அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 17 (2024)


மருவி நின்ற தலமதுதான் விசுத்திவீடு
மகத்தான அறுகோணம் நன்றாய்ப்போட்டு
திருவிந்த அறுகோணஞ் சுத்திநல்ல
தீர்க்கமுடன் பதினாறு இதழ்தான் போட்டு
குருவிருந்த கோட்டை வெகு கருப்பாய் நிற்குங்
குணமான அக்கோட்டை நடுவிலேதான்
உருவறிந்து விந்திட்டு ஓங்காரஞ் சுத்தி
உத்தமனே வங் கிலி யங்கென்று போடே

அகத்தியர் சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்து – விசுத்தி பற்றிக் கூறும் பாடல்.

பதவுரை

அறுகோணம் அல்லது ஷட்கோணத்தைக் கொண்ட இந்த விசுத்தி சக்கரத்தைச் சுற்றி பதினாறு இதழ்கள் போடவேண்டும். அதன் மத்தியில் பிந்துவும் அதைச் சுற்றி ஓம்காரமும் போடவேண்டும். அதனுடன் வங் கிலி யங் என்று எழுதவேண்டும்.  கரியநிறத்தில் இருக்கும்  இந்த சக்கரத்தை குருவின் கோட்டை  என்று  அழைக்கிறார்.  சிவனின் கரிய கழுத்து இதைத்தான் குறிக்கிறது.

விளக்கஉரை

  • ஆறு ஆதாரங்களில் ஒன்றான விசுத்தியை குறிப்பது.. இதன் வடிவம் அறுகோணம் பஞ்சாட்ஷரத்தில் “வ” என்ற எழுத்து.
  • சிவ சக்தி சொரூப ஐக்கியம். நடுவில் பிந்து. சிவன்(3), சக்தி(3). இரண்டும் சேர்ந்து ஷட்கோணம்(அறுகோணம்)
  • திருத்தணி, திருப்பதி, திருவாலங்காடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சோளிங்கர் ஆகிய 6 கோவில்களுக்கு மத்தியில் இருப்பதால் அறுகோணம் (தற்போது அரக்கோணம்)
  • எல்லாப் பயனையும் தருவது எந்திரங்களில் தலைமையகிய புவனாபதிச் சக்கரத்தின் திருவடியாகும்.   அதனை அறிந்து, அவள் மந்திரத்தைக் குருவால் பெற்று அதனை உடம்பில் நிறுத்திப் பயிலவும், ஆன்மா உடலில் மந்திரத்தாத்துவாக நிலைக்க உறுப்புக்களைச் சிவனின் அங்கங்களாகக் கருதி பிறவி வேர் நீங்குமாறு செப்புத் தகட்டில் அறுகோணம் அமைக்க வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார்.

ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.

#அகத்தியர் #சித்தர் #சௌமிய_சாகரம் #விசுத்தி #அமுதமொழி, #சித்த(ர்)த்_துளிப்பு, #சித்தர்_பாடல்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 23 (2021)


பாடல்

பாரப்பா மவுனமுடன் நின்று வாழ
பரைஞான கேசரியாள் பாதம் போற்றி
சாரப்பா அவள்பதமே கெதியென்றெண்ணி
சங்கையுடன் மவுனரசந்தானே கொண்டால்
பேரப்பா பெற்றதொரு தவப்பேராலே
பேரண்டஞ் சுற்றிவர கெதியுண்டாகும்
ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை
அறிந்துகொண்டு பூரணத்தை அடுத்து வாழே

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து – அமிர்த ரசத்தை தவத்தின் மூலம் பருகினால் ஒரு யோகி ஆழமான மவுன நிலையை அடைவார் என்பதைக் குறிக்கும் அகத்தியரின் பாடல்.

பதவுரை

மௌனத்துடன் மனம் ஒன்றி அது பற்றி வாழ மெய்யறிவாக இருக்கும் கேசரியாள் பாதம் போற்றி! அவள் பதத்தினை வாழ்விற்கான கதி என்று எண்ணி, சங்கு எனப்படும் தொண்டைக்குழிப் பகுதியின் வழியாக வரும் நாதம் என்று அழைக்கப்படும் பேச்சினை நிறுத்தி, மௌனம் கொண்டால் அதன் விளைவாக தவ ஆற்றல் கிட்டும்; அந்த தவ ஆற்றலின் காரணமாக பேரண்டம் எனக் கூறப்படும் 1008 அண்டங்களையும் கெவுன சித்தி எனப்படும் வானத்தில் சூட்சும நிலையில் பயணிக்கக்கூடியத் தகுதி பெற்று அண்டங்களைச் சுற்றி வரும் வாய்ப்பு உண்டாகும். மற்றவர்களால் அறிய இயலா இந்த மவுனத்தின் போக்கை அறிந்து கொண்டு மெய்யறிவு எனப்படும் பூரணத்தினைக் கண்டு வாழ்வாயாக. 

விளக்கஉரை

  • மௌன நிலையின் சிறப்புகள்
  • பேரண்டம் – 1008 அண்டங்கள்
  • பரஞானம் – இறையறிவு

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 30-Nov-2020


பாடல்

பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
   படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி;
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
   வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு;
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
   ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
   குணவியவா னானக்காற் சத்திய மாமே

