அமுதமொழி – விளம்பி – ஆனி – 31 (2018)

பாடல்

தங்கிய மாதவத்தின் தழல்
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு
நாகேச் சரத்தானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

செங்கயல் எனும் ஒரு மீன்வகையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, மாற்றம் இல்லாத, நிலையான பெரிய தவத்தினால், வேள்வித் தீயினியில்  இருந்து தோன்றிய சிங்கமும், மிகப் பெரியதான புலியும், திருமாலின் நிறம் ஒத்த பருத்த பெரிய யானையும் கதறி ஒடும்படி செய்தும், அழியும்படி செய்வதுமான மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின் தோலை உரித்தும், அத்தோலைப் போர்த்தியும் செய்தற்குக் காரணம் யாது?

விளக்க உரை

  • ‘உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்’ என்பது பற்றிய பாடல்.
  • தவம் – தாருகாவன முனிவர்களுடையது. அட்ட வீரட்டான செயல்களில் ஒன்றான இவ்வரலாற்றினை வழுவூர் திருத்தல பெருமை கொண்டு அறிக.
  • போர்த்தல் – மறைத்தல் என்னும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 30 (2018)

பாடல்

மிடைந்தெலும் பூத்தைமிக் கழுக்கூறல்
     வீறிலி நடைக்கூடந்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன்
     சோத்தம்எம் பெருமானே
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி
     உன்திரு மலர்ப்பாதம்
அடைந்துநின் றிடுவான் ஆசைப்பட்டேன்
     கண்டாய் அம்மானே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

போற்றுதலுக்கு உரிய தலைவனே! எலும்புகளால் நெருக்கமாகவும், புலால் மிகுந்து அழுக்கும் ஊறி நிற்பதாயுள்ள சிறப்பில்லாத நடை வீடாகிய இந்த உடம்பு என்னை விடாது பற்றி வருதலால் வருந்தி எனை நலியத் துன்பமடைகின்றேன்; மனம் உடைந்து, நெகிழ்ந்து உருகி, உன்னருள் ஒளியைக் கண்டு நோக்கி, உனது அழகிய மலர் போன்ற திருவடியை  பேரின்பம் பெறுவதன் பொருட்டு அடைந்து நிற்க விரும்பினேன்.

விளக்க உரை

  • மனம் இளகி உருகுதலே இறைவன் திருவடியை அடைதற்கு உரிய வழி என்பது பற்றிய பாடல்
  • வீறு இலி – பெருமை இலதாகிய (இழிவை உடைய கூடம்).
  • நடைக் கூடம் – இயங்குதலை உடைய மாளிகை;  வீடு, பெயர்ந்து செல்லாது; ஆனால் இவ்வுடம்பாகிய வீடு, செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து வருவதாதல் இப் பெயர்
  • சோத்தம் – வணக்கம்.
  • உள்ளம் உருகுதல், ஒளி நோக்குதல், – அருளைப் பெறுதற்கு உரிய வழி,
  • பாதம் அடைதல் – சாதனம்
  • பேரின்பம் பெறுதல் – பயன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 29 (2018)

பாடல்

உச்சிக் கிளியே அருட்கிளியே
      உணர்வுக் குணர்வாய் உயிர்க்குயிராய்
   உதித்த கிளியே பரவெளியில்
     ஒளிவான் பழத்தை உன்னிவரும்

நற்சொற் கிளியே கதம்பவன
      நகரில் வாழும் பரைக்கிளியே
   ஞானக் கிளியே மறைவனத்தில்
      நடனக் கிளியே சிவக்கிளியே

பச்சைக் கிளியே அன்பர்மதி
      படரும் ஆவி ஓடையினில்
   பரவுங் கிளியே நிதிக்கிளியே
      பவழக் கிளியே பதிக்கிளியே

வச்ரக் கிளியே நவபீட
      வாசற் கிளியே அருள் அமையும்
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

பேச்சுத் திறமை, ஐஸ்வரியம், ஆத்ம ஞானம் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் கிளி போன்றவளே, அருளை வழங்கும் அருள்கிளியே, அடியவர்களின் உணர்வுக்கு உணர்வாகவும், அவர்களின் உயிருக்கு உயிராகவும் தோன்றிய கிளியே, நமசிவய எனும் எழுத்துக்களாகி ஆகாயத்தில் விளக்கும் ஒளிவடிவமான பழத்தை த்யானித்து இனிய மொழி பேசும் கிளியே, தன்னுடைய பரிவார தேவதைகளுடன் பரதேவதையாக இருக்கும் சிந்தாமணிக் க்ரகம் எனும் திருக்கோயிலைச் சுற்றி இருக்கும் மணித்வீபம் என்று அழைக்கப்பெறும் தீவாகிய கதம்பவனத்தில் வாழும் சிவசக்தி வடிவமான கிளியே, மாயையை விலக்கை ஞானத்தை அருளும் ஞானக் கிளியே, வேதங்களால் சூழ்ந்த வனம் எனப்படும் மறைவனத்தில் நடனம் ஆடும் கிளியே, சிவக்கிளியே, அடியார்களின் எண்ணங்களில் படர்ந்து அவர்களின் உயிர் செல்லும் வழியில் செல்லும் கிளியே, வேண்டும் வரங்களை வேண்டியவாறு அருளும் நிதிக் கிளியே, பவழக் கிளியே, சிவசக்தி வடிவமாக இறைவனோடு இருக்கும் பதிக்கிளியே, யோகத்தில் ஒன்றாக இருக்கும் வச்சிரம் போன்று இருக்கும் வச்ரக் கிளியே,(நீ) நவ கோணங்களின் பீடத்தின் வாசலில் வீற்றிருந்து அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள் ஆவாய்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • அம்மையை கிளி வடிவில் போற்றிப் பாடியது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருநணா

