![]()
ஏமாப்பு
ஸகுண உபாசனை
நேர் எதிரில் முழு நிலா
நம் இருவருக்கும் எதிரில்.
பெரியதும் சிறியதுமான
கடல் அலைகள்
ஒன்றைத் தழுவி ஒன்று.
மணலை கைகளில் எடுத்து
குவித்து மீண்டும்
மணலில் விடுகிறாய்.
மெல்லிய காற்று
நம் இருவரையும் தொட்டுச் செல்கிறது
பேச்சை தொடவும் தொடரவும்
விரும்புகிறேன்.
உன்னைத் தழுவிச் செல்லும் காற்று
இடமிருந்து வலமாக
என்னைத் தழுவிச் செல்கிறது என்கிறேன்.
‘காற்றுக்கு ஏது இடமும் வலமும்’ என்கிறாய்.
பிறிதொன்றான தருணங்களில்
நாபிச் சொற்கள்
ஒன்றுகின்றன நாதத்தில்.
ஸகுண உபாசனை – இறைவனுக்கு உகந்த குணங்களை அறிந்து, இறை நம்மை அறிந்த உடன் அந்த குணங்களால் இறைமையை உபாசனை செய்யும் முறை.
புகைப்படம் : HarishKumar
புகைப்படம் : HarishKumar
![]()
மகேசுவரமூர்த்தங்கள் 18/25 சலந்தாரி
வடிவம்(பொது)
· சலந்தரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட வடிவம்
· உருவத்திருமேனி
· வாகனம் – காளை
வேறு பெயர்கள்
சலந்தராகரர்
சலந்தர சம்மார மூர்த்தி
கடல் வளர்ந்தானைக் கொன்றான்
கடல் வளர்ந்தானைக் கொன்றான்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
· திருவிற்குடி, திருவாருர்
· மீனாட்சி அம்மன் கோயில், மதுரை
இதரக் குறிப்புகள்
நூல்கள்
1.
· இலிங்க புராணம்
· சக்ராயுதம்
2.
திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
சலந்தர னாகந் தரித்தார்தந் தாதன் றனதிடைச்சஞ்
சலந்தர னாகந் தரைநடந் தாலெனச் சார்ந்ததண்டன்
சலந்தர னாகந் தளரச்செற் றார்தன யன்றலநச்
சலந்தர னாகந் தனக்கிறை சேர்செந்திற் சார்ந்திடற்கே.
3.
சிவஞானசித்தியார் பரபக்கம்
அஞ்சியன் றரிதா னோட அசுரனைக் குமர னாலே
துஞ்சுவித் தொருபெண்ணாலே தாரகன் உடல்துணிப்பித்(து)
அஞ்சிடப் புரம்தீ யூட்டிச் சலந்தர னுடல்கீண் டோத
நஞ்சினை யுண்டு மன்றோ நாயகன் உலகங் காத்தான். 292
4.
சலந்தர முத்திரை என்பது வாசி யோகத்தில் உள்ளது. இந்த உபதேசங்கள் சுப்ரமணியரால் அகத்தியருக்கு அருளப்பட்டது.
5
11ம் திருமுறையில் பொன் வண்ணத் தந்தாதி பகுதிகளிலும் இவ்வடிவம் குறித்து பேசப்படுகிறது.
6
சலந்தரன்றன் உடல்தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி விமானஞ்சேர் மிழலையாமே 1.132.8
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் 2.48.7
சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே 3.113.2
தன்றவம் பெரிய சலந்தர னுடலந் தடிந்த சக்கரம் எனக்கு அருள் என்று
ன்று அரி வழிபட்ட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் 3.119.7
சம்பரற் கருளிச் சலந்தரன்வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த 3.122.2
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ 6.34.7
கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி 6.52.7
சமரம் மிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் 6.53.2
சலந்தரனைப் பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி 6.71.1
சலந்தரனைப் பிளந்தான் கண்டாய் 6.73.5
உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்ட
ஓராழி படைத்தவன் காண் 6.76.10
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறாய் 6.86.6
சலந்தரனைத் தடிந்தோனை 6.90.9
விளிந்தெழுந்த சலந்தனை வீட்டி னானை 6.91.2
செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி 7.16.2
சலந்தரன் ஆகம் இருபிள வாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள் கோன் நெடு மாற்கருள் செய்தபிரான் 7.98.5
சலமுடையசலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி 8.272
கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த தில்லை 8/2. 209
தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்க நெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன் மறலி வேள் இவர்மிகை செகுத்தோன் 59.5
பொங்கும் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின்
அங்கு விரற் குறித் தாழிசெய் தானே 10.642
சலந்தர னைத்தழலாப் பொறித்தாய் 11.81
சலந்தரனார் பட்டதுவும் தாம் 11.385
சலந்தரன் உடலம் தான் மிகத் தடிந்தும் 11.491
சலந்தரனைச் சக்கரத்தால் ஈர்ந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஅஃ தீந்த விறல்போற்றி-27 11.500
சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம் 11.704
சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி 11.865
சலந்தரனைப் போக்க 11.913
சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் 11.920
கனல்திகிரி சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய் 11.933
புகைப்படம் : இணையம்
புகைப்படம் : இணையம்
![]()
ஆதி வீடு
2038 – DNA can store digital information
DNA can store digital information
Reality
• Model developed by Swiss scientists
• DNA as a method to store the data
• It can last upto 2000 years without breaking down
• While decoding, no errors
• 28grams of DNA could store 300000 terabytes.