அருளிய சித்தர் : அகத்தியர்

பதவுரை

இந்த உலகத்தில் பிறவிகள் கோடி ஆகும்(எண்ணிக்கை அற்றவை என்பதைக் குறிக்கும், 84 லட்சம் என்பது சைவ சித்தாந்த வரையறை); அந்த பிறவி சாந்து வரும் படைப்புகளோ கோடி கோடியாக நீட்சி கொள்ளும் ((எண்ணிக்கை அற்றவை என்பதைக் குறிக்கும்); புழுவானது அதன் கூட்டில் இருந்து தப்பாதவாறு வலைப்பின்னல்கள் இருப்பதைப் போன்று இந்த அண்டத்திலும் பிறவிகள் கோடி ஒத்து இருக்கின்றன; அதில் எண்ணற்ற வகையான மாற்றங்கள் தினந்தோறும் நடைபெற்று கொண்டு இருக்கிறன; இதை புறக் கண்களால் கொண்டு அதை உற்று கவனிப்பாயாக; அவ்வாறு கவனிக்கும் போது இந்த அண்டத்தில் இருப்பது பிண்டம் எனப்படும் உடலில் இருக்கின்றது என்பது புலப்படும்; அதனை குருவின் அருளினால் சத்தியமாக உணர வேண்டும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 22 (2020)


பாடல்

தள்ளுவது ஆரைஎன்றால் மைந்தா கேளு
தன்னுரவுயில்லாத சமயத்தோரை
உள்ளுரைந்த உள்ளமதைப் பாரார் தன்னை
உத்த சிவஞ் சத்திபதம் தேடார் தன்னை
நல்லுணர்வு இல்லாத நாயகன் தன்னை
நாதாந்த வேதமதைக் காணார் தன்னை
சொல்லுணர்வாய் நாவில்வைத்துப் பேச வேண்டாம்
சோதிமய மானசிவ ஞானம் பாரே

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து – முக்தியினை விரும்பவர்களால் விலக்கப்பட வேண்டியவர்கள் என்போர் பற்றி அகத்தியர் கூறும் பாடல்.

பதவுரை

முக்தியினை விரும்பவர்கள், தன்னுடன் உறவாக இருக்கும் ஆத்மாவை முக்கியமாகக் கருதாத மதத்தை கடைப்பிடிப்போர்களையும், உள்ளுக்குள் உரைந்து நிற்கும் தனது உள்ளத்தைக் கவனித்து தன்னுள் ஆழாதவர்களையும், உத்தமான சிவசக்தி பதம் என்ற உயர்ந்த நிலைகளை விரும்பாதவர்களையும்,  நல்ல உணர்வுகளைத் தரும் நாயகனை விடுத்து தன்னையே நாயகன் எனவும் முக்கியமானவன் எனவும் கருதுவோராகிய நல்லுணர்வு இல்லாதோர்களையும், நாதாந்த வேதம் எனப்படுவதாகிய ஞானத்தினால் பிரணவப் பொருளை அடைய விருப்பம் இல்லாதவர்களையும் சொல்லில் வைத்து பேசி காலத்தை வீணாக்காது அவர்களைத் தள்ளி சோதி வடிவமாக இருக்கக் கூடியதான சிவ ஞானம் பார்க்க வேண்டும்.

விளக்க உரை

  • மேலே கூறப்பட்டவர்கள் தன்னையே உயர்வாக எண்ணி உலக இன்பங்களிலும் பெருமைகளிலும் காலத்தைக் கழிப்பவராவர்கள் என்பதால் இவர்களுடன் சேர்வது முக்தியினைத் தடைப்படுத்தும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 25 (2020)


பாடல்

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
     உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
     விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
     பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
     கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே

அகஸ்தியர் ஞானம்

கருத்து – யோக நெறியில் துரியம் தாண்டி துரியாதீதத்தில் நிலை பெற மூலாதார மூர்த்தியாக கணபதியைக் காணுதலே முதன்மையானது என்பதையும் அதுவே ஞானத்தினை தரும் என்பதையும் விளக்கும் பாடல் பாடல்.

பதவுரை

அண்ணாக்கு எனப்படுவதும், கூடத்தக்கதான இடமும் ஆன உச்சிவெளி ஆகிய துரியம் தாண்டி துரியாதீதத்தில் நின்று(அஃதாவது பர ஆகாசத்தில்), உமையவளுக்கும், கணபதிக்கும் முற்பட்ட காலமான காலத்தில் ஒளி பொருந்தி நிற்கக் கூடியதான அம்பரம் எனப்படும் சிற்றம்பலத்தில் அகாரமும், உகாரமும் சேர்ந்ததானதும் எல்லாவற்றிற்கும் மேலானதுமான பரம் எனும் நிலை சாதாரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு எட்டாது;  வேதவடிவமாக இருக்கக்கூடியதான உன்னுடைய உயிர்தான் சிவ வடிவம் என்று  உணர்ந்தும், பாற்கடலில் பள்ளி கொண்டவன் வடிவம் மேக வடிவமாக உணர்ந்தும், போற்றத் தக்கதான கணபதியினை அகக்கண்ணில் கண்டுவிட்டால் இந்த உடலில் உயிருடன் கலந்து மேலே குறிப்பிட்ட ஞானம் கிட்டும்.

விளக்க உரை

  • அகத்தியர் புலத்தியருக்கு உரைத்தது.
  • உமையும், கணபதியும் சக்தியின் வடிவங்கள், ஆதார சக்கரங்களில் மூலாதாரத்தில் கணபதியும், மணிபூரகத்தில் திருமாலும், ஆஞ்ஞையில் சதாசிவமும் வீற்றிருப்பது அறியத் தக்கது.
  • ஒண்ணுதல் – இயலுதல், தக்கதாதல், கூடுதல், ஒளியுடைய நெற்றி

சித்தர் பாடல் என்பதாலும் மனித பிறப்பு சிறுமை உடையது என்பதாலும் பிழை ஏற்பட்டு இருக்கலாம். பிழை எனில் பிறப்பு சார்ந்தது, நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 24 (2020)


பாடல்

கூறுகிறேன் சதாசிவத்தி லிதழ்தான் ரண்டு
கொடியதொரு பரவெளி லிதழ்தானொன்று
தேறுகிறே னைம்பத்தோ ரிதழுமாச்சு
ஆறிதழாய்ப் பிறக்கின்ற கலைநான்கிற்கே
யரியமணி பூரகமா தாரமாச்சு
வேறுமினி நினையாம லாதாரத்தின்
விஞ்சையடா வைம்பத்தொன் றறிந்துகொள்ளே

அகத்தியர் யோக ஞானம் 500

கருத்துமுருகப் பெருமான் அகத்தியருக்கு ஆதாரங்களை தொட்டுக் காட்டி அது பற்றி உபதேசம் செய்த பாடல்.

