இயல்பாய் இரத்தல்

புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

 

எவரும் அறியாமல்
என் கைகள் நீண்டும் குறுகியும் ஆகின.
யாரும் அற்ற ஒரு பொழுதினில்
யாசகம் வேண்டி நின்றேன் ஒருவனிடம்.
‘உனக்கு மட்டும் ஏன் கைகள் இப்படி ஆகின்றன?’
என்றான் அவன்.
யாசித்தல் இயல்பு ஆன பொழுதுகளில்
இடம் சென்று பெறுதல் அரிதானதால்
இவ்வாறானது என்று உரைத்தேன்.
எப்பொழுது இது மறையும் என்றான்?
இயல்பாய் ஒருவன்
இடும்போது மறையும் என்றேன்.
எவரும் அறியா விஷ்யங்களை
இனம் கண்டு கொண்டது எங்கனம் என்றேன்?
இயல் புன்னகை பூத்து
கைகளில் இடுகிறான்.
புவனம் கனகம் ஆகிறது
காலம் உறைகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 10 (2018)

 

பாடல்

மவுனமாய் நின்று கற்பம் சாதித்தாக்கால்
மகிழ்ச்சியுடன் சொல்லுகின்றேன் முதலா
தவத்தாலே யொரு சட்டை யுரியும் பாரு
தன்மையுடன் யிரண்டாண்டில் ஒன்று போகும்
அவையடக்க மூன்றி லொன்று கழன்று போனால்
அப்பனே மூன்று சட்டை கழன்று போனால்
இவனுக்கு வயது சொல்ல முடியா தென்று
என் குருவும் எந்தனுக்கு உரைத்தார் தானே

அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி

பதவுரை

எதுபற்றியும் உரைக்காமலும் மௌனமாக இருந்து, முன்னர் குறிப்பிட்ட முறைகளில் தச தீட்சை கொண்டு, உணவு கட்டுப்பாடும் கொண்டு வந்தால் நிகழுபவற்றை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். செய்யப்படும் அவ்வாறான தவத்தாலே ஒரு சட்டை உரிந்து விடும். அத்தன்மை பற்றி இரண்டாவது ஆண்டில் இன்னொரு சட்டை போய்விடும். மேலே குறிப்பிட்ட இரண்டு சட்டையும் கழன்று போகும் போது மூன்றாவது சட்டையும் கழன்று போகும். அவ்வாறு மூன்று சட்சையும் கழன்று விட்டால் இவன் வயது சொல்லமுடியாதவாறு இருப்பான் என்று என் குருநாதர் எனக்கு உரைத்தார்.

விளக்க உரை

  • கற்பம் – முன் பாடல்களில் தச தீட்சை முறை, உணவு முறைகள், விலக்கவேண்டியவை, அக்காலங்களில் ஏற்படும் நோய்கள், அதில் இருந்து விலகும் வழிமுறைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இப்பாடல்களை விளக்கவே பல்வேறு நியமங்களை அகத்தியர் விதித்துள்ளார். இதன் விபரங்களை தெரியாதவர்களுக்கு உரைத்தால், அவர் தலை வெடித்து சிதறும் என்றும், பல பிறவிகளில் வினைகள் தொடரும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். எனவே ஆன்றோர்கள் தகுந்த குரு கொண்டு பாடல்கள், விளக்கங்கள் பெறுக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 9 (2018)

பாடல்

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா – முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்

திருநெறி 9 – வினாவெண்பா – உமாபதி சிவம்

பதவுரை

காரிய அவத்தை பற்றி, கனவிலே நின்று ‘இது கனவு’ என்று கனவைத் தரிசித்தல் அல்லது கனவினை கண்டு கொள்ளுதல் அரிதானது. நனவாகி, அவ்வாறு கிட்டும் அனுபவம் தன்னில் கருவிகள் இல்லாத காரணத்தால் நிஜத்தில் எவ்விதத்திலும் பலன் அளிக்காது. முனைவன் அருளில் ஒன்றி அவ்வாறான அருளிலே நின்று கண்டது என்னவெனில், அவ்வாறான சமயங்களில் காரிய அவத்தை பொருந்தாது, மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, யான் காரண அவத்தைகளைத் தரிசித்தல் எப்படி?