• DNA code is written in sequences of four chemical nucleotides, known as A,C,T and G.
Proof
1.
ஏங்க, காய்கறி வாங்கிகிட்டு கொத்தமல்லி, கருவேப்பில வாங்கிகிட்டு வரல.
மறந்துட்டேன்.
இந்த தப்பத்தான் போன தடவையும் சொன்னீங்க. இது உங்களுக்கு 4வது தடவ. இது முன்னால 06-12-2003 12.31 PM, 05-11-2007 6.01 PM, 27-06-2012 7.01 AM, 19-08-2015 8.03 PM ம் தேதிகள்ல இப்படி செஞ்சி இருகீங்க. உடனே நம்ம டேட்டாவ எடுத்து பாத்திருப்பாளோன்னு நினைக்காதீங்க. எல்லாம் என் ஞாபத்தில் இருந்து சொல்றேன்.
#செத்தாண்டா சேகரு
2.
உங்க பாட்டி தவறிட்டாங்கன்னு இதுக்கு முன்னால 3 தடவ லீவு எடுத்து இருக்கீங்க. 06-06-2006 10.30 AM, 09-05-2009 7.35 PM, 28-03-2013 4.30 PM. ஆனா உங்களுக்கு மொத்தமே 2 பாட்டி இருக்கிறாங்கன்னு Employee Personal form ல fillup பண்ணி கொடுத்து இருக்கீங்க. சொல்லுங்க எந்த கம்பெனி interview க்கு போய்ட்டு வந்தீங்க
3.
Wife : நீங்களும் நானும் 2 வருஷம் லவ் பண்ணும் போது பைக்ல போன தூரம் 27131.56 கிமி. அதுல 34790 தடவ ரைட்ல திரும்பி இருக்கீங்க. 57943 தடல லெஃட்ல திரும்பி இருக்கீங்க. 3 தடவ பொண்ணுங்களை திரும்பி பாத்து இருக்கீங்க. இப்ப ஏன் நீங்க என்ன கவனிக்கறது இல்ல.
Husband : அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா…
Wife : No explanation. I want answer.
4.
சார், நாங்க ‘ உத்தம கழுகு‘ கம்பெனியில் இருந்து வரோம். நாங்க DNA storage ல
Specialist.
அட போங்க சார், எங்க கேப்டன விட நீங்க டீட்டெல் சொல்ல முடியாது
5.
வானவில் ஜோதிட ஆராய்ச்சி மையம்
1.சார் நீங்க எங்க software ஐ use பண்ணுங்க சார்
2.நாங்க ஏன் உங்க software ஐ use பண்ணனும்?
1.சார் எங்ககிட்ட இருக்கிற டேட்டா வச்சி 2015ல பிரசன்னாவுக்கும் ஸ்னேகவுக்கும் குழந்தை பிறக்கப்போகுதுன்னு சொன்ன முதல் ஆள் நாங்க தான் சார்.
Image : Internet
![]()
நகர மறுக்கும் நினைவுகள் – செம்பருத்தி
ஒரு நாள் பூ மார்கெட்டில் இருந்தேன்.
இதென்ன, செம்பருத்தி பூப்போல் இருக்கிறதே..
‘என்னா சார், அப்படி பாக்கிற. இது செம்பருத்தி பூ. எடுத்துக்க. 3 பத்து ரூபா. உனக்காக 4 தரேன்’.
டேய் மணி 4.30 ஆச்சு எழுந்திரி. போய் பூ எடுத்து கிட்டுவா.
தூக்கம் தூக்கமா வருது.
‘பூ எடுத்துகிட்டு வந்து சாமிக்கு போட்டா புண்ணியம்’. அன்று கட்டிய பூக்கள் இல்லாத காலம். (காலம் என்ன காலம் 1000 வருஷத்துக்கு முன்னாடியா, இப்பத்தான் 30 வருஷத்துக்கு முன்னாடி)
உறவுகளுடனும், நண்பர்களுடனும் பூவினை பகிர்தல் என்பது இல்லாத காலம்.
இன்னைக்கு எப்படியும் ராமு வீட்டு அரளியையும், செல்லமா அவர்கள் வீட்டில் செம்பருத்தியையும் அந்த செந்தில் பயல் எடுக்குறத்துக்கு முன்னாடி எடுத்துடனும். உடல் வேகம் கொண்டது.
1.
அப்பாடா இன்னும் யாரும் வரல.அதால எல்லா பூவும் நமக்குத்தான்.
