அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – எஞ்சல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  எஞ்சல்

பொருள்

  • குறைவு
  • அற்றொழிகை
  • பொறுக்குமளவிற்கு சிறுகுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அனைய
  மனத்தினேன் அனைத்தினும் கொடியேன்
தஞ்சம்என் றடைந்தே நின்திருக் கோயில்
  சந்நிதி முன்னர்நிற் கின்றேன்
எஞ்சலில் அடங்காப் பாவிஎன் றெனைநீ
  இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே
கஞ்சன்மால் புகழும் ஒற்றியங் கரும்பே
  கதிதரும் கருணையங் கடலே.

2ம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

கருத்து உரை

சிவபெருமானே, பிரமனும் திருமாலும் புகழ்ந்து ஏத்தும் திருவொற்றியூரில் உள்ள சிவக்கரும்பே, சிவகதியை நல்கும் கருணைக் கடலே, வஞ்சம் புரியும் வினைகளுக்கு ஒரு கொள்கலம் போன்ற மனமுடைய யான் எல்லா வகையிலும் கொடியவனாவேன்; எளிமைக்கேற்ற புகலிடமென்று நினைந்து நின் திருக்கோயிலை அடைந்து நின் சன்னிதிக்கு முன்பு நிற்கின்றேன்; பொறுக்குமளவிற்கு அடங்காத பாவியெனக் கருதி இகழ்ந்து என்னை விலக்கினால் யான் என்ன செய்வேன்?

விளக்க உரை

  • மிக்க பெரும் பாவியென்று இகழ்ந்து ஒதுக்காது அருள் செய்தல் வேண்டுமென்று முறையிட்டவாறு
  • வஞ்சகவினை – ஈஸ்வர அனுபவமே பெரிது என்று எண்ணி உயிர்கள் பிறக்கும் போது கொண்ட நினைவு மறந்து மாயைக்கு உட்பட்டு வினைகளை அனுபவித்து மீண்டும் மீண்டும் பிறத்தல் கண்டு இவ் வார்த்தை. வினைகள் நிரம்பப் பெற்றதால் உடல் கொள்கலன்
  • கதி தரும் கருணையங் கடலே – மாயைக்கு உட்பட்ட உயிர்கள் அனைத்தையும் அவற்றின் குறையைக் காணாமல் பக்குவப்படுத்தி அருள்கூர்ந்து சிவகதி தருதலால் பொருட்டு
  • அனைத்திலும் கொடியேன் –  மனம் மொழி மெய் என்ற மூன்றினாலும் கொடியவன் எனும் பொருள் பற்றி
  • ‘பிரமனும் திருமாலும் புகழ்ந்து ஓதும்’ என்பதையும் ‘எஞ்சலில் அடங்காப் பாவி’ என்பதையும் ஒப்பு நோக்கி தெய்வங்களுக்கும், வினை கொண்ட உயிர்களுக்கும் ஒன்றாகவே அருள்கிறான் எனும் பொருள் பற்றி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அமர்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அமர்தல்

பொருள்

  • விரும்புதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

சோலைகளால் சூழப்பட்டு  இருக்கும் பூவணத்தில் உறையும் எம் புனிதனார் அடியார்களுக்கு மனக்கண் முன்னர்,  கல்லாலின் நிழலில் அமர்ந்த காட்சியும் ,  பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மேம்பட்ட மறைகளை ஓதும் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் அகிய நால்வரருக்கு  வேத நெறிகளைச் சொற்களால் விளக்காமல் மோனநிலையிலிருந்து சொல்லிய காட்சியும், உடலைச் சுற்றி  பாம்புகளை  அணிந்த காட்சியும்  கையினில் மான் ஏந்திய காட்சியும் , அறத்தின் உண்மையை உணராத  காலனை ஒறுத்த காட்சியும் , தம்மை நினையும் அடியவர்பால் ஐவகை நிறத்தோடு விரும்பி வழங்கும் காட்சியும் , யாவரும் வெறுக்கும் புலாலின் சுவட்டினை உடைய எலும்பினாலாகிய அணிகலன்களும் காட்சி வழங்கும்.

