அமுதமொழி – விளம்பி – ஆவணி – 8 (2018)

பாடல்

எங்கும் நிறைந்த அருள்மணியே
        ஏக மணியே ஒளிர்மணியே
   இறையோ னிடத்தில் நடனமிடும்
        இமைய மணியே நவமணியே

கங்குல் பகலும் கண்டவெளிக்
        கலைநான் குடைய திருமணியே
   கண்ணின் மணியே பொன்மணியே
        கமலா சனத்தில் வளர்மணியே

தங்கும் அடியார் இதயமதில்
        தழைத்த மணியே தவமணியே
   தரணிக் கொளியாய் இரவுபகல்
        தானே வளர்ந்த தளிர்மணியே

மங்குங் கருத்தை நிலைநிறுத்தி
        வதன வெளியில் படர்மணியே
   மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

பிரபஞ்சம் எங்கும் நிறைந்து அருளைப் பொழியும் அருள் மணியாகவும், உருத்திராக்கம் என்றும் கண்டமணி என்றும் பொருளாகி கழுத்தில் கட்டி இருக்கும் ஏகமணியாக இருப்பவளும் (நீலகண்ட வடிவம்) ஆக்கினை அடிப்படையாகக் கொண்டு ஒளிரும் மணியாகவும், இறைவனிடத்தில் நடனமிடும் இமைய மணியாகவும்,  சைலபுத்ரீ, பிரம்மசாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காலராத்ரி, மகா கவுரி, சித்திதாத்ரீஎன்ற அம்பாளின் பல்வேறு வடிவங்களாக இருப்பவளாகவும், இரவு, பகல் ஆகி ஆகாச வெளியில் பிரபஞ்ச சக்தியான 32 கலையில், உடல் கலை 28 போக மீதமிருக்கும் பயன்பாடு இல்லாத கலையாகிய நான்கு கலையையும் சேர்த்துக் கொண்டு பிறவா நிலை அருளும் திருமணியாகவும், காட்சியினை அருளும் கண்ணின் மணியாகவும், பொன்னால் ஆன அணிகலன் கொண்டவளாகவும், தாமரை மலரில் வீற்றிருந்து சூரியனின் ஒளிக்கிரணங்களைக் கொண்டவளாகவும், உன்னை மனதில் கொண்ட அடியார்களது இதயத்தில் உயர்ந்த பொன்னால் திறம்பட  அமைத்துக்  கட்டப்பட்ட மணி போன்றவளாகவும், இரவு பகல் என்று இல்லாமல் தானே வளரும் சுய ஒளி விளக்காகி என்றும் இளமையாகிய மணியாகவும், மாயைக்கு உட்பட்டு மனம் அதன் வழியில் செல்லாமல் அதை நிலை நிறுத்தி முக்கோணத்தின் மேற்கோண்ட வெளியில் படரும் மணியாகவும், மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.

விளக்க உரை

  • 1ஆக்கினை
  • 2சிவசக்தி நடன சொரூபக் காட்சி
  • 3கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து,புட்பராகம், வைடூரியம், வைரம் ஆகிய ஒன்பது வகை மணிகள் என்று பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்படுகிறது.
  • 4விளக்கு சுடர்விட்டப் பிறகு சுடர் குறையும்; அது குறையாமல் இருப்பவள் என்பதால் தளிர்மணி என்ற சொற்சொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • 5ஸ்ரீசக்ரவழிபாடு முறை கண்டு அறிக
  • கங்குல் – இரவு, இருள், எல்லை, பரணி நட்சத்திரம்

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 28 (2018)

பாடல்

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து – பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமை காக்கும் பிரான்

பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்

பதவுரை

ஐசுவரியம் உயைவன் எனவும் உயிர்களாகிய அறிவுடைப் பொருள்களை அடிமைகளாகவும், ஏனை அறிவிலாப் பொருள்களை உடைமைகளாகவும் உடையவனும், முழு முதல் தலைவனும் ஆன ஈசன் அல்லாது பிற தெய்வம் இல்லை எனத் துணிந்து, தம்மையும் தான் அல்லாத ஏனையோரையும் முதன்மையானவர்களாக எண்ணிக் கொள்வதற்கு வெட்கப்பட்டு, அவனையே மனத்தில் வைத்திருந்து, மறவாமல் அவன் புகழ் பேசுபவர்களை, ஒருபோதும் பிறவித் தளையில் சிக்கவிடாமல் காப்பவர் நம் இறைவன்.

