அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 8 (2018)

பாடல்

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே

சிவவாக்கியர்

பதவுரை

அருளைத் தரும் நாதர் மற்றும் அம்மையின் உண்மையான திருவடிகளைக் கொண்டு இயம்புவது என்னவெனில் வினையது கொண்டு உருவம் கொண்ட உடலில் இருக்கும் நாடியில் தசவாயுக்களில் ஒன்றானதும், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் ஆகிய வாயுக்களுடன் இணைந்து அவற்றை இயக்கி தானும் இயங்குவதான தனஞ்செயனை எண்ணத்தினால் குவித்து துரியத்தின் இடமான கபாலத்தில் ஏற்றும் முறையை தெரிந்து கொண்டால், முதுமை உடையவர்களும் இளமைத் தோற்றம் உடையவராக ஆகிவிடுவார்கள்; அவர்களது மேனி சிவப்பு நிறம் கொண்டிடும்.

விளக்க உரை

  • கபாலம் ஏற்றுதல் – குரு மூலமாக அறிக.

சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 18 (2018)

பாடல்

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ!

அழுகணிச் சித்தர்

பதவுரை

என் கண்ணம்மா, மனம் மகிழ்ந்து (உள்முகமாக) நோக்குவதால் அந்தரம் எனப்படும் உள்வெளியாகிய புருவத்தை வில்லாக்கி, பஞ்சாட்சரமான ஐந்து எழுத்து மந்திரத்தை அம்பாக்கி, உச்சாடனம் செய்யும் வேகத்தினை தேராக்கி, மனமாகிய மானை காவனத்தில் வேட்டையாட, சந்திர சூரிய நாடிகள் வந்து விளையாடியதால் தானே நிகழ்ந்தது.

விளக்க உரை

  • அந்தரம் – திறந்தவெளி, ஆகாசம், வெளி, உள்வெளி, இருள், ஆகாசம், நடு, இடம், இடுப்பு, நடுவுநிலை, தேவலோகம், பேதம், விபரீதம், தேவாலயம், தீமை, கூட்டம், முடிவு
  • அந்தரம் என்பதற்கு ஆகாசம், வெளி போன்றவை இருப்பினும் சித்தர்கள் பெரும்பாலும் இருப்பை தன்னுள்ளே விளக்குவதால் உள்முகமாக நோக்குதல் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
  • மனமகிழ்ந்து – ஆத்மார்த்தமாக உணர்தல்

 

சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 21 (2018)

பாடல்

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ

அழுகணிச் சித்தர்

பதவுரை

எனும் சக்தி எழுத்தினை முன்வைத்து வகாரமாகிய அருள் எனவும்வசியம் அருளுவதாகிய  ‘வயநமசி‘  என்று உச்சரிப்பினை முன் வைத்து உச்சரிப்பதையும் விடுத்து மற்றைய ஏனைய மந்திரங்களை கொண்டு உச்சரிக்கிற முறைமையை விட்டுப் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை அறியாமல் உச்சரித்ததால்  மரணம் எனக்கு ஏற்பட்டது. அவ்வாறான அருளப்படாத மந்திர உச்சரிப்புகளை விட்டு சாகாமல் சாதல் ஆகிய சமாதி நிலையை அருளும் வகார எழுத்தினை கொண்டு விட்டால் வாழ்வு எனக்கு வரமால் இருக்குமா?

விளக்க உரை

  • வாழை – முக்கனி, அசோகம், அசோணம், அற்பருத்தம், அம்பணம், கவர், சேகிலி, அரம்பை, கதலி, பனசம், கோள், வீரை, வான்பயிர், ஓசை, அரேசிகம், கதலம், காட்டிலம், சமி, தென்னி, நத்தம், மஞ்சிபலை, மிருத்தியுபலை, பானுபலை, பிச்சை, புட்பம், நீர்வாகை, நீர்வாழை, மட்டம், முண்டகம், மோசம், வங்காளி, வல்லம், வனலட்சுமி, விசாலம், விலாசம்

( சித்தர் பாடல் பொருள் விளக்கம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 14 (2018)

இது 1201 பதிவு. (பதிவு செய்யப்பட்டவை மட்டும்)
மொத்த பார்வையாளர்கள் 2,06,000 த்திற்கும் மேல்.

