வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 11

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை
சில மனிதர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் மதி கெட்டு கட்டுவது, அடிப்பது, கொல்லுவது ஆகிய வீண் தண்டனைகளால் பிறர் உருவை அழித்தும், அவர்கள் விருப்பத்தைக் கெடுத்தும், கெட்ட ஆகாரங்களை பிறருக்கு கொடுத்தும், பகையாலும் பொருள் ஆசையாலும் மனம் போனவாறு வைத்தியம் செய்தும், பிராணிகளை எவ்வித கருணையும் இன்றி கொன்றும் மற்றும் இவ்வகை நடத்தையோடு இருந்தவர்கள் பின்னொரு ஜென்மாவில் மானிட தேகம் எடுப்பாராயின் அவர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனர். மற்றும் சிலர் புண் குஷ்டம், வெண் குஷ்டம் மற்றும் தோல் சம்மந்தமான வியாதிகள் உடையவர்களாகவும் துன்புறுகின்றனர்.

உமை
சில மனிதர்கள் அங்கக் குறைபாடு உடையவர்களாகவும், முடமானவர்களாகவும் இருப்பது எந்த கர்மத்தின் பலன்?

சிவன்
முன் ஜென்மத்தில் ஆசையாலும், அஞ்ஞானத்தாலும் விலங்குகளை கொன்றும், அவற்றின் அங்கங்களை அறுத்தும், அவற்றின் விருப்பங்களைக் கெடுத்தும், அவற்றின் நடையை தடுத்தும் இறக்கும் மனிதர்கள் பின்னொரு ஜென்மங்களில் மானிடப்பிறப்பை அடையும் போது அங்கக் குறைபாடு உடையவர்களாகவும், முடமானவர்களாகவும் பிறக்கிறார்கள் அல்லது பிறந்தபின் அவ்வாறு ஆகிறார்கள்.

உமை
சில மனிதர்கள் புண்களாலும் மற்றும் அது சார்ந்த வியாதிகளால் துன்புறுகின்றனரே அது ஏன்?

சிவன்
பூர்வ ஜென்மத்தில் தனது கை வலிமை குறித்து எண்ணம் கொண்டு பிற மனிதர்களை கைகளால் குத்தியும், சூலம் போன்ற ஆயுதங்களால் கிழித்தும் கொண்ட பாவிகள் பின் ஜென்மங்களில் புண்களாலும் மற்றும் அது சார்ந்த வியாதிகளால் துன்புறுகின்றனர்.

உமை
சில மனிதர்கள் காலில் எப்பொழுதும் நோய் உள்ளவர்களாக காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் கோபமும் லோபமும் கொண்டு தேவதைகள் இருக்கும் இடத்தை காலால் உதைத்தும், முழங்காலாலும், பின்னங்கால்களாலும் பிராணிகளை துன்புறுத்தியும் ஆகிய இவ்வகையான நடவடிக்கைகள் உள்ளவராக இருக்கின்றனரோ அவர்கள் மறுஜென்மங்களில் பாத வெடிப்பு முதலிய பலவகை கால் சம்மந்தமான வியாதிகளால் துன்புறுகின்றனர்.

உமை
பூமியில் அநேக மனிதர்கள் செல்வம் உடையவர்களாக இருந்தாலும், வறுமை உடையவர்களாக இருந்தாலும் வாதத்தினாலே, பித்தத்தினாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அல்லது இது போன்று பலவகை நோய்களாலும் துன்பப்படுகின்றனரே, அது என்ன வகை வினையின் பயன்?

சிவன்
எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் அசுரத் தன்மை அடைந்து கோபம் கொண்டும், யாருக்கும் கட்டுப்படாமலும் கோபம் கொண்டும், குருவை பகைத்தும், எண்ணம், செயல் ஆகியவற்றால் பிறரை துன்புறுத்தியும், பிராணிகளிடத்தில் அன்பு இல்லாமல் அதை வெட்டியும், துன்புறுத்தியும் மற்றும் இவ்வகை செய்கைகள் உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் பின்னொரு பிறப்பில் மானிட தேகம் எடுக்கும் போது வாதத்தினாலே, பித்தத்தினாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அல்லது இது போன்று பலவகை நோய்களாலும் துன்பப்படுகின்றனர். இன்னும் சிலர், வாயும் காசம் மற்றும் தாகம் பொன்றவற்றாலும் பலவகை புற்றுக்களாலும் காலில் பலவகை நோய் உள்ளவர்களாகவும் துன்புறுகின்றனர். செய்த கர்மத்தின் பலனை யாராலும் தடுக்க இயலாது.

உமை
மனிதர்களில் சிலர் கோணல் அங்கம் உடையவர்களாகவும், சிறிதான அங்கம் உடையவர்களாவும், ஒற்றைக்கை நொண்டிகளாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும் காணப்படுகின்றனரே, அது ஏன்?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Nanobot – Nanotechnology Robots

2038

 

• Emerging technology field creating machines or robots which components are at or near the scale of a nanometre (10^−9 meters).
• It refers to designing and building Nanorobots, with devices ranging in size from 0.1–10 micrometers and constructed of nanoscale or molecular components.
• The terms nanoid, nanite, nanomachine, or nanomite have also been used to describe such devices currently under research and development.
• Advanced nanobots will be able to sense and adapt to environmental stimuli such as heat, light, sounds, surface textures, and chemicals; perform complex calculations; move, communicate, and work together; conduct molecular assembly; and, to some extent, repair or even replicate themselves

Telecommunications industry – Fiber optics

Medical
• Monitor body function; repair damaged tissue at the molecular level; deconstruct pathologic or abnormal material or cells such as cancer or plaque; and enhance human health and functioning.
• Artificial bone cement for small applications
(Source – Internet)

 (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
கணவன் : இன்னைக்கு நான் புதுசா கண்டுபுடுச்சி இருக்கேன். அது ரொம்ப கண்ணுக்குத் தெரியாத அளவுக்கும் இருக்கும்….(முற்றுப் பெறா வாக்கியம்)
மனைவி : உங்கு புள்ள கண்ணுக்குத் தெரியாமல் தரையில கிடக்கிற குப்பை, பேப்பர் எல்லாத்தையும் பொறுக்கி திங்குது. அதவிட உங்க கண்டுபிடிப்பு ரொம்ப பெரிசா?

2.
அப்பா: என்னடா எல்லா சப்ஜெக்ட்லயும் இவ்வளவு மார்க் கம்மியா எடுத்து இருக்க.
மகன் : டிகிரியே நானோ டெக்னாலஜி, அப்ப மார்க்கும் அப்படித்தான் வரும்.

3.
Version 1.0
என்னங்க, இவ்வளவு கம்மியா சம்பளத்த குடுக்குறீங்க?
நான் Nanobot ப்ரொஜெட்ல வேல பாக்கிறேன்.

Version 2.0
என்னடி, இவ்வளவு கம்மியா சோறு போடற?
நான் Nanobot ப்ரொஜெட்ல வேல பாக்கிறவரோட பொண்டாட்டி

4.
Developmer 1 : என்னா சார், இந்த வருஷம் நம்ம ப்ரொஜெட்க்கு இவ்வளவு கம்மியா ஒதுக்கி இருக்காங்க?
Developmer 2 : நம்ம மேனேஜர் வெளங்காதவன், Nanobot அப்படீங்கறத்துக்கு பதிலா நானே பட்ஜெட் அப்படீன்னு பேசிட்டு வந்து இருக்கான், என்ன செய்யிறது தலை எழுத்து

5.
நோயாளி : என்னங்க, இந்த ஆப்பரேஷனுக்கு இவ்வளவு ஜாஸ்தியா காசு கேட்கிறீங்க?
மருத்துவர்: என்ன செய்யிறது, செயற்கை எலும்பு சிமெண்ட் வில ஏறிப்போச்சுப்பா

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 10

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை
சில மனிதர்கள் பிறந்தது முதல் மற்றும் சிலர் பிறந்த பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பல், கழுத்து கன்னம் ஆகியவற்றில் நோயுள்ளவர்களாகவும் முகத்தில் அதிக வியாதி உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்
நாவினால் மிக்க கடும் சொற்களையும், மற்றவர்களிடத்திலும், பெரியவர்களிடத்திலும் பொய்யையும், கொடும் பழியைச் சொல்லுகிறவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும், தன்னுடைய காரியத்திற்காக பொய்யை மிகுதியாக சொல்லுகிறவர்களாகவும் இருக்கும் மனிதர்களுக்கு நாவினால் பிணிகள் உண்டாகின்றன. கெடுதலை கேட்பவருக்கும், பிறர் செவிகளை கெடுப்பவருக்கும் பலவைகயான காது நோய்களை அடைகின்றனர். பல் நோய், தலை நோய், காது நோய் அனைத்தும் வினையின் பயனே.