விளக்க உரை

ஐவகை – ஐந்து நிறம் . படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றல்கள்  இந்த  ஆற்றல்கள் ஒருங்கி நிற்குமிடத்து , ` ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் ` என்னும் ஐந்து திருமுகங்களாய் நிற்கும் . தனித்தனி பிரிந்து நிற்குமிடத்து , ` மனோன்மனி , மகேசுவரி , உமை , இலக்குமி , வாணி ` என்னும் தேவியராய் நிற்கும்.  இறைவனும் அவர்களையுடைய , ` சதாசிவன் , மகேசுவரன் , உருத்திரன் , மால் , அயன் ` என்னும் தேவர் களாய் நிற்பன் .  –  ‘நிறங்கள் ஓர் ஐந்துடையாய்‘ எனும் மாணிக்கவாசகரின் திருவாசகம் யாண்டும் சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அனந்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அனந்தல்

பொருள்

  • தூக்கம்
  • மயக்கம்
  • மந்தவொலி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சினந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று
நினைந்ததும்அற்று, நினையா மையுமற்று, நிர்ச்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே! கயிலாயத்தனே!

பட்டினத்தார்

கருத்து உரை

கயிலாயத்தில் அமர்ந்தவனே, மாயைக்கு உட்பட்டு இயல்பாக உள்ளத்தில் எழும் கோபத்தை அறவே நீக்கி, ஆசையை அகற்றி, புற, அகச் செய்கைகள் அனைத்தையும் துறந்து, மனதில் சேர்த்து வைத்திருந்த நினைவுகளையெல்லாம் நீக்கிவிட்டு, நினைவு கொள்ளாமை எனும் நிலையையும் அற்ற, சிந்தனைகள் எதுவும் இல்லாமல் தன்னந்தனியானாய் அமர்ந்து  ஆனந்த நித்திரை தரும் மயக்கத்தில்  சிவசிந்தனையோடு எப்போதும் இருப்பது எப்போது ஐயனே!

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அறிதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அறிதல்

பொருள்

  • உணர்தல்
  • நினைத்தல்
  • மதித்தல்
  • அனுபவித்தல்
  • பயிலுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ
தேடி எனையறியேன் தேர்ந்தவகை – நாடியரன்
தன்னாலே தன்னையுங் கண்டு தமைக்காணார்
என்னா மெனாஅறிவா ரின்று.

திருநெறி 9 – 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்

கருத்து உரை

நரம்பு முதலிய தாதுக்களின் வேறுபாடின்றி தானாய் வருகின்ற உயிரானது நாடியோ, எலும்போ, நரம்புகளின் கண் ஓடிக்கொண்டிருக்கும் கோழையோ(ரத்தம்), எனத் தேடி அதில் கண்டறியும் வகையினை அறியமாட்டேன். இவை எல்லாவற்றிலும் அடங்கியும், அவ்வாறு இல்லாத பொருளாகவும் நிற்பவனாகவும், தன்னில் தன்னைக் கண்டப்பின் அது அல்லாத பொருள்களிலும் உறையும் உயிர்ப்பொருளில் கலந்தும் அவ்வாறு தானே கண்ட காட்சி இல்லாத பொருளில் வழிபாடு செய்யத் தக்கவனாகவும்நிற்பதைக் காணாதவர்கள் அவனை அறியாதவர்கள். எனவே எல்லா இடங்களிலும் எல்லாப் பொருள்களிலும் அவனை வழிபடுக எனுமாறு.

விளக்க உரை

புறத்தில் உள்ள பஞ்சகோசமாகவும், அதனுள் உறையும் உயிராகவும், அவ்வாறு இல்லாத பொருள்களிலும் உறைபவனாக இருத்தலினால் எல்லா இடங்களிலும் அவனை வழிபடுக எனும் பொருளில். அஃதாவது சகலமும் ஈஸ்வரப் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நித்தன்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நித்தன்

பொருள்

  • அருகன்
  • கடவுள்
  • சிவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை, அம்மை சிவகாம சுந்தரி நேசனை, எம் 
கத்தனைப் பொன்னம்பலத் தாடும் ஐயனைக் காணக்கண் 
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றனவே!

