அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 28 (2018)

பாடல்

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரையை அக அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை ஆனந்த வடிவமாக இருப்பவள் என்றும், (அருவமும், உருவமும் ஆகி) அருவுருவம் கொண்ட வடிவினள் என்றும், உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் அனைத்தும் அவள் விருப்பத்தின் படி நிகழ்கிறது என்றும், அறிவு உருவாகிய பரமனாகிய சிவபெருமானும் அன்னையிடம் எழுந்தருளி இருப்பவர் என்றும் கூறப்பெறும்.

விளக்க உரை

  • அன்னையின் மேலும் சில பெருமைகளைக் கூறும் பாடல்
  • *நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையில் நிற்பவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.
  • மூன்றாமடி மற்றும் நான்காமடிகளில் வரும் ‘அறிவார்’ என்பதை, ‘அறிவு ஆர்’ எனப் பிரித்து. `ஆர்ந்த அறிவு` எனக்கொண்டு, `அறிவாய் ஆர்ந்த பரனும்` எனவும் சில இடங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன் வழி பற்றி  ‘ஆர்ந்த அறிவு கொண்டவனும் அவள் வழி தொழில் நடத்துகிறான் எனவும் விளக்கம் பெறும். ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 27 (2018)

பாடல்

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரையை அறியாதவர்கள் தேவர்கள் ஆகமாட்டார்கள்; அவள் இன்றி செய்யும் மிகப் பெரியதும் சிறப்புடையதுமான தவம் என்பது எதுவும் இல்லை; அவள் இல்லாமல் (சைவத்தினை முன்வைத்து) ஐந்தொழில்களையும் சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய தொழில்கள் எதுவும் இல்லை. அவள் அருள் இல்லாமல் கைகூடும்  திருவடிப் பேறு என்பதும் இல்லை.

விளக்க உரை

  • திரிபுரையின்  பெருமையை கூறும் பாடல்.
  • ஐவர் – பிரம்மா படைத்தலையும், திருமால் காத்தலையும்,உருத்திரன் அழித்தலையும், மகேசுவரன் மறைத்தலையும், சதாசிவன் அருளலையும் ஆற்றுவதாகக் கூறப்படும் கருத்துக்களும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 26 (2018)

பாடல்

சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள்
வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை
அத்தகை யாயும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை தூயதும், அழகியதும், திண்ணியதும் ஆன கொங்கைகளை உடையவள்; பேரின்பத் தோற்றமாகவே விளங்குபவள்; மெய்ப்பொருள்களை உணரும் ஞானமாய் நின்று உயிர்களை ஆட்கொள்கின்ற பேராற்றலை உடையவள்; எல்லாச் சத்திகளினும் பெரியதான மேலான சத்தியாக விளங்குபவள்; அவ்வாறு இருப்பினும் அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்மை உடையவள்; அழகிய நிறைமதி போலும் ஒளியினை உடையவளும் ஆவாள்.

விளக்க உரை

  • சுத்த, அம், பாரத்தனம் – ஞானம் நிறைந்து நிற்றலைக் குறித்தது
  • வத்து – பொருள்; மெய்ப்பொருள். (வத்துவம்,  வாஸ்துவம்)
  • திரிபுரை தியானத்தில் அவளைப் பற்றி அறியக்கூடிய  பெருமைகள் குறித்து கூறப்பட்டப் பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 25 (2018)

பாடல்

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

எப்பொழுதும் அழியாதவளாகிய திரிபுரை, கால எல்லையைக் கடந்த பழமை உடையவள்; மாயை வடிவம் கொண்டு உயிர்களை மயக்குபவள்; அழகிய கூந்தலை உடையவள்; நன்கு விளங்குகின்ற உருத்திராட்ச மாலையை அணிந்திருப்பவள்; நான்கு கால்களை உடைய யானையை ஊர்பவள். வெண்டாமரைமேல் வீற்றிருக்கும் வெள்ளைத் திருமேனியை உடையவள்.