உமை
மனிதர்களிலே சிலர் மார்பு நோய், பக்க சூலை, வயிற்று நோய் மற்றும் உள்ள கொடிய சூலை நோயினால் பீடிக்கப்பட்டு துன்பப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் காமக் குரோதம் கொண்டவர்களாகவும், பிறருக்கு அளிக்காமல் தானே ஆகாரத்தினை உண்பவர்களாகவும், நம்பியவர்களுக்கு உண்ணத்தகாத உணவுகளையும் விஷத்தையும் கொடுத்தும் ஆசாரங்களை விட்டவர்களாகவும் இருப்பவர்கள் பின் ஏதாவது ஒரு முறை மனித பிறப்பு எடுக்கும் போது பலவிதமான பிணிகளால் துயர் பெறுகின்றனர். அவர்கள் இப்படி ஆவதற்கு காரணத்தை முன்னமே செய்து கொண்டனர்.

உமை
மனிதர்கள் கல்லடைப்பு, மது மேகம் போன்ற ஆண் உறுப்பு சார்ந்த வியாதிகளால் துயருருகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் காமத்தினால் பிறன் மனைவிகளை சேர்ந்தும், விருப்பம் இல்லாத விதவைப் பெண்களுடன் பலவந்தமாக சேர்ந்தும், அழகினால் கர்வப்பட்டும் இருக்கும் மனிதர்கள் மரணமடைந்து பின்னொரு பிறவியில் மனித பிறவி எடுத்து ஆண் உறுப்பு சார்ந்த வியாதிகளால் துயருருகின்றனர்

உமை
சில மனிதர்கள் இளைத்தவர்களாக காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் மாமிச உணவை மிக விருப்பி உண்டும், தனக்கு மட்டும் சுவை உள்ள உணவை விரும்பியும், மற்றவர்கள் புசிப்பதை கெடுப்பவர்களாகவும், அயலார் சுகங்களில் பொறாமை கொண்டவர்களாகவும் அதனால் துயரம் உடையவர்களாகவும் இருந்த மனிதர்கள் பின் ஜென்மத்தில் தேக சார்ந்த வியாதி உள்ளவர்களாக நரம்பு தளர்ச்சி உடையவராக இருத்து தீவிர பலனை அனுபவிக்கின்றனர்.

உமை
சில மனிதர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனரே, அது ஏன்?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

சொரூப நீட்சி

சொரூப நீட்சி_Iyyappa Madhavan

 

புகைப்படம் : ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்

 

அஞ்சன இரவொன்றில்
யாருமற்ற தனிமையில்
தலையணையை ஈரமாக்கும்
விழித் துளிகள் வீசிச் செல்கின்றன
இழப்பதற்கு என்று
எதுவும் இல்லை
இளமையும், வறுமையும் தவிர.

Loading

சமூக ஊடகங்கள்

அழலேந்தி

13

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் முன்வைத்து – நெருப்பு

மனிதர்களால் விலக்கப்பட்டு
தனித்த பாதையொன்றில் தென் திசை
நோக்கிப் பயணிக்கிறேன்.
தடம் பதிக்கும் அடிமுன்னே
அனைத்து திசைகளும் பற்றி எரிகின்றன.
விழிநீரும் வெப்பத்தில் உலர்கின்றது..
எதிர்கொண்டு அழைக்கிறது அஞ்சன சுடரொன்று.
‘யார் நீ ‘ என்கிறேன்.
அறு நெருப்பை தோற்றுவித்தவள்,
நெருப்பாகி, நெருப்பால் அறுப்பவளும் நானே
என்கிறது அச்சுடர்
பயணச் சுமைகளால் கீழே விழ
எத்தனிக்கிறேன்.
நிலமென தாங்கிப் பிடித்து
மடியினில் இருத்துகின்றது அச்சுடர்.
பின்னொரு பொழுதுகளில்
பொன் நிறமாய் மாறுகின்றது அச்சுடர்
அப்போது
புற உலகங்கள் மட்டும்
எரிந்து கொண்டு இருக்கின்றன.

 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவதிகை

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவதிகை

  • வீரம் வெளிப்பட்ட அட்ட வீரட்டானத் தலங்களில் மூன்றாவது தலம். சிவனார் திரிபுர தகனம் செய்தருளிய தலம்
  • 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி
  • திருஞானசம்பந்தருக்கு சிவனார் திருநடனக்காட்சி காட்டிய தலம்
  • திருநாவுக்கரசரின் தமக்கையாரான திலகவதியார் சிவத்தொண்டு செய்த தலம்
  • சூலை நோய் நீங்கப்பெற்று ‘திருநாவுக்கரசர்’ என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம்
  • இத்தலத்தை மிதிக்க அஞ்சிய சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில்(தற்போதைய பெயர் – சித்தாண்டிமடம், சித்தாத்த மடம், கோடாலம்பாக்கம் ) தங்கி, திருவடி தீட்சை பெற்ற தலம்.
  • சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ நூலை அருளிய மனவாசகங்கடந்தார் அவதரித்த தலம்
  • உள் சுற்றின் தென்மேற்கே பல்லவர் காலத்தைச் சார்ந்த பஞ்சமுக லிங்கம். மூன்று திக்குகளை நோக்கி நான்கு முகங்கள் உள்ளன. ஒரு முகம் (அதோ முகம்) மேல் நோக்கியது.
  • வாயில் நுழைவிடத்தில் 108 கரண நடன சிற்பங்கள்.
  • தேர் வடிவ திருக்கோயில் அமைப்பு

 

தலம் திருவதிகை
பிற பெயர்கள் அதிகாபுரி , திருஅதிகை வீரட்டானம், அதிரைய மங்கலம், அதிராஜமங்கலியாபுரம்
இறைவன் வீரட்டேஸ்வரர் வீரட்டநாதர் , அதிகைநாதர், ஸ்ரீ சம்ஹார மூர்த்தி, திருக்கெடிலவாணர்
இறைவி திரிபுரசுந்தரி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் கெடிலநதி, சக்கரதீர்த்தம்
விழாக்கள் வைகாசி விசாகம் – 10 நாள்கள் பிரம்மோற்சவம், சித்திரைச்சதயம் – 10 நாள்கள் அப்பர் திருவிழா, பங்குனி-சித்திரை மாதங்களில் நாள் வசந்தோற்சவம்,ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் ,மாணிக்கவாசகர் உற்சவம் , மார்கழி திருவாதிரை , மகா சிவராத்திரி , கார்த்திகை சோமவார சங்காபிஷேகங்கள் , பங்குனி உத்திரம் , திலகவதியார் குருபூஜை
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரைஅருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
திருவதிகை
பண்ருட்டி அஞ்சல்
கடலூர் மாவட்டம்
PIN – 607106

04142-240317, 04142-240246, 94439-88779, 94427-80111, 98419-62089

வழிபட்டவர்கள் திருமால் , பிரம்மன் , திரிபுர அசுரர்களான வித்யுன்மாலி-தாருகாக்ஷன்-கமலாக்ஷன் , கருடன் , பாண்டவர் , திருமூலர் , திலகவதியார் , மகேந்திரவர்மன் , சப்தரிஷிகள் , வாயு , வருணன் , யமன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்,,திருநாவுக்கரசர் 16 பதிகங்கள், சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் பண்ருட்டியில் இருந்து  சுமார் 2 கி.மி. தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 197 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  7   வது தலம்.

