தீமை தரக்கூடிய பொய்யை ஒழியாமல் இருக்கிறாய்; புலால் உணவை விடாமல் இருக்கிறாய்; திருக்காளத்தியில் உறையும் காளத்தி நாதரை எண்ணாமல் இருக்கிறாய்; நல்வழிக்கு அழைத்துச் செல்லும் அறங்களைச் செய்யாமல் இருக்கிறாய்; தீமையானதும் கொடுமையானதுமான சினத்தை விடாமல் இருக்கிறாய்; திரு ஐந்தெழுத்தினை ஓதாமல் இருக்கிறாய்; மனமே இவை எல்லாம் இல்லாமல் உனக்கு என்ன சிறப்பு?
தேவர்களில் உங்கள் தேவர், எங்கள் தேவர் என்று இரண்டு தேவர்கள் இருக்கிறார்களா? இங்கும் அங்கும் இரண்டு தேவர்கள் இருக்கிறார்களா? அங்கும் இங்குமாய் நின்ற ஆதி மூர்த்தி ஒருவரே. இவ்வாறு பகைகொண்டு மாறுபாடான கருத்துக்களை சொல்லுபவர்கள் மிக மோசமான நிலை அடைந்து இறப்பார்கள்.
விளக்கஉரை
அகச் சமயம் ஆறும் (வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம்.), புறச் சமயங்களான சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்யம், கெளமாரம் ஆகிய நிலைகளில் இருந்து அருள்பவன்.
மனம் நிலையில்லாமல் ஒடுகிறது என்பதை குறிக்கவே இரண்டாம் வரிகளில் இங்கும் அங்குமாகி என்றும், மனம் நிலை பெற்றப்பின் புறத்தில் இருக்கும் மூர்த்தியே அகத்தில் இருக்கிறார் என்பதை குறிக்கவே மூன்றாம் வரிகளில் அங்கும் இங்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.(இது என் சிற்றறிவுக்கு எட்டியது – வேறு விளக்கங்கள் தெரிவித்தால் அறிந்து கொள்வேன்).
என் தாயே, அபிராமியே, மனிதராய்ப் பிறந்த எவராலும் அறிய இயலாத வேதத்தின் பொருளை உனது பேரருளால் அறிந்து கொண்டேன். அதை அறிந்து கொண்டு உனது திருவடிகளே சரணமென்று சரணடைந்தேன். உனது அருள் பெற்ற அடியார்களின் பெருமைகளை அறியாமல், உன்னைத் தொழாமல், தீய செயல்கள் புரிந்து நரகத்தில் மந்தையாக விழக் காத்திருக்கும் இம்மனிதர்க் கூட்டங்களை கண்டு அஞ்சி அவர்களிடம் இருந்து விலகி விட்டேன்.
வாராதிருந்தால் இனி நான் உன் வடிவேல் விழிக்கு மை எழுதேன் மதிவாள் நுதற்குத் திலகம் இடேன் மணியால் இழைத்த பணிபுனையேன் பேராதரத்தினொடு பழக்கம் பேசேன் சிறிதும் முகம் பாரேன் பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன் பிரியமுடன் ஒக்கலை வைத்துத் தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய கனிவாய் முத்தமிடேன் திகழும் மணித் தொட்டிலில் திருக்கண் வளரச் சீராட்டேன் தாரார் இமவான் தடமார்பில் தவழும் குழந்தாய் வருகவே சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே வருக வருகவே!
நெல்லை காந்திமதி பிள்ளைத் தமிழ்
கருத்துஉரை
நீ வராது இருந்தால் உன் வேல் போன்ற விழிகளில் மை இட்டு எழுத மாட்டேன்; கூர்மையான வாள் போன்று இருக்கும் நெற்றியில் திலகம் இட மாட்டேன்; மணியால் கோர்க்கப்பட்டவைகளை கொண்டு அவைகளை உன் கழுத்தில் இட்டு அழகு பார்க்கும் பணிகளை செய்ய மாட்டேன். தானாக முந்திச் சென்று காணும் உன்னிடம் பேச மாட்டேன்; முகத்தினையும் காணமாட்டேன். தாய்மைக்கு உரித்தான தனங்களில் இருந்து பால் ஊட்ட மாட்டேன்; தேர் ஊர்ந்து செல்லும் வீதிகளைக் காட்ட மாட்டேன்; மன மகிழ்வோடு முத்தமிட மாட்டேன்; மணிகள் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலில் இட்டு சீராட்ட மாட்டேன்; இமவானின் மார்பில் தவழும் குழந்தையும், நெற்கதிர்களால் சூழப்பட்டிருக்கும் தலைவன் வாழும் இடத்தில் வாழும் காந்திமதித் தாயே வருக வருக.