வாசிப்பு மிகப் பெரிய அனுபவமாக இருக்கிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பாடலைப் படித்து கருத்துக்களை உள்வாங்கி, அதை பதம் பிரித்து எழுதுவது என்பது பகிர முடியா அனுபவமாகவே இருக்கிறது.

ஒவ்வொரு தேடலும் மிகப் பெரிய அனுபங்களை வழங்கிச் செல்கிறது. ‘இப்படிக் கூட யோசிக்க முடியுமா’ என்றும், ‘இத்தனை அழகாக நமக்காக ஏற்கனவே எழுதி இருக்கிறார்களே’ என்றும் பல பிரமிப்புகளை வழங்கிச் செல்கிறது. சில நாட்களுக்கு 5 மணி நேரங்களுக்கு மேல் தேவைப்பட்டிருக்கிறது.

உணரப்படவேண்டியவை என்பது எதிரே கடல் போலவும், நிஜத்திலே கடற்கரை ஓரத்தில் வேடிக்கை பார்ப்பவனுமான அனுபவமாகவே இருக்கிறது.

‘என் செயல் யாதொன்றுமிலை எனப் பெற்றேன்’ என்பதே நிஜம். இத்தனையும் என் குரு நாதர் அருளினால் மட்டுமே நடக்கிறது என்பதும் நிஜம். அவர் இத் தேகத்தை கருவியாக ஆக்கவில்லை எனில் இந்த மொழி ஆக்கங்களும், வெளிப்பாடுகளும் நிகழ்ந்து இருக்கா.

வாசிக்கும் அனைவருக்கும் நன்றிகள். குரு அருளும், திருஅருளும் நம்மைக் காக்கட்டும்.

 

பாடல்

சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ!

அழுகணிச் சித்தர்

பதவுரை

அரிசி வகைகளில் மிக உயர்ந்த சம்பா அரிசியை நன்கு சமைத்து அதனுடன் நெய் சேர்த்து முத்து முத்தாக உண்ணுதற்கு வைப்பது போல் எண்பத்தி நான்காயிரம் யோனிப் பிறப்புகளில் உயர்ந்ததான மானுடப் பிறப்பை நல்ல சாதனைகள் சேர்த்து அர்ப்பணித்தலுக்கு தயாராக வைக்க அதை ஏற்று முப்பழத்துடன் சர்க்கரை சேர்த்துப் படைத்து மானிடர்களால்  தேனமிர்தம் என்றறியப் படுவதை மிகுந்த சுவையுடைய  சகஸ்ராரத்தினின்று வடிந்து அண்ணாக்கினால் சுவைக்கப் படும் அமிர்தத்தை சுவைத்து செயல்களொழித்து சும்மா இருக்கும் நிலை வேண்டுகிறார்.

விளக்க உரை

  • ஊட்டி வளர்க்கும் இவ்வுடல் ஓர் மாயை என்று உணர்ந்த சித்தர் பெருமக்கள் இவ்வூணெடுத்த காரணம் இதை சகஸ்ராரத்தில் சுடராய் விளங்கும் வாலையன்னைக்கு அர்ப்பணித்தலே என்ற உண்மையை தெளிவாக அறிந்திருந்தனர். இதில் அர்ப்பணிப்பு என்பது உடல் தன்னது என்ற மாயை விலக்குதலே ஆகும். இந்தக் கருத்தை ஒற்றியே அழகணி சித்தர் இப்பாடலை இயற்றியிருக்க வேண்டும்.
  • இதையே ஶ்ரீ ரமண மகரிஷி அவர்களும் சாப்பாடுனையே சார்ந்துணவாவேன் சாந்தமாய் போவென் அருணாசலா என்று பாடியுள்ளார்.

