இந்த உலகினில் துன்பங்களைத் தரும் செல்வத்தினாலும், பொருள் ஈட்டி அதை யாரும் அறியாமல் மறைத்து வைக்க பயன்பாடு உடையதும், தருக்கநூல்களில் கூறப்படும் பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் ஆகிய மூலப்பொருள்கள் ஆன இந்த உடலாலும் எந்த விதத்திலும் பயன் இல்லை. இவ்வாறான நிலை இல்லா பொருள்களான செல்வமும், உடலும் நீங்கும் போது ‘உடைந்த முனை உடைய ஊசியும்’ பயன் தராது. (ஆதலினால்) வலிமையான தோள்களை உடைய அண்ணாமலையார் மலர் பாதத்தை எப்பொழுதும் போற்றி புகழ்ந்து கொண்டிருப்பாய் நெஞ்சமே.
விளக்கஉரை
திரவியம் என்பதற்கு பொருள், சொத்து, பொன் எனும் பொருள்கள் இருந்தாலும், ‘தீதுற்ற செல்வமென்’ என முன் வரியில் இருப்பதாலும் திரவியத்திற்கு பொருள் எனும் கருத்து விலக்கப்பட்டுள் உடல் எனும் கருத்தில் பொருள் விளக்கப்பட்டுள்ளது.
27-Jul-2018 – ஆடி – உத்திராடம் – பட்டினத்தார் குரு பூஜை
உலகத்தார்க்கு பொருந்தாத செய்கைகளாகிய சாம்பல் பூசிக் கொள்ளுதல், எலும்பும் தலைமாலையும் அணிதல், தலை ஓட்டாகிய மண்டை ஓட்டில் இரத்தல், நஞ்சை உண்ணுதல், பாம்பினை அணிதல், சடைதரித்துப் பெண்ணொரு பாகன் ஆதல் போன்றனவும் கொண்டு பொலியக் கொண்டவராய், போற்றுதலாகிய சொற்களைச் சொல்லி விண்ணோர்கள் புகழுமாறு விளங்குபவராய், தம்மிடத்தில் அன்பு கொண்ட அன்பருக்கு அருளும் தன்மை உடையவராய், நிலனொடு நீராய் (ஏனைய பூதங்களாகவும் -அவையாகி நிற்றல் ) நிற்பவராய், புதுமையாகவும், வேறிடங்களில் காணப்படாது நிறைந்து நின்று மருட்கையை விளைத்த கூட்டம் எனப்படும் பூதவேதாளங்கள் முதலிய பதினெண் கணங்களுமாகவும். உமையும் விநாயகனும் கொண்டவராய், உடல் நோயும், உயிர் நோயும் ஆகிய பிணிதீர்க்கும் மருந்தின் தன்மை கொண்டவராய் வாய்மூர் அடிகளாகிய சிவபெருமானை நான் கண்டேன்.
உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி அலகிலா உயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத் தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே நிலவுசீர் அமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும்
திருநெறி 2 – சிவஞான சித்தியார்
பதவுரை
புவனத்தினை தோற்றுவிக்கும் போது அந்த உலகங்கள் எல்லாமாகியும், உலகில் இருந்து வேறுபட்டவனாகவும், உடலில் உயிர் சேரும் போது ஓங்கிய அறிவொளி எனப்படும் சக்திரூபமாக பிரகாசமாகவும், அவன் விளையாட்டை பற்றி அலகிலா உயிர்களானது, கன்மத்தினை பற்றி செலுத்தி, அந்த உயிர்களனது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழிலினை செய்யும் போது அவ்வைந்தொழிலை நடத்தும் பதிரூபமாகியும், ஐந்தொழிலின் தன்மைக்கு ஏற்ப வேறு வேறு தொழிலை செய்பவனாய், அதன் பலன்கள் தன்னை அடையாதவனாய், எவ்விடத்திலும் தானே மலம் அத்தன்மைகளின் வேறாய் அவற்றோடு அதன் தன்மையதாய், எவ்விடத்தும் தானே இயல்பான சுயம்பிரகாசரூபம் உடையவனாய் நிற்பன்.
விளக்கஉரை
எல்லாவற்றிலும் தோய்ந்த போதும் தானே சுயம் பிரகாசமாய் நிற்கும் தன்னுண்மையினை சிவமெனவும், ‘உலகெலாமாகி வேறாயுடனுமாய்’ இவ்வாறு உயிர்களின் வழி நிற்கும் தன்மையில் சத்தியெனவும் சிவாகம் நூல்கள் கூறும்.
தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்ந்தற்றால் – தன்னை வியவாமை அன்றோ வியப்பாவது! இன்பம் நயவாமை அன்றோ நலம்
நீதிநெறி விளக்கம் – குமரகுருபரர்
பதவுரை
மற்றவர்கள் மூலமாக பிறர் வியக்கும்படித் தன்னை புகழ்ந்து பேசும்படி செய்யும் செயலானது, எரியும் நெருப்பில் தண்ணீரை ஊற்றி வளர்ப்பது போன்றது. தன்னைத் தான் வியக்காமல் இருப்பதுதான் வியப்புக்கு உரித்தான ஒன்றாகும். எனவே அவ்வாறான் புகழ் இன்பத்தைத் விரும்பிச் செல்லாமைதான் நலம் பயக்கும்.
விளக்கஉரை
தானே தன் புகழைக் கூறச் செய்தல் குற்றம் என்று கூறும் பாடல்.
திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அமர்ந்து அருளும் பெருமானே! தேவரும், ரிஷிகளும், முனிவர்களும் மற்றவர்களும் தங்கள் உடலின்மேல் புற்று வளரப் பெற்றும், மரம் வளரப் பெற்றும், நீரும் காற்றுமே உணவாக கொண்டு மெலிந்து வாழ்ந்தாலும் அவருள் ஒருவரும் உன் தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காணமுடியாத அரசனே! அடியேனை ஒரு சொல் சொல்லி என்னை அகப்படுத்தி ஆட்கொண்டாய். இக்கருணையை உணராமல் நெஞ்சம் துடிக்கமாட்டாமல், மனம் மிகவும் உருகமாட்டாமல், உன்னிடம் அன்பு செய்யமாட்டாமல் இன்னும் உலகில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.
விளக்கஉரை
ஓர் வார்த்தை – திருவைந்தெழுத்து மந்திரம். அகச் சான்றாய் ‘நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்’ எனும் திருவேசறவு பாடல் மூலம் திருவைந்தெழுத்து மந்திரம் பெற்றதை அறியலாம்.
கருத்து உணர்த்தாதமுன்னர் பதைத்தலும், உருகலும் போன்றவை இல்லாமை குற்றம் அல்ல; அவ்வாறு உணர்த்திய பின்னரும், அவை இல்லாது இருக்கின்றேன்` என இரங்கியவாறு.
பரியா உடல் – அன்பிற்கு உரிய மெய்ப்பாடுகள் இல்லா உடல்
பல்வேறு அறிஞர்கள் கருத்துக்கள் பகிர, சொல் பற்றி அறிய இருக்கும் மிகச் சிறந்த பக்கங்கள்/ தளம் இவற்றில் இது முக்கியமானது.
—————————————————————————————————-
Sundar Gopalakrishnan ‘தெய்வம்’ என்ற சொல் எந்த நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது?
மணி மணிவண்ணன் தமிழில் அப்படிப்பட்ட ஆய்வுக்கு இடமில்லை. ஆவணங்களின் வழியேதான் அப்படிப்பட்ட காலக்கணக்கைச் செய்ய முடியும். ஆனால், தமிழில் எல்லாச் சொற்களுமே மொழி பிறந்த காலத்திலிருந்து அடிப்படை ஒலிகளிலிருந்து ஏரணத்துடன் பிறந்தன என்ற நம்பிக்கை உள்ளவர்கள் சொற்கள் தோன்றி வழக்கிழக்கும் என்பதை ஏற்க மறுப்பார்கள்.
Sundar Gopalakrishnan மிக்க நன்றி. எனக்கான பதிலை நீங்கள் உரைத்து விட்டீர்கள். காரணம் பக்தி இலக்கியம் தொட்டு இச் சொல் பயன்பாட்டில் இருக்கிறது எனில் அதன் காலத்தை எளிதில் அறியலாம் என்பதே நோக்கம். சித்தர் இலக்கியம் எனில் கால நிர்ணயம் செய்ய இயலாது போன்ற முடிவுக்கு வரவே இக்கேள்வி
Chokan G சங்க காலங்களிலேயே வழங்கி வந்திருக்கிறது. தெய்வந் தொழாஅள்….என்பது குறள்வரி.
Sundar Gopalakrishnan சங்க காலம் என்பது திருவள்ளுவர் காலத்திற்கு முற்பட்டது என்பது என் துணிபு. ஆகவே இது திருக்குறளுக்கு முன்பு இச் சொல் பயன்பாட்டில் இருந்திருக்கிறதா என்பதை கூறுங்கள்.
