அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 12 (2019)


பாடல்

நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர் 

கருத்து –  நவாக்கரி வித்தையானது ஸ்ரீவித்தையோடு ஒத்த சிறப்புடையதாய்ப் பயன்தருதல் பற்றி பொது வகையிலும், சிறப்பு வகையிலும் கூறப்பட்ட பாடல்

பதவுரை

நவாக்கரி சக்கர வழிபாட்டினால் வேண்டுவார் வேண்டுவதைத் தருகின்ற சிவனது திருவருள் கைவந்து உதவுவதால் துன்பத்தைத் தர இருந்த அந்தத் தீய வினைகளை ஓட்டாமல் வலியதான வினைகள் நோக்காது விட்டு ஓடிவிடும்; மேலும் இச்சக்கர வழிபாட்டினால் பெரிய நன்மையைத் தருவதாகிய அனுபவ ஞானமும், பஞ்சபூதங்களுடன் கூடியதும் 64 கலைஞானம் எனப்படும் 64 விதமான தந்த்ரங்கள் கூறும் வித்தை ஆனதும்  ஒன்றிய நிலையிலே வேறுவேறாக தோன்றிய அவைகளெல்லாம் ஒன்றாகவே இணைந்து விடுகின்றதுமான கலாஞானமும் வலிமை பெற்று நிலைத் தன்மை அடையும்.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • `சிரமம்` என்பது குறைந்து `சிரம்` என்றானது என்றும் அது வாய்த்து அகற்றிடும் என்ற பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. வினைகளைத் தரும் ப்ரம்ம முடிச்சானது தலை தொடங்கி செயலாற்றுவதால் அந்த வினைகளை முழுவதும் அகற்றும் எனவும் அதன் தொடர்ச்சியாக அண்ட உச்சியில் சோதி தோன்றும் எனவும் கூறலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 1 (2019)


பாடல்

தந்தையார் தாயா ருடன்பி றந்தார்
     தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
     மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின்
     திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
     என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து –  பூவுலகில் பெறும் சொந்தங்கள் நிலையானவை அல்ல எனவும் திருஐந்தெழுத்தே நிலையான விடு பேற்றினை அருளும் என்பதை விளக்கும் பாடல்

பதவுரை

ஒருவருடைய தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார்கள் யார்? மனைவி யார்? புத்திரர் யார்? இவர்கள் எல்லோரும் தமக்கு எவ்வாறு தொடர்புடையவர்கள்? பூலவுலகில் பிறந்த பின் அவர்களோடு தொடர்பு கூடியதா அல்லது அவர்கள் இறந்த பின் அவர்களோடு தொடர்பு பிரியாது கூடிநிற்க கூடுவோ? என்றெல்லாம் சிந்தை உடையவர்களே!  பொய்யானதும் மாயையானதும் ஆன இத்தொடர்பு கொண்டு ஏதும் மகிழ வேண்டா; உங்களுக்கு ஒன்று உறுதியாக சொல்வதை கேட்பீராக; சந்திர ஒளிவீசித் திகழ்வதும், கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் திருமுடியை உடைய எம்தந்தையும் தலைவனும் ஆன அவன் திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை ஓதியவாறே துயில் எழுபவர்களுக்கு  பெரியதானதும், நிலை பேறும் உடையதுமான வீடுபேறு கைகூடும். ஆகவே அதனைச் செய்யுங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 31 (2019)


பாடல்

ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறட்டு, அதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று, ‘சிவாயநம’ என்ன,
கூறு இட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  திருவைந்தெழுத்துச் செபத்திற்கு ஆவதொரு சிறப்புமுறையும் அதன் பயன் வீடுபேறு என்றும் கூறும் பாடல்

பதவுரை

மேற்கூறியதான திருவம்பல சக்கரத்தில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களில் நாற்பத்தெட்டாம் எழுத்தான `ஸ்` என்பதுடன் ஆறாம் எழுத்தான `உ` என்பதையும் பதினான்காம் எழுத்தான `ஔ` என்பதையும் ஏறச்செய்து, `ஸு` எனும் எழுத்தை  `ஸௌ` என்றும் ஆக்கி, அவற்றின் இறுதியில் முறையே விந்துவையும் நாதத்தையும் சேர்த்து ஒலிக்கப் பண்ணிப் பின்பு, `சிவாயநம` என்று உச்சரித்தால் (அஃதாவது ஓம் ஸும் ஸௌ: சிவாயநம) என உச்சரித்தல்) மூன்று மலங்களும் விலகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 30 (2019)