விளக்கஉரை
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், ஆச்சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டதும் பாவனையே ஆகும்.
நெல்லை காந்திமதி அன்னையை குழந்தையாக பாவித்து எழுதப்பட்ட பாடல்.
தூய கடல் நீர் அடிசில் உண்டு, அது துரந்தான்; ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான்; மாய-வினை வாள் அவுணன் வாதவிதன் வன்மைக் காயம் இனிது உண்டு, உலகின் ஆர் இடர்களைந்தான்.
கம்பராமாயணம்
கருத்துஉரை
அகத்தியர், தூய்மையான கடல்களின் நீர் முழுவதையும் உணவாக உண்டு அதனை மீண்டும் உமிழ்ந்த முனிவரும்; அப்படிப்பட்ட செயலால் குறுகியது எனினும் விரும்பத்தக்க உடலை உடைய குறுமுனி என அத்தகையோரும்; வஞ்சகச் செயல்களையுடைய வாட்படையுடைய அரக்கனாம் வாதாபி என்பவனின் வலிய உடலை மகிழ்ந்து உண்டு; உலகமக்களின் கொடிய துன்பத்தைப் போக்கியவரும் ஆவார்.
உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலும் குற்றமற்ற வழியிலும் ஈட்டுதல், அவ்வாறு ஈட்டிய பொருளைத் தாமும் பிறரும் அனுபவித்து மகிழ்தல், அச்செய்கையின் விளைவாக உலக இருப்புக்களின்பால் இருக்கும் தீராத பற்றை விடுதல் ஆகிய இந்நான்கு வகை வாழ்க்கை ஒழுகலாறுகளும் இவ்வாறு இல்லாமல் மானுட உடல் தாங்கி இவ்வுலகில் பிறந்து வாழ்வதால் உண்டாகும் உண்மைப் பயன் என்ன?
மலை அளவு பொற்குவியல் வைத்திருந்தாலும் எமன் வருகையில் அதை அள்ளிச் செல்வாரோ? (முடியாது என்பது துணிபு) . இவ்வாறு இல்லாமல் மனதினை தந்தையாகிய இறைவன் பால் வைத்தவர்கள் அழியாதவர்கள் என்று துணிந்து ஆடு பாம்பே (என்கிறார்)
காணவே பிரம்மாவின் பதியைச் சொன்னேன் கருவான மணிபூரகங் கருத்தைக் கேளு தோணவே பிறை மூன்றாம் பிறைபோற்கீறித் துலங்க அதில் ஈரைந்து பத்தும் போட்டு பேணவே நிறமதுதான் பளிங்குபோலாம் பிறைமூன்றாம் பிறை நடுவே மகாரமிட்டு பூணவே சங்கிலி மங்கென்றேதான் பூரணமாய்த் தினம் நூறு செபித்துக்காரே.
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்துஉரை
இதுவரையில் பிரம்மா ஆகிய தலைவனைப்பற்றிச் சொன்னேன். இனி மணிபூரகம் பற்றிய கருத்தினை கேட்பாயாக. பிறைபோல பிளவுப்பட்டதும் இரத்தினம்போல் விளங்குவதும் ஆகியது மணிபூரகம். அதைச் சுற்றிலும் பத்து இதழ்கள். பளிங்குபோன்ற நிறம் உடையது பிறைபோன்ற அதன் நடுவே மகாரம் இட்டு ‘********’ * என்று நாள்தோறும் நூறுமுறை செபம் செய்வாயாக.
மணிபூரகம் பத்து இதழ்கள், பத்து எழுத்துக்களைக் கொண்டு மூன்று வட்டங்களுடன் நடுவில் (மகார) எழுத்தும் மகாரத்தின் நடுவில், மகாவிஷ்ணும், மகாலட்சுமியும் நாபித் தானத்தில் எழுந்தருளியிருக்கும் அமைப்புடையது..
இது பச்சை நிறமுடையது.