விளக்க உரை

  • திரிபுரையின்  தியான உருவம் பற்றி கூறப்பட்ட மற்றொரு பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 24 (2018)

பாடல்

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

குண்டலம் அணிந்த காதுகளை உடையவள்; கொலை செய்கின்ற வில் போன்ற புருவத்தை உடையவள்; சிவந்த மேனியை உடையவள்; உருத்திராக்க மாலையைப் பூண்டவள்; ஒளிவீசுகின்ற கிரீடத்திலே பிறையை மாலையாக அணிந்து ‘சண்டிகை’ என்னும் பெயர் உடையவள்; இவள் நான்கு திசை கொண்ட உலகங்களைத் தீமையினின்றும் நீக்கிக் காத்தருளுதல் பொருட்டு தாங்கி நின்றாள்.

விளக்க உரை

  • தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பாற்றுகிறாள் எனும் பாடல்
  • திரிபுரையின்  தியான உருவம் பற்றி கூறப்பட்ட மற்றொரு பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 23 (2018)

பாடல்

தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திருவடிகளில் பாதகிண்கிணி ஆகிய சிலம்பும், இடையில் சிவந்த பட்டுடையும், மார்பில் கச்சையும், நான்கு கரங்களிலும் கரும்பு வில், மலர்க்கணை, அங்குசம், பாசம் ஆகியவைகளும், சென்னியில் நவமணிகளின் அழகு விளங்கும் முடியும், காதுகளில் நீல ரத்தினம் மின்னுகின்ற குண்டலம் கொண்ட அடையாளங்களுடன் திரிபுரை இருப்பாள்.

விளக்க உரை

  • நூபுரம் – சிலம்பு, பாதகிண்கிணி
  • ‘இராஜேஸ்வரி கோலம்’ வர்ணிக்கும் பாடல். திரிபுரையின்  தியான உருவம் பற்றி கூறப்பட்டப் பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 22 (2018)

பாடல்

கோல மேனிவ ராக மேகுண
   மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
   சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக நான்உனை
   நச்சி நச்சிட வந்திடும்
கால மேஉனை ஓதநீ வந்து
   காட்டி னாய்கழுக் குன்றிலே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

அழகிய பன்றி உருவத்தை  திருமேனி ஆக உடையவனே! திருப்பெருந்துறைக் மழை மேகமே! சற்றும் நல்லொழுக்கத்தை அறியாத என் சிந்தையினில் வைக்கப் பட்டிருக்கிற தலைசிறந்தவனே! உலகத்திற்கு சாட்சியாக நான் உன்னைப் புகழும்படி திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி எனக்குத் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன்னுடைய பெருங்கருணை இருந்தவாறு என்னே?

விளக்க உரை

  • கொண்டல் – கொள்ளுகை, மேகம், மழை, மேஷராசி, கொண்டற்கல், மகளிர் விளையாட்டுவகை
  • சீலம் – அழகு, குணம், வரலாறு, சீந்தில், சுபாவம், நல்லறிவு, அறம், நல்லொழுக்கம், யானையைப் பயிற்றும் நிலை, தண்டனை
  • கோல மேனி வராகமே – இது பன்றிக்குட்டிகளுக்கு இறைவன் தாய்ப்பன்றியாய்ச் சென்று பால்கொடுத்த திருவிளையாடல் பற்றிய புராணம்
  • கரி – சான்று.
  • நச்சுதல் – விரும்புதல்.
  • நச்சிட வந்திடும் காலமே – என்றும் இடையறாது அன்பு செய்து உன்பால் யான் வருவதற்குரிய காலம்.
  • ஓத – இங்ஙனம் மகிழ்ந்து பாடும்படி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 21 (2018)

பாடல்

உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத்
தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பற்றுக் கொண்டு விரும்பி நினைக்கப்படும் உடலிலே வாய், கண், உடல், செவி, மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாகநின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்து வகைகளே! உங்களுடைய மயக்கம் பொருந்திய மண்ணில் ஏற்படுத்தப்பட்ட உருவங்களினால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா ? யானோ தேவர்களுக்கு அழகிய பொன் போன்ற உருவத்தைத் தந்தவனும், அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வான் அளவு உயர்ந்தவனாகவும், இந்த உலகம் எல்லாவற்றிலும் அழகான சிவக்கொழுந்தாய் ஆனவனும், என் சிந்தையுள்ளே புகுந்து அதில் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன். ஆதலால் என்னை உம் அளவில் சிறுமை படுத்துவதற்காக செருக்கிக்கொண்டு என்பக்கம் வாராதீர்கள்.