பாடல்

திக்கமர் நான்முகன் மாலண்ட மண்டலந் தேடிட
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழி மிழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

திசைக்கு ஒன்றாக நான்கு திக்குகளையும் நோக்குகின்ற முகங்களையுடைய பிரமனும், திருமாலும் முறையே மேலுள்ள அண்டங்கள், கீழுள்ள அண்டங்கள் என முடி, அடி தேடி காணமுடியா வண்ணம், ஒன்றின் மேற்பட்டதாய் எழுந்து நிற்கும் தீப்பிழம்பாய் நின்றவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான்; அவர் சொக்கு எனப்படுவதான ஒருவகைத் திருக்கூத்து ஆடியும், பாடியும் பூதகணங்கள் சூழ விளங்கும் திகம்பரர் ஆவார். அப்படிப்பட்டவராகிய சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்பதை ஓதவல்லவர்கள் சிவபுண்ணியம் செய்தவர்கள் ஆவார்.

விளக்க உரை

  • திக்கு அமர் நான்முகன் – திக்கைப் போல் பொருந்திய நான்கு முகங்களையுடைய பிரமன்
  • சொக்கம் – ஒரு கூத்து .
  • நக்கர் – ஆடையில்லாதவர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 25 (2019)


பாடல்

முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  சிவன் உயிர்கட்கு அருள் செய்யும் திறம் கூறும் பாடல்

பதவுரை

அடியவன் ஆகிய எனக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்தருளிய சிவன் எப்படிப்பட்டவன் எனில் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள் நீங்கப் பெற்றார்க்கு அவைகள் நீக்கம் பெற்ற காலத்தில் தனது இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவைகளைச் செய்து கண்முன் நின்றே அருளை வழங்குவான்; வினையில்லாத நன்மை பொருந்திய அடியார்களுக்கு உயிர்க்கு உயிராய் இருந்தே அருளை வழங்குவான்;  யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அந்த அருள் நிலையினின்றும் நீங்கி வழுவாதவாறு பாதுகாப்பான்; அதன் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவான்.

விளக்க உரை

  • முன்னின்று அருளுதல் – ஆகமங்கள் வரையறை செய்தபடி பிரளயாகலர், சகலர் ஆகியவர்க்கு அருளும் முறை (வினையில்லாத உயிரினத்தார் விஞ்ஞான கலர்); விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர் ஆகிய மூவகை உயிர்களுக்கும் மூவகையாக அருளுதலை நியமாக ஆகமங்கள் கூறும்
  • உலகு – உயிர்தொகுதி
  • நடுவுயிர் – உள்ளுயிர்
  • நன்னின்ற – அருள் பெறுதலுக்கு வினைகள் தடைகள் இருத்தலின் பொருட்டு வினைகள் முடிவுறும் காலத்தில் நன்மை விளையும் என்பதை விளித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 23 (2019)


பாடல்

மூலம்

நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே

பதப்பிரிப்பு

நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத்தோதி நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற
ஏவணங்கு இயல்பாம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

நாவினால் தொழக்கூடியதான இயல்பினை உடைய திருவைந்தெழுத்தை ஓதி, நல்லவராகவும், நல் இயல்புகளை அளிக்கும் பசுவிடம்  இருந்து பெறப்படுவதான விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவ சின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவருமான  குலச்சிறை நாயனார் வழிபாடு செய்யும் தலமும், இயல்பாகவே பகைவரது அம்புகள் பணிந்து அப்பால் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவ பக்தனாகும்படி செய்தருளிய திருச்சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமும் ஆனது  திருஆலவாய் என்னும் திருத்தலம்.

விளக்க உரை

  • கோவணம் பூதி என்பதை கோவணம், விபூதி ஆகிய சிவச்சின்னங்களை அணிந்து என்று பல இடங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விபூதி தயாரிப்பில் பசுவிடம் இருந்து பெறப்படுவதான விபூதி முதன்மையானது என்பதால்(கோ+வணம்)  கோவணம்  எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 18 (2019)


பாடல்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் எமனுடை துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

உள்ளத்தினில் அன்பு கொண்டு மனதால் நெகிழ்ந்து அதன் காரணமாக கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்தி நெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

விளக்க உரை

  • காதல் – அன்பு
  • மல்கி – மிகுந்து
  • ஓதுதல் – சொல்லுதல், செபித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 16 (2019)


பாடல்

களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிரும் உருக்கொண்ட தென்னே – அளறுதொறும்
பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்

பதினொன்றாம் திருமுறை – நம்பியாண்டார் நம்பிகள் – விநாயகர் இரட்டை மணிமாலை

கருத்துசிவனின் மகனான விநாயகர்  திருமேனி தன் சிறப்புக் கூறல்.