திரிபுரசுந்தரி உடனாகிய வீரட்டேஸ்வரர்

Isan

புகைப்படம் : இணையம்

பாடியவர்          திருநாவுக்கரசர்
திருமுறை        4
பதிக எண்         26
திருமுறை எண் 9         

பாடல்

பிணிவிடா ஆக்கை பெற்றேன்
பெற்றமொன் றேறு வானே
பணிவிடா இடும்பை யென்னும்
பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் தூய னல்லேன்
தூமலர்ப் பாதங் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன்
அதிகைவீ ரட்ட னாரே

பொருள்

அதிகைப்பெருமானே! நோய்கள் விடுத்து நீங்காத இம்மனித உடலைப் பெற்றேன்,செயற்படாதொழியாத துன்பம் நல்கும் நல்வினை தீவினையாகிய சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அவற்றை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும் மன உறுதியும் இல்லாதேனாய், அத்தூய்மை துணிவு என்பன வற்றை நல்கும் உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.

 

கருத்து

பிணிவிடா ஆக்கை – பிணியானவை விடாத உடலை.
இடும்பை – இருள்சேர் இருவினையாலும் எய்தும் துன்பம்.
தூயன் – கட்டு நீங்கினேன்.
அறியமாட்டேன் – உணரமாட்டேன்

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்         38
திருமுறை எண் 1      

பாடல்

தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்து
எம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடும்என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

பொருள்

உலகில் தம் தலைவனை உருவம் அறியாதவர் உளரோ? இல்லை. அப்படியிருக்க நீலகண்டனாகிய அப்பெருமான் தனது திருவடியை என் தலைமேல் வைத்து, சடைமேல் பிறையை உடையவனும், விடை ஏறுபவனும், யானைத் தோலைப் போர்ப்பவனும் கரிந்த காட்டில் ஆடுபவனும் எம் தலைவனும் ஆகிய, கெடில நதியின் வடகரையிலுள்ள திருவீரட்டானத்தில் விரும்பியிருக்கின்ற பெருமானை, அவன் அதனைச் செய்வதையும் யான் அறியாமல் இகழ்வேன் ஆயினேன் போலும். என்னே என் அறியாமை ! இனி அவ்வாறு நேராது போலும்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமலம்

அமலம்_KP

புகைப்படம் : Karthik Pasupathy

பிரபஞ்சத்தின் நீட்சியில்
காலபரிமாணம் அற்று
வான்முட்டி கூட்டமாக பறந்தன
சில பறவைகள்.
அறியாத பொழுதொன்றில்
மரித்து தரை சேர்ந்தது
பறவை உடல் ஒன்று.
கத்தின, கூக்குரலிட்டன, கரைந்தன.
உருவம் அழிவதாய் ஒலித்தன
உயிர் கொண்ட பறவைகளின் குரல்கள்.
பின்னொரு பொழுதுகளில்
விரும்பி வானம் கொண்டன.
சலனப்பட்டு இருந்தது காற்று
சலனம் அற்று இருந்தது வானம்.

*அமலம் – மாசு அற்றது

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருச்சோபுரம்

274

  • அகத்திய மாமுனியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம்(லிங்கம் அகத்தியர் அமைத்த கைத்தடத்துடன்). (அகத்தியர் தாங்கமுடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டு தனது வேதனையை எம்பெருமானிடம் சொல்லியபடியே கடற்கரை மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயற்சித்து, அமைக்க முடியாமல் பின் மூலிகைச் செடிகளைப் பறித்து வந்து சாறு எடுத்து அதை மணலோடு சேர்த்து உதிராத சிவலிங்கத்தை உருவாக்கி அதற்குப் பூஜைகள் செய்து வழிபட்ட ஈசன்)
  • மூலவர் சதுர ஆவுடையார். சற்று நீட்டுவாக்கில் அமைந்த சுற்றளவு குறைந்த பாணம்
  • ஈசனும் பார்வதியும் ஒன்றாக இருப்பதால் சிவனுக்கு, மஞ்சளும் குங்குமமும் வைத்து வழிபாடு
  • திரிபுவன சக்கரவர்த்தியின் மனைவி தியாகவல்லி திருப்பணி செய்த தலம்
  • ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்த இப்பகுதி, ‘மதுரை இராமலிங்க சிவயோகி’ யால் மணலில் புதைந்திருந்த விமான கலசமும் பின் கோயிலும் கண்டறியப்பட்ட தலம்.
  • ஸ்வர மூர்த்தி – தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி விக்ரகத்தைத் தட்டினால் சப்த ஸ்வரங்களின் ஓசைகள். வழக்கத்திற்கு மாறாக இடது கையில் நாகம், வலது கையில் அக்னியும் ஏந்தியவாறு திருக்காட்சி.

 

தலம் திருச்சோபுரம்
பிற பெயர்கள் தியாகவல்லி, தம்பிரான் கோயில்
இறைவன் சோபுரநாதர் ( மங்களபுரீஸ்வரர் )
இறைவி தியாகவல்லியம்மை ( சத்யதாக்ஷி , வேல்நெடுங்கண்ணி )
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் சோபுரதீர்த்தம் , கிணற்றுத்தீர்த்தம்
விழாக்கள் மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை தீபம் , ஐப்பசி அன்னாபிஷேகம் , பங்குனி உத்திரம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்
திருச்சோபுரம்
தியாகவல்லி அஞ்சல், கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608801.
98436-70518 , 94425-85845, 94429-36922
வழிபட்டவர்கள் அகத்தியர், காகபுஜண்டர்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர் *
நிர்வாகம்
இருப்பிடம் கடலூர் – சிதம்பரம் சாலையில் கடலூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆலப்பாக்கம் அடைந்து, அங்கிருந்து திருச்சோபுரம் செல்லும் கிளைச்சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 195 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  6  வது தலம்.

 

*சுந்தரரின் ‘திருவிடையாறு’ தலப்பதிகத்தில் – ஊர்த்தொகையில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

சோபுரநாதர்

சோபுரநாதர்

 

சத்யதாக்ஷி

சத்யதாக்ஷி

 

புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிக எண்          51
திருமுறை எண் 8      

 

பாடல்

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே.
பொருள்

இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.

கருத்து

விலங்கல் – மேருமலை.
அரக்கர் – திரிபுராதிகள்.
ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல் என்றவாறு

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிக எண்          51
திருமுறை எண் 9      

         

பாடல்

விடங்கொணாக மால்வரையைச் சுற்றிவிரி திரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரணமென் னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர்மே லயனும்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுரமே யவனே.

பொருள்

மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நீரைக் கடைந்தபோது, அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?