Sivakumar தீ – வழிபாடு – Theo – Greek , Dev – Stk, என்பது பாவாணர் கூற்று
Chokan G அருமையான எடுத்துக்காட்டு ஆனால் நண்பா் காலத்தையல்லவா சொல்ல கேட்கிறார்.
Badri Seshadri இணையத்தில் சங்க இலக்கியத் தரவகம் (corpus) ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்து பல ஆய்வாளர்கள் சொந்தத்தில் இதனை வைத்திருக்கிறார்கள். தனித்தனியாகத் தேடவேண்டும். நற்றிணையில் மட்டும் வரும் “தெய்வம்” கீழே:
நற்றிணை 9:1-2, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு
மணி மணிவண்ணன் Sangam Concordance தளத்தில் தேடலாம்.
Badri Seshadri அகநானூறு 110, போந்தைப் பசலையார்
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
அகநானூறு 166, இடையன் நெடுங்கீரனார்
உயர் பலி பெறூஉம் உருகெழு தெய்வம்
அகநானூறு 309, கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார்
அம்பு சேண்படுத்து வன்புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
அகநானூறு 360, மதுரைக் கண்ணத்தனார்
வெருவரு கடுந்திறல் இரு பெரும் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் போல
மணி மணிவண்ணன் http://tamilconcordance.in/
Badri Seshadri நன்றி மணி. மணி சுட்டிய தளத்தில் தேடினால் கிடைத்த தகவல் இது. தொல்காப்பியத்தில் தெய்வ(ம்) என்பது 9 இடங்களில் வருகிறது. எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலுமாகச் சேர்த்து 43 இடங்களில். திருக்குறளில் 6 இடங்களில்.
Chokan G அருமையான எடுத்துக்காட்டு,நமக்கு கிடைத்திருக்கும் இலக்கண இலக்கிய நூல்களில் தொன்மையானது தொல்காப்பியமே.
Raveenthiran Venkatachalam தெய்வம் என்ற சொல்லுக்கு தீண்டி வருத்துவது என்பதே பொருள். தெய்வங்களெல்லாம் ஆயுதங்களைத் தாங்கி இருந்ததால் அப்பெயர் வந்திருக்கலாம். மேலை நாட்டின் old testament ள் கூட கடவும் கோபக்காரராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். தெய் என்ற உரிச்சொல்லுக்கு அழி என்பதே பொருள். தொல்காப்பியர் காலத்திலேயே கடவுள் தீண்டி வருத்தும் என்ற கருத்தாக்கம் இருந்ததை உணரமுடிகிறது.
சுகி உதயகுமார் தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் !
Logan K Nathan சமஸ்கிருத மொழியில் தெய்வ என்பது விதி(Fate), எதிர்பாராத, துரதிர்ஷ்டவசமாக என்பது தான் பிரதான பொருள்.
முருகன் நடராஜன் அறுதியிட்டுக் கூற இயலாது. தொல்லியல் அகழாய்வுகளின் அடிப்படையிலே இன்று சங்க இலக்கியத்தின் காலமானது பொஆமு 5ஆம் நூற்றாண்டு வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் தெய்வம் என்ற சொல்லானது அதிகபட்சமாக பொஆமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்தும் குறைந்தது பொஆமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்தும் வழக்கில் இருந்திருக்கலாம்.
அம்பலத்தில் ஞான நடம் புரிகின்ற பெருமானே; நீ மேலான ஞான நடனத்தைச் செய்கின்ற அருட்பதி ஆகிய இறை தத்துவமான சுத்த தத்துவ நிலை முதல் தத்துவாதீதப் பரவெளி நிலை கடந்து உரைப்பதற்கு இயலாத வெறுவெளி வரையிலான படிகளைக் கடந்து அதற்குரிய படிகள் எல்லாம் ஏறி அடையுமாறு அருள் செய்தாய்; அவ்வாறு அடைந்தப்பின் எனக்கு, ஒளிர்கின்ற கொடிகள் நிறைந்த மணிமாடத்தை யுடைய திருக்கோயிலையும், அவ்வருள் நிலையமாகிய திருக்கோயிலில் தலைவன் நடுவில் இருப்பதை எளியேன் காணச் செய்து, அக்கோயிலில் கோபுர வாயிலில் குற்றமில்லாத அழகிய கதவைத் திறந்து காட்டிப் பின்னர் அதனை மூடும்படி செய்து அருள் செய்தாய்; அதற்கு ஏற்ற தருணம் இதுவாக இருப்பதால் அதனைத் மீண்டும் திறந்து அடியேனுக்கு அருளுதல் வேண்டும்; அவ்வாறு இன்றி தாமதித்தால் நான் அரைக்கணமும் உயிர் தாங்க மாட்டேன்.
