அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 18 (2018)

பாடல்

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ!

அழுகணிச் சித்தர்

பதவுரை

என் கண்ணம்மா, மனம் மகிழ்ந்து (உள்முகமாக) நோக்குவதால் அந்தரம் எனப்படும் உள்வெளியாகிய புருவத்தை வில்லாக்கி, பஞ்சாட்சரமான ஐந்து எழுத்து மந்திரத்தை அம்பாக்கி, உச்சாடனம் செய்யும் வேகத்தினை தேராக்கி, மனமாகிய மானை காவனத்தில் வேட்டையாட, சந்திர சூரிய நாடிகள் வந்து விளையாடியதால் தானே நிகழ்ந்தது.

விளக்க உரை

  • அந்தரம் – திறந்தவெளி, ஆகாசம், வெளி, உள்வெளி, இருள், ஆகாசம், நடு, இடம், இடுப்பு, நடுவுநிலை, தேவலோகம், பேதம், விபரீதம், தேவாலயம், தீமை, கூட்டம், முடிவு
  • அந்தரம் என்பதற்கு ஆகாசம், வெளி போன்றவை இருப்பினும் சித்தர்கள் பெரும்பாலும் இருப்பை தன்னுள்ளே விளக்குவதால் உள்முகமாக நோக்குதல் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
  • மனமகிழ்ந்து – ஆத்மார்த்தமாக உணர்தல்

 

சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 17 (2018)

பாடல்

தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தென் நாட்டு அரசனும், என்னை ஆள்பவனாகிய சிவனும், உலகை காக்கும் தலைவனும்,  போற்றுதலுக்கு உரிய அழகிய மறைகளை ஓதியவனும், உலகம் தோன்றுவதற்கு முன்னமே நிலைப்பெற்ற  தோற்றத்திற்கு உரித்தானவனும், சுடுகாட்டில் சேரும்  திருநீற்றினை அணிந்தவனும்,சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஆகிய பெருமானான ஈசனாவான்.

விளக்க உரை

  • தென்னவன் – அழகியவன் எனும் பொருள் இருப்பினும், ‘தென்நாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனும் வரிகளை முன்வைத்து தென் நாட்டு அரசன் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. (யோக மார்க்கமான பொருளை குரு மூலமாக அறிக)
  • முன்னம் மன்னவன் – உலகத்தோற்றத்திற்கு முன் உள்ள நிலை பேறுடையோன்
  • பூழி – விபூதி
  • இனன் – சூரியன்
  • இன்னம் இன்புற்ற – சூரியன் வழிபட்டு இன்புற்ற. சூரியன் வழிபட்டதால் இனன் நம்பூர் என்ற பெயர் மருவி இன்னம்பர் ஆயிற்று

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 16 (2018)

பாடல்

நெறியும் பொறியுந் தவமும் மெய்ஞ்ஞானமும் நீடறிவும்
பொறியும் புகழும் கொடுத்தருள் வாய்புரம் காய்ந்தவனே
குறியும் குணமும் கடந்தவனே குழக்கன்று கட்டுந்
தறியின்கண் வந்தவனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

குழக்கன்று எனும் மிக இளையகன்று போன்று கட்டுத்தறி விட்டு அன்பர்களுக்கு அருள் செய்ய வந்தவனே, காழிப் பதி உறையும் ஆபதுத்தாரணனே, மௌனம் கொண்டவனே, தனக்கென அடையாளம் ஆகிய பேதம் விலக்கியவனே *, சைவ ஆகமத்தில் கூறப்படும் எண் குணங்களாகிய தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகியவற்றை கடந்தும் நிற்பவனே, உனது அன்பைப் பற்றி வாழும் நெறி, அந்த நெறியில் இருந்து விலகாத பொறிகள், பொறிகளால் பெறப்படும் தவம், தவத்தில் இருந்து கிடைக்கப் பெறும் ஞானம், அதன் பயனான மெய் அறிவு, அதைக் ஈயும் உடல், அதனால் பெறப்படும் புகழ் ஆகியவற்றை கொடுத்தருள்.

