அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 7 (2018)

பாடல்

பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் பொருகடற்பவளமொ டழனிறம்புரையக்
குன்றிரண்டன்ன தோளுடையகலங் குலாயவெண்ணூலொடு கொழும்பொடியணிவர்
மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை மெல்லியலாளையோர் பாகமாப்பேணி
அன்றிரண்டுருவ மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவனான ஆட்சீஸ்வரர், தமது முறுக்கேறிய பொன் திரண்டதைப் போன்ற சடையையும்,  பெருங்கடலில் அலைகளில் தோன்றியதும், தீ வண்ணத்தை ஒத்ததுமான பவள கொடியையும் கொண்டு, குன்றுகள் போன்ற தரும் இரண்டு தோள்களில் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினையும், மென்மைத் தன்மையும் வாய்ந்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓர் உருவில் இரண்டு உருவாய்த் தோன்றும் அடிகளாவார்.

விளக்க உரை

  • கொழும் பொடி – வளப்பமான விபூதி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 4 (2018)

பாடல்

கரந்தை கூவிள மாலை
     கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
     வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
     திகழ்தரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
     வல்வினை நலியஒட் டாரே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

திருத்தமான மாடங்கள் உடையதும்,  உயர்ந்து தோன்றுகின்றதும், பெரும் புகழ் கொண்டதும் ஆன திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனானவர், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆநிரைகளை மீட்டுவருவதை குறிப்பிடுவதாகிய  கரந்தைப் பூவினாலும், முக்கூறுகளைக் கொண்டதும்,  திரிசூலத்தின் குறியீடாகவும் உள்ளது கூவிள இலை என்பதான வில்வ இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிகுந்த பூதகணங்கள் புடைசூழ பரமனாகி நம் இறைவனானவரும், அமுதம் போல்பவரும், தம் அடியாரை வலிய வினைகள் வந்து துன்புறுத்தாமல் காப்பவரும் ஆவர்.

விளக்க உரை

  • மாயைக்கு உட்பட்ட பசுவாகிய உயிர்களை மீட்கும் பதி எனும் சைவ சித்தாந்த கருத்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமுருகன்பூண்டி

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருமுருகன்பூண்டி

  • முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தி
  • சிவன் மற்றும் அம்பாள் இருவரும் மேற்கு நோக்கி திருக்காட்சி. மூலவர் மற்றும் அம்பாள் பீடங்களின் கோமுகமும் வடக்கு நோக்கிய வித்தியாசமான அமைப்பு
  • சூரசம்ஹாரத்தால் உண்டான பாவங்கள் நீங்க முருகப்பெருமான் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டத் தலம்
  • சண்முகநாதர் கையில் வேல் இல்லாமலும், வாகனமான மயிலும் இல்லாமலும் திருக்காட்சி
  • சேரமான் பெருமானின் சிறப்பு விருந்தினராக சென்று பொன்னும் பொருளுடன் திரும்பியபோது கூப்பிடு விநாயகர் கோவிலில் இரவைக் கழித்த சுந்தரரிடமிருந்த பரிசுப் பொருட்களைத் தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பிக் கொள்ளையடிக்கச் செய்ததால், உதவியை நாடிய சுந்தரரருக்கு சிவன் தான் குடிகொண்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி உதவினார் விநாயகர்; சுந்தரரரும் அங்கு சென்று  சிவனைத் திட்டிப் பாட அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கிய தலம்.
  • சிவனார் இருக்குமிடத்தை சுந்தரருக்கு உணர்த்திய ‘கூப்பிடு விநாயகர்’ தனியாக பாறைமேல் திருக்காட்சி (அவிநாசியில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவு)
  • வில்கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள்; பரிசுப்பொருள்களை பறிகொடுத்த நிலை மற்ரும் பறிகொடுத்த பொருள்களை மீண்டும்  பெற்றநிலை என  இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்
  • இங்குள்ள தல விருட்டமான மாதவி மரம் எனும் குருக்கத்தி மரம் துர்வாசர் மேலுலகில் இருந்து எடுத்துவந்தது
  • பிரம்மதாண்டவம் என போற்றப்படும் நடராஜரின் தாண்டவ வடிவம்
  • பிரம்மஹத்தி தோஷத்தை போக்கவல்ல தலம்.
  • தலபுராணத்தின் படி பிரம்மஹத்தி தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகர் சந்நிதியின் அருகே உள்ள சதுரகல்லாக உள்ளது
  • கோயிலுக்கு வெளியே உள்ள பிள்ளையார் கோயிலின் எதிரில் உள்ள பாறையில் உள்ள சிறுகுழியில் 12 வருஷங்களுக்கு ஒருமுறை நீர் பொங்குவது சிறப்பு
  • மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நிதி
  • தலபுராணம் செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடப்பட்டது

 

 

ஓவியம் : Vishnu Ram
தலம் திருமுருகப்பூண்டி
பிற பெயர்கள் மாதவிவனம் , முல்லைவனம் , கந்தமாபுரி
இறைவன் முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி
இறைவி முயங்குபூண் முலையம்மை, ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை , ஆவுடை நாயகி , மங்களாம்பிகை
தல விருட்சம் குருக்கத்தி மரம் , வில்வமரம்
தீர்த்தம் சண்முக தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் மற்றும் ஞான தீர்த்தம்
விழாக்கள் தை மாதத்தில் வேடுபரி உற்சவம், மாசி மாதத்தில் 13 நாட்கள் பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி , திருக்கார்த்திகை , மார்கழி ஆருத்ரா தரிசனம் , ஐப்பசி அன்னாபிஷேகம் , கந்தசஷ்டி , தைப்பூசம் , நவராத்திரி , வைகாசி விசாகம்
மாவட்டம் திருப்பூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை ௦6:௦௦ முதல் 12:3௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦8:௦௦ வரைஅருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில்,
திருமுருகன்பூண்டி – 641652. திருப்பூர் மாவட்டம்.
04296-273507, 94434-59074
வழிபட்டவர்கள் அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் திருப்புகழ்
நிர்வாகம்
இருப்பிடம் அவினாசியில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவு, திருப்பூரில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் சுமார் 8 கிமீ தொலைவு, கோயம்புத்தூரில் இருந்து சுமார் 43 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்         49
திருமுறை எண் 5

பாடல்

தயங்கு தோலை உடுத்துச் சங்கர
   சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
   மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
   முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
   எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

பொருள்

எம்பெருமான் நீரே!  நீர்  விளங்குகின்ற தோலை உடுத்தி,  சாம வேதத்தைப் பாடிக்கொண்டு, அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியவில்லையா? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீர் என்றால், தழுவுகின்ற  அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும்  இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்         49
திருமுறை எண் 6