விளக்க உரை

  • சுத்த தத்துவங்களைக் கொண்டு அறிய வேண்டுமென்பது கருத்து.
  • நண்ணுதல் – கிட்டுதல், பொருந்துதல், செய்தல், இருத்தல்
  • காரண அவத்தை
  1. கேவல அவத்தை : ஆதிகாலம் தொட்டு ஆணவ மலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை கேவலஅவத்தை
  2. சகல அவத்தை : மாயை பற்றி உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது சகல அவத்தை.
  3. சுத்த அவத்தை : பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை சுத்த அவத்தை
  • காரிய அவத்தை
  1. நனவு : சாக்கிரம் என்ற கூறப்படும் இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
  2. கனவு : சொப்பனம் என்று கூறப்படும் இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர் செயல்படும்.
  3. உறக்கம் : சுழுத்தி என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
  4. பேருறக்கம் : துரியம் என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
  5. உயிர்ப்படக்கம் : துரியாதீதம் என்று கூறப்படும் இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
  • யோக மரபில் கண்டத்தில் இருந்து மேலே சென்று புருவ மத்தியாகிய ஆக்கினையில் பூசித்தல் மனித நிலையில் இருந்து விலக்கி தேவர்கள், முனிவர்கள் போன்ற மேல் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதுவும் கருத்து. மேல் விபரங்களை குரு மூலமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 8 (2018)

பாடல்

தெள்ளும் புழுகும் பனிநீரும் குங்குமச்சேறும் செந்தேன்
விள்ளும் மலரும் நின் பாதத்தில் சாத்தி விடாமலின்பங்
கொள்ளும்படியன்பு தந்தெனை யாண்டருள் கூற்றுவனைத்
தள்ளும் பதாம்புயனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

கூற்றுவனை தள்ளும் பாதத்தை உடையவனை, சீகாழிப்பதியை உடைய ஆபதுத்தாரணனே! தெளிவாக விரைந்து செல்லும் இமயமலை இருந்து வரும் பனி நீரும், சேற்றில் தோன்றும் குங்கும நிறமான தாமரை மலர்களும், செம்மையான தேனைத் தரும் மலர்களும் கொண்டு உன்னுடைய பாதத்தில் சாத்தி, நீங்காத இன்பம் கொள்ளும்படி அன்பு காட்டி எனை ஆண்டு அருளுவாய்.

விளக்க உரை

  • தெள்ளுதல் – தெளிவாதல், ஆராய்தல், படைத்தல், கொழித்தல், அலைகொழித்தல், தெளிவித்தல், அனுபவமுதிர்தல்
  • பங்கஜம் = பங்க+ஜ = சேற்றில் தோன்றுவது. பங்கம் = சேறு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 7 (2018)

பாடல்

அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
     அத்தை நண்ணு செல்வ …… ருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
     லற்று நின்னை வல்ல …… படிபாடி
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
     முத்த னென்ன வுள்ள …… முணராதே
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
     முட்ட னிங்ங னைவ …… தொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
     தித்து மன்னு பிள்ளை …… முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
     சித்ர வண்ண வல்லி …… யலர்சூடும்
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
     பத்தர் கன்னி புல்லு …… மணிமார்பா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

தித்தி என்னும் தாள ஜதி ஒலிக்கும் நிலைபெற்ற தில்லையில் நடனமாடுபவரின் கண்களினின்றும் தோன்றி நிலை பெற்றுள்ள மகனாகிய முருகனே, எல்லாச் சித்திகளும் இடமாய் விளங்கும் வேலாயுதம் கொண்ட திருக்கரத்தை உடையவனே, அழகிய திருவுருவம் வாய்ந்த வள்ளி மலர் சூடிப் பணியும், பக்தர்களுடைய மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும் செம்மலே, வெள்ளை யானையை ஆகிய ஐராவதத்தை உடைய இந்திரனின் கன்னியாகிய தேவானை தழுவும் அழகிய மார்பனே, பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலை கொண்டையில்  கொண்ட பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே! தந்தை, தாய், வீடு, சேர்த்து வைத்துள்ள பொன், வெள்ளி, தந்தையின் சகோதரி ஆகிய அத்தை,அவர்களோடு பொருந்திய பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய், செய்தொழிலால் குறைவான வருமானம் பெற்று, முடிவுறாத கல்வி கொண்டு, அல்லல் தரும் உறவினர்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி, உன்னை இயன்ற வகையினால் பாடி, எனக்கு முக்தி தர வல்லவன் நீ ஒருவனே என்றும், திருவலம் என்னும் தலத்தின் பெருமான் என்றும், வள்ளியின் கணவன் என்றும் என்னுடைய உள்ளத்தில் நான் உணராமல், அறியாமை நிறைந்த புலவனும் எளிமையான மூடனுமாகிய நான் இப்படி வருந்தி துன்புறுதல் நீங்காதோ?