பாடல் எளிதாக தோன்றினாலும் அதன் உட்பொருளை உரைத்த மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 17 (2018)

பாடல்

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ

அழுகணிச் சித்தர்

பதவுரை

உலகியல் உருவமாகிய தூலத்தை மட்டும் காட்டுவது கண்கள், அவைகள் சூக்குமமாகிய இறைவன் தன்னைப்பற்றி காட்டுவது இல்லை. சிறப்புக்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர விரும்பி யோக மார்கத்தில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சகஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைப்பதற்காக மேலே ஏற்றி தவம் இயற்றும் பொழுது உலகியலை எப்போதும் நாடும் நாட்டார் எனப்படும் மனம் புன்னகைத்து செய்து நம்மை திசை திருப்ப முயலும். அப்படிப்பட்டதான  ஆதி அந்தமான கண்ணாகிய ஆன்மா தன் இருப்பிடமான மேல் உச்சி தனை உள்ளிருந்து நோக்கும் போது, தன் உண்மை உருவை காட்டாதவனை கண்டு  மனம் நமைப் பார்த்து நகைத்தாலும், அதை அடக்கி கண்களை மேலேற்றி ஆன்மாவின் ஜோதி தரிசனத்தை கண்குளிரக் காண்பேனோ?

(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 1 (2018)

பாடல்

கூடுவது லகுவல்ல வாய்ப்பேச்சல்ல
கோடியிலே ஒருவனடா குறியைக் காண்பான்
ஆடுவது தில்லையிலே காலைத் தூக்கி
அம்பரமாமாம்பலத்தில் ஆட்டைப் பார்த்து
நாடுவது சதாகாலம் நாட்டம்பாரு
நமனேது நமனேது நாசமாகும்
பாடுவது அனுராக மனந்தங்கேட்கப்
பச்சை மயிலேறியுந்தான் பாய்ந்தேன் பாரே

சுப்ரமணியர் ஞானம்

பதவுரை

இறைவனுடன் ஒன்றாகி கலத்தல் என்பது எளிதான செயலல்ல; அது பேச்சால், வெறும் ஞானத்தால் வருவது அல்ல; கோடியிலே ஒருவன் மட்டுமே அதை குறிக்கோளாகக் கொண்டு அந்த நோக்கத்தை அடைவான்; ஆன்மாக்களின் ஆணவத்தை அழிப்பதை குறிக்கும், காலை தூக்கி ஆடும்  தில்லை நடனம் எனும்  தில்லைக் கூத்தினை ஆகாயம் எனும் வெட்ட வெளியில் பார்த்து அதை நாடு; எல்லா காலங்களிலும் அதை விரும்பிக் கொள்;  அவ்வாறு கொண்டப்பின் எமன் ஏது? அனைத்து வினைகளும் நாசமாகும். மனதில், அனுராகம் என்றும் அன்பு என்றும் பொருள்தரும்  மிக உயர்ந்த உச்ச நிலை ஆகிய அன்புநிலை கொள்ளும் போது, பச்சை மயில் ஏறி, வாசியின் மூலம் பரவினேன்.

விளக்க உரை

  • சுப்ரமணியர்  அகத்தியருக்கு உபதேசம் செய்தது
  • இறைவனின் தில்லை நடனம் அவனது ஐந்தொழில்களை, படைப்பு, காப்பு, லயம், மறைப்பு, அருளல், என்ற ஐந்து செயல்களை சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொன் பதிக் கூத்து, பொன் தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து எனும் கூத்து வடிவில் குறிக்கிறது. 
  • இத் தில்லைக் கூத்தை குண்டலினி யோகத்தின் உச்சிநிலையில் காண்பதைக் குறிக்கும்.
  • வாலை அல்லது குண்டலினியின் நிறம் பச்சை என்றும், குண்டலினி யோகத்தின்போது மூச்சு சுழுமுனையில் பயணிப்பதால் அவ்வாறு பச்சை நிறம் தோன்றும் என  சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (மேல் விபரங்கள் குருமுகமாக அறிக)