2.
ஓஹோ, இன்னைக்கு நீ அரளிப்பூ எடுக்கறயா. இரு நான் போயி செம்பருத்திப் பூ எடுத்து முடிச்சிடுறேன்.
n
கொஞ்சம் தூங்கிட்டேன். அதனால எல்லாப் பூவையும் அவன் எடுத்துட்டான்.
இரண்டு விதமான செம்பருத்தி. ஒன்று சாதாரண செம்பருத்தி, மற்றொன்று அடுக்கு செம்பருத்தி, ஒவ்வொன்றும் இப்போதைய உள்ளங்கைகளை விட பெரியது. கொஞ்சம் பவழமல்லி(பாரிஜாதம் என்பதை விட பவழமல்லி என்றால் வாசனை கூடத்தான்). பவழமல்லியை ஊசி நூலில் கோர்த்து பட அளவுக்கு போட்டா தனி அழகுதான்.
பெரியவர்களின் பேச்சுக்கள்
1.பாத்துப் போ, பூச்சி பொட்டு (பாம்புதானே) ஏதாவது செடில கிடக்கப் போவுது.
2.ஏண்டா இப்படி இத்தனை விடியக் காலையில வந்து பூ எடுக்குறீங்க. இன்னைக்கு .உங்க வீட்ட சொல்றேன். விடிஞ்ச பிறகு வாங்கடா?
3ஏண்டி கண்ணுகளா, எல்லா பூவையும் எடுத்துகிட்டு போறீங்களே. எனக்கு கொஞ்சம் குடுக்கக் கூடாதா. செல்லம்மா மச்சி (யார் இப்படி ஒரு உறவை சொல்லி முதலில் அழைத்தார்கள்). இது தான் அதிக பட்ச கோவம். ஆனால் எந்த பெரியவர்களும் மனமார திட்டியதில்லை
டேய், மாப்ள ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம கட செந்தில் அதாண்ட ஒன்னோட பூ எடுபான அவன் செத்துப் போயிட்டான் என்ற நண்பன் போனில் சொன்ன நிகழ்வும், போதும்பா எவ்வளவு நேரம் தான் பூவை பாத்துகிட்டே நிப்ப. சீக்ரம் வாங்கு. வீட்டுக்கு போகணும் என்ற மகனின் குரலும் ஒரு சேர ஒலிக்கின்றன.
மலர்கள் மரணிப்பதில்லை. ஏனெனில் அவைகளின் வாசம் எப்போதும் நீங்காமல் இருப்பதால்.
புகைப்படம் : SL Kumar
புகைப்படம் : SL Kumar
![]()
திருவடி சார்பு
வெண்நிற மேகங்களுக்கு இடையில்
பால் நிலா சென்று மறைகிறது.
யாருமற்ற கடல் பரப்பிற்கு அருகினில்
நம் விளையாட்டுகள் தொடர்கின்றன.
நீ நீராகிறாய்
நானும் நீராகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ நிலமாகிறாய்
நானும் நிலமாகி உன் பாதம் தொடுகிறேன்.
நீ காற்றாகிறாய்
நானும் காற்றாகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ கனலாகிறாய்
நானும் கனலாகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ ஆகாயமாகிறாய்
நானும் ஆகாயமாகி உன்னைத் தொடர்கிறேன்.
பிறிதொரு காலங்களில்
மௌனத்தில் ஒன்றுகிறது
உன் கொலுசின் ஒலி
பிரபஞ்சத்தின் துடிப்புகள்
அடங்
கு
கின்
ற
ன.
ஓவியம் : Sumitha Sundaram
![]()
சைவத் திருத்தலங்கள் 274 – திருஇலம்பையங்கோட்டூர்
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஇலம்பையங்கோட்டூர்
•மூலவர் தீண்டாத் திருமேனி; சுயம்பு மூர்த்தி; கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி
•சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய, செம்மண் நிறம். பெரிய ஆவுடையார்; அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பு
•கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி – யோக தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பு
•தலவிநாயகர் – குறுந்த விநாயகர், சுத்தான்னம் நைவேத்தியம்
•வருடத்தில் ஏப்ரல் 2 – 7 , செப்டம்பர் 5 – 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி ஈசனை பூஜிக்கிறார்.
•திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு அருகில் வரும் போது , இறைவன் ஒரு சிறு பிள்ளை போலவும், பின் ஒரு முதியவர் போலவும் வழிமறித்து இக்கோயிலை உணர்த்துதல், உடன் வந்த அடியார்களளின் அறியாமை, பின் இறைவனே வெள்ளைப் பசு வடிவில் வந்து திருஞானசம்பந்தரின் சிவியை முட்டிநிற்க, அப்போது திருஞானசம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் வழி செல்ல,தலத்தினருகில் வந்ததும் பசு மறைதல்.
