வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 31


உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

உமா மகேஸ்வரர்

தொடரும் தர்மங்கள் ..

பூமிதானம்

  • வீடுகள், நிலங்கள் சேர்ந்த பாகமாகிய பூமியை தானமாகக் கொடுக்க வேண்டும். எளிதில் பலனைக் கொடுக்கக் கூடியதும் விவாதமில்லாததுமான நிலத்தைக் குடியிருக்க இடத்தையும் அமைத்து வாங்குகிறவனுக்கு வஸ்திரத்தினாலும் புஷ்பத்தினாலும் சந்தனத்தினாலும் அலங்காரம் செய்து அவனுக்கும் அவன் வேலைக்காரருக்கும் அவன் சுற்றத்தாருக்கும் நல்ல போஜனமளித்து, ‘வாங்கிக்கொள்’ என்று மூன்றுமுறைசொல்லிப் புண்ணியகாலத்தில் தாரை வார்த்துத் பணமுடிப்போடு கொடுக்கவேண்டும்.
  • வெறுப்பில்லாமல் சிரத்தையோடு இவ்வாறு பூமிதானம் செய்தால் அந்தப்பூமி உள்ள வரையிலும் அந்தத் தானத்தின் பயன் இருக்கும் 
  • அசைவும் அழிவுமில்லாத பூமி விரும்பினவற்றை எல்லாம் தருவதால் பூமிதானம் செய்தவன் சுவர்க்கத்தில் நீண்டவருஷகாலம் மகிழ்ந்திருப்பான். 
  • ஜீவனத்திற்காகக் கஷ்டப்படும் மனிதன் ஏதாவது பாவம்செய்தால் பசுவின் காதளவாகிலும் பூமியைத்தானம் செய்தால் அந்தப் பாவத்தினின்று விடுபடுவான். பொன், வெள்ளி, வஸ்திரம், ரத்தினங்கள், முத்துக்கள், தனங்கள் இவையனைத்தும் பூமிதானத்தில் அடங்கினவை. 
  • தாய் தன் பாலினால் புத்திரனை எப்படி வளர்ப்பளோ அப்படியே பூமி எல்லாப் பலன்களினாலும் கொடுப்பவனை அபிவிருத்தி செய்யும்.

கன்னிகா தானம்

  • பரிசுத்தமான விரதமும் ஒழுக்கமுள்ளவளும், குலமும் உள்ள தன் பெண்ணை அவளிடத்தில் மிக்க விருப்பமுள்ளவனுக்கு அளிக்கவேண்டும்.  
  • வேலைக்காரிகள் வேலைக்காரர்கள் சிறப்புக்கள் வீட்டுப் பண்டங்கள் பசுக்கள் தானியங்கள் எல்லாவற்றுடனும் அவளுக்குத் தக்கவனும் அவளை விரும்புகிறவனுமானவனை, அக்னியின் முன்னிலையில் கொடுத்து விதிப்படி விவாகம் செய்விக்க வேண்டும். அவர்களுக்குரிய ஜீவனத்தை உண்டுபண்ணி அவர்களிருவரையும் நல்ல வீட்டில் வைக்கவேண்டும்.

வித்யாதானம்

  • யோக்கியனுக்கு வித்யாதானம் செய்யும் மனிதன் மறுஜன்மத்தில் புத்தி விருத்தியையும் தைரியத்தையும் ஞாபகசக்தியையும் அடைவான், தகுதியுள்ள சிஷ்யனுக்கு வித்யாதானம் செய்பவன் அந்தத் தானத்தின் பலனை அளவில்லாமல் அனுபவிப்பான்

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 29

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்க விரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

மகேஸ்வரர்

தர்மகாரியங்கள் நித்தியமாகச் செய்யத்தக்கவை எனவும் காரணம் பற்றிச் செய்யத்தக்கவை என இரண்டு வகைப்படுகின்றன.

எந்தக்காலத்திலும் கொடுக்கப்படுவதினால் அது நித்தியம். இது எல்லா வர்ணங்களுக்கும் பொதுவானது.

நித்தியமான தர்மகாரியம்

அன்னம், இடம், தீபம், தண்ணீர், பசுக்களுக்குப்புல், விறகு, எண்ணெய், சந்தனம் முதலிய வாசனைகள் நிறைந்தவை, மருந்து, எள், உப்புமுதலிய திரவியங்களைக் கொடுப்பது  நித்ய தர்மம்.

அன்னதானம் 

  • மனிதர்களுக்கு அன்னமே பிராணன் ஆகையால் அன்னம் கொடுப்பவன் பிராணனைக் கொடுப்பவன் ஆகிறான். வித்வானான பிராம்மணனுக்குச் சுவையுள்ள அன்னத்தை கொடுக்க வேண்டும். வழி நடந்து களைத்து வீடு தேடி வந்த விருந்தினனை மனதில் மாறுபாடு இல்லாமல் வரவேற்க வேண்டும்.
  • மானிட ஜன்மமே அதிதிகளுக்காக உண்டாக்கப் பட்டிருப்பதால், மனைவியை வருத்தியாவது அதிதிகளை எப்போதும் காப்பாற்ற வேண்டும்.
  • அது வரமளிக்கும் யாகத்திற்கு ஒப்பானது. பாவத்தைச் செய்தாலும் பசித்தவருக்கு அன்னமிடுகிறவன் தன்பாவத்தைப் போக்கிக் கொண்டவனாகிறான்.
  • எவ்வகைப்பட்ட மனிதர்களுக்கும் அன்னதானம் மறுக்கப்படுவதில்லை என்பதால் கோபத்தை விட்டு முழு முயற்சியோடு அன்னதானம் செய்யவேண்டும்.
  • அன்னதானம் செய்யும் மகாத்மாக்களுக்குக் தேவலோகத்தில் அநேக நூற்றுக்கணக்கான பெரியதான மாளிகைகள், உள்ளே தடாகங்கள், வனங்கள், ஒளியுள்ள வைடுரியக் கற்கள், பொன் வெள்ளியும் நிரம்பினவையும், பலவகை ரத்தின மயமானவையும், பல உருவங்களாகக் கட்டப்பட்ட கட்டங்கள் ஆகியவை இருக்கின்றன; நினைத்த பழங்களை எல்லாம் தரும் மரங்களும் அநேகருடைய கிணறுகளும் ஆயிரக்கணக்கான குளங்களும் வீடுகளும் இருக்கின்றன; ஸ்வர்க்கத்தில் பிணி துன்பங்கள் அற்றவையும் அழியாதவையும் ஆச்சரியப்படத்தக்கதுமான அனேக கிரகங்கள் இருக்கின்றன. அவர்கள் பிரம்ம லோகம் செல்கின்றனர்.
  • அதன்பிறகு மானிட லோகத்தில் எல்லாச் சிறப்புக்களும் பொருந்தினவர்களாக நல்ல உடல் பலமும், கட்டு உடையவர்களாகவும், நோயற்று நீண்டகாலம் ஜீவித்திருப்பவர்களாகவும் சிறந்த புத்தியுள்ளவர்களாகவும் பிறக்கின்றனர்.  
  • ஆதலால், நன்மையை விரும்புகிறவன் எந்தக் காலத்திலும் எவ்விடத்திலும் யாவருக்கும் இடைவிடாமல் அன்னதானம் செய்வது முக்கியம்.

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 28

உமை

மிகப் புண்ணியமான தேசமும் காலமும் எவை என்பதை உரைக்கவேண்டும்?

மகேஸ்வரர்

  • தேவர்களாலும், ரிஷிகளாலும் அடையப்பட்டதும், எல்லோராலும் பூஜிக்கப்பட்டதுமாகிய குருக்ஷேத்திரத்தினை சுற்றியுள்ள சிறந்தமலைகள் சூழ்ந்துள்ளதும், புண்ணிய தீர்த்தங்களும் தானம் செய்ய சிறப்பான இடங்கள்.
  • வசந்தகாலம், புண்ணியமான மாசம், சுக்லபக்ஷம், பூர்ணிமை, சிராத்தமும் தேவகாரியமும் செய்யதகக்க. புண்ணியதினம், சந்திர சூரிய கிரஹணம் ஆகியவை மிகச்சிறந்த புண்ணியகாலங்கள் என்று அறிவாயாக.
  • மேலே குறிக்கப்பட்ட காலங்களில் செய்யப்படும் தானம் பெரிய பலன் கொடுப்பதாகும். கொடுப்பவன், கொடுக்கப்படும் பொருள், வாங்குகிறவன், கொடுக்கும்வகை, இடம், காலம் இவைகள் தானத் தின் சிறப்புக்கள் ஆகும். இவையெல்லாம் சேர்ந்து செய்யப்படும் தானம் பெரிதாகும். இந்த ஆறு குணங்களும் சேர்ந்த தானம் எண்ணுவதற்கு சுலபமாயிருந்தாலும் மிகப் பெரிய பாபங்களைப்போக்கும்.
  • இந்தக் குணங்களில்லாத தானம் மிகப்பெரியதாயிருந்தாலும் பலனில்லாமல் போய் விடும்.

உமை

இந்த ஆறு குணங்களுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட பெருந்தானமும் எப்பொழுது பலன்படாமல் போகும்?

மகேஸ்வரர்

சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டவாறு தர்மத்தைச் செய்தாலும், பின் அதற்காகத் துன்பப்பட்டாலும், தான் செய்ததை மற்றவர்கள் முன்னிலையில் வீணாகச் சபையில் புகழ்ந்து பேசினாலும், மறுஜன்மத்தில் அதன் பலன் வரவேண்டுமென்று மனத்தில் விருப்பங்கொண்டாலும், எப்போதும் பலனை விரும்பியே தர்மங்களைச் செய்தாலும் அந்தத் தர்மமும் தானமும் பலனற்றவை ஆகிவிடும். ஆகவே புண்ணியத்தைக் கருதுகின்றவன் இந்தக் குற்றங்களை விடவேண்டும்; இதுதான் நெடுங்காலமாகப் பெரியோர்களால் எக்காலத்திலும் கை கொள்ளப்படும் ஒழுக்கமென்றும், மற்றவர்களை காப்பாற்றுவது கிரகஸ்தர்களின் கடமையென்றும், எப்போதும் மனத்தில் உறுதிகொண்டு தானம் செய்யவேண்டும்.

இப்படி இடைவிடாமல் செய்யப்படும் புண்யம்தான் பெரிதாகும்.

உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 27

உமை
உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், திரவிய தானம் செய்யும் மனிதன் புண்ணியம் அடைவது எவ்வாறு?

சிவன்

பஞ்ச பூதத்தினால் ஆன பொருள்கள் அனைவருக்கும் பொதுவானது. கொடுப்பவன், வாங்குபவன், கொடுக்கப்படும் பொருள், கொடுக்கும் வகை, காலம், இடம் ஆகிய எல்லாம் சேர்ந்தே தானம் எனப்படுகிறது. மனம், வாக்கு, காயம் இவற்றால் பரிசுத்தனாக இருந்து சத்தியமே கொண்டிருப்பவனும், கோபம், லோபம், பொறாமை ஆகிய இவைகள் இல்லாதவனும், சிரத்தையும், நம்பிக்கை உடையவனும் சிறப்புக்கு உரியவன் ஆகிறான், அவன் தானம் செய்யத் தக்கவன்.  பரிசுத்தமானவனும், புலன்களையும், கோபத்தையும் அடக்கியவனும், ஏழையானவனும், கல்வி, ஒழுக்கம் உள்ளவனும், பெரியதான குடும்பம் உள்ளவனும், பஞ்ச மகா யக்யங்கள் ஆகியவற்றை தவறாமல் செய்பவனும், அங்கங்களில் குறைபாடு இல்லாதவனும் ஆக இருத்தல் தானம் பெறுபவனுக்கான தர்மமாகும்.

பித்ரு காரியத்திலும், தேவ காரியத்திலும் அக்னி பூசையிலும் தானம் செய்வதில் பலன் அதிகம். எவன் எவன் எதற்கு தகுதி உடையவன் ஆகிறானோ அதற்கு அவன் பாத்திரமாகிறான். ஆபத்தில் இருப்பவனை ஆபத்தில் இருந்து விடுவிப்பதால் அவன் பாத்திரன் ஆகிறான். பசித்தவனுக்கு அன்னமிடல், தாகம் கொண்டனுக்கு நீர் அளித்தல் என ஒவ்வொருவரும் பாத்திரர்களாக ஆகின்றனர்.

