மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து, பயனில்லாத சொற்களைப் பேசி பின்னுதல் உடைய சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே மக்கள் பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு நிற்க நீ தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று இவனே தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.
கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும், மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப் பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே!
திருவாசகம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்
பதவுரை
எம்பெருமானே! ஞானத்தினை வழங்கும் நூல்களைப் படித்து அவற்றின் பொருள்களை அறியவில்லை; அதன் பொருள் பற்றி மனம் கசிந்து உருகவும் இல்லை; கற்று அறிந்தது கொண்டு, வாக்கின் தன்மையால் வேறு தெய்வங்களை துதித்தும் அறியவில்லை; ஆனாலும் ஆராய்ந்து, தங்களுடைய நீண்ட திருவடிகளை பெருமிதத்துடனும், செருக்குடனும் வந்து அடைந்து இருந்தேன் என்பதைத் தவிர எதுவும் செய்யவில்லை. அதன் பொருட்டு அடியேனாகிய எனக்கு, உன் பொன் போன்ற திருவருளைக் காட்டியது, நாயினுக்கு, பொன்னால் ஆகிய ஆசனத்தை இடுவது போன்றது அல்லவா?
விளக்கஉரை
இறைவன் தன்னையே நினைப்பவர்களுக்கு பேரருள் செய்வான் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.
கற்றறியேன் கலைஞானம் – அறிவால் பெறப்படுவதுமான கலைஞானத்தினை கற்றலாலும் கேட்டலாலும் வளர்த்துக் கொண்டாலும் அது இறைவனடி சேர்க்க துணை செய்யும் என்பது உறுதியாக கூற இயலாது. எல்லாக் கலைகளுக்கும் மூலமாக உள்ள பொருள் எது என்ற முறையில் சிந்தனையைச் செலுத்தி, உய்யும் கதிக்கு வழிகாட்டி, அதன் இறுதிப் பயனாகவுள்ள இறையருளைப் பெறக் கூடுமேயானால் அத்தகைய ஒரு கலைஞானம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்பது பற்றியது.
ஒரு தகுதியும் இல்லாத எனக்கு இத்துணை அருமையான கருணையைப் புரிந்தது என்பது நாய்க்குப் பொன்னாசனம் இட்டது போன்றது என்று உவமையைச் சொல்லி விளக்கியது.
வெள்ளை பாஷாணத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் மூலவர். திருவடிவம் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி திருக்காட்சி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை – பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
அர்த்தநாரீஸ்வரர் பாதத்தின் அடியில் தேவ தீர்த்தம் எனப்படும் நீர் சுரந்தவாறு உள்ள அமைப்பு
ஆண் பாகமான வலக்கையில் தண்டம் ஏந்தியும், பெண் பாகமான இடக்கையை இடுப்பிலும் வைத்தவாறும் கால்களிலும் ஒருபுறம் சிலம்பும் , மறுபுறம் கழலும் அணிந்தவாறு திருக்காட்சி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் உற்சவ திருமேனி
வெள்ளைபாஷாணத்தால் செய்யப்பட்ட திருவடிவம் ஆன செங்கோட்டு வேலவர் வலக்கையில் வேல் ஏந்தி , இடக்கையை இடுப்பில் வைத்தவாறு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி; அடியில் உள்ள பீடம் சதுர வடிவிலானது
கேதாரகௌரியம்மை மரகதலிங்கத்தை வழிபாட்டு சிவனாரின் இடப்பாகத்தை பெற்ற தலம்
கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி
ஆமை வடிவத்தின் மேல் அமைந்த நந்தி மண்டபம்
ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் இத்தலமும் ஒன்று
மேலமாடவீதியிலிருந்து பார்ப்பதற்கு நாகம் போன்று காட்சியளிப்பதால் நாகாசலம், நாககிரி.