விளக்கஉரை
தத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டு அத்தத்துவம் முப்பத்தாறினையும் ஆராய்ந்து கடந்து, சாக்கிராதீதத்தில் யோகக் காட்சி கண்டு தத்துவாதீதப் பரவெளியில் திருவருள் ஞானக் கோயிலைக் கண்டு திருக்கதவம் திறந்து சிவதரிசனம் பெற்று இன்புற்ற திறம் பற்றி கூறியது.
படிகள் எலாம் – படிகளாகிய தத்துவங்கள் – ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என மூன்று வகையாய், பின்னர் இருபத்துநாலும் ஏழும் ஐந்துமாக முப்பத்து ஆறாய் விரிந்து நிற்பதை குறிப்பிடும் வரிகள்
ஏற்றுவித்தீர், அடைவித்தீர் – தமது யோக நெறிக்குத் துணை புரிந்த திருவருளை சிவன் செயலாக உரைத்து அதை உடன் உணர்ந்து உரைக்கும் திறன் பற்றியது
செடிகள் இலாத் திருக்கதவம் – ஞானக் கோயிலுக்கு குற்றங்கள் எனும் கதவுகள் இல்லை என்பதை உரைத்தது. (செடி – குற்றம்)
காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே, ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.
விளக்கஉரை
செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உண்ர்வு கூட இல்லை.
குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.
தினகரர் அக்க ரதம் கெடுத்தார் குரு தேசிகர் (செந்) தி நகரர் அக்கரம் ஆறுடையார் தெய்வ ஆரண (தந்) தி நகரர் அர கர சத்தி இன்றாகில் அத் தேவர் (நண்ப) தி ந கர ரக்கர் அதம் தீர்வர் ஈர்வர் செகமெங்குமே
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
பதவுரை
பன்னிரு மாதமும், சைவர்களால் ‘சிவாதித்யர்கள்’ என அழைக்கப்படும் பன்னிரு கதிர்களின் பெயர்களுடன் விளங்கும் வைகர்த்தன், விவச்சுதன், பகன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாக்ஷி, திருவிக்ரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி ஆகிய சூரியனின் நேத்திரத்தையும், பல்லையும் அழித்த ஈசனுக்கு உபதேசம் செய்த ஞான ஆச்சாரியனும், செந்தூர் பதியில் இருப்பவரும், ஆறு அக்ஷரங்கள் கொண்டு அதன் ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமானதும், வேதங்கள் பூஜித்ததும், சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான வேலாயுதம் இல்லை என்றால் தேவர்களின் சிறந்ததான அமராவதி நகரம் இல்லாமல் போயிருக்கும்;வஞ்சனையை உடைய அசுரர்கள் இறப்பைத் தவிர்த்திருந்து உலகம் முழுவதையும் நிர்மூலமாக்கி இருப்பார்கள்.
இலயித்த தன்னில் இலயித்தாம் மலத்தால் இலயித்தவாறு உளதாக வேண்டும் — இலயித்தது அத்திதியில் என்னின் அழியாது; அவை அழிவது அத்திதியும் ஆதியும் அங்கு
திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்
பதவுரை
ஆன்மாக்களின் பார்வைகளையும் ஒடுக்கி, குருடாக்கி, சஞ்சீதம், பிராரப்தம் மற்றும் ஆகாமியம் ஆகிய மூவினைகளுக்கும், ஆணவம், மாயை மற்றும் கண்மங்களுக்கு உட்பட்டு உலகம் தோன்றி மறைவதாக தோன்றும். நிமித்த காரணமாக நின்று வினைகளைப் பற்றி, மாயா மலங்களை அனுபவித்து வினைகளையும் மலங்களையும் முற்றிலும் இறை அருளால் நசித்து தன்னில் உலகம் இருப்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு, மூவினைகளுக்கு உட்பட்டு, உலகமே ஒடுங்கி அணுவாகி நின்றுஅதன் உருவிலேயே அதன் இயல்பாய் இருக்கின்றது என்னில் கால உணர்வின்றி உலகம் எப்பொழுதும் அழியாது பார்வையில் பட்டு நிற்கும்.
