நாளார் வந்தணுகி நலி யாமுனம் நின்றனக்கே ஆளா வந்தடைந்தேன் அடி யேனையும் ஏன்றுகொள்நீ மாளா நாளருளும் மழ பாடியுள் மாணிக்கமே ஆளாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – இறுதி நாளுக்கு முன்னமே சரணடைந்தால் தன்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என விளம்பும் பாடல்
பதவுரை
அடியவர்களுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற, திருமழபாடி எனும் திருத்தலத்தில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே! உனக்கு என்று நான் ஆளாயினபின், உன்னை அல்லாது வேறு யாரை நினைப்பேன்? எனக்கு இறுதிநாள் எனும் மரணம் வந்து எனக்கு நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதல் பொருட்டு வந்து உன்னை அடைந்து விட்டேன்; ஆதலினால் அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டு அருள்.
விளக்கஉரை
திருமழபாடி திருத்தலத்தில் இயற்றியது
நாள் – இறுதிநாள்; இழிவு தோன்ற விளம்புவதற்காக `நாளார்`
கருத்து – நீ அருள் செய்யா விடினும் யான் உன்னை நினைத்து பாடுதலை விடேன் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆணில் சிறந்தோனாகவும், பூரணனாகவும் இருக்கும் இறைவனே! உனக்கு அணிகலனாகவும், அரைநாணும் சிறுமையை உடைய பாம்பு இருப்பது கண்டு அஞ்சேன்; நீ புறங்காடு ஆகிய சுடுகாட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்; நீ என்னுடைய சிறுமைக் கண்டும் உணர்ந்தும் என்னை விரும்பாவிடிலும் யான் உன்னுடைய பெருமையை உணர்ந்து உன்னை மறவாதவனாக இருப்பேன்; வினைகளின் காரணமாக பிறவி கொண்டாலும் உனை மறவேன்; நீ என்னைக் காணாவிட்டாலும், உன்னை (மனக்கண்ணாலாவது) கண்ணாரக் காண்பேன்; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் செய்யாவிடினும், நான் என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன். (இவ்வாறானது எனது அன்பு என்றவாறு)
விளக்கஉரை
நம்பி – ஆணில் சிறந்தோன், குலமகன், பூரணன், கடவுள்; இறைவன், ஒரு செல்லப் பெயர், நம்பியாண்டார்நம்பி, நாற்கவிராசநம்பி, நம்பியான்
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய் மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து – பொய்யாக புகழ்பவருக்கும் அருளும் நீ, உண்மையாக இருக்கும் அடியவர்களை நினைவு கொள்ள வேண்டும் எனும் பொருள் பற்றியப் பாடல்.
பதவுரை
மை பொருந்திய பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே, கங்கையையும், பிறை சந்திரனையும் தனது திருமுடி மேல் வைத்துள்ள ஐயனே, செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே, திருக்கச்சூர் ஆலக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே! இழி நிலை மனிதர்களுக்கே உரித்தானவாறு மனதில் அன்பு இன்றி, பலன் கருதி பொய்யாக உனை ஒருவர் புகழ்ந்தால் அதனையும் ஒரு பொருளாய் கொண்டு அவர்களுக்கு உண்மையாக அருள் செய்யும் எங்கள் பெருமானே உன்னை உண்மையாகவே நினைக்கும் அடியவர்களை நினை.
விளக்கஉரை
பொய்யே உன்னைப் புகழ்வார் – அந்த நிலையில் இருந்தாலும் கூட என்பதே இதன் சிறப்பு.
சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதம் அறுபடுகிறது என்பதை கீழ்கண்ட இரு உதாரணங்களால் அறியலாம்.
பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே
செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே – வெண்மை நிறம் சிவனாரைக் குறிப்பதாகும். செம்மை நிறம் சக்தியை குறிப்பதாகும்
கருத்து – உன் அடியவராக இருக்கும் என் துன்பம் நீக்குவாய் என முறையிட்டப் பாடல்.