பாடல்

விட்டி சைப்பன கொக்க ரைகொடு
   கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
   குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
   கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
   எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

பொருள்

எம்பெருமான் நீரே!, நீர் கொட்டிப் பாடுதற்கு உரிய  தாள அறுதிக்கு ஏற்ப விட்டு விட்டு ஒலிக்கின்ற  ‘கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா’ என்னும் வாத்திய கருவிகள் ஆகிய இவற்றை விரும்புவராய் உள்ளீர்; அதுமட்டும் அல்லாமல்  ஊரில் இருப்பவர்கள் இட்ட பிச்சையை ஏற்று உண்பீர்;  பலவகை அரும்புகள் அலர்ந்து மணம் கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 3 (2018)

பாடல்

கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி யிரும்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

இறைவன் ஞான வடிவினன் என்பதை அறிதவர்களுக்கு மட்டுமே நற்பயன் கிடைக்கும்; அவ்வாறு இல்லாமல் க்ஷேத்திராடனம் என்பதன் பொருட்டு காடு மற்றும் நாடு சார்ந்த பகுதிகளில் மாறிமாறி திரிந்தாலும், அங்கங்கள் ஊனம் ஆகும் அளவிற்கு பெருந்தவம் செய்தாலும், ஊனுண்டலை விடுத்து, தத்துவ ஆராய்ச்சி ஆகிய ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டாலும் என்ன பயன் கிடைக்கக் கூடும்?

விளக்க உரை

  • ஈனம் – குற்றம்
  • இரும் – பெரிய

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)

பாடல்

மத்த யானை யேறி மன்னர்
   சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை
   சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
   வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி
   யென்ப தடைவோமே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும்  அவர்களுடன்  யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’  எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.

விளக்க உரை

  • தம் நெஞ்சிற்கும், அரசர்க்கும்  அறிவுறுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 24 (2018)

பாடல்

அஞ்சினா லியற்றப் பட்ட வாக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினா லடர்க்கப் பட்டிங் குழிதரு மாத னேனை
அஞ்சினா லுய்க்கும் வண்ணங் காட்டினாய்க்கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினாற் பொலிந்த சென்னி யதிகைவீ ரட்ட னீரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பஞ்சகவ்வியம் எனப்படும் பசுவிலிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் என்ற ஐந்துபொருள்களைக்கொண்டு மந்திர பூர்வகமாகச் சேர்க்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும் சென்னியை உடைய அதிகை வீரட்டப் பெருமானேஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட இவ்வுடலைப் பெற்று, சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி  ஆகிய வாக்குகளைக் கொண்டுஇவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக, அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன்.

விளக்க உரை

  • அஞ்சு – ஐம்பெரும் பூதம். ஸ்தூலதேகம் ஐம்பெரும் பூதமயம் எனப்பட்டது

Loading

சமூக ஊடகங்கள்

சைவத்திருத்தலங்கள் 274 – திருக்கருவூர்ஆனிலை

தலவரலாறு(சுருக்கம்) / சிறப்புகள்– திருக்கருவூர்ஆனிலை

  • மூலவர் சதுர வடிவ ஆவுடையார். சற்று சாய்ந்த கோலத்தில் திருக்காட்சி. சிவலிங்கத் திருமேனியின் இருபுறமும் பசுவின் குளம்புபட்டது போன்ற பள்ளங்கள் போன்ற தோற்றம்.
  • இரண்டுஅம்பாள் சந்நிதிகள். 1. பழமையான கிழக்கு நோக்கியுள்ள அலங்காரநாயகி அம்மை 2. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட சௌந்தரநாயகி அம்மை
  • காமதேனு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம்.
  • தைப்பூச தினத்தன்று சிவனாருடன் ஐக்கியமான கருவூர்த் தேவரின் சமாதிக் கோயில் தனியாக தெற்குப் பிரகாரத்தில்
  • பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு
  • எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்தியது கோயில் சந்நிதி வீதிக்கு கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில்
  • புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டத் தலம்
  • எறிபத்த நாயனார் பிறந்த தலம்
  • சிவகாமியா அம்மாள் வாழ்ந்து தொண்டு செய்தத் தலம்
  • திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்ததலம்
  • கருங்கல்லால் ஆன கொடிமரம்
  • திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூல் கருவூர் மான்மியம். இது யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது.
தலம் திருக்கருவூர்ஆனிலை
பிற பெயர்கள் கருவூர் , திருக்கருவூர், கற்பபுரி
இறைவன் கல்யாணபசுபதீஸ்வரர்,பசுபதிநாதர்,பசுபதி, ஆனிலையப்பர்
இறைவி அலங்காரவல்லி,கிருபாநாயகி , சௌந்தரநாயகி
தல விருட்சம் வில்வமரம் , சீந்தில் கொடி,  ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று அழைக்கப்படும் வஞ்சி மரம்.
தீர்த்தம் பிரம்மதீர்த்தம் , அமராவதி ( ஆம்பிரவதி ) ஆறு
விழாக்கள் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், மார்கழித் திருவாதிரை உற்சவம்
மாவட்டம் கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணிமுதல் மதியம் 11:00 மணிவரை
மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரைஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர், கரூர் மாவட்டம். PIN – 639001
04324-262010 , 99940-12617
வழிபட்டவர்கள் வியாசர், தேவர்கள், சுக்கிரன், , பிரம்மன், திக்குப்பாலர்கள், காலவமுனிவர், முசுகுந்த சோழ மன்னன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம், கருவூர்த்தேவர் ( திருவிசைப்பா ), அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம் திருச்சியில்இருந்துசுமார் 75 கிமீ தொலைவு; ஈரோட்டில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவு
இதரகுறிப்புகள் தேவாரத்தலங்களில் 211 வதுதலம்
கொங்குநாட்டுத்தலங்களில் 4 வதுதலம்.

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 3

பாடல்

விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே

பொருள்

ஆகாயத்தில் உலாவும் மதியைச் சூடியவராகவும். வேத கானம் எனப்படும் சாமகான இசையாக விளங்குபவராகவும். மேலான எண்குண பண்பை உடையவராகவும், உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவராகவும், அடியவர்கட்கு நல்லவர் எனும் திருப்பெயருடன் விளங்குபவராகவும். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர்.

விளக்க உரை

கண்ணு ளார் – கூத்து நிகழ்த்துபவர்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 8

பாடல்

கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே

பொருள்

கருவூர் ஆனிலையில் விளங்கும் ஈசன்,  பெரியவனாகவும், வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் தலை, தோள் ஆகியவற்றைத் தன் திருத்தாளினால் அழுந்தும்படி செய்து அவன் வருந்துமாறு செய்து பின் அவனுக்கு அருள் கொடுத்தவனாகவும், கூத்தனாக விளங்குபவன்.

