையும் வெகுகோடி
      பாழ்போனதுவும் வெகுகோடி

ஆற்றில் கரைத்த புளிஎனவே
      ஆயிற்றொருவர்க் குதவியின்றி
   அடியேன் முன்னாள் ஒருவருக்கும்
      ஆகாதவனோ அதை இனித்தான்

மாற்றவகையும் அறியாயோ
      வகுத்த எனையும் மறந்தாயே
   மயிலாபுரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறவி எடுத்ததால் அப்பிறவியுடன் இணைந்து வரும் மாயையாகிய மயக்கத்தில் சேர்ந்து, மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றுடன் கூடியதான அந்தக்கரணங்கள் பற்றியும் பிற உயிர்களை பற்றிக் கலங்கடிக்குமாறு செய்து செய்கின்ற வினைகள் எண்ணிக்கை அற்றவை. இவ்வாறான வினைகளை செய்து வீணாக்கிய வாழ்நாட்களும் எண்ணிக்கை அற்றவை. ஆற்றில் கரைத்த புளி போல் குறிக்கோள் இல்லாமல் கரைந்து போகாமல் யாருக்கும் உதவி இன்றி, எல்லோரிடத்திலும் பேதப்பட்டு  இருந்த நிலையை மாற்றித் தரும் வகையை நீ அறிய மாட்டாதவளா? அவ்வாறு நீ வகுத்த அந்த வகையில் இருந்து வரும் என்னையும் மறந்து விட்டாயோ?

விளக்க உரை

  • வினை பற்றி குறிக்கோள் இல்லாத வாழ்வினை மாற்ற வேண்டி அன்னையிடம் விண்ணப்பித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 11 (2019)

பாடல்

வெகுநாட் பழைய அடிமையென
      மிகவுங் கனிந்தே அருள்அளித்து
   வெளியைக் காட்டிக் களிப்புடனே
      விம்மி விழிநீர் சொரிந்தருளத்

தகுமெய்ஞ் ஞானச் சாரமெலாந்
      தந்தோம் தந்தோம் என்றுரைத்த
   தாய்தான் மறந்தால் உலகில் இனித்
      தான்ஆர் பகைஆர்என்செய்கேன்

புகழ்நாரணியே உன்னைவிடப்
      பொருளும் அருளும் வேறுண்டோ
   பொல்லா தவனே யானாலும்
      பிள்ளை இவனென் றருள்புரிவாய்

வகுத்த சேயைப் பால்கொடுத்து
      வளர்க்கா திருக்கும் தாய்உண்டோ
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! புகழ்ச்சியை உடைய  நாரணியே! உன்னை விட அடையத் தக்க பொருளும், உன்னிடத்தில் இருந்து பெறப்படும் அருளும் தாண்டி வேறு ஏதாகினும் உண்டோ? தான் வகுத்த பாதை பற்றி நின்று, பெற்ற குழந்தையைக்கு பால் கொடுத்து வளர்க்காது இருக்கும் அன்னை வேறு உண்டோ ?  வெகு நாட்களாக உன்னிடத்தில் இருக்கும் உனது பழைய அடிமை என என் மீது பரிவுகாட்டி, அருள் அமுதத்தினை அளித்து, ஞான வெளியாகிய சிதாகாசப் பெருவெளியை காட்டி,  மிகவும் மகிழ்வுடன்  ஆனந்தம் கொண்டதால் கண்களில் நீர் சொரிய அளிக்கத் தக்கதான மெய்ஞ்ஞானச் சாரம் எல்லாம் தந்தோம் என்று உரைத்த  தாயாகிய நீ, இதை மறந்து என்னை மறந்தால் எவர் பகைவர்களாக முடிய்ம்; நான் என்ன செய்ய இயலும்? நான் வினைபற்றி நின்று பொல்லாதவன் ஆக இருப்பினும் உன்பிள்ளை என்று எனக்கு அருள்புரிய வேண்டும்.