விளக்க உரை

  • வாய்புரம் காய்ந்தவனே – மௌனம் கொள்ளுதல்
  • * அவரவர் வழிபாடு செய்யும் விதமாக அந்த ரூபத்தில் அருள்பவன்

 

ஆதினம் அவர்கள் பக்தி நிலையில் எழுதியதால், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 15 (2018)

பாடல்

பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடமாம்
இண்டை கொண்டு அன்பு இடையறாத
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

உயிர்கள் செய்த பழைய, வலிமையான வினைகள் நீங்குமாறு செய்வதும், உலகிற்கு முதல்வனும், தூயவனும் ஆகிய இறைவனது இடமானதும், ஈசனிடத்தில் அன்பு கொண்டு இடையில் விலகுதல் இல்லாத அடியார்கள், தாமரை மாலை முதலியவைகளைக் கொண்டு வழிபடுகின்ற திருத்தலம் ‘திருச்சோற்றுத்துறை’ என்னும் திருத்தலம் ஆகும்.

விளக்க உரை

  • இண்டை – தாமரை, மாலை வகை, இண்டு கொடி, முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி; உலகம் சார்ந்த பொருட்கள்
  • அண்ட முதல்வன் – ‘அண்டம்’ என்ற பொதுமையால் எல்லா அண்டங்களும் கொள்ளப்படும், அதன் பொருட்டே  அகிலாண்டகோடி.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 14 (2018)

பாடல்

நின்மல மேனி நிமலன் பிறப்பு இலி
என்னுளம் வந்து இவன் என் அடியான் என்று
பொன் வளர் மேனி புகழ் கின்ற வானவன்
நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சிவபெருமான் இயல்பாகவே மலங்கள் அற்றவனாகிய தூயமேனியன்; இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன் ஆனதால் அழுக்கு இல்லாதவன்; என்றும் பிறப்பு இல்லாதவன்; திருவருளால் என் உள்ளத்தே வந்து வெளிப்பட்டு  ‘இவன் என் அடியான்’ என்று அறிவித்து அருளினன்; .அனைவராலும் புகழத்தக்க பொன்போன்ற திருமேனியையுடைய உயர்ந்தவனாகவும் வானவனாகவும் ஆன அவன் அடியானென்று என்று கொண்டது மட்டுமல்லாமல் ‘என்னைப் போல மலம் நீங்கித் தூயன் ஆகுக’ என்று மல பாகம் நீக்கியும் அருளினன்.

விளக்க உரை

  • நீக்கவல்லான் – ஆணவத்தை ஒழிக்கவல்லான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 13 (2018)

பாடல்

ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனற்
பானு ஒழியப் படின்.

உமாபதி சிவம்

பதவுரை

நல்ல சூரியகாந்த கல்லானது ஆதித்தனையல்லாமல் ஜொலிக்காதது போல் ஞானாசாரியன் இல்லாமல் ஒருவனுக்கு ஞானம் உண்டாகாது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 12 (2018)

பாடல்

 

மெய்யிற் படர்ந்த அருட்கடலே
        விளையும் ஞான முளரியினில்
     விரிவாய்ப் பொருந்தும் பரநிதியே
        வினைகளை அகற்றும் பதம்உடையாய்

உய்யுந் தவத்தோர் மேலோர்கள்
        உறுதி யுடனே மகிழ்பதியே
     ஒன்றாம் யோக முடிவதனில்
        ஒளியாய் வெளியாய் உதித்தவளே

செய்ய கமலத் தயன்மனைவி
        தினமும் பணியுந் திருவருளே
     தேகா தேகக் கோடியெலாஞ்
        சிறந்து நிறைந்த சின்மயமே

