அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏயிலான்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஏயிலான்

பொருள்

  • தமக்குமேல் தலைவன் இல்லாதவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏயி லானையெ னிச்சை யகம்படிக்
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.

தேவாரம் – 5ம் திருமுறை (திருக்குறுந்தொகை) – திருநாவுக்கரசர்

கருத்து உரை

தமக்குமேல் தலைவன் இல்லாதவன். அன்பாலாகிய உள்ளக்கோயிலில் உறைபவன். குணக்குன்று. வாழ்த்துவோர் வாழ்த்தும் புறக்கருவியாகிய வாயினை இயல்பான இருப்பிடமாக கொண்டவன். நவந்தரு பேதங்களில் ஒன்றான மனோன்மனி எனும்  சத்திபேதத்தை ஈன்றவன். தனக்கொரு தாய் இல்லாதவன். அவனை என்னுயிர் தழுவும்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவஞான சித்தியாரை அருளியவர் யார்?
அருணந்தி சிவம்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தன்னாண்மை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தன்னாண்மை

பொருள்

  • சுயமாக
  • எவர் தூண்டுதலும் இல்லாமல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒருகொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்
கரியுரிவைக் கங்காளன் காளாப் – பரிவுடனே
கண்ணால ஓலை கடிதெழுத வாராயேல்
தன்னாண்மை தீர்ப்பன் சபித்து.

ஔவையார் தனிப்பாடல்கள்

கருத்து உரை

ஆனைமுகா! உன் தந்தங்களில் ஒன்றை முரித்து எழுத்தாணியாக ஆக்கிக்கொண்டுள்ளாய்; இரு செவி கொண்டுள்ளாய்; மதம் கொண்ட யானையின் கன்ன மதம், கைம்மதம், கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதநீர் கொண்டுள்ளாய்; தொங்கும் வாய்யான துதிக்கை கொண்டுள்ளாய். கஜமுகாசுரனின் தோலை உரித்துப் போர்த்திய போர்வை ஈசனின் இரக்கத்துக்கு உரித்தானவன்; இருப்பினும்  எவர் தூண்டுதலும் இன்றி சுய விருப்பம் கொண்டு அங்கவை சங்கவை திருமணத்துக்கு நீ வந்து அழைப்போலை எழுதவேண்டும். இல்லாவிட்டால் உன்னைச் சபித்து உன் ஆற்றலை அழித்துவிடுவேன்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவஞான போதத்தை அருளியவர்
மெய்கண்டார்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கிளர்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  கிளர்தல்

பொருள்

  • மேலெழுதல்
  • வளர்தல்
  • மிகுதல்
  • விளங்குதல்
  • சிறத்தல்
  • உள்ளக்கிளர்ச்சிகொள்ளுதல்
  • சினத்தல்
  • இறுமாப்புக்கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் – உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.

திருமுறை 11 – காரைக்கால் அம்மையார் – திருஇரட்டைமணிமாலை

கருத்து உரை

கல்வி, செல்வம், அதிகாரம் முதலியவற்றில் உயர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் இறந்துவிட்டால் எல்லார் போலவும், காய்ந்த விறகை அடுக்கி, உறவினர்கள் எரித்து விடுவார்கள். இவ்வளவே இவ்வுலக வாழ்வு. ஆகையினால் நீண்ட கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தினை உண்டு உலகை காத்தவனாகிய திறத்தினை, புகழை அறிந்தோர் சொல்லக் கேள். கேட்டால், நிலையான வாழ்வைப் பெறுவாய்.

விளக்க உரை

கிளர்ந்து கேள் – `ஊக்கம் கொண்டு கேள்` என உரைத்தனால், `ஊக்கம் இன்றிக் கேட்டல் பயனுடைது ஆகாது`

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கொன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  கொன்

பொருள்

  • அச்சம்
  • பயமிலி; பயனின்றி
  • காலம்
  • பெருமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

என்பெற்ற தாயாரும் என்னைப் ‘பிண’ மென்று இகழ்ந்து விட்டார்;
பொன்பெற்ற மாதரும் ‘போ’ மென்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்;
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே!