கொடிய வஞ்சகத் தன்மை கொண்டவனும், திருட்டும், விபச்சாரம் செய்பவனும், ஆண் தன்மை அற்றவனும், பிற உயிர்களைக் கொல்பவனும், ஆசாரத்தை கெடுப்பவனும், உலகிற்கு கெடுதல் செய்பவனும் தானம் அளிப்பதில் இருந்து முற்றிலும் விலக்கத் தக்கவர்கள். பிறர் பொருளை திருடியும், தயை இல்லாதவன் இடத்தில் இருந்து வாங்கியும், சூதாட்டத்தில் ஈடுபட்டும், தீய செயல்களை செய்தும், பொருள் ஆசையினால் பெரும்பாலானவர்களுக்கு தீங்கு இழைத்தும் மனிதர்கள் பெறும் தனம் மிகவும் இழிவானது. அப்படிப்பட்ட தனத்தில் செய்யப்படும் தர்மம் வீண் என்று அறிவாயாக. ஆகவே புண்ணியத்தை விருப்புகிறவன் நியாமாக ஈட்டிய பொருளை தானம் செய்ய வேண்டும். எது எக்காலத்திலும் தனக்கு பிரியமானதாக இருக்கிறதோ அதைத் தானம் செய்ய வேண்டும்.

இனி தானம் செய்யும் முறையைக் கூறுகிறேன் கேள்.

தகுதி உடையவனை நாடிச் சென்று அவனிடம் வேண்டி அவன் சந்தோஷம் கொள்ளுமாறு தானம் செய்ய வேண்டும். இதுவே சிறந்த முறை.  கேட்டப்பின் அளிப்பது என்பது இரண்டாம் தரமுடைய தானம் ஆகும். தானம் அளிக்கும் போது  அன்பு, அக்கறை, ஈடுபாடு கொண்டு செய்யவேண்டும். யாசிப்பவர்களை சரியான காலத்திலும், இடத்திலும் அன்புடனும், மரியாதையுடனும் அழைத்து தானம் செய்ய வேண்டும்.

தன் சக்திற்கு மேற்பட்ட தானம் மிகவும் உத்தமானது. தன் சக்திற்கு உட்பட்ட தானம் இரண்டாம் நிலை ஆகும். தன் சக்திற்கு மிக மிகக் குறைவாக செய்யப்படும் தானம் இழிவான தானம் ஆகும். வாக்கினால் எவ்வாறு சொல்லப்பட்டதோ அவ்வாறு தானம் செய்ய வேண்டும். புண்ணியத் தலங்களிலும், புண்ணிய காலங்களிலும் செய்யப்படும் தானம் மிகச்சிறந்ததானது.

உமை
மிகப் புண்ணியமான தேசமும் காலமும் எவை என்பதை உரைக்கவேண்டும்?

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 26

 

உமை

பிரம்மச்சாரி விரதத்தை காப்பது எவ்வாறு?

சிவன்

பிரம்மச்சாரி விரதமே பெரும் தவம் என்பதால் பரமபதம் கிடைக்கும். விஷயங்களை நினைத்தல், பார்த்தல், பேசுதல், தொடுதல் மற்றும் அனுபவித்தல் ஆகிய இவற்றினால் பிரம்மச்சாரிய விரதம் கெடாமல் காக்க வேண்டும். இது பிரம்மச்சாரிகளுக்கு எப்பொழுதும், கிரகஸ்தர்களுக்கு காலத்தை நிர்ணயித்தும் விதிக்கப்படுகிறது. கிரகஸ்தன் தனது ஜன்ம நட்சத்திரத்திலும், புண்ணிய காலங்களிலும், தேவ பூஜை செய்யும் காலங்களிலும், தர்ம காரிய காலங்களிலும் இவ் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். தன் மனைவி விடுத்து வேறு மாதரிடம் செல்லாமல் இருப்பவன் பிரம்மச்சாரி விரதத்தின் பலனை அடைவான். இவ்விரதத்தால் பரிசுத்தமும், ஆயுளும் வாய்க்கப் பெறும்.

 

உமை

தர்மத்தை விரும்புவர்கள் தீர்த்த யாத்திரையை விரதமாகச் சொல்கிறார்கள். உலகில் உள்ள தீர்த்தங்களைப் பற்றி எனக்கு சொல்லக் கடவீர்.

சிவன்

உலகில் உள்ள மகா நதிகள் அனைத்தும் தீர்த்தங்கள் ஆகும். தீர்த்த யாத்திரையை என்பது ஆத்ம சுத்திக்காவும், தேக சுத்திக்காவும் பிரம்மாவால் ஏற்படுத்தப்பட்டது. அவற்றுள் கிழ் திசை நோக்கி செல்லும் தீர்த்தங்கள் சிறந்தவைகள். நதிகள் சங்கமம் ஆகும் இடமும், கடலோடு கலக்கும் இடமும் மிகச் சிறந்தவைகள். கடலோடு கலக்கும் இடங்களில் உள்ள மரங்கள் தேவர்களாலும், ரிஷிகளாலும், மகான்களாலும் அடையப் பெற்று நீராடி இருப்பதால் அவைகளும் சிறந்த தீர்த்தமாகின்றன. மகரிஷிகளால் அடைப் பெற்றதால் அருவிகளும், கிணறு மற்றும் குளங்களும் தீர்த்தங்கள் என்று அறிவாயாக. இனி இதில் ஸ்தானம் செய்யும் முறையை உரைக்கிறேன். பிறந்தது முதல் அதிக நியமங்களுடன் வாழ்ந்து, தீர்தங்களுக்குச் சென்று மூன்று வேளை அல்லது ஒரு வேளை உபவாசம் இருக்க வேண்டும். புண்ணிய மாதத்திலும், விரத காலத்திலும், பௌர்ணமியிலும் வெளியில் ஸ்தானம் செய்து சுத்தனாகிப் பின்  பக்தியோடு விதிப்படி தீர்த்தத்தில் மூன்று முறை  ஸ்தானம் செய்ய வேண்டும். கரையில் இருக்கும் ப்ராமணர்களுக்கு தட்சணை கொடுத்து, திருக்கோயிலுக்குச் சென்று பூஜை செய்து பின் திரும்பிச் செல்லவேண்டும். இது அனைவருக்கும் விதிக்கப்பட்டது. அருகில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவதைக் காட்டிலும் தொலைவில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவது நல்லது. தீர்த்த ஸ்தானமானது தவத்திற்கும், பாவம் போக்குவதற்கும் மன சுத்தத்திற்கும் உரியது என்பதால் ஜன்ம சுத்தனாய் இருப்பவன் புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். இதன் பலன்களை மனிதன் மறுமையில் அடைவான்.

உமை

உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், திரவிய தானம் செய்யும் மனிதன் புண்ணியம் அடைவது எவ்வாறு?

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 25

புகைப்படம் : இணையம்

உமை
தர்மத்தை கடைபிடிப்பவர்களால் குரு பூசை எவ்வாறாக செய்யப்படுகிறது?

சிவன்

நன்றி உள்ளவர்களுக்கு சிறந்த தர்மம் என்பதாலும் குரு முன்பு உபகாரம் செய்தவர் என்பதாலும் குருவை பூசிக்க வேண்டும். கற்றுத்தரும் குரு, தந்தை மற்றும் தாய் ஆகியோர் குருவிலும் குருவாக கொள்ளவேண்டும். தந்தையின் மூத்த சகோதரரும், இளைய சகோதரரும், தந்தையின் தந்தையும்  தந்தைக்கு சமமானவர்களாகி பூஜிக்க தகுந்தவர்கள்; அது போலவே தாயாரின் மூத்த சகோதரியும், இளைய சகோதரியும், தாயின் தாயும் தாயாக நினைக்கப்பட வேண்டியவர்கள்; கற்றுத் தரும் குருவின் புத்திரனும், குருவின் குருவும் குருவாகிறார்கள்;

மூத்த சகோதரன், அரசன், தாய்மாமன், மனைவியின் தந்தை, பயத்தில் காப்பாற்றியவன்  மற்றும் உணவு இட்டுக் காத்தவன் ஆகியோர் குருவாக சொல்லப்படுகின்றனர்.

தந்தையை திருப்தி செய்பவரை பிரம்ம தேவரும், தாயை திருப்தி செய்பவரை தேவ மாதாக்களும் திருப்தி செய்கின்றனர். எவன் குருவை பூசனை செய்கிறானோ அவன் பிரம்ம தேவரை பூசனை செய்தவனாகவே ஆகிறான். அவர்கள் அதிருப்தியாக இருந்தால் மனிதன் நரகம் அடைவான்.

குருவிடத்தில் நீண்ட பகையையும், விரோதத்தையும் மனதாலும் நினைக்கக் கூடாது; அவர்களுக்கு பிடிக்காத சொல்லைச் சொல்லுதல், பிடிக்காதவற்றை செய்தல், அவர்கள் இருக்கு போது விதண்டாவாதம் செய்தல், குருவுடன் விவாதம் செய்தல், கலகம், பரிகாசம், கேளிக்கைப் பேச்சுகள், குருவிடத்தில் பொறாமை, குருவை தூஷித்தல்  இவற்றை செய்யக் கூடாது;

குருவின் கட்டளையைச் செய்பவனை விட சிறந்த புண்ணியசாலி எதுவுல் இல்லை. குரு பூஜை செய்தல் என்பது யாகம் செய்வதும், பெரும் தவம் செய்வது ஆகியவற்றை விட மேலானது. குருவை வழிபடாவிட்டால் எந்த வித ஆஸ்ரம தர்மமும் இல்லை.

மனம் வாக்கு காயங்களால் குரு, தந்தை, தாய் இவர்களுக்கு தீங்கு செய்யும் பாபம் என்பது சிசுக் கொலையை விட கொடுமையானது. அவர்களை விட பாபம் செய்தவன் உலகினில் இல்லை.

உமை
உபவாசத்தின் முறைகளைப் பற்றி எனக்கு உரைக்கவேண்டும்.

சிவன்

தேகத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கவும், இந்திரியங்களை காயவிடவும், ஒருவேளை புசிப்பதையும் உபவாசம் எனப் பகர்கின்றனர். இவ்வாறு ஆகாரத்தை குறைப்பதால் பெரிய புண்ணியத்தை அடைகின்றனர். உபவாசத்தின் போது தேகத்திற்கு தீங்கு வருமாயின் அதை நீக்குதலின் பொருட்டு பாலையோ அல்லது பழங்களையோ உண்ணலாம்.

உமை
பிரம்மச்சாரி விரதத்தை காப்பது எவ்வாறு?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 24

 

உமை

மனிதன் விரதத்தை எப்படி செய்தால் புண்ணியம் அடைவான்?

சிவன்

  • மனிதன் சாத்திரத்தில் உரைத்தவாறு நீராடிய பின்பு பஞ்ச பூதங்களையும், சூரிய சந்திரர்களை காலை மற்றும் மாலை ஆகிய இரு சந்தி வேளைகளிலும், தர்ம தேவதையையும், யமனையும், பித்ருக்களையும் நமஸ்கரித்து தன்னை அவர்களிடம் ஒப்பித்து மரணம் வரையிலுமோ அல்லது குறிப்பிட்ட காலம் வரையிலுமே விரதத்தை செய்யலாம்.
  • காய்கறி, கனி மற்று பூ இவற்றிலும் விலக்குவது குறித்து நிச்சயப்படுத்திக் கொண்டு விரதம் செய்யலாம்.
  • பிரம்மச்சாரிய விரத்தையும், உபவாச விரத்தையும் கொள்ளலாம்.
  • இவ்வாறு பலவகையிலும் கொள்ளப்படும் விரதத்திற்கு அது பற்றி தெரிந்தவர்கள் கெடுதல் வராமல் காக்க வேண்டும். இவ்வாறான விரதம் கெட்டால் பாவம் என்று அறிவாயாக.
  • மருந்து உண்பதற்காகவும், அறியாமையாலும், பெரியோர் கட்டளையாலும், சுற்றத்தாருக்கு உதவி செய்வதற்காகவும் விரதம் கெடுவதால் குற்றம் ஆகாது.
  • விரதம் முடிக்கும் போது சாத்திரத்தில் விதிக்கப்பட்டவாறு முடிக்க வேண்டும். அதனால் சித்தி அடைவான்.