 

கருத்து

நாகம் – வாசுகி என்னும் பாம்பு.
மால் வரை – மந்தரமலை.
நஞ்சை உண்டு உகந்த – தேவர்கள் அஞ்சிய நஞ்சைத் தாம் உண்டு அவர்களைக் காத்தும்,
சாவாமைக்கு ஏதுவாகிய அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து அளித்தும் மகிழ்ந்த.
இடந்து – தோண்டி

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Time crystals – நேரப் படிகங்கள்

2038

Scientists unveil new form of matter: Time crystals

  • If crystals have an atomic structure that repeats in space, like the carbon lattice of a diamond, why can’t crystals also have a structure that repeats in time? That is, a time crystal
  • Berkeley Assistant Professor of physics (University of California) describes exactly how to make and measure the properties of such a crystal, and even predicts what the various phases surrounding the time crystal should be akin to the liquid and gas phases of ice.
  • This is a new phase of matter, period, but it is also really cool because it is one of the first examples of non-equilibrium matter.
  • The Harvard team, set up its time crystal using densely packed nitrogen vacancy centers in diamonds
  • Physicists recently suggested making materials that repeat in time.

Source : sciencedaily

              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.

ஒரு அவரைக்காய ஒழுங்கா நறுக்க தெரியல, உன்ன எல்லாம் எப்படித்தான் டைம நறுக்குற வேலைல வச்சி இருக்காங்களோ தெரியல.

2.

மதுபான அருந்தகம் உள்ளே

டைம நறுக்குறதுன்னா இன்னாபா?

அட்சி, இது கூட தெர்லியா, நாம கட்டிங்க ரெண்டு கிளாஸ்ல கரிட்டா ஊத்தி மிக்ஸ் பண்ரோம்ல, அதுமாதிரி தான் இது.

அப்ப அதுக்கு சைட்டிஷ் இன்னாபா?

3.

கல்லூரியில்

டேய், மச்சான் அது என்னாடா, டைம் கிரிஸல்ஸ்

ரொம்ப சிம்பிள்டா மச்சான், நீ 2 பக்கத்துக்கு எழுதின உனக்கும் 10 மார்க், 42 பக்கத்துக்கு எழுதினேன், எனக்கும் 10 மார்க். பேதமே இல்லாம பிரிக்கிறது.

4.

தையல் கடையில்

ஏம்மா, உங்க புரோஜெக்ட் வேல பாக்றது எல்லாம் டைம் கிரிஸல்ஸா இருக்கலாம், அதுக்காக ரவிக்கை தச்சதுல ரெண்டு கைக்கும் வித்யாசம் இருக்கு. அதால ரெண்டு கைக்கும் எடை அளவுல புரொட்டான் மாதிரி   1.6726 x 10-27 kg. வித்யாசம் இருக்குன்ணு சொல்றது ரொம்ப ஓவர்.

5.

கொலை.. கொலை

அப்ரண்டீஸ்

சார், நான் கரட்டா கத்தியால  குத்தி இருக்கேனா?

பாஸ்

டேய், இது என்ன டைம் கிரிஸல்ஸா, ஒவ்வொரு குத்தும் கரட்டா குத்த. இதெல்லாம் சிவாஜி படத்திலயே தலிவர் செஞ்சிட்டார். சீக்கரம் வண்டிய எடுடா.

Loading

சமூக ஊடகங்கள்

சொல்லாடுதல்

சொல்லாடுதல்_KP

புகைப்படம் :  Karthik Pasupathi

வீட்டில் இருக்கும் கம்யூட்டரில் HD சரியாக வேலை செய்யவில்லை. நண்பர் வந்து புது HD மாற்றிக் கொடுத்தார்.
இதுல எது எது எது வேணும்னு சொன்னீங்கன்னா அதெல்லாம் புது HDல காப்பி செய்துடலாம்.
12 வருடங்களுக்கு மேற்பட்ட விஷயங்கள். எப்படி உடனடியாக தேர்வு செய்ய முடியும். சரி, வரிசையா ஒன்னு ஒன்னா பாத்துக்கிட்டே வாங்க. நீங்க சொல்றதை மட்டும் காப்பி செய்துடுறேன்.

இது இளையராஜா பாடல்கள் …இது வேணும்.
இது நான் கடவுள் மூவி .. இது வேணும்.
யோகி ஃபோல்டர்ல என்ன இருக்குன்னு பாருங்க?
ஏதோ பெபில்ஸ்ன்னு இருக்கு.

என் இனிய பொன் நிலாவே பாடலில் வருவது போல் காலம் சுழல ஆரம்பித்தது.

அப்போது யோகிக்கு பேச்சு வரவில்லை. சில நேரம் ம்,.. ம்ம்.. சந்தோஷப் படும் போது வேகமாக குதிப்பான்.

ஒரு முறை கடைக்கு சென்றிருந்த போது அழுதான். அப்போது DVD பிளேயரில் இருந்து பாடல்கள் ஒலித்தன. உடன் அழுகை நின்றது.
சார், இது என்ன பாடல்?
குழந்தைகளுக்கான பாடல் சார்.
எவ்வளவு சார்?
99ரூ.
நான் இத எடுத்துக்கிறேன் சார்

அன்று முதல் பக்தி பாடலுக்கு பதிலாக இந்தப்பாடல்கள் தான் ஒலிபரப்பாகும் (அப்படித்தான்)

பேச்சு வர ஆரம்பித்தது.
சைகை காட்டியது போய் கம்யூட்டரை அவனே ஆன் செய்து பாடல்களை வைக்கக் கற்றுக் கொண்டான்.

என் இனிய பொன் நிலாவே பாடல் முடிவுக்கு வந்தது.

அட என்னா அங்கிள் நீங்க, அவருகிட்ட போய் கேட்டுகிட்டு இருக்கீங்க. எல்லாத்தையும் காப்பி பண்ணி போட்டுடுங்க. இல்லேன்னா கத்துவார். இவரு கௌதம் ஃப்ரெண்ட் வேற. படத்துக்கு ஒரு டிக்கெட் எடுத்து குடுக்க முடியல. நீங்க என்ன பண்ணுங்கண்னா, மியுசிக் சைட்ல போயி AYM படத்துல வர ‘தள்ளிப்போகாதே’ பாட்டை டவுண்லோட் செய்து குடுங்க. அப்பாவ கேட்காதீங்க.

 

*சொல்லாடுதல் – பேசுதல்

Loading

சமூக ஊடகங்கள்

பாடி காவல்

பாடி காவல்_LakshmiVenkat

புகைப்படம் : Lakshmi Venkataraman

மரணம் கரைந்திருக்கும் வினாடி தேடி
பயணிக்கிறது வாழ்வு;
மரணித்தல் இயல்பாகும் வரை
வாழ்வு தொடரும்;
பின்னொரு பொழுதுகளில்
ஞானத்தின் வாழ்வு தன்னை ஞானம் கவ்வும்
மறுபடியும் ஞானமே வெல்லும்.

 

 
*பாடி காவல் – குற்றம் செய்தவருக்கு அரசன் தரும் தண்டனை

கோடிக் காவனைக் கூறாத நாள் எலாம்
பாடி காவலில் பட்டுக் கழியுமே

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 9

உமாமகேஸ்வரஸம்வாதம்

ஓவியம் : இணையம்

உமை

சில மனிதர்கள் வீடு , மனைவி மற்றும் குழந்தைகளோடும், ஆடை ஆபரணங்களோடும், சிறந்த புத்தியோடும், அதிகாரங்களோடும், அழகு ஆரோக்கியம் போன்றவைகளோடும் மனதிற்கு இனிய போகங்கள் நிரம்பியவர்களாக வியாதி இல்லாமல் சுற்றத்தாருடன் இடையூறு இல்லாமல் தினம் தோறும் மகிழ்ந்திருக்கின்றனரே, அது எந்த கர்மத்தின் பலன்?