பட்டினத்தார்

கருத்து உரை

என் அப்பனே! என்னைப் பெற்ற தாயும் உயிரற்று விழுந்த உடலை கண்டு ‘பிணம்’ என்று இகழ்ந்து விட்டார் , பொன் தேடி கொடுத்த போது பெற்றுக் கொண்ட மனைவியும் ‘போய்விட்டார்’ என்று அழுது புலம்பி விட்டார் . பெருமை கொட்டி வளர்த்த மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார் , அனைத்து பந்தங்களும் உதறிவிட்டேன் இனி உன் பற்றை தவிர வேறு ஒரு பற்றும் இல்லை.

விளக்க உரை

ஸ்தூலமாகிய இவ்வுடல் விட்டு உயிர் விலகும் போது தாய், மனைவி, மைந்தர் என முதல் நிலை சொந்தங்கள்   கூட உதவார் எனும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சீலம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சீலம்

பொருள்

  • அழகு
  • குணம்
  • வரலாறு
  • சீந்தில்
  • சுபாவம்
  • நல்லறிவு
  • அறம்
  • நல்லொழுக்கம்
  • யானையைப் பயிற்றும் நிலை
  • தண்டனை

வாக்கிய பயன்பாடு

சீலம் இல்லாதவன எல்லாம் வச்சி வேல பாத்தா இப்படித்தான் ஆவும்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கோல மின்றிக் குணமின்றி நின்னருள்
சீல மின்றிச் சிறியன் பிழைப்பனோ
ஆல முண்டும் அமிர்துரு வாய்வந்த
கால மெந்தை கதிநிலை காண்பதே.

தாயுமானவர்

கருத்து உரை

எம் தந்தையே! நீ பெருங்கடலில்  தோன்றிய பெருநஞ்சினை உண்டும், அதனை அமிழ்தாக மாற்றி உலகுகிற்கு உணர்த்திய நின் பெருநிலையினைக் கண்டும், உன்னை அடைதற்குரிய திருவைந்தெழுத்து ஓதுதல், உடலில் திருவெண்ணீறு பூசுதல், சிவமணியை  திருக்கோலமாகக் கொள்ளுதல், சிவவொழுக்கங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றை  செய்யாமல் அடியேன் பிழைத்து உய்வனோ? (உய்யேன் என்றவாறு)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவா

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அவா

பொருள்

  • பேராசை

வாக்கிய பயன்பாடு

என்ன ஓய், எப்படி இருக்கிறீர்?

நன்னா இருக்கேன், நமக்கு என்ன ஓய், படியளக்க கற்பகாம்பா இருக்கா, அவ திருவடிய அடையறது தவிர என்ன பெருசா அவா இருந்துடப் போறது.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

கந்தர் அநுபூதி (மனதிற்கு உபதேசம்) – அருணகிரிநாதர்

கருத்து உரை

மனமே! உடல், வாய், கண், மூக்கு, காது  ஆகிய ஐம் பொறிகளின் வழியே சென்று வினைகளின் வழி தோன்றும் ஆசைகளை முற்றிலும் ஒழித்து, திருக்கரத்தில் ஒளிவீசும் வேலாயுதத்தை கொண்டு ஞானச் சுடரான வேலை உடைய முருகப் பெருமானின் திருவடிகளை புகலிடமாகப் பெற்று உயர்வு பெற்று வாழ்வாய்.

விளக்க உரை

பஞ்ச இந்திரியங்களின் ஆசைகளை மறுப்பது மட்டும் அல்லாமல் திருவடிகளையும் அடைதல் உயர்வுக்கு வழி எனும் பொருளில்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சாகாக்கல்வி

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சாகாக்கல்வி

பொருள்

  • மரணம் அடையாமல் வாழும் வாழ்க்கைப் பற்றி கற்றுக் கொள்ளும் கல்வி
  • உடல், மனம், ஆன்மா இவற்றை சுத்தப்படுத்தி ஒளியாக்கி பேரான்மாவிடம் கலப்பது
  • உள்ளே உத்தமனைக் காணும் வழி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்
செல்வமும் அளித்த சிவமே சிவமே
அருள் அமுதம் எனக்கே அளித்து அருள் நெறி வாய்த்
தெருள் உற வளர்க்கும் சிவமே சிவமே !

வள்ளலார்

கருத்து உரை

பிறப்பினை அறுக்கும் வழியை கற்றுத் தரும் கல்வியும், அதன் பயனாகிய மரணத்தை வெல்லும் வழியும், அதனால் பெறப்படும் அழியாத செல்வமும் எனக்கு அளித்த சிவமே, அருளாகிய அமுதத்தை  எனக்கு அளித்து அருள் நெறியை வாய்க்க அருள் செய்யும் சிவமே.