விளக்க உரை

கடுத்த – கோபித்த
தாள் – திருவடி
அடர்த்தல் – நெருக்குதல், அமுக்குதல், வருத்துதல், போர் புரிதல், தாக்குதல்
கொல்லுதல், கெடுத்தல்

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 11 (2018)

பாடல்

மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா!
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்;
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ!
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

வேதங்களை அருளிச் செய்தவனே, விலைமதிப்புடைய பொருள்களை கரையிடத்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ச்சியும் அருளும் நிறைந்தும்  கடல் அலைகள் வந்தும் உலவுகின்ற ஒற்றியூர்என்னும் ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, என்றும் வலிமையாய் உள்ளவனே, மணி போன்றவனே, அழகுடையவனே, நீ எனக்கு, ‘மகம்என்னும் விண்மீன் கீழ் வந்த, ‘சனிஎன்னும் கோள் போன்றவன் ஆயினேன் ஆதலால் எனது குருட்டுத் தன்மை பற்றி காரியம் சொல்ல   அகத்தில் உள்ள பெண்டுகளை அழைத்தால் கண்ணிலியே நீ என்ன அறிவாய்போஎன்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; மூன்று கண்களையுடையவனே, முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்இது முறையோ!

விளக்க உரை

  • சுந்தரர், உலகியர் முன்வைத்து தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறியது
  • சனிக்கிர சஞ்சாரம் மக நட்சத்திரத்தில் வரும்போது, நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்பது ஜோதிட சாத்திரம்.
  • நீ மூன்று கண்களோடு இருக்கிறாய், நான் கண்கள் இழந்து துன்புறுகிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார்; துன்பம் அதிகம் உடையவர் என்பதாலும், இறைவனை இவ்வாறு வைது கூறினும் அவன் தன் அடியார்கள் இடத்தில் அனைத்தையும் பொறுக்கும் அருளாலன் என்பதையும் விளக்க இப்பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 21 (2018)

பாடல்

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
   சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
   சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
   போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
   ஆவ டுதுறை ஆதிஎம் மானே

தேவாரம் – ஏழாம்  திருமுறை – சுந்தரர்

பதவுரை

சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று,  தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல்  ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம்  எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து  அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து,  உன்னை வந்து அடைந்தேன்!  என்னை ஏற்று கொண்டு அருள்.

விளக்க உரை

  • சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
  • சிலந்தி,  கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
  • தெருளுதல் – உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், பூப்படைதல்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 17 (2018)

பாடல்

தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
   தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
   பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
   மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
   சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து,  பயனில்லாத சொற்களைப் பேசி  பின்னுதல் உடைய  சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே  மக்கள்  பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது  இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு  நிற்க  நீ  தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு  செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற  நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை  அணுகச் சென்று  இவனே  தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கொடிமாடச் செங்குன்றூர்

 

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருச்செங்கோடு

 

  • அர்த்தநாரீஸ்வராக விளங்கும் தலம்
  • வெள்ளை பாஷாணத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் மூலவர். திருவடிவம் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி திருக்காட்சி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை – பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
  • அர்த்தநாரீஸ்வரர் பாதத்தின் அடியில் தேவ தீர்த்தம் எனப்படும் நீர் சுரந்தவாறு உள்ள அமைப்பு
  • ஆண் பாகமான வலக்கையில் தண்டம் ஏந்தியும், பெண் பாகமான இடக்கையை இடுப்பிலும் வைத்தவாறும் கால்களிலும் ஒருபுறம் சிலம்பும் , மறுபுறம் கழலும் அணிந்தவாறு திருக்காட்சி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் உற்சவ திருமேனி
  • வெள்ளைபாஷாணத்தால் செய்யப்பட்ட திருவடிவம் ஆன செங்கோட்டு வேலவர் வலக்கையில் வேல் ஏந்தி , இடக்கையை இடுப்பில் வைத்தவாறு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி; அடியில் உள்ள பீடம் சதுர வடிவிலானது
  • கேதாரகௌரியம்மை மரகதலிங்கத்தை வழிபாட்டு சிவனாரின் இடப்பாகத்தை பெற்ற தலம்
  • கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி
  • ஆமை வடிவத்தின் மேல் அமைந்த நந்தி மண்டபம்
  • ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் இத்தலமும் ஒன்று
  • மேலமாடவீதியிலிருந்து பார்ப்பதற்கு நாகம் போன்று காட்சியளிப்பதால் நாகாசலம், நாககிரி.
  • மலை சிவந்த நிறமாக காட்சியளிப்பதால் செங்கோடு
  • விறன்மிண்ட நாயனார் பிறந்து, வாழ்ந்து, முக்திப்பெற்ற தலம்
  • திருஞானசம்பந்தர், திருநீலகண்டப்பதிகம் பாடிய தலம்
  • திருஞானசம்பந்தர், கொங்கு நாட்டுத் தல யாத்திரையின் போது, முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை ‘நளிர்சுரம்’ பற்றி வருத்த ‘அவ்வினைக் கிவ்வினை’ என்னும் பதிகம் பாடி, ‘தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்’ என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
  • பாண்டிப்புலவரேறு என்ற புலவருடன் குணசீலர் என்ற புலவர் புலமையை நிருபிக்கும் போது  “சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே” – என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடிய போது, குணசீலர் என்ற அந்த புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டு  “அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே” என்று பாட்டினை முடித்து   திரும்பிப் போகும்படிச் செய்தார்
  • 1200 படிகள் மேல் திருக்கோயில் உள்ளது. பாம்பு உருவங்கள் கொண்ட படிக்கட்டுகள்; ஓரிடத்தில் நீளமான 20 அடி பாம்பு வடிவத்திலேயே ஏறும் வழி
  • இத்தலம் பற்றிய குறிப்புக்கள் உள்ள நூல்கள் – சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம்
  • கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி

 

தலம் திருக்கொடிமாடச் செங்குன்றூர்
பிற பெயர்கள் திருச்செங்கோடு, தெய்வத் திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி செம்மலை, மேருமலை, சிவமலை, நாகாசலம், பனிமலை, கோதைமலை, அரவகிரி, பிரம்மகிரி, வாயுமலை, கொங்குமலை, வந்திமலை, சித்தர்மலை, சோணகிரி மற்றும் கந்தகிரி
இறைவன் அர்த்தநாரீஸ்வரர்
இறைவி பாகம்பிரியாள்
தல விருட்சம் இலுப்பை, வன்னி
தீர்த்தம் தேவ தீர்த்தம்
விழாக்கள் சித்ரா பௌர்ணமி , வைகாசி விசாகம் , மாசிமகம் , பங்குனி உத்திரம்
மாவட்டம் நாமக்கல்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். :Pin. 637211.