பதவுரை
அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்திருக்கூடிய திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே! காரியம், காரணம், சமய நடத்தை, யோகம், துன்ப நீக்கம் என்ற பஞ்ச அர்த்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதும், சைவசமயப் பிரிவுகளிள் மிகப்பழமையானதும் ஆன பாசுபதம் எனும் பசுபதி வடிவாகி நின்றவனே! மேலான ஒளியாய் உள்ளவனே! அழகிய வடிவம், அதனால் பெறப்படுவதாகிய பொருள்கள், இம்மையில் பெறப்படுவதான செல்வம் ஆகியவை உனது புகழை உடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து, பிறர் ஒருவரையும் துணையாக கொள்ளாமல், அவர்களோடு பொருந்தி தகாத செய்கைகள் செய்யாமல், அவர்கள் என்னைப் பற்ற வருவாராயின் வலிமை கொண்டு அவர்களிடத்தில் இருந்து விலகி, உன்னிடத்தில் பற்று உடையவனாக திரிபவன் ஆகி, மனத்தினால் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை, நீ நீக்கி அருளாய்.
விளக்கஉரை
திரு – மதிப்பிற்குரிய, செல்வம், வளம், மேன்மை, திருமகள, சிறப்பு, அழகு, பொலிவு, நல்வினை, தெய்வத்தன்மை, பாக்கியம், மாங்கலியம், பழங்காலத் தலையணிவகை, சோதிடங் கூறுவோன், மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம்
சீருடைக் கழல்கள் – வேண்டுவார் வேண்டுவதை ஈந்து புகழ் பெற்ற கழல்கள்
‘பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்’ –
என் கண்ணைக் கெடுத்தது, அறவோனாகிய உனக்கு ஏற்புடையது எனினும், யான் என் பிழையை உணர்ந்து உன்பால்என்னுடைய குறையை உரைத்ததால், குறைகளைப் பொறுத்து, எனக்கு அக்கண்ணை அருளித்தருளல் வேண்டும்
உன்னையன்றி வேறு பற்றில்லாத அடியவர்படும் துன்பத்தை நீக்காது அதைக் கண்டு கொண்டிருத்தல் அருளுடையவனாகிய உனக்குத் தகுவதோ.
இத்திருப்பதிகம் முழுவதினும் இது காணப்படும்.
அதாவது நீரின் உச்ச பட்ச கொதிநிலை100டிகிரி. ஆனால்அதன்உறை நிலை_ ___ மைனஸ். நீர்மகாரம்; உறைநிலைங்காரம் மகாரம். பூவானால் ரீங்காரம் வண்டாகும் பெண்கொதிநிலை என்றால் ஆண்குளிர்நிலைஆகும். அதனல்தாண் பெண் ருதுவாகிறாள் ஆண்அதை நிறுத்தும் சுக்லமாகிரான். சூட்சுமம் யாதெனில் ஆணுக்குள் அசையும் பெண்தனை ஆண் அறிந்தால் அதுவே அசையா இசையா நிலையான அமர்நாத் பனிலிங்கம் அதுவே பிறப்பறுக்கும் மோட்ஷநிலை
இதுதான் பிரமன் அமர்ந்த இடம் பிரமரந்தீயம்; உலக உயிர் ஸிருஷ்டி மலை மீது அமர்ந்து உபதேசி அருளும் இதை முல்லை வாயில் என்றார். இதற்குள் புகுந்து இதுவாவதே மோட்ஷம் எனும் ஓங்காரம்.
மிகச் சிறந்ததான பொன் போன்ற திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றை அணிபவனும், கரிய நிறம் கொண்ட கண்டத்தை உடையவனும், திருமாலும் பிரமனும் காணாத இன்பத்தை தருபவனாகிய சிவன் ஆனவனும், நெருப்பை உள்ளங்கைகளில் ஏந்தியவனும், சாமவேதத்தை விரும்புபவனும், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவனும், குடம் போன்று பெரிய தலையுடன் இருப்பதும், பெரியதும் ஆன யானைனையின் தோலை உடையவனும், ரிஷபத்தின் மேல் ஏறிவரும் சக்ரவர்த்தி போன்றவனும், எங்களுக்கு அருந்துணை ஆகி எங்களால் விரும்பப்படுபவனும், திருநள்ளாறு திருத்தலத்தில் எழுந்து அருளி உள்ளவனும், அமுதம் போன்றவனை மறந்து, நாய் போன்ற அடியேன் ஆகிய யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்க மாட்டேன்.