•அரம்பை வழிபட்டத் தலம் – ரம்பையங்கோட்டூர் –இலம்பையங்கோட்டூர்
•இலம்பை – நீர்ப்பரப்பின் அருகிலுள்ள பசுமையான சோலை
|
தலம்
|
திருஇலம்பையங்கோட்டூர்
|
|
பிற பெயர்கள்
|
எலுமியன்கோட்டூர், அரம்பாபுரி, அரம்பையங்கோட்டூர், இலம்பையங்கோட்டூர்
|
|
இறைவன்
|
அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர். ரம்பாபுரிநாதர்
|
|
இறைவி
|
கனககுஜாம்பிகை, கோடேந்து முலையம்மை, தாயினும் நல்லாள்,
|
|
தல விருட்சம்
|
மல்லிகை.
|
|
தீர்த்தம்
|
சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், ரம்பை தீர்த்தம், நாகதீர்த்தம், தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
குரு பெயர்ச்சி, மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு.
|
|
மாவட்டம்
|
காஞ்சிபுரம்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,
அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்,
திருஇலம்பையங்கோட்டூர்-631 553. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91 -44 – 2769 2412, 09444865714, 9444429775
|
|
வழிபட்டவர்கள்
|
அரம்பை, சந்திரன்
|
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர், ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள்
|
|
நிர்வாகம்
|
|
|
இருப்பிடம்
|
காஞ்சிபுரம்
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 246 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 13 வது தலம்.
|
தெய்வநாயகேஸ்வரர்
கனககுஜாம்பிகை
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 76
திருமுறை எண் 3
பாடல்
பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்,
பண்டுவெங்கூற்றுதைத்து அடியவர்க்கருளும்
காலனாம்எனதுரை தனதுரையாகக், கனல் எரி
அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய, நீர்மலர்க்
குவளைகள் தாதுவிண்டோங்கும்
ஏல நாறும் பொழில் இலம்பையங் கோட்டூர், இருக்கையாப்
பேணி என்எழில் கொள்வதியல்பே.
பொருள்
சிவன் பாலன், முதியவர் மற்றும் பசுபதி என்று பல வடிவங்கள் எடுத்து வந்தவன். அவன் கொடுமையான கூற்றுவனை காலால் உதைத்து அடியவர்களுக்கு அருளுபவன். அப்பெருமான எனது உரையை தனது உரையாக ஏற்றுக்கொண்டவன். எரியும் நெருப்பினை தனது கைகளில் ஏந்தியவன். பெரியதாகவும் இருக்கும் நீல மலர்களை உடைய நீர் சுனைகளுக்கு அருகில் வண்டுகள் பாடுகின்றன. நீரில் இருக்கும் குவளை மலர்கள் மகரந்தத்தைப் பொழிகின்றன. அந்த இடம் மிக்க நறுமணம் உடையதாக இருக்கிறது. இவ்வாறான எழில்களை உடைய இலம்பையங் கோட்டுர் தலத்தில் உறையும் ஈசன் என் எழில் கொள்வது நல்லியல்பு ஆகுமா?
கருத்து
· ஈசன், உயிர்களின் தன்மைக்கு ஏற்ப அவர்கள் விரும்பிய வடிவம் தாங்கி வருபவன்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 76
திருமுறை எண் 8
பாடல்
கிளர்மழை தாங்கினான் நான்முகம் உடையோன்
கீழ்அடிமேல் முடி தேர்ந்து அளக்கில்லா
உளம்அழை எனதுரை தனதுரையாக
ஒள்ளழல் அங்கையில் ஏந்தியஒருவன்
வளமழை எனக்கழை வளர்துளி சோர
மாகணம் உழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே
பொருள்
மிகப் பெரியதாக கிளர்ந்து எழுந்த மழையை தன் கைகளால் தாங்கி துயர் துடைத்த திருமாலும், பிரம்மாவும் ஈசனின் திருவடியையும் மேல் முடியையும் தரிசிக்க விரும்பி அதனை அடைய இயலாதவர்களாக இருந்தார்கள். அந்த ஈசன் எனது உரையை தனது உரையாக ஏற்றவன். அவன் ஒளிரும் நெருப்பினை தன் கரங்களில் ஏந்தியவன். மூங்கில் இலைகளிலிருந்து மழையெனத் துளிகள் வீழவும் மலைப்பாம்புகள் பக்கம் சார, அழகிய மணி மாலைகள் போல் தவழ் பொழில் திகழும் இலம்பையங்கோட்டூரில் உறையும் அப்பெருமான் என் எழில் கொள்வது நல்லியல்பு ஆகுமா?
புகைப்படம் : தினமலர்
![]()
புறம் அறுத்தல்
விண் நோக்கி விழி வைத்து இருக்கும்
யாசகம் விரும்பா
யாசகன் ஒருவனை சந்தித்தேன்.
சிந்தனைகள் அற்று
நாணயம் ஒன்றை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
சில நாணயங்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
சில காகித நோட்டுக்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
மதிப்பு மிக்க காகித நோட்டுக்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
வியப்பால் எனக்கான சிந்தனைகள் விரிகின்றன.
