சைவத் திருத்தலங்கள் 274 – திருஆமாத்தூர்

தல வரலாறு(சுருக்கம் )/ சிறப்புகள் – திருஆமாத்தூர்

  • மூலவர், சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படும்  சுயம்பு மூர்த்தி
  • ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டதால் தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட, அவர் வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறியபடி பசுக்கள் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றத் தலம். (திரு+ஆ+மத்தூர்)
  • பசு பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திர பிறை போல் வளைந்த பசுவின் கால் குளம்பின் அமைப்புடம் கூடிய சுவடு
  • அகழி அமைப்பு கொண்ட கருவறை
  • பூதம் தாங்குவது போன்ற அமைப்புள்ள கோமுகம்
  • அன்னையவள் அபயகரம் ஒன்றும், தொடைமீது வைத்த மற்றொரு கரமுமாக மற்ற இரண்டில் தாமரையும் நீலோற்பலமுங் கொண்டு நான்கு கரங்களுடன் கூடிய திருக் காட்சி
  • அன்னையின் சாபத்தால் பிருங்கி முனிவர் வன்னிமர தலவிருட்சமாக ஆனத் தலம்
  • அண்ணன் தனது தம்பியை ஏமாற்றி சொத்து அபகரித்து பொய் சத்தியம் செய்து கர்வ மேலிட்டால் அன்னையை பற்றி தவறாக பேச கரும்பாம்பு கடித்து இறந்த சம்பவம் முன்னிட்டு அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம்
  • இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது, இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்ட வட்டப் பாறை அம்மன் சன்னதி.
  • சீதையைத் தேடி வந்த ராமன் வழியில் அகத்திய முனிவரைச் சந்தித்த போது அவரது வழிகாட்டுதலின் படி ஈஸ்வரனை வழிபட்டு ராவணனை வென்று சீதையை மீட்டு சீதையுடன் திரும்பியபோது, மீண்டும் இங்கு வந்து, தனது அம்பினால் ‘தண்ட தீர்த்த’த்தை உருவாக்கி அபிஷேக ஆராதனை செய்த தலம்
  • தல விநாயகர் – மால் துயர் தீர்த்த விநாயகர்
  • விநாயகர், பூசை செய்யும் அமைப்பில் கையில் மலருடன் சந்நிதியில் திருக்காட்சி
  • தற்கால நிகழ்வு – நான்கு திருக்கரங்களுடன் கூடிய வலம்புரி விநாயகர் சிலை, தனது இடக் கை ஒன்றில் அமிர்தக் கலசம் தாங்கி தாமரை மலரில் அமர்ந்த நிலையில் காட்சி அமைப்பு
  • முருகன் சூரபதுமனை அழிக்கும்முன் ஈசனையும், அம்மையையும் வழிபட்ட தலம்
  • தீர்த்தம் – மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்றது
  • ஊருக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த பம்பை நதி, இரட்டைப் புலவர்கள் கலம்பகம் பாடியதால், நதி திசை மாறி ஊருக்குள் வந்து திருக்கோயிலைச் சுற்றி ஓடும் அமைப்பு
  • நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்..‘ என்று திருவேகம்பர் திருவந்தாதியில் பட்டினத்தடிகளால் குறிப்பிடப்பட்ட தலம்.
  • …அன்னமலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்‘ என்று சேக்கிழாரால் வர்ணிக்கப்பட்ட தலம்
  • மேலக்கோபுரவாயில் கல்லில் செதுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி உருவம் (அழிந்த நிலையில்)
  • இத் தலத்திற்கு அருகில் நின்ற நிலையில் கையில் தண்டூன்றிய கோலத்தோடு, தலை மாலையுடனும் கோவணத்தொடும் காட்சிதருகின்ற வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளின் சமாதி

 

 

தலம் திருஆமாத்தூர்
பிற பெயர்கள் திருவாமாத்தூர், கோமாதபுரம்
இறைவன் அபிராமேஸ்வரர், அழகியநாதர்
இறைவி முக்தாம்பிகை,  அழகியநாயகி
தல விருட்சம் வன்னி, கொன்றை
தீர்த்தம் ஆம்பலம் பூம்பொய்கை ( குளம் ) , தண்ட தீர்த்தம் ( கிணறு ) , பம்பையாறு
விழாக்கள் பங்குனியில் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி, நவராத்திரி
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில்
திருவாமாத்தூர் அஞ்சல், விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம். PIN – 60540204146-223319, 04146-223379, 98430-66252
வழிபட்டவர்கள் விநாயகர், பார்வதி, அனுமன், சீதை, லட்சுமணர், நாரதர், அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருங்கி முனிவர், பராசரர், விஸ்வாமித்திரர், வியாசர், ரோமரிஷி, மதங்கமுனிவர், அஷ்டவசுக்கள், கோடிமுனிவர், அருணகிரிநாதர்
பாடியவர்கள் • திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள் (2ம் திருமுறை – 44 வது பதிகம், 2ம் திருமுறை – 50 வது பதிகம்),

• திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள் (2ம் திருமுறை – 44 வது பதிகம், 2ம் திருமுறை – 50 வது பதிகம்),

• திருநாவுக்கரசர் 2 பதிகங்கள் (5ம் திருமுறை – 44 வது பதிகம், 6ம் திருமுறை – 9 வது பதிகம்),

• சுந்தரர் 1 பதிகம்,

• பட்டினத்தார்

நிர்வாகம்
இருப்பிடம் விழுப்புரத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 211 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 21 வது தலம்.