வையத் தடங்கா அருள்மலையே
        வருண அருண ஒளிமணியே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, நீ உண்மையாக விளங்கும் மெய் அன்பர்களிடத்தில் பரந்து இருக்கும் அருட்கடலாகவும், ஞானத்தின் வடிவாக தோன்றும் ஞானத்தாமரையில் விரிவாய்ப் பொருந்தும் பரநிதியாகவும், தன்னை வழிபடுவர்களின் அடியார்களின் வினைகளை அகற்றும் திருவடிகளை உடையவளாகவும், பிறவிப் பிணி நீக்கம் கைவரப் பெற்ற தவத்தோர்களும், உயர்ந்தவர்களான வானோர்களும் உறுதியுடன் மகிழ்கின்ற பதிப்பொருளாகவும், யோக நிலையில், இறைவனோடு ஒன்றிய சிவசக்தி ரூபமான வடிவத்தில் ஒளி வடிவமாகவும், துவாத சாந்த பெருவெளியாகவும் தோன்றி காணப்படுபவளாகவும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மாவின் சக்தியாகிய சரஸ்வதியால் தினமும் வழிபாடு செய்யப்படுபவளாகவும், உடலோடு கூடியனவாகவும், கூடாதனவாகவும் ஆகிய உயிர் வர்க்கங்களின் வகைகளாகிய முட்டையில் தோன்றுவன ஆகிய அண்டசம், வியர்வையில் தோன்றுவன ஆகிய சுவேதசம், வித்து வேர் முதலியவைகளில் தோன்றுவன ஆகிய உற்பிசம், கருப்பையில் தோன்றுவன ஆகிய சராயுசம் ஆகியவற்றின் * அறிவுக்கு அறிவாய் விளங்கும் ஞான சொரூபமாக விளங்குபவளாகவும், வையகத்தில் இருப்பவர்களால் அளவிட முடியா அருள் மலையாகவும் (வையகத்தினை விட பெரிய அளவிலான அருள் மலையாக எனவும் கொள்ளலாம்) துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், சூரியனின் ஒளி வடிவமாகவும் செந்திறம் கொண்ட துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், பல நிறம் கொண்ட சூரியனின் ஒளி வடிவமாகவும் விளங்குகிறாய்.

விளக்க உரை

  • அடுத்து வரிகளில் வரும் ‘விளையும் ஞான முளரியினில்’ என்பதனை முன்வைத்து உடலில் தோன்றிய அருட்கடலே என்னும் கருத்து விலக்கப்பட்டுள்ளது.
  • மேலோர் – மேலிடத்தோர், உயர்ந்தோர், முன்னோர், வானோர்
  • *84 லட்சம் யோனிபேதம்(வடிவ வேறுபாடு)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 11 (2018)

பாடல்

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு

நல்வழி – ஔவையார்

பதவுரை

செய்துமுடிக்கும் செயலெல்லாம் செய்த புண்ணியத்தால் நிறைவேறியது என்பது அன்றி எவ்வொருவராலும் செயல் பற்றி எண்ணி அந்த செயலை தான் முடித்துவிடோம் என எண்ண இயலாது. காலம் சரியானதாக இருந்து நேரம் கூடிவரும் போது,  கண் தெரியாத ஒருவன் தன் கையிலிக்கும்  கோலை வீசி மாங்காய் விழுவது போன்று அது நிறைவேறும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 10 (2018)

 

பாடல்

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – கபிலதேவ நாயனார்

பதவுரை

குற்றமற்ற செல்வம், செய்த, செய்யப்படுகின்ற இனி செய்ய இருக்கும் அனைத்து கர்மங்கள் ஆகியவற்றை எவ்விதமான இடையூறும் இல்லாமல் முடியச் செய்தல், பெருமையின் ஆக்கம், குற்றமற்ற சொற்களை தரும் உயர்ந்த சொற்கள் ஆகியவற்றை மூத்த பிள்ளையார் ஆன ஆனை முகத்தான் தருவான்.  ஆதலால் அவனைக் காதலால், வானோரும் தம்முடைய கை கூப்பி தொழுவார்.