‘பொருள் வரின் மகிழ்வில்லையா’ என்கிறேன்.
‘யாசகனுக்கு எதிலும் எப்பொழும் மகிழ்வு தான்’ என்கிறான்.
உயிரின் ஒலி அடங்கும் காலம் உடலில்
புகைப்படம் : SL Kumar
![]()
சைவத் திருத்தலங்கள் 274 – திருமாகறல்
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருமாகறலீஸ்வரர்
• இறைவன் நவபாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி
• கஜ பிருஷ்ட விமான அமைப்பு
• முருகனும், தெய்வயானையும் வெள்ளையானையில் அமர்ந்து மகாவிஷ்ணுவுக்கு காட்சி
• திருஞானசம்பந்தர் வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலம்
• இறைவன் மாகறலீஸ்வரர் உடும்பின் வால் போன்ற காட்சி.
• பிரம்மா தலம் எல்லையில் பலா மரம் தோற்றுவித்தது. இராஜேந்திர சோழன் அப்பழங்களை தினமும் சிதம்பரம் நடராஜருக்கு நிவேதனம் செய்தது. அந்தணன் மகன் அதனை வெட்டியது. இராஜேந்திர சோழன் அதற்காக நாடு கடத்தியது. உறுதி செய்து திரும்பும் போது பொன்னிற உடும்பைக் கண்டது. அதனை வெட்ட முயன்று மயக்கம் அடைந்த தருணம் இறைவன் வெளிப்பட்டு ஆலயம் எழுப்ப உத்தரவிட்டது.
• பைரவர் – அர்த்தநாரி பைரவர் வடிவம்
|
தலம்
|
திருமாகறல்
|
|
பிற பெயர்கள்
|
அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர், நிலையிட்ட நாதர், தடுத்தாட்கொண்டவர்
|
|
இறைவன்
|
திருமாகறலீஸ்வரர்
|
|
இறைவி
|
திரிபுவனநாயகி
|
|
தல விருட்சம்
|
எலுமிச்சை
|
|
தீர்த்தம்
|
அக்னி
|
|
விழாக்கள்
|
மாசி மாதம் – பிரம்மோற்ஸவம்.
|
|
மாவட்டம்
|
காஞ்சிபுரம்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 7 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல் -631 603, காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 044-27240294
|
|
வழிபட்டவர்கள்
|
பிரம்மா , மகாவிஷ்ணு, மாகறன், மலையன் என்னும் அசுரர்கள்
|
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர்
|
|
நிர்வாகம்
|
|
|
இருப்பிடம்
|
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 239 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 7 வது தலம்.
|
திருமாகறலீஸ்வரர்
பாடியவர் திருஞான சம்மந்தர்
திருமுறை 3
பதிக எண் 72
திருமுறை எண் 9
பாடல்
தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே
தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே
பொருள்
தூய்மையான தாமரை மலர்கள், கழு மலர்கள், நெய்தல் மலர்கள், குவளை மலர்கள் போன்ற மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அதில் இருக்கும் தேனை பருகுவதற்காக வரிகளை உடைய வண்டுகள் பாடி வருகின்றன. இத்தகைய திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறான். அவன் தனது கால் பெருவிரல் ஊன்றி இராவணின் வலிமையை அழித்தவன்.இவ்வாறாக வீற்றிருக்கும் பெருமானின் புகழை பாடுவதால் வினைகள் யாவும் நீங்கும் என்பது முடிவானது.
கருத்து
சாய – வலி குறையும்படி.
சாய – வலி குறையும்படி.
பாடியவர் திருஞான சம்மந்தர்
திருமுறை 3
பதிக எண் 72
திருமுறை எண் 10
பாடல்
காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே
பொருள்
சிவன், பைம் பொன்னால ஆன வீரக் கழல்களை அணிந்தவாறும், நீண்ட சடை முடியும் உள்ளவனாக விருப்பமுடன் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்ட திருமாலும், பிரம்மாவும் அறியாதவாறு நெருப்பு பிழம்பாகி இத்தலத்தில் வீற்றிருக்கிறான்.நாலிடத்தில் எரிகின்ற நெருப்பை கொண்டும், தோலை உரித்து மாணிக்கத்தை கக்கும் பாம்பை அணிந்தும், அசைந்து நடக்கும் இடபத்தை வாகனமாக உடைப அந்த சிவபெருமானின் அடியார்களை வினைகள் வந்து அடையாது.
புகைப்படம் : இணையம்,தினமலர்
![]()
நகர மறுக்கும் நினைவுகள் – மழைக்கால பக்கோடா
மயிலாடுதுறை பெரிய கடைத் தெருவின் வழியே நடக்கிறேன். நகரின் பிரதான் வீதிகளில ஒன்று அது.
லேசான மழைத் தூறல் தொடங்குகிறது.
கண் முன்னே டிபன் காளியாகுடியும், வானொலி பிரஸும் (மாத வானொலி நிகழ்ச்சிகள் புத்தக வடிவில்) நினைவில் ஆடுகின்றன.