 

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை          2
பதிக எண்           44
திருமுறை எண்  1

பாடல்

துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கான லாமாத்தூ ரம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே

பொருள்

தைத்த கோவணத்தையும், யானைத் தோலையும்  ஆடையாக கொண்டு பின்னல் கொண்ட சடைமீது இளம் பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?

 

 

 

 

 

 

 

பாடியவர்           திருநாவுக்கரசர்
திருமுறை         5
பதிக எண்          44
திருமுறை எண் 1

பாடல்

சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமாத்தூ ரழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே

பொருள்

காலை மாலை ஆகிய சந்தி பொழுதுகளில் வணங்கப் படுவானும், யோகநெறி உட்பட்டு தலைப்படுவாருடைய மனதில் உறைபவனும், தேவர்களால் தொழப்படுவானும், அந்தி வானத்தைப்போன்ற செம்மேனி உடையவனும் (அழகிய தீயின் உருவினன்) ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளர்களே  ஆவார்கள்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 23 (2018)

பாடல்

சாயாத சூலதண்டாயுதனே பச்சைச் சட்டையனே
வேயார் விண்ணோர் தொழ மெனியனேயென்மிடி தவிர்ப்பாய்
வாயார வுன்னைத் துதிப்போர்க்கு வேண்டும் வரமளிப்பாய்
தாயாகிய அப்பனே காழியாபதுத்தாரணனே.

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

நடுநிலை மாறாத மூன்று முனைகளை உடைய சூலமும் தண்டாயுதமும் கொண்டவனே, குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவனே, மூங்கில் போன்றவர்களும், விண்ணில் இருக்கும் தேவர்களும் தொழும் மேனியை உடையவனே, வாயினால் உன்னைத் துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் அளவிற்கு வரங்களை அளிப்பவனே, எனக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! எனக்கு துயர் ஏற்படாமல் தவிர்த்து என்னைக் காப்பாய்.

விளக்க உரை

  • சாயாத சூலம் – குற்றம் செய்பவர்களை மட்டும் தண்டிக்கும் தன்மை உடைய சூலம்
  • பச்சை சட்டையன் – குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவன் (பச்சை என்பது குளிர்ச்சி பொருந்தியது எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது).
  • வேய்த்தல்,- வஞ்சித்தல் என பொருள் கொண்டு அதன் எதிர்மறையாகிய வேயார் – வஞ்சித்தல் இல்லாதவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. மூங்கில் எனும் பொருளும் இருக்கிறது.[உ.ம் வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் – மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில்  ( தேவாரம் – ஏழம் திருமுறை – சுந்தரர்)].வேயார் என்பது பன்மை பொருள் கொண்டு, பிட்சடனார் வடிவில் இருந்த போது மூங்கில் போன்ற தாருகா வன ரிஷி பத்தினிகளால் விரும்பப்பட்டவர் எனவும் கொள்ளலாம். பொருள் குற்றம் பொருத்து, ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 22 (2018)

பாடல்

மந்தா கினிவான் மதிமத்தம் மருவும் சடையார் மாசடையார்
நுந்தா விளக்கின் சுடர்அனையார் நோவ நுதலார் கண்நுதலார்
உந்தா ஒலிக்கும் ஓதமலி ஒற்றி யூரில் உற்றெனக்குத்
தந்தார் மையல் என்னோஎன் சகியே இனிநான் சகியேனே.

இரண்டாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

தோழி, கங்கை, சந்திரப் பிறை, ஊமத்தமலர்கள் ஆகியவை பொருந்திய சடையை உடையவரும், இயல்பிலேயே மலம் என்னும் குற்றம் இல்லாதவரும், தூண்டுதல் எவரும் இன்றி எரியும் தூங்காமணி விளக்கின் சுடர் போன்ற மேனியை உடையவரும் பிறருக்கு வருந்தம் தரும் ஒரு சொல்லும் சொல்லாமல் இனிமையான இனிமையான மொழி பேசுபவரும், கண் பொருந்திய நெற்றியை உடையவருமாகிய சிவபெருமான், அலை மோதி முழங்கும் கடற்கரையிலுள்ள திருவொற்றியூரில் எழுந்தருளி, என்னுள் வேட்கை மயக்கத்தை அளித்தார்; எனவே இனிமேல் யான் மயக்க நோயை பொறுக்க மாட்டேன்.

விளக்க உரை

  • இறைவனிடத்தில் உண்டான காதல் உறவு கை கடந்து பெருகி ஆற்றேனாகின்றேன்; தூது சென்று உதவுக எனக் குறிப்பாய் வேண்டிக் கொண்டதை குறிப்பிடும் பாடல்.
  • மந்தாகினி – கங்கை  ஆறு.
  • வான்மதி – வானத்தில் ஒளிரும் சந்திரன் – பிறைத் திங்கள்
  • மத்தம் – ஊமத்தை மலர்.
  • நுந்துதல் – தூண்டுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 21 (2018)

பாடல்

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே

கந்தர் அநுபூதி – அருணகிரிநாதர்

பதவுரை

எங்கும் விரிந்து எதையும் தாங்கும் உறுதியான உள்ளம் கொண்டவனே, மிகுந்த வலிமை உடையவனே, எல்லோராலும் விரும்பப்படுகின்றவனே, தேவர்கள் இடையறாது தியானம் செய்யும் பிரவண சொரூபமானவனே, தேவலோகத்தைத் தாங்குபவனே, கிடைப்பதற்கு அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை அடியேனுக்கு உரியவையாக கிடைக்கும் படி தகுதி உடைவனாகும்படி செய்து, எனக்கு உபதேசமும் செய்து அருளி உணர்த்திய பெருமையை என்னவென்று சொல்வது?

