உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே
திருநெறி 2 – சிவஞான சித்தியார்
பதவுரை
காட்சிப் பொருளாகிய உருவத் திருமேனி, உருவம் இல்லாத நுட்பத்தினை குறிக்கும் அருவத் திருமேனி ஆகியவற்றையும் கண்டோம். இவை இரண்டும் கண்டதால் அரு உருவத் திருமேனி என்பது பெறப்படும். இவ்வாறாக சொல்லப்பட்ட மூன்று வடிவங்கள் ஆகிய மூன்று நிலைகளும் ஆன்மாக்கள் உய்ய வேண்டும் என்பதற்காக இறைவன் கொண்ட நிலை என்று காண்பாயாக.
விளக்கஉரை
இறைவன் ஒன்பது பேதங்களில் கலந்து நின்று, ஆன்மாக்கள் உய்ய, நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் உருவத் திருமேனி வடிவமாகவும், விந்து, நாதம், சத்தி, சிவம் எனும் அருவத் திருமேனி வடிவமாகவும், சதாசிவம் எனும் அருவுருவ வடிவமாகவும் இருந்து ஐந்தொழில் நடத்தி தன்னை உணர்த்துவான்.
வானில் உள்ள தேவர்கள் போற்றும் அமுதமாய், வந்து என் உள்ளம் புகுந்தவனாய், உயிர்களின் பிறப்பிற்கு காரணமான குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய், ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய், தேன் போல தெளிவாக தோன்றுபவனே, தேவர்களுக்கும் தேவனாய் நின்றவனே , சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பி செய்பவனாய் உள்ள கயிலை மலையானே! உன்னை போற்றுகிறேன்.
விளக்கஉரை
மருந்து – அமுதம்
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி – தன் முயற்சி இல்லாமல் இறைவன் தானே வந்து ஆட்கொண்டு அருள் புரிந்த விதம் பற்றிய குறிப்பு.
‘தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி’ – தேவ லோகத்தையும், சுடு காட்டையும் சமமாக பாவிப்பவன் எனும் பொருள் பற்றியது
பூம்பாவாய்! பராக்கிரமும், கோபமும் தன் இயல்பாக உடைய இராவணனின் தோள்களை நெரித்து உகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலை எனும் கபாலீச்சரத்தில் அமர்ந்து உள்ளவனுக்கு, இடை வடிவமான பண்ணோடு பாடும் சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் / யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் ஆகிய பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டு மகிழாமல் செல்வது முறையோ?
விளக்கஉரை
தண்ணா – வெம்மையைச் செய்யும்; ‘தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை’ – குளிர்ச்சி பொருந்திய, தமிழை வளர்க்கிற பாண்டி நாட்டையுடையவனும் எனும் வரிகளுடன் மாற்றுப் பொருள் கொண்டு சிந்திக்கத் தக்கது.
கண்ணார் – பகைவர்
தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகியோர் பதினெண் கணத்தினர் என்று மற்றொரு குறிப்பில் காணப்படுகின்றது.
முன் காலத்தது விழா – அட்டமிநாள் விழா; தற்காலத்தில் சித்திரைப் பௌர்ணமி; ‘கடம் மட்டமிநாள்’ – அடர் அட்டமி நாள் – அடர் எனும் சொல் பூவிதழ் எனும் பொருளோடு இணைந்து எனக் கொண்டால் முழுமை பெற்ற (இரண்டு) அட்டமி நாள்; ஆக மொத்தம் 16 எனவே சித்திரை பௌர்ணமி எனவும் கொள்ளலாம்; கடலாடுதல் சித்திரை நிலவில் நிகழும் என்பதாலும், அவ்விழா குறித்து எழுதப்பட்டதாகவும் இருக்கலாம்.
உடையவனே! உன் அடியார்களில் சிலர் உன்னிடத்தில் இருந்து உன்னுடைய அருளைப் பெற்றார்கள். அடியவனாகிய நானோ அழிவில்லா துர்நாற்றமுடைய பிணத்தைப் போன்று வெறுப்பினால் வீணே மூப்படைகின்றேன். அவ்வாறு இருந்தும் இளகாத மனம் உடையவனாகிய என்னுடைய கொடுமையான வினைகளை நீக்கி, அடியேனுடைய உள்ளத்தில் உன்னுடைய கருணையாகிய கடல் பொங்கும் வண்ணம் இடைவிடாது உருகும்படி அருள் புரிவாயாக.