விளக்க உரை

  • உன் உருவில் – ( விரும்பி ) நினைக்கப்படுகின்ற உடம்பு
  • உறுப்பு –  பொறி
  • குறிப்பு – புலன்
  • மன் உருவம் – ( மயக்கம் ) நிலைபெற்ற உருவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 20 (2018)

 

பாடல்

வைகரி யாதியும் மாய்ஆ மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்தால்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே

பத்தாம் திருமுறை – திருமந்திரம்-  திருமூலர்

பதவுரை

தோன்றுவதும் பின் அழிகின்றதுமான வைகரி முதலிய வாக்குக்களாகிய சொல் உலகங்களையும், மற்றும் பொருள் உலகங்களையும், அந்த உலகங்களைப் பற்றி  நின்று ‘புருடன், உருத்திரன், சிவன்’ என உயிர்கள் அடையும் வேறுபாடுகளையும், தனது உண்மைத் துணையாகிய ஞானம், கிரியை என்னும் வேறுபாடுகளையுடைய தனது சத்தியால் செய்கின்ற நிலையான அமைப்பு அனாதியே அமைந்த முதல்வன் சிவபெருமானே செய்வதே ஆகும்.

விளக்க உரை

  • ‘தான் புருடனாய் நிற்றல்’ முதலிய நிலைமைகளும் சிவனால் ஆவன்` என்பதை கூறும் பாடல்
  • ‘புருடன்` – உயிர் முப்பத்தாறு தத்துவங்களையும் பற்றி நிற்கும் தருணத்தில் (புருடலோகம்)
  • `உருத்திரன்’ – ஆன்ம தத்துவத்தை ஒழித்து, ஏனைப் பன்னிரண்டு தத்துவத்தளவில் நிற்கும் தருணத்தில் (உருத்திர லோகம்)
  • ‘சிவன்’ –  வித்தியா தத்துவங்களை ஒழித்து, ஏனைச் சிவ தத்துவத்தளவில் பற்றி நிற்கும் தருணத்தில்(சிவலோகம்) [( வகைகள் –  அட்ட வித்தியேசுரர், சுத்த கோடி மகா மந்திரேசுரர். அணு சதாசிவர்)
  • கரி – சான்று
  • பொய் கரி – பொய்க்கும் கரி, மெய்கரி – மெய்க்கும் கரி, `பொய், மெய்` என்பன நிலையாமை, நிலைத்தல் இவற்றைக் குறித்தன.
  • விசேடம் – சிறப்பியல்பு. சிவனது சிறப்பியல்பு அவனது சத்தி. இங்கு அமைப்பாவது செய்வோனும், செய்யப்படுவனவுமாய் நின்ற இயல்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 19 (2018)

 

பாடல்

வன்னம் ஒன்றாய் இரண்டாகி
     வளர்ந்தோ ரைந்தாய் எட்டாகி
   வானாய் வானின் வளிக்கனலாய்
     வனமாய்ப் பாராய் வகைஐந்தாய்

பன்னும் மறையோர் நான்காகிப்
      பரந்த சாத்ர முடன் ஆறாய்ப்
   பதினெண் புராண ஆகமங்கள்
      பரிந்தோ ரிருபத் தெட்டாகி

உன்னி நெடுமால் அயனாலும்
     உலகை வகுக்கக் காப்பாற்ற
   உடனே சங்கா ரித்திடவும்
     உமை ளோடுதன் கெள்வனுமாய்