1008-நாடிநரம்புகளும் சூழ நாடி நரம்புகளுக்கெல்லாம் வேர் போல் உள்ளது
நெருப்பு ஜ்வாலையை (ஜடராக்னி) மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம். இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட, ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால் குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின் அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/லாகிணி.
பீஜமந்திரம் ‘ரங்’
ஆண் தெய்வம் : பிராப்த ருத்திரன்
நீல நிற மேனி, வெள்ளிக் கழுத்து, இரு கைகளுடனும் தங்கப் புலித் தோலில் அமர்ந்த திருக்கோலம்.
கைகளில் – சூலம், உடுக்கை, மலர்
பெண் தெய்வம் : பெயர் : லாகிணி.
மூன்று தலைகள், நான்கு கைகள்
கைகளில் – வஜ்ராயுதம்(இடி), காமத்தை தூண்டும் அம்பு, நெருப்பு, முத்திரை
துக்கடா
ருத்ரயாமளம் என்ற தந்திரநூலின்படி மணிபூரகம் 2 விதமான பைரவர் மண்டலமாக குறிப்பிடப்படுகிறது.
வெண்ணிறமேனியுடன், பல அணிகள் அணித்தோர், அர்மாலை, அங்குசம், ஏடு(புத்தகம்), குழல் ஆகியவற்றை ஏந்தியவர்கள்.
ருருபைரவர் – தலைமை .
குரோத தம்ஷடரர்
ஜடாதரர்
விஸ்ரூபர்
வஜ்ரஹஸ்தர்
மஹாகாயர்
வீருபார்
க்ரீடனர்
இந்த தொகுதி ருரு பைரவர் மண்டலம்
நீலநிறமேனியுடன் மிக்க அழகுடயவராய் நான்கு கரங்களிலும், அழல், கதை, குண்டிகை, சக்தி ஆகிய படைக்கலன்களை தாங்கியோராவர்.
சண்டபைரவர் – தலைமை
பிரளயாந்தகர்
பூமிகம்பர்
நீலகண்டர்
விஷ்ணு
குலபாலகர்
முண்டபாலர்
காமபாலர்
இவர்களின் தொகுதி சண்டபைரவர் மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.
சித்திகளை வழங்குவது பைரவர்களுடன் உறையும் யோகினிகளே என்பதால் இவைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
அடையாளம் உரைத்த மூலவட்டத்தின் மேல் அச்சுதனுமிருக்குமந்த பிறை கீழாக கலைமளோடணைய நிற்கும் கமலந்தன்னில் கடிய நால் வட்டமடா சுவாதிட்டானம் துடியாக பவிழ நிறவர்ணமாக தொல்லுலகில் கம்பம் கால் வசங்கள் சுற்றி கடிய அலகை திருபதினாறு வீதி காணவே பஞ்சமியில் பிறை போலாமே.
வர்மலாட சூத்திரம் 300
கருத்துஉரை
இவ்வாறு அடையாளமாக உரைத்திட்ட மூலாதாரத்தின் மேல் மகாவிஷ்ணு தலத்திற்கு கீழாக கலைமகளோடு இருக்கும் தாமரை தன்னில் நான்கு சதுரங்களை உடையது சுவாதிட்டானம். இது பவழ நிறம் இருக்கும். இவ்வாறாக வாசியின் வழியாக மூச்சின் முறையை மாற்றி ஆக்கினை வரை காணவே ஆதாரங்களை கடந்து இறை தரிசனம் பெறலாம்.
ஓவியம் : இணையம்
விளக்கஉரை
‘ஸ்வ:’ என்கிற சொல்லானது பரமானலிங்கம் எனும் பொருள்படும். சுவாதிட்டானம்: ஆறு இதழ்த் தாமரை வடிவமுடையது. அதன் நடுவே நாற்சதுரவடிவம் போன்றும் உள்ளது. இதில் “ந” என்ற ஒலி இருக்கும். அட்சரத்தில் பிரம்மாவும் சரஸ்வதியும் வீற்றிருப்பார்கள்
இதன் பீஜமந்திரம் ‘வம்’.
இது நீர் தத்துவத்தை குறிக்கிறது.
குண்டலினியில் இருந்து வெளிப்படும் செஞ்சுடரைச் சுவாதிட்டானத்தில் மனம் காணும் ஆற்றலைப் பெறுமாயின் அதுவே பேரின்பம் அடைவதற்கான அறிகுறி
மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர்ராகிணி (அ) சாகிணி. செந்தாமரையில் அமர்ந்து சிகப்பு நிற புடவை அணிந்து இரண்டு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, அம்பு, கோடாரி, உடுக்கை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.