விளக்கஉரை
பிணத்தின் – வெறுப்புக் காரணமாக உடம்பை பற்றிய சொல் ‘பிணம்
ஐம்புல நுகர்ச்சியின் காரணமாக உலகில் காணப்படுகின்ற பல பொருள்கள், கருத்தில் முற்றுப் பெற்று நினைக்கின்ற பலதெய்வங்களை வழிபடுதல், பிறரால் போற்றப்படுகின்ற திவ்ய தலங்களில் வாழ்தல், பெருகி ஓடும் நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் மற்றும் அவற்றால் வரும் பயன்களுடன் நுகர்ச்சி, உண்ணும் உணவு, உணரும் உணர்வு, உறங்கும் உறக்கம், கருதப்படும் அளவான பொன் முதலிய செல்வங்கள் ஆகியவை திருவருள் அம்மையாகிய சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.
விளக்கஉரை
சாம்பவி சக்கர வழிபாடு எல்லாப்பயனையும் தருதல் பற்றி கூறப்பட்டப் பாடல்
தானாகக்காணும் கனகம் – பொன் பெற்றபிறகு அனைத்தும் உண்டாகும் என்பது பற்றி.
காரிகை – சாம்பவி
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சிவனுக்குத் தத்புருட மந்திரம் எந்த உறுப்பாகும்? முகம்
நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று தனி உற்ற கேவலம் தன்னில் தான் ஆகி நினைவுற்று அகன்ற அதீதத்து உள் நேயம் தனை உற்றிடத் தானே தற்பரம் ஆமே
பத்தாம் திருமுறை- திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
நனவுக் காலத்தே ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, மருள் என்னும் ஐந்தும் செய்படாது அகல ஆருயிர் தனித்து நிற்கும் தனிநிலை புலப்படும். அவ்வாறு தன்னில் தானாக நின்று அகன்ற அந்நிலையில் உணர்வுக்கு உணர்வாய் விளங்கப்படும் பொருளான சிவபெருமான் திருவடியினைத் திருவருள் நினைவால் கொள்ள அந்த உயிர் தற்பரசிவமாய்த் திகழும்.
விளக்கஉரை
நாலொன்று – ஐந்து: கலை, வித்தை, அராகம், புருடன், மாயை.
நீ மனம் மகிழ்ந்து என்னிடம் வராமல் இருப்பின் என் உயிரையும் விட்டுவிடுவேன்; அரைக்கண நேரமும் நின்னைப் பிரிந்து யான் (உடல்/உயிர்) தரித்திருக்க மாட்டேன்; இதனையும் உன் மேல் ஆணையாக உரைக்கின்றேன். தீய நெறியினை உடையவர்கள் பேசுவதை இன்றுவரை கேட்டதுபோல் இனியும் அவர்களுடைய பயனில்லாத துன்பம் தரும் சொற்களை அவர்கள் அருகினில் இருந்து கேட்டு அவற்றை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்; உணவு மற்றும் உறக்கங்களையும் நான் இனி விட்டொழிக்கின்றேன்; நீ, என்னுடைய மன இயல்பை நன்கு அறிந்ததால், மனத்தால் வரும் துன்பங்களையும், சொல்லால் வரும் துன்பங்களையும் உடம்பால் வரும் துன்பங்களையும் வகை செய்து எவ்வாறு விரித்துரைப்பது? அவ்வாறு உனக்கு வகுத்து உரைப்பது என்ன பயனைச் செய்யும்?
விளக்கஉரை
அருள் வழங்க இறைவன் வராவிட்டால் உயிர் விடுதல் உறுதி என எடுத்து இயம்பியது
ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா – உன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா என்று மாற்றுக. சொற்றொடரை இருமுறைக்கு மேல் எழுதும் வழக்கம் தமிழ் மொழியில் இல்லாது இருப்பினும், தனது நிலையை அழுத்தமாக பதிவு செய்வதன் பொருட்டு மூன்று முறை ‘உன்மேல் ஆணை’ என்று பாடியிருக்கிறார்.