மலை சிவந்த நிறமாக காட்சியளிப்பதால் செங்கோடு
விறன்மிண்ட நாயனார் பிறந்து, வாழ்ந்து, முக்திப்பெற்ற தலம்
திருஞானசம்பந்தர், திருநீலகண்டப்பதிகம் பாடிய தலம்
திருஞானசம்பந்தர், கொங்கு நாட்டுத் தல யாத்திரையின் போது, முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை ‘நளிர்சுரம்’ பற்றி வருத்த ‘அவ்வினைக் கிவ்வினை’ என்னும் பதிகம் பாடி, ‘தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்’ என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
பாண்டிப்புலவரேறு என்ற புலவருடன் குணசீலர் என்ற புலவர் புலமையை நிருபிக்கும் போது “சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே” – என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடிய போது, குணசீலர் என்ற அந்த புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டு “அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே” என்று பாட்டினை முடித்து திரும்பிப் போகும்படிச் செய்தார்
1200 படிகள் மேல் திருக்கோயில் உள்ளது. பாம்பு உருவங்கள் கொண்ட படிக்கட்டுகள்; ஓரிடத்தில் நீளமான 20 அடி பாம்பு வடிவத்திலேயே ஏறும் வழி
இத்தலம் பற்றிய குறிப்புக்கள் உள்ள நூல்கள் – சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம்
கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி
அலைகள் நிறைந்ததும், குளிர்ந்த கங்கை நதி, பாம்பு ஆகியவற்றை தனது திருச்சடையில் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையில் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடையதும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுபவர்களது தடுமாற்றம் விலகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 107
திருமுறை எண் 6
சுழித்து ஓடக்கூடிய கங்கை, அதனோடு ஒத்து காணப்படுவதாகிய திங்கள், மிகவும் பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருக்கமாக உள்ள சிறப்புகளை தலையில் உடைய முக்கண்ணனும் ஆதியும் ஆகிய சிவபிரானுடைய சைவ வேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினை உடையர்களும், இணைந்த திருவடிகளை உடையவனும், அந்தணர் குலத்தினை உடையவருமான பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் முதலியவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும்.
விளக்கஉரை
தாள் இணைத்து – கால்களைப் பத்மாசனம் முதலிய ஆசனவகைகள் பொருந்தப் பின்னி என்றும் கூறலாம். சிவசக்தி ரூபமாக எனவும் கொள்ளலாம்.
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என்பதை மட்டும் நினைந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை உடைய அந்தணர்கள் என்ற பாடம் புதுவைபிரெஞ்சுஇந்தியக்கலைநிறுவனஆய்வுப்பதிப்பில் காணப்படுகிறது.
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என அகமுகமாகயோகமரபில்காணுதலும் உண்டு. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு
தனிப்பாடல் திரட்டு – ஔவையார்
பதவுரை
தானம் கொடுத்தலே அறமாகும். தீவினைபற்றி தீயவழியில் பொருள் ஈட்டுதல் விடுத்து நல்வழியில் பொருள் ஈட்டுதலே பொருளாகும். எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஒன்றாக் கூடி முடிவு எடுப்பதே இன்பமாகும். பரனை நினைந்து அவன் அருளால் இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீட்டினை நல்கும்.
விளக்கஉரை
சைவ சித்தாந்த கருத்துப்படி வீடு என்பது துன்ப நீக்கத்தினையும், பேறு என்பது இன்ப ஆக்கம் என்பதையும் குறிக்கும்.
செயல்கள் அனைத்தும் பரமன் என்பதால் பரமனை நினைந்து செய்யப்படும் ஈதல் அறமாகி விடுகிறது; தீவினைகள் விலகி நல்வினைப்பட்டு பொருளீட்டுதல் இயல்பாக நிகழும். காதலர் இருவர் கருத்து ஒருமித்தல் நிகழும்; அவன் நினைவாலே இம்மூன்றையும் விட்டு வீடுபேறடையவும் இயலும். அஃதாவது உலகியல் செயல்களும், ஆத்ம செயல்களும் பரமனாகிய ஈசனாலேயே நிகழ்கின்றன.