திருபதினாறு வீதி – ஆக்கினை
‘உந்திகமலத்து உதித்து நின்ற பிருமாவைச் சந்தித்து காணமல் தட்டழிந்தேன் பூரணமே!’ என பூரணமாலையில் பட்டினத்து அடிகள் குறிப்பிடுவதும் இச் சக்கரத்தையே!
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
மூலாதாரத்தின் அதிபதி கணபதி மற்றும் வாலை தாய். இது முட்டை வடிவமும் அதனை சுற்றி நான்கு தாமரை இதழ் கொண்ட அமைப்பும் உடையது. இதற்கு தலைவனாக விளங்கக்கூடியது ஓங்காரம். இவ்வாறு இருக்கும் ஓங்காரத்துடன் ‘ ஓம் ரீம் உம்’ ஆகிய அட்சரங்களை கூட்டி தனது மனதினை சாட்சியாக வைத்து ஜபம் செய்ய கணபதியும் வல்லபையும் மனம் கனிந்து உன்னிடத்தில் வருவார்கள்.
விளக்கஉரை
மூலாதாரக் கடவுள் – வினாயகர். அவர் ஓங்கார வடிவம் என்பதாலும் மூலாதாரத்தில் ஜபம் செய்யும் போது வினாயகர் தோன்றுவார் எனும் பொருளிலும் விளக்கப்பட்டுள்ளது.
தன்மனமே சாக்ஷியாக – சாட்சி பாவனையுடன் கூடிய வழிபாடு
இந்த மூலாதார சக்கரத்திற்கு வடிவம் வட்டத்தின் உள் அமைந்த முக்கோணமும் அதன் நடுவில் நான்கு இதழ்களும், அந்த இதழ்களில் ஒவ்வொன்றிலும் வல வரிசையாக மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் ஆகிவற்றால் குறிப்பிடப்படுகின்றன. இவைகளுக்கான அக்ஷரங்கள் ‘வ, ச, ஷ, ஸ.’
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
இறைவரே, அடியார்களாகிய நாங்கள் `பெரியாரொடு நட்பு கொள்ளுதல் இன்பம் தருவது` என்று கருதியிருந்தாலும், நீர் கபால மாலையை அணிந்துள்ளீர், மயானத்தில் வாழ்வீர், அதன்கண் உள்ள சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொள்வீர், கொடிய பாம்பைக் கழுத்திலும் தோளிலும் கட்டி வைத்திருக்கின்றீர், தேவர்கள், கடலைக் கடைந்து அதில் இருந்து பெறப்பட்ட பெரிய விஷத்தினை எளிதாக உண்டீர், இந்த அண்டத்தைக் கடந்து, அதற்கு மேல் உள்ள அண்டத்துக்கும் அப்பால் இருப்பீர். அதனால், ஊனினது திரட்சியாகிய இவ்வுடம்பைச் சுமந்துகொண்டு உம்மோடு தொடர்புகொள்ள வல்லமை இல்லாதவர்களாக இருக்கிறோம். ஆதலினால், உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.
நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங் கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.
திருவருட்பா – இரண்டாம் திருமுறை – இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
கருத்துஉரை
நாய் போன்றவனாகிய யான் துன்பக்கடலில் வீழ்ந்து வருந்துதல் அழகோ, நல்லவர்களுக்கு தானம் ஒன்றும் கொடுக்கவில்லை, யாதொன்றும் இல்லாதவன் என் செய்வேன். என்னுடைய அன்னையை போன்றவனே, சிறிதளவு என் மேல் கருணை காட்டினால் ஆகாதா, குழந்தை போன்ற என்னை விட்டு விடுவாயா, விட்டு விட்டால் உலகம் சிரிக்காதோ!
விளக்கஉரை
கருணை கொண்டவன் என்பதால் நீ விட்டுவிட மாட்டாய் என்பது மறைபொருள்
அருளாளர்கள் பெரும்பாலும் தன்னை நாயுடன் ஒப்பிட்டு சொல்வார்கள். நாய் பொதுவாக நன்றி உடைய தன்மை கொண்டு இருக்கும். ‘ உன் அருள் கிடைத்தும் நான் நன்றி அற்றவனாக இருக்கிறேன்’ எனும் பொருளில் ஒப்பீடு செய்வார்கள்.