பதவுரை

ஆறு இதழ்களாக பிறக்கின்றதும் நான்கு கலைகளை உடையதும் ஆன மணிபூரகம் எனும் இந்தத் தலமானது தவம் செய்ய முடியாதவர்களால் அடையப்பட முடியாததால் கொடியதாக இருக்கும் ஆகாசம் எனும் பரவெளியில் ஓர் இதழ் கொண்டும் சதாசிவ ரூபமாய் தோன்றும் போது இரு இதழ்களாக கொண்டும் முன்னேற்றம் அடைந்து ஐம்பத்தி ஓர் இதழுமாக ஆனது; வேறு எது பற்றியும் இனி நினையாமல் இந்த ஆதாரதத்திற்கு உரித்தான வித்தையினைத் தருவதாகிய ஐம்பத்தி ஓரு எழுத்துக்களைப் பற்றி அறிந்து கொள்வாயாக.

விளக்க உரை

  • பரவெளி – பரமன் உறையும் ஞானாகாசம், கடவுள்
  • விஞ்சை – கல்வி, ஞானம், வித்தை, வித்யா என்ற வடசொல், தெரு
  • தேறுதல் – ஆறுதல், முன்னேற்றம்
  • தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
    நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம் ||  செளந்தர்யலஹரி

அம்மா! என்னுடைய மணிபூரக சக்ரத்தில் சதாசிவ தத்துவத்தை மேகமாகவும், மூன்று உலகங்களையும் குளிரச் செய்பவளாகவும் உன்னை அதில் தோன்றும் மின்னல் கொடியாகவும் தியானித்து நமஸ்கரிக்கிறேன் எனும் பாடல் கொண்டு ஒப்பு நோக்கி இதன் பெருமையினை அறியலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 10 (2020)


பாடல்

செய்யப்பா யிப்படியே பூஜைகொண்டு
திறமாகச் செய்யவல்லோ பலத்தைக்கேளு
மெய்யப்பா அவனுடைய பிதிர்களெல்லாம்
மிகக்கோடி நரகசென்ம மல்லவல்ல
பொய்யப்பா செல்லவில்லை தேர்ந்துபாரு
புலத்தியனே உந்தனுக்க்குக் கருவைச்சொன்னேன்
வையப்பா பூஜையிலே என்னைவைத்து
மவுனமாய் சிவனைவைத்து நோக்குநீயே

அகஸ்தியர் சிவலிங்க பூஜா விதி

கருத்து – சிவபூஜை முறைகளைக் கூறி, அதை செய்வதால் அவர்கள் முன்னோர்கள் நரக ஜன்மத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

இவ்வாறு உரைத்த படி திறமையாக சிவ பூஜை செய்வதன்  பலன்களைக் கேட்பாயாக; கோடி ஜன்மங்களாக நரக ஜன்மத்தில் அழுந்தி இருக்கும் அவனுடைய முன்னோர்கள் இந்த சிவ பூஜை செய்வதால் விலக்கப்படுவார்கள்; இதை பொய்யாக உரைக்கவில்லை; இதை பயிற்சி செய்து பார்ப்பாயாக; புலத்தியனை உந்தனுக்கு இவ்வாறான சிவபூஜை செய்வதன் கருவைச் சொன்னேன்; இந்த பூஜை முறையில் என்னை வைத்து சிவனைவைத்து மௌனமாக அந்த சிவத்தை நோக்குவாயாக.

விளக்க உரை

  • திறம் – திறமை, புலமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 27 (2020)


பாடல்

சொல்லன்றிப் பொருளு மன்றிச் சூழ்ந்ததோ ருருவமன்றி
அல்லன்றிப் பகலு மன்றி அகண்டபூ ரணமதாகி
நல்லின்பச் சிவமதாகி நாட்டிரண் டற்று நிற்போர்
செல்லுநற் சிந்தை யோராஞ் சித்தராய் வாழுவாரே

முதுமொழி ஞானம் – அகத்தியர்

கருத்து – இருமைகளை விலக்கி, தியான நிலையில் சித்ததன்மையுடன் வாழ்பவர்களைப் பற்றி கூறும் பாடல்.

பதவுரை

சொல்லக் கூடிய சொல்லாகவும், அதன் பொருளாகவும் இன்றி சூழ்ந்திருக்கும் உருவமாகவும் இன்றி, உலக வாழ்வின் அல்லல் ஏதுவுமின்றி, ஒளியினால் ஏற்படுவதாகிய பகல் ஏதுவும் இன்றி அகண்ட பூரணமாகி , நல் இன்பத்தினை தருவதாகிய சிவமாகி  அதை நாடி இரு வினைகளை ஆகிய நல் வினை, தீவினை ஆகியவற்றை அழித்து நிற்பவர்களது சிந்தை எப்பொழுதும் நல்வழியில் சென்று சித்தராய் வாழ்வார்கள்.