சிவன்

முன் ஜென்மத்தில் செல்வம் உள்ளவர்களாக இருந்தும்   கல்வியும் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாகவும், தானத்திலும் கல்வியில் விருப்பம் உள்ளவர்களாகவும், எப்பொழுதும் பிறருக்கு விருப்பமானதை அறிந்து அதை தருபவர்களாகவும், சத்தியத்தையும், பொறுமையையும் விடாதவர்களாகவும், பொருளாசை, பெண்ணாசை இல்லாதவர்களாகவும், சரியானவர்களுக்கு முறையாக தானம் செய்பவர்களாகவும், விரதங்களை செய்பவர்களாகவும் பிறர் துன்பத்தை தன் துன்பம் போல் நினைத்து அதனை விலக்க நினைப்பவர்களாகவும், இனிய ஒழுக்கம் உள்ளவர்களாகவும், தேவர்களை எக்காலத்திலும் பூஜிப்பவர்களாகவும் இருப்பவர்கள் மறு ஜென்மத்தில் அப்புண்ணீயங்களை அனுபவிக்க மேற்கூறியவாறு பிறக்கிறார்கள். அழகு, பொருள், தைரியம், ஆயுள், சுகம் அதிகாரம், தேகபலம் மற்றும் கல்வி அனைத்தும் ஆகிய எல்லா நலங்களும் தானத்தால் உண்டாகும். எல்லாம் தவத்தாலும் தானத்தாலும் உண்டாகும் என்பதை நீ அறிந்து கொள்.

உமை

மனிதர்களில் சிலர் செல்வம் அற்றவர்களாகவும், மிகத் துயரம் உள்ளவர்களாகவும், கொடுப்பதை அனுபவிக்க இயலாதவர்களாகவும், ஆதி ஆத்மிகம், ஆதி பௌதீகம், ஆதிதெய்வீகம் ஆகிய பயம் உள்ளவர்களாகவும், பிணியாலும் பசியாலும் வருந்துபவர்களாகவும், கெட்ட மனைவியால் அவமதிக்கப்படுபவர்களாகவும். எப்பொழுதும் இடையூற்றை அனுபவிப்பர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்

மனிதர்களில் சிலர் செல்வம் அற்றவர்களாகவும், மிகத் துயரம் உள்ளவர்களாகவும், கொடுப்பதை அனுபவிக்க இயலாதவர்களாகவும், ஆதிஆத்மிகம் (மற்ற உயிர்களால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள்), ஆதிபௌதீகம் இயற்கையினால் நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் (நீர், நிலம், காற்று, ஆகாயம் தீ),  ஆதிதெய்வீகம் (நாம் செய்த வினைகளை இறையின் துணை கொண்டு அதை அனுபவித்தல்) ஆகிய பயம் உள்ளவர்களாகவும், பிணியாலும் பசியாலும் வருந்துபவர்களாகவும், கெட்ட மனைவியால் அவமதிக்கப்படுபவர்களாகவும். எப்பொழுதும் இடையூற்றை அனுபவிப்பர்களாகவும் காணப்படுகின்றனர். தாம் செய்த நல்வினையும் தீவினையும் முறையே சுகம் துக்கம் முதலியவற்றை உண்டாக்குகின்றன.

உமை

பிறவிக் குருடரும், பிறந்தபின் கண் போனவரும் உலகின் காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் காமத்தினால் பிறர் வீடுகளில் அலைந்து கொண்டும், பிறர் மனைவிகளை கெட்ட எண்ணங்களுடன் பார்த்துக் கொண்டும், கோபமும் ஆசையும் கொண்டவர்களாக மற்ற மனிதர்களின் கண்களை கெடுத்தும், பொருள்கள் பற்றி நன்கு அறிந்தும் அது மற்றி மாற்றுக் கருத்து உரைப்பவர்களாக இருக்கும் மனிதர்கள் இறந்தபின் யமனால் தண்டிக்கப்பட்டு வெகு காலம் நரகத்தில் இருந்து மானிட ஜென்மத்தை அடையும் போது பிறவிக் குருடர்களாகவும், பிறந்தபின் கண் கெட்டவர்களாகவும் கண் நோய் உடையவர்களாகவும் பிறக்கின்றனர். அதில் சந்தேகமில்லை.

உமை

சில மனிதர்கள் பிறந்தது முதல் மற்றும் சிலர் பிறந்த பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பல், கழுத்து கன்னம் ஆகியவற்றில் நோயுள்ளவர்களாகவும் முகத்தில் அதிக வியாதி உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?

தொடரும்…

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 8

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை 

மானிடர்களில் சிலர் கல்வியும் ஆத்ம ஞானமும் புத்திக் கூர்மையும் பேசும் திறமை ஆகியவை பெற்றிருந்தும் ஒழுங்காக முயற்சி செய்தும் தரித்திர்களாக காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் கல்வி அறிவு பெற்றிருந்தும் யாருக்கும் ஆதரவு தராமல் இருந்தும், அன்ன தானம் செய்யாமலும் தம் காரியங்களை மட்டும் பெரிதாக எண்ணி அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மறு ஜென்மங்களில் அறிவும் புத்திக் கூர்மையுடன் இருந்தும் வறியவராகவே இருக்கிறனர். விதையாதது முளையாது

உமை 

மிக்க செல்வம் உள்ள மனிதர்களும், உலகின் கல்வி அறிவும்,பகுத்தறிவும், புத்தி கூர்மையும், மன உறுதி இல்லாத வீணர்களாகவே காணப்படுகின்றனர், அது ஏன்?

சிவன்

முன் ஜென்மங்களில் கல்வி அறிவு அற்றவர்களாக இருந்தும், பகுத்தறிவு அற்றவர்களாக இருந்தும், ஏழைகளுக்கு உதவி செய்து  தானம் தருமங்களை செய்பவர்கள் அடுத்து வரும் பிறப்புகளில் அதை அப்படியே அனுபவிக்கின்றனர். மனிதன் கற்றவனாக இருந்தாலும், கல்லாதவனாக இருந்தாலும் தானத்தின் பலனை அடைகிறான்.தானமானது கல்வி அறிவு பார்ப்பது இல்லை. எப்படியும் அதன் பலனை தந்து விடும்.

உமை 

மனிதர்களில் சிலர் புத்தி கூர்மை உள்ளவர்களாகவும், கேட்டதை மறவாதவர்களாகவும், வார்த்தைகளை தெளிவாக உச்சரிப்பவர்களாகவும் இருக்கின்றனரே அது ஏன்?

சிவன்

ஞானத்திற்காக குருவிற்கு நன்றாக பணிவிடை செய்து அந்த குருவிடம் இருந்து முறைப்படி வித்தைகளை கற்றுக் கொண்டு பிறருக்கும் அம்முறை தவறாமல் அதை கற்பித்தும், தன்னுடைய ஞானத்தினால் கர்வப்படாமல் மனம், வாக்கு ஆகியவற்றால் அடக்கமுள்ளவர்களாகி  கலைகள் நிலை பெறும் முயற்சியை செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் மரணமடைந்து அடுத்துவரும் பிறப்புகளில் புத்தி கூர்மை உள்ளவர்களாகவும், கேட்டதை மறவாதவர்களாகவும், வார்த்தைகளை தெளிவாக உச்சரிப்பவர்களாகவும் இருக்கின்றனர்

உமை 

சில மனிதர்கள் பல வகையிலும் முயற்சி செய்தும் கேள்வியும், கல்வியும் புத்தி கூர்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் கல்வியினால் கர்வம் கொண்டும், தற்புகழ்ச்சி செய்து கொண்டும், ஞானம் அடைந்ததால் தான் என்ற அகங்காரத்துடன் மதி கெட்டவர்களாகி எப்பொழுது பிறரை விட தனக்கு அதிகம் வித்தை தெரியும் என சொல்லிக் கொண்டும், பிறரை இகழ்ந்தும் அவர்கள் மேல் பொறாமை கொண்டும் அப்படிப்பட்டவர்கள் அநேக ஜன்மங்களுக்குப் பின் மானிட தேகம் எடுக்கும் போது பல வகையிலும் முயற்சி செய்தும் கேள்வியும், கல்வியும் புத்தி கூர்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றனர்