மன்னி நிதமும் ஆட்டிவைத்த
     மதலாய் இமவானுடை மகளாய்
   மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயாகிய நீ ஓம் எனும் பிரணவ எழுத்தால் ஒன்றாகி, சிவ சக்தி ஐக்கிய வடிவம் படி இரண்டாகி, வளர்ந்து பஞ்சாட்சரங்களாகி, எட்டெழுத்தாகிய சிவத்தை அறியாமல் *, ஆகாயமாகி, வானில் தோன்றும் சூரியனாகி, காடு ஆகி, உலகமாகவும் அதில் காணப்படும் பொருளாகவும் ஆகி , வகை ஆகிய  ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் எனவும் ஆகி, போற்றுதலுக்கு உரிய மறை நான்காகி, பரந்து  ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகி, பதினெண் புராணங்களாகி, காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு, அநலம் (ஆக்னேயம்), வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம் எனும் ஆகமங்கள் இருபத்தி எட்டாகி, தியானப் பொருளான திருமாலாகவும், ப்ரம்மாவாகவும் உலகை படைத்து, காத்திடவும் அழித்தல் பொருட்டு தன் தலைவனுடன் உமையாகி நித்தமும் நிலைபெற்று தங்கும் இமவான் மகளாய் இருக்கிறாய்.

விளக்க உரை

  • * எட்டினோடிரண்டும் அறியேனையே –   எட்டு என்னும் எண் தமிழில் ‘அ’ என்றும், ‘இரண்டு’ என்னும் எண், ‘உ’ என்றும் குறிக்கப்படும். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்பதாகவும்  விளக்கம் பெறும் ( எட்டினோடு இரண்டும்  –  பத்து –  அஃதாவது, ய – உயிர் என்றும் பொருள் கூறுதல் உண்டு; அதாவது ஆன்மா இயல்பை அறியாதவன் )

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 18 (2018)

பாடல்

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ!

அழுகணிச் சித்தர்

பதவுரை

என் கண்ணம்மா, மனம் மகிழ்ந்து (உள்முகமாக) நோக்குவதால் அந்தரம் எனப்படும் உள்வெளியாகிய புருவத்தை வில்லாக்கி, பஞ்சாட்சரமான ஐந்து எழுத்து மந்திரத்தை அம்பாக்கி, உச்சாடனம் செய்யும் வேகத்தினை தேராக்கி, மனமாகிய மானை காவனத்தில் வேட்டையாட, சந்திர சூரிய நாடிகள் வந்து விளையாடியதால் தானே நிகழ்ந்தது.

விளக்க உரை

  • அந்தரம் – திறந்தவெளி, ஆகாசம், வெளி, உள்வெளி, இருள், ஆகாசம், நடு, இடம், இடுப்பு, நடுவுநிலை, தேவலோகம், பேதம், விபரீதம், தேவாலயம், தீமை, கூட்டம், முடிவு
  • அந்தரம் என்பதற்கு ஆகாசம், வெளி போன்றவை இருப்பினும் சித்தர்கள் பெரும்பாலும் இருப்பை தன்னுள்ளே விளக்குவதால் உள்முகமாக நோக்குதல் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
  • மனமகிழ்ந்து – ஆத்மார்த்தமாக உணர்தல்

 

சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 17 (2018)

பாடல்

தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தென் நாட்டு அரசனும், என்னை ஆள்பவனாகிய சிவனும், உலகை காக்கும் தலைவனும்,  போற்றுதலுக்கு உரிய அழகிய மறைகளை ஓதியவனும், உலகம் தோன்றுவதற்கு முன்னமே நிலைப்பெற்ற  தோற்றத்திற்கு உரித்தானவனும், சுடுகாட்டில் சேரும்  திருநீற்றினை அணிந்தவனும்,சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஆகிய பெருமானான ஈசனாவான்.

விளக்க உரை

  • தென்னவன் – அழகியவன் எனும் பொருள் இருப்பினும், ‘தென்நாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனும் வரிகளை முன்வைத்து தென் நாட்டு அரசன் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. (யோக மார்க்கமான பொருளை குரு மூலமாக அறிக)
  • முன்னம் மன்னவன் – உலகத்தோற்றத்திற்கு முன் உள்ள நிலை பேறுடையோன்
  • பூழி – விபூதி
  • இனன் – சூரியன்
  • இன்னம் இன்புற்ற – சூரியன் வழிபட்டு இன்புற்ற. சூரியன் வழிபட்டதால் இனன் நம்பூர் என்ற பெயர் மருவி இன்னம்பர் ஆயிற்று