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருநணா

  • இறைவன் சுயம்பு மூர்த்தி
  • சோமாஸ்கந்த வடிவம் கொண்ட திருக்கோயில்
  • நாககிரி, சங்ககிரி, மங்களகிரி, வேதகிரி என்ற நான்கு மலைகளுக்கு நடுவில் பத்மகிரி மலையில் அமைந்துள்ள திருத்தலம்.
  • தேவர்களும், அசுரர்களும் திருமாலின் உதவியோடு பாற்கடலைக் கடைந்து இறுதியில் அமுதம் எடுத்தப் பின் பராசர முனிவர்  நாராயணனிடமிருந்து சிறிது அமுதத்தைப் பெற்று வரும்போது,  வழியில் அசுர்கள் அந்த அமுத்தை அவரிடமிருந்து பறிக்க முற்படுகையில் பவானி கூடுதுறையில் காயத்ரி தீர்த்தம் என்று ஒரு தீர்த்த கட்டத்தில் அமுதம் கொண்ட கலசத்தைப் புதைத்து வைத்துவிட்டதால், அந்த  அமுதமே பின்பு  காயத்ரி லிங்கம் என்று லிங்க உருவாக மாறி இருக்கிறது.
  • திருஞானசம்பந்தர் இத் திருதலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் கூடிய ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றத் திருத்தலம்.
  • பள்ளியறையில் தந்தந்தினாலான ஊஞ்சலில் அம்மை
  • வேதங்களுக்கு தலைவியாக விளங்குவதாலும், நான்கு வேதங்களால் பூஜை செய்யப்பட்டதாலும் வேதவல்லி எனும் திருநாமத்துடன் அம்பாள்
  • பவானி ஆறு, கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி காவிரி இவைகள் சேருமிடத்தில் இத்தலம்அமைந்துள்ளதால் இத்தலம் தென்திரிவேணி சங்கமம்
  • விஸ்வாமித்திர முனிவரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர்
  • வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நிகழா வண்ணம் காக்கும் (நண்ணுதல் – கிட்டுதல்) பதி என்பதால் நணா.
  • மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் ஆகியவற்றால் அழைக்கப்படும் திருத்தலம்.(பவானி)
  • குபேரன், பல திருத் தலங்களை தரிசித்தப்பின் இங்கு வந்த போது அனைத்து உயிர்களும் எவ்வித பேதமும் இல்லாமல் ஒன்றாக இருப்பது கண்டு தவம் செய்து சிவன், திருமால் ஆகியோரால் தரிசனம் கிடைக்கப்பெற்று ‘ பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருள வேண்டும்’ என வேண்டிப் பெற்றத் திருத்தலம். (தட்சண அளகை)
  • இராவணன் வழிபாடு செய்தது சகஸ்ரலிங்கம்
  • வேணு கோபாலர் சன்னதிக்குப் பின் ஒரு உடல், இரு தலைகளுடன் பசுக் காட்சி
  • வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்த போது (1802ம் ஆண்டு) அம்பிகையை காணும் தீராத ஆவலால் அம்பிகை சந்நதிக்கு நேரே இருந்த மதிலில் மூன்று துவாரங்கள் செய்து அத்துவாரங்கள் வழியே அலங்கரிக்கப்பட்ட அம்பிகையை தரிசித்ததன் பலனாக தன் இருப்பிடத்தில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது கூரை இடிந்து விழும் முன் அவர் கனவில் அம்பிகை வேதநாயகியைப் போலத் தோற்றம் கொண்டிருந்த ஒரு பெண் தோன்றி, ‘பங்களாவைவிட்டு உடனே வெளியேறு’ என்று ஆணையிட்டு காப்பாற்றிய பெருமை கொண்ட தலம். ( நன்றி காணிக்கை – தந்தத்தினால் ஆன கட்டில்)
  • சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக ஆதிகேசவப் பெருமாள், சௌந்திரவல்லி தாயார் ஆகியோருக்கு தனி சந்நிதிகள்
  • மாசி மாதம் மூன்றாவது நாளில் சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகிய மூவருக்கும் சூரிய வழிபாடு நடைபெறும் திருத்தலம்.
  • ஆறு காலப் பூஜைகள் நடைபெறும் திருக்கோயில்
  • நூல்கள்
  1. கூடற்புறான வசனம் – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
  2. பவானிப் பதிற்றுப்பத்தந்தாதி – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
  3. பவானி வேதநாயகி அம்மன் பிள்ளைத்தமிழ் – திருமுகவூர் மு.ரா. கந்தசாமிக்கவிராயர்
  4. கலம்பகம்
  5. உலா
  • ஓலைச்சுவடி
  1. வேதநாயகி அம்மன் சதகம்