அரசு முதலிய சமித்துக்கள், பசுவின் சாணம் பொருந்தப்பட்ட சிவாக்கினியில் வெந்து தனது முந்தைய வடிவத்தை இழந்து உரு மாறிய, அந்தத் திருநீற்றை உடல் முழுவதும் நிரம்ப பூசித் தூய்மையை அடைந்த நல்லோரது உடம்பே பிரம ஞானத்தை அடையும் உயர்ந்த குலத்து உடம்பாகும்.
தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதிசூக்கும பஞ்சாட்சரம், சூட்சுமாசூட்சும பஞ்சாட்சரமென்று நான்கு வகையான முறையில் ஐந்தெழுத்தாகவும், ஓம் ஆம் ஒளம் சிவாயநம என்கிற எட்டெழுத்தாகவும், பஞ்சாட்சரத்துடன் ஓம் சேர்ந்து ஆறெழுத்தாகவும், ஓம் சிவாய என்கிற நாலெழுத்தாகவும் தனக்கு விதிக்கப்பட்ட விதிப்படியே உச்சரித்து விதிப்படி அதன் உச்சரிக்கிற முறைமையால் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை அறிந்து பிஞ்செழுத்தாகிய வகாரமாகிய பராசத்தியையும், பெருவெழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தையும் என்னுடைய இருதயத்திலே வைத்து பேசும் எழுத்தாகிய வகாரமாகிய சத்தி பேசா எழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தை இரண்டற அழுத்துவிக்கக் கொடி கட்டினேன்.
விளக்கஉரை
பஞ்சாட்சரத்தினுடைய சுபாவ மறிந்து – சிகாரம் சிவம், வகாரம் சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதம், மகாரம் மலம் ஆக இந்த முறைமையை அறிந்து
ஞான நடனமாகிய சிகார வகாரத்தைப் பொருந்தி – சிவ சக்தி வடிவமாக (சிவ), சக்தி சிவ வடிவமாக (வசி) உபாசனை செய்ய அத்தன்மை உண்டாக்கும்.
பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம் போர்வையெனக் காணார் புவி.
திருநெறி 8 – திருவருட்பயன்- உமாபதி சிவாச்சாரியார்
கருத்துஉரை
மானைக் காட்டி மானைப் பிடித்தல் போல், பக்குவப்பட்ட ஆன்மாக்களை முன் நிற்கச் செய்து தன்வசமாக்கிக் கொள்வதற்காக மானிட தேகம் எனும் சட்டையை சாத்திக்கொண்டு ஆசாரியமூர்த்தமாக எழுந்தருளி வந்ததென்று ஆன்மாக்கள் அறியச் செய்வார்கள்.
அரை + அணி – பாறை + அழகு – பாறையில் அழகாக அமர்ந்திருப்பவர்
தனிச்சன்னிதியில், திருஞானசம்பந்தர் தாளமேந்தி நின்ற கோலத்தில்
சமணர்கள் இக்கோயில் கதவை அடைத்து திருஞானசம்பந்தரை நுழைய விடாமல் தடுத்த போது, அவர் பதிகம் பாடி கதவை திறந்த தலம்.
சம்பந்தர் சிவனாரை தரிசிக்க வசதியாக பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடதுபுறமாகவும் சற்று சாய்ந்த அமைப்பு
சம்பந்தர் இங்கிருந்தே திருவண்ணாமலையை தரிசித்த தலம். (அடையாளமாக கொடிமரத்தின் அருகே 3 அடி உயர பீடத்தில் சம்பந்தரின் பாதம் )
ரமண மகரிஷியை திருவண்ணாமலைக்கு வருமாறு அம்பாள் ஆணையிட்ட தலம்
திருக்கோயிலூர் ஸ்ரீஞானானந்த சுவாமி இங்குள்ள கோபுரத்தில் அமர்ந்து தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
சனீஸ்வரர், காகத்தின் மீது காலை ஊன்றிய கோலம் , நின்ற கோலம் என இரு வடிவங்களில் காட்சி
பீமன் குளம் – கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில்
மூர்த்தங்கள் அற்று ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக்கோயில்களாக ஐந்து அறைகள்
மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி சன்னதி – ஸ்ரீதேவி கையில் முத்திரை பதித்த தண்டம் , இடப்புறத்தில் பெண், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஆண்.