எல்லாப் பொருள்களும் பரமனது உடைமைகள் என்பதால் அவற்றை நமது உழைப்பிற்கு எற்ப அவன் அநுமதிக்கும் அளவிற்கு அநுபவிக்கலாமே தவிர, நாமாகப் பிறர்க்கு வழங்க நமக்கு உரிமை இல்லை. எனவே அவனுடைய பொருள் என்னும்போது அவனை நினைந்து ஈதலே முறையாகும். ஆகவேஅது அறமாகி விடுகிறது. ‘பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல் இறக்கும்பொழுது கொடுபோவதில்லை’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
இலக்குத் தவறாது சென்று வினையாற்றும் ஆயுதம் ஆகிய கணைகளொடுகூடிய விற் படையை உடைய இராவணனை ‘ஆ’ என்று அலறுமாறு தாக்கி அருளிய சிவபிரானுக்குரிய இடமும், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.
விளக்கஉரை
மறிமான் – மான்கன்று; ஆடுகளும், மான்களும் எனவும் கூறலாம்.
காலத்தால் முற்பட்ட மறையின் முடிவாக இருந்து அதன் விளைவாக பழுத்த பழமாகவும், அடியவர்களுக்கு அருளை வழங்கும் அருட்பழமாகவும், முதிர்ச்சி உடைய பக்தர்கள் நெஞ்சில் படர்ந்த பழமாகவும், புதுமையாக சூடப்பட்ட முடி மேல் என்றும் கனிந்திருக்கும் மேன்மை பொருந்திய பழமாகவும், இமைத்தலை செய்யா தேவர்கள் தேடித் தேடியும் காண இயலாமல் அவர்களுக்கு எட்டாத பழமாகவும், தன்னைத் தானே உணர்ந்தவர்கள் கண்டு புசிக்கும் பழமாகவும், பக்தர்களுக்கு வேண்டியதை அருளுவதால் கருணைப் பழமாகவும்! சிவ சக்தி ரூபமாக் இருப்பதால் சிவப் பழமாகவும், கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவன் முடிமேல் இருக்கும் கனிந்த பழமாகவும், அருளை வாரி வழங்கி நல் கதிக்கு அழைத்துச் செல்வதால் கதிப்பழமாகவும், சிதம்பரத்துள் உள்ள கனகசபை தனில் மணம்வீசிக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கும், மாபெரும் யோகியர்களுக்கும் உதவி நிற்கக் கூடிய அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் ஆகிறாய்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
அருட்பழமாக அன்னையை கண்டு வியத்தல் பற்றியது இப்பாடல்
‘பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை’ எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
‘இம்மணியா லிழைத்துநவ முடிசூட்டி யிச்சிங்க விளவெ றன்ன’ எனும் திருவிளையாடற் புராண வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. சில இடங்களில் ‘நவமணியால்’ இழைத்தது எனவும் பொருள் விளக்கப்படுகிறது.
‘நவமுடிமேல் என்றுங் கனிந்த திருப்பழமே’ என்றும் ‘கயிலா யத்தில் அரன்முடிமேல் கனிந்த பழமே’ என்பதும் ஒன்று போலவே தோன்றும். பொருள் விளக்கத்தில் அதன் தன்மையை அழுத்தி கூறுமிடத்து அவ்வாறு இருமுறை கூறுதல் மரபு. அன்றியும் அம்மையைக் கண்டதும் தன்நிலை மறந்து புத்தி பேதலித்து இருந்த அவர் வாழ்வியல் முறை வைத்தும் இரு முறை வந்திருக்கலாம்.
இந்த உலகினில் துன்பங்களைத் தரும் செல்வத்தினாலும், பொருள் ஈட்டி அதை யாரும் அறியாமல் மறைத்து வைக்க பயன்பாடு உடையதும், தருக்கநூல்களில் கூறப்படும் பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் ஆகிய மூலப்பொருள்கள் ஆன இந்த உடலாலும் எந்த விதத்திலும் பயன் இல்லை. இவ்வாறான நிலை இல்லா பொருள்களான செல்வமும், உடலும் நீங்கும் போது ‘உடைந்த முனை உடைய ஊசியும்’ பயன் தராது. (ஆதலினால்) வலிமையான தோள்களை உடைய அண்ணாமலையார் மலர் பாதத்தை எப்பொழுதும் போற்றி புகழ்ந்து கொண்டிருப்பாய் நெஞ்சமே.