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 16 (2018)

பாடல்

நெறியும் பொறியுந் தவமும் மெய்ஞ்ஞானமும் நீடறிவும்
பொறியும் புகழும் கொடுத்தருள் வாய்புரம் காய்ந்தவனே
குறியும் குணமும் கடந்தவனே குழக்கன்று கட்டுந்
தறியின்கண் வந்தவனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

குழக்கன்று எனும் மிக இளையகன்று போன்று கட்டுத்தறி விட்டு அன்பர்களுக்கு அருள் செய்ய வந்தவனே, காழிப் பதி உறையும் ஆபதுத்தாரணனே, மௌனம் கொண்டவனே, தனக்கென அடையாளம் ஆகிய பேதம் விலக்கியவனே *, சைவ ஆகமத்தில் கூறப்படும் எண் குணங்களாகிய தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகியவற்றை கடந்தும் நிற்பவனே, உனது அன்பைப் பற்றி வாழும் நெறி, அந்த நெறியில் இருந்து விலகாத பொறிகள், பொறிகளால் பெறப்படும் தவம், தவத்தில் இருந்து கிடைக்கப் பெறும் ஞானம், அதன் பயனான மெய் அறிவு, அதைக் ஈயும் உடல், அதனால் பெறப்படும் புகழ் ஆகியவற்றை கொடுத்தருள்.

விளக்க உரை

  • வாய்புரம் காய்ந்தவனே – மௌனம் கொள்ளுதல்
  • * அவரவர் வழிபாடு செய்யும் விதமாக அந்த ரூபத்தில் அருள்பவன்

 

ஆதினம் அவர்கள் பக்தி நிலையில் எழுதியதால், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 15 (2018)

பாடல்

பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடமாம்
இண்டை கொண்டு அன்பு இடையறாத
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

உயிர்கள் செய்த பழைய, வலிமையான வினைகள் நீங்குமாறு செய்வதும், உலகிற்கு முதல்வனும், தூயவனும் ஆகிய இறைவனது இடமானதும், ஈசனிடத்தில் அன்பு கொண்டு இடையில் விலகுதல் இல்லாத அடியார்கள், தாமரை மாலை முதலியவைகளைக் கொண்டு வழிபடுகின்ற திருத்தலம் ‘திருச்சோற்றுத்துறை’ என்னும் திருத்தலம் ஆகும்.

விளக்க உரை

  • இண்டை – தாமரை, மாலை வகை, இண்டு கொடி, முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி; உலகம் சார்ந்த பொருட்கள்
  • அண்ட முதல்வன் – ‘அண்டம்’ என்ற பொதுமையால் எல்லா அண்டங்களும் கொள்ளப்படும், அதன் பொருட்டே  அகிலாண்டகோடி.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 14 (2018)

பாடல்

நின்மல மேனி நிமலன் பிறப்பு இலி
என்னுளம் வந்து இவன் என் அடியான் என்று
பொன் வளர் மேனி புகழ் கின்ற வானவன்
நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சிவபெருமான் இயல்பாகவே மலங்கள் அற்றவனாகிய தூயமேனியன்; இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன் ஆனதால் அழுக்கு இல்லாதவன்; என்றும் பிறப்பு இல்லாதவன்; திருவருளால் என் உள்ளத்தே வந்து வெளிப்பட்டு  ‘இவன் என் அடியான்’ என்று அறிவித்து அருளினன்; .அனைவராலும் புகழத்தக்க பொன்போன்ற திருமேனியையுடைய உயர்ந்தவனாகவும் வானவனாகவும் ஆன அவன் அடியானென்று என்று கொண்டது மட்டுமல்லாமல் ‘என்னைப் போல மலம் நீங்கித் தூயன் ஆகுக’ என்று மல பாகம் நீக்கியும் அருளினன்.

விளக்க உரை

  • நீக்கவல்லான் – ஆணவத்தை ஒழிக்கவல்லான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 13 (2018)

பாடல்

ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனற்
பானு ஒழியப் படின்.