விளக்க உரை

  • சிவனை நினைந்து, அவனை மறவாது நினைவாரை அவன் பிறவி வராமல் காப்பான்` என்பதை விளக்கும் பாடல்.
  • கூசுதல் – தம்மையும் ஏனையோரையும் முதன்மையானவர்களாக எண்ண நாணுதல்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 25 (2018)

பாடல்

பஞ்சா பரணி1 நவபூர்ணி2
        பரணா பரணி தவசரணி
     பரமேஸ் வரியே ஈஸ்வரியே
        பஞ்சா ஷரத்தி பங்கயத்தி3

எண்சாண் உடம்பில் தொண்ணூற்றா
       றிசைந்த தத்வா திகமுகமே
     இறையோ னிடத்தில் நடனமிடும்
       இமையோர்க் கரசே ஏகவெளிக்

கஞ்சா சனத்தின் நிலையாளே4
        கருணா லயத்துள் உறைபவே
     கன்னற் சிலையும் ஐங்கணையும்
        கரத்தில் சிறந்த பரைத்திருவே

அஞ்சா ணவங்கள் அகன்றடியார்
        மனதில் உறையும் அருட்கடலே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

சஞ்சலமும், சலனமும், குழப்பமும் பின்னிப் பிணைந்து இருக்கும் மனித வாழ்க்கையை புறந்தள்ளி வெற்றி அடையச் செய்பவளாகவும், வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும் அதிதேவதை ஆகியவளும் ஐந்து திருமுகம் கொண்டவளும் ஆன ஸ்ரீ நீலபதாகா நித்யா எனும் தேவி ஆனவளும், ஒன்பது எனும் எண்ணிக்கையை குறிக்கும் நவ வகையான சக்தியாக ஆகி பூரணமாக இருப்பவளும், தவ வாழ்வினை நிறைவு செய்யும் பாதத் தாமரைகளை உடையவளும், உலக உயிர்களை காப்பதற்காக காவல் மேடையில் வீற்றிருப்பவளும், பரமேஸ்வரின் வாம பாகமாக இருக்கும் பரமேஸ்வரியாக இருப்பவளும், ஈஸ்வரனின் அங்கமாக இருக்கும் ஈஸ்வரியாக இருப்பவளும், பஞ்சாட்சரமாக இருப்பவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், எண்சாண் உடம்பில் இருக்கும் தொண்ணூற்று ஆறு தத்துவங்களும் ஒன்றாக இணைந்து புலப்படுத்தும் ஏக தத்துவ முகம் உடையவளாகவும், இறைவன் இடத்தில் நடனம் இடும் இமைக்காதவர்கள் எனும் பெயர் பெற்ற தேவர்களுக்கு தலைவியாகவும் இருப்பவளேஅண்ட வெளி ஆகிய ஆகாயத்தில் கைத்தாளம் இட்டு நிலையாக இருப்பவளும், அருள், கருணை ஆகியவற்றை எப்பொழுதும் கொண்டு அதில் உறைபவளும், கரும்பு வில்லையும், மன்மதனுக்குரிய ஐந்து அம்புகளாகிய தாமரை மலர், அசோக மலர், குவளை மலர், மாம்பூ, முல்லை மலர் ஆகியவற்றை கொண்டவளும், அன்னமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம்,  மனோமயகோசம்,  ஆனந்தமய கோசம் என்பதை நீங்கிய அடியார்கள் மனதில் உறையும் அருள் கடவுளாகவும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • 1ஐந்து முகங்களுக்கும் ஐந்து ஆபரணங்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
  • 2நவ சக்தி பீடங்களில் வசிப்பவள் என்றும் பொருள் கொள்ளலாம்.
  • 3தாமரை போன்ற ஆயுதம் கொண்டவள்  என்றும் கூறலாம்.
  • 4கஞ்சம் என்பது கைத்தாளம் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.

 

 

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 21 (2018)

பாடல்

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
   சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
   சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
   போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
   ஆவ டுதுறை ஆதிஎம் மானே

தேவாரம் – ஏழாம்  திருமுறை – சுந்தரர்

பதவுரை

சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று,  தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல்  ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம்  எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து  அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து,  உன்னை வந்து அடைந்தேன்!  என்னை ஏற்று கொண்டு அருள்.

