
பாடல்
தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
நல்லதிரு உளம் அறியேன் ஞானநடத் திறையே
ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்
கருத்து – நலம் புரியும் உலகில் உண்மையை அறியாது ஏன் பிறந்தேன் என்று எண்ணுதலைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
உண்மையில் தவம் செய்யாத யான், தவம் செய்யும் அறிஞர் போல நடித்துக் கொண்டிருக்கின்றேன்; உணர்வில்லாத சடப் பொருள் போல இதுநாள் வரையில் இருந்து ஒழிந்தேன்; பல்வகைப் பிறப்புக்களுக்கு ஏதுவாகிய வினைகளைச் செய்து நல்ல பாத்திரத்தில் ஊற்றுவதற்கு உரிய பாலை நிலத்தில் ஊற்றும் கடையவனாக ஆயினேன்; பயன்படாததும், வஞ்சம் உரையதும், கற்பாறை போன்றதுமான மனமாகிய சுமந்து திரிகின்றேன்; இவ்வாறு செய்தல் அவமானத்தைத் தரும் என்றுகூட யான் அறியத் தகுவதறிதல் இல்லேன்; ஞானத்தினை தரும் அன்பு செலுத்துதலையும் அறியேன்; மெய்யான அன்பு கொண்டு, திருநடம் புரியும் இறைவனாகிய உன்னுடைய திருவடித் தொண்டர்களுக்கு அணுவளவும் உதவாதவன்; இத்தகைய யான் நாளும் புதுமையான இந்த உலகில் பிறந்த காரணம் அறிகிலேன்; பிறப்பித்த உன்னுடைய திருவுள்ளக் குறிப்பு யாதோ என்று தெரியேன்.
விளக்க உரை
- தவம் – உற்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், தீங்கு செய்வன செய்யாதன என்ற வேற்றுமையின்றி ஏனைய உயிர்கட்குத் தீமை செய்யாமை
- தருக்குதல் – பெருமிதம் கொள்ளுதல்
- சடம் – அறிவில்லாத பொருள்
- பவம் – பிறப்பு
- பவம் புரிவேன் – பல்வகைப் பிறப்புக்களுக்கு ஏதுவாகிய வினைகளைச் செய்வேன் என்பது பற்றியது
- மனத்தைப் பாறை என்பதால் அதனைத் தாங்கும் தம்மை, “சுமந்து உழல்வேன்” என்று கூறுயது.
- மனப்பாறை – வஞ்ச நினைவால் உறைவு கொண்டு இரக்கமின்றி இருப்பது பற்றியது
- அவம் – வீண், பயனில்லாத செயல்களைச் செய்தல்