அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – உய்வு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  உய்வு

பொருள்

  • உய்தி
  • உயிர்தப்புகை
  • பிழைப்பு
  • ஈடேற்றம்
  • இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்
  • உய்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பாருரு வாய பிறப்பற வேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங்கம லம்மலர்போல்
ஆருரு வாயஎன் ஆரமு தேஉன்
அடியவர் தொகைநடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே.

தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து உரை

சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய உருவத்தையுடைய எனது அரிய அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும். அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும். அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டு  அருள்வாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அடுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அடுதல்

பொருள்

  • கொல்லுதல்
  • தீயிற் பாகமாக்குதல்
  • சமைத்தல்
  • வருத்துதல்
  • போராடுதல்
  • வெல்லுதல்
  • காய்ச்சுதல்
  • குற்றுதல்
  • உருக்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூஎயிலும்
கெடுதலையே புரிந்தான்; கிளரும் சிலை நாணியில் கோல்
நடுதலையே புரிந்தான்; நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்-
படுதலையே புரிந்தான்-பழமண்ணிப் படிக் கரையே .

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

உலகத் தொகுதியின் வினைகள் அழித்தலை விரும்பினவனும், வானில் இருந்த மூன்று மதில்கள் கெட்டு அழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும், நரி உமிழ்ந்த எச்சிலாகிய வெண்மையான அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், ‘திருப்பழமண்ணிப் படிக்கரை’ என்னும் தலமே.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – குழகர்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  குழகர்

பொருள்

  • இளையர் / இளையோன்
  • அழகன்
  • பிறர்க்கு இணங்குபவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே.

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

கங்கை ஆற்றைச் சடையில் சூடி மறைக் காட்டில் உறையும் பெருமானே! உடலின் ஒரு கூறை பெண்ணாகிய உமையம்மைக்கு ஈந்த அழகரே! விடையேறிய எம்பெருமானே! இந்த ஒப்பில்லாத கதவின் வலியினை நீக்கித் திறந்தருள்வீராக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏதன்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஏதன்

பொருள்

  • மூலகாரணன்
  • ஆதிகாரணன்
  • முதல்வன்
  • கடவுள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை, வெண்குழை தோடு விளங்கிய
காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!

தேவாரம் – 2ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

மூலக்காரணனனாகவும், ஆதிகாரணனனாகவும், முதல்வனனாகவும் இருப்பவன்; குற்றம் அற்று இமையாது இருக்கும் யோகியர்களால் வழிபடப் பெறும் வேதவடிவினன்; வெண்குழையும் தோடும் அணிந்த செவிகளை உடையவன்; மிகுந்த சோலைகள் சூழ்ந்த கோழம்பம் எனும் ஊரில் மேவிய தலைவன். அவனை உம் வினைகள் அறுந்து கெடுமாறு ஏத்துமின்.

விளக்க உரை

ஏதன் – குற்றமுடையவன் எனும் பொருளில் ‘நாம் செய்யும் குற்றங்கட்குக் காரணமானவன்’ எனும் விளக்கம் பட இடங்களில் தென்படுகிறது. ‘ நமது குற்றங்களுக்கு ஈசன் என்றும் காரணமாகான்’ எனவே இவ்விளக்கம் இதில் இடம் பெறவில்லை. ஆன்றோரும் பொருள் அறிந்தோரும் உரைத்தால் பொருள் அறியும் வாய்ப்பு எமக்குக் கிட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பரம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பரம்

பொருள்

  • உடல்
  • கவசம்
  • பாரம்
  • மேலானது
  • திருமால்நிலைஐந்தனுள்ஓன்று
  • கடவுள்
  • மேலுலகம்
  • திவ்வியம்
  • வீடுபேறு
  • பிறவிநீக்கம்
  • முன் மேலிடம்
  • அன்னியம்
  • சார்பு
  • தகுதி
  • நிறைவு
  • நரகம்
  • குதிரைக்கலணை
  • அத்திமரம்
  • பரதேசி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா
கரம்எடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம்எனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே.