வலிமை மிகுந்ததும், மூன்று இலைகளை கொண்டதும் ஆன சூலத்தை உடையவனும், இறைவன் ஆனவனும், வேதத்தை ஓதி அதன் வடிவமாக ஆனவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் சூழ்ந்து நிற்கின்ற கொன்றை மாலையோடு, தூயதும், வெள்ளி போன்றதும் ஆன சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக கொண்டு வலம் வருபவனும், ஒளி வடிவானவனும் ஆகிய இறைவனை, அன்னப்பறவைகள் விளையாடுவதும், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்றதும் ஆன ஒப்பற்றதான தாமரை மலர்கள் மீது ஏறி விளையாடுவதும், அகன்றதுமான நீர்த்துறையின் அருகே வளர்ந்த கரும்புகள் கொண்டதும், செழுமையான நெற்பயிர்கள் விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரில் அடியேன் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன்!
விளக்கஉரை
இரும்பு – அதன் தன்மையாகிய திடத்தைக் குறித்தது.
சிறப்புப் பெயராய் நின்றதால்,சோதி; ‘ஒளி’` எனும் பொதுமை நீக்கப் பெற்றது.
இறந்தவரது எலும்புகளையும், எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் எதுவெனில், சிறந்தவர்கள் என்று சொல்லப்படுவதும் மேம்பட்டதும், உயர்வானதும் ஆன மனைவி மற்றும் மக்கள்,சுற்றத்தார்கள், செல்வம் ஆகியவற்றை துறந்தவர்களாகிய ஞானியர்கள் சேரும் திருச்சோற்றுத்துறை என்னும் தலம் ஆகும்.
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் போகும் நாள்உயர் பாடைமேல் காவு நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப் பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மேலான ஒளி வடிவமாய் உள்ளவனே! தேன் போன்ற சுவை உடையதும், மிகுதியாக வெள்ளம் போல் வருகின்றதும் ஆன நீரையுடைய காவிரியாற்றில் பரந்த வெள்ளம் போல் வந்து பாய்கின்ற திருப் பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற நா வன்மை யுடையவனே! அடியேன் உன்னை நினையாது ஒழிந்த நாள்களை, ‘என் உணர்வு அழிந்த நாள்கள்’ எனவும், ‘உயிர்போன நாள்’ எனவும், ‘உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்’ எனவும் கருதுதல் அன்றி வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால், உன்னை நான் மறந்தாலும் , எனது நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
விளக்கஉரை
ஒவுதல் – ஒழிதல்
புனல் – ஆறு, நீர், வயல், கொல்லை
நாவலன் – மறைகளையும், மறைகளின் பொருளையும் முழுவது அறிந்தவனும், அது பற்றி சொல்பவனாதல் பற்றியது.
வளமான சோலைகளையுடைய திருப்புங்கூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, மிருகண்ட மகரிஷிக்கும், அவருடைய மனைவி ஆகிய மருதவதிக்கும் மகனாக பிறந்த அந்தணர் குலத்தை சேர்ந்த மார்கண்டேய முனிவர் தன் முடிவு அறிந்து உன்னை அடைக் கலமாக அடைய, அவரைக் காத்தல் பொருட்டு, அவர் உயிரைக் கொல்ல வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்தவனே, உனக்கு அடியேனாகிய யான், உனது அந்த ஆற்றலை அறிந்து கொண்டு என்னையும் எம தூதர்கள் வந்து துன்புறுத்துவார்கள் எனில், என்தந்தையாகிய நீ, ‘இவன் என் மற்றொரு அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்’ என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்.