உமை 

சில மனிதர்கள் வீடு , மனைவி மற்றும் குழந்தைகளோடும், ஆடை ஆபரணங்களோடும், சிறந்த புத்தியோடும், அதிகாரங்களோடும், அழகு ஆரோக்கியம் போன்றவைகளோடும் மனதிற்கு இனிய போகங்கள் நிரம்பியவர்களாக வியாதி இல்லாமல் சுற்றத்தாருடன் இடையூறு இல்லாமல் தினம் தோறும் மகிழ்ந்திருக்கின்றனரே, அது எந்த கர்மத்தின் பலன்?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருத்திணை நகர்

274

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருத்திணை நகர்

  • சுயம்பு திருமேனி. சற்று கூர்மையான பாணத்துடன் கூடிய சதுர ஆவுடையார்
  • நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு, சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும், பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும் கூடிய சிறிய மூர்த்தங்கள்
  • இறைவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி ஆராதனை
  • விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவன் மீது அதிக பக்தியுடன் தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இறைவன் பணியாளாக வந்து தோட்டத்தில் உழுது பின் உணவு அருந்தினார். ஒரு நாளில் பயிர்கள் அனைத்தும் வளர தானே காரணம் என உணர்த்தினார். ஒரே நாளில் தினை விளைந்ததால் தினைநகர்
  • சிவனுக்கு தினமும் தினையமுது உணவு படையல்
  • வீரசேன மன்னனின் குஷ்டநோய் நீங்கிய தலம்
  • தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் முயலகன் இல்லாமல் நான்கு சீடர்களுடன் கூடிய திருக்காட்சி அமைப்பு.
  • சிவனார் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைத்த கலம் முதலியவை இன்றும் உள்ளன
  • சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் அருள்பாலிக்கும் தனிச்சந்நிதி
  • முன்வினைப் பயனால் ஜாம்பு(கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றாதால் தீர்த்தம் ஜாம்புவ தீர்த்தம்

 

 

தலம் திருத்திணை நகர்
பிற பெயர்கள் தீர்த்தனகிரி,
இறைவன் சிவக்கொழுந்தீசர், சிவக்கொழுந்தீஸ்வரர்
இறைவி ஒப்பிலாநாயகி  கருந்தடங்கன்னி,நீலதாம்பிகை
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் ஜாம்பவ தீர்த்தம்
விழாக்கள் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி , ஐப்பசி அன்னாபிஷேகம் , ஆருத்ரா தரிசனம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்
தீர்த்தனகிரி அஞ்சல்
கடலூர் வட்டம்,கடலூர் மாவட்டம்
PIN – 608801
04142-289861 , 99653-28278 ,99653-28279 ,97864-67593 ,99422-48966 , 94434-34024
வழிபட்டவர்கள் விஷ்ணு , பிரம்மா , ஜாம்பவான்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் கடலூரில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில்  வது தலம்நடு நாட்டுத் தலங்களில்  5  வது தலம்.

சிவக்கொழுந்தீஸ்வரர்

 

ஒப்பிலாநாயகி

 


பாடியவர்             சுந்தரர்
திருமுறை           7
பதிக எண்            64
திருமுறை எண்   7

பாடல்

தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொருள்

மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல் தவத்தொழிலைச் செய்து  பயனில்லாத சொற்களைப் பேசி  பின்னுதல் பொருந்திய சடைகளைச்சேர்த்துக் கட்டிக்கொள்ளு தலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே  மக்கள்  பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது; ஆதலின், அந்நிலை நின்னின் வேறாய் நிற்க  நீ  தேவர் கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய  செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற  நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை  அணுகச் சென்று  இவனே  தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.

பாடியவர்             சுந்தரர்
திருமுறை           7
பதிக எண்            64
திருமுறை எண்   8    

பாடல்

பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்
பலருங் கண்டழு தெழஉயிர் உடலைப்
பிரிந்து போம்இது நிச்சயம் அறிந்தாற்
பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்தடங் கண்ணி பங்கனை உயிரைக்
கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

 

பொருள்

மனமே, அன்புள்ள சுற்றத்தாரும், மற்றும் துணையாக உள்ளாரும் ஆகிய பலருங் கண்டு, உடல்மேல் விழுந்து அழுது எழும்படி, உயிர் உடலைப் பிரிந்து அப்பாற் போய்விடும்; இது நிச்சயம். இதனை நீ அறிந்துளை என்றால், அறியாமையையுடைய வாழ்வாகிய இம்மாறுபட்ட நெறியை நீங்கி, கரிய பெரிய கண்களை யுடையவளாகிய உமையது பாகத்தை உடையவனும், உயிர்களில் நிறைந்திருப்பவனும்,  காலனுக்குக் காலனும், எல்லாப் பொருளையும் கடந்துள்ளவனும் ஆகிய  செருந்தி (ஒரு வகைப் புல்) மரங்கள் பொன்போலும் மலர்களை மலர்கின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை, விரும்பி , அணுகச் சென்று அடைவாயாக.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

மாகேஸ்வர பூசை

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0_%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%88_ramn

 

புகைப்படம் : ராம்

காட்சி – 1

ராமாபுரம் சிக்னலில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் எனது நண்பர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

என்னவோ சார், என்னன்னு தெரியாமாக எங்க பொழப்பு ஓடுது. சார், எனக்கு சுகர், அங்க கூட்டத்த கன்ட்ரோல் பண்ணிகிட்டு இருக்கறப்ப திடீர்ன்னு சுகர் சூட் அப் ஆயிடும். என்ன செய்யிறதுன்னு தெரியாது. மயக்கம் வரும். அப்பத்தான் இங்க வந்து பன்னுல பாதி கடிச்சிட்டு (சொல்லுகையில் குரல் உடைந்திருந்தது – பசி அனுபவித்தவர்கள் கண்களில் அது பற்றி சொல்லும் போது எப்பொழுதும் எழும் பிறர் அறியா கண்ணீர்) மீதிய இங்கயே போட்டு போய்டுவன். பாக்றவன் என்னா சொல்வான்னா ‘ வேலை பாக்ற நேரத்தில திங்கிறான் அப்படீம்பான்’ என்னா செய்றது சார். நம்ம பொழப்பு அப்படி. ஆனா ஒன்னு சார், நம்ம நிலம எதிரிக்கு கூட வரக்கூடாது.

காட்சி – 2

மெஸ் -பொத்தேரி

டேய், டேய் இங்க வாடா (கடைக்கார அம்மா ஒரு ஆட்டோ டிரைவர் பையனை அழைக்கிறார்)

இல்ல வந்து…

டேய், வாடா வந்து 4 இட்லி திண்ட்டு போடா

இல்ல வேண்டாம்.

என் பக்கம் பார்வை திரும்பியது.

சார், இந்த பய நான் பார்த்து வளர்ந்தவன். சாப்பிட காசு இல்லேன்னு திரும்பி போறான். கேட்டா உனக்கு செலவுன்றான், இவனுக்கு நாஸ்டா குடுத்தாவா நான் கொறஞ்சிடப் போறேன்.

காட்சி – 3

பிறந்து ஒரு வாரமே ஆன 2 நாய் குட்டிக்கள் மற்றும் ஒரு ஆடு.

இரு நாய் குட்டிகளும் ஆட்டுக்குட்டியிடம் பால் அருந்த முற்படுகின்றன. ஆடு வேகமாக விலகிச் செல்கிறது.

இடம் : பால் இல்லாமல்அழுத ஞான சம்பந்தருக்கு அம்மை பால் கொடுத்த சீகாழி திருக்குளம்  அருகே.