விளக்க உரை

  • சில இடங்களில் திருவல்லம் எனும் தலத்திற்கு பதில் வல்லக்கோட்டைத் தலம் என்று உரைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உணர்க.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருப்பாதிரிப்புலியூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருப்பாதிரிப்புலியூர்

  • இறைவன் சுயம்பு மூர்த்தி.
  • இறைவனின் திருக்கண்ணை இறைவி மூடிய தவறுக்காக மனம் வருந்தி இறைவனை அரூபமாக பூசித்து, இடது கண், இடது தோளும் துடித்து சாபம் நீங்கப் பெற்றத் தலம்.
  • அம்மை பாதிரி மரத்தினடியில் தவம் செய்து சிவனாரை மணந்து கொண்ட தலம்.
  • நாள் தோறும் அம்பிகையே பள்ளியறைக்கு எழுந்தருளும் தனிச்சிறப்பான சுவாமி கோயில்.
  • கடலில் இருந்து கரையேறிய திருநாவுக்கரசர் ‘ஈன்றாளுமாய்’ எனத் தொடங்கும் பதிகத்தில் ‘அதான்றாத்துணையார் இருந்தனன் தன் அடியோங்களுக்கே’, என்று குறிப்பிடுவதால் இப்பெருமான் ‘தோன்றாத்துணை நாதர்’
  • திருநாவுக்கரசரை திருஞானசம்பந்தர் முதன்முதலில் ‘அப்பர்’ என்று அழைத்த தலம்
  • திருநாவுக்கரசரை கல்லில் பூட்டிக் கடலில் இட்டபோது ‘சொற்றுனை வேதியன்’ என்ற பதிகம்பாடி அவர் கரையேறிய இடம் கரையேறவிட்டகுப்பம் (தற்போது வண்டிப்பாளையம்) இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளது.
  • திருநாவுக்கரசர் அமர்ந்தகோலத்தில் காட்சி.
  • வியாக்ரபாதர் வழிபட்டு அருள்பெற்ற பஞ்சபுலியூர் தலங்களில் ஒன்றானதும், புலியின் பாதங்களை வேண்டிப்பெற்றதும் ஆனது இத் திருத்தலம்.
  • பாதிரியைத் தலமரமாகக் கொண்டதாலும், புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) வழிபட்டதாலும் (பாதிரி+புலியூர்).
  • வெளிப்பிரகாரத்தில், தல விருட்சமான இரண்டு பாதிரிமரங்கள்
    பூத்து காய்க்காத தலவிருட்சமான பாதிரி (சித்திரை மாதம் முழுவதும்). கவசத்துடன் – தலவிருட்சமான ஆதிபாதிரிமரம்
  • மங்கண முனிவர், இறை வழிபாட்டிற்காக மலர் பறித்து, மகிழ்வுடன் திரும்பி வரும்போது தூமாப்ப முனிவரை கவனிக்காமல் அவரிடம் தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம். பின் நாளில் வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்)
  • கன்னி விநாயகர் வலம்புரிமூர்த்தி. அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் திருக்காட்சி
  • துர்க்கை சன்னதியில் அம்மை அருவவடிவில் தவஞ்செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதி. அதன் பொருட்டு உருவமில்லாமல் பீடம்.
    திருக்கோயிலூர் ஆதீன சுவாமி அதிஷ்டானம் – வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு அம்மன் கோயிலுக்குப் அருகில் உள்ள சாமியார் தோட்டம் அருகில்.
  • ‘கடை ஞாழலூர்’ என்பது மருவி ‘கடலூர்’
  • சந்நிதிவீதியில் ஸ்ரீமத் ஞானியார் சுவாமிகள் மடாலயம்
தலம் திருப்பாதிரிப்புலியூர்
பிற பெயர்கள்

கடைஞாழல், கூடலூர் புதுநகரம், கடைஞாழல், கன்னிவனம், பாடலபுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாதிரிப்பதி, புலிசை

இறைவன் பாடலேஸ்வரர், தோன்றாத்துணைநாதர், கன்னிவனநாதர், சிவக்கொழுந்தீசர், உத்தாரநாதர், கரையேற்றும்பிரான்
இறைவி பெரியநாயகி, பிருஹன்நாயகி, தோகையாம்பிகை, அருந்தவநாயகி
தல விருட்சம் பாதிரி மரம் ( பாடலம் )
தீர்த்தம் பிரம்மதீர்த்தம்(கடல்), சிவகர தீர்த்தம், கெடில நதி, தென்பெண்ணையாறு, பாலோடை
விழாக்கள்

மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, சஷ்டி, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி திருவாதிரை , தை அமாவாசை / மாசிமகம் கடலில் தீர்த்தவாரி, பௌர்ணமி பஞ்சபிரகார வலம், சித்திரையில் வசந்தோற்சவம், வைகாசி 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், சித்திரை சதயத்தில் அப்பர் சதயவிழா,