அரைக்கணமும் நினைப் பிரிந்தே இனித் தரிக்க மாட்டேன் – திருவருட் சூழலில் நின்று அரை நொடிப்பொழுது பிரிந்தாலும், உலகியல் மாயை படர்ந்து அறிவை மயக்கி மாற்று நெறியில் செலுத்தும்.
கோணை நிலத்தவர் பேசக் கேட்டதுபோல் இன்னும் குறும்பு மொழி செவிகளுறக் கொண்டிடவும் மாட்டேன் – உயிர் புற உணர்வோடு இருக்கும்போது உலகத்தவர் பேசும் பேச்சுக்களைக் கேட்டு, மனம் மாயா மயக்கிற்கு உள்ளாகும் என்பது பற்றியது.
திருமாலின் மகளான வள்ளியின் தனங்களோடு தனது அங்கமும் சேர்ந்து இருக்கும் படி, திருமுக அழகுடன் திருத்தோள்களால் அவளை அணைத்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்து, அருமை வாய்ந்த மயிலுடனும், வேலாயுதத்துடனும் இந்தம்பலம் என்ற ஊரில் மகிழ்ந்து ஆனந்தமாக அமர்ந்த பெருமாளே, திமில் எனும் பறையும், முருடு எனும் பலவிதமான மத்தள வகையும் ‘திந்திந் திமித் திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோ செகண செகண செக செம் செம் செகக்கண’ என தாளத்துக்கு ஏற்ப ஒலிக்கவும், ஆதிசேஷனின் முடிகள் வரை நீண்டதான அண்டங்களும் பிளந்து போகும்படி மிக்க பேரொலியை எழுப்பி, வெற்றிச் சின்னங்களான சங்கங்கள் முழங்க, அசுரர்கள் சண்டையிட்டு மடிந்த போர்க்களத்தில் தேவர்கள் ஒன்று கூடி மலர்களைக் கொண்டு அங்கு பொழிய, அருமை வாய்ந்த கோழிக் கொடி எங்கும் சிறப்பாக விளங்க, திருமாலும், பிரமனும், முனிவர்களும், அண்டங்களும் பிழைத்து உய்ய வேலாயுதத்தைச் செலுத்திய வேலவனே, குற்றம் இல்லாத, 1008 இதழ் தாமரை வடிவம் கொண்ட சஹஸ்ராரதில் இருந்து சங்க நாதம் ஒலிக்க, வேதங்கள் என்றும் சாத்திரங்கள் என்றும் சொல்லப்படும் மறைகளால் அறியப்படாது செழித்து விளங்க கூடியதும், அசைவற்றதுமான அபூர்வமான ஆகாச வெளி எனும் அவ்விடத்தில் எவராலும் அவ்விடத்தின் உண்மைத் தன்மையை அறிய முடியாதவாறு, உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் ஆகி உருக் கொண்டுள்ள அகராதி 51 அக்ஷரங்கள் ஆகி, அனைத்து லோகங்களுக்கும், ஆறுகளுக்கும், அண்டங்களுக்கும் முதன்மை பெற்றதாய், செந்நிற கிரணங்களை வீசும் பேரொளியை எல்லா இடங்களிலும் கண்டு, முதல், நடு, மற்றும் தாமரைவடிவமானதும், யோகியர் தன் மயமாய் நின்று தியானிக்கும் உயர் நிலையான துரியத்தில் சந்திர ஒளி போல் பரவுவதும், பொன்னொளி பொன்ற நிறமுடையதும், ஸ்படிகம் போன்ற வெண்மை நிறமான சுத்த வாயிலைக் கொண்டதுமான ஆகாய வெளியில், சுழி முனை நாடியின் உச்சியில், பஞ்ச இந்திரியங்களும் இன்பம் பெறக் கூடியதாய் அமுதம் போல் விளங்கும் சிவ யோக நிலையை உனது கருணையினால் அறியும்படியான வழியை யான் அடைவதற்கு, பார்வதியின் குமரனே, குமர குருவே என்று பல முறை கூற, முதிர்ந்து கனிந்த பக்தி நிலை வர, செயல் செய்வதற்கான திடம் எனப்படும் இளமையைத் தந்து, உன் திருவடியில் என்னை இணைக்க அருள்வாயாக.