உமாபதி சிவம்

பதவுரை

நல்ல சூரியகாந்த கல்லானது ஆதித்தனையல்லாமல் ஜொலிக்காதது போல் ஞானாசாரியன் இல்லாமல் ஒருவனுக்கு ஞானம் உண்டாகாது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 12 (2018)

பாடல்

 

மெய்யிற் படர்ந்த அருட்கடலே
        விளையும் ஞான முளரியினில்
     விரிவாய்ப் பொருந்தும் பரநிதியே
        வினைகளை அகற்றும் பதம்உடையாய்

உய்யுந் தவத்தோர் மேலோர்கள்
        உறுதி யுடனே மகிழ்பதியே
     ஒன்றாம் யோக முடிவதனில்
        ஒளியாய் வெளியாய் உதித்தவளே

செய்ய கமலத் தயன்மனைவி
        தினமும் பணியுந் திருவருளே
     தேகா தேகக் கோடியெலாஞ்
        சிறந்து நிறைந்த சின்மயமே

வையத் தடங்கா அருள்மலையே
        வருண அருண ஒளிமணியே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, நீ உண்மையாக விளங்கும் மெய் அன்பர்களிடத்தில் பரந்து இருக்கும் அருட்கடலாகவும், ஞானத்தின் வடிவாக தோன்றும் ஞானத்தாமரையில் விரிவாய்ப் பொருந்தும் பரநிதியாகவும், தன்னை வழிபடுவர்களின் அடியார்களின் வினைகளை அகற்றும் திருவடிகளை உடையவளாகவும், பிறவிப் பிணி நீக்கம் கைவரப் பெற்ற தவத்தோர்களும், உயர்ந்தவர்களான வானோர்களும் உறுதியுடன் மகிழ்கின்ற பதிப்பொருளாகவும், யோக நிலையில், இறைவனோடு ஒன்றிய சிவசக்தி ரூபமான வடிவத்தில் ஒளி வடிவமாகவும், துவாத சாந்த பெருவெளியாகவும் தோன்றி காணப்படுபவளாகவும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மாவின் சக்தியாகிய சரஸ்வதியால் தினமும் வழிபாடு செய்யப்படுபவளாகவும், உடலோடு கூடியனவாகவும், கூடாதனவாகவும் ஆகிய உயிர் வர்க்கங்களின் வகைகளாகிய முட்டையில் தோன்றுவன ஆகிய அண்டசம், வியர்வையில் தோன்றுவன ஆகிய சுவேதசம், வித்து வேர் முதலியவைகளில் தோன்றுவன ஆகிய உற்பிசம், கருப்பையில் தோன்றுவன ஆகிய சராயுசம் ஆகியவற்றின் * அறிவுக்கு அறிவாய் விளங்கும் ஞான சொரூபமாக விளங்குபவளாகவும், வையகத்தில் இருப்பவர்களால் அளவிட முடியா அருள் மலையாகவும் (வையகத்தினை விட பெரிய அளவிலான அருள் மலையாக எனவும் கொள்ளலாம்) துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், சூரியனின் ஒளி வடிவமாகவும் செந்திறம் கொண்ட துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், பல நிறம் கொண்ட சூரியனின் ஒளி வடிவமாகவும் விளங்குகிறாய்.

விளக்க உரை

  • அடுத்து வரிகளில் வரும் ‘விளையும் ஞான முளரியினில்’ என்பதனை முன்வைத்து உடலில் தோன்றிய அருட்கடலே என்னும் கருத்து விலக்கப்பட்டுள்ளது.
  • மேலோர் – மேலிடத்தோர், உயர்ந்தோர், முன்னோர், வானோர்
  • *84 லட்சம் யோனிபேதம்(வடிவ வேறுபாடு)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 11 (2018)

பாடல்

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு

நல்வழி – ஔவையார்

பதவுரை

செய்துமுடிக்கும் செயலெல்லாம் செய்த புண்ணியத்தால் நிறைவேறியது என்பது அன்றி எவ்வொருவராலும் செயல் பற்றி எண்ணி அந்த செயலை தான் முடித்துவிடோம் என எண்ண இயலாது. காலம் சரியானதாக இருந்து நேரம் கூடிவரும் போது,  கண் தெரியாத ஒருவன் தன் கையிலிக்கும்  கோலை வீசி மாங்காய் விழுவது போன்று அது நிறைவேறும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 10 (2018)