விளக்க உரை

  • உருவமன்றி, அல்லன்றி , பகலன்றி – அருவமன்றி, இன்பமன்றி, இரவின்றி எனும் இருமைகள் மறை பொருள்கள். இருமைகள் விலகி சித்த தன்மையுடன் வாழ்வர் என்பது மறை பொருள்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பேணுதல்


வார்த்தை : பேணுதல்
பொருள்

  • போற்றுதல்
  • உபசரித்தல்
  • ஒத்தல்
  • மதித்தல்
  • விரும்புதல்
  • பாதுகாத்தல்
  • வழிபடுதல்
  • பொருட்படுத்துதல்
  • ஓம்புதல்
  • அலங்கரித்தல்
  • கருதுதல்
  • குறித்தல்
  • உட்கொள்ளுதல்
  • அறிதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

காணலாம் அவருடைய மூலங்கேளு
கனகரத்தின மானசிறு குழந்தைபோலத்
தோணலாம் புருவநடுக் கமலந்தன்னிற்
சுகமாகச் சொரூபநிலை கண்டாயானால்
*பேணலாம்* அவர்பதத்தைத் தியானஞ்செய்து
பெருமையுடன் மானதமாம் பூசைசெய்தால்
பூணலாஞ் சகலவரங் கைக்குள்ளாகும்
பொற்கமல வைரவனைத் தியானம்பண்ணே

அகத்தியர் சௌமியசாகரம் – வைரவத்தியானம்

இப்பொழுது அவருடைய மூலத்தை கேட்பாயாக. தங்கத்தில் பதிக்கப்பட்ட ரத்தினம் எவ்வாறு இருக்குமே அது போல சிறு குழந்தை போலத் தோன்றுவார். இரு புருவங்களுக்கு இடையில் இருக்கும் நெற்றிக் கண்ணில் சுகமாக அவருடைய சொருப நிலையை அறியலாம். அவருடைய திருவடியை அகவழிபாட்டின்படி மானச தியானம் செய்தால் சகல வரங்களும் கைவல்யமாகும். இவ்வாறு தங்க தாமரை போன்ற பாதங்களை உடைய வைரவனை தியானம் செய்வாயாக.

துக்கடா
வல்லெழுத்து மிகா இடங்கள்
அவை, எவை, இவை, யாவை என்னும் சொற்களின் பின்
அவை பெரியன
யாவை போயின

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 20 (2020)


பாடல்

பண்ணப்பா தியானமது குருத்தியானம்
     பரமகுரு சீர்பாதந் தியானங் கேளு
உண்ணப்பா கண்ணான மூலந் தன்னில்
     முத்தி கொண்ட அக்கினியாஞ் சுவாலை தன்னை
நண்ணப்பா வாசியினால் நன்றாயூதி
     நடுமனையைப் பிடித்தேறி நாட்டமாக
வின்ணப்பா கேசரியாம் புருவ மையம்
     மேன்மை பெறத் தானிறுத்தி வசிவசி என்னே

அகஸ்தியர் சௌமிய சாகரம் – அகஸ்தியர்

கருத்து – மூலாதாரத்தில் இருந்து சுழிமுனை வழியே அண்ணாக்கு மேல் நின்று தியானம் செய்யும் முறையை கூறும் பாடல்.

பதவுரை

ஆசாரியர்களுக்கு எல்லாம் ஆசாரியனாகிய பரமகுருவின் பாதத்தினை தியானம் செய்யும் முறை ஆகிய குருத் தியானம் என்பதனை  கேட்டுச் செய்வாயாக; ஊசித்துளை அளவுள்ள மூலாதாரத்தில் இருந்து முக்தியினை தரும் அக்னி சுவாலைப் போன்றதாகிய சுவாலையினை வாசியினால் பெரிதாக்கி  சுழுமுனை வழியாக விருப்பமுடன் மேலேற்றி  கேசரி எனப்படும் புருவ மத்தியாகிய ஆக்கினைக்கு மேலாகியதும்   மேன்மை உடையதும் ஆகிய சகஸ்ராரத்தின் வாயிலில் நிறுத்தி வசிவசி தியானம் செய்வாயாக.

விளக்க உரை

  • கண் – விலங்குகள் ஒளியின் மூலம், முன்னிருக்கும் உருவத்தைக் காண உதவும் உடல் உறுப்பு, விழி, நயனம், ஊசித் துளை, அறிவு, புண்ணின் (வாய்) துளை, இடம், கணு, மரக்கணு
  • கேசரி – விண்ணில் உலவுபவன்
  • கேசரிமுத்திரையில் அமுததாரணை வழியே அமுதம் பெற்று உண்பவர் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார் என்பது உபதேசம் செய்யப்படுகிறது. யோக முறை என்பதால் குருமூலமாக அறிக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 29 (2020)


பாடல்

கண்டத்தில் நின்றசித் தறிவைப்பாரு
   கண்புருவத் திடைவெளி னொளியைப்பாரு
தண்டுத்த நாசி நுனி வழியேயேறி
   சண்முகமா முத்திரையைத் தாக்கிப்பாரு
அண்டத்தி லொளி தோற்றும் நடுவே நின்று
   அங்குமிங்கு மெங்கி நின்ற அடவைப் பாரு
கண்டத்தின் முனைப்பார்குண் டலியைப்பாரு
   கருவான மூலவா தாரம் பாரே

அகத்தியர்  மெய்ஞானம்

கருத்துஆக்கினையில் காட்சி காணும் அனுபவங்களை விளக்கும் பாடல்.

பதவுரை

எல்லாவற்றுக்கும் ஆதாரமான மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை பதினாறு இதழ்கள் பொருந்திய தாமரை வடிவம் கொண்டதும், புகையின் நிறம் கொண்டதும், மகேசுவரருக்கு இருப்பிடமானதும் ஆன விசுக்தி எனும் கண்டத்தில் நினைவினை நிறுத்தி உற்று கவனிப்பாயா; பின்னர் சூரியன் எனப்படுவதான வலது கண்ணும், சந்திரன் எனப்படுவதான இடது கண்ணும் சந்திக்கும் இடமாகிய ஆக்கினை எனும் புருவ மத்தியில் ஒளியினைக் காண்பாயாக; அவ்வாறு செய்யும் போது அண்டத்தில் ஒளி தோன்றும் அதன் நடுவில் நின்று அங்கும் இங்கும் எங்கும் என நீக்கமற நிறைந்திருக்கும் அழகினைக் காண்பாயாக.