விளக்க உரை

  • சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
  • சிலந்தி,  கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
  • தெருளுதல் – உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், பூப்படைதல்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 18 (2018)

பாடல்

தேனே பாலே சருக்கரையே
      தெவிட்டா அமுதே கற்கண்டே
   சீனி யுடன்முப் பழச்சாற்றில்
      சிறந்த ரசமே செம்பொன்மலை

மானே மடலே மடக்கொடியே
     வளர்ந்த வனமே திருவதன
   மயிலே குயிலே அன்பரெல்லாம்
     வாரிச் சொரியும் மணிநிதியே

ஊனே என்றன் உயிர்க்குயிரே
     உள்ளும் புறம்பும் உறுமொழியே
  ஒளிசேர் கனகக் கற்பகமே
     உதித்த சுடரே திருப்பரமே

வானே வானின் வளிக்கனலே
     வனமே பூவே வரைமகளே
  மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

தேனாகவும், பாலாகவும், இனிப்பான சர்க்கரையாகவும், செறிவு உடைய அமுதமாகவும், கற்கண்டாகவும், மா, பலா மற்றும் வாழை இவற்றை சர்க்கரையுடன் பழச் சாற்றில் சேர்த்து செய்த ரசமாகவும், செம்பொன்மலை போன்றவளாகவும், மான் போன்றவளாகவும், வாழை மடல் போன்றவளாகவும், கொடி போன்றவளாகவும், வனத்தில் வசிப்பவளாகவும், மயில் போன்ற வதனம் உடையவளாகவும், குயில் போன்ற குரல் உடையவளாகவும், அன்பர்களுக்கு எல்லாச் செல்வங்களையும் வாரிச் சொரிபவளாகவும், இந்த ஊனைப் படைத்தவளாகவும், அதனுள் உறையும் உயிருக்கு உயிராகி விளங்குபவளாகவும், அகத்திலும் புறத்திலும் ஒன்றான மொழியினை உடையவளாகவும், ஒளி வீசக்கூடிய தங்க நிறமான கற்பத்தினை போன்றவளாகவும், அக இருளை நீக்கும் ஒளி வடிவமாகவும், உணவாகவும், ஆகாயமாக இருப்பவளாகவும், வானில் தோன்றும் கனல் காற்றாக இருப்பவளாகவும், வனத்தில் இருப்பவளாகவும் *, இமவான் மகளாகவும், மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • * வனத்தில் இருப்பவளும் – வன தேவதைகள் சூழ இருப்பவளும் என்றும் கொள்ளலாம்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 17 (2018)

பாடல்

தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
   தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
   பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
   மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
   சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து,  பயனில்லாத சொற்களைப் பேசி  பின்னுதல் உடைய  சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே  மக்கள்  பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது  இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு  நிற்க  நீ  தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு  செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற  நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை  அணுகச் சென்று  இவனே  தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 11 (2018)

 

பாடல்

பண்டு மறையின் முடிவினுள்ளே
     பழுத்த பழமே அருட்பழமே
   பரிபா கத்துப் பத்தர்நெஞ்சில்
     படர்ந்த பழமே நவமுடிமேல்

என்றுங் கனிந்த திருப்பழமே
     இமையோர் தேடித் தேடியுமே
   எட்டாப் பழமே காசினியில்
     எவர்தாம் தனையே உணர்ந்தோர்கள்

கண்டு புசிக்கும் பதிப்பழமே
     கருணைப் பழமே சிவப்பழமே
   கயிலா யத்தில் அரன்முடிமேல்
     கனிந்த பழமே கதிப்பழமே

மன்றுள் மணக்கும் அடியவர்க்கும்
     மாயோ கியர்க்கும் உதவிநிற்கும்
   மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

காலத்தால் முற்பட்ட மறையின் முடிவாக இருந்து அதன் விளைவாக பழுத்த பழமாகவும், அடியவர்களுக்கு அருளை வழங்கும் அருட்பழமாகவும், முதிர்ச்சி உடைய பக்தர்கள் நெஞ்சில் படர்ந்த பழமாகவும், புதுமையாக சூடப்பட்ட முடி மேல் என்றும் கனிந்திருக்கும் மேன்மை பொருந்திய பழமாகவும், இமைத்தலை செய்யா தேவர்கள் தேடித் தேடியும் காண இயலாமல் அவர்களுக்கு  எட்டாத பழமாகவும், தன்னைத் தானே உணர்ந்தவர்கள் கண்டு புசிக்கும் பழமாகவும், பக்தர்களுக்கு வேண்டியதை அருளுவதால் கருணைப் பழமாகவும்! சிவ சக்தி ரூபமாக் இருப்பதால் சிவப் பழமாகவும், கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவன் முடிமேல் இருக்கும் கனிந்த பழமாகவும், அருளை வாரி வழங்கி நல் கதிக்கு அழைத்துச் செல்வதால் கதிப்பழமாகவும், சிதம்பரத்துள் உள்ள கனகசபை தனில் மணம்வீசிக் கொண்டிருக்கும்  அடியவர்களுக்கும், மாபெரும் யோகியர்களுக்கும் உதவி நிற்கக் கூடிய அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் ஆகிறாய்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • அருட்பழமாக அன்னையை கண்டு வியத்தல் பற்றியது இப்பாடல்
  • ‘பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை’ எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • ‘இம்மணியா லிழைத்துநவ முடிசூட்டி யிச்சிங்க விளவெ றன்ன’  எனும் திருவிளையாடற் புராண வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. சில இடங்களில் ‘நவமணியால்’ இழைத்தது எனவும் பொருள் விளக்கப்படுகிறது.
  • ‘நவமுடிமேல் என்றுங் கனிந்த திருப்பழமே’ என்றும் ‘கயிலா யத்தில் அரன்முடிமேல் கனிந்த பழமே’  என்பதும் ஒன்று போலவே தோன்றும். பொருள் விளக்கத்தில் அதன் தன்மையை அழுத்தி கூறுமிடத்து அவ்வாறு இருமுறை கூறுதல் மரபு. அன்றியும் அம்மையைக் கண்டதும் தன்நிலை மறந்து புத்தி பேதலித்து இருந்த அவர் வாழ்வியல் முறை வைத்தும் இரு முறை வந்திருக்கலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 4 (2018)