விளக்க உரை

  • விரி தாரண – தனக்கு அருள் செய்தது போல் உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும்
  • முருகன் எல்லாவற்றையும் அருளிக் காப்பாற்றுவதை குறித்த பொருள்.
  • தாரகம் – பிரணவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 20 (2018)

பாடல்

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
     குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
     பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
     தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
     அப்ப னிடந்திரு ஆலங் காடே

பதினொன்றாம் திருமுறை – காரைக்கால் அம்மையார்

பதவுரை

மார்பகங்கள் தளர்ந்து சுருங்கி, நீர் வற்றியதால் நரம்புகள் மேலே தெரியும் படியாக எழுந்து, கண்கள் குழி விழுந்து,வெண்மையான பற்கள் விழுந்து, வயிற்றில் குழி விழுந்து, தலை மயிர் சிவப்பு நிறம் கொண்டு, இரண்டு கோரைப் பற்களும் நீண்டு, நீண்ட உயரமான கால்களையுடைய ஓர் பெண் பேய் தங்கி,  அலறி, எரித்தப்பின் எதுவும் மீதம் இல்லாத காரணத்தால் காய்ந்த காட்டில் தாழ்ந்த சடைகள் எட்டுத் திக்குகளிலும் வீசி அங்கம் குளிருமாறு ஆடும் எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருஆலங்காடாகும்.

விளக்க உரை

  • திரங்குதல் = தளர்தல், உலர்தல், திரண்டு சுருங்குதல், சுருங்குதல்
  • பங்கி = ஆடவரின் மயிர், விலங்குகளின் மயிர் வகை, பாகம் பெற்றுக்கொள்வோன், சாதிலிங்கம்
  • அனல் ஆடுதல் – சுற்றிலும் நெருப்பு எரிய நடுவே நின்று ஆடுதல்
  • இவ்வாறு ஆடுபவன் ஆயினும் அவன் அங்கம் குளிர்ந்திருத்தல் வியப்பு எனும் கருத்து.
  • முன்னொரு யுகத்தில் வெகு சுத்தமான இடத்தை நான் தேடி அடைந்த போது சுத்தமான இடம் கிடைக்கவில்லை. அப்போது பூதசிருஷ்டி உண்டானது. கொடிய கோரப்பற்களை உடைய பிசாசுகளும், பிற உயிர்களை கொன்று உண்ணும் பூதங்களும் உலகம் எங்கும் திரிந்தன. இவ்வாறு பிராணிகள் இல்லாததால் உலகை இப் பூதங்களிடம் இருந்து காப்பதற்காக பிரம்ம தேவர் இப் பூத, பிசாசங்களை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார். பிராணிகளின் நன்மைக்காக நான் இதை ஏற்றிக் கொண்டேன். இம் மயானத்தை விட பரிசுத்தமான இடம் வேறு எதுவும் இல்லை. மனித சஞ்சாரம் இல்லாததால் இம் மயானம் மிகப் புனிதமானது. எனவே பூதங்களை மயானத்தில் நிறுத்தினேன். அவைகளை விட்டுப் பிரிய மனம் இல்லை. எனவே தவம் செய்பவர்களும், மோட்சத்தை விரும்புவர்களும் பரிசுத்தமான இம் மயானத்தை விரும்புகிறார்கள். வீரர்களில் இடமாக இருப்பதால இதை நான் எனது இடமாகக் கொண்டேன் என்று சிவன் உமையிடம் உரைத்தது ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. ( உமா மகேஸ்வர ஸ்ம்வாதம், மகாபாரதம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 19 (2018)

பாடல்

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை,  வாசனை ஆகியவை கொண்டு மண்ணின் தத்துவமாகவும், ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை ஆகியவை கொண்டு நீரின் தத்துவமாகவும், ஒலி, தொடு உணர்வு, உருவம் ஆகியவை கொண்டு  நெருப்பின் தத்துவமாகவும், ஒலி,தொடு உணர்வு கொண்டு ஆகியவை கொண்டு காற்றின் தத்துவமாகவும், ஒலியினை அடிப்படையாக கொண்டு ஆகாயத்தின் தத்துவமாகவும் இருக்கும் போற்றுதலுக்கு உரிய அந்த கணபதியை அன்பினால் சரணம் அடைகின்றோம்.