விளக்க உரை

  • தேசி – பெரிய குதிரை, இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்.
  • பரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு விரும்பர னே‘ எனும் திருவாசக வரிகளோடும், பழைய அடியார்களது உண்மைத் தொண்டோடு தொண்டாற்றும் திறம் உடையவர்கள் என்பது கண்டு ஒப்புநோக்கி அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 27 (2019)

பாடல்

சிந்தா மணியின் பூசைசெய்தால்
      செகத்தில் எவர்க்கும் குறைவருமோ
   செல்வ முடனே கல்விஅருள்
      திரளாய் விளையும் என்பவெல்லாம்

முன்றா னான போதிலையே
      முதல்வி உன்றன் அருளுலகில்
   மூழ்கிக் கனமாய் வினையிருளும்
      முறியப் படர்ந்து மறைந்ததுபோல்

இந்தா எனவே நீகொடுத்த
      இயல்பே யல்லால் மானிடரோ(டு)
   ஏற்கை சேர்க்கை அவர்உரைத்த(து)
      ஏதா கினுமுண் கோஉரையாய்

மைந்தா எனவே அமுதளித்த
      வகையும் நீயும் மறந்தாயோ
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! எனது மைந்தனே என்று என்னை அழைத்து அமுதளித்த வகையினை நீ மறந்து விட்டாயா! விரும்பியது அனைத்தும் கொடுக்கவல்ல தெய்வமணி ஆகிய சிந்தாமணி மந்திரம் கொண்டு பூசை செய்தால் இந்த செகத்தில் எவர்க்கும் குறைவருமோ? செல்வம், கல்வி, அருள் ஆகியவை விளைந்தன; முதல்வி ஆகிய உன் அருள் உலகில் காலத்தால் அறிவிக்கப் பெறும் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற காலங்கள் இல்லை; அவ்வாறான காலங்களில் கனமாக சூழ்ந்து இருக்கும் வினை இருளும் விலகியது; இவ்வாறு கிடைக்கப் பெற்றவை அனைத்தும் உன் இயல்பான கொடுக்கும் தன்மையினால் கிடைக்கப் பெற்றவை; அவ்வாறான இயல்பாக  கொடுக்கும் தன்மை இல்லாத மானிடர்களை ஏற்பதும், அவர்களோடு சேருவதும், சேர்ந்து சொல்லுதலும் ஏதாவது உண்டா? இதை உரைப்பாய்.

விளக்க உரை

  • இந்தா எனவே நீகொடுத்த இயல்பே – எதையும் எதிர்பாராமல் இயல்பாக கொடுக்கும் குணம் அன்னைக்கு உரியது என்பதை வலியுறுத்தியே இவ்வரிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 20 (2019)

பாடல்

விதியின் முறைமை எத்தனைநாள்
      வினையிற் படுவ தெத்தனைநாள்
   விசுவாச் சிக்கக் கொடுமைபல
      விளையும் பகையும் எத்தனைநாள்

அதிக வினையும் எத்தனைநாள்
      அற்ப வாழ்வும் எத்தனைநாள்
   அதிலே குரோதித் திருப்பதெலாம்
      அழியும் வகையும் எந்நாளோ

பொதிகை மலையன் அரிஅயனும்
      புகழ்சேர் காமன் திசைப்பாலன்
   போற்றும் உன்றன் இருசரணம்
      பொருந்தி மகிழ்வ நெந்நாளோ

மதியைத் தரித்த முகில்வேணி
     மயிலே குயிலே வான்மணியே
   மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! மேகம் போன்ற கூந்தலில் சந்திரனைத் தரித்தவளே! அழகிய மயில் போன்றவளே! இனிய குயில் போன்றவளே! அதிக வினைகொண்டு வாழ்தல் இன்னும் எத்தனை நாள்? காலத்தால் மிகக் குறிகியதாக கருதப்படும் அற்ப வாழ்வு இன்னும் எத்தனை நாள்? நீண்ட காலமாக பகை கொண்டு அதன் காரணமாக அழியும் வகையில் வாழ்ந்திருத்தல் இன்னும் எத்தனை நாள்?  விதிக்கப்பட்ட விதியின்படி இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? பிறப்பிற்கு காரணமான இரு வினையில் பட்டு அதனை அனுபவித்து, வினைகளை அழித்து விடுபட இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? மாறாத பற்று, அன்பு, நம்பிக்கை மற்றும் உண்மை கொண்டு பின் அது விலக அதனால் விளையும் பகைமை கொண்டு கொடுமை செய்து கொண்டு இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ?  பொதிகை மலையில் உறைபவனாகிய அகத்தியர், திருமால், அயன், காமன், அஷ்டதிக் பாலகர்கள் ஆகிய திசைப் பாலர்கள் போன்றவர்கள் போற்றும் உனது இரு சரணக் கமலங்களில்  ஒன்றாக இருந்து மகிழ்ந்து இருப்பது எந்த நாளோ?