பாடல்

ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே, ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.

விளக்க உரை

  • செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உண்ர்வு கூட இல்லை.
  • குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 31 (2018)

பாடல்

தங்கிய மாதவத்தின் தழல்
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு
நாகேச் சரத்தானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

செங்கயல் எனும் ஒரு மீன்வகையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, மாற்றம் இல்லாத, நிலையான பெரிய தவத்தினால், வேள்வித் தீயினியில்  இருந்து தோன்றிய சிங்கமும், மிகப் பெரியதான புலியும், திருமாலின் நிறம் ஒத்த பருத்த பெரிய யானையும் கதறி ஒடும்படி செய்தும், அழியும்படி செய்வதுமான மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின் தோலை உரித்தும், அத்தோலைப் போர்த்தியும் செய்தற்குக் காரணம் யாது?

விளக்க உரை

  • ‘உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்’ என்பது பற்றிய பாடல்.
  • தவம் – தாருகாவன முனிவர்களுடையது. அட்ட வீரட்டான செயல்களில் ஒன்றான இவ்வரலாற்றினை வழுவூர் திருத்தல பெருமை கொண்டு அறிக.
  • போர்த்தல் – மறைத்தல் என்னும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 29 (2018)

பாடல்

உச்சிக் கிளியே அருட்கிளியே
      உணர்வுக் குணர்வாய் உயிர்க்குயிராய்
   உதித்த கிளியே பரவெளியில்
     ஒளிவான் பழத்தை உன்னிவரும்

நற்சொற் கிளியே கதம்பவன
      நகரில் வாழும் பரைக்கிளியே
   ஞானக் கிளியே மறைவனத்தில்
      நடனக் கிளியே சிவக்கிளியே

பச்சைக் கிளியே அன்பர்மதி
      படரும் ஆவி ஓடையினில்
   பரவுங் கிளியே நிதிக்கிளியே
      பவழக் கிளியே பதிக்கிளியே

வச்ரக் கிளியே நவபீட
      வாசற் கிளியே அருள் அமையும்
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

பேச்சுத் திறமை, ஐஸ்வரியம், ஆத்ம ஞானம் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் கிளி போன்றவளே, அருளை வழங்கும் அருள்கிளியே, அடியவர்களின் உணர்வுக்கு உணர்வாகவும், அவர்களின் உயிருக்கு உயிராகவும் தோன்றிய கிளியே, நமசிவய எனும் எழுத்துக்களாகி ஆகாயத்தில் விளக்கும் ஒளிவடிவமான பழத்தை த்யானித்து இனிய மொழி பேசும் கிளியே, தன்னுடைய பரிவார தேவதைகளுடன் பரதேவதையாக இருக்கும் சிந்தாமணிக் க்ரகம் எனும் திருக்கோயிலைச் சுற்றி இருக்கும் மணித்வீபம் என்று அழைக்கப்பெறும் தீவாகிய கதம்பவனத்தில் வாழும் சிவசக்தி வடிவமான கிளியே, மாயையை விலக்கை ஞானத்தை அருளும் ஞானக் கிளியே, வேதங்களால் சூழ்ந்த வனம் எனப்படும் மறைவனத்தில் நடனம் ஆடும் கிளியே, சிவக்கிளியே, அடியார்களின் எண்ணங்களில் படர்ந்து அவர்களின் உயிர் செல்லும் வழியில் செல்லும் கிளியே, வேண்டும் வரங்களை வேண்டியவாறு அருளும் நிதிக் கிளியே, பவழக் கிளியே, சிவசக்தி வடிவமாக இறைவனோடு இருக்கும் பதிக்கிளியே, யோகத்தில் ஒன்றாக இருக்கும் வச்சிரம் போன்று இருக்கும் வச்ரக் கிளியே,(நீ) நவ கோணங்களின் பீடத்தின் வாசலில் வீற்றிருந்து அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள் ஆவாய்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • அம்மையை கிளி வடிவில் போற்றிப் பாடியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 23 (2018)