விளக்கஉரை
திரவியம் என்பதற்கு பொருள், சொத்து, பொன் எனும் பொருள்கள் இருந்தாலும், ‘தீதுற்ற செல்வமென்’ என முன் வரியில் இருப்பதாலும் திரவியத்திற்கு பொருள் எனும் கருத்து விலக்கப்பட்டுள் உடல் எனும் கருத்தில் பொருள் விளக்கப்பட்டுள்ளது.
27-Jul-2018 – ஆடி – உத்திராடம் – பட்டினத்தார் குரு பூஜை
உலகத்தார்க்கு பொருந்தாத செய்கைகளாகிய சாம்பல் பூசிக் கொள்ளுதல், எலும்பும் தலைமாலையும் அணிதல், தலை ஓட்டாகிய மண்டை ஓட்டில் இரத்தல், நஞ்சை உண்ணுதல், பாம்பினை அணிதல், சடைதரித்துப் பெண்ணொரு பாகன் ஆதல் போன்றனவும் கொண்டு பொலியக் கொண்டவராய், போற்றுதலாகிய சொற்களைச் சொல்லி விண்ணோர்கள் புகழுமாறு விளங்குபவராய், தம்மிடத்தில் அன்பு கொண்ட அன்பருக்கு அருளும் தன்மை உடையவராய், நிலனொடு நீராய் (ஏனைய பூதங்களாகவும் -அவையாகி நிற்றல் ) நிற்பவராய், புதுமையாகவும், வேறிடங்களில் காணப்படாது நிறைந்து நின்று மருட்கையை விளைத்த கூட்டம் எனப்படும் பூதவேதாளங்கள் முதலிய பதினெண் கணங்களுமாகவும். உமையும் விநாயகனும் கொண்டவராய், உடல் நோயும், உயிர் நோயும் ஆகிய பிணிதீர்க்கும் மருந்தின் தன்மை கொண்டவராய் வாய்மூர் அடிகளாகிய சிவபெருமானை நான் கண்டேன்.
உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி அலகிலா உயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத் தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே நிலவுசீர் அமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும்
திருநெறி 2 – சிவஞான சித்தியார்
பதவுரை
புவனத்தினை தோற்றுவிக்கும் போது அந்த உலகங்கள் எல்லாமாகியும், உலகில் இருந்து வேறுபட்டவனாகவும், உடலில் உயிர் சேரும் போது ஓங்கிய அறிவொளி எனப்படும் சக்திரூபமாக பிரகாசமாகவும், அவன் விளையாட்டை பற்றி அலகிலா உயிர்களானது, கன்மத்தினை பற்றி செலுத்தி, அந்த உயிர்களனது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழிலினை செய்யும் போது அவ்வைந்தொழிலை நடத்தும் பதிரூபமாகியும், ஐந்தொழிலின் தன்மைக்கு ஏற்ப வேறு வேறு தொழிலை செய்பவனாய், அதன் பலன்கள் தன்னை அடையாதவனாய், எவ்விடத்திலும் தானே மலம் அத்தன்மைகளின் வேறாய் அவற்றோடு அதன் தன்மையதாய், எவ்விடத்தும் தானே இயல்பான சுயம்பிரகாசரூபம் உடையவனாய் நிற்பன்.
விளக்கஉரை
எல்லாவற்றிலும் தோய்ந்த போதும் தானே சுயம் பிரகாசமாய் நிற்கும் தன்னுண்மையினை சிவமெனவும், ‘உலகெலாமாகி வேறாயுடனுமாய்’ இவ்வாறு உயிர்களின் வழி நிற்கும் தன்மையில் சத்தியெனவும் சிவாகம் நூல்கள் கூறும்.
தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்ந்தற்றால் – தன்னை வியவாமை அன்றோ வியப்பாவது! இன்பம் நயவாமை அன்றோ நலம்
நீதிநெறி விளக்கம் – குமரகுருபரர்
பதவுரை
மற்றவர்கள் மூலமாக பிறர் வியக்கும்படித் தன்னை புகழ்ந்து பேசும்படி செய்யும் செயலானது, எரியும் நெருப்பில் தண்ணீரை ஊற்றி வளர்ப்பது போன்றது. தன்னைத் தான் வியக்காமல் இருப்பதுதான் வியப்புக்கு உரித்தான ஒன்றாகும். எனவே அவ்வாறான் புகழ் இன்பத்தைத் விரும்பிச் செல்லாமைதான் நலம் பயக்கும்.
விளக்கஉரை
தானே தன் புகழைக் கூறச் செய்தல் குற்றம் என்று கூறும் பாடல்.
திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அமர்ந்து அருளும் பெருமானே! தேவரும், ரிஷிகளும், முனிவர்களும் மற்றவர்களும் தங்கள் உடலின்மேல் புற்று வளரப் பெற்றும், மரம் வளரப் பெற்றும், நீரும் காற்றுமே உணவாக கொண்டு மெலிந்து வாழ்ந்தாலும் அவருள் ஒருவரும் உன் தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காணமுடியாத அரசனே! அடியேனை ஒரு சொல் சொல்லி என்னை அகப்படுத்தி ஆட்கொண்டாய். இக்கருணையை உணராமல் நெஞ்சம் துடிக்கமாட்டாமல், மனம் மிகவும் உருகமாட்டாமல், உன்னிடம் அன்பு செய்யமாட்டாமல் இன்னும் உலகில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.
விளக்கஉரை
ஓர் வார்த்தை – திருவைந்தெழுத்து மந்திரம். அகச் சான்றாய் ‘நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்’ எனும் திருவேசறவு பாடல் மூலம் திருவைந்தெழுத்து மந்திரம் பெற்றதை அறியலாம்.
கருத்து உணர்த்தாதமுன்னர் பதைத்தலும், உருகலும் போன்றவை இல்லாமை குற்றம் அல்ல; அவ்வாறு உணர்த்திய பின்னரும், அவை இல்லாது இருக்கின்றேன்` என இரங்கியவாறு.
பரியா உடல் – அன்பிற்கு உரிய மெய்ப்பாடுகள் இல்லா உடல்
பல்வேறு அறிஞர்கள் கருத்துக்கள் பகிர, சொல் பற்றி அறிய இருக்கும் மிகச் சிறந்த பக்கங்கள்/ தளம் இவற்றில் இது முக்கியமானது.
—————————————————————————————————-
Sundar Gopalakrishnan ‘தெய்வம்’ என்ற சொல் எந்த நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது?
மணி மணிவண்ணன் தமிழில் அப்படிப்பட்ட ஆய்வுக்கு இடமில்லை. ஆவணங்களின் வழியேதான் அப்படிப்பட்ட காலக்கணக்கைச் செய்ய முடியும். ஆனால், தமிழில் எல்லாச் சொற்களுமே மொழி பிறந்த காலத்திலிருந்து அடிப்படை ஒலிகளிலிருந்து ஏரணத்துடன் பிறந்தன என்ற நம்பிக்கை உள்ளவர்கள் சொற்கள் தோன்றி வழக்கிழக்கும் என்பதை ஏற்க மறுப்பார்கள்.
Sundar Gopalakrishnan மிக்க நன்றி. எனக்கான பதிலை நீங்கள் உரைத்து விட்டீர்கள். காரணம் பக்தி இலக்கியம் தொட்டு இச் சொல் பயன்பாட்டில் இருக்கிறது எனில் அதன் காலத்தை எளிதில் அறியலாம் என்பதே நோக்கம். சித்தர் இலக்கியம் எனில் கால நிர்ணயம் செய்ய இயலாது போன்ற முடிவுக்கு வரவே இக்கேள்வி
Chokan G சங்க காலங்களிலேயே வழங்கி வந்திருக்கிறது. தெய்வந் தொழாஅள்….என்பது குறள்வரி.
Sundar Gopalakrishnan சங்க காலம் என்பது திருவள்ளுவர் காலத்திற்கு முற்பட்டது என்பது என் துணிபு. ஆகவே இது திருக்குறளுக்கு முன்பு இச் சொல் பயன்பாட்டில் இருந்திருக்கிறதா என்பதை கூறுங்கள்.