வண்டிப்பாளையம் அப்பர்சாமி குளத்திற்கு ஒருநாள் தீர்த்தவாரி

மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு பாடலேஸ்வரர் திருக்கோயில்
திருப்பாதிரிப் புலியூர் – அஞ்சல்
கடலூர் – 607 002.
04142-236728, 98949-27573, 94428-32181
வழிபட்டவர்கள் அகத்தியர், உபமன்யு முனிவர், வியாக்ரபாதர், கங்கை, அக்னி, ஆதிராஜன்
பாடியவர்கள்

திருஞானசம்பந்தர் 1 பதிகம், திருநாவுக்கரசர் 1 பதிகம்,  அருணகிரிநாதர், ஸ்ரீ பாடலேஸ்வரர் தலபுராணம் – திருவாடுதுறை ஆதீனம், இலக்கணம் சிதம்பர முனிவர் ,கலம்பக நூல்

நிர்வாகம் திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம்
இருப்பிடம்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 201 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 18 வது தலம்.

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         2
பதிக எண்          121
திருமுறை எண் 8    

பாடல்

வீக்கமெழும் மிலங்கைக் கிறை விலங்கல்லிடை
ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்
பூக்கமழும் புனற் பாதிரிப் புலியூர்தனை
நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே

பொருள்

பெருமை மிகுந்த இலங்கைக்கு அரசனாகிய இராவணன், கயிலை மலையினை பெயர்த்த போது அவன் செருக்கு அழித்து, அவன் அலறுமாறு கால் விரலை ஊன்றிய இறைவன் எழுந்தருளி இருப்பதும், மணம் வீசும் மலர்கள் கமழும் நீர் வளம் கொண்டதுமான பாதிரிப்புலியூரை நோக்க வினைகள் மெலிந்து ஒழியும்.

 

பாடியவர்           திருநாவுக்கரசர்
திருமுறை         4
பதிக எண்          11
திருமுறை எண் 2

பாடல்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

பொருள்

வேதமான வாசகத்திற்கு நிகர் பொருளாக உள்ளவனாகவும், சோதி வடிவானவனும் அழியாத வீட்டு உலகினை உடைய எம்பெருமானுடைய பொலிவு மிக்க தன்னைத் தவிர வேறு எவரும்  இணையாக உள்ள சேவடிகளை  உள்ளம் பொருந்தி கைதொழுதலால் கல்லில் இணைத்துக் கடலில் தள்ளி விடபட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே  துணையாகச் சேர்வது நமக்கு பெரிய துணையாகும்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 6 (2018)

பாடல்

ஆன வராக முகத்தி பதத்தினில்

ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ

டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை

ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே

 

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

 

பதவுரை

திரிபுரையானவள், தண்டனை தருவதற்கு ஏற்ற வராக முகத்தை உடையவள் (வராகி); இழிகுணம் படைத்த தீயவர்களது உடலங்களை அவர்களின் காலத்தில் அழிப்பதற்காக உலக்கையோடு சங்கு, சக்கரம், ஏர், அங்குசம், பாசம் ஆகிய ஏழு ஆயுதங்களை ஏந்தி அபயம், வரதம் ஆகியவையும் கொண்டு இருப்பாள்; தங்கள் இடர்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் சிரித்த முகத்தையுடையவளாக விளங்குவாள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 5 (2018)

பாடல்

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், அன்பரன்றிப் பிறர் எவரும் அறிதற்கரியவனாக இருப்பவனும், வேத முடிவான கடவுளாக இருந்து நடனம் புரியும் குற்றமற்றவனும், உலகெங்கும் பரந்து விளங்கும் பரமானந்த சொரூபமாய் விளங்கும் நாதமாகி  எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும்,  எண் குணங்கள் எனப்படும் தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவற்றை உடையவனும் ஆன முழு முதற்கடவுளாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைகின்றோம்.

விளக்க உரை

  • சுதந்தரத்துவம்,விசுத்த தேகம்,  நிரன்மயான்மா, சர்வஞ்த்வம், அநாதிபேதம், அநுபத சக்தி, அநந்த சக்தி, திருப்தி ஆகியவை வேறு பெயர்கள்
  • இப்பாடலில் வரும் ஆழ் நுட்ப கருத்துக்க அனைத்தும் ஈசனை குறிப்பதாகவே இருக்கும். ஆகவே சிவ தத்துவம் வேறு காணாபத்தியம் வேறு அல்ல என்பது விளங்கும்.
  • மூலாத மூர்த்தி கணபதி என்பதும், துரியாதீதம் முடிவில் வரும் நாதாந்தம் என்பது ப்ரணவப் பொருள் என்பது கண்டு அனைத்திற்கும் ஆதி மூர்த்தி கணபதி என்று அறிக. மேல் விபரம் வேண்டுவோர் குரு மூலமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 4 (2018)

பாடல்

நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித்
தலத்துக் மேலேதா னென்பர் சொலத்தக்க
சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி

ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை – நம்பியாண்டார் நம்பிகள்

பதவுரை

திருஞானசம்பந்தரின் அடியவர்கள் சென்று வாழும் பதியானது, பூவுலகம் மேல் இருக்கும்  ஆறு நிலையான உலகங்களான, சூரிய சந்திர நட்சத்திர மண்டலங்களையுடைய புவர் லோகம் எனும்  சுடர் உலகத்தில் வாழ்பவர்களும், இந்திராதி தேவர் வாழ் உலகமாகிய சுவர் லோகத்தில்  வாழ்பவர்களும், மரீசி முதலிய மகான்கள் வாழும் உலகமாகிய மக லோகத்தில் வாழ்பவர்களும், சன்னு முதலிய பொது ஞானியர் வாழும்  சன லோக உலகத்தில் வாழ்பவர்களும், சனகர் முதலிய சிறப்பு ஞானியர் வாழும்  தவ லோகத்தில் வாழ்பவர்களும், பிரம்ம தேவனுடைய உலகமாகிய சத்திய லோகம், திருமாலினுடைய வைகுந்தம் மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலே உள்ள சீகண்டருத்திரர் உலகம் எனும் சிவலோக சிறப்பித்துச் சொல்லத் தக்க சுத்தர்கள் எனப்படுவோராகிய மலம் நீங்கிய தூயோர், முத்தர்கள், பல ஊழி காலமாக உச்சித் தலத்துக்கு மேலும் அவைகளுக்கு அப்பால் என்று சொல்லும் மெய்யுணர்ந்தோர் கூறுவார்கள்.

விளக்க உரை

  • 19-May-2018 : நம்பியாண்டார் நம்பிகள் குரு பூஜை ( வைகாசி பூராடம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 3 (2018)

பாடல்

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ வங்கையினி லனலேந்தி
இரவாடும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பெருமானை மறைத்தும் மறந்து போகச் செய்யும் படியாகிய செய்தும், உலக நாட்டத்தில் திளைக்கும் படி செய்யும் வலிய நெஞ்சினை உடையவர்களால் உணர்தற்கு அரியவனாய், வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் பரவி நிற்கும் பெருமானாய், காளை மேல் ஏறும் திறனுடையவனாய், பாம்புகள் படமெடுத்து ஆடவும், சடை தொங்கவும், உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்

விளக்க உரை

  • கரவார் – சதா சிவசிந்தனையாளர்
  • வித்தகன் – ஞானசொரூபன்
  • இரவு – கேவலாவத்தை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 2 (2018)

பாடல்

பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நெஞ்சமே! ஈசானம் முதல் சத்யோஜாதம் வரை ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும், யானையை அஞ்சுமாறு அதன் தோலை உரித்தவனும், தீயேந்தி ஆடுவானும், திருமீயச்சூர் இளங்கோயிலில் இருந்து அருள்புரிவனும் ஆகிய எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு; அந்த நினைப்பால் வாழ்வாய்.

விளக்க உரை

  • பஞ்சமந்திரம் -ஈசானஸ் ஸர்வ வித்யானாம், ஈச்வரஸ்ஸர்வ
    பூதானாம் – தமீச்வராணாம் பரமம் மகேச்வரம்

    முதலியவை, ஈச்வர பத அர்த்தத்தை விளக்கும் பஞ்ச மந்த்ரங்கள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 1 (2018)

பாடல்

திங்களை முடித்தார் கண்டாய் திரிகூடச் செல்வர் கண்டாய்
எங்குள சித்துக் கெல்லாம் இறையவர் இவரே என்று
நங்கைமார் பலரும் கூறும் நன்மொழித் தேறல் மாந்தி
மங்கையாம் வசந்தவல்லி மனங்கொண்டாள் மயல்கொண் டாளே

திருகுற்றாலக் குறவஞ்சி – திரிகூடராசப்பக் கவிராயர்

பதவுரை

இளம்பிறையை ஆகிய சந்திரனை சடையில் முடித்திருப்பதைப் கண்டாய்; இவரே திரிகூடநாதர் ஆவர் என்று அறிவாயாக; எல்லா இடங்களிலும், எல்லா வகையான மாயை எனும் சித்து வித்தைகளுக்கும் இவரே தலைவர் என்று பெண்கள் பலரும் சொல்கின்ற நல்ல தேன் ஒத்த சொல்லை பருகி, மங்கையான வசந்தவல்லி மனத்தில் அச்சொற்களை கொண்டவளாகி, திரிகூடநாதர் மீது மயக்கம் கொண்டவளானாள்.