உமை

சிலர், புலால் எனும் மாமிசம் உண்ணுகின்றனர், சிலர் விட்டு விடுகின்றனர். அதை உண்ணலாமா கூடாதா? இதைச் சொல்லக்கடவீர்.

சிவன்

  • அக்கினி பூசையும், தானமும், வேதம் ஓதுதலும், தட்சிணைகள் நிரம்பிய யாகங்கள் ஆகியவை புலால் உண்ணாமல் இருப்பதன் பதினாறின் ஒரு பங்கிற்கு ஈடாகாது. சுவையை விரும்பி தனக்காக வேறு உயிரைக் கொல்பவன் பாம்பு, நரி, கழுகு மற்றும் ராட்சர்களுக்கு சமமானவன். பிற மாமிசத்தில் தன்னை வளர்ப்பவன் பிறக்கும் பிறப்புகளில் எல்லாம் பயம் கொண்டவனாகவே இருப்பான். தன்னை அறுத்தல் தனக்கு எத்தனை துன்பம் தருமோ அது போலவே பிற உயிர்களுக்கும் துன்பம் தரும் என்று புத்திசாலி உணரவேண்டும்.
  • வாழ்நாள் முழுவதும் மாமிசம் உண்ணாதவன் சொர்கத்தில் நிலைபெறுவான். நூறு வருடம் தவம் செய்வதும் மாமிசம் விடுவதும் சமமாகவே இருக்கும் அல்லது அந்த தவ வலிமை குறைவாகவே இருக்கும். உயிரைக்காட்டிலும் மேலானது எதுவும் இல்லை என்பதால் தன் போல் பிற உயிர்களிடத்தில் இரக்கம் வைக்க வேண்டும்.
  • மாமிசத்தின் சுவை அறிந்து அதை விலக்குபவன் பெறும் நன்மையை யாகங்களும், தேவர்களாலும் செய்யமுடியாது.
  • மாமிசத்தை விட இயலாவிடின் ஏதாவது ஒரு மாதத்தில் விட வேண்டும்; அதுவும் இயலாது போனால் கார்திகை மாதம் சுக்ல பட்சத்தில் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை), தனது ஜன்ம நட்சத்திரதின் போதாவது, புண்ணிய திதிகளில் அல்லது அமாவாசை பௌர்ணமி திதிகளில் மட்டுமாவது விடவேண்டும்.
  • உடற் பிணிகள் வந்து அதன் பொருட்டு மாமிசம் உண்பவனையும் பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட மாமிசம் உண்பவனையும் பாவம் பற்றாது.

உமை

தர்மத்தை கடைபிடிப்பவர்களால் குரு பூசை எவ்வாறாக செய்யப்படுகிறது?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 23

புகைப்படம் : இணையம்

உமை

பானத்தின் குற்றங்களையும், குடிப்பதற்கும் குடிக்காமல் இருப்பதற்கும் ஆன காரணத்தை கேட்க விருப்புகிறேன்.

சிவன்

ஆதிகாலத்தில் எல்லா மனிதர்களும் சிறந்த ஒழுக்கம் உடையவர்களாகவும், நல்ல புத்தி உடையவர்களாகவும், சிறந்தான ஆசாரத்தை அனுட்டிப்பவர்களாகவும் , உயர்ந்த எண்ணம் உடையவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறான காலத்தில் ஏவல் தொழில் செய்ய ஆட்கள் இல்லாததால்மனிதர்களுக்கு மயக்கத்தை உண்டு பண்ணுங்கள்என்ற கட்டளையை இட்டார். தேவர்கள் தமோ குணத்தின் சாரத்தை எடுத்து புத்தியை கெடுப்பதும், மனிதர்களுக்கு மயக்கத்தை தருவதும், பாவத்தை உண்டாக்குவதுமான பானத்தை மனிதர்களிடத்தில் சேர்பித்தனர். அதுமுதல் இதை அருந்துபவர்கள் செய்யத்தக்கது, செய்யத்தகாகது, சொல்லத்தக்கது, சொல்லத்தகாது, குணம், குற்றம் இவற்றை அறியாது அருந்தி மயங்கினார்கள். தகாத விஷயங்களைப் பேசுதல், கலகம் செய்தல் போன்ற தகாத செய்கைகளை செய்து பெரும் பாவங்களைச் செய்கின்றனர். மது அருந்துதல் வெட்கம், தைரியம், புத்தி ஆகியவற்றை அழித்துவிடும். நாணமும் கூச்சமும் அற்றவர்களாக செய்துவிடும்குடிப்பவர்கள் குடியை விரும்பி கொடுப்பவர்களுக்கு வேலைக்காரர்களாக ஆகிவிடுகின்றனர். இவர்கள் கயிற்றில் கட்டப்பட்ட பசுக்களைப் போல் வேலைகளைச் செய்கின்றனர். காரண காரியம் அறியாமல் நினைவு கொண்டபடி செய்வதால் பாவத்தை பற்றுகிறான். சினேகத்தை கெடுப்பவனாகவும், அசுத்தனாகவும், அவமதிக்கப்பட்டவனாகவும், உண்ணத் தகாத உணவுகளை உண்பவனாகவும், கலகம் செய்வதில் விருப்பம் உள்ளவனாகவும், கடும் சொற்களை அனைவரிடத்திலும் சொல்பவனாகவும், பெரியோர்களை இழிவு படுத்தி பேசுபவனாகவும், பிறர் மனைவி கொள்பவனாகவும், யாரிட்டத்திலும் நல்ல வார்த்தைகளை கேளாதவனாகவும் இருப்பான். இவ்வாறு பல குற்றம் உடையதால் அவர்கள் நரகம் அடைவார்கள். ஆகவே தம் இதம் கருதும் சாதுக்களால் இப்பானம் விலக்கப்பட்டிருக்கிறது

உமை

புண்ணியத்தின் முறையைக் கூறுங்கள்.

சிவன்

ஔபரமிகம், நிருபத்ரவம், ஸோபகரணம் என புண்ணியம் மூன்று வகைப்படும்.

ஔபரமிகம்

பாப காரியங்களை செய்யாதிருப்பதாகிய ஔபரமிகம், மனோ வாக்கு காயங்களால் ஏற்படும் பாவங்களை விடுதல் மற்றொரு புண்ணியம் ஆகும். இந்த பாவங்களையும் மனதால் நினைத்து அவற்றை விலக்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுவான். (மூன்று வகையான பாவங்களையும் விடுதல் தபோவிரதம் எனப்படும்.) எல்லா பாவங்களையும் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ விடவேண்டும். பாவங்களை விடுவது அசாத்தியம் எனினும் மனிதன் பாவங்களை விட்ட உடனே உயர்ந்ததாகிய ரிஷி ஆகிறான். புத்தி குறைவான மனிதர்கள் இந்த வழி அறியாமல் நரகத்தில் வதைபடுகின்றனர்.

நிருபத்ரவம்

சான்றோர்களிடம் இருந்து சாஸ்திரங்களை கேட்டல், ஐம்புலன்களை அடக்குதல், உள்ளத்தில் எப்பொழுதும் திருப்தியாக இருத்தல் ஆகியவற்றால் பாவங்களை விலக்க முடியும். இது நிருபத்ரவம் எனப்படும்.

ஸோபகரணம் (அல்லது) நிருபஸாதனம்

உலகம் முழுவதும் நன்றாக இருக்கும்படி நினைத்தல், சத்தியம், மனத்தூய்மை, உபவாசங்களில் மகிழ்வு கொள்ளுதல், காமக் குரோதங்களை விடுதல், மனதையும், இந்திரியங்களையும் அடங்குதல் மற்றும் உள்ள நற்கருமங்கள் அனைத்தும் நிருபஸாதனம் எனும் புண்ணிய வகையைச் சார்ந்தவை.

சத்யமானது சுவர்கத்திற்கு படி போலவும், துன்பக்கடலில் கப்பல் போலவும் இருக்கிறது. கண்டதையும் கேட்டதையும் உள்ளபடி உரைக்கும் சத்தியத்திற்கு மேலான தானமும் இல்லை; தவமும் இல்லை.

உயர்வு தாழ்வுகளை அறிந்ததால் சத்தியத்தை பேசுவதால் தீர்க்க ஆயுள் உண்டாகும். அவன் சந்ததியின் தொடர்ச்சியை காண்பவனும், உலகின் வரம்பை நிலை நிறுத்துபவனும் ஆகிறான்.

உமை

மனிதன் விரதத்தை எப்படி செய்தால் புண்ணியம் அடைவான்?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 22

உமை
அசுபகர்மம், சுபகர்மம் எப்படிப்பட்டது? அதனை விளக்குங்கள். உயிர்களை கீழ் நிலைக்கு தள்ளும் அசுபகர்மம் பற்றியும், மேலான நிலைக்கு அழைத்துச் செல்லும் சுபகர்மம் பற்றியும் சொல்ல வேண்டும்.

சிவன்
மனம், வாக்கு, காயங்களால் பாப கர்மம் உண்டாகிறது.

கொலை செய்ய எண்ணுதல், பொறாமை, பிறர் பொருளில் ஆசை கொள்ளுதல், மனிதர்களின் ஜீவனமாக சம்பளத்தை கெடுப்பது, தர்ம காரியத்தில் சிரத்தை இல்லாதிருத்தல், பாப காரியம் செய்கையில் சந்தோஷம் கொள்ளுதல் இவை மானச பாவங்கள் எனப்படும்

பொய் பேசுதல், கடுமையான சொற்களைச் சொல்லுதல், யாருக்கும் அடங்காமல் பேசுதல், மற்றவர்களை நிந்தித்தல் இவைகள் வாக்கினால் உண்டாகும் பாவங்கள் எனப்படும்

பிறர்மனை புகுதல், பிற உயிர்களை கஷ்டப்படுத்தி அவைகளை கட்டுப்பத்துதல், களவு, களவுப் பொருளை அழிப்பது, உண்ணத் தகாதவற்றை உண்ணுதல், வேட்டை ஆடுதலில் பற்றுதல், கர்வம், அலட்சியம், பிடிவாதத்தால் பிறரை நோகச் செய்தல், செய்யத் தகாதவற்றை செய்தல், குடிப்பது, அசுத்தமாக இருத்தல், தீயவர்களுடன் சேர்க்கை, கெட்ட ஒழுத்தம் உடையவராக இருத்தல், பாப காரியங்களுக்கு துணை போதல் ஆகியவை சாரீர பாவங்கள் எனப்படும்

இதில் சாரீர பாவம் மிக அதிக பாவமாகும்

கர்மவசத்திற்கு உட்பட்டு அறியாமலோ அல்லது காரணம் பற்றியோ எவ்வாறு செய்யினும் பாவம் செய்தவனை அடைந்தே தீரும்.

உமை
பாவ காரியத்தை எவ்வகையில் செய்வதால் அது பற்றுவதில்லை?

குற்றம் செய்யாத ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள தன்னை நோக்கி முதலில் ஆயுதத்தை ஓங்கிய பகைவனை திருப்பி அடித்துக் கொண்டால் பாவம் பற்றாது. ஊர் காப்பாற்றுபடுவதன் பொருட்டும், துயரப்படுபவர்களை காப்பதன் பொருட்டும் எதிர்களை துன்புறுத்துவனை பாவங்கள் பற்றாது.பஞ்சத்தில் இருக்கும் போது உயிர் வாழ்வதற்காக எவரும் அறியாமல் உணவு கொண்டவனை பாவங்கள் பற்றாது.(கிரகஸ்தர்களுக்கானது இது).

இடம், காலம் ஆகியவற்றை புத்தியினால் ஆராய்ந்து, பிரயோசனத்தை பற்றை ஆராய்ந்து பேசத் தக்காதவற்றை பேசினாலும், செய்யத் தகாதவற்றை செய்தாலும் சிறிது பாவம் பற்றும்.

உமை
பானத்தின் குற்றங்களையும், குடிப்பதற்கும் குடிக்காமல் இருப்பதற்கும் ஆன காரணத்தை கேட்க விருப்புகிறேன்.

 

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 21

ஓவியம் : இணையம்

உமை

தேகம் விட்டதும், ஒன்றிலும் பற்றில்லாதும், காட்சிக்கு அகப்படாததுமான ஆத்மாவை எடுத்து எமன் அருகில் கொண்டு செல்வது எப்படி?

சிவன்

கர்மவசியம், போகவசியம், துக்கவசியம் என மூன்றுவகைத் காரணதேகங்கள் உண்டு.