பதவுரை

சேற்றினை உடைய வயல்களை சார்ந்ததும், நிலை பெற்றதான நீர் நிலைகளில்  ஆரல் எனும் மீன் வகைகளை கொண்டதுமான திருநாரையூர் எனும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் திருநாரையூர்ச் சிவபெருமான் மகன் களிறு முகம் உடையவன் ஆனவனாகவும், அவனது காயம் ஆகிய திருமேனி செந்தீயைப்போல ஒளிவிடுகின்ற நிறத்தைக் கொண்டிருப்பது என்னே வியப்பு

விளக்க உரை

  • அளறு – சேறு
  • ஊர் ஆரலை – நாரை உண்கின்ற நீர் நிலை
  • ஆரல் – மீன் வகை
  • படுகர் – நீர் நிலை
  • மன் – நிலை பெற்ற

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 14 (2019)


பாடல்

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் எமனுடை துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

ஈசனையே எக்காலத்திலும் நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்ததும், பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சக தன்மை உடையதும் ஆன மனதை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்த செய்வதும் ஆன திருவைந்தெழுத்தே மனமானது உறங்கும் பொழுதும், மனம் உறங்காமல் விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் நினைத்துப் போற்றுங்கள்.

விளக்க உரை

  • போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல் என்பதோடு கூட்டித் துஞ்சும் பொழுதினும், துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்றும் விளக்கம் பெறும்
  • நெஞ்சகம் – மனம்
  • நைந்து – உருகி
  • நெஞ்சக நைதல் – அன்பினால் குழைதல்
  • வஞ்சகம் – ஈசன் சிந்தனை விடுத்து சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிற இடங்களிள் செலுத்தி வஞ்சித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 11 (2019)


பாடல்

திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்
திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி
ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்
பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர் 

கருத்து –  ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளியவனே, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ள்வர்களுக்கு தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையின் காரணமாக உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி அடியேன், உலகியலில் இருந்தும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

விளக்க உரை

  • தேவர்க்குத் தேவர், காரணக் கடவுளர் – அயனும், மாலும்
  • நாமமாவது – திருவைந்தெழுத்து

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 9 (2019)


பாடல்

என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து –  திருநாவுக்கரசர், சோதி வடிவான ஈசன் தம்மிடம் எழுந்தருளியதை கூறும் பாடல்

பதவுரை

நெஞ்சமே! மின்னல்போல விளங்குகின்ற நீண்ட சடையை உடையவனும், மறை ஆகிய வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவனும், செம்மையான நெற்கதிர்கள் பொருந்திய வயல்கள் பொருந்தி வயல் உடைய திருச்சேறையுள் செந்நெறியில் நிலைபெற்ற ஒளிவடிவமானதான சோதியும் ஆகிய பெருமான் நம்மிடம் வந்து நிலையாக வந்து எழுந்தருள  எத்தகைய சிறந்த தவம் செய்தாய்.

விளக்க உரை

  • திருச்சேறை திருதலத்து தேவாரப்பாடல்
  • என்ன – எத்தகைய
  • வேத விழுப்பொருள் – வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவன் .
  • மன்னு – நிலைத்து விளங்குகின்ற .
  • நம்பால் – நம்மிடத்து
  • வைக – நிலையாக வந்து எழுந்தருள

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 8 (2019)


பாடல்

எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புக ழாரூ ரரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து –  திருவாரூர், அரநெறியை உள்ளத்தில் கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நல்ல தவம் உரையர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு எய்தாது என்பதை விளக்கும் பாடல்

பதவுரை

நெஞ்சமே! ஆன்மாவைப் பிணித்துள்ள பாசத்தினை ஏற்படுத்துவதும் உலக் ஈடுபாட்டினை தருவதாகிய பந்தமும், முடிவில்லா புகழை உடையவனும், முக்தி பேற்றை அளிக்கும்  வீடுமாயிருக்கும் பரம்பொருளாகிய திருவாரூர்ப் பெருமானுக்கு உரியதான முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி சிந்தையினும், சிரத்தினும் தங்குதற்கு மேலாகிய தவங்கள் பலவற்றுள் எந்தத்தவத்தை நீ செய்தாய்?