விளக்க உரை

  • தோழியார், திருக்குற்றாலநாதர் புகழைக் கூறக் கேட்டு வசந்தவல்லி காதல் கொள்ளுதல்
  • உற்றார் ஆருளரோ-உயிர் கொண்டு போம்பொழுது

குற்றா லத்துறை கூத்தன்அல் லால்நமக்கு உற்றார் ஆருளரோ

எனும் திருநாவுக்கரசர்  சுவாமிகள் அருளிச்செய்த திருஅங்கமாலையும்

  • குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே

                எனும் மாணிக்கவாசகரின் திருப்புலம்பலும் ஒப்பு நோக்கி குற்றால நாதர்                      ஆகிய கூத்தன் பெருமை உணர்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 31 (2018)

பாடல்

பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழ னாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

தலையில் சந்திரனை பிறையாக அணிந்தவனும், பெருமை மிக்க செயல்களைச் செய்கிறவர்களும், நல்ல பண்புடையவர்களாக விளங்குகின்றவர்களும், புகழ்ச்சியை விரும்பாதவர்களும், உலகியல் நோக்கத்தினை பிரதானமாக கொண்டு செயல்படுவர்களும் ஆன பெரியோர்களின் தலைவனும், வேத வடிவங்களாகி அதன் தலைவனாக இருப்பவனும், மழுவாகிய வாளை உடையவனும், மால் துயிலுகின்ற கடலாகிற பாற்கடலிலே தோன்றிய நஞ்சினை உண்டு அதனால் ஏற்பட்ட கண்டத்தை உடையவனும், கோபம் கொண்டு கனல் சேர்ந்த விழிகளால் காமனைக் எரித்தவனும், சிவபெருமான் தம் திருநடனத்தைப் புலப்படும்படிக் காட்டியருளும் செல்வனுமாகிய காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தை உறைவிடமாக கொண்டவனாகிய இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம்.

விளக்க உரை

  • காட்டுப்பள்ளிக் குறையுடை யான் – அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பொருள் பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்பட்டுளது. ஆன்றோர்கள் ஆய்ந்து அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 30 (2018)

பாடல்

அனாதி சிவனுடைமை யால்எவையும் ஆங்கே
அனாதியெனப் பெற்ற அணுவை – அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோ(டு) எவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

பதவுரை

எல்லா மும்மல ஆன்மாக்களும் அனாதி காலம் தொட்டு சிவனுக்கு உடைமை ஆகையால், சிவனைப்போல அனாதித்தன்மை பெற்ற அணுவான அந்த மும்மல ஆன்மாவை, அனாதி காலம் தொட்டுவரும் ஆணவம், மாயை, கன்மம் என்கிற துன்பங்கள் முற்றிலும் நீங்கும்படி அகலச் செய்து சிவசக்தி சொருபமாக இருந்து காத்தல் தொழில் செய்தல் சிவனுக்கு கடமை என்று அறிவாயாக.

விளக்க உரை

  • இருத்தலிலும், முத்தியிலும் ஆன்மாவுக்குச் செயலில்லை என்பது பெறப்படும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 29 (2018)

பாடல்

மூலம்

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தே ரேறி யவனிவ னாமே

பகுப்பு

காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

உடம்பு ஆகிய நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கையைப் பொருத்தி,  கண்ட இடங்களில் செலுத்துதலினால் வழியறியாது மாயைக்கு உட்பட்டு மயங்குகின்ற உயிர்கள், சிறிதே உணர்வு பெற்றுச் தூயவனாகிய சிவன் மேல்  அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால்,  ஆயத்தேர் எனும் சமாதி யோக வழியில்  சீவன் சிவனை அடைந்து அவனாகி விடும்.

விளக்க உரை

  • சிவன் அருள் பெற்று, சாயுஜ்யம் எனும் இறைத்தன்மையில் சிவமாவதற்கு முதலில் அன்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட பாடல்.
  • உடம்பை தேராக உருவகம் செய்ததினால், அதன் இயல்யு ‘மாயத் தேர்’ ஆனது.
  • ‘கைகூட்டல்’ – கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியம், அஃதாவது தேரினை செலுத்துதல்
  • நேயத்தேர் – இமயம் நியமம் முதலிய ஒழுக்கங்களைக் கைக்கொண்டு
  • ஆயத்தேர் – சமாதி யோகம், சிவனடியார் திருக்கூட்டம்
  • ஆயம் – கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய்; குடியிறை; கடமை; சூதுகருவி; சூதாட்டம் பசுத்திரள்; நீளம்; மக்கள்தொகுதி; பொன்

 

 

மதனா அண்ணா

எனக்குத் தோன்றிய விளக்கம்.