Sivakumar தீ – வழிபாடு – Theo – Greek , Dev – Stk, என்பது பாவாணர் கூற்று
Chokan G அருமையான எடுத்துக்காட்டு ஆனால் நண்பா் காலத்தையல்லவா சொல்ல கேட்கிறார்.
Badri Seshadri இணையத்தில் சங்க இலக்கியத் தரவகம் (corpus) ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்து பல ஆய்வாளர்கள் சொந்தத்தில் இதனை வைத்திருக்கிறார்கள். தனித்தனியாகத் தேடவேண்டும். நற்றிணையில் மட்டும் வரும் “தெய்வம்” கீழே:
நற்றிணை 9:1-2, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு
மணி மணிவண்ணன் Sangam Concordance தளத்தில் தேடலாம்.
Badri Seshadri அகநானூறு 110, போந்தைப் பசலையார்
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
அகநானூறு 166, இடையன் நெடுங்கீரனார்
உயர் பலி பெறூஉம் உருகெழு தெய்வம்
அகநானூறு 309, கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார்
அம்பு சேண்படுத்து வன்புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
அகநானூறு 360, மதுரைக் கண்ணத்தனார்
வெருவரு கடுந்திறல் இரு பெரும் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் போல
மணி மணிவண்ணன் http://tamilconcordance.in/
Badri Seshadri நன்றி மணி. மணி சுட்டிய தளத்தில் தேடினால் கிடைத்த தகவல் இது. தொல்காப்பியத்தில் தெய்வ(ம்) என்பது 9 இடங்களில் வருகிறது. எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலுமாகச் சேர்த்து 43 இடங்களில். திருக்குறளில் 6 இடங்களில்.
Chokan G அருமையான எடுத்துக்காட்டு,நமக்கு கிடைத்திருக்கும் இலக்கண இலக்கிய நூல்களில் தொன்மையானது தொல்காப்பியமே.
Raveenthiran Venkatachalam தெய்வம் என்ற சொல்லுக்கு தீண்டி வருத்துவது என்பதே பொருள். தெய்வங்களெல்லாம் ஆயுதங்களைத் தாங்கி இருந்ததால் அப்பெயர் வந்திருக்கலாம். மேலை நாட்டின் old testament ள் கூட கடவும் கோபக்காரராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். தெய் என்ற உரிச்சொல்லுக்கு அழி என்பதே பொருள். தொல்காப்பியர் காலத்திலேயே கடவுள் தீண்டி வருத்தும் என்ற கருத்தாக்கம் இருந்ததை உணரமுடிகிறது.
சுகி உதயகுமார் தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் !
Logan K Nathan சமஸ்கிருத மொழியில் தெய்வ என்பது விதி(Fate), எதிர்பாராத, துரதிர்ஷ்டவசமாக என்பது தான் பிரதான பொருள்.
முருகன் நடராஜன் அறுதியிட்டுக் கூற இயலாது. தொல்லியல் அகழாய்வுகளின் அடிப்படையிலே இன்று சங்க இலக்கியத்தின் காலமானது பொஆமு 5ஆம் நூற்றாண்டு வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் தெய்வம் என்ற சொல்லானது அதிகபட்சமாக பொஆமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்தும் குறைந்தது பொஆமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்தும் வழக்கில் இருந்திருக்கலாம்.
அம்பலத்தில் ஞான நடம் புரிகின்ற பெருமானே; நீ மேலான ஞான நடனத்தைச் செய்கின்ற அருட்பதி ஆகிய இறை தத்துவமான சுத்த தத்துவ நிலை முதல் தத்துவாதீதப் பரவெளி நிலை கடந்து உரைப்பதற்கு இயலாத வெறுவெளி வரையிலான படிகளைக் கடந்து அதற்குரிய படிகள் எல்லாம் ஏறி அடையுமாறு அருள் செய்தாய்; அவ்வாறு அடைந்தப்பின் எனக்கு, ஒளிர்கின்ற கொடிகள் நிறைந்த மணிமாடத்தை யுடைய திருக்கோயிலையும், அவ்வருள் நிலையமாகிய திருக்கோயிலில் தலைவன் நடுவில் இருப்பதை எளியேன் காணச் செய்து, அக்கோயிலில் கோபுர வாயிலில் குற்றமில்லாத அழகிய கதவைத் திறந்து காட்டிப் பின்னர் அதனை மூடும்படி செய்து அருள் செய்தாய்; அதற்கு ஏற்ற தருணம் இதுவாக இருப்பதால் அதனைத் மீண்டும் திறந்து அடியேனுக்கு அருளுதல் வேண்டும்; அவ்வாறு இன்றி தாமதித்தால் நான் அரைக்கணமும் உயிர் தாங்க மாட்டேன்.