விளக்கஉரை
பெரும்பேர்கண்டிகையில் இருந்து கிழக்கே செய்யூர் வழியில் உள்ளது இத்தலம் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடலில் யோக மரபு பற்றிய குறிப்புகள் பல இருப்பதாலும், அம்பலம் என்ற சொல் சிற்சபையை குறிப்பதாலும், தச தீட்சையில் பல குறிப்புகள் இருப்பதாலும், பூத்தாக்காலாயிரத்தெட்டின் வாசி பூங்கமலத் திருவடியை பூசை செய்யே (அகஸ்தியர் ஞானம்) – உண்மையான குருவினை சரண் அடையும் போது அவர் கற்றுத் தருவதில் இவையும் அடக்கம் என்பதாலும் குருமுகமாக ஆழ்ந்து அறிக.
தீ ஏந்திய கையை கொண்டு, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி உள்ளவனே, நிலம், நீர், தீ, காற்று, நீண்டவானம் எனும் ஆகாயம் என்னும் ஐந்துமாகி உள்ளவனே, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் மற்றும் மாயோன் ஆகிய திருமால் இருவரும் போற்றி நின்ற பொழுதில் நெருப்பாகி தோன்றியவனே, கற்பகத் தரு போன்றவனே, அடியேனையும், `அஞ்சதே` என்று சொல்லி அருள் புரிவாயாக.
விளக்கஉரை
இத்தலத்தில் இறைவர் ‘கற்பகநாதர்’ ஆதலின் ‘கற்பகமே` எனும் சொற்றொடர். ஆறாம் திருமுறையில் ‘கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்றும் பாங்கோடு வைத்து சிந்திக்கத் தக்கது.
அஞ்சலென்னே என்பதை `அஞ்சாதி` என்று சொல்லி அருள் புரிவாயாக என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது. ‘அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன …அஞ்சாதி யாதி அகம்புக லாமே’ எனும் திருமந்திரப் பாடலின் படி அஞ்செழுத்து சிவன் இருப்பிடம் இத்தலம் ஆகவே அஞ்செழுத்தாக சிவன் இத்தலத்தில் உறைகின்றான் என்றும் பொருள் தோன்றும். கற்றறிந்தோர் பொருள் கொண்டு உய்க.
விண்ணார் மலர்ப்பொழில் சூழ்காமி மாமலைமேலமர்ந்த தண்ணார் மதிபுனை வேணியன் ஆபதுத்தாரணன் மேல் பண்ணாப் பாடிய மாலைக்கு மாமுகன் பாதமும் நீள் கண்ணாறிரண்டுள கந்தன் பொற்பாதமும் காத்திடுமே.
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் – 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
விண்ணில் உள்ள தேவர்கள் மலர் சொரியும் இடமாகவும், சோலைகள் சூழ்ந்ததும், பொன் போன்ற உயர்ந்ததுமான பெரிய மலைமேல் அமர்ந்தவனும் குளிர்ச்சியான சந்திரனை தனது திருமுடியில் சூடியவனும் ஆன ஆபதுத்தாரணன் மேல் பண்ணால் இறைவனுக்கு ஆரம் போன்று பாடிய மாலைக்கு பெரிய முகத்தை உடைய கணபதி பாதமும், நீளமான பன்னிரெண்டு கண்களை உடைய கந்தன் பொற்பாதமும் காத்திடும்.
விளக்கஉரை
இது காப்புச் செய்யுள்.
ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.