ஆத்மா ஓர் தேகம் அடைந்து சில காலம் பயணிப்பதை பயணம் என்று கவிதை நடையில் குறிப்பர். நம் ஆத்மாவானது காயம் எனும் தேர் ஏறி அதனை இயக்கும் மனம் எனும் பாகன் கைகொடுக்க மாயம் எனும் நிலையின்மையில் பயணிக்காது எது உண்மையென்று உணர்விக்கும் நேயம் எனும் மார்க்கம் பற்றி அதில் பயணித்தால் அழிவில்லாத மெய்ப்பொருளாகிய சர்வேஸ்வரனின் அருள் கிடைக்கப் பெற்றால் மட்டுமே அடைய இயலும் ஆய்தல் அதாவது உட்தேடல் எனும் கிட்டுதற்கறிய பாக்கியம் பெற்று அதன் மூலம் நான் எனும் நிலையறுத்து நானே அவன் எனும் மிக உயர்ந்த அஹம் பிரஹ்மாஸ்மி எனும் அத்வைத நிலை அல்லது ஒருமை நிலை அண்டும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 28 (2018)

பாடல்

சக்கரமாய் மேலெழுந்து, சலந்திரனைக் கடிந்து
    தலையறுத்து யிரத்தமுண்டு நமஸ்கரித்த அப்பால்
அக்கணமே அறிந்து அரி சிவனைப் பூஜித்தான் 
    அம்புயக்கண் ணோடேஅர்ச் சித்தானப்பா
மிக்கசிவன் வெளிப்பட்டு வேண்டியதே தென்ன
    மெய்யான சக்கரந்தான் வேணு மென்றான்
முக்கியமாய்ச் சக்கரத்தை யீய்ந்தாரப்பா
    முன்னடந்த சிவன்பெருமை மொழியக்கேளே.

அகத்தியர் தத்துவம் 300

பதவுரை

சக்ர வடிவத்தில் மேலே எழுந்து, சலந்திரனை அழித்து, அவன் தலையை அறுத்து, அவன் ரத்தத்தினை அருந்திய தருணம் அறிந்து, தாமரை மலர் போன்ற கண்களை உடைய திருமால் சிவனை பூசித்தார்; அவ்வமயம் சிவன் வெளிப்பட்டு ‘வேண்டியது என்று’ கேட்க, உண்மையான ‘இச் சக்கரம் வேண்டும்’ என்றார்; காலத்தால் மாறாத பெருமை உடைய சிவன் இந்த முக்கியமான சக்கரத்தை திருமாலுக்கு ஈந்தார்.

விளக்க உரை

  • 25 மகேச மூர்த்தங்களில் ஒன்றான ‘சக்ரவரதர்’ இத்துடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • கடிதல் – விலக்குதல், ஓட்டுதல், அழித்தல், கண்டித்தல், அரிதல், அடக்குதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 27 (2018)

பாடல்

உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

விளக்க உரை

  • `காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை  பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
  • உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
  • ‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • தங்கள் உச்சியாய் – யோக தொடர்புள்ளவர்கள் குரு மூலமாக அறிக

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 26 (2018)

பாடல்

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
     அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
     திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
     கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
     பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

தேவாரம் -ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

புறப்பொருளை அறியும் கருவி மட்டும் கொண்டு, தன்னையறியும் உயிரறிவு துணையுடன் தன் முயற்சியால் அறிந்து அணுவதற்கு அரியவன் ஆனவனும், ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுதொழில்களை செய்யும் தில்லைவாழ் அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவனும், வீடுபேறு அளிக்கும் அறிய பெரிய வேதங்களின் உட்பொருளாக இருப்பவனும், மிகவும் சிறிதானதும், நுண்ணியதுமான அணு அளவில் உள்ளவனும், யாரும் தம் முயற்சியால் உணரமுடியாத மெய்ப்பொருள் ஆகியவனும், தேனும் பாலும் போன்று இனியவனும், தானே விளங்கும் சுயம்பிரகாசம் ஆகிய நிலைபெற்ற அறிவே ஆன ஒளிவடிவினனும், எல்லா வகையிலும் மேம்பட்டவனும், வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையில் எழுந்தருளும் அப்பெருமானுடைய உண்மையான புகழைப் பற்றி பேசாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களே.

விளக்க உரை

  • பெரும்பற்றப் புலியூரானை – புலி கால் முனிவர் பூசித்த திருப்பாதிரிப் புலியூரில் உள்ளவனை என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது. அந்தணர் என்று தில்லை வாழ் அந்தணர் குறித்த செய்தியாலும்,  புலிக்கால் முனிவர் பற்றிய செய்தியாலும், ஆறாம் திருமுறையில் முதல் தலம் மற்றும்  கோயில் எனப்படுவதும், சைவர்களால் குறிக்கப்படுவதும் ஆன ‘கோயில்’  என்று விளக்கி இருப்பதாலும் இப்பொருள் கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. பிழை இருப்பின் ஆன்றோர்கள் மன்னிக்க.
  • ‘அணு’ என்றதனால் நுண்மையும், ‘பெரியான்’ என்றதனால் அளவின்மையும் அருளியது குறித்து  ஒப்பு நோக்கி  சிந்திக்கத் தக்கது.
  • ‘பிறவாநாள்’ – பிறவி பயனின்றி ஒழிந்த நாளாதல் பற்றி. அறம், பொருள், இன்பங்கள் நிலையற்ற உலகியல் இன்பம் தருவதான சிறுமை தரும் என்பது பற்றியும், இறை இன்பமான பெரும் பயன் தராது எனும் நோக்கில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 25 (2018)