  • கர்மவசியம் என்பது மானிட தேகம்
  • போகவசியம் என்பது தேவலோகத்தில் உள்ள தேகம்
  • துக்கவசியம் என்றும் யாதனாவசியம் என்றும் கூறப்படும் மாயையால் உண்டாக்கப்படும் தேகம்

யாதனாவசியம் எனும் தேகம் எமலோகம் தவிர எங்கும் காணப்படவில்லை. உயிர்கள் மறித்தப்பின் யாதனாவசியம் எனும் தேகம் சேர்த்து மாயையினால் உயிர்கள் எம பட்டணத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.  நிராபாதம் எனும் மார்க்கம் கொண்டு இராணுவ வீரர் வேஷத்துடன் இரண்டாவது பிரிவு உடைய உயிர்களை கொண்டு செல்கின்றனர். அதர்ம மார்கம் உடையவர்களை சண்டாள வேஷத்துடன் பாசங்களினால் கட்டி அடித்து பயமுறுத்தி துர்த்தசம் எனும் வழியில் கொண்டு செல்கின்றனர்.

இவ்வாறு மூன்று வகைகளாக எமலோகம் எடுத்துச் செல்கின்றனர். அங்கு சென்றப்பின்னர் தர்மாசனத்தில் தனது மந்திரிகளோடு இருக்கும் எமனிடம் அழைத்துவந்த உயிர்களை குறித்து விபரம் தெரிவிக்கின்றனர்.

எமனானவன், வந்தவர்களில் இருக்கும் உத்தமர்களை முறைப்படி பூஜித்து, அவர்களை வரவேற்று அவர்களின் கர்மத்தை எடுத்துரைத்து அவர்களுக்கு தகுந்த லோகங்களை குறித்து கட்டளையிட்டு அவர்களை சுவர்க்கம்  செல்ல அனுமதிக்கிறான்.

நடுத்தரமானவர்களின் கர்மங்களைக் கேட்டப்பின் சரியாக விசாரித்து அவர்களை மானிட பிறப்பில் பிறக்க கட்டளை இடுகிறான்.

அதர்மர்களை எமன் பார்ப்பதே இல்லை.யாதனா வசியம் சேர்ந்த மாயை கொண்ட உயிர்களை வெட்டியும், மோதியும், குழிகளில் தள்ளியும், ஸம்யாமினி எனும் பாறைகளில் மோதச் செய்தும் துன்புறுத்துகின்றனர். இரும்பு போன்று உறுதியான அலகு உடையதும், மிகக் கொடியதுமான கழுகுகள் அந்த உயிர்களை துன்புறுத்துகின்றன. அவர்களில் சிலர் அஸிபத்ரவனத்தின் வழியே நடந்து செல்கின்றனர். அங்கே கூரான பற்களுடன் கூடிய நாய்கள் அவர்களை கடித்து துன்புறுத்துகின்றன. மலக்கழிவுகளால் நிரம்பி பிரவாகமாக செல்வதும், அருவருக்கத் தக்கதும், முதலைகள் நிரம்பியதும், ஆழமானதும் ஆன வைதரணி நதி இருக்கிறது. எமதூதர்கள் கொண்டு சென்ற உயிர்களை அதில் குளிக்கச் செய்து அந்த நதி நீரையே குடிப்பிக்கச் செய்கின்றனர். செக்கு இயந்திரங்களில் அரைக்கப்பட்டும், தணல்களில் எரிக்கப்பட்டும், மூடி வேகவைக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர். வாள் முதலிய ஆயுதங்களால் அறுக்கப்பட்டும், வெட்டப்பட்டும், துண்டாக்கப்பட்டும், சூலங்களாலும், சிறிய ஊசிகளால் குத்தப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறு தண்டிக்கும் போது இன்ன பாவத்திற்காக இன்ன தண்டனை என்றும் கூறி தண்டிக்கின்றனர். இவ்வாறு யாதனாவசியம் எனும் தேகத்தால் துன்புறும் உயிர்கள் துன்பத்தை அடைந்து இது தாங்கள் செய்த பாவத்தினால் வந்து என்று உணர்ந்து கதறி அழுது தண்டனைகளை அனுபவிக்கின்றனர். அங்கே துன்பங்களை அனுபவித்தப்பின் அழுக்கற்றவர்களாகி பாவத்தில் இருந்து விடுபடுகின்றனர்.

(இந்த விளக்கங்கள் மிக நீளமாக இருப்பதாலும், கருட புராணத்தில் விபரமாக விளக்கப்பட்டிருப்பதாலும் மேல் விபரம் தேவைப்படுபவர்கள் படித்து அறிந்து கொள்க)

உமை

அசுபகர்மம், சுபகர்மம்  எப்படிப்பட்டது? அதனை விளக்குங்கள்.

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 20

 

உமை

‘ஒருவன் இறந்ததும் பிறந்ததாக நினைக்கப்படுகிறான். அப்படிப் பிறக்கையில் ஆத்மா எப்படி இருக்கும்? கர்ப்பம் ஆரம்பிக்கும் போதே ஆத்மா சேருகிறதா?

சிவன்

வேறு ஒர் ஆத்மா கர்ப்பத்தில் சேர மனிதன் இறக்கிறான். மற்றொரு ஆத்மா கர்பத்தில் சேர பூமியில் பிறக்கிறான். இவ்வுணமை எவருக்கும் தெரியாது. தெய்வத்தினால் அது உண்டாகும். பிராணிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், பெற்றவளுக்காகவும் அவ்விரண்டு ஆத்மாக்களும் சமமான கர்மம் செய்திருப்பதாலும் அவ்வாறு நடக்கிறது என்று நீ அறிந்துகொள். சிலர் நரகம் அனுபவித்தப்பின் ஜன்மத்தை விரும்பி அடைகின்றனர். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஸாம்யாமிகை எனும் மாயை இருக்கிறது. (இறந்த சரீரத்தில் இருந்த ஆத்மாவை மற்றொரு சரீரத்தில் பிறக்கச் செய்வது).

உமை

கர்மங்களை அனுபவிக்கும் ஆத்மா என்பது இல்லை. இறப்பவை பிறப்பது இல்லை; செடியில் காய் உண்டாவது போல், கடலில் அலைகள் தோன்றுவது போல் உலகில் உருவங்கள் தோன்றுகின்றன. ஆகவே தவ, தானம் முதலிய கருமங்கள் பயனற்றவைகள், எனவே மறுபிறப்பு என்பது இல்லை  என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் தாம் பார்க்காதவற்றை சொல்லக் கேட்டும், தம் கண்களால் பார்க்க இயலா காரணத்தால் இவை எல்லாம் இல்லை என்றும் தீர்மானிக்கின்றனர். இது பற்றி சொல்லக் கடவீர்

சிவன்

நாஸ்திகர்கள் எதைச் சொல்கிறார்களோ அது உலகில் இல்லை. இதுதான் சாபத்தினால் கெட்டு சாஸ்திரங்களை பழிப்பவரின் மதம். சாஸ்திரத்தில் சொல்லப்படவை அனைத்தும் கண்ணால் காணப்பட்டவையே. மனிதர்கள் சாஸ்திரங்களை  உறுதி என்று கொண்டு வைராக்கியம் எனும் கத்தியினால் விருப்பங்களை விலக்கி ஸ்வர்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். எனவே உலகில் சிரத்தையின் பலன் பரலோகத்தில் மிகவும் பெரியது. தம்முடைய நன்மையக் கருதுபவர்களுக்கு புத்தி, சிரத்தை, அடக்கம் ஆகியவை காரணங்கள். இம்மூன்று காரணங்களாலும் ஒருங்கே அமையப் பெற்றவர்களே சொர்க்கம் செல்கின்றனர். மற்றவர்கள் இக் காரணங்கள் ஒன்று சேராமையினால் நாத்திக எண்ணம் கொண்டவராக ஆகின்றனர்.  அனுட்டானம் இல்லாமல் இருத்தல்,  பிடிவாத குணம், சாத்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் பகைத்தல் போன்றவற்றால் அவர்களது அன்னம் யாராலும் உண்ணப்படாமல் தாழ்ந்த நிலைக்கு செல்கின்றனர். இந்த விஷயத்தில் மிக்க அறிவுள்ளவர்களும் மயங்குகின்றனர். எத்தனை வாதம் செய்தாலும் அதனை அறிய இயலாது. இது பிரம்மாவால் உண்டாக்கப்பட்ட மாயை. இது தேவர், அசுரர் போன்றவர்களால் கூட அறிய இயலாது எனில் மனிதர்கள் எம்மாத்திரம். மனதில் சிரத்தை கொண்ட மனிதர்களால் மட்டும் சாஸ்திரங்களில் சொல்லி இருப்பது உள்ளது என்று அறியப்படும். அதனால் நன்மை பெறலாம். தனக்கு நன்மையை விரும்புகிறவன் நாத்திகர்களின் வாக்கினைக் கேட்கும் பொழுது தனக்கு காது கேளாதவன் போல் நடந்து கொள்ளவேண்டும்.

உமை

‘எம தண்டனைகள் எப்படிப்பட்டவை? எம தூதர்கள் எப்படிப்பட்டவர்? இறந்த பிராணிகள் எம லோகத்திற்கு போது எவ்வாறு? யமனுடைய இருப்பிடம் எப்படிப்பட்டது? அவன் எவ்வாறு தண்டிக்கிறான்’ இவைகளை நான் கேட்க விரும்புகிறேன்.

சிவன்

எமனது இருப்பிடம் தென் திசையில் இருக்கிறது. அது அழகானதும், நிறைய பொருட்கள் நிரம்பியதுமாகவும், பித்ரு தேவதைகள்,  பிரேத கூட்டங்கள், யம தூதர்கள், கர்மங்களினால் அகப்பட்ட பல பிராணிக் கூடங்களால் நிரம்பியதுமாக இருக்கிறது.

உலக நன்மையில் ஊக்கமுள்ள எமன் பிராணிகளின் நல்வினை, தீயவினைகளை அறிந்து எப்பொழுதும் மற்றவர்களை தண்டித்துக் கொண்டு இருக்கிறான். அவன் அந்த இடத்தில் இருந்தே பிராணிக் கூட்டங்களை கொன்று கொண்டு இருக்கிறான். அவன் மாயா ரூபங்களை தேவர், அசுரர் போன்றவர்களால் கூட அறிய இயலாது எனில மனிதன் எவ்வாறு அறிவான்? கர்மம் முடிந்த உயிர்களை தூதர்கள் பிடித்துச் செல்கின்றனர். உலகினில் தாம் செய்யும் கர்மங்களால் உயிர்கள் உத்தமானவர்களாகவும், அதர்மமானவர்களாகவும், மத்தியமானவர்களாகவும் இருக்கின்றன.

தர்மத்தில் செல்பவர்கள் உத்தமர்கள். கர்மங்களால் மூன்று உலகங்களிலும் பிறப்பவர்கள் மத்தியமர். நரகம் போகிற பாதையில் சென்று பிறப்பவர்கள் அதர்மர்கள்.

  • ரமணீயம் – செடி கொடிகளால் நிரம்பி, அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, தூபங்கள் காட்டப்பட்டு அப்பாதையில் செல்பவர்களின் மனதை கவர்வதாகவும், இனிமையான காற்று உள்ளதாகவும் இருக்கும்.
  • நிராபாதம் – ஒளி பொருந்தியதாக இருக்கும்.
  • துர்த்தர்சம் – இருள் நிரம்பியதாக, துர்வாசனைகளுடன், புழு பூச்சி நிறைந்ததாக கடக்க கடினமான பாதையாக இருக்கும்.

ரமணீயம் எனும் மார்கத்தில் செல்பவர்களை மட்டும் யமதூதர்கள் சிறந்த துணிகளை எடுத்து வந்து சுகமாக அழைத்துச் செல்வர்.

உமை

தேகம் விட்டதும், ஒன்றிலும் பற்றில்லாதும், காட்சிக்கு அகப்படாததுமான ஆத்மாவை எடுத்து எமன் அருகில் கொண்டு செல்வது எப்படி?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 19

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

உலகில் செய்யப்படும் தொழில்கள் யாவும் தெய்வத்தாலே நடக்கிறது என சிலரும், செய்யப்படும் முயற்சி முன்வைத்து முயற்சியால் நடக்கிறது என சிலரும் நிச்சயிக்கின்றனர். இந்த காரணத்தால் மனம் சந்தேகம் கொள்கிறது. இதன் காரணத்தை விளக்குங்கள்.