சிவவாக்கியர்

கருத்து உரை

ஈசனே, நீ இருக்க எனக்கு வேறு யாரிடம் பயம்? எனக்கு நீ ஊக்கத்துடன் கொடுத்த கூடிய  வலிமை எது  எனில்  என்னுடைய  சிரம்  தாழ்த்தி   சிரசின் மேல் கரம் குவித்து பஞ்சாட்சரத்தை  எனது  கண்ணில்  நீர்  பெருக  நெஞ்சுருக  உன்னை  நினைத்து  வழிபடுவது ஒன்று தான்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மறுத்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மறுத்தல்

பொருள்

  • தடுத்தல்
  • திருப்புதல்
  • இல்லையென்னுதல்
  • நீக்குதல்
  • வெட்குதல்
  • திரும்பச் செய்தல்
  • இல்லாமற்போதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மறுத்தனன் யான்உன் அருள்அறி யாமையின்
என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை
யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம்
பொய்யினையே.

தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து உரை

திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! நான் உன் திருவருளின் பெருமையை அறிந்து கொள்ளாது அதனை வேண்டாவென்று மறுத்தேன்; என் கண்மணியே,  நீ அதற்காக அடியேனை வெறுத்து விட்டு விடுவாயோ?(விடமாட்டாய் – மறைபொருள்)  மேன்மை நிலையில் உள்ளவர், (வினையின் காரணமாக) சிறு நாய் கொண்டிருக்கும் குற்றத்தை மன்னிப்பார்கள் அல்லரோ? (அதுபோல்) நீ என்னுடைய வினை அனைத்தையும் அழித்து, என்னை ஆண்டு கொண்டு அருள வேண்டும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கேடிலி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கேடிலி

பொருள்

  • அழிவில்லாதவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோன் ஆகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவா ளரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6ம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து உரை

அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், மேல் எழும் பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விசுத்தி

தமிழ் அன்னை

ஒவியங்கள் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  விசுத்தி

பொருள்

  • ஆறு ஆதாரங்களில் ஒன்று

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
மாச்சப்பா வதற்குமேல் பன்னிரெண்டங்குலம்
பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே.

அகத்தியர்.

கருத்து உரை
இதுவரையில் அனாகத சக்ரத்தினை ஆட்படுத்தும் முறையினை சொன்னோம். இப்பொழுது விசுக்தியைப் பற்றிக் கேளு. மேல் குறிப்பிட்ட சக்கரத்திற்கு பன்னிரண்டு அங்குலம் மேலும், பதினாறு இதழ் தாமரை வடிவமும் கொண்டது இச்சக்கரம். பாலகனே, இதற்கான அட்சரம் பஞ்சாட்சரத்தில் ஒன்றான ‘வ’காரம். அதன் நடுவில் சதாசிவனும் சாகினியும் வீற்று இருப்பார்கள்.