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

போக வடிவம் என்பது என்ன?
கல்யாண சுந்தரர் போல் உயிர்களுக்கு இன்பத்தை வழங்கும் திருமேனி

 

(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அண்டவுச்சி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அண்டவுச்சி

பொருள்

  • கண்
  • புருவ மத்தி
  • துரியாதீதம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கேளப்பா கேசரமே அண்டவுச்சி
கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுனமாகும்
ஆளப்பா பரப்பிரம்ம யோகமேன்று
அடுக்கையிலே போதமுந்தான் உயரத்தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்
நாளப்பா அண்டமெல்லாஞ் சுத்தியோடும்
நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே

காகபுசுண்டர் ஞானம்

கருத்து உரை

நமது தலைக்கு மேல் உள்ள அண்டஉச்சி எனப்படும் துரியாதீதம் கண்டு அதை மௌவுனமாகவும் உறுதியாகவும் பார்ப்பவர்களுக்கு, முத்தி பெறுவதற்குரிய வழிகளில் ஒன்றான சமாதி கூடும். பரப்பிரம யோகம் எனும் இவ்வழியினால் அண்டங்களை எல்லாம் நம் மனத்தால் சுற்றி வராலாம், நம் காதுகளில் சிலம்பொலி கேட்கும், பாரபரையின் நடனம் காணலாம். இவ்வாறு குண்டலியை சுழிமுனை நாடிவழியாக செலுத்தி பரபிரமத்துடன் இணைக்கும் செயலால் ஞானம் அல்லது பேரறிவு ஆகிய போதமும் மேன்மை பெறும். 

விளக்க உரை

  • விந்து நாதம்  வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்  –  ‘சுக்கிலம் கெட்டிப்படும்’ என்று பல இடங்களில் பதிவு இடப்பட்டிருக்கிறது. சுக்கிலம் கெட்டிப்படுதல் என்பது இடை நிலை என்பதாலும்,  யோக மரபில் இறுதி நிலை சமாதி என்பதாலும், சமாதி கண்டவர்களுக்கே இந்த அனுபவங்கள் வாய்க்கும் என்பதாலும் இங்கு சமாதி நிலை என்ற பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • அண்டவுச்சி என்பதற்கான பொருள் விளக்கம் அவரவர் குரு மூலமாக அறிக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உயிரோடு கலந்த நிலைக்குப் பெயர் என்ன?
அபேதம் (பேதம் இல்லாதது)

 

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தன்மம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தன்மம்

பொருள்

  • தருமம்
  • சலாசனவகை
  • நீதி
  • நன்மை
  • அறம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

திருமந்திரம் – முதல் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

கூற்றுவனாகிய எமன், தன்னைப் பிறர் காணாதவாறும், தன்னால் பற்றப்படுவர் நல்ல பண்பினை உடையர் என்றும், தம்மை அன்றித் தம் சுற்றத்தார்களை காணாதவர்கள் என்று எண்ணாமலும், இளையர் என்று எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவான். அவ்வாறு வரும் முன்னே நீங்கள் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.

விளக்க உரை

  • உடல் நிலைத்திருக்கும் போதே அறம் செய்ய வலியுறுத்தல் வேண்டி இப்பாடல்
  • அறம் செய்தல் (அது பற்றி வாழ்தலும்) தவம் செய்தலுடன் தொடர்புடையன. எனவே இவை உம்மைத் தொகையால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நயத்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நயத்தல்

வார்த்தை : நயத்தல்

பொருள்

  • விரும்புதல்
  • பாராட்டுதல்
  • சிறப்பித்தல்
  • பிரியப்படுத்தல்
  • தட்டிக்கொடுத்தல்
  • கெஞ்சுதல்
  • அன்புசெய்தல்
  • பின்செல்லுதல்
  • மகிழ்தல்
  • இன்பமுறல்
  • இனிமையுறுதல்
  • இணங்கிப்போதல்
  • பயன்படுதல்
  • மலிதல்
  • மேம்படுதல்
  • ஈரம்ஏறுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன்
   நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன்
தானென்ற கருவமதைத் தணித்து விட்டு வந்தோம்
   தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம்.

வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர் பாடல்

கருத்து உரை

நான் எனும் செருக்கை அறுத்தேன். குகைக்குள்ளே நன்மை பெற்று வாழ்ந்தேன். தான் என்னும் கர்வத்தயும் குறைத்துவிட்டு தவமே உரிய வழி என சஞ்சார வழியில் மகிழ்ந்தோம்.

விளக்க உரை

  • இவருடைய இயற்பெயர் ‘வகுளிநாதர்’
  • இவருக்கு முன் இருந்த பல சித்தர்களைப்  பின்பற்றி 12  பாடல்களைப் பாடியிருப்பது மட்டும் தெரிகிறது.

துக்கடா

சொல் – ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

சொல்லின் வகைகள்

  • பெயர்ச்சொல்
  • வினைச்சொல்
  • இடைச்சொல்
  • உரிச்சொல்

Loading

சமூக ஊடகங்கள்

சிவவாக்கியர்

தத்துவங்கள் அனைத்தும் நிலையாமை என்ற நிலையில்  உருவாகின்றன.

சிவவாக்கியரின் கீழ்க் கண்ட பாடல் அதை விளக்குகிறது.

பாடல்

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நந்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே;
நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!

விளக்கம்

அழகிய வடிவம் கொண்ட தான் விரும்பும் ஒரு பெண்ணை மற்றொருவன் விரும்புகிறான் என்றால் அவனை விடுவேனா, அவனை    வெட்டி விடுவேன் என்று கூறுபவன் இருக்கிறான். அவன் எமன் வாயிலில் விழும் போது நாற்றம் கொண்ட இந்த உடல் மண்ணில்  விழும். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் இருக்கும் வெட்டியானிடம் கொடுத்து விடுவார்கள்.

இதில் பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.

அழகிய வடிவம் கொண்ட பெண்ணை விரும்புதல் – இயற்கை. அது காமத்துடன் கூடிய மாயையின் காரியம்.

விரும்புவனை வெட்டிவிடுவேன் – ஆணவம்

இறப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அதில் ஆணவம் கொள்ள எதுவும் இல்லை.

எனவே மும்மல காரியம் கொண்டவனுக்கு முக்தி இல்லை. நிலையற்ற எண்ணம் விடுத்து அஃதாவது மும்மலம் நீக்கி இறைவனை நாடச் சொல்கிறது இப்பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

பட்டினத்தார்

பட்டினத்தார் என்ற பெயரில் பல புலவர்களும், கவிஞர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். காலம் 2ம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு மற்றும் 17 – 18 ம் நூற்றாண்டு.

பட்டினத்தாருக்கு ஞானம் மகன் மூலமாக கிடைக்கிறது. கடல் கடந்து பொருள் ஈட்டி வரும் மகன், எருவிராட்டியையும், தவிட்டையும் எடுத்து வருகிறான். அவன் கொடுத்ததாக இருந்த பேழையை(பெட்டி) திறந்து பார்க்கிறார். ஒலை ஒன்றும், உடைந்த ஊசி ஒன்றும் இருக்கிறது. அந்த ஓலையில்  “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”  என்று எழுதப்பட்டிருக்கிறது.

இடரது பாடல்கள் மிக எளிமையானவை.

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே 

இவ்வுலகில் பிறக்கும் போது எதையும் எடுத்து வரவில்லை. அது போலவே இறக்கும் போதும். இடைக்காலத்தில் பெறும் இச்செல்வம் சிவன் கொடுத்தது என்று அறியாமல் இறக்கும் கீழ் தரமானவர்களுக்கு என்ன சொல்வேன்.

முதல் பட்டினத்தார் தவிர மற்ற இருவரின் பாடல்களுக்கு விளக்கம் தேவை இருக்காது.

வாசித்தால் வாழ்வின் நிலைமை புரியும்.

Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்