04288-255925, 93620-23163, 93620-22900, 93642-29181

வழிபட்டவர்கள்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் ஈரோட்டில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவு , நாமக்கல்லில் இருந்து சுமார் 32 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில்  வது தலம்

கொங்கு நாட்டுத் தலங்களில் 4 வது தலம்.

 

அர்த்தநாரீஸ்வரர்

 

 

புகைப்பட உதவி : arthanareeswarar.com

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை         1
பதிக எண்          107
திருமுறை எண் 2

பாடல்

அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையா ரிளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே

பொருள்

அலைகள் நிறைந்ததும், குளிர்ந்த கங்கை நதி, பாம்பு ஆகியவற்றை தனது திருச்சடையில் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையில் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடையதும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுபவர்களது தடுமாற்றம் விலகும்.

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை         1
பதிக எண்          107
திருமுறை எண் 6

பாடல்

ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே

பொருள்

மேம்பட்டதான மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய், திருமுடியில் தடுத்த கங்கையோடு சந்திரப் பிறையையும் சடையில் அணிந்தும், கோங்க மரங்கள் நிறைந்தும், தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் அடியோடு நீங்கும்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 4 (2018)

பாடல்

ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே, ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.

விளக்க உரை

  • செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உண்ர்வு கூட இல்லை.
  • குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 31 (2018)

பாடல்

தங்கிய மாதவத்தின் தழல்
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு
நாகேச் சரத்தானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

செங்கயல் எனும் ஒரு மீன்வகையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, மாற்றம் இல்லாத, நிலையான பெரிய தவத்தினால், வேள்வித் தீயினியில்  இருந்து தோன்றிய சிங்கமும், மிகப் பெரியதான புலியும், திருமாலின் நிறம் ஒத்த பருத்த பெரிய யானையும் கதறி ஒடும்படி செய்தும், அழியும்படி செய்வதுமான மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின் தோலை உரித்தும், அத்தோலைப் போர்த்தியும் செய்தற்குக் காரணம் யாது?

விளக்க உரை

  • ‘உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்’ என்பது பற்றிய பாடல்.
  • தவம் – தாருகாவன முனிவர்களுடையது. அட்ட வீரட்டான செயல்களில் ஒன்றான இவ்வரலாற்றினை வழுவூர் திருத்தல பெருமை கொண்டு அறிக.
  • போர்த்தல் – மறைத்தல் என்னும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருநணா

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருநணா

  • இறைவன் சுயம்பு மூர்த்தி
  • சோமாஸ்கந்த வடிவம் கொண்ட திருக்கோயில்
  • நாககிரி, சங்ககிரி, மங்களகிரி, வேதகிரி என்ற நான்கு மலைகளுக்கு நடுவில் பத்மகிரி மலையில் அமைந்துள்ள திருத்தலம்.
  • தேவர்களும், அசுரர்களும் திருமாலின் உதவியோடு பாற்கடலைக் கடைந்து இறுதியில் அமுதம் எடுத்தப் பின் பராசர முனிவர்  நாராயணனிடமிருந்து சிறிது அமுதத்தைப் பெற்று வரும்போது,  வழியில் அசுர்கள் அந்த அமுத்தை அவரிடமிருந்து பறிக்க முற்படுகையில் பவானி கூடுதுறையில் காயத்ரி தீர்த்தம் என்று ஒரு தீர்த்த கட்டத்தில் அமுதம் கொண்ட கலசத்தைப் புதைத்து வைத்துவிட்டதால், அந்த  அமுதமே பின்பு  காயத்ரி லிங்கம் என்று லிங்க உருவாக மாறி இருக்கிறது.
  • திருஞானசம்பந்தர் இத் திருதலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் கூடிய ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றத் திருத்தலம்.
  • பள்ளியறையில் தந்தந்தினாலான ஊஞ்சலில் அம்மை
  • வேதங்களுக்கு தலைவியாக விளங்குவதாலும், நான்கு வேதங்களால் பூஜை செய்யப்பட்டதாலும் வேதவல்லி எனும் திருநாமத்துடன் அம்பாள்
  • பவானி ஆறு, கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி காவிரி இவைகள் சேருமிடத்தில் இத்தலம்அமைந்துள்ளதால் இத்தலம் தென்திரிவேணி சங்கமம்
  • விஸ்வாமித்திர முனிவரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர்
  • வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நிகழா வண்ணம் காக்கும் (நண்ணுதல் – கிட்டுதல்) பதி என்பதால் நணா.
  • மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் ஆகியவற்றால் அழைக்கப்படும் திருத்தலம்.(பவானி)
  • குபேரன், பல திருத் தலங்களை தரிசித்தப்பின் இங்கு வந்த போது அனைத்து உயிர்களும் எவ்வித பேதமும் இல்லாமல் ஒன்றாக இருப்பது கண்டு தவம் செய்து சிவன், திருமால் ஆகியோரால் தரிசனம் கிடைக்கப்பெற்று ‘ பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருள வேண்டும்’ என வேண்டிப் பெற்றத் திருத்தலம். (தட்சண அளகை)
  • இராவணன் வழிபாடு செய்தது சகஸ்ரலிங்கம்
  • வேணு கோபாலர் சன்னதிக்குப் பின் ஒரு உடல், இரு தலைகளுடன் பசுக் காட்சி
  • வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்த போது (1802ம் ஆண்டு) அம்பிகையை காணும் தீராத ஆவலால் அம்பிகை சந்நதிக்கு நேரே இருந்த மதிலில் மூன்று துவாரங்கள் செய்து அத்துவாரங்கள் வழியே அலங்கரிக்கப்பட்ட அம்பிகையை தரிசித்ததன் பலனாக தன் இருப்பிடத்தில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது கூரை இடிந்து விழும் முன் அவர் கனவில் அம்பிகை வேதநாயகியைப் போலத் தோற்றம் கொண்டிருந்த ஒரு பெண் தோன்றி, ‘பங்களாவைவிட்டு உடனே வெளியேறு’ என்று ஆணையிட்டு காப்பாற்றிய பெருமை கொண்ட தலம். ( நன்றி காணிக்கை – தந்தத்தினால் ஆன கட்டில்)
  • சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக ஆதிகேசவப் பெருமாள், சௌந்திரவல்லி தாயார் ஆகியோருக்கு தனி சந்நிதிகள்
  • மாசி மாதம் மூன்றாவது நாளில் சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகிய மூவருக்கும் சூரிய வழிபாடு நடைபெறும் திருத்தலம்.
  • ஆறு காலப் பூஜைகள் நடைபெறும் திருக்கோயில்
  • நூல்கள்
  1. கூடற்புறான வசனம் – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
  2. பவானிப் பதிற்றுப்பத்தந்தாதி – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
  3. பவானி வேதநாயகி அம்மன் பிள்ளைத்தமிழ் – திருமுகவூர் மு.ரா. கந்தசாமிக்கவிராயர்
  4. கலம்பகம்
  5. உலா
  • ஓலைச்சுவடி
  1. வேதநாயகி அம்மன் சதகம்