விசுத்தி

விளக்க உரை

  • மூலக்கூறு : ஆகாயம்
  • பீஜமந்திரம் : ஹம்
  • ஐம்பது எழுத்துக்களில் விசுக்தி 16 எழுத்துக்களால் குறிக்கப்பெறும். (எழுத்துக்கள் அவரவர் குரு உபதேச முறைக்கு தக்கவாறு மாறி இருக்கின்றன. சரியான எழுத்தும் பொருளும் குரு முகமாக அறியவும்).
  • அறு கோணவடிவம். அதை சுற்றிலும் பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட வடிவமும், அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால் குறிக்கப்பட்டும் உள்ளே அடர் நீல நிறத்தையுடையதும் ஆன சக்கரமாகும்.
  • இது, பஞ்சாட்சர எழுத்துகளில் ஒன்றான “வ” என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் சக்கரம் ஆகும்.
  • யோக மரபுகளில் விசுக்தியும் அதற்கு மேல் அனைத்து சக்கரங்களும் ஞான சக்கரங்களாக உணர்த்தப்படும். அதன் பொருட்டே ஈசன் ஆலகால நஞ்சு உண்ட போது அவர்தம் நிலை மாறாது இருக்க அன்னை பராசக்தி ஈசனின் கண்டத்தில் விஷத்தை தடுத்தி நிறுத்திய வரலாறு உணர்த்தும்
  • ஆண் தெய்வம் : பஞ்சாட்சர சிவன்
  1. மேனி : நீல நிற மேனி
  2. ஆடை : புலித் தோல்
  3. கரங்கள்: நான்கு கைகள். . திரிசூலம், உடுக்கை, ஜப மாலை, அபய முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கிய வடிவம்
  • பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் சாகிணி எனும் பெயர் தாங்கி சிகப்பு நிற தாமரையில் அமர்ந்த கோலம்.
  1. மேனி : இளம் ரோஜா நிறம்
  2. ஆடை : நீல நிற புடவை
  3. கரங்கள்: நான்கு கைகள், மண்டையோடு, அங்குசம், புனித வேதம், ஜப மாலை  ஆகியவற்றினை கைகளில் தாங்கிய வடிவம்

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஓங்கல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஓங்கல்

பொருள்

  • மலை
  • செங்குத்துப் பாறை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல் /  பதப் பிரிப்பு

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.

ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்- ஆங்கம் அவற்றுள்
மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்றே அனையது
தன் ஏர் இலாத தமிழ்

தண்டியலங்காரம்

கருத்து உரை

மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னுகின்ற எதுவும் கலவாத தனித்தன்மையான கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பக்கல்

தமிழ் அன்னை

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பக்கல்

பொருள்

  • பக்கம்
  • இனம்
  • பிறை நாள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலான் மொய்த்த பாதங் கைகளால்
தொழலார் பக்கல் துயர மில்லையே.

தேவாரம் – 1ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டு இனங்கள் குழல் ஒலிப்பது போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளை நோக்கி கைகூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சலவர்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சலவர்

பொருள்

  • வஞ்சகர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

*சலவரைச்* சாரா விடுதல் இனிதே;
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.

இனியவை நாற்பது – பூதஞ் சேந்தனார்

கருத்து உரை

வஞ்சகர்களை சாராமல் அவரை விட்டு நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நிருத்தன்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நிருத்தன்

  • நடனம் புரிபவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

8ம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

திரு நடனம் புரிபவனே! மலம் இல்லாதவனே! வெண்ணீற்றை உடையவனே! நெற்றிக்கண்ணை உடையவனே! தேவர் பிரானே! ஒப்பற்றவனே! முறையிட்டு அரற்றி உலகம் முழுதும் தேடியும் உன்னை நான் பார்க்கவில்லை. தீர்த்தமாகிய பொய்கையை உடைய திருப்பெருந்துறையில் வளப்பமான மலர்களை உடைய குருந்தமர நிழலில் பொருந்திய சிறப்புடைய செல்வனே! தொண்டனாகிய நான் அன்புடன் அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!

விளக்க உரை

அருத்தன் – மெய்ப்பொருளாய் உள்ளவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கதிர்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கதிர்

பொருள்

  • ஒளிக்கதிர்
  • சூரியகிரகணம்
  • ஒளி
  • வெயில்
  • சூரியசந்திரர்
  • நெற்கதிர்
  • இருப்புக்கதிர்
  • நூல்நூற்குங்கருவி
  • சக்கரத்தின்ஆரக்கால்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