பாடல்

தந்தை தாயுநீ என்னுயிர்த் துணையுநீ சஞ்சல மதுதீர்க்க
வந்த தேசிக வடிவுநீ உனையலால் மற்றொரு துணைகாணேன்
அந்தம் ஆதியும் அளப்பருஞ் சோதியே ஆதியே அடியார்தஞ்
சிந்தை மேவிய தாயுமா னவனெனுஞ் சிரகிரிப் பெருமானே.

தாயுமானவர்

பதவுரை

திருவடியையும் திருமுடியையும் முறையே அரியும் அயனும் தேடிய பொழுது அவர்கள் அறியமுடியாதபடி அழலாக நின்ற பெரும் சுடர்ப் பிழம்பே! உண்மையான அடியார்களுடைய  தூய உள்ளத்தில்  பொருந்தியும், தாயுமானவன் எனும் தனிப்பெயர் வாய்ந்த சிரகிரிப் பெருமானே, அடியேனுக்கு  தந்தையும் நீயே, தாயும் நீயே, எளியேனுடைய உயிர் ஈடேறத் துணைபுரிய வந்த உயிரினுக்கு உயிரான துணையும் நீயே; உள்ளத்தில் தோன்றும் கவலைகளை நீக்கி, ஆட்கொண்டு அருளும்படி எழுந்து அருள வந்த சிவகுருவும் நீயே;

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 24 (2018)

பாடல்

சீர்கொண்ட செம்பொன் திருமேனியுஞ்செம் முகமலரும்
கார்கொண்ட சட்டையும் தண்டாயுதமும் கணங்கள் எட்டும்
கூர்கொண்ட மூவிலைச் சூலமும் கொண்டருள் கூர்ந்த கொன்றைத்
தார் கொண்ட வேணியனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

சீர்காழி தலத்தில் உறையும் ஆபத்து தாரணனவன், அழகு பொருந்திய செம்மையான திருமேனியும், செம்மையான மலர்ந்த முகமும், கருமை நிறம் கொண்ட மேனியும், தண்டாயுதமும் கொண்டு, காள பைரவர், அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என்று எண் திசைக்கும் ஒன்றாக இருக்கும் அட்ட பைரவராக விரிந்து*, கூர்மையான மூன்றாக இருக்கும் சூலமும், அடர்ந்த இருள் போன்ற கூந்தலில் கொன்றைப் பூவினை அணிந்தவன் ஆவான்.

விளக்க உரை

  • * கணங்கள் எட்டும் – மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை (8) பைரவ மூல வடிவங்கள் எனவும், இந்த எட்டு வடிவங்களே 64 பைரவ மூர்த்த பேதங்களாக வடிவங்களாக விரிவடைகின்றன என்ற பொருளில் விளக்கப்பட்டுள்ளது. மாற்று கருத்து இருந்து தெளிவு படுத்தினால் மகிழ்வு அடைவேன்.
  • சீர் – 1) செல்வம், 2) அழகு, 3) நன்மை, 4) பெருமை, 5) புகழ், 6) இயல்பு 7) சமம் 8) கனம் 9) ஓசை 10) செய்யுளின்  ஓருறுப்பு 11) உறவினருக்கு விழாக்களில் செய்யப்படும் சீர்
  • கார் – 1) கருமை 2) கரியது 3) மேகம் 4) மழை 5) கார்ப் பருவம் ஆவணி, புரட்டாசி மாதங்கள் அடங்கிய மழைக் காலம் 6)  நீர் 7) கார்நெல் 8) கருங் குரங்கு 9) வெள்ளாடு 10) ஆண்மயிர் 11) எலிமயிர் 12) கருங்குட்டம் 13) இருள் 14) அறிவு மயக்கம் 15) ஆறாச் சினம் 16) பசுமை 17) அழகு 18) செவ்வி
  • கூர்தல் – 1) மிகுதல் 2) விரும்புதல் 3) வனைதல் 4) குளிரால் உடம்பு கூனிப்போதல்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

சிவனுக்கு சத்யோஜாத மந்திரம் எந்த உறுப்பு?
முழந்தாள்

Loading

சமூக ஊடகங்கள்