விளக்கஉரை
உலகம் மற்றும் ஆன்மாக்கள் தோன்றி மறையும் இயல்புடையது என்றும் அது சிவனின் அருளினால் அவ்வாறான நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன எனவும், அவனே அனைத்துக்கும் கர்த்தா என்னும் சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் பாடல்.
உலகம் மட்டுமே நிலை பொருள் எனும் நாத்திகவாதிகளின் கருத்தும், இருப்பது, இல்லாது எனும் நிலைகளைத் தாண்டி, இல்லாமலும் இருக்கலாம் என்றும், இல்லாத பொருள் தோன்றாது எனும் அநேகாந்தவாதத்தின் கருத்துக்களும் மறுக்கப்படுகின்றன.
தன் அறிவு, அறியாமை, ஒளி, ஒருள் ஆகியவற்றை தன்னுள்ளம் கொண்டிருப்பதை ஒருவன் உணர, மாயை பற்றி ஒளியே இல்லாத இருள்நிலைதான் தன்னின் மூலம் என்பதையும் உணர்வான். இந்த நிலையில் அனைத்தும் ஒடுங்குவது உண்மையே என்றும் இத்தன்மையோன் உணர்வான். ஆகவே சங்கார காரணாகிய ஒருவனே, உலகம் தோன்றி மறையும் இயல்பானது எனும் ஆணவமலம் நீக்கி இவ்வுலகம் தோன்றுவதற்கும், மீளாவகை சென்று அடைவதற்கும் காரணமாக தனி முதல்வனாகவும், தற்பரனாகவும் இருப்பான் என்பதை விளக்கும்.
(சைவ சித்தாந்தம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், வினைபற்றியவன் உரைப்பதாலும் பொருள் குற்றம் ஏற்பட்டிருக்கலாம். குற்றம் பொருத்தருள வேண்டுகிறேன்.)
பாசம் என்பதாகி உயிர்களை அடிமை செய்யும் பொருள்களானதும் போகப் பொருள்கள் என்பதுமான தளை ஆகிய பாசமாகவும், உயிரானது, உறைவதற்கு உண்டான உடலினைப் பெறும் முன்பு அறிவு, இச்சை, செயல் என்பது எதுவும் இன்றி அறியாமையில் மூழ்கி, பதி போன்ற தோற்றமும் அழிவுமில்லாதது ஆகி பசு போன்றும் தோற்றம் கொண்டு உயர்ந்தவனாகவும், கடவுள் ஆகவும், அன்னியப் பொருளாகவும் ஆகி இருப்பவன்; அவ்வாறான பாச அறிவினையும், பசு அறிவினையும் கூட்டுவித்து அதை பொருந்துமாறு செய்பவன்; அவ்வாறான பாச அறிவினையும், பசு அறிவினையும் பற்றி அவற்றுக்கு எல்லாம் மேலானவனாக இருக்கும் பெரியோனும், ஒளிமயமாய் ஆனவனும் ஆகி சிறப்புகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியவனாக இருக்கும் கணபதியின் பாதங்களை அடைக்கலம் அடைகின்றோம்.
விளக்கஉரை
பதி, பசு மற்றும் பாசம் கொண்டு சைவ சித்தாந்தக் கொள்கைகள் விளக்கப்பெறுகின்றன. எனவே ஈசனும், கணபதியும் வேறு வேறு அல்ல என்பது விளங்கும்.
செங்கயல் எனும் ஒரு மீன்வகையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, மாற்றம் இல்லாத, நிலையான பெரிய தவத்தினால், வேள்வித் தீயினியில் இருந்து தோன்றிய சிங்கமும், மிகப் பெரியதான புலியும், திருமாலின் நிறம் ஒத்த பருத்த பெரிய யானையும் கதறி ஒடும்படி செய்தும், அழியும்படி செய்வதுமான மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின் தோலை உரித்தும், அத்தோலைப் போர்த்தியும் செய்தற்குக் காரணம் யாது?
விளக்கஉரை
‘உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்’ என்பது பற்றிய பாடல்.
தவம் – தாருகாவன முனிவர்களுடையது. அட்ட வீரட்டான செயல்களில் ஒன்றான இவ்வரலாற்றினை வழுவூர் திருத்தல பெருமை கொண்டு அறிக.