 

தலம் திருநணா
பிற பெயர்கள் பவானி, பவானி கூடல், பவானி முக்கூடல், தென்திரிவேணி சங்கமம், வதரிகாசிரமம், பதரிவனம், தட்சிண பிரயாகை, பூவானி நாடு, சங்கமக்ஷேத்ரம், பராசரக்ஷேத்ரம், வக்கிரபுரம், வீரபுரம், விஜயாபுரி
இறைவன் சங்கமேஸ்வரர், அளகேசன், சங்கமநாதர், மருத்துவ லிங்கம், வாணிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார், சங்கமுகநாதேஸ்வரர், காயத்ரி லிங்கேஸ்வரர்
இறைவி வேதாம்பிகை, வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, வக்கிரேஸ்வரி, மருத்துவ நாயகி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் பவானி மற்றும் காவிரி ஆறுகள் சங்கமம், காயத்ரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், தேவ தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம்
விழாக்கள் ஆடிப்பெருக்கு, சித்ரா பௌர்ணமி, ரத சப்தமி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, கிரகண காலங்கள்
மாவட்டம் ஈரோடு
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணி முதல் – 01:00 மணி வரை
மாலை 4:00 மணி முதல் – 08:30 மணி வரைஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில்
பவானி, ஈரோடு மாவட்டம் – 638301
04256 – 230192, 09843248588.
வழிபட்டவர்கள் திருமால், குபேரன், விஸ்வாமித்திரர், பராசரர்
பாடியவர்கள் அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவு, ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 207 வது தலம்
கொங்கு நாட்டுத் தலங்களில் வது தலம்.

 

 

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         2
பதிக எண்           72
திருமுறை எண்  2

 

பாடல்

நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணையேந்தி
ஈட்டுந் துயரறுக்கு மெம்மா னிடம்போலும் இலைசூழ்கானில்
ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூழோசைச்
சேட்டார் மணிக ளணியுந் திரைசேர்க்குந் திருநணாவே

பொருள்

அழகிய கண்ணான நெற்றிக்கண் பொலிந்து விளங்கும் நெற்றியினை உடையவரும், ஒருகையில் வீணை ஏந்தியவரும், ஆகாமியகன்மம் முதல் சஞ்சிதம்  பிராரப்தம் வரையிலான  பழைய வினைத் தொகுப்பினைத் தீர்த்து அருள்பவரும் ஆகிய எம் இறைவன் உறையும் இடம், இலைகள் அடர்ந்த காட்டில் வேகமானதும், இசை போல் ஒலிப்பதுமான அருவிகளுடன் கூடியதும், மூங்கில்கள் உராய்ந்து ஓசை எழுப்புவதும்,  கரைபுரளும் அலைகள் வழியே சேர்க்கும் திருநணாவாகும்.

 

 

 

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         2
பதிக எண்           72
திருமுறை எண்  8

 

பாடல்

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி
முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே

பொருள்

மன்நீர் எனப்படும் பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அவனை வருந்தச் செய்தவரும், கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய இடம், பகை கொண்டும், கோபம் கொண்டும் மலைக்குகையில் வாழும் சிங்கம் தன் தன்மைகுன்றி அதனோடு போரிட்டு முற்றத்தில் படிந்த அதனது குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை சென்று மறையும் திருநணாவாகும்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 28 (2018)

 

பாடல்

நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே

 

சிவவாக்கியர்

 

 

 

பதவுரை

நம்பிக்கைத் தரும் ‘ந’ எனும் எழுத்தாகிய நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலாகவும், ‘ம’ எனும் எழுத்தாகிய மகாரம் வயிற்றுப்பகுதியாகவும், ‘சி’ எனும் எழுத்தாகிய  சிகாரமானது நெஞ்சில் இருந்து இரண்டு தோள்களாகவும், சிறந்ததான ‘வ’ எனும் எழுத்தை குறிக்கும் வகரம் வாயாகவும்,  ‘ய’ எனும் எழுத்தை குறிக்கும் யகரம் இரண்டு கண்களாகவும் தூலத்தில் அமைந்துள்ள ஐந்தெழுத்து, சூட்சமத்தில் மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து அதனை தியானித்து அச் சிவமே ஐந்தெழுத்தாக  இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

விளக்க உரை

  • ‘நமசிவய’ என்னும் மந்திரம்தான் இந்த உடல். அதனுள்தான் இறை ஆகிய  சிவம் உள்ளது. யோக முறையில் வழிமுறை தெரிந்து உடலின் உள்ளே செல்ல சிவத்தை உணரலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 27 (2018)