அதிலிருந்து 10 அடி வலது புறத்தில் தள்ளூ வண்டியில் பக்கோடா கடை. பெரும்பாலும் உதிரி பக்கோடா மட்டுமே. அந்த நாளில் சமோசா போன்ற சமாச்சாரங்கள் கிடையாது. (இது என்ன ஊர் பற்றி எழுத ஆரம்பித்த உடன் அந்த நாள் என்று ‘தானே’ வருகிறது).அத் தெருவில் செல்பவர்கள் அந்த வாசனையை நுகர முடியாமல் செல்ல முடியாது மெல்லியதாய் மொறு மொறு என்று எண்ணை அதிகம் குடிக்காமல் இருக்கும்
டேய் தம்பி(மகனிடத்தில்) சாருக்கு என்ன வேணும்னு கேளு(நான் அப்போது 7வது)
‘எவ்வளவுங்க’.
‘என்ன புதுசா கேட்கிறீங்க. 50 பைசாதான்’. (அப்பா மாதம் தரும் 10ரூபாயில் இது நிச்சயம்.)
என்ன தம்பி பாத்துகிட்டே போர?
40 காசு தான் இருக்கு.
சரி சரி இங்க வா. இப்ப சாப்பிடு. நாளைக்கு மீதி 10 பைசா கொடு. (நாளைக்கு கடைக்கு போய் ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா, 10 பைசா கமிஷன் வாங்கிட வேண்டியது தான்)
மழைக்கும் அந்த சூடான பக்கோடாவும் ரொம்ம மேட்ச். பஹூ ருசி.(கடன் வாங்கிய வார்த்தைகள் – லாசரா).
தம்பி இன்னொரு பொட்லம் வேணுமா‘
மத்யமாய் தலை ஆட்டுகிறேன்.
2 நிமிடம்இரு. சூடா போட்டுத் தரேன்.
கேட்கவா வேணும். வயறும் மனமும் நிறைந்த காலங்கள்.
இப்பொழுதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. நினைவு வாசனைகள் நீள்கின்றன.
புகைப்படம்: R.s.s.K Clicks
புகைப்படம்: R.s.s.K Clicks
![]()
ஓய்வுறுதல்
சேதித்தல்
அடர்ந்த பெருங்காடு ஒன்றில்
பயணப்பட முற்படுகிறேன்.
சில மரங்களும் கொடிகளும்
பேசத் துவங்கி பின் தொடர்கின்றன.
சில மரங்களின் இலைகள் துளிர் விட ஆரம்பித்து இருகின்றன.
சில மரங்கள் பூத்து இருக்கின்றன.
சில மரங்கள் காய்ந்து இருக்கின்றன.
சில மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன.
‘காண இயலா பெரும்காடு
கடந்திடவும் வழியில்லை
திரும்பி செல்லவும் காலமில்லை‘ என்கின்றன.
‘காலம் கடந்தவன்‘ என்கிறேன்
‘பயணப்பட்டுஎதைக் காண விழைகிறாய்‘ என்கின்றன.
‘பயணமே என் பணி‘ என்கிறேன்.
‘எங்கள் வாக்கினை மறுதலித்தவர்கள்
எங்களில் ஒருவராகி விடுவார்‘ என்கின்றன.
‘மௌனத்தில்வெற்றி கிட்டுவதில்லை‘
என்று கூறி பாதங்களை மாற்றி பதிய வைக்கிறேன்.
வெளிர் பச்சை நிற கொடி ஒன்று
என் கால்களை சுற்றத் துவங்குகிறது.
பின் தொடர்கின்றன கொடிகளும், மரங்களும்.
பிறிதொரு நாளில்
மற்றொருவன் பெரும் காட்டில்
பயணப்பட எத்தனிக்கிறான்.
அப்போது
மரங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகி இருந்தது.
*சேதித்தல் – வெட்டுதல் – திருவந்தியார்மெய்கண்ட சாத்திரம்
புகைப்படம் : Karthik Pasupathi
புகைப்படம் : Karthik Pasupathi
![]()
தரித்தல்
I.T என்னும் பம்மாத்து – மயானம்
என்னா JK, rest room போய்ட்டு வரத்துக்குள்ள system lock ஆகிடிச்சி?
நீ இப்பத்தான சேர்ந்து இருக்க. உனக்கு நம்ம office பத்தி தெரியல. உனக்கு இது முதல் தடவ. அதால project manager ஐ பார்த்து unlock பண்ண சொல்லு. அடுத்த தடவை unlock செய்யறத்துக்கு நீ president ஐ தான் பாக்கணும்.
—————————
டேய் தம்பி, சீக்கிரம் டீய குடுடா,
ஏன் சார்.
நான் monitor ஐ விட்டுவந்து 1.31478 ஆகிடுச்சி. இன்னும் 1.21567 செகண்ட போகலேன்னா, ‘monitor ஐ பாக்கல’ன்னு மைக்ல announce பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.