விளக்க உரை

  • ‘செய் கருமம் கை கூட்டும்; ஆதலால் கைகூப்புவர்` என்பது புலனாகும். `பிள்ளையாரைத் தொழாதபொழுது செய் கருமம் கை கூடுதல் அரிது` என்னும் குறிப்பும் புலப்படும்.
  • செய்கருமம் – வினைத் தொகை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 9 (2018)

பாடல்

அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால்
அறிவான் அறிந்த அறிவு அறியோமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மெய் தத்துவங்களின் தோற்றமுறை ஆய்தலை உடைய மெய் உணர்ந்த மேலோர் அருளால் அறிவது நீர் என்றும் திருவருள் என்றும் குறிக்கப்பெறும் அப்புவும், தீ எனவும்  சிவபெருமான் எனவும் குறிக்கப் பெறும் அனலும்; அவ்வாறு அதன் பொருள் நுட்பம் உணர்பவர்கள் அவற்றின் பண்பும் கலப்பும் ஒடுக்கமும் ஆய்ந்து உணர்வார்கள்; இவ்வாறு அறிவது எல்லாம் ஒருங்கே உணரும் தன்மையும், எண் குணமும், முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த சிவபெருமானாலே வாய்க்கப் பெறுகிறது. அஃதாவது அவன் உடனிருந்து இயங்கி  அவன் இடம் அறிவித்தாலன்றி ஆருயிர்கள் அறியாது; அவனையின்றி அறிவு வசப்பட்ட  ஆருயிர் அறிந்ததென்பதை எவரும் அறியார்.

விளக்க உரை

  • மெய்ப் பொருள் அறிவு ஆசிரியனை இல்லாமல் உண்டாகாது எனும் பொருள் உடைக்கும் பாடல்
  • அருள் ஆகிய சக்தியும் சிவமும் கலந்து அருளுபவன் எனும் நிலையில் நின்று,  அனைத்து உலகினையும் மற்றும் அவற்றின் தொழில் செய்வதைக்  குறிக்கும் குறிப்பாகும்.
  • தாமாக அறியும் பொருள் அனைத்தும் காட்சிப் பொருள்களே. அவை மட்டும் அல்லாமல்  கருத்துப் பொருள்களும் உள்ளன.  அவற்றை அறிவிப்பவன் ஒருவன் இருந்துகொண்டு அறிவித்தாலன்றி, அறிபவன் தானே அறிந்து பெற்ற அறிவாக நாம் எந்த அறிவையும் அறிய இயலாது.
  • ‘உலகாயதர்’ என்றும், ‘சாருவாகர்’ என்றும் ‘பூத வாதிகள்’ என்றும் கூறுபவர்களின் கருத்தாகிய ‘காட்சிப் பொருளன்றிக் கருத்துப் பொருள் இல்லை` எனும் விளக்கம் சைவ சித்தாந்த கருத்துப்படி மறுக்கப்பட்டுள்ளது
  • முதலில் வரும் ‘அறிவான்’ என்பது `முன்பே அறிந்துள்ளவன்` எனவும், பின்னது, `இனி அறிபவன்` எனவும் பொருள் தரும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 8 (2018)

பாடல்

நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அருளுதலைத்  தருகின்ற திரிபுரையானவள்,  சத்த பிராமானமாகவும்  சிவனின் நவபேதமூர்த்தங்களுள் ஒன்றானதும் ஆன நாதமாகவும், அவ்வாறான நாதத்தின் முடிவாகவும், பலவாய் விரிவதான சிவத்தோடு ஒன்றிய சக்தி ஆகிய பரவிந்து ஆகி பெரிய அண்டம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள்; ஆக்கல் தொழிலோடு அருளுதலையும் செய்வதால் அவள் அனைவர்க்கும் மேலானவள்; அவளே சிவசத்தி வடிவமான பரை, அவளே அபிராமி, அவளே வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்ட, புறக்கண்களுக்கு புலப்படாதவளும் அறியப்படாதவளும் ஆன அகோசரி என்ற போதிலும் அன்புடன் நம்மைத் தழுவிக் கொண்டு நல்ல அறிவை வழங்குபவள் ஆவாள்.