குரு அருளோடும் திரு அருளோடும் ஒவ்வொரு பாடலாக பதவுரை எழுதப்பட இருக்கிறது. இந்த முயற்சியும் வெற்றி பெற என் குருவின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
அழிவில்லாத எழில் படைத்த ஒற்றியூர் அரசே, போற்றுகின்றவர் எல்லாருக்கும் பொதுவாய் நின்றவனே, இன்று இருப்பவர் நாளை இல்லாதவர்களாக மறைகின்றார்களே, இதற்கு நாம் என்ன செய்வது என நினைந்து மனம் திடுக்கிட்டு இங்கும் அங்கும் சென்றும் நின்றும் தளர்கின்றேன்; நான் சிறியவர்களுக்குள் சிறியவன் ஆனதலால் செய்யக்கூடியது என்ன? நன்மைதரும் நின்னுடைய நாடகமாடுவதைப் போன்ற இரண்டு மலர்போன்ற நின் திருவடிகளை யான் அடைவதற்கு, நீ விரும்பி அருள் செய்வாயாக.
விளக்கஉரை
கதி – நடை; செயல். ‘சிவகதி’ – சிவ நடையுடன் மாற்று கருத்து இல்லாமல் ஒத்து. அஃதாவது சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி, ‘அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்’ என மாற்றி உரைக்க.
‘உணர்வு ஆகி’ என்பது ஞான அனுபவத்தை வழங்கி, அவ்வழிகளில் இன்பம் பெறப்பட்டதை குறித்தது
‘போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – போற்றுவோர் தூற்றுவோர் அனைவர்க்கும் பொதுவாகிய கடவுள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆயினும் `யாதோர் தேவர் எனப்படுவார்க் கெல்லாம் மாதேவன் அல்லால் தேவர் மற்று இல்லையே` எனும் திருநாவுக்கரசர் வரிகளும், `யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்` எனும் அருணந்தியாரின் திருவாக்கும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
அறியா தன்மையாலும், அதுபற்றி நிற்றலும் இன்மையால் ‘நான் செய்வது என்னை’ எனும் வரிகளும் ‘நான் சிறியருட் சிறியேன்’ எனும் வரிகளும்
நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயல்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.
விளக்கஉரை
கதி – நடை; செயல். ‘சிவகதி’ – சிவ நடையுடன் மாற்று கருத்து இல்லாமல் ஒத்து. அஃதாவது சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி, ‘அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்’ என மாற்றி உரைக்க.
‘உணர்வு ஆகி’ என்பது ஞான அனுபவத்தை வழங்கி, அவ்வழிகளில் இன்பம் பெறப்பட்டதை குறித்தது.
இறைவன்சுயம்புமூர்த்தி. லிங்கத் திருமேனியராக சிறிய ஆவுடையாருடன் கிழக்கு நோக்கிபடி, அம்பாள் சிவனாரின் வலப்புறம் தனிச் சன்னதியில் நின்ற கோலம் – கிழக்கு நோக்கி திருக்காட்சி
அகத்தியர் பூஜித்த ஆதிஜோதிர்லிங்கம் – இத்திருகோயிலின் எதிரே உள்ளமலையின் கீழ்பகுதியில் (மலை வேறு பெயர்கள் – ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஔஷதகிரி) (கங்கை, உபமன்யுமுனி, வியாக்ரபாதர், அக்னிவழிபட்டது.-2கிமீதூரம்).
கைகளில் தாமரையும் , நீலோத்பலமும் ஏந்தியுள்ள வடிவில் அம்பாள்
திரைக்குப்பின் சுவாமியும் அம்மனும் இருப்பதால் நந்தி நேர் எதிர்திசையில், நேரான தலையுடன் கூடிய அமைப்பு
திருமால், பிரம்மசாரியாக வந்து (மாணி – பிரம்மசாரி) மகாபலியிடம் மூன்றடி மண்கேட்டு அவனையழித்த பழிதீர வழிபட்ட தலம்
சிவனார் கருவறை முன்பு எப்போதும் திரை (காரணம் 1 ) – தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதாசர்வகாலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதாலும், கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதாலும் தனிபள்ளியறை இல்லாமல் – அவர்களுக்கு காவல்புரிவதற்காக 11 ருத்ரர்களில் ஒருவரான ”பீமருத்ரர்” திரைச்சீலை வடிவில்
சிவனார் கருவறை முன்பு எப்போதும் திரை (காரணம் 2 ) – மகாவிஷ்ணு மாணி எனப்படும் பிரம்மச்சாரியாக வழிபடுவதற்கு காவலாக பீமருத்ரர் திரையாகஇருப்பது
வழிபாட்டில் முதல்மரியாதை பீமருத்ரருக்கு.