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஒத்துறு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஒத்துறு

பொருள்

  • ஒன்றாக தாளம் போடுதல்
  • ஒன்றாக தாள வரையறை செய்தல்
  • ஒத்த வடிவம் எடுத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

வாக்கிய பயன்பாடு

நீ ஆருடா அம்பி, ஓ! ஒத்து ஊதறவனா, சரி சரி போய் வண்டில உட்கார்.

பாடல்

சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி
ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணி யாகி
வைத்துறும் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும்
எத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் .

திருநெறி 2 – சிவஞான சித்தியார்

கருத்து உரை

சிவபேதம் ஏழிற்கு (சிவம் (பரநாதம்),நாதம் (அபர நாதம்),சதாசிவன்,  மகேசன், உருத்திரன்,திருமால்,  அயன்)  உரிய சத்திபேதமும் (சத்தி (பரவிந்து), விந்து (அபர விந்து), மனோன்மணி, மகேசை, உமை, திருமகள்,  கலைமகள்), என  சத்திமுதல் வாணியீறாக ஏழுவகைப்படும். எம்முடைய இறைவனாகிய பரமசிவன் சிவபேதம் ஏழினும் நின்று நடக்கச் செய்கையில், அவனோடு தானும் நிற்கும் பராசத்தியும் அவனுக்குத் துணையாய் நிற்பாள்.

விளக்க உரை

ஈசனின் அனைத்து வடிவங்களிலும்  அவனின் பேதங்களுக்கு ஏற்ப சக்தி தன் வடிவம் எடுத்து சிவ சக்தி சொரூபமாக இருப்பாள் எனும் பொருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இம்பர்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  இம்பர்

பொருள்

  • இவ்வுலகம்
  • இவ்விடத்து
  • பின்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செம்பொன் மேனிச் செழுஞ்சுட ரேமுழு
வம்ப னேனுனை வாழ்த்து மதியின்றி
இம்பர் வாழ்வினுக் கிச்சைவைத் தேன்மனம்
நம்பி வாவெனின் நானென்கொல் செய்வதே.

தாயுமானவர்

கருத்து உரை

செம்பொன் போன்று திகழ்கின்ற திருமேனியினையுடைய செழுமையான ஒளி வீசும் சுடரே! முற்றும் பொல்லா சிறுமை உடையவனாகிய எளியேன், நின் திருவடியினை வாழ்த்தும் நல்லறிவின்றி, இவ்வுலக வாழ்வின் மீது வேட்கையுற்று மனம்வைத்தேன். அடியேனை ஆண்டு அருளும் நம்பியே! நீ கருணை புரிந்து வா என்று அழையாவிட்டால் எளியேன் என்ன செய்ய இயலும்?

விளக்க உரை

மாயையினை அழிக்க இறைவிருப்பம் இன்றி நிகழாது எனும் பொருளில்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மருள்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மருள்

பொருள்

  • மயக்கம்
  • பேயாட்டம்
  • பயம்
  • திரி புணர்ச்சி
  • வியப்பு
  • உன்மத்தம்
  • கள்
  • குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று
  • எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை.
  • பெருங்குரும்பை
  • பேய்
  • ஆவேசம்
  • புல்லுரு

வாக்கிய பயன்பாடு

பானை உள்ளேயும், வெளியிலயும் ஆகாசம் தான். அந்த கோட்ட கண்டுபுடிக்கிறத்துக்கு தான் எல்லா கஷ்டமும். அதான் மருள் புரிஞ்சா சரி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.

வள்ளலார்

கருத்து உரை

அருள் உருவாகிய பெருமானே! யான் செய்கின்ற வேண்டுகோளை நீ உனது திருச்செவியில் ஏற்று எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன்; கோபம் காமம் ஆகிய குற்றங்கள் அணுவளவும் என்னை வந்து பொருந்துதல் கூடாது; மருட்சி தரும் எல்லா உலகங்களிலும் அம்மருட்சி நீங்கித் தெளிவு பெற்று ஞான அடைந்திட அம்பலத்தில் எழுந்தருளும் வள்ளலாகிய உன்னை வாழ்த்தி வழிபடல் வேண்டும்; அறியாமையாகிய இருள் வந்து என்னைப் பொருந்துதல் கூடாது; அன்பால் என்னை அடுத்தவர்கள் சுகம் பெறுதல் வேண்டும்;  எல்லா உயிர்களும் இன்பமடைய வேண்டும்; மெய்ப்பொருளாகிய உனது திருவுருவில் என்னை உடையவனாகிய நீயும் நானும் கூடிக் கலந்து ஒன்றி உயர்தலை வேண்டுகிறேன்.