பாடல்

அந்தமு மாதியு மாகிநின் றீர்அண்ட
     மெண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு
     வேற்றுகந்தீர்
வெந்தழ லோம்பு மிழலையுள் ளீர்என்னைத்
     தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினு மென்னைக்
     குறிக்கொண்மினே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அறிவுடைப் பொருளாகிய சேதனம், அறிவற்ற பொருளாகிய  அசேதனம் ஆகியவற்றின் தொடக்கமாக இருப்பவரும், அவ்வாறான சேதனம், அசேதனம் பொருள்களுக்கு முடிவாக நின்று இருப்பவரும், பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளிலும் பற்றினை ஏற்படுத்துபவரும், அப்பற்றினை விலக்கி வீடு பேற்றினை உயிர்களுக்கு அளிப்பவரும், விடையேறுதலை விரும்பி செய்பவரும், சிவந்து எரியும் தீயை போற்றி காத்து வரும் அந்தணர்கள் வாழும் மிழலை நகரில் உள்ளவரே! அடியேனைக் காலன் தென் திசையில் செலுத்தும் போது, யான் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 26 (2018)

பாடல்

மூலம்

உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே

பதப் பிரிப்புடன்

உருவமும் உயிரும் ஆகி,
     ஓதிய உலகுக்கு எல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
     நின்றஎம் பெருமான், மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
     மலைஉளாய், அண்டர் கோவே,
மருவிநின் பாதம் அல்லால்
     மற்றொரு மாடு இலேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அசேதனப் ப்ரபஞ்சம் மற்றும் காரண மாயை  என குறிக்கப் பெறும் சடமாகி, சேதனப் பிரபஞ்சம் எனக் குறிக்கப்படும் சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய், அவ்வாறு குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் விடுத்தப் பின் ஏற்படும் வீடு பேற்றிற்கு காரணமாகவும் நின்ற எம் பெருமானே! அருவி போன்று பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர்களின் தலைவனே! உன் திருவடிகளைப் பொருந்தி நிற்றல் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன்.

விளக்க உரை

  • ‘மலையுளாய்’  என்றது கண்டது உரைப்பது பற்றியதால் அருளுரை எனவே பொய்யாகாது.
  • ‘நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும்’ என சில இடங்களில் விளக்கப்பட்டுளது. பொருள்  பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 25 (2018)

பாடல்

அன்றுமுதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்குள் இன்னதெனச் சென்றதிலை – இன்றிதனை
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அவ்வா றிருந்த தது.

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

பதவுரை

அனாதி காலம் தொட்டு கர்த்தாவுக்கு ஆளாகி  திருவருளுடனே கூடிப் பின்பு அன்பு வழியுடன் பக்தி கொண்டு சென்றவர்களில் ஒருவரானாலும் சிவானுபவம் இப்படியிருந்ததென்று சொல்லக்கூடிய  உவமை  இதுவரையும் பொருந்தினதில்லை; ஆகையால் இப்போது இந்தச் சிவானுபத்தை இப்படியிருந்ததென்று எப்படிச் சொல்லப்போகிறேன் எனில் அந்தச் சிவானுபவம் போலவே இருந்தது.

விளக்க உரை

  • சிவானுபவத்துக்கு வேறோர் உவமை சொல்லக்கூடாது
  • சிவானுபவம் என்பது அனுபவிக்க முடியுமே அன்றி எவ்வாறு இருந்ததென்று அளவிட்டுக் கூறமுடியாததாகும்.  அதற்கு ஒப்புமை எதுவும் கூற இயலாது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 24 (2018)

பாடல்

வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை
அரக்கனது ரக்கரசி ரத்துற வடர்த்தருள் புரிந்தவழகன்
இருக்கையத ருக்கன்முத லானவிமை யோர்குழுமி யேழ்விழவினிற்
றருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

இமயமலையில் அவதரித்த மலையரசனின் மகளான உமாதேவிக்கு கயிலைமலையைப் பெயர்த்து  எடுத்து ஓர் அச்சத்தை உண்டாக்கிய, புத்தி இல்லாத, வலிமையுடைய இராவணனின் மார்பு , கைகள் , தலைகள் ஆகியவை இமய மலையின்கீழ் நொறுங்கும்படி தன் கால் பெருவிரலை ஊன்றி , பின் அவன் தன் தவறு உண்ர்ந்து இறைஞ்ச, ஒளிபொருந்திய வெற்றிவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள்புரிந்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமாவதும்சூரியன் முதலான தேவர்கள் ஏழாந்திருவிழாவில் கூடிவந்து வணங்க, தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலையை நெருக்கும்படி, மேகம் படிந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளமிக்கதும் ஆனது திருச்சண்பைநகர் ஆகும்.

விளக்க உரை

  • அக்காலத்துத் திருவிழாக்கள் பெரும்பாலும் ஏழாம் நாளில் முடிவுற்று வந்ததை இப்பதிகத்தால் அறியலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 23 (2018)

பாடல்

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம்  – திருமூலர்

பதவுரை

புறப் பொருளைக் காணும் கண் இல்லாதவர்கள் இருளிலும், விடி காலை புலர்ந்தாலும், விடிந்தப் பின்னும்  அதை அறியாமல் இருப்பதோடு  விடிந்தபிறகும் ஒளியில் பொருள்களை கண்டு பயன்பாடு கொள்ளவும் மாட்டார்கள். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர்கள், தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டாமல் இருந்து, அவ்வாறு அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரவும் மாட்டார்கள். ஆதலினான் நீங்கள் ஊனக் கண்ணை விலக்கி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காண்டால், அத்திருவருளே அறியாமையாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகி முன் நிற்கும்.