வாமனாவதார வரலாறு சிற்பங்களுடன் கூடிய மூலவர் கருவறைவாயில்
பஞ்சாட்சரம்பொறிக்கப்பட்டுள்ள நடராஜர் திருமேனி
வடநாட்டு ருத்ராட்ச வணிகனாகிய அத்ரியிடம் திருடர்கள் கொள்ளையடிக்கமுற்பட, இறைவன், அத்ரியை திருடர்களிடமிருந்து காத்து உதவிபுரிந்தத் தலம். எனவே இத்தலம் ‘உதவி ‘, இறைவன் ‘உதவிநாயகர்’, இறைவி ‘உதவிநாயகி ‘
கோஷ்டதுர்க்கைமகிஷன்இல்லாமல்கதையுடன்திருக்காட்சி
நாகத்தை கையில் ஏந்திய தோற்றத்துடன் தட்சிணாமூர்த்தி
சூரியனால் உண்டாக்கப்பட்டு அவரே வழிபாடு செய்த கோயில்
சோழர்காலக் கட்டமைப்பிலான கோயில்
தலம்
திருமாணிக்குழி
பிற பெயர்கள்
வாமனபுரி , இந்திரலோகம் , பீமசங்கர ஷேத்திரம்
இறைவன்
வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், உதவி மாணிகுழி மகாதேவர், மாணிக்கவரதர்,
இறைவி
அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி
தல விருட்சம்
கொன்றை
தீர்த்தம்
ஸ்வேத தீர்த்தம் (சரஸ்வதியின் அம்சமாக) , கெடில நதி (லட்சுமிதேவியின் அம்சமாக), தென்பெண்ணை (பாகிரதி அம்சமாக )
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்
திருமாணிகுழி அஞ்சல், வழி திருவகீந்திரபுரம்
கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம். PIN – 60740104142-274485, 04142-224328, 99420-94516, 93626-38728, நடராஜன் : 8940730140
வழிபட்டவர்கள்
திரிசங்கு மகாராஜா , அரிச்சந்திரன்,
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
திருத்தலம்
1. கடலூர் – பண்ருட்டி சாலையில் திருவகீந்திரபுரம் – > சுந்தரர்பாடியை -> சாத்தாங்குப்பம் -> கெடிலநதிப்பாலத்தைக் கடந்து சென்று -> திருத்தலம்
2. கடலூர் – குமணங்குளம் சாலை வழியாக
3. கடலூர் – நடுவீரப்பட்டி சாலை வழியாக
கடலூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 207 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 17 வது தலம்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 77
திருமுறை எண் 6
திருமாணிகுழி எனும் திருத்தலமானது, சந்தன மரங்கள், கரிய அகில் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து வந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தாங்கிக் கொண்டு வரும் கெடில நதியின் மோதும் நீரானது பாயும் வயல்களில் நறுமணம் கமழ்வதுடன் கூடியதும், மலரும் நிலையிலுள்ள (அஃதாவது மொட்டான) மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரம்மச்சாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீல கண்டனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமும் ஆகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 77
திருமுறை எண் 9
திருமாணிகுழி எனும் திருத்தலமானது, பிரமனும், திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும், ஊமத்தை, கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குவதும், மகரந்தப்பொடிகள் நிறைந்த மல்லிகை, குருந்து, மாதவி, செருந்தி, குரவம், புன்னை என்று மணம் கமழும் மலர்கள் நிறைந்த தலமும் ஆகும்.
மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம் ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
பதவுரை
மூர்த்தி, தலம், கடல் போன்ற கங்கை (தீர்த்தம்) ஆகியவற்றால் ஆனவனாகவும், அவனை அறியாதவனாக இருப்பினும் உயிர்களுக்கு நித்தமும் நன்மையை அளிப்பவனாகவும், அறியாமையை அகற்றி (தன்னை) அறிப்பவனும் ஆகிய எவனோ அந்த கருணை கணபதியினை புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
விளக்கஉரை
சைவ நெறியில் திருத்தலங்களைப் பற்றி சொல்லும் போது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது என்று கூறுவது வழக்கம். அவ்வண்ணமே கணபதி எல்லா வகையாலும் சிறப்புடையவன் என்பதை கூறவே ‘மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தம்’ என்ற அமைப்பு.