விளக்க உரை

  • திருஅவதார தினம் – அக்டோபர் 5, 1823
  • அருளா – சிவபெருமானுக்கு அருளே திருமேனியாதல் பற்றி
  • கோபம், காமம் ஆகிய குற்றங்கள் சிறிது உண்டாயினும் அவற்றால் விளையும் தீங்கு பெரிதாதலால், “அணுத் துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்” எனும் வரிகள்
  • மருள் – பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்வது மருள். அது பற்றி மருளாய உலகம் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டும்” என்று புகல்கின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – புகல்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  புகல்தல்

பொருள்

  • கூறுதல்

வாக்கிய பயன்பாடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

பட்டினத்தார்

கருத்து உரை

மனமே! இப்பூவுலகில் செல்வத்தால் உருவாகும் தீமைகள் எத்தனை எத்தனை; பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த செல்வம் தான் எத்தனை எத்தனை;  இவை அனைத்தும் இவ்வுலக வாழ்வை நீங்கும் காலத்தில் கூடவே வராது. உடைந்ததான காதற்ற ஊசிகூட இறப்பிற்குப் பின் கூட வராது என்பதை உணர்ந்து,  திண்மையான தோள்களை உடையவரும், திருஅண்ணாமலையில் வீற்றிருப்பவருமான சிவபெருமானுடைய திருவடிகளே கதியென சரணம் அடைந்திடுவாய். எப்போதும் அவரையே துதி செய்திடுவாய்.  

துக்கடா- சைவ சித்தாந்தம் வினா விடை

ஞானாமிர்தத்தை அருளியவர் யார்?
வாகீசமுனிவர்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நாத்திகம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நாத்திகம்

பொருள்

  • கடவுள் இல்லை என்னும் கொள்கை
  • தெய்வ நிந்தனை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

உலகியலையும் அது சார்ந்து வரும் வாழ்வும் மட்டுமே உண்மை என்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல், படைகள் போல் ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் எதுவும் இன்றித் தன்னை அடைந்த அன்பர்களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.

அக அனுபவம் சார்ந்து.

தனது மூச்சுக் காற்றின் நடையும் அது சார்ந்த அனுபவங்கள் மட்டுமே உண்மை என்று பொருள் கொள்ளக்கூடாது. பஞ்ச இந்திரியங்கள் வழியாக படைகள் போல் வரும் தடைகள் எல்லாம் விலக்கி தன்னை அடைந்த அன்பர்களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.(பொருள் தவறாக இருப்பின் மன்னித்து அருள வேண்டும்)

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

திருக்களிற்றுப்படியாரை அருளியவர் யார்?
திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பாவித்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பாவித்தல்

பொருள்

  • எண்ணுதல்
  • தியானித்தல்
  • பாவனைசெய்தல்
  • நுகர்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சீவிப் பதன்முன்னே தேவியையுத் வாகனத்தாற்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்த தருமே.

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

‘சேடம்’ எனப்படுகின்ற நிவேதப் பொருளைக் கைக்கொள்வதற்கு முன், கும்ப விம்ப சக்கரங்களில் நிறுவப்பட்ட இப் புவனாபதி தேவியை, ஒடுக்கி கொள்ளுதற்குரிய மந்திரம், கிரியை ஆகிய பாவனைகளால் எல்லோராலும் எளிதில் அணுக இயலா மேலான இச்சக்கரத்தை நீ வைப்புப்பொருள் போல உள்ளத்திலே மறவாது வைத்து இருதயத்தில் ஒடுக்க வேண்டும். இது நீ நினைத்தவற்றை எல்லாம் உனக்குக் கொடுக்கும்.