போற்றுதலுக்கு உரிய தலைவனே! எலும்புகளால் நெருக்கமாகவும், புலால் மிகுந்து அழுக்கும் ஊறி நிற்பதாயுள்ள சிறப்பில்லாத நடை வீடாகிய இந்த உடம்பு என்னை விடாது பற்றி வருதலால் வருந்தி எனை நலியத் துன்பமடைகின்றேன்; மனம் உடைந்து, நெகிழ்ந்து உருகி, உன்னருள் ஒளியைக் கண்டு நோக்கி, உனது அழகிய மலர் போன்ற திருவடியை பேரின்பம் பெறுவதன் பொருட்டு அடைந்து நிற்க விரும்பினேன்.
விளக்கஉரை
மனம் இளகி உருகுதலே இறைவன் திருவடியை அடைதற்கு உரிய வழி என்பது பற்றிய பாடல்
வீறு இலி – பெருமை இலதாகிய (இழிவை உடைய கூடம்).
நடைக் கூடம் – இயங்குதலை உடைய மாளிகை; வீடு, பெயர்ந்து செல்லாது; ஆனால் இவ்வுடம்பாகிய வீடு, செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து வருவதாதல் இப் பெயர்
சோத்தம் – வணக்கம்.
உள்ளம் உருகுதல், ஒளி நோக்குதல், – அருளைப் பெறுதற்கு உரிய வழி,
வச்ரக் கிளியே நவபீட வாசற் கிளியே அருள் அமையும் மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
பேச்சுத் திறமை, ஐஸ்வரியம், ஆத்ம ஞானம் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் கிளி போன்றவளே, அருளை வழங்கும் அருள்கிளியே, அடியவர்களின் உணர்வுக்கு உணர்வாகவும், அவர்களின் உயிருக்கு உயிராகவும் தோன்றிய கிளியே, நமசிவய எனும் எழுத்துக்களாகி ஆகாயத்தில் விளக்கும் ஒளிவடிவமான பழத்தை த்யானித்து இனிய மொழி பேசும் கிளியே, தன்னுடைய பரிவார தேவதைகளுடன் பரதேவதையாக இருக்கும் சிந்தாமணிக் க்ரகம் எனும் திருக்கோயிலைச் சுற்றி இருக்கும் மணித்வீபம் என்று அழைக்கப்பெறும் தீவாகிய கதம்பவனத்தில் வாழும் சிவசக்தி வடிவமான கிளியே, மாயையை விலக்கை ஞானத்தை அருளும் ஞானக் கிளியே, வேதங்களால் சூழ்ந்த வனம் எனப்படும் மறைவனத்தில் நடனம் ஆடும் கிளியே, சிவக்கிளியே, அடியார்களின் எண்ணங்களில் படர்ந்து அவர்களின் உயிர் செல்லும் வழியில் செல்லும் கிளியே, வேண்டும் வரங்களை வேண்டியவாறு அருளும் நிதிக் கிளியே, பவழக் கிளியே, சிவசக்தி வடிவமாக இறைவனோடு இருக்கும் பதிக்கிளியே, யோகத்தில் ஒன்றாக இருக்கும் வச்சிரம் போன்று இருக்கும் வச்ரக் கிளியே,(நீ) நவ கோணங்களின் பீடத்தின் வாசலில் வீற்றிருந்து அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள் ஆவாய்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
நாககிரி, சங்ககிரி, மங்களகிரி, வேதகிரி என்ற நான்கு மலைகளுக்கு நடுவில் பத்மகிரி மலையில் அமைந்துள்ள திருத்தலம்.
தேவர்களும், அசுரர்களும் திருமாலின் உதவியோடு பாற்கடலைக் கடைந்து இறுதியில் அமுதம் எடுத்தப் பின் பராசர முனிவர் நாராயணனிடமிருந்து சிறிது அமுதத்தைப் பெற்று வரும்போது, வழியில் அசுர்கள் அந்த அமுத்தை அவரிடமிருந்து பறிக்க முற்படுகையில் பவானி கூடுதுறையில் காயத்ரி தீர்த்தம் என்று ஒரு தீர்த்த கட்டத்தில் அமுதம் கொண்ட கலசத்தைப் புதைத்து வைத்துவிட்டதால், அந்த அமுதமே பின்பு காயத்ரி லிங்கம் என்று லிங்க உருவாக மாறி இருக்கிறது.
திருஞானசம்பந்தர் இத் திருதலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் கூடிய ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றத் திருத்தலம்.