விளக்க உரை

  • அடவு  – வடிவமைப்பு
  • யோக மரபில் விசுக்தி எனப்படும் கண்டம் முக்கியமானது, பிறப்பினை அறிவிப்பதும், அதை நீங்குவதும் கண்டத்தில் இருந்து தொடங்கும். மாயை கண்டத்திற்கு கீழே செயல்படும் என்பதாலே உமையம்மை ஈசனின் கண்டத்தோடு விஷத்தை நிறுத்தினாள் என்பது இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 8 (2020)


பாடல்

ஏறுகின்ற மூலாதா ரத்தில் நின்ற
என் மகனே புலத்தியனே யிசைந்து கேளு
மாறுமிது மிடைபின்னாய் யிரண்டு மாறு
மகாரமது முப்பொருளாய் நின்ற சூட்சம்
வேறு துறை யேதுமில்லை மவுனத் தூட்டு
வேதாந்த சுழிமுனையின் நாட்ட மாகும்
தேறுமப்பா கற்பமது மவுனத் தாலே
ஜெகசால சித்தகறை மவுனந்தானே

அகஸ்தியர் தண்டக சூஸ்திரம் 25

கருத்து – அகத்தியர் புலத்தியருக்கு மௌனம் பற்றி விளக்கி அதில் நிலைபெறுதலைக் குறித்து விளக்கம் அளிக்கும் பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கக் கூடியதான மூலாதாரத்தில் நின்ற எனது மகனாகிய புலத்தியனே உரைக்கக்கூடிய இந்த விஷயங்களை மனம் ஒன்றி கேட்பாயக. மாறி மாறி இருக்கக் கூடியதான பின்னல் போன்றதான இரு நாடிகள் ஆகிய சூரிய நாடி சந்திர நாடி ஆகியவற்றின் வழியே செல்வதாகியதும், ஊமை மூலமானதும், ஜீவாத்மாவை குறிப்பதானதும், ஆறாம் அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை குறிப்பதான மகாரமானது அருவம், உருவம் அருவுருவம் ஆகிய முப்பொருளாய் நின்ற நிலையில் அல்லாமல் வேறு எவ்வகையிலும் இல்லாமல் இருப்பதை மௌனத்தினைக் கொண்டு அறுதியிட்டு கூறப்பட்டதான சுழிமுனையில் விருப்பமுடன் நிற்பாயாக. இவ்வாறான கற்கக்கூடியதான மௌனத்தால்  சித்தத்தில் இருக்கும்  அனைத்துவிதமான குற்றங்களும் நீங்க மௌனம் மட்டும் நிலைபெற்று இருக்கும்.

விளக்க உரை

  • மாறுமிது மிடைபின்னாய் யிரண்டு மாறு மகாரமது முப்பொருளாய் நின்ற சூட்சம் – மகாரத்தினை முதன்மையாகக் கொண்டு அதை நடுவில் வைத்து முன்னும் பின்னும் ஓங்கார எழுத்துக்களால் அடையப்படுபவளாகிய அன்னை எனவும் கொள்ளலாம். ஓங்காரத்தினை உணர்தல் என்றும் கூறலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 1 (2020)


பாடல்

தத்துவந் தொண்ணுற் றாறில் தகவுறு வாயுப் பத்து
மெத்தென நாடி பத்து மெய்யுளே ஆறா தாரம்
சுத்தமாங் கரணம் நான்கும் தொன்றுமண் டலங்கள் மூன்று
மித்தனை நறிய வல்லா ரிறைவரா யிருப்பார் தாமே

அகத்தியர் முதுமொழி ஞானம் – 28

கருத்து – 96 வகையான தத்துவங்கள், தச வாயுக்கள், தச நாடிகள், அந்தக்கரணம், மண்டலங்கள் இவற்றைக்கண்டு அறுக்கவல்லவர்கள் இறை நிலையில் இருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் பாடல்.

பதவுரை

(சைவ சித்தாத்தன்படி விளக்கப்படுவதாகிய) தொண்ணுற்று ஆறு தத்துவங்களையும், அதில் வலிமையும் பெருமையும் உடையதாகிய தச வாயுக்கள் எனும் பத்து வாயுக்களையும், பத்து நாடிக்களையும் கொண்ட உடல்தனில் ஆறு ஆதாரங்களையும், புனிதத்துவம் வாய்ந்ததான அந்தக்கரணங்கள் நான்கையும், அநாதி காலம் தொட்டு இருக்கக்கூடியதான அக்னி, ஞாயிறு மற்றும் சந்திர மண்டலங்கள்  ஆகியவற்றை கண்டு அதனை அறுக்கவல்லவராக இருப்பவர்கள் இறைவனாக ( இறைவனுக்கு நிகரானவராக – சாயுச்சிய நிலையில் ) இருப்பார்கள்.

