பாடல்
தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து, பயனில்லாத சொற்களைப் பேசி பின்னுதல் உடைய சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே மக்கள் பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு நிற்க நீ தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று இவனே தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.