விளக்க உரை

  • சத்தி போக மோட்சங்களைத் தருமாறு வகுத்துக் கூறப்பட்டப் பாடல்
  • புல்குதல் – பதிதல்
  • நாதம் – சத்தம், வாத்திய ஓசை, இசைப்பாட்டு, அரைவட்டமான மந்திரலிபி, சிவபிரானது நவபேதமூர்த்தங்களுள்ஒன்று, நாதக்குமிழிலுள்ள குமிழ், சோணிதம், தலைவனையுடைமை
  • அகோசரம் – அறியப்படாமை, புலன்களுக்குப்புலப்படாமை, புலப்படாதது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 7 (2018)

பாடல்

அட்ட மாமலர் சூடி யடும்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக விருக்கு மிடமிதே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அதிகாலை நேர சிவபூசைக்குரிய புஷ்பவிதியில் கூறியதான எட்டு மலர் வகைகளான. புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் எட்டுவகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்ட வடிவாகிய மெல்லிய சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நடனம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமே.

விளக்க உரை

  • அடும்பு-அடப்பமலர்
  • வட்டப் புன்சடை – வட்டமாகக் கட்டிய மெல்லிய சடை.
  • கொல்லாமை, அருள், பொறி அடக்கம், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண் மலர்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)

பாடல்

மத்த யானை யேறி மன்னர்
   சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை
   சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
   வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி
   யென்ப தடைவோமே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும்  அவர்களுடன்  யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’  எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.

விளக்க உரை

  • தம் நெஞ்சிற்கும், அரசர்க்கும்  அறிவுறுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)

 

பாடல்

தீரா மயக்கப் பிணிநோயைத்
        தீர்க்கும் மருந்தே அருமருந்தே
     தேவா திகளும் அறியாத
        கிருஷ்ணன் ஆதி சகோதரியே

ஆரா திப்பார் பூசிபார்
        அமைதுன் நாம மதைநினைப்பார்
     அடுத்தோர் இன்ப சுகமனைத்தும்
        அடையும் எனவே மறைவிளம்ப

நேரா யிருந்து களிப்பவளே
        நித்யா னந்த சுகப்பொருளே
     நெறியே குறியே எனைஆளும்
        நிமலி அமலை சுகத்தாளே

வாரா கினியே துட்டர்டர்
        மனத்தை அழிக்குஞ் சினத்தாளே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, வினை பற்றி மயக்கம் தருவதாகிய பிறவிப் பிணி நோயை தீர்க்கும் மருந்து போன்றவளே, தேவாமிர்தம் போன்றவளே, தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின் சகோதரி ஆனவளே, உன்னை ஆராதிப்பவர்களும், உன்னை பக்தியுடன் பூசிப்பவர்களும், உனது திருநாமத்தை நினைப்பவர்களும் இன்ப சுகம் அனைத்தும் பெறுவார்கள் என்று முடிவாகிய வேதம் உரைப்பதற்கு ஏற்ப இருப்பவளே, அவ்வாறு அடியார்கள் பெறப்படும் இன்பத்தை நேரே இருந்து களிப்பவளே, நிலை பெற்ற சுகப் பொருளாகவும் ஆனவளே, முறையாகவும், அதன் வழி நிற்பவளாகி அதன் அடையாளமாகவும், குற்றம் அற்றவளாகி எனை ஆளக் கூடியவளாகவும், மிக்க பேரின்பம் வழங்கக் கூடியவளாகவும், வாராகினி தேவியாகவும், துன்பத்தைத் தரும் துட்டர்களின் மனதினை கோபத்தால் அழிப்பவளாகவும் இருக்கிறாய்.