விளக்க உரை

  • இச்சக்கர வழிபாட்டினை நிறைவு செய்யும் முறை கூறி முடிக்கப்பட்டது
  • உத்வாபனம் – மீட்டுக் கொள்ளுதல்.
  • அங்க, கர நியாசங்களின் மந்திர உபாசனையாலும், எவருக்கும் எட்டாத “இயந்திர ராசன்’ எனப்பட்ட இதன் வழிபாட்டில் இதனைக் கூறியதனாலும், ஏனைச் சக்கரங்களின் வழிபாட்டிற்கு இஃது உரியது அல்ல அறியப் படும்.
  • தருமை ஆதீன பதிப்புகளுக்கும், ஏனைய பதிப்புகளுக்கும் வேறுபாடு இருந்தாலும் நம்பகத்தன்மைக்காக தருமை ஆதின பதிவு வார்த்தைகளே எடுத்தாளப்படுகிறன.
மற்ற பதிப்புகள் தருமை ஆதீனப் பதிப்பு
சேவிப் சீவிப்
வாபனத்தால் வாகனத்தாற்
கியாவர்க்கு கியாவர்க்கும்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

திருவுந்தியாரை அருளியவர் யார்?
திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சேடம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சேடம்

பொருள்

  • மிச்சப்பொருள்
  • கழிந்தமீதி
  • எச்சில்
  • இறைவனுக்குப் படைக்கும் பொருள்
  • அடிமை
  • சிலேட்டுமம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப்
பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால “நாரதா யைசுவா கா` என்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சீவியே**.

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

புவனாபதிக்கு முறைப்படி வழிபாடு செய்யும் பொழுது, மேலாடையை எடுத்து அரையில் கச்சு போலக் கட்டிக் கொண்டு செய்தல் வேண்டும். பால் அன்னத்தை மந்திரத்தோடு ஜெபித்து, நிவேதிக்க வேண்டும். வழிபாடுயாவும் முடிந்தபின்பு  நான்கு திசைகளிலும் ‘நாரதாயை சுவாகா’ என்று நிவேதிக்க வேண்டும்.பின் நிர்மால்யத்தை அகற்றி நிவேதனத்தை உண்க.

விளக்க உரை

  • பூஜைக்குரிய நியமங்கள் குறித்தது இப்பாடல்.
  • சீவி – உட்கொண்டு ஜீவித்தல்
  • ** சேவியே – என்று சில பதிப்புகளில் காணப்படுகிறது. தருமை ஆதீன பதிப்புகளில் மேற் கூறியவாறு இருப்பதாலும், நம்பகத்தன்மைக்காகவும் ‘சீவியே’ என்பது எடுத்தாளப் படுகிறது.
  • “பால் போனகம்” –  சாக்த மார்கத்தில் வாம மார்க்க வழிபாடு போன்றவை இருந்தாலும் அவ்வாறான நிவேதனங்கள்  விலக்க வேண்டும்.
  • பாகம் – சமைக்கப்பட்ட பொருள்.
  • “சேடம்” – நிர்மாலியம். அதனைக் உட்கொள்ளுதலைச் சேவித்தலாகக் கூறியது மரபு.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மெய்கண்டார்க்கு முற்பட்ட சித்தாந்த சாத்திரங்கள் எவை?
திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், ஞானாமிர்தம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துய்ய

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  துய்ய

பொருள்

  • தூய்மையுள்ள
  • கலப்பற்ற
  • உறுதியான

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

மேலே குறிப்பிட்டவாறு பூஜை செய்யும் போது சிவந்த நிறம் கொண்டவளாய், செம்பட்டு உடை அணிந்தவளாய், கைகளில் அங்குசம், பாசம் என்னும் படைக்கலங்களும், அபய வரதங்களும் உடையவளாய், திருமேனியில் அணிகலன்களையும்  இரத்தின ஆபரணங்களையும், தூய்மையான கிரீடம் அணிந்தவளாய் புவனாபதி அம்மை தன் வடிவில் தோன்றுவாள்.