விளக்க உரை

  • மண்ணில் ஐந்து வகையாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பது போன்று சில இடங்களில் விளக்கங்கள் நீள்கின்றன. மூலாதார மூர்த்தி என்பதாலும், மனித உடலில் அனைத்து தத்துவங்களும் உறைவதாலும், இப்பாடல்கள அனைத்தும் சூட்சமானது என்பதாலும் இது போன்ற விளக்கங்கள் விலக்கப்படுகின்றன.
  • எண்ணிக்கை முன்வைத்து எழுதப்படும் பாடல்களில் இறங்கு முகத்தில் இருக்கும் பாடல் இது. ஐங்குணமாகிய நிலம் ஸ்தூல ரூபம், ஒரு முகமாகிய ஆகாயம் சூட்சம ரூபமாக இருப்பதாகவும் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கலாம். அஃதாவது ரூபத்தில் இருந்து அருபம் வரை அனைத்துமாக இருப்பவன் எனும் பொருளில் எழுதப்பட்டு இருக்கலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருப்புறவார் பனங்காட்டூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருப்புறவார் பனங்காட்டூர்

 

  • மூலவர் சுயம்பு மூர்த்தி
  • சிவபெருமானை விலக்கி தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயின பின்னர், அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்த போது, தண்டனை பெற்று ஒளி இழந்த சூரியன் தான் செய்த தவறுக்கு வருந்தி வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றத் தலம்
  • பனையைத் தல விருட்சமாக கொண்டு விளங்கும் பஞ்ச தலங்களில் இத்தலமும் ஒன்று.(மற்றவை வன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு), திருப்பனையூர், திருப்பனந்தாள், திருவோத்தூர்)
  • புறாவுக்காக உயிரைக் கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி முக்தி பெற்ற தலம்
  • சூரியன் கண்ணொளி பெற்றதால் இறைவன் நேத்ர உத்ராரனேஸ்வரர் (கண்களை காத்து அருளியவர்)
  • ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்கள் காலை வேளையில் முதலில் சிவனாருக்கும் , பின்பு அம்மைக்கும் சூரிய வழிபாடு செய்யும் தலம்
  • திருநீலகண்டர் தம் மனைவியுடன் சேர்ந்து, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் சிலா ரூபங்கள் கொண்ட அமைப்பு

 

தலம் திருப்புறவார் பனங்காட்டூர்
பிற பெயர்கள் பனையபுரம்
இறைவன் பனங்காட்டீஸ்வரர், நேத்ர உத்ராரனேஸ்வரர்
இறைவி சத்யாம்பிகை,  புறவம்மை, மெய்யாம்பாள்
தல விருட்சம் பனை
தீர்த்தம் பத்மதீர்த்தம்
விழாக்கள் மகாசிவராத்திரி , மார்கழி திருவாதிரை , ஐப்பசி அன்னாபிஷேகம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு பனங்காட்டீசர் திருக்கோவில்
பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம்
விழுப்புரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
PIN – 605603
94448-97861, 99420-56781
வழிபட்டவர்கள் சூரியன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் விக்கிரவாண்டியில் (திண்டிவனம் – விழுப்புரம் சாலை) இருந்து 2 கி.மீ. விழுப்புரத்தில் இருந்து சுமார் 1௦ கிமீ தொலைவு. முண்டியம்பாக்கம் அருகில்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 210 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 20 வது தலம்.

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        2
பதிக எண்          53
திருமுறை எண் 1

பாடல்

விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே

பொருள்

ஆகாயத்தில் பொருந்தியனவாகி உலவும் வன்மை உடைய முப்புரங்களைக் கொடிய கணையால் எய்து வீழ்த்தியவனே! இசைபாடுவோரின் விரிந்த பண்ணிசை ஒலி சேர்ந்துள்ள புறவார் பனங்காட்டூரில் உமையொரு பாகனாக வீற்றிருக்கும் சடைமுடி உடையவனே! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே! உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக.

 

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        2
பதிக எண்          53
திருமுறை எண் 8

பாடல்

தூவி யஞ்சிறை மெல்ந டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவியெம் பெருமான் என்பவர்க் கருளாயே

பொருள்

அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் நிறைந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெய்யும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக அமர்ந்தவனாய், இராவணனின் தோள்களை அடர்த்து, அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே எனப்போற்றும் அடியவர்களுக்கு அருள்புரிவாயாக.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 18 (2018)

பாடல்

திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, மிக்க அழகுடையவளாகிய சுந்தரி, ஆகாயத்தில் விளங்குபவளாகிய அந்தரி, சிந்துரத்தையும், சிலம்பணிந்தவள் அணிந்தவள், நாரணன் தங்கை ஆகிய நாரணி, அம்பலம் நிற வடிவத்தையும் உடையவள், சிறப்பான நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி, மனோன்மணி` என்னும் பெயர்களைப் பெற்று அந்த அந்த வகையில் எல்லாம் விளங்குவாள்.

