பாடல்
அணைத்துமிகத்தான் உருக்கி எடுத்துப்பார்த்தால்
ஆதிமிக சோதி என்ற தங்கத் தாய்தான்
நினைத்தபடி தான்குடுக்குஞ் சோதித்தாயை
நித்தியமுஞ் சுத்தமதாய்ப் பூசைப்பண்ணி
மனதைமிகத் தானிருத்தி சோதிப்பார்த்தால்
மகத்தான வாசிசிவ யோகந் தன்னால்
சினந்து வருங்காலனவன் ஓடிப் போவான்
சிவசிவா குருபதத்தில் தெளிவாய் நில்லே
சௌமிய சாகரம் – அகத்தியர்
கருத்து – ஆக்ஞையில் சோதி வடிவான அன்னையைக் கண்டவர்களை காலன் அணுகான் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
பிராணன் தனது வாகனமாக மூச்சுடன் வா (உள்மூச்சு- காற்றுத் தத்துவம்) என்றும் சி(வெளி மூச்சு – அக்னி தத்துவம்) என்றும் கூடி குண்டலினி அக்னியை மேலே எழுப்புகிறது. அவ்வாறு எழுந்த அக்னி வ என்னும் காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் லலாட சக்கரத்திலிருந்து அமிர்தத்துடன் விசுத்தி சக்கரத்தில் சேகரிக்கப்படுகிறது. (சில நூல்கள் அனாகத சக்கரமான இதயம் அதைக் குறிக்கின்றது என்றும் கூறுகின்றன). இவ்வாறு பெறப்படும் அமிர்தம் நமது விசுத்தியிலும் இதயத்திலும் நின்று நம்மை காலத்தைக் கடக்க வைக்கிறது. இவ்வாறு எழும் அக்கியானது குருபதம் எனப்படுவதாகிய ஆக்ஞையில் உணர்வு செல்லும்போது ஞானம் ஏற்படுகிறது. அதனால் ஒருவர் தெளிவுடன் குருபதம் எனப்படும் ஆக்ஞையில் நிற்க வேண்டும். தினமும், மனம் வாக்கு காயங்களால் தூயவராகவும் மனத்தை வாசி எனும் சிவ யோகத்தால் நிறுத்தியவராகவும் இருப்பவர் மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களில் கூறிய பொருள்களை சேர்த்து உருக்கி எடுத்து பார்க்கும்போது ஆக்ஞையில் அடியவர்கள் விரும்பதை அவர்கள் விரும்புகின்ற அளவில் கொடுப்பவளானவளும், தங்கமேனி கொண்ட தாய் என அழைக்கப்படுபவளும் ஆன சக்தி தென்படுகிறாள். அவ்வாறு தேவியின் தரிசனத்தைப் பெற்றால் உயிர்களை கொல்ல சினம் கொண்டு வரும் காலன் ஓடிப்போவான்.
விளக்க உரை
- வாசி/சிவயோகம் என்பது சித்தர்களின் பிராணாயாம முறை என்பதால் குரு முகமாக செய்முறைகளை அறிக.
- ஆதிமிக சோதி – அறியமுடியா காலத்தால் இருந்து இருப்பவள்; அளவிட முடியா ஜோதி வடிவாக இருப்பவள்.