விளக்கஉரை
தத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டு அத்தத்துவம் முப்பத்தாறினையும் ஆராய்ந்து கடந்து, சாக்கிராதீதத்தில் யோகக் காட்சி கண்டு தத்துவாதீதப் பரவெளியில் திருவருள் ஞானக் கோயிலைக் கண்டு திருக்கதவம் திறந்து சிவதரிசனம் பெற்று இன்புற்ற திறம் பற்றி கூறியது.
படிகள் எலாம் – படிகளாகிய தத்துவங்கள் – ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என மூன்று வகையாய், பின்னர் இருபத்துநாலும் ஏழும் ஐந்துமாக முப்பத்து ஆறாய் விரிந்து நிற்பதை குறிப்பிடும் வரிகள்
ஏற்றுவித்தீர், அடைவித்தீர் – தமது யோக நெறிக்குத் துணை புரிந்த திருவருளை சிவன் செயலாக உரைத்து அதை உடன் உணர்ந்து உரைக்கும் திறன் பற்றியது
செடிகள் இலாத் திருக்கதவம் – ஞானக் கோயிலுக்கு குற்றங்கள் எனும் கதவுகள் இல்லை என்பதை உரைத்தது. (செடி – குற்றம்)
காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே, ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.
விளக்கஉரை
செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உண்ர்வு கூட இல்லை.
குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.
தினகரர் அக்க ரதம் கெடுத்தார் குரு தேசிகர் (செந்) தி நகரர் அக்கரம் ஆறுடையார் தெய்வ ஆரண (தந்) தி நகரர் அர கர சத்தி இன்றாகில் அத் தேவர் (நண்ப) தி ந கர ரக்கர் அதம் தீர்வர் ஈர்வர் செகமெங்குமே
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
பதவுரை
பன்னிரு மாதமும், சைவர்களால் ‘சிவாதித்யர்கள்’ என அழைக்கப்படும் பன்னிரு கதிர்களின் பெயர்களுடன் விளங்கும் வைகர்த்தன், விவச்சுதன், பகன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாக்ஷி, திருவிக்ரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி ஆகிய சூரியனின் நேத்திரத்தையும், பல்லையும் அழித்த ஈசனுக்கு உபதேசம் செய்த ஞான ஆச்சாரியனும், செந்தூர் பதியில் இருப்பவரும், ஆறு அக்ஷரங்கள் கொண்டு அதன் ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமானதும், வேதங்கள் பூஜித்ததும், சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான வேலாயுதம் இல்லை என்றால் தேவர்களின் சிறந்ததான அமராவதி நகரம் இல்லாமல் போயிருக்கும்;வஞ்சனையை உடைய அசுரர்கள் இறப்பைத் தவிர்த்திருந்து உலகம் முழுவதையும் நிர்மூலமாக்கி இருப்பார்கள்.