விளக்க உரை

  • முன்னர் மருந்து என்ற சொல் பயன்படுத்தப்படுள்ளதால் அருமையான மருந்து எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது.
  • தேவர்களாலும் அறிய முடியாதவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது ‘அறியா கிருஷ்ணன்’ எனும் பதம் கொண்டு ‘தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின்’  என்று  விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)

பாடல்

மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ?

சிவவாக்கியர்

பதவுரை

தன்னிடம் செல்வம் மிகுதியா இருக்கிறது எனும் கர்வத்துடன் அதை விரும்பி அடையும் பாவிகளே, உடைக்கப்பட்ட மரமாகி விறகுடன் இந்த உடலையும் வெந்து போவதை நீங்கள் அறியவில்லையா? தனது வாரிசுகள், தன் மனைவி மற்றும் சுற்றம் என்று கண்ணால் காணப்படுபவை எல்லாம் மாயை ஆகிய இவைகள் கூற்றுவன் வந்து அழைத்தபோது இவைகள் சேர்ந்து வருமா?

விளக்க உரை

  • கர்வம் கொண்ட உடலை தீயினில் இட்டு என்றும் பொருள் கொள்ளலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)

பாடல்

எங்கும்தான் வியாபியாய் நின்று உணரும் இவ் ஆன்மா என்னின்
தங்கிடும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும்
பங்கம் ஆர் புலன் ஒன்று ஒன்றாகப் பார்த்திடல் பகரல் வேண்டும்
இங்கு எலாம் ஒழிந்தால், நிற்பது எங்கனம்? இயம்பல் வேண்டும்

சிவஞானசித்தியார் – சுபக்கம்

பதவுரை

ஐம்பொறிகளின் வாயிலாக உணரப்படும் உயிர் எங்கும் வியாபித்து நிற்கும் எனில் காரிய அவத்தைகளான நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் ஆகியவற்றில் அது எங்கும் அறிவோடு இருக்க வேண்டும்; அது பற்றி தொடக்கம் மற்றும் முடிவு பற்றி உரைத்திடல் வேண்டும்; உயிர் எங்கும் வியாபித்து நிற்பின் குற்றம் நிறைந்த புலன் பற்றியும், குற்றமற்ற புலன் பற்றியும் எனத் தனித்தனியே அவைகளைப் பார்த்து சொல்ல வேண்டும்; பூவுலகில் உடல் அழிந்தால் உயிர் எவ்வாறு எங்கு நிலைபெற்று இருக்கும் என்பதை சொல்ல வேண்டும்; அவ்வாறு இல்லாமல் இருப்பதால் எங்கும் வியாபித்து நிற்பது உயிர் அல்ல

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)

பாடல்

மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே

திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

‘ஔஷதம்’ எனப்படும் மருந்தான அஷ்ட வர்க்க மருந்து வகைகளை அறிந்திலேன்; மணி எனப்படுவதும், நவமணிகளால் குறிக்கப்படுவதும் ஆன ரச மணியை பற்றியும் அறிந்திலேன்; மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடியதான உபதேசம் செய்யப்பட்டதுமான மந்திரம் என்பது பற்றி எதுவும் அறிந்திலேன்; வினைவழிச் செலுத்தும் எண்ணங்களைப் பற்றி அறிந்திலேன்; அவ்வாறு செலுத்தும் எண்ணம் பற்றி நடக்கும் நிகழ்வுகளாகிய விதிபற்றியும் அறிந்திலேன்; இதனால் வாழ்வில் ஏற்படும் நிலை  மாற்றங்களை அறிந்திலேன்; வழி மாறி நடப்பது வினைபட்டு இருப்பதால் அதில் இருந்து திருந்துவதற்கு அறிந்திலேன்; அருளை எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கும் திருவருள் பற்றியும் அறிந்திலேன்; இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் அறச் செயல்களை செய்ய அறிந்திலேன்; மனமடங்கும் திறம் அறிந்து எந்த ஒரு இடத்திலும் நிலையாக இருக்க அறிந்திலேன்; அவ்வாறு இருப்பவர்களை அறிந்து அவர்களை புகழ்ந்து துதிக்க அறிந்திலேன்; என்னுடைய பிரானாகிய இருப்பிடமாகிய மணிமன்றம் * இருக்கும் இடம் அறிந்திலேன்; அவன் இருந்த திசை சொல்வதற்கு அறிந்திலேன்; எவ்வாறு அவன் இடம் அறிந்து அங்கு செல்வேன்; இதுபற்றி யாரிடத்தில் உரைக்க வேண்டும் என்று அறிந்திலேன்; என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறியாதவனாக இருக்கிறேன்.