சிவன்

உலகில் நல்ல செய்கையும், கெட்ட செய்கையும் மனிதர்கள் செய்கின்றனர். அவர்களிடத்து அந்தக் கர்மங்கள் இருவகைகளாகக் காணப்படுகின்றன. முன் செய்யப்பட்ட கர்மங்கள், தற்போது செய்யப்படும் கர்மங்கள் என அவைகள் இருவகைப்படும். காட்சிக்கு புலனாகாதது தெய்வம் என்றும், கருவிகளால் செய்யப்படுவது மானுஷம் என்றும் கூறப்படுகிறது. மானுஷம் செய்கை மட்டுமே, தெய்வத்தினாலே தான் பலன் நிறைவேறுகிறது. பயிர்த் தொழிலாகிய விவசாயம் செய்யும் போது உழுவது, விதைப்பது, நாற்று நடுவது, அறுப்பது முதலியவை முயற்சிகள். இவை இரண்டு விதங்களால் கை கூடாமல் இருக்கும், ஒன்று தெய்வத்தின் சங்கல்பம், மற்ரொன்று முயற்சியின் பிழை. நல்ல முயற்சியால் புகழ்ச்சியும், தீய முயற்சியால் இகழ்ச்சியும் உண்டாகும்.

உமை

ஆத்மாவானது கர்மத்தின் அடிப்படையில் கர்பத்தில் வருவது எப்படி என்பதை எனக்குச் சொல்லவேண்டும்?

சிவன்

இது ரகசியங்கள் எல்லாவற்றிலும் மேலானது. தேவ ரகசியத்தைக் காட்டிலும் ஆத்ம ரகசியம் பெரிதானது. தேவர்களும், அசுரர்களும் ஆத்மா போவதையும் வருவதையும் அறிய மாட்டார்கள். ஆத்மா நுட்பமானதாலும், எதிலும் பொருந்தி இராமல் இருப்பதாலும் அது மனிதர்களால் காண இயலாததாக இருக்கிறது. மாயைகளுக்குள் ஆத்மாவே பெரிய மாயை.

ஆத்ம மாயையால் தான் முட்டையிலிருந்து பிறக்கும் அண்டஜம், வேர்வையிலிருந்து பிறக்கும் ஸ்வேதஜம், வித்து முதலியவற்றை  பிளந்துகொண்டு  பிறக்கும் உத்பித்ஜம், கருப்பையிலிருந்து  பிறக்கும் ஸராயுஜம் ஆகியவற்றில் அந்த ஆத்மா சேருகிறது. இதற்கு புணர்ச்சி, சுக்கிலம், சோணிதம் மற்றும் தெய்வம் ஆகியவை காரணங்கள்.

சுக்கில, சோணிதங்களின் சேர்க்கையால் ஆத்மா கர்பத்தில் பிரவேசித்து கட்டியான உருவமாகிறது. இது அண்டஜம், ஸராயுஜம் இரண்டுக்கும் பொதுவானது.

கர்மங்களுக்கு ஏற்ப அதன் அங்கங்கள் உருவாகின்றன.இவ்வாறு கர்ப்பம் வளர வளர அதன் கூடவே கர்மத்துடன் சேர்ந்த ஆத்மாவும் வளர்கிறது.

பயிர்த் தொழில் காரணம்  முயற்சி என்றும், மழை பெய்விப்பது, முளைப்பது போன்றவை தெய்வம் காரணம் என்பது விளங்கும். ஐந்து பூதங்கள் நிலைகள், கிரங்களின் சஞ்சாரம்,மனிதர் புத்திக்கு எட்டப்படாத, கருவிகளால் செய்யப்படாத நல்லவை, தீயவைகள் அனைத்திற்கும் தெய்வம் காரணம் என்று அறி. இவ்வாறு ஆத்மா கர்மத்தின் அடிப்படையில் கர்பத்தில் வருகிறது.

முன்னொரு ஆதிகாலத்தில் மனிதர்கள் நல்வினைகளைச் செய்து இரண்டு உலகங்களை அறிந்து இருந்தனர். உலகம் இவ்வாறு இருந்தபோது எல்லோரும் தர்மத்தை விரும்பி இருந்தனர். இதனால் சுவர்கள் எளிதில் நிறைந்தது. இதனால் பிரம்ம தேவர் மனிதர்களை மயங்கச் செய்தார். அது முதல் மனிதர்கள் முன்வினையை அறியவில்லை. அதோடு காம, குரோதங்களையும் சேர்த்தபிறகு அவற்றால் கெடுக்கப்பட்ட மனிதர்கள் சுவர்க்கம் செல்லவில்லை. எனவே இவர்கள் முன்வினை எதுவும் இல்லை என மேலும் பாவங்களைச் செய்தனர். தன்னுடைய லாபத்திற்காக தர்ம காரியங்கள், பரலோகப் பயன்  ஆகியவற்றை மறந்து அழிவு உண்டாக்கும் அஞ்ஞானம் கொண்டனர். இவ்வாறு அஞ்ஞானத்தால் சூழப்பட்ட மாயா உலகில் ஆத்மா பிரவேசிக்கிறது.

உமை

‘ஒருவன் இறந்ததும் பிறந்ததாக நினைக்கப்படுகிறான். அப்படிப் பிறக்கையில் ஆத்மா எப்படி இருக்கும்? கர்ப்பம் ஆரம்பிக்கும் போதே ஆத்மா சேருகிறதா?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 18

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்களின் கர்ம பலன்களை அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு துன்பம் செய்பவன் நன்மை அடையும் வகை எது? அது ஒரு ஜென்மத்தில் உண்டாகுமா அல்லது பல ஜென்மாக்களில் உண்டாகுமா?

சிவன்

பிறர் நன்மைக்காக அவர்களுக்கு துன்பத்தை செய்பவன் சுகம் பெறுவான். அரசன் ஜனங்களை தண்டித்து, பயமுறுத்தி நல்வழிப்படுத்துதல், வழி தவறி நடக்கும் சீடர்களை தண்டித்து ஆச்சாரியன் நல்வழிப்படுத்துதல், வைத்தியம் செய்பவன்  என இவ்வாறு நல் எண்ணத்துடன் துன்பம் செய்பவன் சுவர்க்கம் அடைவான். அயோக்கியனான ஒருவன் கொல்லப்பட்டால் மற்றவர்கள் சுகப்படுவர் எனில் அதில் தர்மம் மட்டுமே இருக்கும். பாவம் இருப்பதில்லை.

உமை

இவ்வுலகில் நான்கு வகையான உயிர்கள் காணப்படுகின்றன. அவைகளின் அறிவு இயற்கையானதா அல்லது உண்டாக்கப்படுவதா?

சிவன்

உலகம் தாவரம், ஜங்கமம் என்று இருவகைப் பொருளாக கூறப்படுகிறது. அவற்றில் பிராணிகள் நான்கு வகைகளில் உற்பத்தி ஆகின்றன.

பெயர் ஆத்மா / அறிவு இனங்கள் உண்டாகும் முறை
1 உத்பிஜ்ஜம் ஸ்பரிசம் எனும் ஒர் அறிவு நிலம் + நீர்
2 ஸ்வேதஜம் ஸ்பரிசம்,பார்வை எனும் இரு அறிவு கொசு, பேன் வெப்பம்
3 அண்டஜம் ஐந்து அறிவு பறவை வீர்யம் + நீர்
4 ஜராயுஜங்கள் ஐந்து அறிவு பசு, காட்டுமிருகங்கள், மனிதர்கள் சுக்லம் + சோணிதம்


இரவில் உண்டாகும் இருள் ஒளியால் அழிந்து போகும். தேக இருள் மாயையால் சூழப் பட்டிருப்பதால் உலக ஒளிகள் அனைத்தும் சேர்ந்தாலும் விலகாது.தேக இருளைப் போக்க பிரம்மர் பெரும் தவம் செய்து உலக நன்மையின் பொருட்டு வேதம், வேதாகமம், உபநிஷத்துகள் ஆகியவற்றைப் பெற்று தேக இருளை ஒழித்தார். இது நன்மை பயக்கும்; இது தீமை பயக்கும் என்பதை சாஸ்திரங்கள் தெரிவிக்கா விடில் உலகினில் மனிதர்களும், விலங்குகளும் வேற்றுமை இல்லாமல் இருப்பார்கள். எனவே உயிர்களுக்கு ஞானத்தைவிட சிறந்தது எதுவும் இல்லை. பிறக்கும் போது பிறவி கொண்டு பிறந்த ஞானம் முதன்மையானது. கற்பிக்கப்படும் ஞானம் இரண்டாவதானது. சாத்திரங்களைக் கற்றப்பின் ஒருவன் பிறவி பயன் பெற்றவனாகிறான். அவன் தேவதை போல் மனிதர்களுக்குள் பிரகாசம் உடையவன் ஆகிறான். அவன் பெற்ற அந்த ஞானம் காமம், குரோதம், பயம், கர்வம், விபரீத ஞானம் இவற்றை மேகங்களை காற்று விலக்குவது போல் ஒதுக்குகிறது. இவர்கள் செய்யும் சிறிய தர்மமும் பெரிதாகும். ஞானமுள்ளவன் பொருள்களின் உயர்வுதாழ்வுகளையும், உண்மையையும் அறிந்தவன் ஆகிறான். இவ்வாறான சாத்திர ஞானத்தின் பலன்களை சொன்னேன்.

உமை

சிலர் முன் ஜென்மத்தின் நினைவுகளை அறிந்தவர்களாகப் பிறக்கிறார்களே, அது எவ்வாறு?

சிவன்

திடீரென இறந்த மனிதர்கள் உடனே பிறக்கும் போது முந்தய ஜன்மத்தின் நினைவு சிறிது இருக்கும். அவர்கள் உலகில் பிறந்து அவ்வாறான ஞானம் கொண்டு இருக்கிறார். அவர்கள் வளர வளர அந்த அறிவு கனவு போல் மறைந்து விடுகிறது.

உமை

சிலர் இறந்தபிறகும் அதே தேகத்தை அடைகிறார்களே, அது எவ்வாறு?

சிவன்

எம தூதர்கள், உயிர்கள் அதிக இருக்கும் போது அவர்களால் கொல்லப்பட்டு பகுத்தறிவின்றி தான் கொண்டு செல்லும் உயிர் விடுத்து மற்றொரு உயிரை கொண்டு செல்கின்றனர். எமன் ஒருவன் மட்டுமே ஒருவனது புண்ணிய பாவங்களை அறிந்திருக்கிறான். எனவே அவர்கள் ஸ்ம்யமனி எனும் எமன் இடத்திற்குச் சென்று அவரால் கர்மங்களை அனுபவிப்பதற்காக திரும்ப அனுப்பப்படுகின்றனர். அவர்கள் கர்மம் முடியும் வரை எமன் இருப்பிடம் செல்ல இயலாது.

உமை

மனிதர்கள் தூங்கிய உடன் கனவு காண்கின்றனர், இது இயற்கையா? அல்லது வேறு காரணமா?

சிவன்

தூங்குபவர்களின் சஞ்சரிப்பதான மனம் நடந்ததையும் வருவதையும் அறிகிறது.  எனவே கனவு வருவதைக் குறிப்பதாக இருக்கும்.

உமை

உலகில் செய்யப்படும் தொழில்கள் யாவும் தெய்வத்தாலே நடக்கிறது என சிலரும், செய்யப்படும் முயற்சி முன்வைத்து முயற்சியால் நடக்கிறது என சிலரும் நிச்சயிக்கின்றனர். இந்த காரணத்தால் மனம் சந்தேகம் கொள்கிறது. இதன் காரணத்தை விளக்குங்கள்.

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 17

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?