பட்டினத்தார்

கருத்து உரை

எனக்கு அம்மையப்பராக ஆனவனை, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அதிபதியாகவும் இருப்பவனை, கடவுளாகிய ஈசனை, சிவகாமி சுந்தரியின் நேசத்திற்கு உரியவனாகவும் இருப்பவனை, அனைத்து உயிர்களுக்கும் கர்த்தாவாக இருப்பவனை, பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும் ஐயனைக் காணும் கண்கள் எத்தனைக் கோடி யுகம் தவம் செய்து இருக்கின்றனவோ!

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பங்கயம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பங்கயம்

பொருள்

  • தாமரை
  • தாமரை வடிவினதாகிய ஓர் ஆயுதம்
  • நாரை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பரமனை மதித்திடா பங்கயாசனன்
ஒரு தலை கிள்ளியே யொழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவோம்.

கந்த புராணம் – ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்து உரை

தாமரை மலரின் மீது ஆசனத்தைக் கொண்டவனாகிய தேவர் உலகம் சார்ந்தவராகிய பிரம்மா, ஈசனை மதித்திடால் கர்வம் கொண்ட பொழுதினில் ஒரு தலையை கிள்ளி அதனால் பெறப்படும் இரத்தினை கைகளில் கொண்டும் அவர்தம் கர்வத்தை அழித்தும் (அத்துணை கோபம் உடையவராக இருப்பினும்) உயிர்கள் மீதுபரிவும் உடையவராகிய வடுகனைப் போற்றுவோம்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நாடுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நாடுதல்

பொருள்

  • சிந்தித்தல்
  • தேடுதல்
  • ஆராய்தல்
  • விரும்புதல்
  • தெரிதல்
  • ஒத்தல்
  • அளத்தல்
  • கிட்டுதல்
  • நினைத்தல்
  • மோப்பம்பிடித்தல்
  • அளவு படுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன்
என்னை நாடிய என்னுயிர் நாதனே
உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி
தன்னை நாடுவன் தன்னந் தனியனே.

தாயுமானவர்

கருத்து உரை

பொன்னும், அந்த பொருளால் வாழ துணையாக நிற்கும் மாதரும், அவர்களோடு கூடிவாழும் வாழ்க்கைக்கு நிலைக்களமாகிய இப்பூமியும் நிலையான பொருள்கள் என்று சிறிதும் எண்ண மாட்டேன்; எளியவன் ஆயினும் என்னைக் கருதி என்னை நாடி வந்து எனக்கு அருள் செய்த இன்னுயிர்த்தலைவனாகிய உன்னையே இடையறாது உள்ளன்போடு எண்ணுவன்; உன்னைவிட்டு நீங்காத உன் திருவருளாகிய தூயநிலையாயுள்ள பெருவெளி ஒளியினை தனியே இருந்து பெரிதும் சிந்திப்பேன்.

விளக்க உரை

  • பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் – (மண், பொன், பெண்) ஆசைகள் விலக்கி எனும்பொருளில்
  • என்னை நாடிய – அருளார்களை இறை பற்றுதல் ஞானத்தின் உச்சநிலை. ‘தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்’ எனும் மாணிக்க வாசகரின் வரிகள் யாண்டும் சிந்திக்கத் தக்கவை.
  • தன்னந் தனியனே – மாயைக்கும் கர்மாக்களும் உட்பட்ட மனிதர்கள் வாழ்வு வினை வழியது. வினையை கடந்து போகையில் எவரும் துணை வரார் எனும் பொருளில்.
  • இறைவன் ‘என்னை நாடிய’ என்ற பின்னும் ‘உன்னை நாடுவன்’ என்பது ஏன்? – ஈசன் அருள் புரிய எண்ணினாலும், வைராக்கியம் கொண்டு கர்மவினைகளை விலக்கி மாயையை விலக்க வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கோடு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கோடு