 

தலம் திருநணா
பிற பெயர்கள் பவானி, பவானி கூடல், பவானி முக்கூடல், தென்திரிவேணி சங்கமம், வதரிகாசிரமம், பதரிவனம், தட்சிண பிரயாகை, பூவானி நாடு, சங்கமக்ஷேத்ரம், பராசரக்ஷேத்ரம், வக்கிரபுரம், வீரபுரம், விஜயாபுரி
இறைவன் சங்கமேஸ்வரர், அளகேசன், சங்கமநாதர், மருத்துவ லிங்கம், வாணிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார், சங்கமுகநாதேஸ்வரர், காயத்ரி லிங்கேஸ்வரர்
இறைவி வேதாம்பிகை, வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, வக்கிரேஸ்வரி, மருத்துவ நாயகி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் பவானி மற்றும் காவிரி ஆறுகள் சங்கமம், காயத்ரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், தேவ தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம்
விழாக்கள் ஆடிப்பெருக்கு, சித்ரா பௌர்ணமி, ரத சப்தமி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, கிரகண காலங்கள்
மாவட்டம் ஈரோடு
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணி முதல் – 01:00 மணி வரை
மாலை 4:00 மணி முதல் – 08:30 மணி வரைஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில்
பவானி, ஈரோடு மாவட்டம் – 638301
04256 – 230192, 09843248588.
வழிபட்டவர்கள் திருமால், குபேரன், விஸ்வாமித்திரர், பராசரர்
பாடியவர்கள் அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவு, ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 207 வது தலம்
கொங்கு நாட்டுத் தலங்களில் வது தலம்.

 

 

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         2
பதிக எண்           72
திருமுறை எண்  2

 

பாடல்

நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணையேந்தி
ஈட்டுந் துயரறுக்கு மெம்மா னிடம்போலும் இலைசூழ்கானில்
ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூழோசைச்
சேட்டார் மணிக ளணியுந் திரைசேர்க்குந் திருநணாவே

பொருள்

அழகிய கண்ணான நெற்றிக்கண் பொலிந்து விளங்கும் நெற்றியினை உடையவரும், ஒருகையில் வீணை ஏந்தியவரும், ஆகாமியகன்மம் முதல் சஞ்சிதம்  பிராரப்தம் வரையிலான  பழைய வினைத் தொகுப்பினைத் தீர்த்து அருள்பவரும் ஆகிய எம் இறைவன் உறையும் இடம், இலைகள் அடர்ந்த காட்டில் வேகமானதும், இசை போல் ஒலிப்பதுமான அருவிகளுடன் கூடியதும், மூங்கில்கள் உராய்ந்து ஓசை எழுப்புவதும்,  கரைபுரளும் அலைகள் வழியே சேர்க்கும் திருநணாவாகும்.

 

 

 

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         2
பதிக எண்           72
திருமுறை எண்  8

 

பாடல்

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி
முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே

பொருள்

மன்நீர் எனப்படும் பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அவனை வருந்தச் செய்தவரும், கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய இடம், பகை கொண்டும், கோபம் கொண்டும் மலைக்குகையில் வாழும் சிங்கம் தன் தன்மைகுன்றி அதனோடு போரிட்டு முற்றத்தில் படிந்த அதனது குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை சென்று மறையும் திருநணாவாகும்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கேதீஸ்வரம்

 

தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருக்கேதீஸ்வரம்

  • காலம் – கி.மு.6 ம் நூற்றாண்டு
  • பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. இலங்கையின் நான்கு திசைகளிலும் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள் – 1. நகுலேச்சரம், 2. திருக்கோணேச்சரம், 3. திருக்கேதீச்சரம், 4. தொண்டேச்சரம்
  • கேது ஈசனை வழிபாட்டு அருள்பெற்ற தலம் திருக்கேதீஸ்வரம். கேது+ஈச்சரம்=கேதீச்சரம் (திருக்கேதிச்சரம்) 1
  • சூரபதுமனின் வழியில் வந்த துவட்டா, பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டு திருவருள் கைகூடி பிள்ளைப் பேறு பெற்றத் தலம். துவட்டா உருவாக்கியதால்  துவட்டா, காலப் போக்கில் பெருநகரமாய் ஆனதால் மாதுவட்டா
  • மாந்தை என வழங்கப்பட்ட தமிழ்ப்பெயரின் பாளி மொழிபெயர்ப்பே மகாசித்தா..மகா – பெரிய, , தித்தா – இறங்குதுறை அல்லது துறைமுகம். பெரிய துறைமுகம்
  • இராமர் சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட  பிரமகத்தி தோஷம் போக்க வெள்ளிலிங்கம் செய்து வழிபட்டத் தலம்
  • நாகர்கள் வழிபாடு செய்த திருத்தலமானதால் நாகநாதர்
  • பஞ்சபாண்டவர்களுள் ஒருவராகிய அர்ஜுனன், தீர்த்தியாத்திரையின் போது தென்னகத்தலங்களை வழிபட்டபின்னர் வழிபட்டத்தலம்.
  • உலகிலேயே மிகபெரிய வடிவிலான சோமாஸ்கந்தர் மூர்த்தம் உள்ள தலம்
  • ‘பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர் கேதீச்சர மேவினார் கேதாரத்தார்..’ என்று திருநாவுக்கரசரால் பாடப்பெற்றத் திருத்தலம் (திருவீழிமிழலைப்பதிகம் – ஆறாம் திருமுறை)
  • ‘..நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்..’ என்று அகநானூறிலும், ‘…புன்னாகச்சோலை புனற்றெங்கு சூழ் மாந்தை…’ என்று முத்தொள்ளாயிரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளத் தலம்.
  • ‘ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரான்’ எனும் குயிற்பத்தில்(திருவாசகம்) உள்ள பெருந்துறை என்று மாந்தை நகரம் குறித்த வரிகள்.
  • கோயிலுக்கு அருகினில் உள்ள மடங்கள் – சம்மந்தர் மடம், சுந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம், நாவலர் மடம்

 

1 – தக்ஷிண கைலாச மான்மியம் எனும் வரலாற்று நூல்

 

தலம் திருக்கேதீஸ்வரம்
பிற பெயர்கள் திருக்கேதீஸ்வரம், மகாதீர்த்தம், மகாதுவட்டாபுரம், மாந்தை
இறைவன் திருக்கேதீஸ்வரர், நாகநாதர்
இறைவி கௌரியம்மை
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் பாலாவி
விழாக்கள் சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம்
மாவட்டம் மன்னார் மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், மாதோட்ட நகரம், மன்னார் மாவட்டம், இலங்கை
வழிபட்டவர்கள் அகத்தியர், பிருகு மகரிஷி, மண்டோதரி, மயன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்  1 பதிகம் (2ம் திருமுறை – 107வது பதிகம்), சுந்தரர் 1 பதிகம் (7ம் திருமுறை – 80வது பதிகம்)
நிர்வாகம்
இருப்பிடம் இலங்கை
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 227 வது தலம்
ஈழ நாட்டுத் தலங்களில் 2 வது தலம்.