விளக்கஉரை
மார்க்கண்டேய முனிவருக்கு அருள் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து பாடியது.
மெய்ப் பொருளாய் இருப்பவனும்,திருமேனி எங்கும் வெண்ணீற்றைப் பூசுகின்றவனும், வேதங்களுக்கு முதல்வனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடையில் முறிவித்தவனும்,படம் எடுத்து ஆடும் பாம்பினை இடுப்பில் அணிந்தவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகி பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கள்ளப் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே!
விளக்கஉரை
‘காலன்’ – ‘காலத்திற்கு முதல்வன்’ . அதன் பொருட்டு காலன் காலம் அறுத்தான்.
‘காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன் ` என்பதும், ` அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வன் அயின பொழுதும், சிவபிரானது ஆணையாள் தான் முதலவன் ஆனான் அன்றித் தானே ஆயினான் அல்லன். அந்த முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் நடந்ததால் , இடை முரிவிக்கப் பட்டான்` என்பதும் விளங்கும். இதனான் எல்லாவற்றையும் தன் விருப்பத்தின் வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே என்பது உணரப் பெறும்.
இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.
விளக்கஉரை
தண்மை – மனம் குளிர்தலைக் குறிக்கும்
முழவு
முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டது. குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பி செய்யும் கருவியாகும்
இது தோல் கருவி. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு என ஏழு வகைப்படும்.
வேறு பெயர் – மிழாவு (கேரளா)
மண் மத்தளத்திற்கு பூசப்படுவது ( மார்ச்சனை )
‘ஈர்ந்தண் முழவு’, ‘மண்ணார் முழவு’, ‘முழவு மண் புலர’ போன்ற குறிப்புகள் மூலம் பன் நெடுங்காலம் முன் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும் உணரமுடியும். (ஆதாரம் – மத்தளவியல் நூல்)
ஆரணியம் என்று அழைக்கப்படும் காட்டில் வாழும் அழகரே, யான் எல்லாப் பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் நிற்கும் பொழுது நீர், ‘தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா’ ஆகிய வாத்திய கருவிகளுடன், பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடினாலும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டு ‘சிறிது பிச்சை இடுமின்’ என்று சொல்லி வந்து நிற்கின்றீர்.
ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தமரர் வலஞ் செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
யான், புறக்கருவிகளாலும், அகக்கருவிகளாலும் பெற்ற இந்த உடலையும், அதன் வழி பற்றி நிற்குமுயிரையும் விரைவாக செலுத்தி தூய்மையான வெண்ணிறம் கொண்டவனை நினைத்திருத்தலை மட்டும் செய்திருந்தேன்; அவ்வாறு செய்த இந்த சிறு செயலுக்காக திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் அம்முதல்வன், வான் உலகத்தையே பெரிதாக மதிக்கும் தேவர்கள் என்னை நாடி வரும்படியும், வந்து வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறும் செய்து, ஓர் யானை ஊர்தியை எனக்கு அளித்தருளினான்; எம் மேல் வைத்த பேரருள் என்பது அவன் முன்னொருமுறை யானையை உரித்து அதற்கு அருள் செய்யக் கருதியதற்கு ஒப்பானது.
விளக்கஉரை
வெருட்டுதல் – அச்சுறுத்துதல், திகைக்கச்செய்தல், விலங்கு முதலியவற்றை ஓட்டுதல், விரைவாகச் செல்லத் தூண்டுதல்
திருத்தமான மாடங்கள் உடையதும், உயர்ந்து தோன்றுகின்றதும், பெரும் புகழ் கொண்டதும் ஆன திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனானவர், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆநிரைகளை மீட்டுவருவதை குறிப்பிடுவதாகிய கரந்தைப் பூவினாலும், முக்கூறுகளைக் கொண்டதும், திரிசூலத்தின் குறியீடாகவும் உள்ளது கூவிள இலை என்பதான வில்வ இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிகுந்த பூதகணங்கள் புடைசூழ பரமனாகி நம் இறைவனானவரும், அமுதம் போல்பவரும், தம் அடியாரை வலிய வினைகள் வந்து துன்புறுத்தாமல் காப்பவரும் ஆவர்.