பொருள்

  • ஒலிப்பு
  • (ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
  • (தோலில் ஏற்படும்) சுருக்கம்
  • குன்று, மலை, மலைப்பகுதி, முகடு, மேட்டு நிலம்
  • கொம்பு, தந்தம், எயிறு
  • மரக்கொம்பு
  • வளைவு, கோணல், நடுநிலை நீங்குகை, நடுநிலை பிறழ்தல்
  • கொம்புக் குறியீடு (கெ,கே போன்ற உயிர்மெய் எழுத்துகளில் வரும் குறியீடு)

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆடுகாட்டி வேங்கையாய் அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.

சிவவாக்கியர்

கருத்து உரை

வேங்கையை பிடிக்க ஆங்காங்கே ஆட்டினை கட்டி வைத்து பிடிப்பது போல் எனக்கு செல்வத்தைக் காட்டி எனது மதியினை மயக்குதல் ஆகுமோ? வளைந்த தந்தம் உடைய யானையை கொன்று உரித்து அதனை தோலாக போர்த்திக் கொண்ட வையகத்தின் அரசனே, வீடு பேறாகிய முக்தி எனில் என்னவென்று காட்டி என்னை எனக்கு வெளிப்படுத்துவாயாக.

விளக்க உரை

  • மாடுகாட்டி என்னைநீ மனைப்படுத்தலாகுமோ‘ என்று சில இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மூலத்தில் அவ்வாறு இல்லாததால் ‘ மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோ’ என்பதே சரியான பாடல் வரியாகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – செய்ய

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  செய்ய

பொருள்

  • சிவந்த
  • செப்பமான

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டனன்;
ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டபின்
வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே

சிவவாக்கியர்

கருத்து உரை

செம்மையான தேங்காய் உள்ளே இளநீர் சேரும் காரணம் போல், ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது  போல் அமர்ந்து கொண்டான். அந்த ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது  போல் அமர்ந்து கொண்டப் பின் இந்த உலகத்து மனிதர்களிடம் நான் வாய் திறந்து பேசுவது இல்லை.

விளக்க உரை

  • மரத்தில் காய் எத்தனை உயரத்தில் இருந்தாலும், நீரானது மேலே சென்று இயல்பாக முயற்சிகள் இல்லாமல் அடைந்து விடும். அதுபோல் இயல்பாக என்னுள் ஐயன் அமர்ந்து கொண்டான்.
  • வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே – ஆகையால் மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் மட்டுமே பேசுகிறேன்.
  • மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் உரைத்த பாடல்களை மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் கேட்டு இப்பாடல்களை எழுதி இருக்கலாம். (இது என் தனிக் கருத்து)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – திருகு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  திருகு

பொருள்

  • முறுக்கு
  • பின்னு
  • பறி
  • முறுகு
  • மாறுபடு
  • முறுக்கு
  • கோணல்
  • சுரி
  • அணியின் திருகுமரை
  • மாறுபாடு
  • ஏமாற்றுப்பேச்சு
  • குற்றம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன்
   நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தரு கோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான்
   தரும் ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
   இரவுபகல் உணரவோர் சிந்தைத்
திருகு ஓட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன்
   றோஎன்னச் செய்யும் தேவே.