விளக்க உரை

  • தகவு – தகுதி, பெருமை, உவமை, குணம், அருள், நடுவுநிலை, வலிமை, அறிவு, தெளிவு, கற்பு, நல்லொழுக்கம்
  • ஆன்ம தத்துவங்கள் -24, உடலின் வாசல்கள் -9, தாதுக்கள் -7, மண்டலங்கள் -3, குணங்கள் -3, மலங்கள் -3, வியாதிகள் -3, விகாரங்கள் -8, ஆதாரங்கள் -6, வாயுக்கள் -10, நாடிகள் -10, அவத்தைகள் -5, ஐவுடம்புகள் -5
  • ஆறு சக்கரங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி , ஆக்ஞை
  • வாயுக்கள் 10 – உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று, விழிக்காற்று, இமைக்காற்று, தும்மல்காற்று, கொட்டாவிக்காற்று, வீங்கல்காற்று
  • நாடிகள் 10 – சந்திரநாடி அல்லது பெண்நாடி, சூரியநாடி அல்லது ஆண்நாடி, நடுமூச்சு நாடி, உள்நாக்கு நரம்புநாடி, வலக்கண் நரம்புநாடி, இடக்கண் நரம்புநாடி, வலச்செவி நரம்புநாடி, இடதுசெவி நரம்புநாடி,
  • கருவாய் நரம்புநாடி, மலவாய் நரம்புநாடி
  • அந்தக்கரணங்கள் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 23 (2020)


பாடல்

வடிவமாக இருப்பதுவே சந்தோஷமாகும்
வரிசையுடன் ஆகம புராணந்தன்னை
பதிவாக விட்டுவிட நின்றுகொண்டு
பத்தியுடன் வேதாந்த பொருளென்றெண்ணி
முடிவாக அத்திவுரித் தடிமேல் நின்று
முன்பின்னாயாகுகின்ற முறையாதென்று
அடியார்கள் சொல்லுகிற கருவைக் கேளு
அவர்சொல்லும் பூரணமு மறிந்துபாரே

அகத்தியர் சௌமியசாகரரம்

கருத்து – அடியார்களை அணுகி அவர்கள் இடத்தில் இருந்து பூரணத்துவத்தை பெற வேண்டும் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

உண்மையான சந்தோசம் என்பது இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனத்துடன் இருக்கும் வடிவமே சந்தோஷமாகும்; சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஆகமம், அறுபத்துநாலு கலைகளுள் ஒன்றானதும், பழமையுடன் கூடியதான கதையைக் கூறுவதும் ஆன புராணம் ஆகியவற்றை  செய்திகள் என்று எண்ணாமல்  உண்மைத் தன்மைகளை பக்தியுடன் வேதத்தின் முடிவுகளாகிய வேதாந்தம் என்று எண்ணி, அனைத்தையும் முடிவாக அறிந்தவர்களானவர்களும், சாம்பல் எனப்படும் திருநீற்றினை மேனி முழுவதும் பூசி,  காக்கும் திருவடிகள் மேல் மனம் வைத்தவர்களும், மூச்சுக் காற்றினை முறையாக அறிந்து அதன்படி நிற்பவர்களுமான அடியவர்களாகிய கருத்தினை கேட்பாயாக; அவர்கள் உரைக்கக் கூடியதான பூரணத்துவம் என்பது என  அறிந்து பார்ப்பாயாக என அகத்தியர் புலத்தியருக்கு உரைக்கிறார்.

விளக்க உரை

  • புராணம் – பழமை, பழங்கதை, அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால்இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம்,மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை
  • அத்திவுரித்து அடிமீது நின்று – அத்தி மரம், யானை என்று இருபொருள் பெறப்படும். அத்தி உரித்து என்பது வேழ முகத்தானுக்கு உரிய யானை குறிக்கும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை எழுப்பி அங்கு பிராணனை நிறுத்தி அதை மேலே ஏற்றுவது என்று பொருள்; பிராணன் எனும் குண்டலினியை  அது இருக்கும் இடமான மூலாதாரத்திலிருந்து எழுப்பி பின் நிலையான இடமான சகஸ்ராரத்துக்கு மாற்றுவது. குருமுகமாக அறியப்படவேண்டிய ரகசியம் இது.
  • அடியார் – அடியை உடையவர்கள், அதாவது மூலாதாரத்தை அறிந்தவர்கள் அடியவர்கள்.  அவர்களது விளக்கமே உண்மையான விளக்கமாகும் என்றும் பொருள் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 9 (2020)


பாடல்

நெஞ்சுளே நினைவு தோன்றும் நினைவுகளே அறிவு தோன்றும்
மிஞ்சிய அறிவு தானே மெய்பொரு ளாகி நிற்கும்
பஞ்சுளே படும்பொ றிப்போல் பரந்துளே துரிய மாகும்
அஞ்சிலே துரிய மாகி யதனுறே யாதியாமே

முதுமொழி ஞானம் –  – அகத்தியர்

கருத்து – ஆதியானது அஞ்செழுத்தினில் பரவி இருத்தலையும், மெய்ஞான நிலையில் அதை அறிய முடியும் என்பதையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

ஆதியானது பஞ்சினில் இருக்கும் அனல் போல் பரவி அஞ்செழுத்தில் தன்மயமாய் நிற்கும் உயர்நிலையை ஆகிய துரிய நிலையில் நிற்கும்;  கற்று அறிந்ததைக் கொண்டு நெஞ்சத்தில் ஆதி பற்றிய எண்ணங்கள் முதலில் தோன்றும்;  அந்த எண்ணங்களைத் தொடர்ந்து  மெய்யறிவு பற்றிய ஞானம் தோன்றும்; அவ்வாறான அந்த நிலையில் அறிவு எனும் பேரறிவு தானே மெய்ப் பொருளாகிவிடும்.