சூரியனைக் கண்ட சூரியகாந்தக்கல் நெருப்பு வடிவம் பெறும்; சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக்கல் முத்துப்போன்று நீர் வடிவாய் நீரை உமிழும்; கண்ணுக்கு உதவியாக அணியப்படும் ஆடி ஆகிய `உபநேத்திரம்` பார்வை வழியை நன்கு தெரிவிக்கும்; (அது போல) சிவனை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட உயிர்கள் அந்தச் சிவன் வடிவம் பெறும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வம்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வம்பு

பொருள்

  • சண்டை
  • வீண் வார்த்தை
  • பழிமொழி
  • தீம்பு வார்த்தை
  • சரசச் செயல்
  • வஞ்சனை
  • பயனிலாமை
  • நிலையின்மை
  • புதுமை
  • படிறு
  • உவமை
  • வாசனை
  • அரைக் கச்சு
  • கையுறை
  • மேற் போர்வை
  • சிவிகையின் வளைகொம்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் – நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு.

11ம் திருமுறை – நம்பியாண்டார் நம்பிகள் – திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை

கருத்து உரை

பூங்கொம்பைப் போன்ற வள்ளியின் நாயகனாகிய முருகன் அடையாதபடி சர்சைக்குரிய மாம்பழத்தை பெற்றுக்கொண்டவரும், திருநாரையூரில் உன்னை நம்பி அடைபவர்களுக்கு அருளுபவரும்,  சிவபெருமானை வலம் வந்து பெற்றுக் கொண்ட துதிக்கையை உடையவரே எனக்குத் துன்பம் செய்வது ஏன் என்பதைச் சொல்வாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆதிப்பிரமம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஆதிப்பிரமம்

பொருள்

  • இறைவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கரு ணையடியார்
குலாவுநீ திகுண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்
தாதிப் பிரமம் வெளிப்படுத்த
அருளறி வாரெம்பி ரானாவாரே.

தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து உரை

பெண் பொருந்திய பாகத்தனும், வேதம் சொன்ன மொழியையுடையவனும், உயர்ந்த இதயமலரில் வீற்றிருக்கும் ஒளிப்பிழம்பானவனும், குற்றமற்ற மேலான கருணையாளனும், அடியார்கள் கொண்டாடுகின்ற நீதியினையே, குணமாக அவர்களுக்கு அருள்புரியும், அரும்புகள் மலர்கின்ற, சோலை சூழ்ந்த, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும், எமது புண்ணியப்பொருளானவனும் ஆகிய இறைவன், மணணுலகத்தில் வந்து இறங்கி, எல்லாவற்றுக்கும் முதலாயுள்ள பெரும் பொருளாகிய தனது தன்மையை வெளிப்படுத்திய, அருளின் அருமையை அறிய வல்லர்கள், எம்பிரான் ஆவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அனாகதம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அனாகதம்

பொருள்

  • பிற ஒன்றால் தோற்றுவிக்கப் படாதது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நில்லடா நிலை அறிந்து சுகத்தைக்காண
நிசமான ருத்திரனார் பதியைக்கேளு
சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க
சுகமான முக்கோணம் நன்றாய்க்கீறி
அல்லடா முக்கோணத் ததிலேநீதான்
அப்பனே பன்னிரண்டி தழ்தான்போடு
விள்ளடா செம்புனிற மான கோட்டை
விசையான கோட்டைநடு விந்துபோடே

அகத்தியர் சௌமிய சாகரம்

அனாகதம்

கருத்து உரை

அடுத்தது “சி”கார ” எழுத்தாகவும், சிகாரத்தின் நடுவில் பார்வதியுடன் அமர்ந்திருக்கும் ருத்திரனாரை  தலைமையாக கொண்ட அனாதகத்தை, முக்கோணச் சக்கரம் சுற்றிலும் (இரு முக்கோணங்கள் ஒன்று மேல்நோக்கியும் ஒன்று கீழ் நோக்கி) பன்னிரண்டு இதழ்களை வரைந்து, செம்பின் நிறம்போன்ற சிவந்த கோட்டை அதன் நடுவில் புள்ளியாகவும், சக்திதத்துவம் உடையதாகவும்  சிறியதாகவும் உள்ள பிந்துவினை இட்டு  குரு உபதேசித்த படி ஜபிக்க வேண்டும்.