அறிந்தறியாத் திறத்தினாலும் – தன்னை முன்னிலைப்படுத்துகையில் அவனை அறியாவிட்டாலும் அருளுவான் எனவும், கணபதியை முன்னிலைப்படுத்துகையில் அவனை அறியாமல் இருப்பினும் அருளுவான் எனவும் பொருள்படும். ஆன்றோர் பெருமக்கள் அறிந்து உய்க.
இறந்தவர்களது எலும்புகள் பலவற்றையும், எலும்புடன் கவசம் போன்ற மண்டையோடு பலவற்றையும் தாங்கி நிற்பவனும், பேரொளி ததும்பும் மணிமுடி தாங்கியவனுமான சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற அவன், தேவர் பலர்க்கும் மணிமுடி தரித்த மேலாலவர்களுக்கும் முதலானவனாய் இருந்தான். அது மட்டும் இன்றியும், அவன் அவற்றைத் தாங்காது ஒழிவனாயின், மாயா காரியப் பொருள்கள், சிவபெருமான் கைப்பற்றுதல் இன்றி உலகில் நிலைபெறாது அழிந்து ஒழியும்.
விளக்கஉரை
எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்துதல் – தான் ஒருவனே அழிவில்லாத முழுமுதல்வன் என்பதைக் காட்டப் பெறும். ஏனைய மண்ணவர் விண்ணவர் அனைவர்களும் பிறந்து இறக்கும் உயிரினங்களே என்பதையும் அதுவே காட்டும்.
காரணமாயை என்றும் அழிவினை அடையாது, சிவபெருமான் தாங்குதலில் நிற்கும் என்பது ஆகும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
வேக வடிவம் என்பது என்ன? கால சம்ஹாரர் போல் உயிர்களுக்கு கொடியவரைத் தண்டிக்கும் திருமேனி
ஒளி குறையாத மணியுடன் கூடிய திருநீற்றைப் மார்பினில் பூசியவரும், அழகியதான திருவீழி மிழலையில் திருமணக் கோலத்தினை கொண்டவரும், குவளை மலர் மாலையை அணிந்த உமை அம்மைக்குத் தலைவர் ஆனவரும், கொடு கொட்டி ஆடும் ஆடலுக்கு ஏற்ற தாளம் உடையவரும். செழுமை உடைய கயிலாயத்தில் உள்ள எம் செல்வரும், தென் திசையில் உள்ள அதிகை வீரட்டத்தை உகந்து அவ்விடம் சேர்ந்தவரும், (துன்பத்தினால்) ஒளி குறைந்து வருந்துபவர்களைக் காப்பாற்ற மாட்டாரோ என்ற ஐயம் அனைத்தும் தீர்த்து அவர்களை ஆட்கொள்ளுபவராகிய எமது ஆமாத்தூர்த் தலைவர் எல்லா வகையிலும் அழகியரே.
ஐயுறவு தீர்ப்பார் – `துன்பங் களைவரோ களையாரோ` என்னும் ஐயம். இத்திருப் பாடலின் இறுதியில் ` ஐயுறவு தீர்ப்பார்` என்றதால், நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது உரை பொருள். மேலும், அடியவர்களை மாயையில் ஆழ்த்தும் ஐம்புலன்களது உறவை அறுப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்
வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி யேத்தப் பூதங்கள் பாடி யாட லுடையவன் புனித னெந்தை பாதங்கள் பரவி நின்ற பத்தர்க டங்கண் மேலை ஏதங்க டீர நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு, தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழ, பூதங்கள் எனப்படும் உயிர்வர்க்கங்கள் பாட, கூத்தாடுதலை உடைய தூயவனாகிய எம் தலைவர், தம் திருவடிகளை முன்நின்று துதித்த அடியார்களுடைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதூர் எனும் திருவிடைமருதூர் திருத்தலத்தை இடமாக கொண்டுள்ளார்.