 

பாடல்

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – கபிலதேவ நாயனார்

பதவுரை

குற்றமற்ற செல்வம், செய்த, செய்யப்படுகின்ற இனி செய்ய இருக்கும் அனைத்து கர்மங்கள் ஆகியவற்றை எவ்விதமான இடையூறும் இல்லாமல் முடியச் செய்தல், பெருமையின் ஆக்கம், குற்றமற்ற சொற்களை தரும் உயர்ந்த சொற்கள் ஆகியவற்றை மூத்த பிள்ளையார் ஆன ஆனை முகத்தான் தருவான்.  ஆதலால் அவனைக் காதலால், வானோரும் தம்முடைய கை கூப்பி தொழுவார்.

விளக்க உரை

  • ‘செய் கருமம் கை கூட்டும்; ஆதலால் கைகூப்புவர்` என்பது புலனாகும். `பிள்ளையாரைத் தொழாதபொழுது செய் கருமம் கை கூடுதல் அரிது` என்னும் குறிப்பும் புலப்படும்.
  • செய்கருமம் – வினைத் தொகை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 9 (2018)

பாடல்

அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால்
அறிவான் அறிந்த அறிவு அறியோமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மெய் தத்துவங்களின் தோற்றமுறை ஆய்தலை உடைய மெய் உணர்ந்த மேலோர் அருளால் அறிவது நீர் என்றும் திருவருள் என்றும் குறிக்கப்பெறும் அப்புவும், தீ எனவும்  சிவபெருமான் எனவும் குறிக்கப் பெறும் அனலும்; அவ்வாறு அதன் பொருள் நுட்பம் உணர்பவர்கள் அவற்றின் பண்பும் கலப்பும் ஒடுக்கமும் ஆய்ந்து உணர்வார்கள்; இவ்வாறு அறிவது எல்லாம் ஒருங்கே உணரும் தன்மையும், எண் குணமும், முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த சிவபெருமானாலே வாய்க்கப் பெறுகிறது. அஃதாவது அவன் உடனிருந்து இயங்கி  அவன் இடம் அறிவித்தாலன்றி ஆருயிர்கள் அறியாது; அவனையின்றி அறிவு வசப்பட்ட  ஆருயிர் அறிந்ததென்பதை எவரும் அறியார்.

விளக்க உரை

  • மெய்ப் பொருள் அறிவு ஆசிரியனை இல்லாமல் உண்டாகாது எனும் பொருள் உடைக்கும் பாடல்
  • அருள் ஆகிய சக்தியும் சிவமும் கலந்து அருளுபவன் எனும் நிலையில் நின்று,  அனைத்து உலகினையும் மற்றும் அவற்றின் தொழில் செய்வதைக்  குறிக்கும் குறிப்பாகும்.
  • தாமாக அறியும் பொருள் அனைத்தும் காட்சிப் பொருள்களே. அவை மட்டும் அல்லாமல்  கருத்துப் பொருள்களும் உள்ளன.  அவற்றை அறிவிப்பவன் ஒருவன் இருந்துகொண்டு அறிவித்தாலன்றி, அறிபவன் தானே அறிந்து பெற்ற அறிவாக நாம் எந்த அறிவையும் அறிய இயலாது.
  • ‘உலகாயதர்’ என்றும், ‘சாருவாகர்’ என்றும் ‘பூத வாதிகள்’ என்றும் கூறுபவர்களின் கருத்தாகிய ‘காட்சிப் பொருளன்றிக் கருத்துப் பொருள் இல்லை` எனும் விளக்கம் சைவ சித்தாந்த கருத்துப்படி மறுக்கப்பட்டுள்ளது
  • முதலில் வரும் ‘அறிவான்’ என்பது `முன்பே அறிந்துள்ளவன்` எனவும், பின்னது, `இனி அறிபவன்` எனவும் பொருள் தரும்.

Loading

சமூக ஊடகங்கள்