தலம்
திருஅறையணிநல்லூர்
பிற பெயர்கள்
அறையணி நல்லூர், அரகண்ட நல்லூர்
இறைவன்
அதுல்யநாதேஸ்வரர், ஒப்பிலாமணீஸ்வரர் , அறையணிநாதர்
இறைவி
சௌந்தர்ய கனகாம்பிகை , அருள் நாயகி , அழகிய பொன்னம்மை
தல விருட்சம்
வில்வமரம்
தீர்த்தம்
தென்பெண்ணையாறு
விழாக்கள்
வைகாசியில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை தீபம்
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்
ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோவில் தேவஸ்தானம்
அரகண்டநல்லூர் அஞ்சல்,
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 605752
04153-224745, 93456-60711, 99651-44849
தீப்போல விளங்கும் செம்மேனி உடைவயனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவன்! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக் கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் அழித்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
நேர்மையான (தவமுனிவருக்கும்) மான் ஈன்ற புதல்வியாகிய வள்ளியம்மையாரை வள்ளி புனத்தில் இருந்து கவர்ந்து சென்ற கள்வனும், பெருமானும், பிறப்பும் இறப்பும் இல்லாதவனும் ஆகிய முருகன், சொல் ஒழித்து மெய்ஞான உணர்வு பெற்று மோன நிலை அடைந்து ”பேசாத மவுன நிலையில் சொற்களை விலக்கி சும்மா இருப்பாயாக!”, என்று உபதேசித்தவுடன், அவனை அன்றி வேறு ஒரு உலகம் ஒன்றையும் அறியாது இவ்வுலகப் பொருள் எல்லாம் மறைந்து போனது!
விளக்கஉரை
பொதுவாக வள்ளி, முருகன், தெய்வானை என்பது சக்தியின் வடிவம்.(முறையே இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி).
ஞான நிலை வாய்க்கப் பெற்ற முருகன் இச்சைகளை விலக்க ஆணையிட்ட உடன் ஞானம் கிடைத்துவிட்டது என்கிறார்.
பிறவான் இறவான் – பிறப்பிலி; பிறப்பு இறப்பு அற்றவன்
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
சகலகலாவல்லி மாலை – குமரகுருபரர்
கருத்துஉரை
கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக
விளக்கஉரை
*இன்று குமரகுருபரர் குருபூசை*. இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர்.
இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் பெற்றார்.
இவர் எழுதிய நூல்கள்
கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
திரிமலத்தார் ஒன்றதனிற் சென்றார்கள் அன்றி ஒருமலத்தார் ஆயும் உளர்.
திருநெறி 8 – உமாபதி சிவாச்சாரியார்
கருத்துஉரை
மூன்று மலம் உடையவர்கள் திரிமலத்தார். ஆணவம் காமியம் மாயை என்கிற மூன்று மலத்தினையுமுடைய ஆன்மாக்கள் சகலரென்றும், ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள் பிரளயாகலர் என்றும், ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மாக்கள் விஞ்ஞானகலர் ஆகிய மூன்று விதமான ஆன்மாக்களாக இருக்கும்.
தாரா கணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் ஆராது உமை முலைப்பால் உண்ட பாலன் அரையில் கட்டும் சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே வாராது அகல், அந்தகா, வந்த போது உயிர் வாங்குவனே.
கந்தர் அலங்காரம்
கருத்துஉரை
நட்சத்திரக் கூட்டத்தில் பகுதி ஆகிய ஆறு தாய்கள் பேரும் தந்த முலைப் பாலை உண்டது போதாமல் உமாதேவியாரின் திருமுலைப் பாலையும் உண்டருளிய பாலகனாகிய திருமுருகப்பெருமானின் திருவரையில் கட்டிக் கொள்ளும் உடைவாளும், திருக்கரத்தில் ஏந்தியுள்ள சிறுவாளும் வேலாயுதமும் எனது சிந்தையில் குடி கொண்டிருக்கின்றன; ஆதலால், இயமனே, என்னிடம் வாராது நீங்கிப் போவாயாக, மீறி வந்தால் உன் உயிரை வாங்கிவிடுவேன்!
விளக்கஉரை
ஆறு ஆதாரக்களையும் தாண்டி யோக அப்யாசத்தால் துரியாதீத அப்யாசம் செய்யும் போது மரணமில்லா பிறவி வாய்க்கும்.