பள்ளியறையில் தந்தந்தினாலான ஊஞ்சலில் அம்மை
வேதங்களுக்கு தலைவியாக விளங்குவதாலும், நான்கு வேதங்களால் பூஜை செய்யப்பட்டதாலும் வேதவல்லி எனும் திருநாமத்துடன் அம்பாள்
பவானி ஆறு, கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி காவிரி இவைகள் சேருமிடத்தில் இத்தலம்அமைந்துள்ளதால் இத்தலம் தென்திரிவேணி சங்கமம்
விஸ்வாமித்திர முனிவரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர்
வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நிகழா வண்ணம் காக்கும் (நண்ணுதல் – கிட்டுதல்) பதி என்பதால் நணா.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் ஆகியவற்றால் அழைக்கப்படும் திருத்தலம்.(பவானி)
குபேரன், பல திருத் தலங்களை தரிசித்தப்பின் இங்கு வந்த போது அனைத்து உயிர்களும் எவ்வித பேதமும் இல்லாமல் ஒன்றாக இருப்பது கண்டு தவம் செய்து சிவன், திருமால் ஆகியோரால் தரிசனம் கிடைக்கப்பெற்று ‘ பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருள வேண்டும்’ என வேண்டிப் பெற்றத் திருத்தலம். (தட்சண அளகை)
இராவணன் வழிபாடு செய்தது சகஸ்ரலிங்கம்
வேணு கோபாலர் சன்னதிக்குப் பின் ஒரு உடல், இரு தலைகளுடன் பசுக் காட்சி
வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்த போது (1802ம் ஆண்டு) அம்பிகையை காணும் தீராத ஆவலால் அம்பிகை சந்நதிக்கு நேரே இருந்த மதிலில் மூன்று துவாரங்கள் செய்து அத்துவாரங்கள் வழியே அலங்கரிக்கப்பட்ட அம்பிகையை தரிசித்ததன் பலனாக தன் இருப்பிடத்தில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது கூரை இடிந்து விழும் முன் அவர் கனவில் அம்பிகை வேதநாயகியைப் போலத் தோற்றம் கொண்டிருந்த ஒரு பெண் தோன்றி, ‘பங்களாவைவிட்டு உடனே வெளியேறு’ என்று ஆணையிட்டு காப்பாற்றிய பெருமை கொண்ட தலம். ( நன்றி காணிக்கை – தந்தத்தினால் ஆன கட்டில்)
சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக ஆதிகேசவப் பெருமாள், சௌந்திரவல்லி தாயார் ஆகியோருக்கு தனி சந்நிதிகள்
மாசி மாதம் மூன்றாவது நாளில் சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகிய மூவருக்கும் சூரிய வழிபாடு நடைபெறும் திருத்தலம்.
ஆறு காலப் பூஜைகள் நடைபெறும் திருக்கோயில்
நூல்கள்
கூடற்புறான வசனம் – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
பவானிப் பதிற்றுப்பத்தந்தாதி – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
பவானி வேதநாயகி அம்மன் பிள்ளைத்தமிழ் – திருமுகவூர் மு.ரா. கந்தசாமிக்கவிராயர்
காலை 6:00 மணி முதல் – 01:00 மணி வரை
மாலை 4:00 மணி முதல் – 08:30 மணி வரைஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில்
பவானி, ஈரோடு மாவட்டம் – 638301
04256 – 230192, 09843248588.