சிவன்

உயிர்களைக் கொல்லாமை, பொய்யாமை, வெகுளாமை , பொறுமை, உண்மை கொண்டு இருத்தல், குருவின் இடத்தில் எப்பொழுதும் பணிவுடன் இருத்தல், பெரியோர்களை பூஜித்தல், சுத்தமாக இருத்தல், செய்யத்தகாத  தீய செயல்களை விடுதல், எப்பொழுதும் பத்தியமான ஆகாரங்களை உண்ணுதல் ஆகியவை நல்லொழுக்கங்கள் ஆகும். இந்த நல்லொழுக்கங்களால் மனிதர்கள் வெகுகாலம் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். தவம், இந்திரியங்களை வெற்றி கொள்ளுதல், தேக ஆரோக்கியம் தரும் மருந்துகளை உட்கொள்ளுதல், எப்பொழுதும் மகிழ்வுடன் இருத்தல் போன்றவற்றாலும் மனிதர்கள் நீண்ட ஆயுள் பெறுகிறார்கள். மற்றவர்கள் பாவங்களைச் செய்தும், பிறரை ஹிம்சை செய்தும், பொய் சொல்லியும், பெரியோர் இடத்தில் பகைகொண்டும், பிறரை இழிவாக பேசியும், நற்கருமங்களையும், சுத்தத்தினை விட்டவர்களாகவும், நாஸ்திகர்களாகவும், மது மாமிசங்களை கொண்டும் கொடிய செய்கை உடையவர்களாகவும் இருக்கின்றனர். போகக்கூடாத இடங்களுக்குச் சென்றும்,  ஆச்சாரியர்களை பகைத்தும், கோபம் கொண்டும், கலகம் கொண்டும் இருக்கும் இவர்கள் நரகத்தில் வெகு காலம் இருந்து மானிட ஜென்ம அடையும் போது குறைந்த ஆயுளுடன் பிறக்கின்றனர். இவையே ஆயுள் குறைவின் விஷயமாகும்.

உமை

ஆத்மா, ஆண் தன்மை உடையதா? பெண் தன்மை உடையதா? இதில் எவ்வாறு ஆண் பெண் தன்மைகள் வந்தன? ஆண் உயிரும், பெண் உயிரும் ஒன்றா? வெவ்வேறானவைகளா? இவைகளை எனக்கு விளக்கிக் கூறுங்கள்.

சிவன்

உயிர் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. ஆத்மா விகாரம் அற்றது. உயிர் போன்றே ஆத்மாவும் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. கர்மங்கள் செய்வதால் அந்தந்த கர்மங்களுக்கு ஏற்றவாறு ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் பிறக்கிறார்கள்.

உமை

ஆத்மா தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யாவிடில் தேக கர்மங்களை செய்வது யார்?

சிவன்

ஆத்மா கர்மங்களைச் செய்வதில்லை. அது பிருகிருதியோடு கூடி எப்பொழுதும் கர்மங்களை செய்கிறது. சத்வம், ரஜோ மற்றும் ரஜோ குணங்களால் தேகம் எப்பொழுதும்  மூடப்பட்டிருக்கிறது. சத்வகுணம் – பிரகாச ரூபம், ரஜோ குணம் – துக்க ரூபம் , தமோ குணம் – அறிவின்மையான ரூபம். இக்குணங்களால் உலகின் செயல்கள் நடைபெறுகின்றன.

  • பொறுமை, அடக்கம், நன்மையில் விருப்பம் முதலியவை சத்வ குணத்தால் உண்டாகின்றன.
  • வேலைத்திறமை, சோம்பல் இல்லாமை, பொருள் ஆசை, விதியினை நம்பாமை, மனைவி மேல் பற்று, செல்வத்தின் மேல் பற்று முதலியவை ரஜோ குணத்தால் உண்டாகின்றன.
  • பொய், கடுமை, பிடிவாதம், அதிக பகை, நாஸ்திகத்தனம், தூக்கம், சோம்பல் முதலியன தாமஸ குணத்தினால் உண்டாகின்றன.

ஆகையால் நல்லவைகள், கெட்டவைகள் குணங்களால் உண்டாகின்றன. எனவே ஆசை அற்றவன் விகாரங்கள் அற்றவன் என்று அறிந்து கொள். சத்வ குணம் உடையவர்கள் புண்ய லோகங்களிலும், ரஜோ குணம் உடையவர்கள் மனிதர்களாகவும், தமோ குணம் உடையவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்.

ஜென்மம் எடுத்தப்பிறகு பிராணிகளுக்கு எவ்வையிலாவது துன்பம் நேரும். ஆத்மாவானது அந்த சரீரம் அழியும் போது கர்மத்தை அனுசரித்து அதை விட்டுப் போகிறது. தேகத்தில் நோய் ஏற்பட்டாலும் அவை ஆத்மாவை தீண்டுவதே இல்லை. கர்ம பலன் உள்ளவரையில் ஆத்மா இருக்கும். அது முடிந்த உடன் ஆத்மா போய்விடும். ஆதிகாலத்தில் இருந்து இவ்வாறு நடைபெறுகிறது.

உமை

மனிதர்களின் கர்ம பலன்களை அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு துன்பம் செய்பவன் நன்மை அடையும் வகை எது? அது ஒரு ஜென்மத்தில் உண்டாகுமா அல்லது பல ஜென்மாக்களில் உண்டாகுமா?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 16

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்கள், உலகின் நன்மை தீமைகள் அனைத்தும் நவகிரகங்களால் செய்யப்பட்டவை என்று நினைத்து அந்த கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பூசை செய்கின்றனர். இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை தீர்க்க கடவீர்

சிவன்

நட்சத்திரங்களும் கிரங்கங்களும் தாமே காரியங்களை செய்வதில்லை. மனிதர்களின் நன்மைக்காக அவைகள் நல்லவைகளாகவும், கெட்டவைகளாகவும் தெரிகின்றன. நல்ல கர்மங்கள் சுப கிரங்கங்களாலும், கெட்ட கர்மங்கள் பாப கிரங்களாலும் தெரிவிக்கப்படுகின்றன. ஆதலினால் பாப கிரங்கங்கள் இருக்கும் போது ஜனங்கள் கெடுதலைச் செய்கிறார்கள். சுப கிரங்கங்கள் இருக்கும் போது தாமே சரியாக செய்வதாக நினைத்து நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். எப்பொழுதும் கிரக, நட்சத்திரங்கள் நன்மை தீமை செய்வதில்லை. எல்லா வினைகளும் அந்தந்த உயிர்களால் செய்யப்பட்டவை. கிரகங்கள் வேறு, செய்பவன் வேறு. வினைகளை செய்தவன் கிரங்கங்களால் தூண்டப்பட்டு தன் பலன்களை அனுபவிக்கிறான்.

உமை

நல்ல வினைகள், தீய வினைகள் ஆகியவற்றை செய்த மனிதர்கள் அடுத்து வரும் பிறப்புகளில் எதை முதலில் அனுபவிக்கிறார்கள்?

சிவன்

சிலர் நல்லவினைகள் முன்பு அனுபவிக்கின்றனர் என்றும், சிலர் தீய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர் என்றும் கூறுகிறார்கள். இது தவறு. முன் ஜென்மங்களில் எவ்வாறு இரு வினைகளும் செய்யப்பட்டனவோ அவ்வாறே அதற்குத் தக்க பலன்களை அனுபவிக்கின்றனர். இந்த பூமியில் மனிதர்கள் செல்வம், வறுமை, இன்பம், துன்பம்,அச்சமின்மை, பயம் போன்றவற்றை வரிசையாக அனுபவிக்கின்றனர். செல்வம் உடையவர்கள் துயரப்படுகிறார்கள். வறியவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். இது மானிட வர்கங்களுக்கு பொருந்தும். சுவர்க்க, நரகத்தில் அவ்வாறு இல்லை. இடையறாத சுகம் சுவர்கத்திலும், இடையறாத துன்பம் நரகத்திலும் இருக்கும். மிகப் பெரியதான வினைகளை முதலில் அனுபவித்து மிகச் சிறிய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர்.

உமை

உலகில் உயிர்கள் பிறந்து பிறந்து நில்லாமல் உயிர் விடுத்து இறப்பது எதனால்?

சிவன்

தேகமும் ஆத்மாவும் இணைந்திருப்பதை பிராணிகள்/உயிர்கள்  என்று சொல்லப்படுகிறது. இதில் ஆத்மா நித்தியம், உடம் அநித்தியம், இவ்வாறு தேகத்துடன் சேரும் ஆத்மா நாளடைவில் தேகத்தின் வலிமை குன்றிய பிறகு அதை விட்டு விடுகிறது. இதை உலகில் உள்ளவர்கள் மரணம் என்கிறனர். இது தேவர், அசுரர், மனிதர் ஆகிய எல்லாருக்கும் பொருந்தும். உயிரற்ற பொருள்களை எப்படி ஆகாயம் தன்னிடத்தில் கொள்வது இல்லையோ அது போலவே காலமும். இவ்வாறு உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து தேகம் அடைகின்றன.

உமை

சில உயிர்கள் இளமையிலே இறக்கின்றன. சில உயிர்கள் வயது முதிர்ந்து உயிரோடு இருக்கின்றன. இதனால் காலத்தினால் மரணம் நிச்சயமாகவில்லை. இந்த சந்தேகத்தை தெளிவியுங்கள்.

சிவன்

காலமானது தேக தளர்ச்சியை மட்டும் செய்கிறது. அது தேகம் விழ்ந்து போகச் செய்வதில்லை. கர்மம் முடிந்தால் தேகம் தானாகவே விழும். முந்தைய கர்மத்தின் படியே இருப்பதும் இறப்பதும். முன் செய்த கர்மம் இருக்கும் வரையில் மனிதன் உயிரோடு இருக்கிறான். அந்த கர்மத்தின் அடிப்படையில் தான் அவன் வெகு காலம் உயிரோடு இருப்பதும்.

 உமை

மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?

 தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 15

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

அரசர்களால் தண்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு அவர்களின் பாவம் போகுமா? போகாதா, அதை விளக்க வேண்டும்.

சிவன்

அரசர்களால் தண்டிக்கப்பட்டவர்கள் எமனால் தண்டிக்கப்படுவதில்லை. தவறாக தண்டிக்கப்பட்டாலும், சரியான தண்டனை செய்யப்படா விட்டாலும் அவர்களை எமன்  தண்டித்தே விடுவான். அவர்களின் செய்கைகள் அனைத்தும் அவனுக்குத் தெரியும். கருமம் செய்த மனிதன் எவரும் எமனிடம் இருந்து தப்ப முடியாது. எமனாலும் அரசனாலும் தண்டிக்கப்பட்டவன் தண்டிக்கப்படாவிட்டாலும் அவன் வினை முழுவதையும் அனுபவிப்பான். செய் கர்மத்தின் வினைப்பயன்களை அறுத்தவர்கள் எந்த உலகிலும் இல்லை.

உமை

பூமியில் மனிதர்கள் நித்திய பாவத்தை செய்து அதை தொலைப்பதற்காக பிராயசித்தமும் செய்கின்றனர். அஸ்வமேத யாகம் போன்ற யாகங்களை செய்தும் மற்றும் இன்ன பிற உபாயங்களாலும் பிராயச்சித்தம் செய்கின்றனர். இதை எனக்கு விளக்குங்கள்.

சிவன்

நல்லவர்களும் கெட்டவர்களும் வேண்டும் என்றே நினைத்தும், தவறுதலாகவும் இரு வகையான பாவங்களைச் செய்கின்றனர். பலன் கருதியும், வைராக்கியங்களுடனும் செய்யப்படும் கர்மங்கள் எந்த வகையிலும் அழிவதே இல்லை. தெரிந்து செய்த கர்மம் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்வதாலும் நூற்றுக்கணக்கான பிராயச்சித்தங்களாலும் அழிவதில்லை, தவறுதலாகவும் தற்செயலாகவும் செய்யப்பட்ட பாவங்கள் அஸ்வமேத யாகம் மற்றும் பிராயச் சித்தங்களால் அழியும். உலக நன்மைக்காகவும் பிராயச்சித்தம் முதலியவை விதிக்கப்படுகின்றன. இதை நீ அறிந்து கொள்.

உமை

இவ்வுலகில் மனிதர்களும் மற்ற பிராணிகளும் காரணத்தோடும் காரணம் இன்றியும் மரணிக்கின்றனர். இது எந்த கர்மத்தின் பலன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் மனிதர்கள் எவ்விதம் கொன்றார்களோ அதன் பலனை இப்பிறவியில் அனுபவிக்கின்றனர், விஷம் கொடுத்தவர் விஷத்தாலும், ஆயுதத்தால் அடித்து கொன்றவர் ஆயுதங்களாலும் , வேறு எந்த வகையிலும் மற்றவர்களை கொல்லுகின்றனரோ அவ்வகையில் இப்பிறவியில் தம் உயிர் சேதத்தை அடைகின்றனர். இதில் சந்தேகமில்லை. உலகில் இதுதான் விதிபற்றிய சத்தியம் என்று அறிந்துகொள்வாயாக. தன்வினையை அனுபவிக்காமல் இருப்பதற்கு தேவர், அசுரம் மற்றும் மனிதர் எவரும் விதிவிலக்கல்ல. உலகமானது ஆதிகாலம் தொடங்கி கர்மத்தில் கோர்க்கப்பட்டிருக்கிறது. என்னால் சொல்லப்படா கர்மங்களை உன் புத்தியால் ஊகித்து அறிந்து கொள்வாயாக.