விளக்க உரை

  • இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயல வேண்டும் என்பது பற்றிய பாடல்.
  • ‘திருவருளே விளக்கு’ – நீங்கள் அவ்விளக்கையே உமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` எனும் பொருளில்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 22 (2018)

பாடல்

அஞ்சு முகத்தி நவமுகத்தி
          ஆறு முகத்தி சதுர்முகத்தி
     அலையில் துயிலும் மால்முகத்தி
          அருண முகத்தி அம்பரத்தி
பஞ்சா ஷரத்தி பரிபுரத்தி
          பாசாங் குசத்தி நடுவனத்தி
     பதுமா சனத்தி சிவபுரத்தி
          பாரத் தனத்தி திருகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி
          கருணா கரத்தி தவகுணத்தி
     கயிலா சனத்தி நவகுணத்தி
          காந்தள் மலர்போல் சதுர்கரத்தி
மஞ்சு நிறத்தி பரம்பரத்தி
          மதுரச் சிவத்தி மங்களத்தி
     மயிலா புரியில் வளரீசன்
           வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள், ஈசனைப் போல் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் மகேஷ்வரியாகி ஐந்து முகம் கொண்டவள்; வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, பலவிகரணி, பலபிரமதனி, சர்வபூததமனி, சக்தி, மனோன்மணி ஆகிய ஒன்பது நவ சக்தியானவள்; கௌமாரி வடிவத்துடன் ஆறு முகம் கொண்டவள்; பிராமி நிலையில் நான்கு முகம் கொண்டவள்; அலையில் துயிலும் திருமால் போன்று வைஷ்ணவியானவள்; உதயகாலத்து சூரியனைப்போல் செந்நிறமும், ஆகாய வடிவமாகவும் இருப்பவள்; வெண் மேகம் போன்ற நிறத்தினை உடையவள்; ஒன்றுக்குஒன்றுமேலாக இருந்து முக்தி தர வல்லவள்; அவினாபாவசத்தி ஆகிய சிவத்தில் இருந்து பிரியா ஆற்றல் கொண்ட சிவரூபம் கொண்டவள்; மங்கள வடிவமானவள்; பஞ்சாட்ரத்தின் பொருளாக விளங்குபவள்; கால்களில் பரிபுரம் எனும் சிலம்பு அணிந்தவள்; தன் திருக்கரங்களில்  பாசத்தினை வைத்து இருப்பவள்; அகிலத்திற்கு நடு நாயமாக இருக்கும் இமயமலையை இருப்பிடமாக கொண்டவள்; தாமரை மலர்  மீது அமர்ந்து இருப்பவள்; சிவபுரத்தினை ஆட்சி செய்பவள்; உலகிற்கு அன்னையாக இருப்பதால் கனத்த தனத்தை உடையவள்; சத்துவம், இராசதம், தாமதம் எனும் மூவகைக் குணங்கள் கொண்ட பல்வேறு தேவி வடிவங்களாகி இருப்பவள்; தாமரை போன்ற முகம் கொண்டவள்; கற்பக விருட்சமாக இருப்பவள்; கருணை எனும் அபத்தினை திருக்கரத்தில் கொண்டவள்; தவ குணம் உடையவள்; கயிலாசனத்தில் வீற்றிருப்பவள்; அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம் ஆகிய ஒன்பது குணங்கள் கொண்டவள்; காந்தள் மலர் போல் நான்கு கரம் கொண்டவள்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • அம்மையின் எழில் வடிவம் உரை செய்தது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 21 (2018)

பாடல்

வட்டையொப்பாகும் இனியசொல்மாதர் மயக்கத்திலே
பட்டையப் பாமிகயானிளைத்தேன் பண்டிருவர்க்கெட்ட
நெட்டையப்பாமறை காணத சேவடி நீயருள்வாய்
சட்டையப்பா வடுகா காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

பட்டை என்னும் ஆபரத்தின் ஒரு உறுப்பினை அணிந்தவனே, சட்டையப்பனே, வடுகனே, காழிப்பதியில் உறையும் ஆபதுதாரணனே, பெரும் காட்டினைப் போன்றதும், திசைகள் அற்றதாகவும் செய்யும் இனிய சொல்லைச் கூறும் மாதர்கள் மேல் மயக்கம் கொண்டு யான் இளைத்து விட்டேன். காலங்களால் அளவிடமுடியாததான முற்காலத்தில் திருமாலாலும், பிரம்மனாலும் காண இயலாதவாறு நெடிய அளவில் வளர்ந்தும், வேதம் எனப்படும் மறைகளாலும் காண இயலா திருவடியை நீ அருள்வாய்.