 

 

 

பாடியவர்            திருஞானசம்பந்தர்
திருமுறை          2
பதிக எண்           107
திருமுறை எண்  8

பாடல்

தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே

பொருள்

தென்னிலங்கை குலத்தலைவனாகவும்  மன்னனாகவும் ஆன இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன் முடி,வலிமை வாய்ந்த தோள்கள் ஆகியனவற்றை நெரித்து அவன் தலைக்கனம் அழித்துப் பின் அவனது பாடல்கேட்டு அவனுக்கு  அருள் செய்த தலைவனான ஈசன், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரில் அன்போடு அன்பர்கள் தியானித்து வழிபடும் கேதீச்சரத்தில் உள்ளார்.

 

 

 

 

பாடியவர்              சுந்தரர்
திருமுறை            7
பதிக எண்             80
திருமுறை எண்    8

பாடல்

அட்டன்னழ காகவ்வரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை யாள்வான்திருக்
கேதீச்சரத் தானே

பொருள்

அட்ட மூர்த்தங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக  நிற்பவனாகிய  திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது இடுப்பில் பாம்பினை கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரம் செய்கின்ற சோலைகளையுடைய ‘மாதோட்டம்’ என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை அணிந்த அழகிய நெற்றியை உடையவளோடு , பாலாவி ஆற்றின் கரைமேல் மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் இருக்கின்றான்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 27 (2018)

 

பாடல்

பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்
குண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

இசை போன்று இனிய சொல்லை உடைய உமையினை ஒரு பாகத்தில் உடையவனே! உனக்கு என்று உரிமை ஆனவர்களுக்கு, உண்ணுதலுக்கு ஏற்ற அருமையான அமுதமே! உடையவனே! அடியேனை, மண் உலகில் பொருந்திய எல்லா பிறப்புகளையும் அறுத்து, ஆட்கொள்ளுதல் பொருட்டு ‘நீ வருக’ என்று அழைத்ததனால் உன் திருவடிகளைக் கண் கொண்டு அடியேன் உய்ந்த முறை ஏற்பட்டது.

விளக்க உரை

  • மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய்நீ – எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கள் – 1. தேவர் – 11,00,000 யோனி பேதம், 2. மனிதர்- 9,00,000 யோனி பேதம், 3. நாற்கால் விலங்கு – 10,00,000 யோனி பேதம்,
  • 4. பறவை – 10,00,000 யோனி பேதம், 5. ஊர்வன – 15,00,000 யோனி பேதம், 6. நீர்வாழ்வன – 10,00,000 யோனி பேதம். 7. தாவரம் – 19,00,000 யோனி பேதம் ஆக மொத்தம் 84,00,000 யோனி பேதம். .அத்தனை யோனி பேதங்களும் மனித பிறப்பினை அடிப்படையாக கொண்டவை. ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை,  வாசனை ஆகியவை கொண்டு மண்ணின் தத்துவமாக கருத்தில் கொண்டு அது விரிந்து தொண்ணுற்று ஆறு தத்துவங்களையும் கடந்து நின்று வினை நீக்கி அருளுபவன் என்றும் கொள்ளலாம்.
  • உடையவன் – உரியவன், பொருளையுடையவன், கடவுள், செல்வன், தலைவன்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கோணமலை

தல வரலாறு (சுருக்கம்) / சிறப்புகள் – திருக்கோணமலை

  • ஆதிசேடனும் வாயுபகவானும் தங்கள் வலிமையைக் காட்ட முயன்று, ஆதிசேடன் மகாமேருவின் சிகரத்தை மூடிக் கொள்ள, வாயுபகவான் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றை பெயர்த்து கடலில் வீச, அது இலங்கையின் கிழக்குக் கரையோரமாக விழுந்து உருவானது இத்திருத்தலம்.
  • கச்சியப்பரால் குறிப்பிடப்படும் ஆதி சிவனின் இருப்பிட திருத்தலங்களில் கயிலாயம், சிதம்பரம் இவற்றிற்கு பிறகானது இத்தலம்
  • திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயம் என்ப்படும் இத்தலத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம்
  • தாமரைத்தண்டு நூலினால் விளக்கேற்றி வழிபாடு செய்ததால் திரிதாய்
  • குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகியவை ஒன்று சேர்கின்ற இடத்தில் அமைந்துள்ளதால் திருக்குணமலை
  • வரலாற்றின்படி, 30௦௦ வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த கோயில்; பழைய கோயில் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலும் என்று மூன்று பெருங்கோயில்கள் கொண்டது
  • தட்சண கயிலாய புராணப்படி, இராவணன் தன் தாயாரின் சிவ பூஜைக்காக தட்சண கயிலாயமான இம்மலையை பெயர்த்தது
  • சிறப்புடைய இக்கோயிலின் அழகினை கேள்விப்பட்ட திருஞானசம்பந்தர் ஞானக்கண் கொண்டு திருஇராமேஸ்வரத்தில் இருந்து பதிகம் பாடிய தலம்
  • மனுநீதிகண்டசோழனால் பூசைகளும், விழாக்களும் நடத்தி, பொற் குவியலை திருக்கோணேஸ்வரத்தின் ஒரு கிணறு தோண்டி அதில் பாதுகாப்பாக வைத்து சிவகதி அடைந்தப் பின்,ஓர் அந்தணன் கனவில் பூதம் தோன்றி மனுநீதிகண்டசோழன், கோணேசர் ஆலயப் பணி செய்த செய்தியைக் கூறி, பொற்குவியல் புதைக்கப்பட்ட செய்தியையும் கூறி, செய்தி அனைத்தையும் பெருமை மிக்க சோழ மன்னான குளக்கோட்டனிடம் கூறச் செய்து, மன்னன் அங்கு வந்த போது மனுநீதிகண்ட சோழன் அடையாளமாக எழுதி வைத்திருந்த ஒரு செப்பேட்டை கொடுத்து அந்தப் பொருள் மூலம் திருப்பணிகள் செய்விக்கப்பட்டத் தலம்.
  • 1624 ம் ஆண்டில் ஏற்பட்ட போர்த்துகீசிய படை எடுப்பால் தகர்க்கப்பட்டு, கோயில் சூரையாடப்பட்ட போது, சிவபக்தர்களால் தம்பல்காமம் எனும் இடத்தில் பூஜை செய்யப்பட்ட முக்கிய விக்ரகங்கள்; தற்போதைய பெயர் ஆதிகோணநாதர்
  • 1952 பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டு புதிப்பிக்கப்பட்ட கோயில்
  • Temple of thousand pillars என்று அழைக்கப்பட்டத் தலம்.
  • திருகோணமலை வரலாற்றைக் கூறும் தொல் தமிழ் இலக்கியங்கள் – பெரியவளமைப்பத்தி, கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, குளக்கோட்டன் கம்பசாத்திரம், திருக்கோணாச்சல பராணம், கைலாயமாலை, வையா பாடல், திருக்கோணாச்சல வைபவம், கோணமலை அந்தாதி, திருக்கரைசைப் புராணம், கதிரமரைப்பள், கோணேஸ்வரர் குறவஞ்சி திருக்கோணேஸ்வரர் அகவல் திருக்கோணமலை அந்தாதி,
  • சோழர் காலச் சாசனங்கள் – கந்தளாய்க் கல்வெட்டு, பாலமோட்டைக் கல்வெட்டு, பிரடறிக் கோட்டைக் கல்வெட்டு, நிலாவெளிப் பிள்ளையார் கல்வெட்டு ,  மானாங்கேணிக் கல்வெட்டு, காளி கோவில் கல்வெட்டு