விளக்க உரை

  • புவனாபதி தியானத்திற்கு உரிய அம்மையின் வடிவு கூறப்பட்டது
  • ரத்தின மாம்மேனி – இரத்தினம் போன்ற தோற்றம் உடைய திருமேனி

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உமாபதி சிவம் சித்தி பெற்ற இடம் எது?
சிதம்பரதிற்கு அருகில் கொற்றவன்குடி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆவாகனம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஆவாகனம்

பொருள்

  • விக்ரகத்தில் எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

புவனாபதி அம்மையை வழிபடும் பொழுது முதலில் மனத்தில் காமாதி குற்றங்கள் நீங்கித் தூய்மையுடையதாக செய்து, வெளியில்  நிறை குடம், திருவுருவ மற்றும் இச்சக்கரம் என்பவைகளில், அந்த அந்த மறைமொழிகளால், (மந்திரங்களால்) ஆவாகனம், ஸ்தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், அவகுண்டவம், தேனுமுத்திரை, பாத்தியம், ஆசமனீயம், அருக்கியம், புஷ்பதானம், தூபம், தீபம், நைவேத்தியம், பாணீயம், ஜெப சமர்ப்பணம், ஆராத்திரிகை செய்து முடித்து, அகத்தில் அவளது உருவத்தை நினைவுகூர்ந்து, அவளது ஒளிமிக்க வடிவம் மனத்திலே நன்கு பொருந்தும்படி தியானித்து நிற்பாயாக.

விளக்க உரை

  • புவனாபதி அம்மையது வழிபாட்டு முறை குறித்தது இப்பாடல்.
  • அகத்தினில் ஆவாகனம் – நினைவுகூர்தல். புறத்தினில் ஆவாகனம் – வரைவழைத்தல்
  • பிராணப் பிரதிட்டை – உயிர் கொடுத்து நிலைப்பித்தல்.
    சோடச பட்டியல் – புறத்தில் குடை, ஸ்தாபனம், பாத்யம் கொடுத்தல், ஆசனமளித்தல், அர்க்கியம், அபிஷேகம் வஸ்திரம், சந்தனம், புஷ்பாஞ்சலி, தூயதீபம், நைவேத்தியம், பலி போடுதல், ஹோமம், ஸ்ரீபலி, கேயம் வாத்தியம், நர்த்தனம், உத்வாஸனம்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உமாபதி சிவம் பிறந்து வாழ்ந்த தலம் எது?
சிதம்பரம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பூவை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பூவை

பொருள்

  • பெண்
  • காயாம்பூ
  • நாகணவாய்ப் புள்/பறவை – மைனா
  • குயில்
  • மடியும் வீரர் கூட்டம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத்
தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

கயிலாயத்தில் முன்னர் உரைத்த சக்கரத்தின், வெளியே  பொருந்தும் கோர்வையான இதழ்களின் வலப்பக்கங்களில் எங்கும் வரிசையாக, `க்ரோம், ஹ்ரோம்`  எனும் பீஜங்களை  எழுதி, எல்லாவற்றையும் கேடில்லாத ரீங்கார வடிவில் சக்கரம் போல் வளைத்து முடித்தபின், அம்மையாகிய புவனாபதியை வழிபடுக.

விளக்க உரை

  •  புவனாபதி சக்கரத்தை அமைக்கும் முறை குறித்து கூறப்பட்ட பாடல்.
  • சைவ அனுட்டாத்திகளுக்கு சொல்லப்படும் ‘ஓம் ஹிருதாய நம:’ என்பது தொடங்கி ‘ஓம் நேத்திரத்திராய நம’ வரையிலான மந்திரங்கள் போல், புவனாபதி சக்கரத்திற்குச் சொல்லப்பட்ட பீஜாட்சரங்கள், `ஷ்ரீம்’ தொடங்கி ‘ ‘ஆம்` வரையினில் ஆறு ஆகும். இவைகள் கர நியாச அங்க நியாசங்களும் இவற்றால் செய்யப்பட வேண்டும்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மறைஞான சம்பந்தர் சித்தி பெற்றத் தலம் எது?
சிதம்பரம் அருகில் திருக்களாஞ்சேரி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மேவு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மேவு

பொருள்

  • மேன்மை
  • தடவு

வாக்கிய பயன்பாடு

மேவு தொழில்ன்னு உலகத்திலெ எதுவும் இல்ல. கெடக்கிற வேலயப் பாக்க கத்துக்கோ. அப்புடுதேன் சொல்லிப்புட்டேன்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

முந்தைய முந்தைய பாடலில் குறிப்பிட்ட சக்கரத்தைச் சூழ்ந்த வட்டத்திற்கு வெளியில் உள்ள இதழ்களின் இடை எட்டிலும், எட்டு ‘ஹகார’ மெய்யை உகார உயிர் புணர்த்து எழுதி, அவ் இதழ்கள் எட்டிலும் பொருந்தி நிற்க, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றைப் பொறித்து, இதழ்களின் இடப்பக்கங்களில் `ஆம், க்ரோம்’ என்னும் பீஜங்களை எழுதுக.