விளக்க உரை

  • பட்டை – மரத்தோல்; வாழைப் பட்டை; பொற்சரிகைப்பட்டி; கழுத்துப் பட்டை; பனம் பட்டை; போதிகை; மணியைத் துலக்கும்பட்டை; அணிகலனின் ஓர் உறுப்பு (யாழ்); நீர் இறைக்கும் கூடை; மரவுரி; தகடு; பனங்கை ( ‘நிர்வாணம் சுனவாகனம்’ என பைரவர் த்யான ஸ்லோகத்தில் இருப்பதாலும் மர உரி தரித்தவர் எனும் கருத்து விலக்கப்படுகிறது)
  • பண்டு – பழமை; முற்காலம்; முன்; தகாச்சொல்; நிதி ( குறிப்பு : பண்டிருவர் காணாப் படியார் போலும் – பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும் (6.89.3))

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 20 (2018)

பாடல்

அலைசேர் புனலன் அனலன் அமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிரும்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

குடவாயிலில் எனும் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவனானவன், அலைகள் ஏற்படுத்தும் கங்கையை அணிந்தவன்; அனலை ஏந்தியவன்; எண்குணத்துள் ஒன்றான மும்மலமில்லாதவன்; கபாலம் எனும் பிரமகபாலத்தில் யாசகம் பெறுபவன்; யகங்கள் கடந்தவன்; நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய திரிசூலத்தையும்,  மழுவாயுதம் முதலியவற்றையும் ஏந்தியவன்.

விளக்க உரை

  • சதுரன் – ‘மூவர்க்கும் முதல்வன்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன.  திறமையுடையவன்; நகரவாசி; பேராசைக்காரன் போன்ற பொருள்களும் இருக்கின்றன. பொருத்தமின்மை காரணமாக இவைகள் விலக்கப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 19 (2018)

பாடல்

நாட்பட் டிருந்தின்ப மெய்தலுற் றிங்கு நமன்றமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார் தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தமன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

இந்த உலகில் நீண்ட நெடுங் காலம் உயிர்வாழ்ந்து வாழும் காலத்தில் சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொல்லப்பட்டு அழிவதன் முன்னமே, குளிர்ந்த நீர் நிலைகளையும், தாளூன்றிய தாமரைப் பூக்களையுடைய பொய்கைகளையும் உடையதான  அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி  வலிமை உடையவர்களாகி  யம பயத்திலிருந்து விடுபட்டோம்.

விளக்க உரை

  • வன்மை – நமன் தமரால் கொல்லப்பட்டு ஒழிவதன் முந்திச் சிவனடிமையாகி நின்ற திறம் குறித்தது
  • நாள் பட்டிருத்தல் – நெடுங்காலம் வாழ்தல். இன்பம் எய்தல்
  • உறுதல் – சிற்றின்பம் அடைய விரும்புதல்
  • தமர் – எமதூதர்
  • கோட்படுதல் – கொள்ளப்படுதல்
  • முந்துறல் – முந்திக் கொள்ளல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 18 (2018)

பாடல்

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் – வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் சக்திகளை இறைவன், தன் ஆற்றலைக் கொண்டு தூண்டி அவை செயல்படுமாறு செய்து உயிர்களின் பந்தம் மெலிவடையச் செய்யும் மறைத்தல் தொழிலாகிய திரோதான சக்தி கொண்டு ஆன்மாவில் பதியும் படி செய்யும் திருப்பெருந்துறை இறைவன், வையத்து இருந்து தன் வேலை மடுத்து என் மனதில் நுழைந்து ஊடுறுவச் செய்தான். இதற்குக் காரணமாக நான் செய்த பிழையை அறிந்திலேன்; அவனது திருவடியையே கைத்தொழுது உய்யும் வகையின் உயிர்ப்பு நிலையையும் அறிந்திலேன்.

விளக்க உரை

  • ஞானத்தை அருளியதை பழிப்பது போலப் புகழ்ந்தது.
  • உறை – தற்போதம் எழுதல்.
  • வேல் –  திரோ தான சத்தி

Loading

சமூக ஊடகங்கள்

சலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – அன்னச் சேவல்

புகைப்படம் : SL Kumar

வினா (Prabakar Sarma)

சங்ககால இலக்கியங்களுள் பரிபாடல் எட்டுத் தொகை என்ற பிரிவிற்குள் வருகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முந்தைய பரிபாடல்கள் பெரும்பாலும் அகப்பாடல்களாாகவே இருந்துள்ளன. அதன் பின்னர் கிடைக்கபெற்ற பரிபாடல்கள் பெரும்பாலும் இறைவனை ஏற்றிப் பாடும் பாடல்களாகவே உள்ளன. வேதம் குறித்து, வேத முதல்வனான திருமால் குறித்தும் கூறும் பாடல்கள் முக்கியமானவை.

கடுவனிள எயினனார் என்ற ஒரு புலவர் பாடிய பரிபாடல் ஒன்றில் திருமாலை ஏற்றிக் கூறும்போது,” மாவிசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் செவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்,”என்று திருமாலைப் புகழ்கிறார். அதாவது ஒருமுறை கடும் புயலுடன் கூடிய மழை பொழிந்தபோது திருமால் ஒரு நெடிய அன்னச் சேவலாக வடிவெடுத்து தனது இரண்டு சிறகுகளையும் விரித்து இவ்வுலகை காத்ததாக ஒரு செய்தி கூறப்படுகிறது.

அப்படி ஒரு புராண கதை புராணங்களிலோ , பாகவதத்திலோ, மகாபாரதத்திலோ படித்த ஞாபகம் இல்லை.