சிவஞானசித்தியார் – பரபக்கம் பாடல்

கருத்து உரை

ஒற்றைக் கொம்பினை உடையவன்; இரு காதுகளை உடையவன்; கன்னமதம், கைம்மதம், கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதயானையின் மதநீர் கொண்டவன்; நான்காவதான தொங்கும் வாயினை உடையவன்; ஐந்து கைகளை உடையவன்; வளைந்த ஓடும் ஆறு(கங்கை) பிறை நிலவு, கொன்றை மாலை சூடிகொண்டிருக்கும், நீண்ட தாழ் சடையுடையவன் நமக்கு தந்தருளிய ஒருவனாகிய யானை முகத்தினை உடையவரின்  பாதங்களை இரவு பகல் பாராது பேரன்போடு வணங்கி உணர்வோரின் சிந்தைத்  தரும் குற்றத்தை  நீக்கும்  பிரம்மனும், திருமாலும் கொடுக்கும் செல்வம்  எல்லாம்  ஒரு பொருளாக நின்று உணர்த்தி தருபவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – முன்னை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  முன்னை

பொருள்

  • பழமை
  • தமக்கை
  • தமையன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்- தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து

தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து உரை

இனி வரும் பிறவிகளை நீக்கும் பெரியோனும், தென் திசை அரசனும், திருப்பெருந்துறையை உடையவனும், பெருங் கருணையாளனும், வரும் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாய் இருப்பவனும் ஆகிய சிவபெருமான், நான் முன்செய்தவினைகள் இரண்டையும் வேரறுத்து எனக்கு எதிரே நின்றான்.

விளக்க உரை

சஞ்சீதம் எனும் இறந்த கால கர்மாக்கள், பிரார்ப்தம் எனும் நிகழ் கால கர்மாக்கள் ஆகியவற்றை அழித்துவிட்டான். அவ்வாறு அழித்து என் முன் நின்றான் என்பதில் இருந்து ஆகாமியம் எனும் எதிர்கால கர்மாக்கள் அழிந்து விட்டன என்பது மறை பொருள். (நல்வினை, தீவினை என்று தவறான பொருள் கொண்டு இடர்படுவாரும் உண்டு).

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கோமான்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கோமான்

பொருள்

  • அரசன்
  • கோ
  • மன்னன்
  • பெருமையில் சிறந்தவன்
  • பிரபு
  • குரு
  • மூத்தோன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்
திருவிரலா லுதைகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி யென்றேத்தும்
அருவரைசூ ழையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

எல்லாப் பக்கங்களிலும் கடல் உடையதாகவும் மற்றும் பெரிய மலைகளால் சூழப்பட்ட இலங்கை நகரத்து அரசனாகிய இராவணனை அவன் கர்வ எண்ணம் அழியுமாறு தனது திருவிரலால் அழுத்தி உதைத்தலாகிய செயலைச்செய்து அவன் செருக்கை அடக்கி மகிழ்ந்தவர் சிவமூர்த்தி. அவ்வாறான பெரிய கடலால் சூழப்பட்ட இந்நில உலகத்தவர் நந்தி என்று பெயரிட்டு வழிபடும், பெரிய மூங்கில் காடுகள் சூழ்ந்த ஐயாற்று எம்பெருமானுக்கு, அடியேன் அடிமையாகிக் (பிறவித் தளைகளில் இருந்து) தப்பினேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அகைதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அகைதல்

பொருள்

  • எரிதல்
  • ஒடிதல்
  • வருந்துதல்
  • தளிர்த்தல்
  • மலர்தல்
  • தாழ்தல்
  • காலந்தாழ்த்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மூலம்

பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.

பதம் பிரித்து

பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி
அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே

திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பிய அடியவனாக யான் துடித்தேன் அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேரமாட்டேன் அவர்களது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழியும்படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஈண்டு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஈண்டு

பொருள்

  • இங்கு
  • இவ்விடத்தில்
  • இம்மையில்
  • இவ்வாறு
  • இப்பொழுது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்

திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, உடல் வளர்ச்சியால் தடித்த மகன் செய்த தவறு செய்வது கண்டு தந்தை அவனை அடித்தால், உடனே தாய் அவ்விடம் போய் தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள்; தாய் அடித்தால், தன் கையில் பற்றிக்  கொண்டு தந்தை தன்னோடு அணைத்துக் கொள்வான்; திருநீறணிந்த திருமேனியை உடையனாக தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் தூயவனே, எனக்கு தந்தையும் தாயும் நீயாதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை வருத்தியது போதும்; இனி உன்னுடைய அருளால் என்னை அணைத்து ஆதரிக்க வேண்டும்.