இலயித்த தன்னில் இலயித்தாம் மலத்தால் இலயித்தவாறு உளதாக வேண்டும் — இலயித்தது அத்திதியில் என்னின் அழியாது; அவை அழிவது அத்திதியும் ஆதியும் அங்கு
திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்
பதவுரை
ஆன்மாக்களின் பார்வைகளையும் ஒடுக்கி, குருடாக்கி, சஞ்சீதம், பிராரப்தம் மற்றும் ஆகாமியம் ஆகிய மூவினைகளுக்கும், ஆணவம், மாயை மற்றும் கண்மங்களுக்கு உட்பட்டு உலகம் தோன்றி மறைவதாக தோன்றும். நிமித்த காரணமாக நின்று வினைகளைப் பற்றி, மாயா மலங்களை அனுபவித்து வினைகளையும் மலங்களையும் முற்றிலும் இறை அருளால் நசித்து தன்னில் உலகம் இருப்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு, மூவினைகளுக்கு உட்பட்டு, உலகமே ஒடுங்கி அணுவாகி நின்றுஅதன் உருவிலேயே அதன் இயல்பாய் இருக்கின்றது என்னில் கால உணர்வின்றி உலகம் எப்பொழுதும் அழியாது பார்வையில் பட்டு நிற்கும்.
விளக்கஉரை
உலகம் மற்றும் ஆன்மாக்கள் தோன்றி மறையும் இயல்புடையது என்றும் அது சிவனின் அருளினால் அவ்வாறான நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன எனவும், அவனே அனைத்துக்கும் கர்த்தா என்னும் சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் பாடல்.
உலகம் மட்டுமே நிலை பொருள் எனும் நாத்திகவாதிகளின் கருத்தும், இருப்பது, இல்லாது எனும் நிலைகளைத் தாண்டி, இல்லாமலும் இருக்கலாம் என்றும், இல்லாத பொருள் தோன்றாது எனும் அநேகாந்தவாதத்தின் கருத்துக்களும் மறுக்கப்படுகின்றன.
தன் அறிவு, அறியாமை, ஒளி, ஒருள் ஆகியவற்றை தன்னுள்ளம் கொண்டிருப்பதை ஒருவன் உணர, மாயை பற்றி ஒளியே இல்லாத இருள்நிலைதான் தன்னின் மூலம் என்பதையும் உணர்வான். இந்த நிலையில் அனைத்தும் ஒடுங்குவது உண்மையே என்றும் இத்தன்மையோன் உணர்வான். ஆகவே சங்கார காரணாகிய ஒருவனே, உலகம் தோன்றி மறையும் இயல்பானது எனும் ஆணவமலம் நீக்கி இவ்வுலகம் தோன்றுவதற்கும், மீளாவகை சென்று அடைவதற்கும் காரணமாக தனி முதல்வனாகவும், தற்பரனாகவும் இருப்பான் என்பதை விளக்கும்.
(சைவ சித்தாந்தம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், வினைபற்றியவன் உரைப்பதாலும் பொருள் குற்றம் ஏற்பட்டிருக்கலாம். குற்றம் பொருத்தருள வேண்டுகிறேன்.)
பாசம் என்பதாகி உயிர்களை அடிமை செய்யும் பொருள்களானதும் போகப் பொருள்கள் என்பதுமான தளை ஆகிய பாசமாகவும், உயிரானது, உறைவதற்கு உண்டான உடலினைப் பெறும் முன்பு அறிவு, இச்சை, செயல் என்பது எதுவும் இன்றி அறியாமையில் மூழ்கி, பதி போன்ற தோற்றமும் அழிவுமில்லாதது ஆகி பசு போன்றும் தோற்றம் கொண்டு உயர்ந்தவனாகவும், கடவுள் ஆகவும், அன்னியப் பொருளாகவும் ஆகி இருப்பவன்; அவ்வாறான பாச அறிவினையும், பசு அறிவினையும் கூட்டுவித்து அதை பொருந்துமாறு செய்பவன்; அவ்வாறான பாச அறிவினையும், பசு அறிவினையும் பற்றி அவற்றுக்கு எல்லாம் மேலானவனாக இருக்கும் பெரியோனும், ஒளிமயமாய் ஆனவனும் ஆகி சிறப்புகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியவனாக இருக்கும் கணபதியின் பாதங்களை அடைக்கலம் அடைகின்றோம்.
விளக்கஉரை
பதி, பசு மற்றும் பாசம் கொண்டு சைவ சித்தாந்தக் கொள்கைகள் விளக்கப்பெறுகின்றன. எனவே ஈசனும், கணபதியும் வேறு வேறு அல்ல என்பது விளங்கும்.