தகவல் அறிந்தவர்கள் விளக்கவும்

விடை

அன்னச்சேவல் என்பது குதிரையை குறிக்க சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பரிமுகக் கடவுளாகி அவதாரம் எடுத்து காத்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். புனல் என நீர் நிலைகளைக் கொண்டாலும், வறளச் செய்து வேதங்களை காப்பாற்றியவன் என்பதாலும் இந்த நிலைப்பாடைக் கொள்ளலாம்.

யோக மரபில் சில இடங்களை வாசி வேகத்தை குதிரையுடன் ஒப்பிட்டுக் கூறுவார்கள். அட்டமா சித்தியில் ஒன்றான பிராப்தி என்பது தமது ஆற்றலால் வெயில் மழை முதலிய கால நிலைகளை மாறச் செய்தலைக் குறிக்கிறது. அவ்வாறு இருந்து கோவர்த்தன கிரியை குடையாக கொண்டதையும் குறிக்கலாம்.

அறிந்த ஆன்றோர் உரை அருளட்டும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018)

பாடல்

தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

காஞ்சித் திருத்தலத்தில் உறையும் மேற்றளி ஆனவர், தெற்குப் பகுதியை ஆண்ட இராவணன், தனது கர்வத்தால் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்ட போது, சிறந்த அழகான ஆபரணங்களை அணிந்த பெண்ணாகிய  பார்வதி  நடுக்கம் கொண்டது கண்டு, நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால் கயிலாய மலையை அழுத்த, அதனால் அவன் தலைகளை நெரியுமாறு செய்த போது, தன் தவற்றை உணர்ந்து, கரும்பு போன்று இனிய கீதங்களைப் பாடியதால் அவன் தவற்றினை மன்னித்து  அதனால் அவனுக்கு அருள் செய்தவர் ஆவார்.

விளக்க உரை

 

  • தென்னவன் –  இராவணன்
  • சேயிழை – கல் இழைத்துச் செய்யப்பட்ட அணிகளைப் பூண்டவள். இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
  • மன்னவன் – என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன்)
  • நெரிய – நொறுங்க
  • கன்னலின் – கரும்பினைப் போலும் இனிமை தரும்
  • கீதம் – சாமகானம்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கேதீஸ்வரம்

 

தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருக்கேதீஸ்வரம்

  • காலம் – கி.மு.6 ம் நூற்றாண்டு
  • பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. இலங்கையின் நான்கு திசைகளிலும் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள் – 1. நகுலேச்சரம், 2. திருக்கோணேச்சரம், 3. திருக்கேதீச்சரம், 4. தொண்டேச்சரம்
  • கேது ஈசனை வழிபாட்டு அருள்பெற்ற தலம் திருக்கேதீஸ்வரம். கேது+ஈச்சரம்=கேதீச்சரம் (திருக்கேதிச்சரம்) 1
  • சூரபதுமனின் வழியில் வந்த துவட்டா, பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டு திருவருள் கைகூடி பிள்ளைப் பேறு பெற்றத் தலம். துவட்டா உருவாக்கியதால்  துவட்டா, காலப் போக்கில் பெருநகரமாய் ஆனதால் மாதுவட்டா
  • மாந்தை என வழங்கப்பட்ட தமிழ்ப்பெயரின் பாளி மொழிபெயர்ப்பே மகாசித்தா..மகா – பெரிய, , தித்தா – இறங்குதுறை அல்லது துறைமுகம். பெரிய துறைமுகம்
  • இராமர் சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட  பிரமகத்தி தோஷம் போக்க வெள்ளிலிங்கம் செய்து வழிபட்டத் தலம்
  • நாகர்கள் வழிபாடு செய்த திருத்தலமானதால் நாகநாதர்
  • பஞ்சபாண்டவர்களுள் ஒருவராகிய அர்ஜுனன், தீர்த்தியாத்திரையின் போது தென்னகத்தலங்களை வழிபட்டபின்னர் வழிபட்டத்தலம்.
  • உலகிலேயே மிகபெரிய வடிவிலான சோமாஸ்கந்தர் மூர்த்தம் உள்ள தலம்
  • ‘பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர் கேதீச்சர மேவினார் கேதாரத்தார்..’ என்று திருநாவுக்கரசரால் பாடப்பெற்றத் திருத்தலம் (திருவீழிமிழலைப்பதிகம் – ஆறாம் திருமுறை)
  • ‘..நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்..’ என்று அகநானூறிலும், ‘…புன்னாகச்சோலை புனற்றெங்கு சூழ் மாந்தை…’ என்று முத்தொள்ளாயிரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளத் தலம்.
  • ‘ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரான்’ எனும் குயிற்பத்தில்(திருவாசகம்) உள்ள பெருந்துறை என்று மாந்தை நகரம் குறித்த வரிகள்.
  • கோயிலுக்கு அருகினில் உள்ள மடங்கள் – சம்மந்தர் மடம், சுந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம், நாவலர் மடம்

 

1 – தக்ஷிண கைலாச மான்மியம் எனும் வரலாற்று நூல்

 

தலம் திருக்கேதீஸ்வரம்
பிற பெயர்கள் திருக்கேதீஸ்வரம், மகாதீர்த்தம், மகாதுவட்டாபுரம், மாந்தை
இறைவன் திருக்கேதீஸ்வரர், நாகநாதர்
இறைவி கௌரியம்மை
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் பாலாவி
விழாக்கள் சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம்
மாவட்டம் மன்னார் மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், மாதோட்ட நகரம், மன்னார் மாவட்டம், இலங்கை
வழிபட்டவர்கள் அகத்தியர், பிருகு மகரிஷி, மண்டோதரி, மயன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்  1 பதிகம் (2ம் திருமுறை – 107வது பதிகம்), சுந்தரர் 1 பதிகம் (7ம் திருமுறை – 80வது பதிகம்)
நிர்வாகம்
இருப்பிடம் இலங்கை
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 227 வது தலம்
ஈழ நாட்டுத் தலங்களில் 2 வது தலம்.