வழிபட்டவர்கள்
திருமால், குபேரன், விஸ்வாமித்திரர், பராசரர்
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவு, ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 207 வது தலம்
கொங்கு நாட்டுத் தலங்களில் வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 72
திருமுறை எண் 2
அழகிய கண்ணான நெற்றிக்கண் பொலிந்து விளங்கும் நெற்றியினை உடையவரும், ஒருகையில் வீணை ஏந்தியவரும், ஆகாமியகன்மம் முதல் சஞ்சிதம் பிராரப்தம் வரையிலான பழைய வினைத் தொகுப்பினைத் தீர்த்து அருள்பவரும் ஆகிய எம் இறைவன் உறையும் இடம், இலைகள் அடர்ந்த காட்டில் வேகமானதும், இசை போல் ஒலிப்பதுமான அருவிகளுடன் கூடியதும், மூங்கில்கள் உராய்ந்து ஓசை எழுப்புவதும், கரைபுரளும் அலைகள் வழியே சேர்க்கும் திருநணாவாகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 72
திருமுறை எண் 8
மன்நீர் எனப்படும் பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அவனை வருந்தச் செய்தவரும், கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய இடம், பகை கொண்டும், கோபம் கொண்டும் மலைக்குகையில் வாழும் சிங்கம் தன் தன்மைகுன்றி அதனோடு போரிட்டு முற்றத்தில் படிந்த அதனது குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை சென்று மறையும் திருநணாவாகும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய் சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய் யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே
சிவவாக்கியர்
பதவுரை
நம்பிக்கைத் தரும் ‘ந’ எனும் எழுத்தாகிய நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலாகவும், ‘ம’ எனும் எழுத்தாகிய மகாரம் வயிற்றுப்பகுதியாகவும், ‘சி’ எனும் எழுத்தாகிய சிகாரமானது நெஞ்சில் இருந்து இரண்டு தோள்களாகவும், சிறந்ததான ‘வ’ எனும் எழுத்தை குறிக்கும் வகரம் வாயாகவும், ‘ய’ எனும் எழுத்தை குறிக்கும் யகரம் இரண்டு கண்களாகவும் தூலத்தில் அமைந்துள்ள ஐந்தெழுத்து, சூட்சமத்தில் மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து அதனை தியானித்து அச் சிவமே ஐந்தெழுத்தாக இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
விளக்கஉரை
‘நமசிவய’ என்னும் மந்திரம்தான் இந்த உடல். அதனுள்தான் இறை ஆகிய சிவம் உள்ளது. யோக முறையில் வழிமுறை தெரிந்து உடலின் உள்ளே செல்ல சிவத்தை உணரலாம்.
அறிவுடைப் பொருளாகிய சேதனம், அறிவற்ற பொருளாகிய அசேதனம் ஆகியவற்றின் தொடக்கமாக இருப்பவரும், அவ்வாறான சேதனம், அசேதனம் பொருள்களுக்கு முடிவாக நின்று இருப்பவரும், பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளிலும் பற்றினை ஏற்படுத்துபவரும், அப்பற்றினை விலக்கி வீடு பேற்றினை உயிர்களுக்கு அளிப்பவரும், விடையேறுதலை விரும்பி செய்பவரும், சிவந்து எரியும் தீயை போற்றி காத்து வரும் அந்தணர்கள் வாழும் மிழலை நகரில் உள்ளவரே! அடியேனைக் காலன் தென் திசையில் செலுத்தும் போது, யான் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும்.
உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம் பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே
பதப் பிரிப்புடன்
உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு எல்லாம் பெருவினை பிறப்பு வீடாய் நின்றஎம் பெருமான், மிக்க அருவிபொன் சொரியும் அண்ணா மலைஉளாய், அண்டர் கோவே, மருவிநின் பாதம் அல்லால் மற்றொரு மாடு இலேனே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
அசேதனப் ப்ரபஞ்சம் மற்றும் காரண மாயை என குறிக்கப் பெறும் சடமாகி, சேதனப் பிரபஞ்சம் எனக் குறிக்கப்படும் சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய், அவ்வாறு குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் விடுத்தப் பின் ஏற்படும் வீடு பேற்றிற்கு காரணமாகவும் நின்ற எம் பெருமானே! அருவி போன்று பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர்களின் தலைவனே! உன் திருவடிகளைப் பொருந்தி நிற்றல் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன்.
விளக்கஉரை
‘மலையுளாய்’ என்றது கண்டது உரைப்பது பற்றியதால் அருளுரை எனவே பொய்யாகாது.
‘நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும்’ என சில இடங்களில் விளக்கப்பட்டுளது. பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்
பதவுரை
அனாதி காலம் தொட்டு கர்த்தாவுக்கு ஆளாகி திருவருளுடனே கூடிப் பின்பு அன்பு வழியுடன் பக்தி கொண்டு சென்றவர்களில் ஒருவரானாலும் சிவானுபவம் இப்படியிருந்ததென்று சொல்லக்கூடிய உவமை இதுவரையும் பொருந்தினதில்லை; ஆகையால் இப்போது இந்தச் சிவானுபத்தை இப்படியிருந்ததென்று எப்படிச் சொல்லப்போகிறேன் எனில் அந்தச் சிவானுபவம் போலவே இருந்தது.
விளக்கஉரை
சிவானுபவத்துக்கு வேறோர் உவமை சொல்லக்கூடாது
சிவானுபவம் என்பது அனுபவிக்க முடியுமே அன்றி எவ்வாறு இருந்ததென்று அளவிட்டுக் கூறமுடியாததாகும். அதற்கு ஒப்புமை எதுவும் கூற இயலாது