பாடல்

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம்  – திருமூலர்

பதவுரை

புறப் பொருளைக் காணும் கண் இல்லாதவர்கள் இருளிலும், விடி காலை புலர்ந்தாலும், விடிந்தப் பின்னும்  அதை அறியாமல் இருப்பதோடு  விடிந்தபிறகும் ஒளியில் பொருள்களை கண்டு பயன்பாடு கொள்ளவும் மாட்டார்கள். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர்கள், தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டாமல் இருந்து, அவ்வாறு அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரவும் மாட்டார்கள். ஆதலினான் நீங்கள் ஊனக் கண்ணை விலக்கி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காண்டால், அத்திருவருளே அறியாமையாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகி முன் நிற்கும்.

விளக்க உரை

  • இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயல வேண்டும் என்பது பற்றிய பாடல்.
  • ‘திருவருளே விளக்கு’ – நீங்கள் அவ்விளக்கையே உமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` எனும் பொருளில்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 22 (2018)

பாடல்

அஞ்சு முகத்தி நவமுகத்தி
          ஆறு முகத்தி சதுர்முகத்தி
     அலையில் துயிலும் மால்முகத்தி
          அருண முகத்தி அம்பரத்தி
பஞ்சா ஷரத்தி பரிபுரத்தி
          பாசாங் குசத்தி நடுவனத்தி
     பதுமா சனத்தி சிவபுரத்தி
          பாரத் தனத்தி திருகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி
          கருணா கரத்தி தவகுணத்தி
     கயிலா சனத்தி நவகுணத்தி
          காந்தள் மலர்போல் சதுர்கரத்தி
மஞ்சு நிறத்தி பரம்பரத்தி
          மதுரச் சிவத்தி மங்களத்தி
     மயிலா புரியில் வளரீசன்
           வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள், ஈசனைப் போல் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் மகேஷ்வரியாகி ஐந்து முகம் கொண்டவள்; வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, பலவிகரணி, பலபிரமதனி, சர்வபூததமனி, சக்தி, மனோன்மணி ஆகிய ஒன்பது நவ சக்தியானவள்; கௌமாரி வடிவத்துடன் ஆறு முகம் கொண்டவள்; பிராமி நிலையில் நான்கு முகம் கொண்டவள்; அலையில் துயிலும் திருமால் போன்று வைஷ்ணவியானவள்; உதயகாலத்து சூரியனைப்போல் செந்நிறமும், ஆகாய வடிவமாகவும் இருப்பவள்; வெண் மேகம் போன்ற நிறத்தினை உடையவள்; ஒன்றுக்குஒன்றுமேலாக இருந்து முக்தி தர வல்லவள்; அவினாபாவசத்தி ஆகிய சிவத்தில் இருந்து பிரியா ஆற்றல் கொண்ட சிவரூபம் கொண்டவள்; மங்கள வடிவமானவள்; பஞ்சாட்ரத்தின் பொருளாக விளங்குபவள்; கால்களில் பரிபுரம் எனும் சிலம்பு அணிந்தவள்; தன் திருக்கரங்களில்  பாசத்தினை வைத்து இருப்பவள்; அகிலத்திற்கு நடு நாயமாக இருக்கும் இமயமலையை இருப்பிடமாக கொண்டவள்; தாமரை மலர்  மீது அமர்ந்து இருப்பவள்; சிவபுரத்தினை ஆட்சி செய்பவள்; உலகிற்கு அன்னையாக இருப்பதால் கனத்த தனத்தை உடையவள்; சத்துவம், இராசதம், தாமதம் எனும் மூவகைக் குணங்கள் கொண்ட பல்வேறு தேவி வடிவங்களாகி இருப்பவள்; தாமரை போன்ற முகம் கொண்டவள்; கற்பக விருட்சமாக இருப்பவள்; கருணை எனும் அபத்தினை திருக்கரத்தில் கொண்டவள்; தவ குணம் உடையவள்; கயிலாசனத்தில் வீற்றிருப்பவள்; அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம் ஆகிய ஒன்பது குணங்கள் கொண்டவள்; காந்தள் மலர் போல் நான்கு கரம் கொண்டவள்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • அம்மையின் எழில் வடிவம் உரை செய்தது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 21 (2018)