விளக்க உரை

  • திருஆரூர் திருத்தலம் பற்றிய தேவாரப் பாடல்
  • எந்த மாதவம் செய்தனை – வியப்புமொழி
  • பந்தம் – முடிச்சு, கட்டு, பாசம், ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம், உறவு, சம்பந்தம், பற்று, பாவின் தளை, முறைமை, கட்டுப்பாடு, மயிர்முடி, சொத்தைப் பராதீனப்படுத்துகை, மதில், அழகு, கைவிளக்கு, தீவட்டி, தீத் திரள், உருண்டை, பொன், நூலிழை, பெருந்துருத்தி
  • அந்தமில் புகழ் – முடிவில்லாத புகழ்
  • ஆரூர் அரநெறி -ஆருர்த் திருக்கோயில்களில் பூங்கோயில் அரநெறி, பரவை யுண்மண்டளி என்பவற்றுள் ஒன்று
  • சிந்தை – உள்மனம் . நிலையான நினைப்பு உண்டாக்கும் அடி மனம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 7 (2019)


பாடல்

தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டு அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை
நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து –  ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

தேன் உடைய மலர்களை பறித்துக் கொண்டு வந்து திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்து, அன்பு கொண்டு அவரை அமரச் செய்து கோ எனும் பசுவிடத்தில் இருந்து பெறப்படுவதாகிய பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அதை உவந்து ஏற்று வானில் உலவும் பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவன் ஆனேன்

விளக்க உரை

  • ஏத்தப்பெற்று – முற் பிறவிகளிற் செய்த நல்வினைகளின் பயனை இப் பிறவியில் பெற்றேன்
  • தேன் உடை மலர்கள் – வண்டுகள் உடைத்தமையால் மலர்ந்த பூக்கள்
  • திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா
  • திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா.
  • அன்பினால் அமர ஆட்டி – தம் அன்பாம் மஞ்சனநீர் ஆட்டி; இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
  • நான் அடைந்து :- நான் கெட்டு அஃதாவது தற்போதம் அற்றுச் சொல்லுகின்ற அருளாளர்கள்  கூறும் ` நான் ` குற்றமாகாது  எனும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 4 (2019)


பாடல்

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

நெஞ்சே! குற்றமில்லாத மணிகளும் முத்துக்களும் நிறைந்ததும், அதனைக் கொண்டுவந்து சேர்க்கும் நிலையான  காவிரி ஆற்றினால் சூழப்பட்டதுமான திருவலஞ்சுழி இறைவனைப் போற்றி பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் நாம் செய்த நல்வினைப் பயன்களில் நீ  எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்.

விளக்க உரை

  • தரளம் – முத்து, உருட்சி, நடுக்கம்
  • வாயாரப் பன்னுதல் – பாடுதல் – வாக்கின் வினை
  • ஆதரித்தல் – மனத்தின் தொழில்
  • ஏத்துதல் – காயத்தின் செயல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 3 (2019)


பாடல்

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே

தேவாரம் – ஐந்தாம்  திருமுறை – திருநாவுக்கரசர் 

கருத்து –  சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

நூறுகோடி பிரமர்கள் அழிக்கப்பட்டார்கள்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப் பெருகும் கங்கையாற்றின் மணலைவிட எண்ணிக்கை அற்றதான  இந்திரர்கள் நிலையும் அவ் வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் இறைவனானவனும் ஈசன் எனப்படுபவனும் ஆன சிவபெருமான் மட்டுமே.

விளக்க உரை

  • எண்ணிக்கை அற்ற அளவில் உயிர்கள் படைக்கப்பட்டன; அதில் பிரம்ம முடிச்சினை கண்டு உணர்ந்து பிரம்ம தன்மை அடைந்த நூறு கோடி பேர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள். என்று மொழி பகர்வார்களும் உண்டு. யோக மரபினை முன்வைத்து பிரம்மனுக்கு உரித்தான சுவாதிட்டானம் வரை கண்டு உணர்ந்தவர்களும், திருமாலுக்கு உரித்தான் மணிபூரகம் வரை கண்டு உணர்ந்தவர்களும் அதற்கு மேல் செல்ல இயலாமல் அழிக்கப்பட்டார்கள் என்று கூறுவதும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • நொந்துதல் – அழிதல், தூண்டுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 2 (2019)


பாடல்

பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் 

கருத்து –  சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஊழிக் காலமாகிய சங்காரத்தில் இந்த உலகினை பெரிய கடல் சூழ்ந்து ஊழிவெள்ளம் ஏற்படப் பிரம்மன் இறப்பான்; அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும்,  வினைகளை ஒப்பு நோக்கி உயிர்களுக்கு வினைப்பயன்களை தருபவன் ஆகியவனும், கரிய கடல்போன்ற நிறமுடையவனும் ஆகிய திருமாலுடைய உடலையும் சுமந்து கொண்டு, அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனான  எம் பெருமான சிவன் கங்காள வடிவம் கொண்டு ஒடுங்கிய உலகம் மீண்டும் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான்.