 

 

 

பாடியவர்            திருஞானசம்பந்தர்
திருமுறை          2
பதிக எண்           107
திருமுறை எண்  8

பாடல்

தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே

பொருள்

தென்னிலங்கை குலத்தலைவனாகவும்  மன்னனாகவும் ஆன இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன் முடி,வலிமை வாய்ந்த தோள்கள் ஆகியனவற்றை நெரித்து அவன் தலைக்கனம் அழித்துப் பின் அவனது பாடல்கேட்டு அவனுக்கு  அருள் செய்த தலைவனான ஈசன், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரில் அன்போடு அன்பர்கள் தியானித்து வழிபடும் கேதீச்சரத்தில் உள்ளார்.

 

 

 

 

பாடியவர்              சுந்தரர்
திருமுறை            7
பதிக எண்             80
திருமுறை எண்    8

பாடல்

அட்டன்னழ காகவ்வரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை யாள்வான்திருக்
கேதீச்சரத் தானே

பொருள்

அட்ட மூர்த்தங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக  நிற்பவனாகிய  திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது இடுப்பில் பாம்பினை கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரம் செய்கின்ற சோலைகளையுடைய ‘மாதோட்டம்’ என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை அணிந்த அழகிய நெற்றியை உடையவளோடு , பாலாவி ஆற்றின் கரைமேல் மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் இருக்கின்றான்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 1 (2018)

பாடல்

பாதாம் புயத்திற் சிறுசதங்கைப்
     பணியுஞ் சிலம்புங் கிண்கிணியும்
   படர்பா டகமுந் தண்டையுடன்
     படியுங் கொலுசுந் தழைத்தருளும்

பீதாம் பரமுந் துவள் இடையும்
     பிரியா தரைஞாண் மாலைகளும்
   பெருகுந் தரள நவமணியும்
     புனையுங் குயமும் இருபுறமும்

போதா ரமுத வசனமொழி
     புகலும் வாயும் கயல்விழியும்
   புண்ட ரீகத் திருநுதலும்
     பொன்போற் சடையும் மதிமுகமும்

வாதா டியபே ரின்பரச
     வதனக் கொடியே உனை அடுத்தேன்
   மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயே! பாதங்களில் சிறிய சதங்கை, அந்த பாதங்களை பணிந்து வணங்குவதான சிலம்பு, கிங்கிணி, காலிலே படந்து இருப்பது போன்ற மணி ஓசை எழுப்பும் பாடகம், தண்டை, அதில் படிந்திருப்பது போல் தோற்றம் ஏற்படுத்தும் கொலுசு, துவள்வது போன்ற இடையில் பட்டு, பெருமாள் அணிந்திருக்கக்கூடியது போன்ற பீதாம்பரம், விட்டுப் பிரியாத அரைஞாண் மாலைகள், இரு புயங்கள், அவற்றுடன் ஒட்டி இருக்கும் மார்பினில் கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், வைரம் இவற்றுடன் முத்துக்கள் பதிக்கப்பட்டதான ஒன்பது வகை மணிகள் கூடிய மாலையை அணிந்து, மீன்களை ஒத்த கண்கள் கொண்டவளாகி, தாமரை மலர் போன்ற நெற்றி, பொன் போன்ற பிரகாசம் உடைய கூந்தல், சந்திரனை ஒத்த முகம் கொண்டு ஐயனோடு வாதாடுவதில்  பேரன்பு கொண்டவளாகி அடியார்களுக்கு பேரின்ப ரசத்தினை வழங்கும் கொடியைப் போன்றவளாகி இருக்கிறாய்! நீ ஏற்றதால் உன்னிடத்தில் பொருந்தி நின்றேன்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • பாதாதி கேச தரிசனம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 31 (2018)

பாடல்

 

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்

ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்

நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்

பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே

 

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

பதவுரை

சிவபெருமான் முனிவர்களுக்காக பாடலாக உடைய வேதத்தை அருளிச் செய்தவர். புறங்காடு எனப்படும் சுடுகாட்டினை ஒரு இடமாகக் கொண்டு எவ்விதமான குறையும் இல்லாமல் வாழ்பவர். இடுப்பிற்கு கீழ் ஒற்றை ஆடையை அணிபவர். திருச்சடை முடியில் கங்கையைத் தாங்குபவர். இடபத்தினை வாகனமாகக் கொண்டவர். இவ்வாறான சிவபெருமான் திருப்பைஞ்ஞீலியில் தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யது வீற்றிருந்து அருளுகின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!