——————–
என்னா SM , rest room ல இருக்கும் போது ‘wake up, wake up, it’s brand new day ‘ அப்படீன்னு சத்தம் வருது.
நீ அங்க போயி 32.31567 செகண்ட்ஸ்க்கு மேல ஆகிடுச்சினா, அப்படித்தான் வரும். 1.21.000023 செகண்ட்ஸ்க்கு மேல இருந்து பாரு, கெட்ட வார்த்தைகள் எல்லாம் வரும்.
————————————
நேத்து ஏன் வீட்டுக்கு போகும் போது அவ்வளவு சந்தோஷமா இருந்த
Card punch ஆகிடுச்சி. அதான நான் வேலைல இன்னும் இருக்கேன்னு நிம்மதிதான். ஆமா, நீ ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்க?
எனக்கு இன்னைக்கு in time க்கு card punch ஆகிடுச்சி
————————————
நாங்க ‘உத்தம பருந்து’ கம்பெனியில் இருந்து பேசறோம். அது ‘ABXY’ consultancy தானே?
எங்களுக்கு ஒரு candidate recruitment செய்து தரணும்
Details, சொல்லுங்க சார்.
Job, contact job தான்.. அவர் எங்க கிட்ட 1 மாசம், 3 நாள், 7 மணி நேரம், 10 நிமிடம், 1 செகண்ட் தான் work பண்ணப்போரார். Oracle 12c, SQL Server 12.1.4100.1, Oracle E-Business Suite 12.1, SAP EHP 7 for SAP ERP 6.0, PHP 5.6.9, Version 8 Update 45 are mandatory. Black box testing, White box testing,Unit testing,Incremental integration testing,Integration testing,Functional testing,System testing,End-to-end testing,Sanity testing,Regression testing,Acceptance testing,Load testing, Stress testing, Performance testing, Usability testing செய்யணும். Quality standard படி documentation செய்ய தெரிஞ்சி இருக்கணும. Solaris certification இருந்தா, perl development தெரிஞ்சி இருந்தா added advantage.
Salary எவ்வளவு கொடுப்பீங்க?
We are lower middle segment company (அட பாவிகளா). Job ம் contact job தான். அதனால 9823.47 தான் கொடுக்க முடியும். இதுல உங்க consultancy fees ம் included.
————————————
என்னா RS கவலையா இருக்க.
1ம் தேதி தான் சேர்ந்தேன். இன்னைக்கு 31ம் தேதி. Retirement.
இதுக்கு போய் கவல படுறீங்க. பல பேர், 1ம் தேதி சேர்ந்து, 1ம் தேதியே retire ஆகி இருக்காங்க.நீங்களாவது 31 நாள் வேல பார்த்து இருக்கீங்க.
————————————
இக்கட்டுரைகளின் நோக்கம் I.T துறை பற்றி கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு அதன் உண்மையின் சாராம்சத்தை விளக்குவது மட்டுமே. ‘இத்துறையில் மட்டுமா இப்படி நிகழ்கிறது’ என்பவர்களுக்கு, ‘இத்துறையில் மட்டுமே மிக அதிகமாக நிகழ்கிறது’ என்பதே என் பதில்.
![]()
மீதானப் பெருவெளி
மருத நில மொன்றில்
மனிதன் ஒருவன் எதிர்ப்படுகிறான்.
கருத்த மேனியுடன்
ஆடைகளும் கறுத்து காணப்படுகிறது.
பல ருத்ராட்ஷ மாலைகளில்
ஒன்று மட்டும் மிகவும் கருமை நிறமுடையதாய்.
ஸ்னேகமாய் புன்னைக்கிறான்.
கைகளை யாசிப்பது போல்
குவிக்கச் சொல்கிறான்.
தன் கைகளில் இருக்கும் நீரை
என் கைகளில் இடுகிறான்.
வெண்நிற மேகங்கள்
நீரில் பிரதிபலிக்கின்றன.
கைகளில் இருப்பது ‘நீரா அல்லது ஆகாயமா’ என்கிறான்.
விடை பகர துவங்குகையில்
தூரத்தில் நாய்கள் விளையாடத்
துவங்கி இருக்கின்றன.
மீதானப் பெருவெளி – ஞெயம் அளக்கப்படு பொருள்
புகைப்படம் : இணையம்
![]()
சைவத் திருத்தலங்கள் 274 – திருகச்சிநெறிக்காரைக்காடு
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருகச்சிநெறிக்காரைக்காடு – காஞ்சிபுரம்
பஞ்சபூத தலங்களில் – பிருத்வி நிலம்
• 7 சீடர்களுடன் தட்சிணா மூர்த்தி
• சுவாமி சற்றே சிவந்த நிறம்
• நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு நோக்கி
• உடல் முழுவதும் கண் கொண்ட இந்திரனின் சாபம் விலகிய முக்தி அடைந்த தலம்
• ஆலயம் இருக்கும் பகுதி காரைச் செடி காடாக இருந்ததால் காரைக்காடு
|
தலம்
|
திருகச்சிநெறிக்காரைக்காடு
|
|
பிற பெயர்கள்
|
திருக்காலிமேடு
|
|
இறைவன்
|
சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர், சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.