விளக்க உரை

  • ஆம் – பொருந்திய, பல வன்னத்தி – பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பல வன்னத்தி – நீட்டல் அதிகாரம் பற்றி அம்பலம் என்பது  ஆம்பலம் எனக் கொண்டும் சிவசக்தி ஐக்கிய பேதம் கொண்டு பின்னர் வரும் ஈசுவரி,மனோன்மனி என்று வருவதாலும் அம்பல வண்ணமுடையவள் என்று இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
  • ஒன்பது திருப்பெயரும் ஒன்பது ஆற்றல்களை குறிக்கும். அனைத்தும் ஒன்றாகி மும்மலம் நீங்க அருளச்செய்பவள் சத்தியாகிய திரிபுரை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 17 (2018)

பாடல்

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ

அழுகணிச் சித்தர்

பதவுரை

உலகியல் உருவமாகிய தூலத்தை மட்டும் காட்டுவது கண்கள், அவைகள் சூக்குமமாகிய இறைவன் தன்னைப்பற்றி காட்டுவது இல்லை. சிறப்புக்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர விரும்பி யோக மார்கத்தில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சகஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைப்பதற்காக மேலே ஏற்றி தவம் இயற்றும் பொழுது உலகியலை எப்போதும் நாடும் நாட்டார் எனப்படும் மனம் புன்னகைத்து செய்து நம்மை திசை திருப்ப முயலும். அப்படிப்பட்டதான  ஆதி அந்தமான கண்ணாகிய ஆன்மா தன் இருப்பிடமான மேல் உச்சி தனை உள்ளிருந்து நோக்கும் போது, தன் உண்மை உருவை காட்டாதவனை கண்டு  மனம் நமைப் பார்த்து நகைத்தாலும், அதை அடக்கி கண்களை மேலேற்றி ஆன்மாவின் ஜோதி தரிசனத்தை கண்குளிரக் காண்பேனோ?

(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 16 (2018)

பாடல்

காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஆண்கள் காதில் அணியும் ஆபரணமாகிய குண்டலம், கழுத்தணி ஆபரணமாகிய உருத்திராட்சமாலை, வாயினால் ஊதி நல்ல ஒலி உண்டாக்கும் திருச்சங்கு, மகா மேரு, கைகளில் திருவோடு, ஓதுதல் உடைய தவச் சாலை, கால்களில் அணியக்கூடிய பாதுகை, யோகம் தரதக்கதான இருக்கை, நெற்றியில் அணியப்படும் குற்றமற்ற யோக பட்டம் மற்றும் கைகளில் கொள்ளப்படும் யோக தண்டம் என்னும் பத்தும் தவம் உடையவர்களுக்கு உரித்தான வேடங்களாகும்.

விளக்க உரை

  • உயர்கட்டி – மகா மேரு – மாபெரும் துறவிகள் போன்றோர் அணிவது. (உ.ம் பெரும்பாலான ஆதினங்கள் குரு பரம்பரையாக இதை அணிவார்கள்)
  • தவ வேடங்கள் தொகுப்பு பற்றிய பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 15 (2018)

பாடல்

உரியேன் அல்லேன் உனக்கடிமை
     உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
     றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
     என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
      பொய்யோ எங்கள் பெருமானே

தேவாரம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

பதவுரை

சங்கரனே! எம் பெருமானே! யான், உனக்கு அடிமையா இருப்பதற்கு கூட உரிய தகுதி உடைவன் அல்லேன்; கருணையில் ஒப்பற்றவனாகிய நீ, உன் கழலை அணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டியும், உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ? நாயேன் அதன் தன்மை இன்னதென்று அறியமாட்டேன். எனினும் உன்னை விட்டு நீங்கி இந்த இடத்தில் ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன்.

விளக்க உரை

  • ‘பொழுது’ – மிகச் சிறியதான நொடிப்பொழுது. (கண் இமைப் பொழுது போன்றது)
  • ‘என்றென்று’ – வலியுறுத்தலில் பொருட்டு அடுக்குத் தொடர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 14 (2018)

 

பாடல்

தண்டேர்மழுப் படையான்மழ

   விடையான்எழு கடல்நஞ்

சுண்டேபுரம் எரியச்சிலை

   வளைத்தான்இமை யவர்க்காத்

திண்டேர்மிசை நின்றான்அவன்

   உறையுந்திருச் சுழியல்

தொண்டேசெய வல்லாரவர்

   நல்லார்துயர் இலரே

 

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 

பதவுரை

மழுப்படையைத் தண்டு போல கொண்டு ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்களுக்காக கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களை காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் வலிமையானதும் உறுதியானதுமான தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் ஆவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 13 (2018)

பாடல்

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
     ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந்
     திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
     பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
     புறம்பயம்நம் மூரென்று போயி னாரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தீங்கு தருகின்ற விடத்தை உண்டு, மாலையில் தோன்றும் செந்நிறத்தை போன்றதுமான பெருமான், ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய பொன் போன்ற தோளின் மீது மேலாடையாக அணிந்து, திரு ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி, எம் இல்லத்தில் வந்து `’திருவே! உணவு இடு’ என்று கூற, உள்ளே சென்று யான் மீண்டு வர ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து, பூத கணங்கள் சூழப் ‘புறம்பயம் நம் ஊர்’ என்று கூறிப் போயினார்.