மாகேஸ்வர பூசை – ஒவ்வொரு உயிரிலும்  கலந்து இருக்கும் இறைவனுக்கு உணவுபடைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 7

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை :
மனிதர்களில் சிலர் அழகு உள்ளவர்களாகவும், லட்சணங்களுடன் கூடிய அவயங்கள் உடையவர்களாகவும், பார்வைக்கு இனியவர்களாகவும் காணப்படுகின்றனர் அது ஏன்?

சிவன் :
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் இனிமையாக பேசுபவர்களாகவும், அசைவ உணவுகளை விடுத்து தர்மத்திற்காக அலங்காரங்களையும் வஸ்திரங்களையும் தானம் செய்து கொண்டும், பூமியை சுத்தப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் மறு ஜென்மத்தில் ஆசைபடத்தக்க அழகுள்ளவர்களாக பிறக்கிறார்கள்.

உமை :
மனிதர்களில் சிலர் விகார ரூபமுள்ளவர்களாக இருக்கிறார்களே அது ஏன்?

சிவன் :
மனிதர்கள் முன் ஜென்மத்தில் அழகிய வடிவம் பெற்றிருந்து அதன் காரணமாக கர்வமும் தான் மேல் எனும் எண்ணமுடையவர்களாகவும், அழகில்லாதவர்களை நகைத்தும், அவர்களை மனம் வருந்தச் செய்தும், மாமிசங்களை விருப்பப்பட்டு உண்டும், பொறாமை அனாச்சாரம் முதலிய நடவடிக்கைகளோடு இருந்தவர்கள் தண்டிக்கப்பட்டு மானிட ஜென்மம் அடையும் போது விகாரமுள்ளவர்களாகி அழகில்லாமல் விகார ரூபமுள்ளவர்களாக பிறக்கிறார்கள்.

உமை :
சிலர் அழகும் ஐஸ்வர்யமும் இல்லாமல் இருந்தாலும் மனதை கவரும் தன்மை உடையவர்களாகவும் பெண்களால் விரும்பப்படுபவர்களாகவும் இருப்பது ஏன்?

சிவன் :
எவர்கள் முந்தைய ஜென்மங்களில் இனிய சுபாவம் உள்ளவர்களாகவும், தன் மனைவியிடத்தில் திருப்தி உள்ளவர்களாகவும், அவர்களை விட்டு விலகாததன் பொருட்டு மன உறுதி உள்ளவர்களாகவும், மற்றவர்கள் வேண்டியபோது பானம், அன்னம் போன்றவற்றை கொடுப்பவர்களாகவும் சிறந்த நடத்தையோடு இருப்பவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்கள் மறுஜென்மத்தில் அழகுடையவர்களாக பிறக்கிறார்கள்.

உமை :
மனிதர்களில் செல்வம் போன்றவற்றை பெற்றிருந்தும் இன்னாதவர்களாக இருக்கின்றனரே அது ஏன்?

சிவன் :
முன் ஜென்மத்தில் எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றால் பிறரை துன்புறுத்தியும், யாரையும் காப்பாற்றாமலும் இருக்கிறார்களோ அவர்கள் செல்வம் போன்றவற்றை பெற்றிருந்தும் இன்னாதவர்களாக இருக்கின்றனர்.

உமை :
மானிடர்களில் சிலர் கல்வியும் ஆத்ம ஞானமும் புத்திக் கூர்மையும் பேசும் திறமை ஆகியவை பெற்றிருந்தும் ஒழுங்காக முயற்சி செய்தும் தரித்திர்களாக காணப்படுகின்றனரே அது ஏன்?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

மகார ப்ரியை – சக்தி பீடங்கள் – 2 – காமாக்யா கோவில்

மகாரம் – சக்திச் சுடர் – அஜபா மந்திரம்
நூல் திருமந்திரம்
பாடல் எண் : 957
தந்திரம் : 4ம் தந்திரம்
பாடல்
அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே. திருமந்திரம்957
பொருள்
அகரமும் சகரமும் அரனுக்குரிய (சிவனுக்குரிய) மந்திரமாகும். சிவனை `ஔ` என்றும், `சௌ` என்றும் கூறிப் பொருந்தும் மந்திரமே `அம்` என்றும், `சம்` என்றும் கூறப்பெறும். இது மறை பொருளாகும்,இதன் பொருளை எவரும் அறியவில்லை. இவை இரண்டுடனும்  மகாரமும் சேரும் போது அது சிவசக்தி ரூபமாகிறது. இதுவே ஹம்ச மந்திரம் எனும் அஜபா ஆகும். இவ்வாறாக ஹம் எனும் ஆன்மாவும், சம் எனும் சிவனும் அநாதி நித்ய பொருள்.
 
சக்தி பீடங்கள் – 2 – காமாக்யா கோவில் 
 kaamak10_eegarai
புகைப்படம் :  eegarai
 
எண்
குறிப்பு
விளக்கம்
1
தலம்
காமாக்யா கோவில்
2
தலம் பிற பெயர்கள்
காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம், காமாக்யா தேவி கோவில், மஹிசமர்த்தினி கோவில், துர்கா மந்திர், நானி மந்திர், கரவிப்பூர் தேவி மந்திர்
3
தேவியின் பெயர்
காமாக்யா கோவில்
4
தேவியின் பிற பெயர்கள்
திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி
5
உடல் பகுதி
யோனி
6
பீடம்
காமகிரிப் பீடம்
7
பைரவர்
உமாநந்தர்
8
இருப்பிடம்
நீலாச்சல் குன்று, குவகாத்தி நகர்,அசாம் மாநிலம்
9
வழித்தடம்
கவுஹாத்தி நகர மையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள நீலாச்சல் மலை உச்சியில் இந்த கோயில் உள்ளது.
10
வடிவம்
11
விழாக்கள்
அம்புபச்சி மேளா,துர்க்கா பூஜா,மானஷா பூஜா
12
இதரக் குறிப்புகள்
  
புராணத் தொடர்பு
 
· பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன. ஏனைய காளி, தாரா,  புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி ஏழு தேவியருக்கும் தனித்தனிக் கோவில்களாக காமாக்கியா கோவிலுக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
· தேவிக்கு தனியே உருவச்சிலை எதுவும் இல்லை. ஆலயத்தில் உள்ள ஒரு குகையில் யோனி முத்திரை பதித்த ஒரு கல்பீடமே அம்பிகையாக வழிபடப்படுகிறது.
·  சிவனால் சம்ஹாரம் செய்யப்பட்ட மன்மதன் மீண்டும் தனது ரூபத்தை மீண்டும் பெற்ற இடம்
· வராஹ அவதாரமெடுத்து ஹிரண்யாக்ஷணை ஸம்ஹாரம் செய்து, நீருக்குள் முழுகியிருந்த பூலோகத்தைத் தம்முடைய நெற்றிப் பல் நுனியில் கொத்தி எடுத்துக் கொண்டு வந்தபோது அவருடைய பல் பட்ட இடம்
·   நரகாசுர யுத்தம் நடந்த இடம்
·   பஞ்ச பாண்டவர்களால் வழிபாடு செய்யப்பட்ட தேவி (ஆயுதங்களை காக்க வழிபாடு செய்யப்பட்டது- விராட பருவம், வெற்றிக்காக பிராத்தனை செய்யப்பட்டது மற்றொருமுறை)
·   தொடர்புடைய நூல்கள் – தந்திர சூடாமணி – தந்திர நூல்கள்,காளிகா புராணம்,வேத வியாசரின் தேவி பாகவத புராணம்
இத்திருக்கோயில் பற்றி மேலும் தகவல் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.
 