விளக்க உரை

  • பீஜங்களை எழுதும் / வரையும் முறை குறித்து

துக்கடா சைவ சித்தாந்தம் வினா விடை

மறைஞான சம்பந்தர் வாழ்ந்த தலங்கள் எவை?
மருதூர், சிதம்பரம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இடுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  இடுதல்

பொருள்

  • வைத்தல்
  • போகடுதல்
  • பரிமாறுதல்
  • கொடுத்தல்
  • சொரிதல்

வாக்கிய பயன்பாடு

என்னாத்த இட்டாந்தோம், வாரிகிட்டு போக!

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட்
டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.

திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்

கருத்து உரை

முந்தைய பாடலில் கூறியவாறு வரையப்பட்ட அறுகோணச் சக்கரத்தின் அறைகளில் `ஸ்ரீம், ஹ்ரீம்` என்னும் பீஜங்களைப் பொறித்து, அச்சக்கரத்தின் ஆறுமூலைகளின் மேல் பகுதியிலும், `ஹ்ரீம்` என்னும் பீஜத்தை மட்டும் எழுதி, எல்லா மூலைகளும் உள்ளே அடங்கும்படி அவற்றைச் சுற்றி நேர்த்தியான அழகிய வட்டம் ஒன்று வரைந்து, அவ்வட்டத்திற்கு வெளியில் திக்கிற்கு ஒன்றாக எட்டுத் தாமரையிதழ் தோன்ற அமைத்து, அந்த இதழ்களின் கீழே வட்டத்தில் வடக்குமுதல், திக்கிற்கு இரண்டாக உயிரெழுத்துப் பதினாறனையும் (சமஸ்கிர எழுத்துக்கள் முன்வைத்து ) அகாரம் முதலாக முறையாக எழுதுக.

விளக்க உரை

  • முக்கோணம் தன்னில் முளைத்த மெய்ஞ்ஞானிக்குச் சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய் சட்கோணம் ஏதுக்கடி?” குதம்பைச் சித்தரின் பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மறைஞான சம்பந்தர் அவதரித்த தலம் எது?
திருப்பெண்ணாகடம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இயந்திரராசன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  இயந்திரராசன்

பொருள்

  • புவனாபதி சக்கரம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.

திருமுறை 10 – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

வழிபடுவோர்க்கு எல்லாப்பயனையும் தருவதாக இருக்கும், `இயந்திரராசன்` எனப்படுகின்ற புவனாபதி சக்கரத்தை குரு உபதேச முறைப்படி துதித்து, அதனை வழிபடும் முறையைக் குருவின் உபதேசத்தால் அறிந்து,  இயல்பாகச் செய்துவருகின்ற கர நியாச அங்க நியாசங்களை இவ்வழிபாட்டிற்கு ஏற்பச்செய்து, பிறவி நீக்கத்தைச் விரும்பி, செப்புத்தகடு ஒன்றில் முதலில் அறுகோணச் சக்கரத்தை வரை.

விளக்க உரை

  • இயந்திர ராசன்` – ஆண்பாலாகக்கூறியது வடமொழி மதம் என்ற குறிப்பு காணக்கிடைக்கிறது. முந்தைய பாடலில் சக்தியோடு சிவம் கலந்தே நிற்கும் என்றே வருகிறது. என்வே ராஜாதி ராஜன் என்பது போல் இயந்திரங்களுக்கு ராஜன் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கலாம். இது என் தனிப்பட்டக் கருத்து(கற்றந்தோர் சபை விளக்கம் அளிப்பின் தெளிந்து மகிழ்வு அடைவேன்)
  • அங்க நியாசமே என்று கூறினாலும் கரநியாசமும் கூறுதல் கருத்தாம்.(நியாசம் – முத்திரை பதித்தல் – மந்திராட்சரங்களால் தேவதைகளை அந்த அந்த உறுப்புக்களில் வைக்கும் கிரியை ) `அவைகளை இதற்கேற்பச் செய்க` என்றது, `இச் சக்கரத்தில் அடைக்கப்படும் பீசங்களாலே செய்க` என்ற பொருளில்

 துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அருணந்திசிவம் அவதரித்து வாழ்ந்தத் தலம் எது?
திருத்துறையூர்

 

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!