விளக்க உரை

  • இது அக்னி நிறமுடையது.
  • விசுத்தி காற்றுடனும். ஆக்ஞா நெருப்புடனும் சம்மந்தம் உடையவை.
  • மூலாதாரம் முதல் அனாகதம் வரை உணர்ச்சி மையம். அனாகதம் முதல் துரியம் துரியாதீதம் வரை அறிவு மையம்.எனவே அனாகதம் அறிவும் உணர்ச்சியும் சந்திக்கின்ற மையப்புள்ளி. இது பற்றியே மனிதர்கள் கீழ் நிலை அடைவதும், மேல் நிலை அடைவதும்.
  • 54 சூரிய கலைகளைக்கொண்டு ஜோதி வடிவானது.
  • நெருப்பின் பஞ்ச பூத தத்துவமாகவும், எல்லாவற்றிலும் மேலாக எப்போதும் அனாதியாய் ஓங்கார சப்தத்தையும் (உடல் முழுதும் சிரசு வரை) மின்னலின் கண் தோன்றும் இடி சப்தத்தையும் எழுப்பிக்கொண்டே இருப்பதோடு ஒவ்வொரு அணுவிலும் அதன் அதிர்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.
  • ஒன்றின் மூலத்திலிருந்து வந்தது.
  • ‘ஹ்ருதயஸ்தா, ரவிப்ரக்யா – ‘ஹ்ருதயத்தில் வசிக்கையில் சூர்யன் போன்று பிரகாசிப்பது’ என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் நாமாவளி இதைக் குறிக்கிறது. ஹ்ருதயத்தில் சியாமா/தருணியாகவும் இருப்பதை குறிக்கிறது. அவளே அனாகதத்தை தாண்டி விஷ்ணுக்ரந்தியைக் கடக்கையில் சூரியனது ஒளியை விஞ்சுவதாக  ருத்ர சியாமளம் கூறுகிறது.

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாண்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மாண்பு

பொருள்

  • மாட்சி
  • சிறப்பு
  • பெருமை
  • அழகு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் – வெய்ய
சினமே ஒழியாய் திருவெழுத்தைந்து ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு ?

பட்டினத்தார்

கருத்து உரை

தீமை தரக்கூடிய பொய்யை ஒழியாமல் இருக்கிறாய்; புலால் உணவை விடாமல் இருக்கிறாய்; திருக்காளத்தியில் உறையும் காளத்தி நாதரை எண்ணாமல் இருக்கிறாய்; நல்வழிக்கு அழைத்துச் செல்லும் அறங்களைச் செய்யாமல் இருக்கிறாய்; தீமையானதும் கொடுமையானதுமான சினத்தை விடாமல் இருக்கிறாய்; திரு ஐந்தெழுத்தினை ஓதாமல் இருக்கிறாய்; மனமே இவை எல்லாம் இல்லாமல் உனக்கு என்ன சிறப்பு?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வங்கை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வங்கை

பொருள்

  • பகை
  • குறும்பு.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.

சிவவாக்கியர்

கருத்து உரை

தேவர்களில் உங்கள் தேவர், எங்கள் தேவர் என்று இரண்டு தேவர்கள் இருக்கிறார்களா? இங்கும் அங்கும் இரண்டு தேவர்கள் இருக்கிறார்களா? அங்கும் இங்குமாய் நின்ற ஆதி மூர்த்தி ஒருவரே. இவ்வாறு பகைகொண்டு மாறுபாடான கருத்துக்களை சொல்லுபவர்கள் மிக மோசமான நிலை அடைந்து இறப்பார்கள்.