பாடல்

வட்டையொப்பாகும் இனியசொல்மாதர் மயக்கத்திலே
பட்டையப் பாமிகயானிளைத்தேன் பண்டிருவர்க்கெட்ட
நெட்டையப்பாமறை காணத சேவடி நீயருள்வாய்
சட்டையப்பா வடுகா காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

பட்டை என்னும் ஆபரத்தின் ஒரு உறுப்பினை அணிந்தவனே, சட்டையப்பனே, வடுகனே, காழிப்பதியில் உறையும் ஆபதுதாரணனே, பெரும் காட்டினைப் போன்றதும், திசைகள் அற்றதாகவும் செய்யும் இனிய சொல்லைச் கூறும் மாதர்கள் மேல் மயக்கம் கொண்டு யான் இளைத்து விட்டேன். காலங்களால் அளவிடமுடியாததான முற்காலத்தில் திருமாலாலும், பிரம்மனாலும் காண இயலாதவாறு நெடிய அளவில் வளர்ந்தும், வேதம் எனப்படும் மறைகளாலும் காண இயலா திருவடியை நீ அருள்வாய்.

விளக்க உரை

  • பட்டை – மரத்தோல்; வாழைப் பட்டை; பொற்சரிகைப்பட்டி; கழுத்துப் பட்டை; பனம் பட்டை; போதிகை; மணியைத் துலக்கும்பட்டை; அணிகலனின் ஓர் உறுப்பு (யாழ்); நீர் இறைக்கும் கூடை; மரவுரி; தகடு; பனங்கை ( ‘நிர்வாணம் சுனவாகனம்’ என பைரவர் த்யான ஸ்லோகத்தில் இருப்பதாலும் மர உரி தரித்தவர் எனும் கருத்து விலக்கப்படுகிறது)
  • பண்டு – பழமை; முற்காலம்; முன்; தகாச்சொல்; நிதி ( குறிப்பு : பண்டிருவர் காணாப் படியார் போலும் – பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும் (6.89.3))

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 1 (2018)

பாடல்

பாதாம் புயத்திற் சிறுசதங்கைப்
     பணியுஞ் சிலம்புங் கிண்கிணியும்
   படர்பா டகமுந் தண்டையுடன்
     படியுங் கொலுசுந் தழைத்தருளும்

பீதாம் பரமுந் துவள் இடையும்
     பிரியா தரைஞாண் மாலைகளும்
   பெருகுந் தரள நவமணியும்
     புனையுங் குயமும் இருபுறமும்

போதா ரமுத வசனமொழி
     புகலும் வாயும் கயல்விழியும்
   புண்ட ரீகத் திருநுதலும்
     பொன்போற் சடையும் மதிமுகமும்

வாதா டியபே ரின்பரச
     வதனக் கொடியே உனை அடுத்தேன்
   மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயே! பாதங்களில் சிறிய சதங்கை, அந்த பாதங்களை பணிந்து வணங்குவதான சிலம்பு, கிங்கிணி, காலிலே படந்து இருப்பது போன்ற மணி ஓசை எழுப்பும் பாடகம், தண்டை, அதில் படிந்திருப்பது போல் தோற்றம் ஏற்படுத்தும் கொலுசு, துவள்வது போன்ற இடையில் பட்டு, பெருமாள் அணிந்திருக்கக்கூடியது போன்ற பீதாம்பரம், விட்டுப் பிரியாத அரைஞாண் மாலைகள், இரு புயங்கள், அவற்றுடன் ஒட்டி இருக்கும் மார்பினில் கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், வைரம் இவற்றுடன் முத்துக்கள் பதிக்கப்பட்டதான ஒன்பது வகை மணிகள் கூடிய மாலையை அணிந்து, மீன்களை ஒத்த கண்கள் கொண்டவளாகி, தாமரை மலர் போன்ற நெற்றி, பொன் போன்ற பிரகாசம் உடைய கூந்தல், சந்திரனை ஒத்த முகம் கொண்டு ஐயனோடு வாதாடுவதில்  பேரன்பு கொண்டவளாகி அடியார்களுக்கு பேரின்ப ரசத்தினை வழங்கும் கொடியைப் போன்றவளாகி இருக்கிறாய்! நீ ஏற்றதால் உன்னிடத்தில் பொருந்தி நின்றேன்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • பாதாதி கேச தரிசனம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 27 (2018)

 

பாடல்

பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்
குண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

இசை போன்று இனிய சொல்லை உடைய உமையினை ஒரு பாகத்தில் உடையவனே! உனக்கு என்று உரிமை ஆனவர்களுக்கு, உண்ணுதலுக்கு ஏற்ற அருமையான அமுதமே! உடையவனே! அடியேனை, மண் உலகில் பொருந்திய எல்லா பிறப்புகளையும் அறுத்து, ஆட்கொள்ளுதல் பொருட்டு ‘நீ வருக’ என்று அழைத்ததனால் உன் திருவடிகளைக் கண் கொண்டு அடியேன் உய்ந்த முறை ஏற்பட்டது.