விளக்க உரை

  • ஏகாசம் – ஏகம்+ஆகாசம் – ஒரே ஆகாயம் –  மேலாடை
  • ‘போகாத வேடத்தார்’ –  அவரது வேடம் என் கண்ணினின்றும் நீங்காத இயல்பானது

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமுண்டீச்சரம்

 

தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருமுண்டீச்சரம்

 

  • மூலவர் சிரசில் அம்பு பட்ட தழும்போடு கிழக்கு நோக்கிய அமைப்பு, அம்பாள் சிவனாரின் வலப்புறம் தனிக்கோயிலில் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி
  • சிவனாரின் காவலர்களாகிய முண்டி சிவனாரை வழிபட்டு அருள்பெற்ற தலம் முண்டீஸ்வரம் (மற்றது திண்டி – திண்டீஸ்வரம் ( திண்டிவனம் ). இருவருக்கும் தனித்தனி சிலைகள்
  • கல்லால மரமில்லாமல் தட்சிணாமூர்த்தி மலைமீது நந்தியை வாகனமாகக் கொண்டு திருக்காட்சி
  • துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு வந்த போது இங்கு குளத்தில் அதிசயமான தாமரை மலரை சேவகர்களை அனுப்பி  பறித்துவர அவர்களால் பறிக்க இயலாதவாறு மலர் குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது கண்டு மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட, குளம் முழுவதும் செந்நிறமாக மாறி மலரின் நடுவில் லிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோயில் கட்டி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப் பை (பொக்கணம்) தந்தால் கல்வெட்டில் இறைவன் பெயர் பொக்கணம் கொடுத்த நாயனார்
  • ஆற்றின் கரையிலுள்ள கோயில் – ஆற்றுத்தளி என்பதல் .ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர்
  • கொடிமரம் அற்ற திருக்கோயில்

 

தலம் திருமுண்டீச்சரம்
பிற பெயர்கள் கிராமம், முடீச்சரம், திருமுண்டீஸ்வரம்
இறைவன் சிவலோகநாதர் முண்டீஸ்வரர், பொக்கணம் கொடுத்த நாயனார், ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர்
இறைவி சௌந்தர்யநாயகி, கானார்குழலி அம்மை, செல்வநாயகி, செல்வாம்பிகை
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் முண்டக தீர்த்தம் (அ) பிரம்ம தீர்த்தம்
விழாக்கள் சித்திரை வருடப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவாரங்கள், தனுர்மாதப்பிறப்பு, மார்கழி திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி , பங்குனி உத்திரம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்,
கிராமம் அஞ்சல், வழி உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை வட்டம்,விழுப்புரம் மாவட்டம்
PIN – 607203.
04146-206700, 98946-25154
வழிபட்டவர்கள் பிரம்மன், இந்திரன்
பாடியவர்கள் திருநாவுக்கரசர் 1 பதிகம், வள்ளலார்
நிர்வாகம்
இருப்பிடம் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து 2-கி. மீ.
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 209 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 19 வது தலம்.

 

 

 

 

 

பாடியவர்           திருநாவுக்கரசர்
திருமுறை         6
பதிக எண்          85
திருமுறை எண் 1

 

பாடல்

ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
     அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்
போர்த்தான்காண் புரிசடைமேல் புனலேற் றான்காண்
     புறங்காட்டி லாடல் புரிந்தான் தான்காண்
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்
     கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே.
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய
     சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே

பொருள்

திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகனாவன், சினம் மிகுந்த நாகத்தை அரைநாணாகக் கட்டியவன், அடியவர்களுக்கு அன்பன் ஆனவன், யானையின் தோலை உரித்து போர்வையாகக் கொண்டவம், திரண்டு சுருண்ட சடைமேல் கங்கையை ஏற்றவம், சுடுகாட்டில் ஆடுவதை விரும்பியவம், உலகங்கள் ஏழும் கலக்கம் கொள்ளாதவாறு ஒலிக்கும் கடலிடை உண்டான நஞ்சினைத் தன் கண்டத்திலே கொண்டவன் ஆவான். அவன் என் சிந்தையில் நிறைந்தவன்.

 

 

 

பாடியவர்           திருநாவுக்கரசர்
திருமுறை         6
பதிக எண்          85
திருமுறை எண் 6

பாடல்

உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்
     ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே யாடையுமாய்ப் பூணு மாகிப்
     புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக
     நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினால்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
     சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே

பொருள்

திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகனாவன், உயிரோடு உடல் இயைந்து நின்றவன், எல்லா உறவினருமாக ஆனவன், ஒருவரிடத்தும் தனக்குப் பின் உரிமையாக இல்லாத வகையில் எவ்விடத்தும் நிறைந்து நின்றவன், அழிவில்லாதவன், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவன், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவன், நல்ல தவ வேடங்கொண்டவன், சரணடைந்த மார்கண்டேயனுக்காக  பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவம் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆவான்.  

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 12 (2018)

பாடல்

தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கணெ ரியவே
செற்ற தேவனஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை யாயின வோயவே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மனமே! தெளிந்த அறிவினை உடையவனும், தென்இலங்கைக்கு இறைவனாகவும்# விளங்கிய இராவணன், ஈசன் வீற்றிருந்து அருளும் கயிலைமலையைப் பெயர்க்க முற்படும் போது, பற்றிய அளவில் அவன் முடிகள் கொண்ட பத்து தலைகளையும், இருபது தோள்களும் நெரியுமாறு அவன் கர்வம் அழித்த தேவனாகிய நம்முடைய சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, வினைகள்யாவும் தேய்ந்து ஒழிய நீ ஆராய்ந்து நினைவாயாக.