விளக்க உரை

  • அகச் சமயம் ஆறும் (வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம்.), புறச் சமயங்களான சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்யம், கெளமாரம் ஆகிய நிலைகளில் இருந்து அருள்பவன்.
  • மனம் நிலையில்லாமல் ஒடுகிறது என்பதை குறிக்கவே இரண்டாம் வரிகளில் இங்கும் அங்குமாகி என்றும், மனம் நிலை பெற்றப்பின் புறத்தில் இருக்கும் மூர்த்தியே அகத்தில் இருக்கிறார் என்பதை குறிக்கவே மூன்றாம் வரிகளில் அங்கும் இங்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.(இது என் சிற்றறிவுக்கு எட்டியது – வேறு விளக்கங்கள் தெரிவித்தால் அறிந்து கொள்வேன்).

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வெருவுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வெருவுதல்

பொருள்

  • அஞ்சுதல்
  • வெருவுதல்
  • அச்சம் கொள்ளுதல்
  • பயம் கொள்ளுதல்
  • வெருவுதல்
  • வெருளுதல்
  • மருட்சி கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! – வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்*
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே!

அபிராமி அந்தாதி

கருத்து உரை

என் தாயே, அபிராமியே, மனிதராய்ப் பிறந்த எவராலும் அறிய இயலாத வேதத்தின் பொருளை உனது பேரருளால் அறிந்து கொண்டேன். அதை அறிந்து கொண்டு உனது திருவடிகளே சரணமென்று சரணடைந்தேன். உனது அருள் பெற்ற அடியார்களின் பெருமைகளை அறியாமல், உன்னைத் தொழாமல், தீய செயல்கள் புரிந்து நரகத்தில் மந்தையாக விழக் காத்திருக்கும் இம்மனிதர்க் கூட்டங்களை கண்டு அஞ்சி அவர்களிடம் இருந்து விலகி விட்டேன்.

விளக்க உரை

அறியா மறை

  • வேதம்,
  • மறைபொருளான உண்மைகள் என்றும் பொருள் கொள்ளலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சாலி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சாலி

பொருள்

  • நெற்பயிர்
  • நெல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வாராதிருந்தால் இனி நான் உன் வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன் மணியால் இழைத்த பணிபுனையேன்
பேராதரத்தினொடு பழக்கம் பேசேன் சிறிதும் முகம் பாரேன்
பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன் பிரியமுடன் ஒக்கலை வைத்துத்
தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழும் மணித் தொட்டிலில் திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில் தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே வருக வருகவே!

நெல்லை காந்திமதி பிள்ளைத் தமிழ்

கருத்து உரை

நீ வராது இருந்தால் உன் வேல் போன்ற விழிகளில் மை இட்டு எழுத மாட்டேன்; கூர்மையான வாள் போன்று இருக்கும் நெற்றியில் திலகம் இட மாட்டேன்; மணியால் கோர்க்கப்பட்டவைகளை கொண்டு அவைகளை உன் கழுத்தில் இட்டு அழகு பார்க்கும் பணிகளை செய்ய மாட்டேன். தானாக முந்திச் சென்று காணும் உன்னிடம் பேச மாட்டேன்; முகத்தினையும் காணமாட்டேன். தாய்மைக்கு உரித்தான தனங்களில் இருந்து பால் ஊட்ட மாட்டேன்;  தேர் ஊர்ந்து செல்லும் வீதிகளைக் காட்ட மாட்டேன்; மன மகிழ்வோடு முத்தமிட மாட்டேன்; மணிகள் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலில் இட்டு சீராட்ட மாட்டேன்; இமவானின் மார்பில் தவழும் குழந்தையும், நெற்கதிர்களால் சூழப்பட்டிருக்கும் தலைவன் வாழும் இடத்தில் வாழும் காந்திமதித் தாயே வருக வருக.

விளக்க உரை

  • பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், ஆச்சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டதும் பாவனையே ஆகும்.
  • நெல்லை காந்திமதி அன்னையை குழந்தையாக பாவித்து எழுதப்பட்ட பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!