விளக்க உரை

  • மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய்நீ – எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கள் – 1. தேவர் – 11,00,000 யோனி பேதம், 2. மனிதர்- 9,00,000 யோனி பேதம், 3. நாற்கால் விலங்கு – 10,00,000 யோனி பேதம்,
  • 4. பறவை – 10,00,000 யோனி பேதம், 5. ஊர்வன – 15,00,000 யோனி பேதம், 6. நீர்வாழ்வன – 10,00,000 யோனி பேதம். 7. தாவரம் – 19,00,000 யோனி பேதம் ஆக மொத்தம் 84,00,000 யோனி பேதம். .அத்தனை யோனி பேதங்களும் மனித பிறப்பினை அடிப்படையாக கொண்டவை. ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை,  வாசனை ஆகியவை கொண்டு மண்ணின் தத்துவமாக கருத்தில் கொண்டு அது விரிந்து தொண்ணுற்று ஆறு தத்துவங்களையும் கடந்து நின்று வினை நீக்கி அருளுபவன் என்றும் கொள்ளலாம்.
  • உடையவன் – உரியவன், பொருளையுடையவன், கடவுள், செல்வன், தலைவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 25 (2018)

பாடல்

அபயாம்பிகை சதகம் அன்பாய் உரைக்க
உபய சரணம் உதவும் – சபைநடுவுள்
ஆடுகின்ற ஐயன்முதல் அன்பாய் பெற்ற ஒரு
கோடுமுகத் தானை குறித்து

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

அஞ்சொல் நாயகி எனும் அபயாம்பிகையின் பெயரில் இயற்றப்படும் இந்த அபயாம்பிகை சதகம் எனும் நூறு பாடல்களை அன்புடன் உரைக்க அம்பலத்தில் ஆடும் ஐயன் அன்பாய் பெற்ற முதல் புத்திரரும், ஒரு தந்தத்தை முகத்தில் கொண்டவருமான வினாயக பெருமானின் இரண்டு திருவடிகளை சரணடைய அவன் அருள் செய்வான்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் உரைக்க விநாயகரிடம் அருள் வேண்டி நின்ற திறம் பற்றியது இப்பாடல்.
  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • உபயம் – இரண்டு

 

அபயாம்பிகைஎத்தனை முறை சென்று தரிசித்தாலும் ஒவ்வொரு முறையும் தன்னை தன்னில் இருந்து வெளிப்படுத்தும் பாங்கு அலாதியானது. அழகு, வசீகரம், மோனம், முழுமை, எழில், மந்தஹாசம் என எத்தனைப் பொருள் கொண்டு விவரித்தாலும் அத்தனையும் மீறியதான அருட் சக்தி.

சாக்த வழிபாடு செய்யாத சித்தர்கள் இல்லை. சொல் குற்றம், பொருள் குற்றம் அனைத்தும் வினையால் ஏற்படுவது. அத்தகைய குற்றங்களை களைந்து முழுமையான படைப்பாக ஆக்க சிறப்புடையதும், எல்லாவற்றையும் அருளுக்கூடியவருமான, சாக்த வழிபாட்டிலும் சிறந்தவரான என் குரு நாதரை மனதில் கொண்டு அவரது திருவடிகளைப் பற்றி இந்த பாடல்களுக்கு விளக்கம் எழுத இருக்கிறேன்.

இயன்ற அளவில் வெள்ளிக்கிழமை அன்று இடம் பெறுமாறு எண்ணம் கொண்டு இருக்கிறேன்.

குரு அருளும் திருவருளும் நம்மைக் காக்கட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 23 (2018)

பாடல்

சாயாத சூலதண்டாயுதனே பச்சைச் சட்டையனே
வேயார் விண்ணோர் தொழ மெனியனேயென்மிடி தவிர்ப்பாய்
வாயார வுன்னைத் துதிப்போர்க்கு வேண்டும் வரமளிப்பாய்
தாயாகிய அப்பனே காழியாபதுத்தாரணனே.

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

நடுநிலை மாறாத மூன்று முனைகளை உடைய சூலமும் தண்டாயுதமும் கொண்டவனே, குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவனே, மூங்கில் போன்றவர்களும், விண்ணில் இருக்கும் தேவர்களும் தொழும் மேனியை உடையவனே, வாயினால் உன்னைத் துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் அளவிற்கு வரங்களை அளிப்பவனே, எனக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! எனக்கு துயர் ஏற்படாமல் தவிர்த்து என்னைக் காப்பாய்.