விளக்க உரை

  • இனிமேல் இத்துன்பத்தைப் பொறுக்க மாட்டேன் எனும் பொருளில்
  • தடித்த மகன் – உடல் வளர்ச்சி மட்டும் பெற்ற ஒருவன் எனும் பொருளில்.( புற விஷயங்களில் மட்டும் வளர்ச்சி பெற்ற ஒருவன்)
  • அம்மைஅப்பன் – சிவன் – அம்மையும் அப்பனுமாகி (இரண்டாகவும்) எனும் பொருளில்
  • பிறவி ஆன்மாக்கள் மீது தாயும் தந்தையும் ஆகிய அம்மையப்பன் ஒத்த அன்புடையவர்.
  • அடித்தல் துன்ப நுகர்ச்சி, அணைத்தல் இன்ப நுகர்ச்சி. இரண்டும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. ஆதலால் ஒரு பகுதியை கண்ட எனக்கு மறுபகுதியை காணச் செய் எனும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இலாடம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இலாடம்

பொருள்

  • நெற்றி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
  திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதே
  உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி
  இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
  கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

எவராக இருப்பினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், அந்த திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து,  `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா,  அவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா’ என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இருக்க வேண்டும். இறைவன் வேறு, அடியவர் வேறு எனும் இருவேறு மனநிலையில் இல்லாமல் ஒரே மன நிலையில்  இறைவனிடத்தில் செய்யும் செயல்களையே அவ்வாறான அடியவரிடத்தும்   விரும்பிச் செய்ய வேண்டும். இவ்வாறு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் சிவனைக் காணலாம்.

விளக்க உரை

  • எவரேனும் – எவ்வகையானக் குற்றமுடையராயினும்.
  • திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்`. அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது குறித்தது. திருவேடம் தொழுதல் சிறந்து எனும் பொருள் பற்றி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நம்பான்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நம்பான்

பொருள்

  • ஆணிற்சிறந்தோன்
  • கடவுள்
  • சிவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும்
   தொழும்பனேன்
ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும்
   இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி
   வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு

கருத்து உரை

தில்லையில் நடம்பயிலும் சிவனே! நின்ற இடத்தும், அமர்ந்த இடத்தும், கிடந்த இடத்தும் நினைந்து, எழுந்த இடத்தில் தொழுகின்ற அடியவனாகிய நான், மனம் பொருந்தி ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்கவிடாமல் கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவைப் போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கவில்லை. இவ்வாறு நீ செய்யும் இச்செயல் உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமா?

விளக்க உரை

  • கன்றும், தாய்ப்பசுவும் என்றும் பிரியாது. ஆகவே நீ அவ்வாறு பிரியாது நிற்பாய் எனும் பொருள் பற்றி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாலாதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மாலாதல்

பொருள்

  • மிகப் பற்றுக் கொள்ளுதல்
  • மயங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆமயன் மாலரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமய னாளுந் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

திருமந்திரம் – நான்காம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

திருவருள் ஆணைபெற்றுத் தொழில்புரியும் பிரம்மன், மால், உருத்திரன், மகேசன் என்னும் இவர்கள் விரும்பும் நிலையினை. அருளவும் மிகவும் சிறப்புத் தன்மை பிரணவம் பொருந்திய ஒன்பது ஆற்றல்களும் ஒன்றுகூடவும், தீரா இன்பவடிவினனாகிய சிவபெருமான் திருநோக்கம் கொண்டனன். அத்தருணத்தில் இன்பமயமான ஆன்மா ‘தென்னாதெனா’ என ஒலித்து தேனுண்ணவந்து மொய்க்கும் ஆருயிர் வண்டினங்களின் நிலைக்களமாகிய ஒலிமெய் வடிவம் எய்தியது.