 

தலம் திருக்கோணமலை
பிற பெயர்கள் திருக்குணமலை, திருமலை, தட்சண கைலாயம், கோகர்ணம், திருகூடம், மச்சேஸ்வரம், திரிதாய்
இறைவன் கோணேஸ்வரர்
இறைவி மாதுமை நாயகி
தல விருட்சம் கல்லால மரம்
தீர்த்தம் பாவ நாச தீர்த்தம்
விழாக்கள் மகாசிவராத்திரி, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதம் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா, நவராத்தி ஸ்ரீ சக்ரபூஜை
மாவட்டம் கிழக்கு மாநிலம், திரு கோணமலை, இலங்கை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
வழிபட்டவர்கள் இராவணன், திருநாவுக்கரசர்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்(3ம் திருமுறை, 123 வது பதிகம்), கச்சியப்பர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் திருகோணமலை, இலங்கை
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 226 வது தலம்
ஈழ நாட்டுத் தலங்களில் 1 வது தலம்

 

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை          3
பதிக எண்           123
திருமுறை எண்  1      

 

பாடல்

நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே

பொருள்

வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்குமாறு அவற்றை அணிந்தவரும், இயல்பாகவே பாசங்களின் நீங்கியவராகவும்,  திருநீறு அணிந்த திருமேனி உடையவராகவும், மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவராகவும், இடபக்கொடி உடையவராகவும், சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஆரவார ஒலி எழுப்பும் கடலின் அலைகளும், முத்துக்கள் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றார்.

 

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை          3
பதிக எண்           123
திருமுறை எண்  8

பாடல்

எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே

பொருள்

கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் ஏத்திப் போற்ற அவனுக்கு  விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், செல்வத்தோடு கூடியவரும்,  பிறப்பு இறப்பும் அறியாதவரும். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவரும் உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருட்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஆமாத்தூர்

தல வரலாறு(சுருக்கம் )/ சிறப்புகள் – திருஆமாத்தூர்

  • மூலவர், சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படும்  சுயம்பு மூர்த்தி
  • ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டதால் தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட, அவர் வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறியபடி பசுக்கள் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றத் தலம். (திரு+ஆ+மத்தூர்)
  • பசு பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திர பிறை போல் வளைந்த பசுவின் கால் குளம்பின் அமைப்புடம் கூடிய சுவடு
  • அகழி அமைப்பு கொண்ட கருவறை
  • பூதம் தாங்குவது போன்ற அமைப்புள்ள கோமுகம்
  • அன்னையவள் அபயகரம் ஒன்றும், தொடைமீது வைத்த மற்றொரு கரமுமாக மற்ற இரண்டில் தாமரையும் நீலோற்பலமுங் கொண்டு நான்கு கரங்களுடன் கூடிய திருக் காட்சி
  • அன்னையின் சாபத்தால் பிருங்கி முனிவர் வன்னிமர தலவிருட்சமாக ஆனத் தலம்
  • அண்ணன் தனது தம்பியை ஏமாற்றி சொத்து அபகரித்து பொய் சத்தியம் செய்து கர்வ மேலிட்டால் அன்னையை பற்றி தவறாக பேச கரும்பாம்பு கடித்து இறந்த சம்பவம் முன்னிட்டு அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம்
  • இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது, இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்ட வட்டப் பாறை அம்மன் சன்னதி.
  • சீதையைத் தேடி வந்த ராமன் வழியில் அகத்திய முனிவரைச் சந்தித்த போது அவரது வழிகாட்டுதலின் படி ஈஸ்வரனை வழிபட்டு ராவணனை வென்று சீதையை மீட்டு சீதையுடன் திரும்பியபோது, மீண்டும் இங்கு வந்து, தனது அம்பினால் ‘தண்ட தீர்த்த’த்தை உருவாக்கி அபிஷேக ஆராதனை செய்த தலம்
  • தல விநாயகர் – மால் துயர் தீர்த்த விநாயகர்
  • விநாயகர், பூசை செய்யும் அமைப்பில் கையில் மலருடன் சந்நிதியில் திருக்காட்சி
  • தற்கால நிகழ்வு – நான்கு திருக்கரங்களுடன் கூடிய வலம்புரி விநாயகர் சிலை, தனது இடக் கை ஒன்றில் அமிர்தக் கலசம் தாங்கி தாமரை மலரில் அமர்ந்த நிலையில் காட்சி அமைப்பு
  • முருகன் சூரபதுமனை அழிக்கும்முன் ஈசனையும், அம்மையையும் வழிபட்ட தலம்
  • தீர்த்தம் – மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்றது
  • ஊருக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த பம்பை நதி, இரட்டைப் புலவர்கள் கலம்பகம் பாடியதால், நதி திசை மாறி ஊருக்குள் வந்து திருக்கோயிலைச் சுற்றி ஓடும் அமைப்பு
  • நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்..‘ என்று திருவேகம்பர் திருவந்தாதியில் பட்டினத்தடிகளால் குறிப்பிடப்பட்ட தலம்.
  • …அன்னமலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்‘ என்று சேக்கிழாரால் வர்ணிக்கப்பட்ட தலம்
  • மேலக்கோபுரவாயில் கல்லில் செதுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி உருவம் (அழிந்த நிலையில்)
  • இத் தலத்திற்கு அருகில் நின்ற நிலையில் கையில் தண்டூன்றிய கோலத்தோடு, தலை மாலையுடனும் கோவணத்தொடும் காட்சிதருகின்ற வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளின் சமாதி