விளக்க உரை

  • சாயாத சூலம் – குற்றம் செய்பவர்களை மட்டும் தண்டிக்கும் தன்மை உடைய சூலம்
  • பச்சை சட்டையன் – குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவன் (பச்சை என்பது குளிர்ச்சி பொருந்தியது எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது).
  • வேய்த்தல்,- வஞ்சித்தல் என பொருள் கொண்டு அதன் எதிர்மறையாகிய வேயார் – வஞ்சித்தல் இல்லாதவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. மூங்கில் எனும் பொருளும் இருக்கிறது.[உ.ம் வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் – மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில்  ( தேவாரம் – ஏழம் திருமுறை – சுந்தரர்)].வேயார் என்பது பன்மை பொருள் கொண்டு, பிட்சடனார் வடிவில் இருந்த போது மூங்கில் போன்ற தாருகா வன ரிஷி பத்தினிகளால் விரும்பப்பட்டவர் எனவும் கொள்ளலாம். பொருள் குற்றம் பொருத்து, ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 18 (2018)

பாடல்

திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, மிக்க அழகுடையவளாகிய சுந்தரி, ஆகாயத்தில் விளங்குபவளாகிய அந்தரி, சிந்துரத்தையும், சிலம்பணிந்தவள் அணிந்தவள், நாரணன் தங்கை ஆகிய நாரணி, அம்பலம் நிற வடிவத்தையும் உடையவள், சிறப்பான நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி, மனோன்மணி` என்னும் பெயர்களைப் பெற்று அந்த அந்த வகையில் எல்லாம் விளங்குவாள்.

விளக்க உரை

  • ஆம் – பொருந்திய, பல வன்னத்தி – பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பல வன்னத்தி – நீட்டல் அதிகாரம் பற்றி அம்பலம் என்பது  ஆம்பலம் எனக் கொண்டும் சிவசக்தி ஐக்கிய பேதம் கொண்டு பின்னர் வரும் ஈசுவரி,மனோன்மனி என்று வருவதாலும் அம்பல வண்ணமுடையவள் என்று இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
  • ஒன்பது திருப்பெயரும் ஒன்பது ஆற்றல்களை குறிக்கும். அனைத்தும் ஒன்றாகி மும்மலம் நீங்க அருளச்செய்பவள் சத்தியாகிய திரிபுரை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 17 (2018)

பாடல்

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ

அழுகணிச் சித்தர்

பதவுரை

உலகியல் உருவமாகிய தூலத்தை மட்டும் காட்டுவது கண்கள், அவைகள் சூக்குமமாகிய இறைவன் தன்னைப்பற்றி காட்டுவது இல்லை. சிறப்புக்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர விரும்பி யோக மார்கத்தில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சகஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைப்பதற்காக மேலே ஏற்றி தவம் இயற்றும் பொழுது உலகியலை எப்போதும் நாடும் நாட்டார் எனப்படும் மனம் புன்னகைத்து செய்து நம்மை திசை திருப்ப முயலும். அப்படிப்பட்டதான  ஆதி அந்தமான கண்ணாகிய ஆன்மா தன் இருப்பிடமான மேல் உச்சி தனை உள்ளிருந்து நோக்கும் போது, தன் உண்மை உருவை காட்டாதவனை கண்டு  மனம் நமைப் பார்த்து நகைத்தாலும், அதை அடக்கி கண்களை மேலேற்றி ஆன்மாவின் ஜோதி தரிசனத்தை கண்குளிரக் காண்பேனோ?

(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 16 (2018)

பாடல்

காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஆண்கள் காதில் அணியும் ஆபரணமாகிய குண்டலம், கழுத்தணி ஆபரணமாகிய உருத்திராட்சமாலை, வாயினால் ஊதி நல்ல ஒலி உண்டாக்கும் திருச்சங்கு, மகா மேரு, கைகளில் திருவோடு, ஓதுதல் உடைய தவச் சாலை, கால்களில் அணியக்கூடிய பாதுகை, யோகம் தரதக்கதான இருக்கை, நெற்றியில் அணியப்படும் குற்றமற்ற யோக பட்டம் மற்றும் கைகளில் கொள்ளப்படும் யோக தண்டம் என்னும் பத்தும் தவம் உடையவர்களுக்கு உரித்தான வேடங்களாகும்.

விளக்க உரை

  • உயர்கட்டி – மகா மேரு – மாபெரும் துறவிகள் போன்றோர் அணிவது. (உ.ம் பெரும்பாலான ஆதினங்கள் குரு பரம்பரையாக இதை அணிவார்கள்)
  • தவ வேடங்கள் தொகுப்பு பற்றிய பாடல்

Loading

சமூக ஊடகங்கள்