உமை

உங்களது கருணையினால் நன்மை தீமை கர்மங்கள் மாலைபோல் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும், பசுவின் மடிதேடி கன்று செல்வதைப்போலவும், பள்ளத்தை நோக்கி நீர் பாய்வதைப் போலவும் கர்மங்கள் பற்றிச் செல்கின்றன என அறிந்து கொண்டேன். இவ்வாறான புண்ணிய பாப கர்ம வினைப் பயன்களை அவர்கள் இந்த ஜென்மாவில் அனுபவிக்கின்றனரா அல்லது மறுமையிலா?

சிவன்

போன ஜென்மத்தின் பலன்களை இந்த பிறவியிலும் இந்த ஜென்மத்தின் பலன்களை அடுத்து வரும் பிறவியிலும் அனுபவிக்கின்றனர். இது மானிடர்களுக்கு மட்டும் பொருந்தும். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மரணமின்மை என்பதாலும், தவத்தாலும் அந்த அந்த பிறவியிலேயே கர்மங்களின் பலன் ஒரே சரீரத்தில் அனுபவிக்கப்படும்.

உமை

மனிதர்கள், உலகின் நன்மை தீமைகள் அனைத்தும் நவகிரகங்களால் செய்யப்பட்டவை என்று நினைத்து அந்த கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பூசை செய்கின்றனர். இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை தீர்க்க கடவீர்!

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 14

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

சில மனிதர்கள் அரசர்களாலும், திருடர்களாலும் மற்றும் நீராலும் எல்லா பொருள்களும் அபகரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

சிவன்

எவர்கள் பூர்வ ஜென்மத்தில் அசுரத் தன்மை அடைந்து பகையினாலும், ஆசையினாலும் பிறருடைய வருமானத்தை கெடுத்தும், அவரை  நோகச் செய்தும், கோட் சொல்லியும், களவினாலும் மற்றவகையினாலும் பிறர் பொருட்களை அபகரித்தும், கொடியவர்களாகவும், நாத்திகத்தில் பற்றுக் கொண்டும் பொய் சொல்கிறவர்களாகவும் பிறர் பொருளை அபகரித்தும் இருப்பவர்கள் நெடுநாள் நரகத்தில் இருந்து துன்பப்பட்டு மானிட ஜென்மம் அடையும் போது தீடிரென பொருள் நஷ்டம் அடைவது நிச்சயம்.

 

உமை

சில மனிதர்கள் பந்தங்களை விட்டு விலகுகின்றனர். சிலர் பந்தம் உடைய மனிதர்களால் ஆயுதத்தாலோ மற்ற கருவிகளாலோ தாக்கப்பட்டு உயிர் சேதம் அடைகின்றனர். அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மத்தில் அசுரத் தன்மை அடைந்து, பொய் பேசுகிறவர்களாகவும், பிறர் பொருட்களை அபகரித்தும், பிற உயிர்கள் இடத்து அன்பு இல்லாமல் மிக்க விருப்பத்துடன் அவைகளை கொன்றும், புலால் உணவுகளைக் உண்டும்., நம்பினர்களை கெடுப்பவர்களாகவும், தூக்கத்தைக் கெடுப்பவர்களாகவும், பெரும்பாலும் பொய் சொல்கிறவர்களாகவும் இருந்தவர்கள் யமனால் தண்டிக்கப்பட்டு நரகத்தில் இருந்து அதை அனுபவித்து விலங்கு பிறவி அடைந்து துயருற்று மானிட பிறவி அடையும் போது கொலையையும் கட்டுப்படுத்தலையும் அடைவார்கள். செல்வமுள்ளவர்களும், ஏழைகளும் தம் வினைப்பயனை அனுபவிக்கின்றனர். தமது வினையின் காரணமாக தூக்கத்திலோ, மயக்கத்திலோ தாம் செய்த வினையின் காரணமாக சுற்றத்தாருடனோ, இன்ன பிற மனிதர்களாலோ கொலைக்கருவிகளால் தாக்கப்பட்டு அழிவுறுகின்றனர்.

 

உமை

சில மனிதர்கள் நீதி சாஸ்திரத்தில் தேர்ந்தவர்களால் தண்டிக்கப்படுகின்றனர், அது என்ன தோஷத்தினால்?

சிவன்

சில மனிதர்கள் பூர்வ ஜென்மத்தில் மனிதர்களையும், பிராணிகளையும் வதைப்பதையும் துன்பறுத்துவதையும் தினமும் செய்து கொன்டு இருப்பார்கள். சில அரசர்கள் கொடிய குணம் உள்ளவர்களாகி  கோபத்தினால் கொடுமையாக முறையில் பிறரை கொல்பவர்களாகவும், மாமிசம் உண்பவர்களாகவும், நாத்திகம் பேசுபவர்களாகவும், தண்டிக்க தகாதவர்களை தண்டித்தும், பெண்கள், கணவர்கள் , ஆசாரியர்கள் ஆகியவர்களை கொல்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் நரக தண்டனை பெற்று அதை அனுபவித்து யமனால் தண்டிக்கப்படுகின்றனர். முன் ஜென்மத்தில் செய்ததை இந்த பிறவியில் அனுபவிக்கின்றனர். இது மனிதர்களுக்கு மட்டும் பொருந்தும். தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பொருந்தாது. அவர்கள் தவவலிமையாலும், மரணமின்மையாலும் ஒரு சரீரத்திலே கர்ம பலன் அனைத்தையும் அனுபவித்துவிடுகின்றனர். சாதாரண மனிதர்களுக்கு அவர்கள் இறந்தப்பின் அவர்களின் கர்மபலன் தெரியாமல் போய்விடும்.

 

உமை

புத்திரனை விரும்புவன் புத்திர காமேஷ்டி யாகம செய்து அந்த பிறவியிலே புத்திரனை பெறுகிறான். மனிதன் மானிட லோகத்தில் செய்த கர்ம பலனை மானிட தேகத்திலே அனுபவிக்கிறான். அது போல சில மனிதர்கள் கொலைக்காரன், திருடன் என்று அந்த மானிட தேகத்திலே தண்டிக்கப்படுகின்றனர். இது எதனால்?

சிவன்

குற்றத்தை நிமித்தமாக கொண்டு அரசன் பிரஜைகளை தண்டிப்பது அவரவர் முன் வினைப் பயனால் மட்டுமே. அன்று செய்த செய்கைகள் இன்று தண்டிப்பதற்கு காரணமாகிறது.

 

உமை

அரசர்களால் தண்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு அவர்களின் பாவம் போகுமா? போகாது, அதை விளக்க வேண்டும்.

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 13

உமாமகேஸ்வரஸம்வாதம்

 

உமை

பூமியில் உள்ள மனிதர்களில் சிலர் சக்தி அற்றவர்களாகவும், ஆண்மை அற்றவர்களாகவும், பயன்பாடு அற்றவர்களாகவும், இழி தொழிலில் ஆசை உள்ளவர்களாகவும் கீழான எண்ணம் உடையவர்களோடு நட்பு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அது என்ன வகையான கர்மப் பலன்?

சிவன்

முன் ஜென்மங்களில் கொடும் தொழில்களை விரும்பி பசுக்களை அதன் தன்மை இழக்கச் செய்தும், அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைத்துக் கொண்டும், கோபத்தினால் மனிதர்களுக்கு ஆண்மையை கெடுத்து அதில் சந்தோஷப் பட்டுக்கொண்டும், பெண்களிடத்தில் முறை தவறி நடந்து கொண்டும், அவ்வாறு பெண்களிடத்தில் பகை கொண்டும் கோள் சொல்லியும் அவர்களுக்கு துன்பம் விளைவித்தும் மற்றும் இவ்வகை நடைஉடைய மனிதர்கள் பிறகு ஒரு பிறவியில் மானிட தேகம் எடுக்கும் போது திறமை அற்றவர்களாகவும், உதவி அற்றவர்களாகவும், இழி தொழில் செய்பவராகவும், வெட்கம் கெட்டவர்களாகவும், சுறுசுறுப்பு இல்லாதவர்களாகவும் ஆகின்றனர். தம் செய்கையினால் அதன் காரண காரியங்களை ஆராய்ந்து பிறர் துயரதை விலக்கினால் அவர்கள் அந்த துயரில் இருந்து விடுபடுவார்கள். பின் ஜென்மத்திலும் தவறுபவர்கள் நரகமே அடைவர். இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது.

உமை

மனிதர்களில் சிலர் அடிமையாகி எல்லா வேலைகளையும் செய்து கொண்டும், அடி பயமுறுத்தல் போன்றவைகளை சகித்துக் கொண்டும் இருப்பவர்களாக காணப்படுகின்றனர். அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் பிறர் பொருளை பறித்தும், வட்டிக்கு வாங்கிய கடன், பயிர், அடைக்கலமாக கொடுக்கப்பட்ட பொருள் ஆகியவற்றை மறைத்தும், பிறர் பொருகளை அபகரித்தும், பிறரை அடித்தும், கட்டியும் துன்புறுத்தியும் அடிமை படுத்தியும் வந்தனரோ அவர்கள் மரண தண்டனை அடைந்தப்பின் யம தண்டனைகள் பெற்று பின் தற்செயலாக மானிட பிறப்பு எடுக்கும் போது பிறந்தது முதல் எல்லா வகையிலும் அடிமைகளாகவே இருப்பர். அவர்கள் யாருடைய தனங்களை அபகரித்தார்களோ அவர்களுக்கு அடிமைத் தொழில் செய்து தம் பயம் தீரும் வரை வேலை செய்கிறார்கள். சிலர் பசுக்களாகப் பிறக்கின்றனர். அவர்கள் முன் ஜென்மத்தில் உண்டான பாவம் அவ்வாறுதான் கழியும். இதைத் தவிர கர்மங்களை அழிக்க தேவர்களாலும், அசுரர்களாலும் இயலாது. பொருளை பறி கொடுத்தவனை எல்லா வகையும் திருப்தி செய்விப்பதுதான் பாவத்தில் இருந்து விடுபடும் வகை. வினையை விடுவிக்க கருதுகிறவன் எல்லா வகையிலும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு முறைப்படி செய்து தன் எஜமானை திருப்தி படுத்த வேண்டும். எஜமானால் அன்புடன் விடை கொடுக்கப்படுபவன் தன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான். அப்படிப்பட்ட குணமுள்ள வேலைக்காரனை எஜமானும் சந்தோஷப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் பற்றி மட்டுமே தண்டிக்க வேண்டும். கிழவர்களையும், சிறுவர்களையும், இளைத்தவர்களையும் காப்பாற்றுபவன் புண்ணியம் அடைவான்.

உமை

சில மனிதர்கள் இழிதொழிலில் விருப்பம் உள்ளவர்களாகவும்,ஏழையாகவும், மிகுந்த சிரப்படுபவர்களாகவும், விகார ரூபம் உடையவர்களாகவும், கெட்ட எண்ணம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் அதிக அகங்காரமும் தற்பெருமையும் உடையவர்களாக பெரியோர்களை வணங்காமல்  தம் தர்மத்திற்கு உரிய காரியங்களை செய்யாமல் பிறரை பலவந்தமாக கட்டாயப்படுத்தி தன்னை வணங்கும்படி செய்தும், செல்வத்தினால் எப்பொழுதும் பிறரை அவமதித்தும், குடித்தும், கடும் சொல் முதலியவற்றை கொண்டவராகவும் இருந்த மனிதர்கள், மரண தண்டனை அடைந்தப்பின் யம தண்டனைகள் பெற்று பின் தற்செயலாக மானிட பிறப்பு எடுக்கும் போது விருப்பம் உள்ளவர்களாகவும்,ஏழையாகவும், மிகுந்த சிரப்படுபவர்களாகவும், விகார ரூபம் உடையவர்களாகவும், கெட்ட எண்ணம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அவ்வாறு இருக்கும் மனிதர்களை விவேகம் உள்ளவன் எக்காலத்திலும் இகழவும் கோபிக்கவும் கூடாது. ஏனெனில் அவர்கள் தம் வினைப்பயன்களை அனுபவிக்கின்றனர். துயரப்படும் அம்மனிதர்கள் அது குறித்து சிந்திக்கும் போதும் வருத்தம் கொள்ளும் போதும் அவர்கள் பரிசுத்தம் அடைவார்கள்.