விளக்க உரை

  • தெற்றல் – அறிவில் தெளிந்தவன். இராவணன் ஒழுக்கத்தில் பிழை உடையவன் ஆயினும் பல நூல் கற்றதால் அறிவில் சிறந்தவன்.(இராவணம் கொடி வீணை என்பது கண்டு உணர்க).மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறும் புதுப்பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.
  • #இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்கள் இருபதாலும், ஈஸ்வர பட்டம் பெற்றமையாலும்  இறைவன் என்று அழைக்கப்பெற்று இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 11 (2018)

பாடல்

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை ஆனவள், மா மாயை என பெரியதாக குறிப்பிடப்படும் சுத்த மாயை, மாயை என குறிப்பிடப்படும் அசுத்த மாயை, சுத்த மாயை மற்றும் விந்து ஆகியவற்றால் குறிப்பிடப்படும் சுத்த தத்துவங்களின் காரியங்களாகிய வயிந்தவம், வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை  முதலிய நால்வகை வாக்குகள் ஆகிய நாத வடிவங்கள் #, அசுத்த மாயையிலிருந்து தோன்றிய ஆன்ம தத்துவங்கள் தோன்றுதற்கு முதலாகிய பிரகிருதி மாயை எனப்படும் ‘மூலப் பிரகிருதி’ ஓராறு கோடி மந்திரங்களின் முடிவாகிய ஏழனுள், `ஹும், பட்` என்று இரண்டுமாகவும்  சில இடங்களில்  ஒன்றாக எண்ணப்படுவதும் ஆன சத்தியின் வேறுபாடுகள், சிவன் நினைத்தவிடத்து சிவன் அசையா பொருளாகவும், ‘ஆம்’ அசை நிலை கொண்டு அசையும் பொருள், பிற பொருள்களில் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் நிற்பாள்.

விளக்க உரை

  • சொல்லப்படும் பொருள்கள் அனைத்திலும் தானேயாயும், அல்லாதவாறும் சிவ சத்தி வடிவம் கொண்டு நிற்பாள் என்பது பற்றியது.
  • அசுத்த மாயையின் காரியங்கள் ‘மாயேயம்’ , பிரகிருதியின் காரியங்கள் ‘பிராகிருதம்’ ஆகியவற்றை இங்கு உணர்க
  • ஓவுதல் – நீங்குதல்
  • # ஞானசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி`, ஆரணி, ஜெனனி, உரோதயித்திரி, வாமை, ஜேஷ்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரமதனி, சருவபூததமணி, மனோன்மனி, சத்தி, விந்து, மனோன்மணி, மகேசுவரி, உமை, திரு, வாணி` எனவும் பல்வேறு வடிவங்கள்
  • ஆறுகோடியிற்றாமான மந்திரம் – ஆறு ஆதாரங்களுக்கு உரித்தான மந்திர எழுத்துக்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 10 (2018)

 

பாடல்

மவுனமாய் நின்று கற்பம் சாதித்தாக்கால்
மகிழ்ச்சியுடன் சொல்லுகின்றேன் முதலா
தவத்தாலே யொரு சட்டை யுரியும் பாரு
தன்மையுடன் யிரண்டாண்டில் ஒன்று போகும்
அவையடக்க மூன்றி லொன்று கழன்று போனால்
அப்பனே மூன்று சட்டை கழன்று போனால்
இவனுக்கு வயது சொல்ல முடியா தென்று
என் குருவும் எந்தனுக்கு உரைத்தார் தானே

அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி

பதவுரை

எதுபற்றியும் உரைக்காமலும் மௌனமாக இருந்து, முன்னர் குறிப்பிட்ட முறைகளில் தச தீட்சை கொண்டு, உணவு கட்டுப்பாடும் கொண்டு வந்தால் நிகழுபவற்றை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். செய்யப்படும் அவ்வாறான தவத்தாலே ஒரு சட்டை உரிந்து விடும். அத்தன்மை பற்றி இரண்டாவது ஆண்டில் இன்னொரு சட்டை போய்விடும். மேலே குறிப்பிட்ட இரண்டு சட்டையும் கழன்று போகும் போது மூன்றாவது சட்டையும் கழன்று போகும். அவ்வாறு மூன்று சட்சையும் கழன்று விட்டால் இவன் வயது சொல்லமுடியாதவாறு இருப்பான் என்று என் குருநாதர் எனக்கு உரைத்தார்.

விளக்க உரை

  • கற்பம் – முன் பாடல்களில் தச தீட்சை முறை, உணவு முறைகள், விலக்கவேண்டியவை, அக்காலங்களில் ஏற்படும் நோய்கள், அதில் இருந்து விலகும் வழிமுறைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இப்பாடல்களை விளக்கவே பல்வேறு நியமங்களை அகத்தியர் விதித்துள்ளார். இதன் விபரங்களை தெரியாதவர்களுக்கு உரைத்தால், அவர் தலை வெடித்து சிதறும் என்றும், பல பிறவிகளில் வினைகள் தொடரும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். எனவே ஆன்றோர்கள் தகுந்த குரு கொண்டு பாடல்கள், விளக்கங்கள் பெறுக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 9 (2018)

பாடல்

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா – முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்

திருநெறி 9 – வினாவெண்பா – உமாபதி சிவம்

பதவுரை

காரிய அவத்தை பற்றி, கனவிலே நின்று ‘இது கனவு’ என்று கனவைத் தரிசித்தல் அல்லது கனவினை கண்டு கொள்ளுதல் அரிதானது. நனவாகி, அவ்வாறு கிட்டும் அனுபவம் தன்னில் கருவிகள் இல்லாத காரணத்தால் நிஜத்தில் எவ்விதத்திலும் பலன் அளிக்காது. முனைவன் அருளில் ஒன்றி அவ்வாறான அருளிலே நின்று கண்டது என்னவெனில், அவ்வாறான சமயங்களில் காரிய அவத்தை பொருந்தாது, மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, யான் காரண அவத்தைகளைத் தரிசித்தல் எப்படி?