விளக்கஉரை
மாயைக்கு உட்பட்ட பசுவாகிய உயிர்களை மீட்கும் பதி எனும் சைவ சித்தாந்த கருத்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
பண்டை வினைகள் பறிய நின்ற அண்ட முதல்வன் அமலன் இடமாம் இண்டை கொண்டு அன்பு இடையறாத தொண்டர் பரவும் சோற்றுத்துறையே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
உயிர்கள் செய்த பழைய, வலிமையான வினைகள் நீங்குமாறு செய்வதும், உலகிற்கு முதல்வனும், தூயவனும் ஆகிய இறைவனது இடமானதும், ஈசனிடத்தில் அன்பு கொண்டு இடையில் விலகுதல் இல்லாத அடியார்கள், தாமரை மாலை முதலியவைகளைக் கொண்டு வழிபடுகின்ற திருத்தலம் ‘திருச்சோற்றுத்துறை’ என்னும் திருத்தலம் ஆகும்.
விளக்கஉரை
இண்டை – தாமரை, மாலை வகை, இண்டு கொடி, முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி; உலகம் சார்ந்த பொருட்கள்
அண்ட முதல்வன் – ‘அண்டம்’ என்ற பொதுமையால் எல்லா அண்டங்களும் கொள்ளப்படும், அதன் பொருட்டே அகிலாண்டகோடி.
மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள் செத்த போதில் ஆரு மில்லை சிந்தையுள் வைம்மின்கள் வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே அத்தர் கோயில் எதிர்கொள்பாடி யென்ப தடைவோமே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும் அவர்களுடன் யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’ எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா! அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்; முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ! உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
வேதங்களை அருளிச் செய்தவனே, விலைமதிப்புடைய பொருள்களை கரையிடத்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ச்சியும் அருளும் நிறைந்தும் கடல் அலைகள் வந்தும் உலவுகின்ற ‘ஒற்றியூர்‘ என்னும் ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, என்றும் வலிமையாய் உள்ளவனே, மணி போன்றவனே, அழகுடையவனே, நீ எனக்கு, ‘மகம்‘ என்னும் விண்மீன் கீழ் வந்த, ‘சனி‘ என்னும் கோள் போன்றவன் ஆயினேன் ஆதலால் எனது குருட்டுத் தன்மை பற்றி காரியம் சொல்ல அகத்தில் உள்ள பெண்டுகளை அழைத்தால் ‘கண்ணிலியே நீ என்ன அறிவாய்; போ‘ என்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; மூன்று கண்களையுடையவனே, முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்? இது முறையோ!
விளக்கஉரை
சுந்தரர், உலகியர் முன்வைத்து தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறியது
சனிக்கிர சஞ்சாரம் மக நட்சத்திரத்தில் வரும்போது, நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்பது ஜோதிட சாத்திரம்.
நீ மூன்று கண்களோடு இருக்கிறாய், நான் கண்கள் இழந்து துன்புறுகிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார்; துன்பம் அதிகம் உடையவர் என்பதாலும், இறைவனை இவ்வாறு வைது கூறினும் அவன் தன் அடியார்கள் இடத்தில் அனைத்தையும் பொறுக்கும் அருளாலன் என்பதையும் விளக்க இப்பாடல்.
சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று, தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல் ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம் எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து, உன்னை வந்து அடைந்தேன்! என்னை ஏற்று கொண்டு அருள்.
விளக்கஉரை
சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
சிலந்தி, கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து, பயனில்லாத சொற்களைப் பேசி பின்னுதல் உடைய சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே மக்கள் பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு நிற்க நீ தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று இவனே தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.
காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே, ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.
விளக்கஉரை
செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உண்ர்வு கூட இல்லை.
குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.