விளக்க உரை

  • மணிமன்றம் * – குரு முகமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 1 (2018)

பாடல்

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருச்சோபுரம் விரும்பி அடையும் இறைவனே! இலங்கையில் நிலைபெற்று வாழும் வாள் போரில் வல்லவராகிய அசுரர்களின் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் தவறு உணர்ந்து மன்னித்து வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! மேரு மலையை வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?

விளக்க உரை

  • விலங்கல் – மேருமலை
  • அரக்கர் – திரிபுராதிகள்
  • ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 31 (2018)

பாடல்

மட்டுப்படாத யமதூதர் வந்து வளைத்துடலைச்
சுட்டுப் பல பொடியாக்கு முன் காத்தருள் தோடணிந்த
பட்டுப் புயத்தினும் தண்டாயுதத்தினும் பாதத்தினும்
தட்டுப் புழுகணியுங்காழி யாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

காதில் தோடு அணிந்தவனும், கைகளின் மேற்பகுதி ஆகிய தோள்களின் மேல் பட்டு உடுத்தியவனும், தனது திருக்கரத்தில் தண்டாயுதமும், பாதத்தில் புனகு அணியும் ஆபதுத்தாரணனே, வரையறைக்கு உட்படாத யமதூதர்கள் இந்த உடலை சிதையால் எரியூட்டி அதை பொடியாக்கும் முன்னம் வந்து காத்து அருள வேண்டும்.

விளக்க உரை

  • ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 25 (2018)

பாடல்

நஞ்செய லற்றிருந்த நாமற்ற பின்நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற
தன்னையே தந்தானென் றுந்தீபற

திருநெறி 5 – திருவுந்தியார்

பதவுரை

தன்னில் தான் விலகி, கண்ணுக்கு புலப்படிவதாகிய ஸ்தூல உடலும், புலனாகாத சூட்சம உடலும் தனித் தனி என்று அறிந்து இது நாம் அல்ல எனும் அறிவு பெற்று, இது நாதன் செயல் தானே என்று உந்தி பற; இவ்வாறான அறிவு பெறுவதற்கு தன்னையே தந்தான் என்று உந்தி பற.

விளக்க உரை

  • உந்தி பற – ஆடும் மகளிர், பறவையைப் போல நிலத்தில் இருபாதங்கள் மட்டும் படிய, இருகைகளையும் மடக்கி இருந்து, பின் விரைவாக எழுந்து,தன்  இருகைகளையும் இருபக்கங்களில் சிறகுபோல நீட்டி,  பறவைகள் பறப்பதுபோலப் பாவனை செய்து ஓடி, வேறோர் இடத்தில் முன் போல அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடும் விளையாட்டு.
  • தோழியராய் ஒத்த நிலையில் இருக்கும் மகளிர் தம்மில் இவ்வாறு அழைத்துப் பாடியும், மற்றவர் அக்கருத்து ஒத்து ஆடுவர். இறைவனை விளிப்பவனாகவும், தன்னை ஆடுபவனாகவும் கொண்டு இயற்றப்பட்ட பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்