விளக்க உரை

  • சுத்த தத்துவங்களைக் கொண்டு அறிய வேண்டுமென்பது கருத்து.
  • நண்ணுதல் – கிட்டுதல், பொருந்துதல், செய்தல், இருத்தல்
  • காரண அவத்தை
  1. கேவல அவத்தை : ஆதிகாலம் தொட்டு ஆணவ மலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை கேவலஅவத்தை
  2. சகல அவத்தை : மாயை பற்றி உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது சகல அவத்தை.
  3. சுத்த அவத்தை : பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை சுத்த அவத்தை
  • காரிய அவத்தை
  1. நனவு : சாக்கிரம் என்ற கூறப்படும் இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
  2. கனவு : சொப்பனம் என்று கூறப்படும் இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.
  3. உறக்கம் : சுழுத்தி என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
  4. பேருறக்கம் : துரியம் என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
  5. உயிர்ப்படக்கம் : துரியாதீதம் என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
  • யோக மரபில் கண்டத்தில் இருந்து மேலே சென்று புருவ மத்தியாகிய ஆக்கினையில் பூசித்தல் மனித நிலையில் இருந்து விலக்கி தேவர்கள், முனிவர்கள் போன்ற மேல் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதுவும் கருத்து. மேல் விபரங்களை குரு மூலமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 8 (2018)

பாடல்

தெள்ளும் புழுகும் பனிநீரும் குங்குமச்சேறும் செந்தேன்
விள்ளும் மலரும் நின் பாதத்தில் சாத்தி விடாமலின்பங்
கொள்ளும்படியன்பு தந்தெனை யாண்டருள் கூற்றுவனைத்
தள்ளும் பதாம்புயனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

கூற்றுவனை தள்ளும் பாதத்தை உடையவனை, சீகாழிப்பதியை உடைய ஆபதுத்தாரணனே! தெளிவாக விரைந்து செல்லும் இமயமலை இருந்து வரும் பனி நீரும், சேற்றில் தோன்றும் குங்கும நிறமான தாமரை மலர்களும், செம்மையான தேனைத் தரும் மலர்களும் கொண்டு உன்னுடைய பாதத்தில் சாத்தி, நீங்காத இன்பம் கொள்ளும்படி அன்பு காட்டி எனை ஆண்டு அருளுவாய்.

விளக்க உரை

  • தெள்ளுதல் – தெளிவாதல், ஆராய்தல், படைத்தல், கொழித்தல், அலைகொழித்தல், தெளிவித்தல், அனுபவமுதிர்தல்
  • பங்கஜம் = பங்க+ஜ = சேற்றில் தோன்றுவது. பங்கம் = சேறு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 7 (2018)

பாடல்

அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
     அத்தை நண்ணு செல்வ …… ருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
     லற்று நின்னை வல்ல …… படிபாடி
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
     முத்த னென்ன வுள்ள …… முணராதே
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
     முட்ட னிங்ங னைவ …… தொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
     தித்து மன்னு பிள்ளை …… முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
     சித்ர வண்ண வல்லி …… யலர்சூடும்
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
     பத்தர் கன்னி புல்லு …… மணிமார்பா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

தித்தி என்னும் தாள ஜதி ஒலிக்கும் நிலைபெற்ற தில்லையில் நடனமாடுபவரின் கண்களினின்றும் தோன்றி நிலை பெற்றுள்ள மகனாகிய முருகனே, எல்லாச் சித்திகளும் இடமாய் விளங்கும் வேலாயுதம் கொண்ட திருக்கரத்தை உடையவனே, அழகிய திருவுருவம் வாய்ந்த வள்ளி மலர் சூடிப் பணியும், பக்தர்களுடைய மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும் செம்மலே, வெள்ளை யானையை ஆகிய ஐராவதத்தை உடைய இந்திரனின் கன்னியாகிய தேவானை தழுவும் அழகிய மார்பனே, பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலை கொண்டையில்  கொண்ட பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே! தந்தை, தாய், வீடு, சேர்த்து வைத்துள்ள பொன், வெள்ளி, தந்தையின் சகோதரி ஆகிய அத்தை,அவர்களோடு பொருந்திய பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய், செய்தொழிலால் குறைவான வருமானம் பெற்று, முடிவுறாத கல்வி கொண்டு, அல்லல் தரும் உறவினர்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி, உன்னை இயன்ற வகையினால் பாடி, எனக்கு முக்தி தர வல்லவன் நீ ஒருவனே என்றும், திருவலம் என்னும் தலத்தின் பெருமான் என்றும், வள்ளியின் கணவன் என்றும் என்னுடைய உள்ளத்தில் நான் உணராமல், அறியாமை நிறைந்த புலவனும் எளிமையான மூடனுமாகிய நான் இப்படி வருந்தி துன்புறுதல் நீங்காதோ?

விளக்க உரை

  • சில இடங்களில் திருவல்லம் எனும் தலத்திற்கு பதில் வல்லக்கோட்டைத் தலம் என்று உரைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உணர்க.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!