Loading

சமூக ஊடகங்கள்

வழக்கு

%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81_nandansridharan_theniiswar
இறையால் இறைக்கப்பட்ட
வறுமைகள் பாதை வழி எங்கும்.
இருள் சூழ்ந்திருக்கும்
வாழ்வை விலக்க முற்படுகிறேன்.
யாருமற்ற தருணமொன்றில்
தலை கோதி பின்னலிடுகிறாய்.
தன்முனைப்பு அற்று முத்தமிட்டு
புன்னகை பூக்கிறாய்.
பெரு வாழ்வு கண்டபின்னும்
மீண்டும் ஒரு தலைப் பின்னலுக்காக
காத்திருக்கின்றன பல ஜன்மங்களும்.

*வழக்கு – ஈகை

புகைப்பட உதவி : நந்தன் ஸ்ரீதரன் மற்றும் தேனி ஈஸ்வர்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஎருக்கத்தம்புலியூர்

274

தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருஎருக்கத்தம்புலியூர்

  • தனது தாயை மீனப் பெண்ணாக சபித்ததற்காக முருகன் வேதாக நூல்களை கடலில் வீசி எறிந்தார். இதனால் சாபம் பெற்ற முருகன் மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறந்து இத்தலம் வந்து வழிபாடு செய்து பேசும் திறன் பெற்றார்.
  • குமரன் வழிபட்டதால் சிவன் திருநாமம் திருக்குமாரசாமி
  • வியாக்ரபாதர் வழிபட்ட பஞ்ச புலியூர்களில் (பெரும்பற்றப்புலியூர், திருப்பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திரு எருக்கத்தம்புலியூர்) இத்தலமும் ஒன்று
  • 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம். திருவுருவம் மதங்க சூளாமணியாருடன்
  • தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்த போது ஏற்பட்ட வேடர்களின் தொந்தரவால் அவர்கள் வெள்ளெருக்காக மாறி வழிபாடு செய்யும் தலம்
  • அத்தம் = காடு, எருக்கத்தம் = எருக்கங்காடு. எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர்
  • இராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் இராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம்
  • மார்ச் மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் மூலவர் மீது சூரியஒளி வழிபாடு செய்யும் தலம்
  • இவ்வூருக்குக் கிழக்கே உள்ள கீழ்க்கோட்டூர் மணியம்பலத்தில் கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடப் பெற்றது.

 

தலம் திருஎருக்கத்தம்புலியூர்
பிற பெயர்கள் ராஜேந்திரப்பட்டினம், எருக்கத்தம்புலியூர் , திருவெருக்கத்தம்புலியூர் , குமரேசப்பட்டினம், யாழ்ப்பாணாயன்பட்டினம்
இறைவன் ஸ்வேதாரண்யேஸ்வரர், திருக்குமாரசுவாமி, நீலகண்டேஸ்வரர் )
இறைவி நீலமலர்க்கண்ணி வீராமுலையம்மன் , அபீதகுஜநாயகி , நீலோற்பலாம்பாள்
தல விருட்சம் வெள்ளெருக்கு
தீர்த்தம் நீலோற்பலதீர்த்தம் , கந்த தீர்த்தம் , ஸ்வேத தீர்த்தம் , செங்கழுநீர்
விழாக்கள்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில்
ராஜேந்தரப்பட்டினம் அஞ்சல்
விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608703
04143 – 243533, +91-94440 63806.+91-93606 37784
வழிபட்டவர்கள் வியாக்ரபாதர், உருத்திரசன்மர்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம் ஸ்ரீமுஷ்ணம் – விருத்தாசலம் சாலையில் முஷ்ணத்தை அடுத்து அமைந்துள்ளது இத் தலம்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 194 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  4  வது தலம்.

திருக்குமாரசுவாமி

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf

வீராமுலையம்மன்

%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்           திருஞான சம்பந்தர்
திருமுறை         1
பதிக எண்          89
திருமுறை எண் 8       

பாடல்

ஆவா வெனவரக்க னலற வடர்த்திட்டுத்
தேவா வெனவருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே யெனவல்லல் தீர்தல் திடமாமே.

பொருள்

ஆ ஆ என்று தன்னைக் காப்பாற்றும்படி இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் தவறினை உணர்ந்து வேண்ட அருளோடு நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.

 

 

பாடியவர் திருஞான சம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 89
திருமுறை எண் 9        

பாடல்

மறையா னெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையா னெருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.

பொருள்

வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட நீலகண்டனை அண்ணலை நினைந்தால், வினை கெடும்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 6

(

இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை

தொடக்கம் 204 அத்யாயம்.

கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்’ என்றனர்.

‘நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.

எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

உமை : 

மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். சிலர் எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைகின்றனர். சிலர் முயற்சி செய்து பாக்கியங்களை அடைகின்றனர். சிலர் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர். அது ஏன்?

சிவன் : 

உலகில் எந்த மனிதர்கள் தானத்தையும் தர்மத்தையும் முக்கியமாக நினைத்து தாமே தேடிப் போய் தானம் முதலியவைகளை வாங்கச் செய்கிறார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறவிகளில் முயற்சி இல்லாமலே அதன் பலன்களை அனுபவிக்கின்றனர்.

எந்த எந்த காலங்களில் யாசிக்கும் போது தானம் அளிக்கப்பட்டதோ அதன் பலனை அடுத்துவரும் பிறப்பில் சிறிது சிரமப்பட்டு முயற்சிக்குப் பின் அந்த அந்த காலகட்டங்களில் பெறுகின்றனர்.

மனிதர்கள் கெட்ட எண்ணம் கொண்டவர்களாக யாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் எந்த ஒன்றையும் கொடாமல் கோபிக்கின்றனரோ அவர்கள் மறு பிறப்பில் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர்.

விதை விதைக்காமல்  முளை  முளைப்பதில்லை. அது போலவே தான தர்ம பலன்களும். மனிதன் எதை எதைக் கொடுக்கிறானோ அதை அதை மட்டுமே அடைகிறான்.

உமை : 

‘சிலர் வயது முதிர்ந்து, தேகங்கள் தளர்ச்சி அடைந்த பின் அனுபவிக்க தகாத காலத்தில் செல்வங்களையும் போக பாக்கியங்களையும் அடைகின்றனர், எது ஏன்?

சிவன் : 

சிலர், செல்வம் பெற்றிருந்தும் தர்ம காரியங்களை வெகு நாட்கள் மறந்திருந்து, தனது உயிருக்கு முடிவுக்காலம் வரும்போது பிணியால் துன்பப்படும் போது தானங்களை கொடுக்கவும் தர்மங்களை செய்யவும் தொடங்குகின்றனர். அவர்கள் மறு ஜென்மங்களில் கஷ்டப்படுபவர்களாகப் பிறந்து இளமை கடந்தப்பின் முதுமை அடைந்து முன் பிறவிகளில் செய்த தான தர்ம பலன்களை அனுபவிக்கின்றனர். இவ்வாறாக அவர்களுக்கு செல்வங்களும் போக பாக்கியங்களும்அவரவர்களின் கர்மம் காலம் கடந்து வருகிறது.

உமை : 

சிலர் போக பாக்கியம் பெற்றிருந்தும் அவற்றை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களே அது ஏன்?

சிவன் : 

எவர்கள் வியாதியால் பீடிக்கப்பட்டு, பிழைப்பதில் எண்ணம் விட்டப் பிறகு தான தர்மம் செய்ய ஆரம்பிக்கிறார்களோ, அவர்கள் அடுத்துவரும் பிறவிகளில் அதன் பலங்களை அடைந்து நோய்வாய் பட்டவர்களாக அனுபவிக்க இயலாதவர்களாக ஆகின்றனர்

உமை : 

மனிதர்களில் சிலர் அழகு உள்ளவர்களாகவும், லட்சணங்களுடன் கூடிய அவயங்கள் உடையவர்களாகவும், பார்வைக்கு இனியவர்களாகவும் காணப்படுகின்றனர் அது ஏன்?

தொடரும்

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!