தான் அழிவது மட்டும் அல்லாமல், தனது தன்னதிகாரத்திற்கும் அழிவை உண்டாகும் சிவதத்துவமான சுத்த மாயையின் வழியில் வினைகள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகே ஆராய்வதற்கு எதும் இல்லாமலும், காட்சி அளவை எவ்வாறு இயல்பானதோ அது போல அதி சூக்கும வாக்கினை உடையவன் தன்னைக் கண்டு இனி புறக்காட்சி இல்லை எனும் நிலையில், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம் ஆகிய இம்மூன்றன் தொகுதி ஆன பர சரீரம் அல்லது அதி சூக்கும சரீரத்தின் உள்ளே விளங்கும் நாதத்திற்கு இலக்கணத்தையுடையதுமான சூக்கும வாக்கானது தன்நிலை அழிந்தப்பின் பைசந்தி, மத்திமை, வைகரியாய் வெளிப்படும். பெரும் தவத்தினால் அதனை அனுபவ வாயிலாக காணப்பெறுவார்க்குச் சுத்தமாயா புவனத்தின் கண் எனப்படும் அபரமுத்தி இயல்பாக உண்டாகும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
யோக வடிவம் என்பது என்ன? தட்சிணா மூர்த்தி போல் உயிர்களுக்கு ஞானத்தை வழங்கும் திருமேனி
இறைவனுடன் ஒன்றாகி கலத்தல் என்பது எளிதான செயலல்ல; அது பேச்சால், வெறும் ஞானத்தால் வருவது அல்ல; கோடியிலே ஒருவன் மட்டுமே அதை குறிக்கோளாகக் கொண்டு அந்த நோக்கத்தை அடைவான்; ஆன்மாக்களின் ஆணவத்தை அழிப்பதை குறிக்கும், காலை தூக்கி ஆடும் தில்லை நடனம் எனும் தில்லைக் கூத்தினை ஆகாயம் எனும் வெட்ட வெளியில் பார்த்து அதை நாடு; எல்லா காலங்களிலும் அதை விரும்பிக் கொள்; அவ்வாறு கொண்டப்பின் எமன் ஏது? அனைத்து வினைகளும் நாசமாகும். மனதில், அனுராகம் என்றும் அன்பு என்றும் பொருள்தரும் மிக உயர்ந்த உச்ச நிலை ஆகிய அன்புநிலை கொள்ளும் போது, பச்சை மயில் ஏறி, வாசியின் மூலம் பரவினேன்.
விளக்கஉரை
சுப்ரமணியர் அகத்தியருக்கு உபதேசம் செய்தது
இறைவனின் தில்லை நடனம் அவனது ஐந்தொழில்களை, படைப்பு, காப்பு, லயம், மறைப்பு, அருளல், என்ற ஐந்து செயல்களை சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொன் பதிக் கூத்து, பொன் தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து எனும் கூத்து வடிவில் குறிக்கிறது.
இத் தில்லைக் கூத்தை குண்டலினி யோகத்தின் உச்சிநிலையில் காண்பதைக் குறிக்கும்.
வாலை அல்லது குண்டலினியின் நிறம் பச்சை என்றும், குண்டலினி யோகத்தின்போது மூச்சு சுழுமுனையில் பயணிப்பதால் அவ்வாறு பச்சை நிறம் தோன்றும் என சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். (மேல் விபரங்கள் குருமுகமாக அறிக)
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
போக வடிவம் என்பது என்ன? கல்யாண சுந்தரர் போல் உயிர்களுக்கு இன்பத்தை வழங்கும் திருமேனி
(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
அம்மையானவள், அனைத்து உயிர்களாக நிற்கின்றவளும், எல்லாப் பொருள்களிலும் அதன் தன்மையில் தானே ஆகி நிற்பவளும், தம் இயல்பு தன்மையினால் எங்கும் நிறைந்திருந்து ஈன்றவளாகவும் நிற்பாள். ஆகையால் பக்குவம் உடையவன் அவளை வணங்கி அவ்வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆன பயன்களை எய்துவான்.