|
|
இறைவி
|
பிரமராம்பிகை, காரார்குழலி
|
|
தல விருட்சம்
|
காரைச்செடி
|
|
தீர்த்தம்
|
இந்திர, சத்யவிரத தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, அன்னாபிஷேகம்.
|
|
மாவட்டம்
|
காஞ்சிபுரம்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 7 மணி முதல் 1 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு சத்யநாதசுவாமி திருக்கோயில்,
காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2723 2327, 2722 1664.
|
|
வழிபட்டவர்கள்
|
|
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர் – 11 பதிகங்கள்,
|
|
நிர்வாகம்
|
|
|
இருப்பிடம்
|
காஞ்சிபுரம்
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 237 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 5 வது தலம்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மி
|
சத்யநாதர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3ம் திருமுறை
பதிக எண் 65
திருமுறை எண் 8
பாடல்
ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குஞ் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்
நீள்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே
பொருள்
ஏழு கடல்களால் சூழப்பட்ட இலங்கை அரசனான இராவணனை, அழகிய கயிலையின் கீழ் தனது பெருவிரலால் ஊன்றி அழித்த பெருமை உடையவர். அவர் எல்லா உயிருக்கும் நன்மை செய்பவர். அப்பெருமான் ஆழ்ந்த அகழியும், அதை சுற்றி இருக்கும் வயல்களும், மதில்களும், நீண்ட அழகிய வீதிகளை உடைய திருக்கச்சிநெறிக் காட்டில் உறைகின்றார்.
கருத்து
உவர்நீர் (உப்புத் தண்ணீர்க் கடல்), நன்னீர் (நல்ல தண்ணி), பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தேன் கடல் என்று ஏழு வகைக் கடல்கள் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் அந்த தேசம் செழுமையாக இருப்பதையே குறிக்கின்றன.
பரா பட்டாரிகையான அம்பிகை உறையும் மணித்வீபம் மத்தியில்
என்பர் சாக்தர்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3ம் திருமுறை
பதிக எண் 65
திருமுறை எண் 9
பாடல்
ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர்
மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
பூண்டாரும் ஓரிருவ ரறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
பொருள்
சிவபெருமான், மிகுந்த சப்தங்களுடன் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டவர். பிரமனின் தலையினை கொய்து, அதனை கபாலமாக ஏந்தியவர்; இறந்தவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவர். வரிகளை உடைய பாம்பினை அணிந்தவர்; திருமால், ப்ரம்மா இருவரும் அறிய முடியாதவாறு நீண்ட ஒளிப் பிழம்பாகி நின்றவர். அத்தகைய சிவபெருமான், கலிக்கச்சி நெடுங்காட்டில் உறைகிறார்.
புகைப்படம் : தினமலர்
![]()
அகளம்
மேலாம் எழுத்து
பஞ்ச பூத கவிதை வரிசையில் – நெருப்பு
காலத்தின் சுழற்சியில்
நான் என்னில் இருந்து விலகுகிறேன்.
உடல் மட்டும் பிரகாசமாய் நெருப்பில்
எரிந்து கொண்டு இருக்கிறது.
தோழமையாய் ஒரு பேச்சினை
தொடங்குகிறது ஆதி நெருப்பு.
சுற்றிலும் மணி ஓசைகள் ஒலிக்கின்றன
‘உன் உருவாக்கத்திற்கு காரணம் நானே
என்னில் புனிதப்படாதவை எதுவும் இல்லை’ என்கிறது
சுற்றிலும் தாள வாத்தியங்கள் ஒலிக்கின்றன.
‘ஆதி பசியினை நீ அறிவாயா,
நெற்றிக்குள் சுடர் கொண்டவன்
இன்னுமா நீ அறியவில்லை என்கிறது
சுற்றிலும் வண்டுகள் ஒலிக்கின்றன.
பொருள்களை தூய்மை செய்வது என் பொருப்பு.
உலகப் பொருள்களில் நீ இருப்பதால் நீயும் என் பொருப்பு என்கிறது.
சுற்றிலும் சங்க நாதம் தொடர்கிறது.
இடம் பெயர்தலில் என் பங்கு முக்கியமானது என்கிறது.
சுடர் அடங்க தொடங்குகிறது.
தொடர்கிறது பிரணவ கார ஒலி.
முற்றுப் பெறுகிறது நீண்ட நெடும் பயணம்.
தொடங்குகிறது புதிய விதிமுறைகளுடன்
ஆட்டம் ஒன்று.
* மேலாம் எழுத்து – பரநாத ஒலி – திருமந்திரம் – 1212
புகைப்படம் : Virtualcitizen India
![]()
