விளக்க உரை

  • படுதல் – உண்டாதல்,தோன்றுதல், உதித்தல், நிகழ்தல், மனத்தில் தோற்றுதல், பூத்தல், ஒன்றன்மீது ஒன்று உறுதல், மொய்த்தல், அகப்படுதல், புகுதல், பெய்தல், பெரிதாதல், மேன்மையடைதல், அழிதல், சாதல், மறைதல்
  • புகழ்சேர் காமன்  – எவரும் எதிர்க்கத் துணியாத போது, தான் அழிந்தாலும் உலக நன்மையின் பொருட்டு சர்வேஷ்வரனை எதிர்ததால் ‘புகழ்சேர்’ காமன்

 

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 13 (2018)

 

பாடல்

 

பாகு சேருங் மொழியணங்கே
      பணத்தை அணியுஞ் சதுர்த்தோளி
   பாதி மதியுங் கதிரணியும்
      பரம் ஞான வெளிச்சுடரே

ஆகும் பருவம் அறிந்தென்றன்
      ஆவி நாளும் உபயபதம்
   அடுத்துக் கவிதைச் சரந்தொடுத்தே
      அமைந்து பொழிய வரம்தருவாய்

ஏகு மயக்கத் துட்டருடன்
      இனிதா எனைச்சேத் தகற்றாதே
   இமவான் அளித்த திருமகளே
      எங்கும் நிறைந்த பெருவெளியே

வாகு பொருந்துங் கிருஷ்ணனது
      வரிசைத் துணைவி சுகவதனி
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! இனிமை தரும் வெல்லப்பாகு போன்ற மொழியை உடையவளே! நான்கு தோள்களிலும் செல்வத்தால் பெறப்பட்டதும், அலங்கரிக்கப்பட்டதும் ஆன ஆபரணங்களை அணிந்தவளே! அரை வட்டமான சந்திரனையும், அதன் கதிர்களாகிய கிரணங்களையும் அணியும் சிறந்ததும், தெய்வீகமானதும் ஆன ஞானமாகிய சுடரே! இமவான் அளித்த இலட்சுமியே! எங்கும் நிறை பூரணத்துடன் இருக்கும் பெருவெளி ஆனவளே! அழகில் கிருஷ்ணருக்கு ஒப்பானவளே! இன்பம் தரும் திருமுகம் உடையவளே! ‘போ, செல், நடஎன மயக்கம் கொண்டு எனக்கு கட்டளை இடும் தீயவர்களுடன் என்னைச் சேர்த்து உன்னிடம் இருந்து என்னை அகற்றாதே; எனக்கான பக்குவ நிலையை அறிந்து, உன்னால் வழங்கப்பட்ட இரு தாளினைப்பற்றி, எனது உயிரானது இடைவிடாமலும், சரமாக தொடுப்பது போலும் கவிதையாக பொழியும் வரத்தினை அருள்வாயாக.

விளக்க உரை

  • அணங்கு – அழகு; வடிவு; தெய்வம்; தெய்வமகள்; தெய்வத்திற்கு ஒப்பான மாதர்; வருத்திக் கொல்லும் தெய்வமகள்; தீண்டி வருத்தும் தெய்வப்பெண்; வருத்தம்; நோய்; மையல்நோய்; அச்சம்; வெறியாட்டு; பத்திரகாளி; தேவர்க்காடும் கூத்து; விருப்பம்; மயக்க நோய்; கொலை; கொல்லிப்பாவை; பெண்
  • பாகு – பகுதி; பிச்சை; கரை; சத்தி
  • பரம – பொருள்; மேலான; சிறந்த; மிகுந்த; மிகவும்; மிக; நிரம்ப; தெய்வீகமான

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 7 (2018)

பாடல்

போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அடியார்கள் நாள்தோறும் தங்கள் மனத்தினால், கடைகுழன்று சுருண்ட கூந்தலை உடையவளும், இன்பம் தரத் தக்கவளுமாக திரிபுரையை தியானிக்க, அங்ஙனம் தியானிக்கும் அடியவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, மெய் ஞானமாகிய கொடி படருவதற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி,  திரோதான சத்தியாக  நின்று, பின் அருள் சத்தியாகவே விளங்குவாள்.

விளக்க உரை

  • திரோதான சத்தி, அருள் சத்தி என வேறு வேறு ஆகாமல்  அருள் சத்தி இயல்பும், திரோதான சத்தி  பயனும் உணர்த்தப் பெறும்

Loading

சமூக ஊடகங்கள்