விளக்க உரை

  • துரியம் – நான்காம் அவத்தை, யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை, பொதியெருது, சுமத்தல்
  • பஞ்சுளே படும்பொ றிப்போல் – பஞ்சினில் தீ மறைந்திருக்கும், குவிஆடி மூலம் குவிக்கப்படும் போது அந்தப் பஞ்சானது பற்றிக் கொள்ளும். அத்தன்மை ஒத்து

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 2 (2020)


பாடல்

ஆசானை அடுக்கிற விதம்
காரப்பா இந்நூலைத் திருந்தோர் பாதம்
காரடா வருடமது பனிரெண்டாண்டு
சீரப்பா பணிவிடைகள் எல்லாம் செய்து
சிவசிவா கேட்டதன்ம மெல்லாம் ஈய்ந்து
சாரப்பா நூல் எனக்குத் தாரு மென்று
சற்றும் நீ கேளாதே சும்மா நில்லு
பேரப்பா அவர் மனது கனிந்து தென்றால்
பேசாமல் நூல் கொடுத்து அருள் ஈவாரே

சித்தர் பாடல்கள் –  அகஸ்தியர் மெய்ஞானம்

கருத்துசீடனின் ஆன்மீக நிலை குரு அறிவார் என்பதால் சீடன் தெரிவிக்காமலே குரு கற்றுத் தருவார் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஆசானை அடுத்து இருக்கின்ற விதத்தினை உரைக்கின்றேன்; சீடனானவன், மெய் ஞானத்தையும் மற்றும் அனைத்து விஷயங்களையும் போதிக்கின்ற உண்மையான ஆசானைச் சேர்ந்து அவருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சேவை புரியவேண்டும். ஆசான் கேட்கின்ற அனைத்தையும் அவருக்கு அளித்து அவர் மனம் குளிரச் செய்யவேண்டும்; அவர் விரும்புகின்ற தனம் எல்லாம் ஈந்தாலும், அவரிடம் கற்றுத் தருவதைப்பற்றி குறிப்பிட்டு இதனை எனக்கு கற்றுத் தரவேண்டும் என்று கேட்கக் கூடாது; சீடனின் செயல்களில் மனம் குளிரும் ஆசானானவர் தேவையான அறிவையும் தந்து தனது அருளையும் ஈவார் என்று அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.

விளக்க உரை

  • குரு இறைவுணர்வின் வடிகாலாக இருப்பதாலும், உடல் அளவில் கர்ம யோகத்தின்படி பக்குவப்படுத்தியும், மனதளவில் விருப்பு வெறுப்புகளை விலக்கச் செய்தும் வழிகாட்டுவதால் சீடனின் வாழ்வுக்கான வரங்களில் முக்கியமானது அவருடன் தங்கி இருந்து பெறும் அனுபவமே முதன்மையானது
  • நூல் – மெய்ஞான அனுபவங்கள்
  • குரு – வழிகாட்டுபவர்; ஆசான் – வழி வகுத்து அந்த நெறிபடி நின்று உதாரணமாக வாழ்ந்து காட்டுபவர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 19 (2019)


பாடல்

விளம்புகிறேன் பூரணந்தா னெதுவென்றாக்கால்
வெட்டவெளி சுழினையுச்சி வேறேயில்லை
தளம்பாதே வேறெண்ணாதே நீயும்
சகல சித்தும் கைவசமா யாடும்பீடம்
முளங்காதே பூரணத்தைக் கண்டோமென்று
முச்சுடரின் சோதிதன்னை மொழிந்தாற்தோஷம்
பழங்காறு மும்மூலந் தன்னைத்தானும்
பார் மகனே சித்தர்கள்தான் பகரார்காணே

அகஸ்தியர் ஞான சைதன்யம்

*கருத்து – வெட்டவெளி எனப்படும் சுழுமுனை உச்சியினை கண்டவர்களின் இயல்பினை உரைக்கும் பாடல்.*

பதவுரை

மனம் கலங்கி வேறு எந்த ஒன்றை பற்றியும் எண்ணாமல் சகலவிதமான சித்துகளும் கைவசம் ஆடும் பீடம் ஆனதும், முழுவதுமான மகிழ்ச்சியினை தருவதும் ஆன வெட்டவெளி எனப்படும் சுழுமுனை உச்சியினை தவிர ஏதுவும் இல்லை; இவ்வாறான பூரணத்தை கண்டுவிட்டதை எவரிடத்திலும் உரையாதே; மூன்று சுடர் போன்றதான சோதிதன்னை கண்டதை உரைத்தால் அது தோஷமாகும்; மிகப் பழையதான காலத்தில் இருந்து தொடரும் மூலம் தன்னை கண்டவர்கள் சித்தர்கள் ஆயினும் அவர்கள் கண்டதைப் பற்றி எதையும் பகரமாட்டார்கள்

விளக்க உரை

  • தளும்புதல் – மனங்கலங்குதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 30 (2019)


பாடல்

பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து
பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே

அகத்தியர் ஞானம்

கருத்து – அண்ணாக்கு தனில் நின்று சிவ ரூபம் காணுதலைப் பற்றிக் கூறும் பாடல்.

பதவுரை

உதய காலத்தில் எழுந்திருந்து மனதில் பதற்றம் கொண்டு அலையவிடாமல் சூரிய சந்திர நாடிகள் சந்தித்து ஒன்று கூடும் இடமான சுழுமுனையில் மனதை வைத்து அண்ட உச்சி, ஜோதி தரிசனம் என்று அழைக்கப்படும் அண்ணாக்கு தனில் நின்று மனதின் இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்தினால் மனமானது சுழுமுனைக்குள் அடங்கும். எட்டு என்பதைக் குறிக்கக்கூடியதான சிவ நிலையான யோகாக்கினி நிலையில் நின்று கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்கு உள்ளே இருந்து அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாத புலனையே உண்டாக்கும் மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக மாறுபட்டு செயல்படுகிற அந்தக்கரணம் சிதறாமல் அருள்வெளிப்படுத்த காரணமாக இருக்கும் இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்க கூடிய சிவத்துடன் கூடி பதினாறு கலைகளையுடைய ஜோதிமயமானதும், ஆனந்தமயம் ஆனதும் ஆன சக்தி ரூபம் அடையலாம்.