விளக்க உரை

  • அயன் மால் அரன் – மெய் (சுத்தவித்தை) யின்கண் உறைவோர். பிரம்மன் – மூலாதாரம், மால் – சுவாதிட்டானம், உருத்திரன் – மணிபூரகம், மகேசன் – விசுக்தி
  • மேற்கூறிய நிலை முதல் துவாத சாந்தம் வரை (9 நிலைகள்)
  • ஆன்மாவானது தேன் உண்டுகளிக்கும் ரீங்கார சப்தத்துடன் விளங்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இச்சித்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இச்சித்தல்

பொருள்

  • விரும்புதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச்
சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும்
மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே

திருநெறி 2 – சிவஞானசித்தியார்

கருத்து உரை

ஒருவனுக்குத் தன் கருத்திற்கு இயைந்த ஒரு கடவுளை மனம், மொழி மற்றும் மெய்களால் வழிபட்டு, சொல்லப்பட்டவாறு தீமைகளை விலக்கி,  வாழும் செயலாகிய அறம், விதிக்கப்பட்ட ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையனாய் சினம் முதலியவற்றை விலக்கி விளங்கும் ஒருவனுக்கு சிவபிரானே அத்தெய்வத்தினிடமாக நின்று அச்செயலை ஏற்றுக் கொண்டு பயன் உதவுவார்.

விளக்க உரை

எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அவ்வடிவாக இருந்து அருளுபவர் சிவன் எனும் பொருள் பற்றி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துஞ்சல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துஞ்சல்

பொருள்

  • மலரடி சேர்தல்
  • காலமாதல்
  • காலப்போக்கு
  • காலத்தின் நடை
  • இயற்கையான மரணம்;மூப்பு இறப்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

தேவாரம் – 3ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் திருவைந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சகத் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து காப்பாற்றியது திருவைந்தெழுத்தே.

விளக்க உரை

  • உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும் என்பது பொதுவாக சொல்லப்பட்டாலும் மாயையால் உலகில் வாழ்வு கொள்ளுதல் என்பது உறங்குதலுக்கு சமமாகவும், ஞான மார்க்கத்தால் உயர் நிலை அடைந்த பிறகு விழிப்பு நிலை என்பதும் பொதுக்கருத்து. (ஆன்றோரும், இறை அன்பர்களும் கருத்துரைக்க). ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் குறள் யாண்டும் சிந்திக்கத்தக்கது.
  • திருவைந்தெழுத்தை ஓதுவார் எமனால் துன்பப்படார் என்பது கருத்து.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மதலை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மதலை

பொருள்

  • மழலை மொழி
  • குழந்தை
  • மகன்
  • பாவை
  • பற்றுக்கோடு
  • தூண்
  • யூப ஸ்தம்பம்
  • வீட்டின் கொடுங்கை
  • பற்று
  • மரக்கலம்
  • கொன்றை
  • சரக்கொன்றை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புயல் உள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.

11ம் திருமுறை – இளம்பெருமான் அடிகள் – சிவபெருமான் திருமும்மணிக்கோவை

கருத்து உரை

நான்முகன் படைத்த தூண்களை உடைய மாடத்தில் இடப் பக்கத்திலுள்ள மலையில் பொருந்திய தெய்வத்தன்மையுள்ள தகழியில் மாலைக் காலத்தில் காணப்படுகின்ற சிவந்த மேகம் விழுந்த தேவருலகம், உயர்ந்த முத்தமாகிய பேரொளி. காற்று வீசினாலும் சிறிதும் அசையாத உன் பாத நிழல் அளியுமாறு வைத்த உச்சியின்மீது விளங்குகின்ற வளைந்த திங்களாகிய மலர்மாலையை நீ அணிந்ததன் காரணம் யாது?

விளக்க உரை

ஞான தீக்கை செய்யும் காலத்துக் குவளை மாலையைச் சூட்டுதல் மரபு.

 

Loading

சமூக ஊடகங்கள்

error: Content is protected !!