விளக்க உரை

  • கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் (திருமந்திரம்) – எல்லாவற்றையும் ஒடுக்கியபின் அவை ஒடுங்கிய சாம்பலைப் பூசுகின்ற என்னும் குறிப்பு பற்றியது.
  • மீளவரும் கடன் நின்று – ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து;
  • எம் இறை – எம் இறைவன்
  • நல்வீணை வாசிக்கும் – அழகிய வீணையை இயம்பும் இசையின் சுருதியியல் கெடாதவாறு அமைந்தது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 1 (2019)


பாடல்

மூலம்

இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு
பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர்
மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே

பதப்பிரிப்பு

இருநிலனது புனலிடை மடிதர எரிபுக எரியது மிகு
பெருவளியினில் அவிதர வளிகெட வியனிடை முழுவதும் கெட
இருவர்கள் உடல் பொறையொடு திரியெழில் உருவுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம் அமர்தரு பரமனே

முதல் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

சங்காரம் எனும் பேரூழிக்காலத்தில் பெரியதான இந்த நிலமாகிய மண் புனல் என்படும் நீரில் ஒடுங்க, நீரானது நெருப்பு எனும் எரியில் ஒடுங்க, நெருப்பு வளி எனும் காற்றில் ஒடுங்க, காற்று ஆகாயத்தில் ஒடுங்க பரந்துபட்டதான இந்த உலகமும் உலகப் பொருள்களும் அனைத்தும் அழிய, இறுதியில் மால் அயன் இவர்களுடைய உடலாகவும் இருந்து (அந்த தன்மைகள் எனவும் கொள்ளலாம்) திரிகின்ற இறைவன் முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன்; வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசைக்கும் மறைவனம் எனும் தலத்தில் அமரும் பரமன் ஆவான்.

விளக்க உரை

  • பிரபஞ்ச உற்பத்தியில் முதலில் ஆகாயமும், பின் காற்றும், நெருப்பும், நீரும் கடைசியில் நிலமும் தோன்றுதல் என்பது சைவ சித்தாந்தத்திலும் இன்னும் பல சைவ ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. சங்காரத்தில் இவை வரிசை மாறாமல் அதே வரிசையில் ஒடுங்கப்படுதல் நினைவு கூறத்தக்கது. பெரு வெடிப்பு கொள்கையினை (Big bang theory) முன்வைத்து பிரபஞ்சம் சுருங்கி விரிவடைவதை அறிவியல் கொண்டு ஒப்பு நோக்கி உணர்க.
  • இனமலர் – கூட்டமான மலர், அறுபதம் – வண்டு. ( மலரில் வண்டு ஒடுங்கும் ஒடுக்க முறை )
  • இருங்கடல் – இருமை = கருமை. இருள், இரவு/இரா, இருட்டு, இரும்பு, ஈரல் போன்ற கரியது இருங்கடல். காலாபாணி என்பர் வடமொழியில். காழ் = கருமை. காளபாணி/காலபாணி என்பது ‘மணிநீர்’. மணிநீர் = கரியநீர், பண்பாகுபெயராய் கடல். நல் வினை, தீவினை முன்வைத்து அந்தப் பதிவுகளே பிறப்பு எடுக்க வைக்கிறது; அதற்கு மண்ணில் தோன்ற வேண்டும் என்ற பொருளும் உரைக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 21 (2019)


பாடல்

கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த
     கரமுரஞ் சிரநெரிந் தலற
அடர்த்ததோர் விரலால் அஞ்செழுத் துரைக்க
     அருளினன் தடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள்
     பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
     மிழலையா னெனவினை கெடுமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துபாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதி இராவணன் தன்  துன்பத்தில் இருந்து நீங்கியது குறித்தப் பாடல்.