 

 

தலம் திருஆமாத்தூர்
பிற பெயர்கள் திருவாமாத்தூர், கோமாதபுரம்
இறைவன் அபிராமேஸ்வரர், அழகியநாதர்
இறைவி முக்தாம்பிகை,  அழகியநாயகி
தல விருட்சம் வன்னி, கொன்றை
தீர்த்தம் ஆம்பலம் பூம்பொய்கை ( குளம் ) , தண்ட தீர்த்தம் ( கிணறு ) , பம்பையாறு
விழாக்கள் பங்குனியில் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி, நவராத்திரி
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில்
திருவாமாத்தூர் அஞ்சல், விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம். PIN – 60540204146-223319, 04146-223379, 98430-66252
வழிபட்டவர்கள் விநாயகர், பார்வதி, அனுமன், சீதை, லட்சுமணர், நாரதர், அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருங்கி முனிவர், பராசரர், விஸ்வாமித்திரர், வியாசர், ரோமரிஷி, மதங்கமுனிவர், அஷ்டவசுக்கள், கோடிமுனிவர், அருணகிரிநாதர்
பாடியவர்கள் • திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள் (2ம் திருமுறை – 44 வது பதிகம், 2ம் திருமுறை – 50 வது பதிகம்),

• திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள் (2ம் திருமுறை – 44 வது பதிகம், 2ம் திருமுறை – 50 வது பதிகம்),

• திருநாவுக்கரசர் 2 பதிகங்கள் (5ம் திருமுறை – 44 வது பதிகம், 6ம் திருமுறை – 9 வது பதிகம்),

• சுந்தரர் 1 பதிகம்,

• பட்டினத்தார்

நிர்வாகம்
இருப்பிடம் விழுப்புரத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 211 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 21 வது தலம்.

 

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை          2
பதிக எண்           44
திருமுறை எண்  1

பாடல்

துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கான லாமாத்தூ ரம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே

பொருள்

தைத்த கோவணத்தையும், யானைத் தோலையும்  ஆடையாக கொண்டு பின்னல் கொண்ட சடைமீது இளம் பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?

 

 

 

 

 

 

 

பாடியவர்           திருநாவுக்கரசர்
திருமுறை         5
பதிக எண்          44
திருமுறை எண் 1

பாடல்

சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமாத்தூ ரழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே

பொருள்

காலை மாலை ஆகிய சந்தி பொழுதுகளில் வணங்கப் படுவானும், யோகநெறி உட்பட்டு தலைப்படுவாருடைய மனதில் உறைபவனும், தேவர்களால் தொழப்படுவானும், அந்தி வானத்தைப்போன்ற செம்மேனி உடையவனும் (அழகிய தீயின் உருவினன்) ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளர்களே  ஆவார்கள்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருப்புறவார் பனங்காட்டூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருப்புறவார் பனங்காட்டூர்

 

  • மூலவர் சுயம்பு மூர்த்தி
  • சிவபெருமானை விலக்கி தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயின பின்னர், அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்த போது, தண்டனை பெற்று ஒளி இழந்த சூரியன் தான் செய்த தவறுக்கு வருந்தி வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றத் தலம்
  • பனையைத் தல விருட்சமாக கொண்டு விளங்கும் பஞ்ச தலங்களில் இத்தலமும் ஒன்று.(மற்றவை வன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு), திருப்பனையூர், திருப்பனந்தாள், திருவோத்தூர்)
  • புறாவுக்காக உயிரைக் கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி முக்தி பெற்ற தலம்
  • சூரியன் கண்ணொளி பெற்றதால் இறைவன் நேத்ர உத்ராரனேஸ்வரர் (கண்களை காத்து அருளியவர்)
  • ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்கள் காலை வேளையில் முதலில் சிவனாருக்கும் , பின்பு அம்மைக்கும் சூரிய வழிபாடு செய்யும் தலம்
  • திருநீலகண்டர் தம் மனைவியுடன் சேர்ந்து, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் சிலா ரூபங்கள் கொண்ட அமைப்பு

 

தலம் திருப்புறவார் பனங்காட்டூர்
பிற பெயர்கள் பனையபுரம்
இறைவன் பனங்காட்டீஸ்வரர், நேத்ர உத்ராரனேஸ்வரர்
இறைவி சத்யாம்பிகை,  புறவம்மை, மெய்யாம்பாள்
தல விருட்சம் பனை
தீர்த்தம் பத்மதீர்த்தம்
விழாக்கள் மகாசிவராத்திரி , மார்கழி திருவாதிரை , ஐப்பசி அன்னாபிஷேகம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு பனங்காட்டீசர் திருக்கோவில்
பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம்
விழுப்புரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
PIN – 605603
94448-97861, 99420-56781
வழிபட்டவர்கள் சூரியன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் விக்கிரவாண்டியில் (திண்டிவனம் – விழுப்புரம் சாலை) இருந்து 2 கி.மீ. விழுப்புரத்தில் இருந்து சுமார் 1௦ கிமீ தொலைவு. முண்டியம்பாக்கம் அருகில்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 210 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 20 வது தலம்.

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        2
பதிக எண்          53
திருமுறை எண் 1

பாடல்

விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே

பொருள்

ஆகாயத்தில் பொருந்தியனவாகி உலவும் வன்மை உடைய முப்புரங்களைக் கொடிய கணையால் எய்து வீழ்த்தியவனே! இசைபாடுவோரின் விரிந்த பண்ணிசை ஒலி சேர்ந்துள்ள புறவார் பனங்காட்டூரில் உமையொரு பாகனாக வீற்றிருக்கும் சடைமுடி உடையவனே! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே! உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக.

 

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        2
பதிக எண்          53
திருமுறை எண் 8

பாடல்

தூவி யஞ்சிறை மெல்ந டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவியெம் பெருமான் என்பவர்க் கருளாயே

பொருள்

அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் நிறைந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெய்யும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக அமர்ந்தவனாய், இராவணனின் தோள்களை அடர்த்து, அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே எனப்போற்றும் அடியவர்களுக்கு அருள்புரிவாயாக.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 14 (2018)

 

பாடல்

தண்டேர்மழுப் படையான்மழ

   விடையான்எழு கடல்நஞ்

சுண்டேபுரம் எரியச்சிலை

   வளைத்தான்இமை யவர்க்காத்

திண்டேர்மிசை நின்றான்அவன்

   உறையுந்திருச் சுழியல்

தொண்டேசெய வல்லாரவர்

   நல்லார்துயர் இலரே

 

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 

பதவுரை

மழுப்படையைத் தண்டு போல கொண்டு ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்களுக்காக கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களை காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் வலிமையானதும் உறுதியானதுமான தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் ஆவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!