விளக்க உரை

  • நான்கும் என்பதை வித்யா கலையான கர்மா, ஞானம், பக்தி, பிரபக்தி எனும் மகாவிஷ்ணு நிலையை என்று பொருள் கூறுபவர்களும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 9 (2019)


பாடல்

ஆச்சப்பா சிவயோகி ஆவதென்றால்
     அடங்கி நின்ற பஞ்சகர்த்தாள் அஞ்சு பேரை
பேச்சப்பா பேச்சறிந்து கண்டு கொண்டு
     பெருமையினால் சிவயோக முத்தனாச்சு
மூச்சப்பா தானறிந்து தன்னைப் பார்த்து
     முனையான சுழினையில் வாசி பூட்டி
காச்சப்பா அக்கினி கொண்டாறாதாரங்
     கசடகலக் காச்சிவிடு கனகமாமே

அகத்தியர் சௌமியசாகரம்

கருத்து –  சிவயோகி ஆவது எவ்வாறு  என்பதை குறிக்கும் பாடல்

பதவுரை

அக்னி எனப்படுவதான குண்டலினியில் தொடங்கி ஆறு உணர்வு நிலைகளைக் குறிப்பதானதும், தத்துவங்கள் எனப்படுவதும், மலங்கள் எனப்படுவதும் ஆன ஆறு ஆதாரங்களையும் குற்றம் இல்லாமல் கடக்க வேண்டும்;  பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் மற்றும் சதாசிவன் ஆகிய பஞ்ச கர்த்தாக்களையும் அவர்களுக்கு உரித்தான  மூலமான நாதத்தை பிராணன் என்றும் வாசி என்றும் உரைக்கப்படுவதான மூச்சின் வழி அறிந்து அதன் மூலம் தன்னையும் அறிந்து அதை சுழிமுனை எனப்படும் ஆக்ஞையில் பூட்ட வேண்டும்; அவ்வாறு செய்யும் பொழுது உடல் கனகம் எனப்படுவதான பொன் போன்ற  மேனியாகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 26 (2019)


பாடல்

நாட்டமென்ற பூரணத்தைக் காண வென்றால்
     நன்மையுள்ள சற்குருவாற் காண வேண்டும்
ஓட்டமென்ற வோட்டமெல்லாம் வோடா தேநீ
     ஒருமனதாய் சுழிமுனையிலு கந்து நில்லு
ஆட்டமென்ற திருநடன மங்கே யுண்டு
     ஐம்பத்தோ ரெழுத்துமுத லெல்லா முண்டு
பாட்டைமிக பதத்தினா லென்ன வுண்டு
     பத்திமுத்தி வைராக்கிய மாகப் பாரே

அகஸ்தியர் சௌமிய சாகரம்

கருத்து –  திட சித்தமுடன் வைராக்கியம் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தினால் திருநடனம் காணலாம் என்பதை கூறும் பாடல்

பதவுரை

சிறந்ததான நோக்கம் கொண்டு அதில் விருப்பம் கொண்டு பூரணமாகிய பரம்பொருளைக் காணவேண்டும் என்றால் நல்ல குருவின் துணை வேண்டும். அவ்வாறு இல்லாமல் எண்ணங்களை ஓட விடதே; அவ்வாறு அலைவதான மனதை விடுத்து ஒரு நிலைப்படுத்தி சுழிமுனையில் நிறுத்தி நீ நில்லு; அவ்வாறு நிற்பாயானால் சுழிமுனையில் திருநடனத்தை காணலாம்; மேலும் ஐம்பத்தொரு எழுத்துக்களையும் அதன் பொருளையும் பக்தியுடன் வைராக்கியமாக இருந்து பரம் பொருளைக் காணலாம்.

விளக்க உரை

  • ஐம்பத்தொரு எழுத்துக்கள் – சைவத்தின்படி சிதம்பர சக்கரம் எனப்படுவதும் திருவம்பலச்சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது எனவும் நமசிவாய எனும் ஐந்தெழுத்தாகவும், அதனுடன் சேர்ந்து அ உ ம என்று எட்டெழுத்தாகவும், அதுவே ஐம்பத்தோர் எண்களாய் விரிந்து இந்த உடலில் உள்ள உயிர் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டு இருக்கின்றன.
  • யோக முறையில் (சாக்த வழிபாட்டின்படி எனவும் கொள்ளலாம்) பிரணாயாமத்தின் படி பத்து வகை வாயுக்களில் பிராணன் என்னும் மூச்சுக் காற்று வெளியே போகாதவாறு கட்டும் போது உடம்பிலுள்ள ஆறு ஆதாரங்களில் குண்டலி பொருந்தும் போது ஏற்படும் அதிர்வுகளை ஒலியாகக் கொண்டு, ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றில் முறையே 4 (சப்தங்கள் – வ ஸ ச ஷ), 6 (சப்தங்கள் – ஸ, ஹ, ம், ய, ர, ல) , 10 (சப்தங்கள் – டட, ணத, தத, தந, பப), 12(சப்தங்கள் – சங, கக, கக, டட, ஞஜ, ஜச), 16 (சப்தங்கள் -லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ), 3(சப்தங்கள் – ஹ, ள, இவற்றுடம் சேர்ந்த ஓங்காரமாக இருக்கலாம்) என 51 ஒலி அதிர்வுகள் உண்டாகும் எனவும் குறிப்பிடப்படும்.  ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே

         எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி உணர்க

  •  நாட்டம் – விருப்பம், நோக்கம், நிலைநிறுத்துகை, ஆராய்ச்சி, சந்தேகம், கண், பார்வை, சஞ்சாரம், சோதிட நூல், வாள், நாட்டுத்தலைமை

சித்தர் பாடல் என்பதாலும், குரு முகமாக உபதேசம் கொண்டே உணரப்படவேண்டும் என்பதாலும் பதவுரையில் பிழைகள் இருக்கலாம். குறை எனில் மானிட பிறப்பு சார்ந்தது; நிறை எனில் குருவருள்

சமூக ஊடகங்கள்