உமை

சில மனிதர்கள் பிறர் வாயிலை அடைந்தும் உள்ளே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு நிறுத்தப்படுகின்றனர், எத்தனை முயற்சி செய்தும் அவர்களை சந்திப்பதற்கும், தம் கருத்தை சொல்வதற்கும் இயலாதவர்களாக இருக்கின்றனரே. அது ஏன்?

சிவன்

முன் ஜென்மங்களில் செல்வம் மற்றும் அதிகாரம் ஆகியவைகளைப் பெற்று இருந்தும் மனதால் குறுகி பிறரிடம் பேசாமலும் செல்வம் பற்றிய கர்வத்தினால் மற்றவர்களை உள்ளே விடாமலும், பொருளாசை, பெண்ணாசை கொண்டு எவரையும் மதிக்காமலும், தன் நிலையை மட்டுமே கொண்டும், எல்லா போகங்கள் இருந்தும் எவருக்கும் கொடுக்காமலும், திறமை இருந்தும் பிறருக்கு உதவி செய்யாமலும், புண்ணிய கர்மங்களை செய்யாமலும் இருந்த மனிதர்கள் பின்னொரு பிறப்பில் பிறர் வாயிலை அடைந்தும் உள்ளே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு நிறுத்தப்படுகின்றனர், எத்தனை முயற்சி செய்தும் அவர்களை சந்திப்பதற்கும், தம் கருத்தை சொல்வதற்கும் இயலாதவர்களாக இருக்கின்றனர்.

உமை

சில மனிதர்கள் அரசர்களாலும், திருடர்களாலும் மற்றும் நீராலும் எல்லா பொருள்களும் அபகரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 12

உமாமகேஸ்வரஸம்வாதம்

 

உமை

மனிதர்களில் சிலர் கோணல் அங்கம் உடையவர்களாகவும், சிறிதான அங்கம் உடையவர்களாவும், ஒற்றைக்கை நொண்டிகளாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும் காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்

முன் ஜென்மத்தில் பொருள் ஆசையினால் மதிகெட்டு விற்றல் வாங்கல் ஆகியவற்றில் தானியங்களின் அளவுகளை குறைத்தும் அவற்றில் மாறுபாடு செய்தும் விலையை வித்யாசப்படுத்தியும் விற்பனை செய்த மனிதர்களும், கோபத்தினால் பிறரை அங்கக் குறைவு ஆக்கியவர்களும், மாமிசம் உண்டவர்களும், விஷயங்களை சரியாக தெரிவிக்காத மனிதர்கள் மற்றும் இவ்வகை நடைஉடைய மனிதர்கள் பின் ஜென்மங்களில் கோணல் அங்கம் உடையவர்களாகவும், சிறிதான அங்கம் உடையவர்களாவும், ஒற்றைக்கை நொண்டிகளாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும் காணப்படுகின்றனர்.

உமை

மனிதர்களில் சிலர் பித்துபிடித்தவர்களாகவும், பேய் பிடித்தவர்களாகவும் காணப்படுகின்றனர், அது ஏன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் கர்வமும், தான் எனும் அகங்காரமும் படைத்து பிறரை பலவிதமாக பேசியும், மிகவும் நகைத்தும் இருந்த மனிதர்களும், பொருளாசையினால் மயக்கம் தரும் இன்பப்பொருளால் பிறரை மயக்கியவர்களும், வயதானவர்களையும், மேலானவர்களையும் வீணாக பரிகாசம் செய்த மூர்க்கர்களும் சாத்திரங்களை அறிந்த போதிலும் எப்பொழுதும் பொய் சொல்பவர்களாகவும் மற்றும் இவ்வகை நடத்தை உடைய மனிதர்கள் பின் ஜென்மத்தில் பித்துபிடித்தவர்களாகவும், பேய் பிடித்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

உமை

சில மனிதர்கள் குழந்தைகள் இல்லாமல் துன்பப்படுகின்றனர், பலவகை முயற்சி செய்தும் சந்ததிகளை அடைவதே இல்லையே, அது ஏன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் எந்த பிராணிகளிடத்திலும் தயை இல்லாமலும், சிசுஹத்தி செய்து கொண்டும், மிருகங்களையும், பட்சிகளையும் உண்டும், பெரியோர்களை பகைத்தும், பிறர் பிள்ளைகள் மேல் பொறாமை கொண்டவர்களாகவும், சாத்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் முதலியவற்றால் பித்ருக்களை வணங்காமலும் மற்றும் இவ்வகை நடத்தையும் இருக்கும் மனிதர்கள் பின் ஜென்மங்களில் வெகுகாலம் கழித்து மானிட பிறப்பு அடையும் போது குழந்தைகள் இல்லாமலும், பலவகை முயற்சி செய்தும் சந்ததிகளை அடையாமலும் இருக்கின்றர். இதில் சந்தேகமில்லை.

உமை

சில மனிதர்கள் பயமுள்ள இடங்களில் வசித்துக் கொண்டும் எப்பொழுதும் பயமும் துயரமும் உள்ளவர்களாகவும் ஏழைகளாகவும் தவம் செய்துகொண்டும் மிகவும் கஷ்டப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் எப்பொழுதும் பிறரை திட்டிக் கொண்டும், பயமுறுத்தியும் பலதீங்குள் செய்துகொண்டும் இருந்த மனிதர்களும், ஏழைகளுக்கு தாம் நினைத்தபடி  வட்டிக்கு கொடுத்தும் இவ்வாறு அவர்களை பயமுறுத்தியும், நாய்களைக் கொண்டு வேட்டையாடி பிராணிகளை பயமுறுத்தியும் இருந்த மனிதர்கள் மரணம் அடைந்தப்பின் யமதண்டையினால் பீடிக்கப்பட்டு வெகுகாலம் நரகத்தில் கிடந்து பின் மானிடத் தேகம் அடையும் போது அநேக கஷ்டங்களும், அநேக துயரம் நிரம்பின தேசங்களில் பிறந்து எதற்கும் பயப்படுகின்றனர்.

உமை

சில மனிதர்கள் கல்வியும் செல்வமும் பெற்றவர்களாக இருந்தும் அந்நிய தேசங்களில் அவர்களின் அதிகாரங்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

சிவன்

சில மனிதர்கள் தனம் தானியம் போன்றவை நிரம்பியவர்களாக இருந்தாலும் சிரத்தை இல்லாமல் முறைதவறி தானம் செய்கின்றனர். உடல் சுத்தம், ஆச்சாரம் போன்றவைகளை விட்டு தகுதி அற்றவகளுக்காக தானம் செய்வோரும், பெருமைக்காகவும் பிறரை அவமதிக்க தானம் செய்வோரும் மற்றும் இவ்வகை நடத்தை உடைய மனிதர்கள் கல்வியும் செல்வமும் பெற்றவர்களாக இருந்தும் அந்நிய தேசங்களில் அவர்களின் அதிகாரங்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.

உமை

பூமியில் உள்ள மனிதர்களில் சிலர் சக்தி அற்றவர்களாகவும், ஆண்மை அற்றவர்களாகவும், பயன்பாடு அற்றவர்களாகவும், இழி தொழிலில் ஆசை உள்ளவர்களாகவும் கீழான எண்ணம் உடையவர்களோடு நட்பு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அது என்ன வகையான கர்மப் பலன்?

தொடரும்

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 11

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை
சில மனிதர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் மதி கெட்டு கட்டுவது, அடிப்பது, கொல்லுவது ஆகிய வீண் தண்டனைகளால் பிறர் உருவை அழித்தும், அவர்கள் விருப்பத்தைக் கெடுத்தும், கெட்ட ஆகாரங்களை பிறருக்கு கொடுத்தும், பகையாலும் பொருள் ஆசையாலும் மனம் போனவாறு வைத்தியம் செய்தும், பிராணிகளை எவ்வித கருணையும் இன்றி கொன்றும் மற்றும் இவ்வகை நடத்தையோடு இருந்தவர்கள் பின்னொரு ஜென்மாவில் மானிட தேகம் எடுப்பாராயின் அவர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனர். மற்றும் சிலர் புண் குஷ்டம், வெண் குஷ்டம் மற்றும் தோல் சம்மந்தமான வியாதிகள் உடையவர்களாகவும் துன்புறுகின்றனர்.

உமை
சில மனிதர்கள் அங்கக் குறைபாடு உடையவர்களாகவும், முடமானவர்களாகவும் இருப்பது எந்த கர்மத்தின் பலன்?

சிவன்
முன் ஜென்மத்தில் ஆசையாலும், அஞ்ஞானத்தாலும் விலங்குகளை கொன்றும், அவற்றின் அங்கங்களை அறுத்தும், அவற்றின் விருப்பங்களைக் கெடுத்தும், அவற்றின் நடையை தடுத்தும் இறக்கும் மனிதர்கள் பின்னொரு ஜென்மங்களில் மானிடப்பிறப்பை அடையும் போது அங்கக் குறைபாடு உடையவர்களாகவும், முடமானவர்களாகவும் பிறக்கிறார்கள் அல்லது பிறந்தபின் அவ்வாறு ஆகிறார்கள்.

உமை
சில மனிதர்கள் புண்களாலும் மற்றும் அது சார்ந்த வியாதிகளால் துன்புறுகின்றனரே அது ஏன்?

சிவன்
பூர்வ ஜென்மத்தில் தனது கை வலிமை குறித்து எண்ணம் கொண்டு பிற மனிதர்களை கைகளால் குத்தியும், சூலம் போன்ற ஆயுதங்களால் கிழித்தும் கொண்ட பாவிகள் பின் ஜென்மங்களில் புண்களாலும் மற்றும் அது சார்ந்த வியாதிகளால் துன்புறுகின்றனர்.

உமை
சில மனிதர்கள் காலில் எப்பொழுதும் நோய் உள்ளவர்களாக காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் கோபமும் லோபமும் கொண்டு தேவதைகள் இருக்கும் இடத்தை காலால் உதைத்தும், முழங்காலாலும், பின்னங்கால்களாலும் பிராணிகளை துன்புறுத்தியும் ஆகிய இவ்வகையான நடவடிக்கைகள் உள்ளவராக இருக்கின்றனரோ அவர்கள் மறுஜென்மங்களில் பாத வெடிப்பு முதலிய பலவகை கால் சம்மந்தமான வியாதிகளால் துன்புறுகின்றனர்.

உமை
பூமியில் அநேக மனிதர்கள் செல்வம் உடையவர்களாக இருந்தாலும், வறுமை உடையவர்களாக இருந்தாலும் வாதத்தினாலே, பித்தத்தினாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அல்லது இது போன்று பலவகை நோய்களாலும் துன்பப்படுகின்றனரே, அது என்ன வகை வினையின் பயன்?

சிவன்
எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் அசுரத் தன்மை அடைந்து கோபம் கொண்டும், யாருக்கும் கட்டுப்படாமலும் கோபம் கொண்டும், குருவை பகைத்தும், எண்ணம், செயல் ஆகியவற்றால் பிறரை துன்புறுத்தியும், பிராணிகளிடத்தில் அன்பு இல்லாமல் அதை வெட்டியும், துன்புறுத்தியும் மற்றும் இவ்வகை செய்கைகள் உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் பின்னொரு பிறப்பில் மானிட தேகம் எடுக்கும் போது வாதத்தினாலே, பித்தத்தினாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அல்லது இது போன்று பலவகை நோய்களாலும் துன்பப்படுகின்றனர். இன்னும் சிலர், வாயும் காசம் மற்றும் தாகம் பொன்றவற்றாலும் பலவகை புற்றுக்களாலும் காலில் பலவகை நோய் உள்ளவர்களாகவும் துன்புறுகின்றனர். செய்த கர்மத்தின் பலனை யாராலும் தடுக்க இயலாது.

உமை
மனிதர்களில் சிலர் கோணல் அங்கம் உடையவர்களாகவும், சிறிதான அங்கம் உடையவர்களாவும், ஒற்றைக்கை நொண்டிகளாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும் காணப்படுகின்றனரே, அது ஏன்?

தொடரும்..

சமூக ஊடகங்கள்