பதவுரை

கோபம் கொண்டவனும், வாளேந்தியவனும் அரக்கன் ஆனவனுமான இராவணன் முன்னொரு காலத்தில் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்டபோது அவன் கரமும், சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவரான சிவபெருமான் இராவணன் தன் தவறு உணர்ந்து அஞ்செழுத்தை உரைத்து யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார்; அவ்வாறான சிவபெருமான் நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்களும் அவர்களுடன் வேதம் பயிலும் சிறுவர் குழாமும் ஓதும் மறைகளை ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓதும் படியும் விரிந்த சோலைகளையுடையதும் ஆன திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகிறார். அந்த திருத்தலத்து இறைவனின் திருநாமத்தை ஓத, வினையாவும் கெடும்.

விளக்க உரை

  • விடைக்குலம் – வேதம் பயிலும் சிறுவர் குழாம்
  • கடுத்த – சினத்த

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 15 (2019)


பாடல்

மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும்
தோளும் ஆகமும் துவளு முன்னூல் முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்

பன்னிரெண்டாம் திருமுறை – சேக்கிழார் – திருநாவுக்கரசு நாயனார் புராணம்

கருத்துதிருநாவுக்கரசரை திருக்கயிலாய மலையில் இருந்து திரும்பிச் செல்ல உரைத்தலும், திருநாவுக்கரசர் அதற்கு மறுதலித்ததையும் கூறும் பாடல்.

பதவுரை

‘இந்தக் கயிலாய மலையிலிருந்து திரும்பிச் செல்லுதலே  உன்னுடைய கடமை’  திகழும் தோள்களை உடையவரும்,  மார்பினினில்  துவள்கின்ற முப்புரி நூலையுடைய முனிவரான இறைவர் உரைத்தார்; என்னை ஆள்பவனாகவும், எனக்கு தலைவனாகவும் இருக்கும் சிவபெருமான்  வீற்றிருக்கும் திருக்கயிலையில் இருக்கும் காட்சி காணாமல், என்றேனும் மடியப்போகும் இந்த உடலால் தமக்கு எதுவும் நட்டம் எதுவும் இல்லை, ஆதலால் இவ்வுடலுடன் கயிலைக் காட்சி காணாமல் திரும்பிச் செல்லமாட்டேன் என்று திருநாவுக்கரசர் மறுத்தார்

விளக்க உரை

  • திருநாவுக்கரசர் திருவையாற்றில் கயிலை காட்சி கண்ட நாள் (ஆடிமாதம் அமாவாசை திருநாள்)
  • ஆகம் – உடல், மார்பு, மனம், சுரை
  • மாளுதல்  – சாதல், அழிதல், கழிதல், இயலுதல்
  • மீளும் – கயிலையில் இருந்து திரும்பிச் செல்லுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 8 (2019)


பாடல்

விரித்த பல்கதிர் கொள்சூலம், வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒன்டிரு மணிவாய் விள்ள
சிறிதருள் செய்தோர் சேரிச் செந்நிறச் செல்வனாரே

தேவாரம் – நான்காம் திருமுறை –  திருநாவுக்கரசர்

கருத்து – சிவபெருமான் கால பைரவர் வடிவம் தாங்கி வந்ததை குறிப்பிடும் பாடல்.

பதவுரை

திருச்சேறை எனும் திருத்தலத்தில் செம்மை நிறம் கொண்டு அதை இருப்பிடமாக உடையவனாக  சிவபெருமான், விரிந்த சூரியனை போன்று பல கதிர்களை கொண்ட ஒளியுடைய சூலம், இடி முழக்கம் போல சப்தம் எழுப்புவதான டமருகம் (உடுக்கை), தலையில் கங்கை ஆகியவை கொண்டு அழகிய கால பைரவர் வடிவம் தரித்து வேழ வடிவில் வந்த அசுரனின் தோலை உரித்தார்; அதை கண்டு அஞ்சிய உமையவளை நோக்கி தனது மணிவாய் மலர்ந்து தோன்றுமாறு அட்டகாசமாய் சிரித்தார்.

விளக்க உரை

  • தேவாரத்தில் கால பைரவர் பெயர் வரும் ஓரே பாடல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உய்க.
  • விள்ளுதல் – மலர்தல்; உடைதல்; வெடித்தல்; பிளத்தல்; பகைத்தல்; மாறுபடுதல்; தெளிவாதல்; நீங்குதல்; சொல்லுதல்; வெளிப்படுத்துதல்; வாய் முதலியன திறத்தல்; புதிர்முதலியனவிடுத்தல்
  • வெடி – துப்பாக்கி அல்லது குண்டு வெடி;வேட்டு, ஓசை, இடி, கேடு, அச்சம், நிமிர்ந்தெழுகை, தாவுகை, நறும்புகை, பட்டாசு, கள்

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!